Showing posts with label கைகேயி. Show all posts
Showing posts with label கைகேயி. Show all posts

Wednesday, 9 November 2022

சித்திரகூடத்திற்குப் புறப்பட்ட பரதன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 092 (39)

Bharata set out to Chitrakuta | Ayodhya-Kanda-Sarga-092 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரத்வாஜரிடம் விடைபெற்றுக் கொண்ட பரதன்; சித்திரகூடத்திற்குப் புறப்பட்டது...

Bharata's army and the way they went

நல்ல விருந்தோம்பலுடன் கவனித்துக் கொள்ளப்பட்ட பரதன், தன் பரிவாரங்களுடன் அந்த இரவைக் கழித்துவிட்டு, தன்னிச்சையாக பரத்வாஜரிடம் சென்றான்.(1) ஹுதாக்னி ஹோத்ரம் செய்து முடித்த பரத்வாஜ ரிஷி, புருஷவியாகரனான {மனிதர்களில் புலியான} பரதன் தன் கைகளைக் கூப்பிக் கொண்டு வருவதைக் கண்டு {பின்வருமாறு} பேசினார்:(2) "அநகா {பாபமற்றவனே}, இங்கே ராத்திரியை நீ சுகமாகக் கழித்தாயா? உன் ஜனங்கள் என் ஆதித்யத்தில் {விருந்தோம்பலில்} முழுமையான திருப்தியடைந்தனரா? எனக்குச் சொல்வாயாக" {என்று கேட்டார்}.(3)

கைக்கூப்பி வணங்கிக் கொண்டிருந்த பரதன், தன் ஆசிரமத்தில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த அந்த ரிஷியிடம் {பரத்வாஜரிடம், பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(4) "பகவானே, நானும், என் அமாத்தியர்களும் {அமைச்சர்களும்}, மொத்த படையும், வாகனவிலங்குகளும் உம்மால் எல்லா ஆசைகளிலும் பெருந்திருப்தியடைந்து சுகமாக இருக்கிறோம்.(5) சேவகர்களுடன் கூடிய நாங்கள் அனைவரும், நல்ல பக்ஷணங்களும் {உணவும்}, இருப்பிடமும் கிடைக்கப்பெற்று, சோர்வில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் விடுபட்டு சுகமாக வசித்திருந்தோம்.(6) பகவானே, ரிஷிசத்தமரே {சிறந்த முனிவரே}, நான் உம்மிடம் விடைபெற்றுக் கொள்கிறேன். என்னுடன் பிறந்தவரின் {ராமரின்} சமீபத்திற் செல்லும் என்னை நட்பு பொருந்திய கண்களால் பார்ப்பீராக.(7) தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, தார்மீகரான அந்த மஹாத்மாவின் ஆசிரமத்திற்கு எந்த மார்க்கத்தில் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? எனக்குச் சொல்வீராக" {என்று கேட்டான் பரதன்}.(8)

தன்னுடன் பிறந்தவனைக் காணும் ஆவலில் இவ்வாறு கேட்ட பரதனுக்கு, மஹாதேஜஸ்வியும், மஹாதபஸ்வியுமான பரத்வாஜர் {இவ்வாறு} பதிலளித்தார்:(9) "பரதா, மூன்றரை யோஜனைகளுக்கப்பால்[1] ஜனங்களற்ற வனத்தில் ரம்மியமான குகைகளுடனுங் கானகங்களுங் கூடிய சித்திரகூட கிரி உள்ளது.(10) புஷ்பங்களில் முழுமையாக மறைந்திருக்கும் மரங்களுடனும், ரம்மியமாகப் புஷ்பித்திருக்கும் கானகங்களுடனுங் கூடிய அதன் உத்தர சாரலில் {அந்த மலையின் வடக்குப் பக்கத்தில்} மந்தாகினி நதி {மால்யவதி ஆறு}[2] இருக்கிறது.(11) ஐயா, அந்த ஆற்றுக்கு அப்பால் சித்திரகூட பர்வதம் இருக்கிறது. அங்கே அவ்விருவரும் தங்கள் பர்ணக்குடிலில் {ஓலைக்குடிசையில்} வசித்திருப்பார்கள். இது நிச்சயம்.(12) மஹாபாக்கியசாலியே, வாஹினிபதியே {படையின் தலைவனே}, கஜவாஜிரதங்கள் நிறைந்த வாஹினியை தக்ஷிணமார்க்கத்திலோ, {யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த படையைத் தென்புற வழியிலோ, இங்கிருந்து} இடது புறமாகச் சென்ற பின்னர் தக்ஷிணம் {தெற்கு} நோக்கியோ நடத்திச் சென்றால்[3] ராகவனை {ராமனைக்} காணலாம்" {என்றார் பரத்வாஜர்}.(13,14அ)

[1] ஒரு யோஜனை என்பது எட்டு மைல் தொலைவு எனக் கொண்டால். மூன்றரை யோஜனைகள் இருபத்தெட்டு மைல்களாகும்.

[2] அயோத்தியா காண்டம் 56ம் சர்க்கத்தில் சித்திரகூடத்தில் பாயும் இந்நதி மால்யவதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 

 
[3] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "தெற்கு வழியே சென்று தென்மேற்கு நோக்கி நடத்து" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "இவ்விடத்திற்குத் தென்புறமாகப் போகும் மார்க்கத்தில் கொஞ்சதூரம் கொண்டு போய் அதற்குப் பின் தென்மேற்காகச் செல்லும் ஓர் கிளைவழியைப் பற்றி நடப்பாயாக" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நம்முடைய ஆஸ்ரமத்திற்குத் தென்புறத்தில் ஒரு கொடிவழி செல்லுகின்றதே? இந்த வழியிலே சிறிது தூரம் சேனைகளுடன் செல்வாயாகில், நடுவில் தென்மேற்காகக் கிளைவழி பிரிகின்றது; அவ்வழியைச் சார்ந்து செல்வாயாகில்" என்றிருக்கிறது.

யானங்களில் செல்லத்தகுந்தவர்களான ராஜராஜனின் யோசிதைகள் {தசரதனின் மனைவியர்}, இவ்வாறு அந்தப் பிரயாணத்தைக் குறித்துக் கேள்விப்பட்டதும் தங்கள் யானங்களை விட்டு இறங்கி, அந்த பிராமணரை {பரத்வாஜரைச்} சூழ்ந்து நின்றனர்.(14ஆ,இ) தீனமாக {பரிதாபமாக} மெலிந்து, நடுங்கிக் கொண்டிருந்த கௌசல்யை, சுமித்ராதேவியுடன் சேர்ந்து, தன் கைகளால் அந்த முனிவரின் சரணங்களை {பாதங்களைப்} பற்றினாள்.(15) ஆசை நிறைவேறாதவளும், சர்வலோகத்தாலும் வெறுக்கப்பட்டவளுமான கைகேயி, நாணத்துடன் வந்து அவரது சரணங்களைப் பற்றினாள்.(16) பிறகு பகவானான அந்த மஹாமுனியை பிரதக்ஷிணஞ் செய்து {வலம் வந்து}, தீன மனத்துடன் {தளர்ந்த மனத்துடன்} பரதனின் அருகில் நின்றாள்.(17)

அப்போது, திடவிரதரான பரத்வாஜர், "இராகவா, உன் மாதாக்களின் விசேஷங்களை நான் அறிய விரும்புகிறேன்" என்று பரதனிடம் கேட்டார்.(18)

பரத்வாஜர் இவ்வாறு சொன்னதும், மதிமிக்கவனும், வசனகோவிதனுமான {பேச்சில் நிபுணத்துவம் வாய்ந்தவனுமான} பரதன், கைகளைக் கூப்பியபடியே {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(19) "பகவானே, சோகத்தினாலும், உண்ணாததினாலும் மெலிந்து தீனமாக இருக்கும் இந்த தேவியே பிதாவின் மஹிஷியாவாள் {பட்டத்து ராணியாவாள்}. தேவதைக்கு ஒப்பானவளாக நீர் காணும் இவளே, அதிதி தாதாவை {இந்திரனைப்} பெற்றதைப் போல, சிம்மத்திற்கு நிகரான நடை கொண்டவரும், புருஷவியாகரருமான {மனிதர்களில் புலியுமான} ராமரைப் பெற்ற கௌசல்யை ஆவாள்.(20,21) அவளது {கௌசல்யையின்} இடது புஜத்தைப் பற்றிக் கொண்டு, சோகத்தில் மூழ்கிய மனத்துடன், வனாந்தரத்தில் புஷ்பங்கள் உதிர்ந்த கர்ணிகார ஷாகாவை {கொன்றை மரக் கிளையைப்} போல நிற்பவள் எவளோ,{22} அந்த தேவியின் {சுமித்ரையின்} இரு மகன்களே, சத்தியபராக்கிரமர்களும், தேவ வர்ணம் {தெய்வீக நிறம்} கொண்டவர்களும், வீரக்குமாரர்களுமான லக்ஷ்மணசத்ருக்னர்கள்.(22,23)

எவளின் காரணமாக அந்த நரவியாகரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் இங்கிருந்து ஜீவநாசம் {வாழ முடியாத நிலையை} அடைந்தனரோ, {எவளால்} தசரத ராஜா புத்திரனை இழந்து ஸ்வர்க்கத்தை அடைந்தாரோ,{24} அப்படிப்பட்ட கோபமுடையவளும், விவேகமற்றவளும், அழகியாகத் தன்னைக் கருதும் செருக்குடையவளும், ஐச்வர்யத்தில் ஆசை கொண்டவளுமான இந்தக் கைகேயி, ஆரிய ரூபினியாக {நல்லவள் போலப்} புலப்படும் அநாரியையாவாள் {கொடியவளாவாள்}.{25} பாபத்தையே திடமாகக் கைப்பற்றுபவளும், என் மகத்தான விசனத்தின் மூலமென {எனக்கு ஏற்பட்டிருக்கும் பெருந்துன்பத்தின் வேரென} நான் காண்பவளுமான இவளே என் மாதா என்பதை அறிவீராக" {என்றான் பரதன்}.(24-26)

கண்ணீரால் திணறும் குரலுடன் இவ்வாறு பேசிவிட்டுக் கண்கள் சிவந்த அந்த நரசார்தூலன் {மனிதர்களில் புலியான பரதன்}, கோபத்துடன் சீறும் நாகத்தை {பாம்பைப்} போலப் பெருமூச்சுவிட்டான்.(27) பரதன் இவ்வாறு சொன்னதும், மஹாபுத்திமானான பரத்வாஜ மஹரிஷி, அர்த்தம் பொதிந்த இந்தச் சொற்களில் பதிலளித்தார்:(28) "பரதா, தோஷத்தால் கைகேயியை நீ புரிந்துகொள்வது தகாது {கைகேயியைத் தவறாக நீ புரிந்து கொள்ளக்கூடாது}. இராமனை நாடு கடத்தியது சுகத்தையே விளைவிக்கப் போகிறது.(29) இராமனை நாடு கடத்தியதால் இங்கே தேவர்களுக்கும், தானவர்களுக்கும், ஆத்மபக்தி கொண்ட ரிஷிகளுக்கும் ஹிதமே {நன்மையே} விளையப் போகிறது" {என்றார் பரத்வாஜர்}.(30)

இதனால் திருப்தியடைந்த பரதன், அவரை வணங்கி, பிரதக்ஷிணஞ் செய்து, விடைபெற்றுக் கொண்டு, தன் சைனியத்திடம், "புறப்பட ஆயத்தமாவீராக" என்று ஆணையிட்டான்.(31) அப்போது பலவித ஜனங்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட திவ்யமான ரதங்களில் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு, அவற்றில் ஏறி பிரயாணித்தனர்.(32) பொன்னாலான கச்சைகளுடனும், பதாகைகளுடனுங் கூடிய பெண்யானைகளும், ஆண் யானைகளும், கோடைகால முடிவில் எழும் {கார்கால} மேகங்களைப் போன்ற மணிகோஷத்துடன் அணிவகுத்துச் சென்றன.(33) பெரியவை, சிறியவை என விதவிதமான மதிப்புமிக்க யானங்களும் சென்றன. காலாட்கள் கால்நடையாகவே சென்றனர்.(34)

அப்போது, கௌசல்யையும், ஸ்திரீ பிரமுகர்கள் பிறரும், இராமனை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.(35) ஸ்ரீமான் பரதன் உதிக்கும் சந்திரனுக்கும், அர்க்கனுக்கும் {சூரியனுக்கும்} ஒப்பாகப் பிரகாசிப்பதும், ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்ததுமான சுபமான சிவிகை ஒன்றில் ஏறிப் பரிவாரங்களுடன் புறப்பட்டான்.(36) கஜவாஜிரதகுலங்களால் {யானை, குதிரை, தேர்க்கூட்டங்களால்} நிறைந்த அந்த பெரும்படையானது, ஆகாயத்தில் எழும் மஹாமேகத்தைப் போல தென்திசையை மறைத்தபடியே கங்கையின் மறுகரையில் உள்ள கிரிகளையும், நதிகளையும், மிருக பக்ஷிகள் வசிக்கும் வனங்களையும் கடந்து சென்றது.(37,38) மகிழ்ச்சிமிக்க யானைகள், குதிரைகள், படைவீரர்கள் ஆகியவற்றுடன் கூடிய பரதனின் சைனியமானது மிருக பக்ஷி கூட்டங்களை பயமுறுத்தியபடியே மஹாவனத்தில் பிரவேசித்துப் பிரகாசித்தது.(39)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 092ல் உள்ள சுலோகங்கள்: 39

Previous | Sanskrit | English | Next

Wednesday, 19 October 2022

அழிந்தது கேகயன் மடந்தை ஆசை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 083 (26)

Kekaya daughter's desire perished | Ayodhya-Kanda-Sarga-083 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராணிகள், அமைச்சர்கள் மற்றும் பிறருடன் புறப்பட்ட பரதன்; குஹன் ஆளும் சிருங்கிபேரபுரத்தை அடைந்தது...


Bharata's journey start to the forest

பிறகு காலையில் எழுந்த பரதன், தன் உத்தம சியந்தனத்தில் {தேரில்} ஏறி, ராமனை தரிசிக்கும் ஆசையில் சீக்கிரமாகப் புறப்பட்டுச் சென்றான்.(1) மந்திரிகள், புரோஹிதர்கள் அனைவரும் சூரிய ரதங்களுக்கு ஒப்பான குதிரைகள் பூட்டப்பட்ட ரதங்களில் அவனுக்கு {பரதனுக்கு} முன்னால் சென்றனர்.(2) விதிப்படி ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்பதாயிரம் நாகங்களும் {யானைகளும், இவ்வாறு} புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த இக்ஷ்வாகு குலநந்தனனான பரதனைப் பின்தொடர்ந்து சென்றன.(3) தன்விகளுடனும் {வில்லாளிகளுடனும்}, விதவிதமான ஆயுதங்களுடனும் கூடிய அறுபதாயிரம் ரதங்களும், புகழ்மிக்க ராஜபுத்திரனான பரதன் செல்லும் வழியில் அவனைப் பின்தொடர்ந்து சென்றன.(4) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான {அல்லது லட்சக்கணக்கான} குதிரைப்படையினரும் சத்தியசந்தனும், ஜிதேந்திரியனும் {புலன்களை வென்றவனும்}, ராகவனுமான பரதன் செல்லும் வழியில் அவனைப் பின்தொடர்ந்து சென்றன.(5)

கைகேயியும், சுமித்திரையும், புகழ்மிக்கவளான கௌசல்யையும் ராமன் திரும்பி வரப்போகும் எண்ணத்தில் மகிழ்ச்சியடைந்தவர்களாக ஒளிமிக்க யானத்தில் {தேரில்} பயணித்தனர்[1].(6) மகிழ்ச்சிமிக்க மனங்களுடன் கூடிய {மொத்த} ஆரியர்களும், அவனது {ராமனின்} சித்திரக் கதைகளைச் சொல்லிக் கொண்டே ராமனையும், லக்ஷ்மணனையும் காணச் சென்றனர்.(7)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே கைகேயி வருத்தம் தீர்ந்தவளாகிவிட்டாள் என்று தெரிகிறது" என்றிருக்கிறது.

எழுந்தது பெரும்படை ஏழு வேலையின்
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி முந்து எழ
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய்க்
கழிந்தது துயர் நெடுங்காதல் தூண்டவே

- கம்பராமாயணம் 2268ம் பாடல்

பொருள்: சொல்லப்படும் பேர் ஊழிக் காலத்தில் ஏழு கடல்களும் பொங்கி எழுந்ததுபோல முழக்கம் செய்தவாறே அந்தப் பெரும்படை முந்தி எழுந்து புறப்படும்போது, கேகயயனுடைய மகளின் {கைகேயியின்} ஆசை அழிந்தது; பேரன்பின் தூண்டுதலால் அவளது துயரம் போய்க்கழிந்தது.

"மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்டவனும்}, கருமேக நிறத்தோனும், திடமான துணிவு கொண்டவனும், ஜகத்திலிருந்து சோகத்தை நாசஞ் செய்த திட விரதனுமான ராமனை நாம் எப்போது காணப் போகிறோம்?(8) அந்த ராகவனைக் கண்டதும் நம் சோகமும், உதிக்கும் பாஸ்கரனை {சூரியனைக்} கண்ட சர்வலோக இருளைப் போல விலகும்" {என்றனர் மக்கள்}.(9) இவ்வாறே அந்த நகரில் வசிக்குஞ் ஜனங்கள், முன் சொன்னதைப் போன்ற சுபக்கதைகளை நினைவுகூர்ந்து, ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு மகிழ்ச்சியாகக் கலைந்து சென்றனர்.(10) 

சமர்த்தர்களான பிறரும், நைகாமர்களும் {வர்த்தகர்களும்}, பிரகிருதியர்கள் {அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட} அனைவரும் ராமனுடன் சேர்வதற்காக மகிழ்ச்சியாகச் சென்றனர்.(11) மணிக்காரர்கள் {ரத்தினங்களுக்கு சாணை பிடித்து இழைப்பவர்கள்}, சோபனக் கும்பக்காரர்கள் {நல்ல மண் பாண்டங்களைச் செய்யும் குயவர்கள்}, சூத்திரக் கர்மம் செய்பவர்கள் {நூல் பிடிக்கும் பணியாட்கள் / தச்சர்கள்}, சஸ்திரோபஜீவிகள் {ஆயுதங்களை நம்பி வாழும் போர் வீரர்கள்},{12} மாயூரகர்கள் {மயில் தோகைகளை விற்பவர்கள்}, கிராகசிகர்கள் {மரம் அறுப்பவர்கள்}, ரோசகர்கள் {கண்ணாடி செய்பவர்கள்}, வேதகர்கள் {பூமி, ரத்தினங்கள், முத்துக்கள் முதலியவற்றை வெட்டுபவர்கள்}, தந்தக்காரர்கள் {தந்த வேலை செய்பவர்கள்}, ஸுதாகாரர்கள் {சுண்ணாம்படிப்பவர்கள்}, கந்தோபஜீவிகள் {நறுமணப் பொருள்களை விற்பனை செய்பவர்கள்},{13} பிரக்யாத ஸுவர்ணக்காரர்கள் {மதிப்புமிக்க தட்டான்கள் / பொற்கொல்லர்கள்}, கம்பளதாவகர்கள் {கம்பளங்களை நெய்பவர்கள்}, ஸ்நாபகாச்சாதகர்கள் {நீராடலுக்கு முன் எண்ணை தேய்த்து உடம்பு பிடிப்பவர்கள்}, வைத்தியர்கள் {மருத்துவர்கள்}, தூபகர்கள் {நறுமணங்கமழச் செய்பவர்கள்}, சௌண்டிகர்கள் {மதுவை விற்பனை செய்பவர்கள்},{14} ரஜகர்கள் {வண்ணார்கள்}, துன்னவாயர்கள் {தயிர்க்காரர்கள்}, மஹத்தான கிராமகோஷர்கள் {கிராமங்களைச் சேர்ந்த மகத்தான பாடகர்கள்}, சைலூஷர்கள் {நடனமாடுபவர்கள்}, கைவர்த்தகர்கள் {செம்படவர்கள்} என ஸ்திரீகளுடன் கூடிய இவர்கள் யாவரும் இவ்வாறே சென்று கொண்டிருந்தனர்.(12-15) 

சமஹிதர்களும் {நலம் விரும்பும் பக்திமான்களும்}, நன்னடத்தைக்குப் புகழ் பெற்றவர்களும், வேத வித்துகளுமான ஆயிரக்கணக்கான பிராமணர்கள், கோரதங்களை {மாட்டு வண்டிகளைச்} செலுத்திக் கொண்டு பரதனுடன் சென்றனர்.(16) சுத்தமான வஸ்திரங்களை அணிந்தவர்களும், தூய்மையான சந்தனத்தைப் பூசிக் கொண்டவர்களுமான அவர்கள் அனைவரும், விதவிமான யானங்களில் மெதுவாகப் பரதனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(17)

மகிழ்ச்சியில் திளைத்திருந்த அந்த சேனையானது, உடன்பிறந்தானிடம் அன்பு கொண்டவனும், உடன் பிறந்தானை அழைத்து வருவதற்காகக் குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றவனுமான கைகேயி சுதனுடன் {பரதனுடன்} புறப்பட்டுச் சென்றது.(18) இரதங்கள் {தேர்கள்}, யானங்கள் {வண்டிகள்}, அச்வங்கள் {குதிரைகள்}, குஞ்சரங்கள் {யானைகள்} ஆகியவற்றில் இவ்வாறு வெகுதூரம் சென்றவர்கள், ஞாதி கணங்களுடன் அந்த தேசத்தை {உறவினர்களுடன் சேர்ந்து அவ்விடத்தைக்} கவனமாக ஆண்டு வந்தவனும், வீரனும், ராமனின் சகாவுமான குஹன் இருந்த சிருங்கிபேரபுரத்தை நோக்கிச் சென்று கங்கையை அடைந்தனர்.(19,20) இவ்வாறு சென்று, சக்கரவாகங்களால் அழகூட்டப்பட்ட கங்கை தீரத்தை அடைந்த அந்த சேனை, அங்கேயே அப்படியே நின்றது.(21)

வாக்கிய கோவிதனான {வாக்கியங்களை அமைப்பதில் நிபுணனான} பரதன், தன்னைப் பின்தொடர்ந்து வந்த சேனையையும், மங்கல நீரைக் கொண்ட கங்கையையும் கண்டு, தன் அதிகாரிகள் அனைவரிடமும் {பின்வருமாறு} பேசினான்:(22) "என் சேனை அனைத்து வகையிலும் ஓய்வெடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். இங்கே முகாமிட்டுவிட்டு நாளை நாம் இந்நதியைக் கடப்போம்.(23) அதே வேளையில், ஸ்வர்க்கத்திற்குச் சென்ற மஹீபதியின் {தசரதரின்} மறுமை வாழ்வுக்காக, இந்த நதியில் இறங்கிப் புனித நீர்க்காணிக்கை அளிக்க நான் விரும்புகிறேன்" {என்றான் பரதன்}.(24)

இவ்வாறு அவன் சொன்னதைக் கவனித்த அமாத்தியர்கள் {அமைச்சர்கள்} ஒவ்வொருவரும், "அவ்வாறே ஆகட்டும்" என்று மறுமொழி கூறி, தத்தமக்குரிய ஒவ்வொருவரும் விரும்பியவாறு தனித்தனியாக முகாமிட்டனர்.(25) பரதன், படைக்குரிய அனைத்தையும் தரித்த அழகிய பரிவாரங்களுடன் கூடிய தன் சம்முவை {படையை} மஹாநதியான கங்கையின் அருகில் குடியமர்த்திவிட்டு, மஹாத்மாவான ராமனைத் திருப்பி அழைத்து வருவது குறித்துச் சிந்தித்தான்.(26)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 083ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Saturday, 8 October 2022

மந்தரையின் அலங்காரம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 078 (26)

Adornment of Manthara | Ayodhya-Kanda-Sarga-078 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கடுஞ்சீற்றத்துடன் மந்தரையை இழுத்து வந்த சத்ருக்னன்; கைகேயி கெஞ்சியது; மந்தரையைத் தேற்றியது...

Bharata Shatrugna Gatekeeper Manthara

இலக்ஷ்மணானுஜனான {லக்ஷ்மணனின் தம்பியான} சத்ருக்னன், சோக சந்தாபத்திலிருந்தவனும், {ராமனிடம் செல்ல} யாத்திரை செய்ய விரும்பியவனுமான பரதனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "சத்வ சம்பன்னரான {நல்லெண்ணம் கொண்டவரான} ராமர், சர்வபூதங்களின் கதியாகத் திகழ்வதால் நமது துக்கத்தையுந் தணிப்பார் என்று இன்னும் எவ்வளவுதான் சொல்லிக் கொண்டிருப்போம்? அவர் ஒரு ஸ்திரீயால் வனத்திற்கு விரட்டப்பட்டார்.(2) பலவான் என்றும், வீரிய சம்பன்னன் என்றும் அழைக்கப்படும் லக்ஷ்மணன், பிதாவை அடக்கி ஏன் ராமரைக் காக்கவில்லை?(3) நாரியையின் வசத்தில் விழுந்து தவறான வழியில் செல்லும் ராஜரின் நயத்தையும் {முன்மதியையும்}, நயமின்மையையும் {கவனமின்மையையும்} முன்பே உணர்ந்து {லக்ஷ்மணன் தசரதரை} அடக்கியிருக்க வேண்டும்" {என்றான் சத்ருக்னன்}.(4)

இலக்ஷ்மணானுஜனான சத்ருக்னன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது, சர்வாபரணபூஷிதையான குப்ஜை {அனைத்து வகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட கூனி [மந்தரை]} கிழக்கு வாயிலில் தோன்றினாள்.(5) சந்தனக் குழம்பைப் பூசிக் கொண்டும், ராஜ வஸ்திரங்களை உடுத்திக் கொண்டும், பல்வேறு வகைகளில் அமைந்த விதவிதமான ஆபரணங்களால் அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்.(6) பிரகாசமான மேகலையைப் பூட்டிக் கொண்டும், நல்ல பல ஆபரணங்களை அணிந்து கொண்டும் இருந்தவள், கயிறுகளால் கட்டப்பட்ட வானரியைப் போலத் தோன்றினாள்.(7)

பாபக்காரிணியும், கருணையற்றவளுமான அந்த குப்ஜையை {கூனியை / மந்தரையைக்} கண்ட வாயிற்காவலர்கள், அவளைப் பிடித்துக் கொண்டு வந்து சத்ருக்னனிடம் {பின்வருமாறு} சொன்னார்கள்:(8) "எவள் செயலால் ராமர் வனத்தில் இருக்கிறாரோ, உங்கள் பிதா தேகத்தை விட்டொழித்தாரோ அந்தக் கொடூரப் பாவி இதோ இருக்கிறாள். இவளுக்குத் தகுந்ததைச் செய்வீராக" {என்றனர்}.(9)

பெருந்துக்கத்தால் பீடிக்கப்பட்டவனும், திட விரதனுமான சத்ருக்னன், இந்தச் சொற்களைக் கேட்டு அந்தப்புரத்தில் இருந்த அனைவரிடமும் இதைச் சொன்னான்:(10) "என்னுடன் பிறந்தவர்களுக்கும், என் பிதாவுக்கும் தீவிர துக்கத்தை உண்டாக்கியவளான இவள் தன் கொடூர கர்மத்திற்கான பலனை இப்போது அடையப் போகிறாள்" {என்றான்}.(11)

இவ்வாறு பேசியவன், சகீ ஜனங்களுடன் {தோழிகளுடன்} இருந்த அந்த குப்ஜையை பலவந்தமாகப் பிடித்த உடனேயே அந்த கிருஹம் {அவளது அலறலை} எதிரொலித்தது.(12) அப்போது, சத்ருக்னனின் குரோதத்தையும், பெருங்கவலையையும் அறிந்து கொண்ட அவளது சகீ ஜனங்கள் அனைவரும் திசையெங்கும் ஓடிச் சென்றனர்.(13) அவளுடைய சகீ ஜனங்கள் அனைவரும், "இவன் செய்வதைக் கண்டால் நம்மை அழித்துவிடுவான் போலிருக்கிறது.(14) தர்மத்தை அறிந்தவளும், புகழ்மிக்கவளும், மகிமை பொருந்தியவளும், கருணையுள்ளவளுமான கௌசலையைத் தஞ்சமடைவோம். இனி அவளே நமது கதியாவாள்" {என்றனர்}.(15)

சத்ரு தபனனும் {பகைவரை எரிப்பவனும்}, சிவந்த கண்களுடன் கூடியவனுமான சத்ருக்னன், கூச்சலிட்டு அழுது கொண்டிருந்த குப்ஜையை தரணீதலத்தில் பலவந்தமாக இழுத்துச் சென்றான்.(16) அந்த மந்தரை இவ்வாறு பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட போது, வண்ணமயமான, பலவிதமான ஆபரணங்கள் ஆங்காங்கே பிருத்வியில் சிதறின.(17) இவ்வாறு சிதறிய ஆபரணங்களுடன் கூடியதும், செல்வமிக்கதுமான ராஜநிவேசனம் {அரசமாளிகை}, சரத் கால ககனத்தை {இலையுதிர் காலத்தில் நட்சத்திரங்களுடன் கூடிய வானத்தைப்} போலத் தோன்றியது.(18)

பலவானான அந்த புருஷரிஷபன், இவ்வாறு குரோதத்துடன் பலவந்தமாக இழுத்துச் சென்ற போது, கைகேயியைக் கண்டித்து அவளிடம் கடுஞ்சொற்களில் பேசினான்.(19) அந்தக் கடுஞ்சொற்களால் பெருந்துக்கமடைந்து வருத்தமுற்ற கைகேயி, சத்ருக்னன் மீது கொண்ட பயத்தால் பீடிக்கப்பட்டவளாகத் தன் புத்திரனைச் சரணடைந்தாள் {பரதனிடம் தஞ்சமடைந்தாள்}.(20) 

அவளைக் கண்ட பரதன், குரோதத்தில் இருக்கும் சத்ருக்னனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், "சர்வபூதங்களிலும் பிரமதைகளை {உயிரினங்கள் அனைத்திலும் பெண்களை} வதம் செய்வது தகாது. பொறுமை காக்க வேண்டும்.(21) தார்மீகரான ராமர் மாத்ரு காதகத்திற்காக {மாதாவைக் கொல்வதற்காக} என்னிடம் அசூயை அடையாதிருப்பாரானால், பாபியும், துஷ்டசாரிணியுமான இந்தக் கைகேயியை நானே கொன்றிருப்பேன்.(22) தர்மாத்மாவான ராமர், இந்த குப்ஜை {கூனியான மந்தரை} கொல்லப்பட்டாள் என்று அறிந்தால், நிச்சயம் என்னிடமோ, உன்னிடமோ {முகங்கொடுத்துப்} பேசவும் மாட்டார்[1]" {என்றான் பரதன்}.(23)

[1] முன்னையர் முறைகெட முடித்த பாவியைச்
சின்னபின்னம் செய்து, என் சினத்தைத் தீர்வெனேல்
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அல்லால்
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான்.

ஆதலால் முனியும் என்று ஐயன், அந்தம் இல்
வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும்
கோதிலா அருமறை குலவும் நூல் வலாய்
போதும் நாம் என்று கொண்டு அரிதின் போயினான்.

- கம்பராமாயணம் 2298, 2299 பாடல்கள்

பொருள்: "ஐயா சத்ருக்னா, முன்னோர்களின் முறைமை கெடச் செய்த பாவியைச் சின்னபின்னம் செய்து என் சினத்தைத் தீர்த்துக் கொண்டால், என் ஐயன் ராமன் இன்றே என்னைத் துறந்துவிடுவான் என்பதால் அல்லாமல் இவள் என் அன்னை என்று கருதி நான் அமைதியடையவில்லை" என்றான்.(2298) "முடிவற்ற வேதனையை உண்டாக்கிய கூனியைப் பெரிதும் கோபித்தாலும் ஐயன் ராமன் வெறுப்பான். ஆதலால், குற்றமில்லா அருமறைகளைக் கற்றுத் தேர்ந்தவனே, நாம் அவளை விட்டுப் போவோம்" என்று சொல்லி அவனை அழைத்துப் போனான்.(2299) 

இலக்ஷ்மணானுஜனான சத்ருக்னன், பரதனின் சொற்களைக் கேட்டுத் தன் கோபத்தைக் கைவிட்டு அந்த மந்தரையை விடுவித்தான்.(24) துக்கத்தில் பீடிக்கப்பட்டவளான அந்த மந்தரை, பெருமூச்சுவிட்டுப் பரிதாபமாகக் கதறி அழுதவாறே கைகேயியின் பாதங்களில் விழுந்தாள்.(25) சத்ருக்னனின் பலவந்தத்தால் வருத்தமடைந்து, வலையில் அகப்பட்ட கிரௌஞ்சத்தைப் போலத் தெரியும் அந்த குப்ஜையை {மந்தரையைக்} கண்ட பரதனின் மாதா {கைகேயி} மெதுவாக அவளுக்கு ஆறுதல் கூறினாள்.(26)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 078ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Monday, 26 September 2022

கொடூரியே | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 073 (28)

O, cruel one | Ayodhya-Kanda-Sarga-073 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் கெடுபேற்றை நினைத்து வருந்திய பரதன்; கைகேயியை நிந்தித்தது; ராமனை அயோத்திக்கு மீண்டும் அழைத்து வந்து, அவனுக்குத் தொண்டாற்ற எடுத்த தீர்மானம்...

Bharata and Kaikeyi

பிதா {தசரதர்} குறித்த விருத்தத்தையும் {செய்தியையும்}, உடன்பிறந்தோர் {ராம லஷ்மணர்} நாடு கடத்தப்பட்டதையும் கேட்ட பரதன், துக்கத்தில் மூழ்கியவனாக இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "பிதாவையும், பிதாவுக்கு சமமான உடன்பிறந்தவரையும் இழந்து துக்கத்தால் அழுதுபுலம்பும் எனக்கு இப்போது ராஜ்ஜியத்தால் என்ன பயன்?(2) இராஜரை பிரேதபாவம் {சடல நிலையை} அடையச் செய்தாய். இராமரை தாபஸராக்கிவிட்டாய் {தபஸ்வியாக்கிவிட்டாய்}. இரணத்தில் {புண்ணில்} உப்பிட்டதைப் போல எனக்கு துக்கத்துக்கு மேல் துக்கத்தைக் கொணர்ந்தாய்.(3) காலராத்ரி {பிரளய கால இரவைப்} போல எங்கள் குலத்தை அழிக்க வந்தாய். அங்காரத்தை {செழுந்தீயைக்} கட்டித் தழுவினோம் என்று என் பிதா அறிந்தாரில்லை.(4)

பாபதர்சினியே {பாபத்திலேயே கண்களைக் கொண்டவளே}, என் பிதாவை மிருத்யு {மரணம்} அடையச் செய்தாய். குலபாம்சினியே {குலத்தைக் கெடுக்க வந்தவளே}, உன் மோகத்தால் இந்தக் குலம் சுகமற்றுப் போனது.(5) சத்தியசந்தரும், பெரும்புகழ்பெற்றவரும், என் பிதாவுமான தசரத நிருபர் {மன்னர்}, உன்னை அடைந்து தீவிர துக்கத்தையும், சந்தாபத்தையும் {மனவருத்தத்தையும்} அடைந்து இப்போது மாண்டிருக்கிறார்.(6) தர்மவத்சலரும், என் பிதாவுமான மஹாராஜாவை ஏன் கொன்றாய்? இராமரை ஏன் வனத்திற்கு நாடுகடத்தினாய்?(7) 

புத்திரசோகத்தால் பீடிக்கப்பட்ட கௌசல்யையும், சுமித்ரையும், என் ஜனனீயான {என்னைப் பெற்றவளான} உன்னை அடைந்து ஜீவித்திருப்பது {பிழைத்திருப்பது} சாத்தியமில்லை.(8) அந்த தர்மாத்மா {ராமர்}, பெரியோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை அறிந்தவர். அந்த ஆரியர், தன் மாதாவிடம் எவ்வாறு நடந்து கொள்வாரோ அவ்வாறே உன் வழக்கிலும் உன்னத நடத்தையுடன் நடந்து கொண்டார்.(9) அதேபோலவே, தீர்க்கதரிசினியும், தர்மத்தில் நிலைபெற்றவளும், என் ஜேஷ்ட மாதாவுமான {என் பெரியம்மாவுமான} கௌசல்யையும், பாகினியை {உடன்பிறந்தவளைப்} போலவே உன்னிடம் நடந்து கொண்டாள்.(10) பாபியே, கிருதாத்மாவான அவளது புத்திரரை {தூய மனம் கொண்ட கௌசல்யையின் மகனை} மரவுரி உடுக்கச் செய்து, வனவாசம் அனுப்பிவிட்டு நீ வருந்தாமல் இருப்பதேன்?(11) சூரரும், கிருதாத்மாவும் {தன்னடக்கம் கொண்டவரும்} புகழ்பெற்றவருமான அந்த அபாபதர்சனரை {பாபமற்றதிலேயே கண்களைக் கொண்டவரை}, மரவுரி உடுக்கச் செய்து நாடுகடத்தியதற்கு என்ன காரணத்தைக் காண்கிறாய்?(12)

இராமரைக் குறித்து நான் நினைப்பதை லுப்தையான {பேராசைக்காரியான} நீ உண்மையில் அறியமாட்டாய். இராஜ்ஜியத்திற்காக நீ இந்த மஹா அனர்த்தத்தைக் கொண்டு வந்தாய்.(13) புருஷவியாகரர்களான {மனிதர்களிற்புலிகளான} ராமரையும், லக்ஷ்மணனையும் காணாமல், எந்த சக்தி பிரபாவத்தால் என்னால் ராஜ்ஜியத்தை ரக்ஷிக்க {பாதுகாக்க} இயலும்?(14) மஹாபலரும், தர்மாத்மாவுமான மஹாராஜா {தசரதர்}, மேருவனத்தை நம்பியிருந்த மேருவைப் போல நித்தியம் அவரையே {ராமரையே} எதிர்பார்த்திருந்தார்.(15) பெரும்பளுவைச் சுமக்கவல்ல பெருங்காளையின் பாரத்தை சுமக்கப் போகும் இளங்கன்றைப் போல நான் எந்த ஓஜஸால் {திண்மையால்} இந்த பாரத்தை அடைந்து, தாங்கப் போகிறேன்.(16) {சமாதி உபாயங்களாலான} யோகத்தாலோ, {தாரணை முதலியவற்றால் உண்டாகும்} புத்திபலத்தாலோ ஒருவேளை எனக்கு சக்தி இருந்தாலும் புத்திரகர்த்தினியான உன் பேராசையை {பிள்ளையின் நலனில் பேராசை கொண்டவளான உன் பேராசையை} நான் நிறைவேற்றமாட்டேன்.(17) இராமர், சதா உன்னை மாதாவாகப் பார்க்காமல் இருந்திருந்தால், பாபநிச்சயமுள்ள உன்னைத் துறக்கவும் எனக்கு தயக்கமேதும் ஏற்பட்டிருக்காது[1].(18) 

[1] கொடிய வெங்கோபத்தால் கொதித்த கோளரி
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன்
இடி உரும் அனைய வெம்மொழி இயம்புவான்

- கம்பராமாயணம் 2171ம் பாடல்

பொருள்: மிகக் கொடிய கோபத்தால் மனங்கொதித்த சிங்கமான பரதன் கடுஞ்செயல் செய்த அவளைத் தாய் என்று நினைக்கவில்லை என்றாலும் மூத்தவனாகிய ராமன் கோபம் கொள்வான் என்று அஞ்சி நின்றான். பேரிடிக்கு ஒப்பான கொடிய சொற்களை அவன் சொல்லத் தொடங்கினான்.

நன்னடத்தை தொலைந்த பாபதரிசினியே, நம் பூர்வர்களால் {மூதாதையரால்} விலக்கப்பட்ட இந்த புத்தி உன்னில் எழுந்தது எவ்வாறு?(19) குலத்தில் அனைவருக்கும் ஜேஷ்டனே {மூத்தவனே} ராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்யப்பட வேண்டும், உடன் பிறந்தவர்களில் எஞ்சியோர் அவனிடம் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.(20) கொடூரியே, ராஜதர்மத்தை நீ மதிக்கவில்லை, அல்லது சாஸ்வத கதியை {நிரந்தர நடைமுறையை} நீ அறியாமல் இருக்கிறாய் என்று நான் நினைக்கிறேன்.(21) இராஜவிருத்தப்படி ஜேஷ்டனே எப்போதும் ராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கப்படுகிறான். இது {இந்த நடைமுறை} ராஜர்கள் அனைவருக்கும் சமமானது; விசேஷமாக {அதிலும் குறிப்பாக} இக்ஷ்வாகுக்களின் வழக்கில் நடைபெறுவது.(22) தர்மத்தை ரக்ஷிப்பவர்களும், குல வழி நன்னடத்தை கொண்டவர்களுமான அவர்களின்  சாரித்ர சௌண்டீர்யம் {இக்ஷ்வாகுக்களின் குலசரித்திரத்தைக் குறித்த அவர்களின் கர்வம்} இங்கே உன்னை அடைந்ததால் தொலைந்தேவிட்டது.(23) 

உன் குல மூதாதையரான ஜனேந்திரர்களும் {மக்கள் தலைவர்களும்} பெருஞ்சிறப்புடையவர்களே. இந்த மதிகேடு உன் புத்தியில் எப்படி உண்டானது?(24) பாபநிச்சயம் கொண்டவளே, என் ஜீவிதாந்தகரமான {என் உயிரையே மாய்க்கும்} விசனத்தை {துன்பத்தை} விளைவித்தவளான உன்னுடைய ஆசையை நான் ஒருபோதும் நிறைவேற்ற மாட்டேன்.(25) நான் உனக்குப் பிரியமற்றதைச் செய்யப் போகிறேன். பாபமற்றவர்களும், ஜனங்களின் பிரியத்திற்குரியவர்களுமான என்னுடன் பிறந்தாரை வனத்தில் இருந்து இப்போதே அழைத்து வரப் போகிறேன்.(26) நான், திடமான அந்தராத்மா கொண்ட ராமரை மீண்டும் அழைத்து வந்து, தேஜஸ்மிக்கவரான அவரது தாசனாகப் போகிறேன் {அடியவனாகப் போகிறேன் / தொண்டனாகப் போகிறேன்}" {என்றான் பரதன்}.(27)

மஹாத்மாவான அந்த பரதன், பிரியமற்ற வாக்கிய கணங்களை {பல வாக்கியங்களை} இவ்வாறு பேசிவிட்டு, பர்வதக் குகைக்குள் இருக்கும் சிம்மத்தைப் போல மீண்டும் மீண்டும் கர்ஜித்துக் கொண்டிருந்தான்.(28)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 073ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Saturday, 24 September 2022

உனக்காகவே செய்தேன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 072 (54)

For your sake did I do | Ayodhya-Kanda-Sarga-072 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கைகேயியைச் சந்தித்த பரதன். தசரத மன்னன் இறந்ததையும், ராமன் நாடுகடத்தப்பட்டதையும் கேட்டது...

Bharata and kaikeyi

பரதன், பிதாவின் {தசரதரின்} ஆலயத்தில் {தந்தையின் வீட்டில்} பிதாவைக் காணாமல், மாதாவைக் காண மாதாவின் ஆலயத்திற்கு {அன்னையின் வீட்டிற்குச்} சென்றான்.(1) வீட்டைவிட்டுச் சென்றிருந்த தன் சுதன் {மகன்} திரும்பி வந்ததைக் கண்ட கைகேயி, சுவர்ண  ஆசனத்தைவிட்டு {தான் அமர்ந்திருந்த பொன்னாசனத்தில் இருந்து} மகிழ்ச்சியுடன் குதித்தெழுந்தாள்.(2) தர்மாத்மாவான அந்த பரதன், மகிமையற்றிருந்த தன் கிருஹத்திற்குள் {வீட்டிற்குள்} பிரவேசித்ததும், தன் ஜனனீயின் சுப சரணங்களை {தன்னைப் பெற்றவளின் மங்கலப் பாதங்களைப்} பற்றிக் கொண்டான்.(3) 

புகழ்பெற்றவனான அந்த பரதனின் உச்சந்தலையை முகர்ந்தவள் {அந்தக் கைகேயி}, அவனை அணைத்துக் கொண்டு, தன் மடியில் ஏற்றி {அமர்த்திக்} கொண்டு விசாரிக்கத் தொடங்கினாள்:(4) "உன் ஆர்யக வேஷ்மத்தில் புறப்பட்டதிலிருந்து {உன்னத வீட்டான உன் தாய்வழி தாத்தனின் வீட்டில் புறப்பட்டதிலிருந்து} இன்று வரை எத்தனை ராத்திரிகள் ஆகின? ரதத்தில் சீக்கிரமாக வந்த உனக்குப் பயண சிரமம் இல்லையா?(5) புத்திரா, உன் ஆரியகரும் {தாய்வழி தாத்தனும்}, உன் மாதுலர் {தாய்மாமன்} யுதாஜித்தும் குசலமாக இருக்கின்றனரா? வீட்டைவிட்டுச் சென்றதில் சுகமாக இருந்தாயா? உண்மையில் சர்வத்தையும் எனக்குச் சொல்வாயாக" {என்று கேட்டாள் கைகேயி}.(6)

கைகேயி இவ்வாறு பிரியத்துடன் கேட்டதும், ராஜீவலோசனனும் {தாமரைக் கண்ணனும்}, பார்த்திவ நந்தனனுமான {ராஜனின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான) பரதன், தன் மாதாவிடம் சர்வத்தையும் சொன்னான்:(7) "ஆர்யக வேஷ்மத்தில் {உன்னதரான என் தாத்தாவின் வீட்டில்} புறப்பட்டதிலிருந்து இந்த ராத்திரி சப்தமியாகும் {ஏழாவது இரவாகும்}. என் அம்பாவின் தாதையும் {அம்மாவின் தந்தையும்}, என் மாதுலர் {தாய்மாமன்} யுதாஜித்தும் குசலமாக இருக்கின்றனர்.(8) பரந்தபரான அந்த ராஜா {கேகயர் அசுவபதி} எனக்கு தத்தம் செய்த தனங்களும், ரத்தினங்களும், வழியில் {நம் படையினரைக்} களைப்படையச் செய்ததால், நான் {அவர்களுக்கு} முன்பாகவே இங்கே வந்துவிட்டேன்.(9) இராஜவாக்கியத்தைக் கொண்டு வந்த தூதர்கள் அவசரப்படுத்தியதால் நான் துரிதமாக வந்தேன். கேட்க விரும்பும் எனக்கு, உண்மையில் சொல்ல வேண்டியவற்றை என் அம்பா {அம்மா} சொல்லட்டும்.(10) 

சயனத்திற்குரியதும், ஹேமத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டதுமான உன்னுடைய இந்தப் பரியங்கம் சூன்யமாக {மஞ்சம் வெறுமையாக} இருக்கிறது. இக்ஷ்வாகு ஜனங்களான {இக்ஷ்வாகு குலத்தவரான} இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.(11) இராஜா {தசரதர்} பெரும்பாலும் அம்பாவின் நிவேசனத்தில்தான் {கைகேயி அம்மாவின் வீட்டில்தான்} இருப்பார். நான் இப்போது அவரைக் காணவில்லை. அவரைக் காண விரும்பியே நான் இங்கே வந்தேன்.(12) அம்பா, நான் என் பிதாவின் சரணங்களை {என் தந்தையின் பாதங்களைப்} பற்றிக் கொள்ள வேண்டும். கேட்கும் எனக்கு அவரைக் குறித்துச் சொல்வாயாக. அல்லது அனைவருக்கும் ஜேஷ்டையான {மூத்தவளான} கௌசல்யையின் நிவேசனத்தில் {வீட்டில்} அவர் இருக்கிறாரா?" {என்று கேட்டான் பரதன்}.(13)

ராஜ்ஜிய லோபத்தில் மோகமடைந்தவளும் {நாட்டின் மீது கொண்ட பேராசையில் மயங்கியவளும்}, அனைத்தையும் நன்றாக அறிந்தவளுமான கைகேயி, ஏதுமறியாத அவனிடம் கோரமானதும், பிரியமற்றதுமான செய்தியைப் பிரியமானதுபோலச் சொன்னாள்:(14) "மஹாத்மாவும், தேஜஸ்வியும், அடிக்கடி யஜ்ஞங்களைச் செய்பவரும், நல்லவர்களின் கதியாக இருந்தவரும், உன் பிதாவுமான ராஜா {தசரதன்}, சர்வபூதங்களும் {உயிரினங்கள் அனைத்தும்} எந்த கதியை அடையுமோ, அந்த கதியை அடைந்துவிட்டார்" என்றாள் {கைகேயி}.(15)

தர்மவித்தும், நேர்மையாளனுமான பரதன், அந்த வாக்கியத்தைக் கேட்ட உடனேயே பித்ரு சோக பலத்தால் {தந்தை இறந்த பெருஞ்சோகத்தால்} பீடிக்கப்பட்டவனாக பூமியில் விழுந்தான்.(16) மஹாபாஹுவான அந்த வீரியவான், பரிதாபகரமாக, "ஹா, நான் கெட்டேன்" என்ற தீனச் சொற்களை எழுப்பி, தன் கைகளை உயர்த்தியவாறே {மீண்டும்} கீழே விழுந்தான்.(17) 

அப்போது சோகத்தில் மூழ்கியவனும், சித்தங்கலங்கியவனுமான அந்த மஹாதேஜஸ்வி {பரதன்}, பிதாவின் மரணத்தால் உண்டான துக்கத்தில் பீடிக்கப்பட்டவனாக {பின்வருமாறு} அழுதுபுலம்பினான்:(18) "என் பிதாவின் இந்த அழகிய சயனம், மழைக்கால ராத்திரியில், சசியுடன் கூடிய அமல ககத்தைப் போல {சந்திரனால் பிரகாசிக்கும் களங்கமற்ற வானத்தைப் போல} பூர்வத்தில் அழகுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தது.(19) அந்த மதிமிக்கவர் இல்லாத இஃது {சயனம் / மஞ்சம்} இன்று சசியில்லாத {சந்திரனில்லாத} வானம் போலவும், நீர் ஆவியாகி வற்றிப் போன சாகரத்தைப் போலவும் ஒளியில்லாமல் இருக்கிறது" {என்றான் பரதன்}.(20)

ஜயசாலிகளில் சிறந்தவனான அவன், கண்ணீரால் தடைபட்ட தன் கண்டத்தை {தொண்டையை} சரி செய்து கொண்டும், தன் ஆத்மாவில் அதிகம் பீடிக்கப்பட்டவனாக, வஸ்திரத்தால் தன் அழகிய வதனத்தை மறைத்துக் கொண்டும் அழுது புலம்பினான்.(21)

தேவனுக்கு ஒப்பானவனும், வனத்தில் பரசால் வெட்டப்பட்ட சாலமரக்கிளையைப் போல {கோடரியால் வெட்டப்பட்ட ஆச்சா மரக்கிளையைப் போலப்} புவியில் விழுந்தவனும், துன்புற்றவனும், மத்தமாதங்கத்தை {மதங்கொண்ட யானையைப்} போன்றவனும், சந்திரனையும், சூரியனையும் போலத் தெரிபவனும், சோகத்தால் பீடிக்கப்பட்டவனுமான தன் சுதனை {மகனைப்} புவியில் இருந்து தூக்கியவள் {கைகேயி}, இந்த வசனங்களைச் சொன்னாள்:(22,23) "புகழ்வாய்ந்த ராஜபுத்திரா, எழு, எழுவாயாக. ஏன் படுத்துக் கிடக்கிறாய். சபையில் கௌரவிக்கப்படும் உன்னைப் போன்ற சந்தர்கள் {நல்லவர்கள்} வருந்தமாட்டார்கள்.(24) புத்திசாலியே, சீலத்தையும் {ஒழுக்கத்தையும்}, ஸ்ருதிகளையும் {வேத வாக்கியங்களையும்} பின்பற்றுவதும், தானம் அளிப்பதிலும், யஜ்ஞம் செய்வதிலும் ஊக்கமுடையதுமான உன் புத்தி, அர்க்க மந்திரப் பிரபையைப் போல {சூரியனின் வசிப்பிடத்தில் உள்ள பிரகாசத்தைப் போல} பிரகாசிக்கிறது" {என்றாள் கைகேயி}.(25)

எண்ணற்ற சோகங்களால் சூழப்பட்டு நீண்ட நேரம் அழுது, புவியில் புரண்டு கொண்டிருந்தவன் {பரதன்}, தன் ஜனனீயிடம் {தன்னைப் பெற்றவளான கைகேயியிடம்} இந்த மறுமொழியைச் சொன்னான்:(26) இராஜா {தசரதர்}, ராமருக்கான அபிஷேகத்தையோ, ஒரு யஜ்ஞத்தையோ {வேள்வியையோ} செய்யப் போகிறார் என்ற ஒரு சங்கல்பத்தை {தீர்மானத்தை} அடைந்தே மகிழ்ச்சியுடன் யாத்திரை செய்தேன்.(27) இவை யாவும் வேறு வகையில் ஆகிவிட்டன. என் பிரியங்களிலும், ஹிதங்களிலும் நித்தியம் அக்கறையாக {என் விருப்பங்களிலும், நன்மையிலும் எப்போதும் அக்கறையாக} இருந்த பிதாவைக் காணாமல், என் மனம் துண்டு துண்டாக உடைகிறது.(28) 

அம்பா {அம்மா}, நான் திரும்பி வருவதற்குள் எந்த வியாதியால் ராஜா இறந்தார்? பிதாவின் ஸம்ஸ்கிருதத்தை ஸ்வயமாகச் செய்த {நற்காரியத்தை / தூய்மைச் சடங்குகளைத் தாங்களே செய்த} ராமரும், அவருடன் இருந்தவர்களும் தன்யர்கள் {பாக்கியவான்கள் / நற்பேறு பெற்றவர்கள்}.(29) கீர்த்திமானான மஹாராஜா நான் வந்திருப்பதை நிச்சயம் அறியமாட்டார். தாதை {என் தந்தை என் வரவை அறிந்திருந்தால்} துரிதமாக வந்து, என் உச்சியைத் தாழ்த்தி முகர்ந்திருப்பார்.(30) புழுதி படிந்திருக்கும் என்னை மீண்டும் மீண்டும் துடைத்து, இனிய ஸ்பரிசத்துடன் களைப்பில்லாமல் செயல்படும் என் தாதையின் கைகள் எங்கே?(31) 

களைப்பில்லாமல் செயல்படுபவரும், எனக்குப் பிதாவும், பந்துவும், என்னுடன் பிறந்தவரும் எவரோ, நான் யாருக்கு தாசனோ {அடியவனோ} அந்த ராமருக்கு என்னைக் குறித்து {என் வரவை} சீக்கிரம் அறிவிப்பீராக.(32) தர்மத்தை அறிந்த ஆரியனுக்கு ஜேஷ்டர் பிதாவே ஆகிறார் {அறமறிந்த நல்லவனுக்கு ஓர் அண்ணன் தந்தையே ஆகிறான்}. நான் அவரது பாதங்களைப் பற்றிக் கொள்வேன். உண்மையில் இப்போது அவரே எனக்கு கதி[1].(33) தர்மவித்தும், நித்திய தர்மவானும், சத்தியசந்தரும், திடவிரதரும், சத்தியவிக்ரமரும் {உண்மையான துணிவைக் கொண்டவரும்}, ஆரியரும், என் பிதாவுமான ராஜா என்ன சொன்னார்?(34) {என் தந்தை எனக்குச் சொன்ன} இறுதி செய்தியை நான் கேட்க விரும்புகிறேன்" {என்றான் பரதன்}.

[1] எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெங்கொடுந்துயர் தீர்கலாது என்றான்

- கம்பராமாயணம் 2159ம் பாடல்

பொருள்: என் தந்தையும், தாயும், என் தெய்வமும், என் அண்ணனும் எல்லையற்ற பெருங்குணாளனான இராமனே ஆனதால் அவனது பாதங்களை வணங்காமல் என் மனத்தின் இந்தக் கொடுந்துயர் தீராது என்றான்.

இவ்வாறு கேட்கப்பட்டதும், கைகேயி நடந்தவற்றை உள்ளது உள்ளபடியே இந்த வாக்கியங்களில் சொன்னாள்:(35) "நற்கதி அடைபவர்களில் முதன்மையானவரும், மஹாத்மாவுமான அந்த ராஜா {தசரதர்}, "இராமா, சீதா, லக்ஷ்மணா" என்று சொல்லி அழுதவாறே பரலோகத்தை அடைந்தார்.(36) பாசத்தால் {கயிற்றால்} கட்டப்பட்ட மஹாகஜத்தைப் போல, கால, தர்மத்தில் கட்டுண்ட உன் பிதா இந்த இறுதிச் சொற்களையே சொன்னார்:(37) "இராமனும், சீதையும், மஹாபாஹுவான லக்ஷ்மணனும் திரும்பிவருவதைக் காணப்போகும் நரர்களே சித்தார்த்தர்கள் {தங்கள் நோக்கம் நிறைவேறியவர்கள்}", {என்ற இறுதிச் சொற்களையே உன் தந்தை சொன்னார்}", {என்றாள் கைகேயி}.(38)

பிரியமற்ற அந்த இரண்டாவது செய்தியைக் கேட்டு, நிலைகுலைந்து, வதனம் வாடியவன் {பரதன்}, மீண்டும் தன் மாதாவிடம் {பின்வருமாறு} கேட்டான்:(39) "தர்மாத்மாவான அந்த கௌசல்யாநந்தவர்தனர் {கௌசல்யையின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் ராமர்}, சீதையோடும், தன்னுடன் பிறந்த லக்ஷ்மணனனோடும் இப்போது எங்கே இருக்கிறார்?" {என்று கேட்டான் பரதன்}.(40)

இவ்வாறு கேட்கப்பட்ட அவனது மாதா {கைகேயி}, பெரிதும் பிரியமற்ற வாக்கியங்களை பிரியத்திற்குரியவை போன்ற உணர்வுடன், உள்ளது உள்ளபடியே {பின்வருமாறு} சொல்லத் தொடங்கினாள்:(41) "புத்திரா, அந்த ராஜசுதன் {ராஜகுமாரனான ராமன்}, மரவுரி உடுத்திக் கொண்டு, லக்ஷ்மணனும், சீதையும் பின்தொடர மஹாவனமான தண்டகத்திற்குச் சென்றான்" {என்றாள் கைகேயி}.(42)

இதைக் கேட்ட பரதன், தன்னுடன் பிறந்தவனின் {ராமனின்} ஒழுக்கத்தில் ஏற்பட்ட சந்தேகத்தால் அச்சமடைந்து, தன் வம்ச மஹாத்மியத்தையும் நினைத்து, {தன் மாதாவிடம் பின்வருமாறு} கேட்கத் தொடங்கினான்:(43) "இராமர், பிராமண தனம் {பிராமணர்களின் செல்வம்} எதையும் அபகரிக்கவில்லை என்று நம்புகிறேன். அவர் பாபமற்றவர்களான எந்த தனவானுக்காவது, தரித்திரருக்காவது தீங்கிழைக்கவில்லை என்றும் நான் நம்புகிறேன்.(44) இராஜபுத்திரர் {ராமர்}, பரதாரங்களை {மாற்றான் மனைவியரை} ஒருபோதும் விரும்பியிருக்கமாட்டார் என்று நம்புகிறேன். என்னுடன் பிறந்த ராமர், கருவைக் கொன்றவரைப் போல் ஏன் தண்டகாரண்யத்திற்கு விரட்டப்பட்டார்?" {என்று கேட்டான்}.(45)

அப்போது, ஸ்திரீ பாவத்தினால் சபலையான {பெண்களில் இயல்பால் நிலையற்றவளான} அவனது மாதா, உள்ளது உள்ளபடியே தான் செய்த செயலைச் சொல்லத் தொடங்கினாள்.(46) மஹாத்மாவான பரதன் இவ்வாறு சொன்னதும், அந்த மூடக் கைகேயி, தன்னை பண்டிதையாக நினைத்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் {பின்வரும்} இந்தச் சொற்களைச் சொன்னாள்:(47) "இராமன் எந்த பிராமண தனத்தையும் சிறிதளவேனும் பறிக்கவில்லை. பாபமற்றவர்களான எந்த தனவானுக்காவது, தரித்திரருக்காவது அவன் தீங்கிழைக்கவில்லை.{48} பரதாரங்களை ராமன் தன் கண்ணாலும் பார்க்கமாட்டான்.(49அ) புத்திரா, ராமனின் அபிஷேகத்தைக் குறித்துக் கேட்ட உடனேயே, நான் உன் பிதாவிடம் உனக்கு ரஜ்ஜியத்தையும், ராமனை நாடுகடத்தவும் யாசித்தேன்.(49ஆ,50அ) உன் பிதா, தன் வாக்குக்கு அடிபணிந்து எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்தார். இராமனும், சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்}, சீதையும் இங்கிருந்து அனுப்பப்பட்டனர்.(50ஆ,51அ) 

பெரும்புகழ்பெற்ற மஹீபாலர் {பூமியைக் காப்பவரான தசரதர்}, பிரியத்திற்குரிய தன் புத்திரனைக் காணாமல், புத்திரசோகத்தில் பரிதபித்தவாறே பஞ்சத்வத்தை {மரணம்} அடைந்தார்.(51ஆ,52அ) தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, ராஜத்வத்தை {அரசாட்சியை} இப்போதே நீ ஏற்பாயாக. இவ்வாறான இவை யாவற்றையும் உனக்காவே நான் செய்தேன்.(52ஆ,53அ) புத்திரகா {மகனே}, சோகத்திலும், சந்தாபத்திலும் {துக்கத்திலும்} மூழ்காதே. தைரியத்தை அடைவாயாக. இந்த நகரமும், அனாமயமான {இடையூறற்ற} இந்த ராஜ்ஜியமும் உனக்கே அதீனம் {உரியதாகும்}.(53ஆ,54அ) எனவே, இந்தப் பூமியில் உரிமையுள்ள நீ, விதிகளை அறிந்த வசிஷ்டரையும், முக்கிய துவிஜேந்திரர்களையும் {இருபிறப்பாளர்களின் முக்கிய தலைவர்களையும்} சந்தித்து, {தசரத} ராஜருக்குரிய சடங்குகளைச் செய்துவிட்டு உன் அபிஷேகத்தை {பட்டாபிஷேகத்தை} செய்து கொள்வாயாக" {என்றாள் கைகேயி}.(54ஆ-உ)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 072ல் உள்ள சுலோகங்கள்: 54

Previous | Sanskrit | English | Next

Thursday, 15 September 2022

தைலத் தொட்டி | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 066 (29)

Oil trough | Ayodhya-Kanda-Sarga-066 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கைகேயியை நிந்தித்த கௌசல்யை; ஈமச்சடங்குகளுக்காக காத்திருக்கும் மன்னனின் சடலத்தைப் பதப்படுத்திப் பாதுகாத்தது; இருளில் மூழ்கிய அயோத்தி...

Dasaratha's death

இறந்துவிட்ட பார்த்திபன் {மன்னன் தசரதன்}, முற்றிலும் அணைந்த அக்னியைப் போலவும், நீர் வற்றிய ஆர்ணவத்தை {கடலைப்} போலவும், பிரபையிழந்த ஆதித்யனை {சூரியனைப்} போலவும் கிடப்பதைக் கண்ட கௌசல்யை, அந்த ராஜனின் சிரஸைப் பற்றிக் கொண்டு {தசரதனின் தலையை மடியில் வைத்துக் கொண்டு}, பல்வேறு வகைகளில் சோகத்தால் பீடிக்கப்பட்டும், கண்கள் நிறைந்த கண்ணீருடனும், கைகேயியிடம் {இதைச்} சொன்னாள்:(1,2) "கைகேயீ, கொடூரியே, துஷ்டசாரிணியே {தீய நடத்தை கொண்டவளே}, ஆசைகள் நிறைவேறியவளாக இருப்பாயாக. ராஜரைக் கைவிட்டு, எந்தத் தடையுமில்லாமல், இடையூறேதுமில்லாமல் இந்த ராஜ்ஜியத்தை நீ அனுபவிப்பாயாக.(3) இராமன் என்னை விட்டுச் சென்றுவிட்டான். என் பர்த்தாவும் ஸ்வர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். உடன் வந்த கூட்டத்தை இழந்து, தீய வழியை அடைந்து ஜீவிப்பதில் எனக்கு விருப்பமில்லை.(4) 

தர்மத்தைக் கைவிட்ட கைகேயியைத் தவிர, எந்த ஸ்திரீதான் தன் தைவதமான பர்த்தாவை {தெய்வமான கணவனை} விட்டு விட்டு ஜீவிக்க விரும்புவாள்?(5) கெட்ட உணவை உண்பவனைப் போலவே ஒரு லுப்தனால் தன் தோஷத்தை {ஒரு பேராசைக்காரனால் தன் குற்றத்தைப்} புரிந்து கொள்ள முடியாது. ஒரு குப்ஜையினால் {கூனியினால்} ராகவ குலத்தை இந்தக் கைகேயி அழித்துவிட்டாள்.(6) தகாத செயலைச் செய்ய வற்புறுத்தப்பட்டதன் காரணமாக ராஜரால் ராமனும், அவனது பாரியாளும் {மனைவியும்} நாடுகடத்தப்பட்டனர் என்பதைக் கேட்டு ஜனகரும் என்னைப் போலவே பரிதபிக்கப் போகிறார்.(7) கமலபத்ரங்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், தார்மிகனுமான ராமன் ஜீவித்திருந்தாலும் இங்கில்லாமல் போனதால், இப்போது நான் அனாதையும், விதவையுமானதை அறியமாட்டான்.(8) 

விதேஹராஜனின் மகளும், பரிதாபத்திற்குரியவளும், துக்கத்திற்குத் தகாதவளுமான சீதையும், வனத்தில் துக்கத்துடன் பயந்திருப்பாள்.(9) அவள், இரவுகளில் நாதமெழுப்பும் மிருக பக்ஷிகளின் {விலங்குகள், பறவைகளின்} பயங்கர கோஷங்களைக் கேட்டு நிச்சயம் பேரச்சங்கொண்டு ராகவனிடம் தஞ்சம் அடைவாள்.(10) புத்திரர்களற்றவரான அந்த விருத்தரும் {ஜனகரும்}, வைதேஹியை நினைத்தவாறே சோகத்தால் பீடிக்கப்பட்டவராகத் தமது ஜீவிதத்தை நிச்சயம் கைவிடுவார்.(11) பதிவிரதையான நானும், {தசரதரின்} இந்த சரீரத்தை ஆலிங்கனம் செய்தவாறு ஹுதாசனத்தில் {நெருப்பில்} நுழைந்து, இன்றே என் திஷ்டாந்தத்தை {எனக்கான முடிவை} அடைவேன்" {என்றாள் கௌசல்யை}.(12)

அப்போது வியாவஹாரிகள் {அரண்மனை அதிகாரிச்சிகள்}, துக்கத்தால் பீடிக்கப்பட்டவளும், பரிதாபத்திற்குரியவளும், {தசரதனின் உடலை} ஆரத்தழுவிக் கொண்டிருந்தவளுமான அந்தக் கௌசலையை அந்த இடத்தில் இருந்து தூக்கிச் சென்றனர்.(13) அதன் பிறகு குறிப்பிட்ட அமாத்தியர்கள் {அமைச்சர்கள்}, அந்த ஜகத்பதியை தைலதுரோண்யத்திலிட்டு {எண்ணெய்த் தொட்டியிலிட்டு} அந்த ராஜனுக்குச் செய்ய வேண்டிய சர்வ கர்மங்களையும் செய்தனர்.(14) சர்வத்தையும் அறிந்தவர்களான அந்த மந்திரிகள், புத்திரர்களில்லாத போது ராஜனை சங்கலனஞ் செய்ய {தகனஞ் செய்ய / எரியூட்ட} விரும்பாததால் அந்த பூமிபதியை இவ்வாறு {பதப்படுத்தி} பாதுகாத்தனர்.(15) 

அந்த நராதிபனை அவர்கள் {மந்திரிகள்} தைலதுரோண்யத்தில் கிடத்துவதை அறிந்த ஸ்திரீகள், "ஹா {ஐயோ}, இவர் இறந்துவிட்டாரே" என்று கதறி அழுதனர்.(16) கண்ணீர் வழியும் கண்களுடன் கூடிய முகங்களைக் கொண்ட அந்தப் பரிதாபத்திற்குரியவர்கள், சோகசந்தாபத்தால் பீடிக்கப்பட்டு அழுதவாறே தங்கள் கைகளை உயர்த்திக் கொண்டு {பின்வருமாறு} பரிதாபமாக அழுது புலம்பினார்கள்:(17) "ஹா, மஹாராஜா, பிரியவாதியும் {அன்புடன் பேசுபவனும்}, சதா சத்தியசந்தனுமான {எப்போதும் சத்தியத்தைக் காப்பவனுமான} ராமன் இல்லாதபோது, ஏன் எங்களை விட்டுச் சென்றீர்?(18) இராமன் தொலைதூரத்தில் இருக்கும்போது விதவைகளாகியிருக்கும் நாங்கள், துஷ்டஸ்வபாவம் கொண்டவளும், பதிக்னையுமான {பதியைக் கொன்றவளுமான} கைகேயியின் அருகில் எப்படி வாழ்வோம்?(19) பிரபுவும், ஆத்மவானும், ஸ்ரீமானும், சதா எங்களுக்கும், உமக்கும் நாதனாக {பாதுகாவலனாக} விளங்கியவனுமான அந்த ராமன், நிருபதிசிரியத்தை {ராஜ்ஜியலக்ஷ்மியை} விட்டு விட்டு வனத்திற்குச் சென்றுவிட்டான்.(20) நீரும் இல்லாமல், அந்த வீரனுமில்லாமல் விசனமோஹத்தில் இருக்கும் {துன்பத்தில் மெய்மறந்திருக்கும்} நாங்கள், கைகேயியால் இகழப்பட்டு எவ்வாறு காலங்கழிப்போம்?(21) ராஜரையும், ராமனையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணனையும், சீதையையும் எவள் கைவிட்டாளோ அவள் பிறரையும் ஏன் கைவிடமாட்டாள்?" {என்று சொல்லி அழுதுபுலம்பினர்}.(22)

சோகத்தில் அதிகமாகக் கண்ணீர் சிந்திய அந்த ராகவனின் வரஸ்திரீகள் {தசரதனின் சிறந்த மனைவியர்}, ஆனந்தமிழந்தவர்களாக வரிசையாகத் தரையில் உருண்டு புரண்டனர்.(23) மஹாத்மாவான அந்த ராஜன் இல்லாத அயோத்தியாபுரி, பர்த்தா இல்லாத ஸ்திரீயைப் போலவும், சந்திரனில்லாத நிசியைப் போலவும் ஒளியிழந்திருந்தது.(24) கண்ணீருடன் கலங்கி நின்ற ஜனங்கள், "ஹா, ஹா" வென அழுது புலம்பிய குலாங்கனைகள் {கற்புடைய பெண்கள்}, சூன்யமான மாளிகைகளின் வாயில்கள், சதுரசாலைகள் ஆகியவற்றுடன் கூடிய அது {அந்த அயோத்தி}, பூர்வத்தைப்போன்ற ஒளியுடன் துலங்கவில்லை.(25)

நராதிபன் சோகத்துடன் திரிதிவத்திற்கு {ஸ்வர்க்கத்திற்குச்} சென்று, நிருபாங்கனைகள்  மஹீதலத்தில் கிடந்தபோது {மன்னனின் மனைவியர் தரையில் கிடந்தபோது}, ரவி {சூரியன்} தன் இயக்கத்தில் இருந்து பின்வாங்கி விரைவாகச் சென்றுவிட்டான். இருள் பரப்பத் தொடங்கும் ரஜனியும் {இரவும்} வந்தாள்.(26) அங்கே வந்த நண்பர்களும், உறவினர்களும், புத்திரர்கள் இல்லாத போது அந்த மஹீபதியின் தகனத்தை விரும்பவில்லை. இவ்வாறு சிந்தித்துக் கொண்டே சிந்தனைக்கும் புலப்படாத அந்த சயனத்தில் ராஜனை வைத்திருந்தனர்.(27) அந்த மஹாத்மாவால் {தசரதனால்} கைவிடப்பட்டதும், கண்ணீரால் குரலுடைந்த மக்களுடன் கூடிய சாலைகளையும், நாற்சந்திகளையும் கொண்ட அந்த நகரம், பாஸ்கரன் இல்லாத வானத்தைப் போலவும், நக்ஷத்ராகணங்கள் இல்லாத இரவைப் போலவும் பிரபையற்று ஒளியிழந்தது.(28) அந்த நரதேவன் {தெய்வீகனான தசரதன்} இறந்தபோது, அந்நகரத்தின் நரநாரீகள் கூட்டங்கூட்டமாகச் சேர்ந்து பரதனின் மாதாவை இகழ்ந்தும் அமைதியடையாமல் வேதனையடைந்தனர்.(29)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 066ல் உள்ள சுலோகங்கள் : 29

Previous | Sanskrit | English | Next

Friday, 27 May 2022

தசரதன் புலம்பல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 042 (34)

The lament of Dasharatha | Ayodhya-Kanda-Sarga-042 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: துக்கத்தால் பீடிக்கப்பட்டு உணர்விழுந்து தரையில் விழுந்த தசரதன். கைகேயியைப் பழித்துவிட்டு கௌசல்யையின் மாளிகையை அடைந்தது...

Kaikeyi Sumitra Dasharatha and Kaushalya

அவன் {ராமன்} சென்ற புழுதி தென்பட்ட வரை, அந்த இக்ஷ்வாகுக்களில் சிறந்தவன் {தசரதன்} தன் கண்களை விலக்காமல் {பார்த்துக் கொண்டே} இருந்தான்.(1) அந்த ராஜா {தசரதன்},  தார்மிகமிக்கவனான தன் பிரிய புத்திரனைப் பார்த்துக் கொண்டிருந்த வரை, அவன் தன் புத்திரனைக் காணும் வகையில் தரணியில் புழுதி  எழுந்து கொண்டே இருந்தது.(2) இராமன் சென்ற புழுதி தென்படாதபோது, அந்த பூமிபதி {தசரதன்} விசனத்தால் பீடிக்கப்பட்டவனாக தரணியில் விழுந்தான்.(3) அங்கனையான {அவனது மனைவியான} கௌசல்யை, அவனது வலப்பக்கம் சென்றாள், பரதனின் அன்புக்குரியவளான கைகேயி அவனது இடப்பக்கம் சென்றாள் {இருவரும் சேர்ந்து விழுந்து கிடந்த தசரதனைக் தூக்கினர்}.(4)

நேர்மை, தர்மம், விநயம் {அடக்கம்} ஆகியவற்றைக் கொண்ட ராஜா {தசரதன்}, அந்தக் கைகேயியைக் கண்டதும் இந்திரியங்கள் கலங்கியவனாக {இதைச்} சொன்னான்:(5) "கைகேயி, துஷ்டசாரிணியே {தீய வழியில் நடப்பவளே}, என் அங்கங்களைத் தொடாதே. உன்னைக் காண நான் விரும்பவில்லை. நீ என் பாரியையுமில்லை {மனைவியுமில்லை}, பந்துவுமில்லை {உறவுக்காரியுமில்லை}.(6) உன்னை அனுசரிப்பவர்களுக்கு {சார்ந்தவர்களுக்கு} என்னிடம் ஏதுமில்லை. எனக்கும் அவர்களால் ஏதுமில்லை. பேராசையால் தர்மத்தைக் கைவிட்ட உன்னை நான் கைவிடுகிறேன்.(7) உன் கைகளைப் பற்றி அக்னியை வலம் வந்ததன் மூலம் உண்டான அனைத்தையும் இம்மையிலும், மறுமையிலும் நான் கைவிடுகிறேன்.(8) ஒருவேளை பரதன் அழிவில்லாத இந்த ராஜ்ஜியத்தை அடைந்ததும் மகிழ்ச்சியடைந்தால், பித்ரார்த்தமாக {ஈமச்சடங்குகளின் மூலம்} அவனால் தத்தம் செய்யப்படும் எதுவும் என்னை அடையாமல் போகட்டும்" {என்றான் தசரதன்}.(9)

அப்போது சோகத்தில் மூழ்கியிருந்த கௌசல்யாதேவி, புழுதியில் மறைந்திருந்த அந்த நராதிபனை {மனிதர்களின் தலைவனான தசரதனைத்} தூக்கிவிட்டுத் திரும்பினாள்.(10) அந்த தர்மாத்மா, தபஸ்வியின் உடையில் இருந்த தன் புத்திரனை நினைத்து, தெரிந்தே பிராமண ஹதம் செய்தவனை {பிராமணனைக் கொன்றவனைப்} போன்றும், கையால் அக்னியைத் தீண்டியவனைப் போன்றும் வருந்தினான்.(11) இரதத்தின் தடங்களை நோக்கி மீண்டும் மீண்டும் திரும்பிய மன்னனின் முகம், ராகுவால் விழுங்கப்பட்ட அம்சுமானை {சூரியனைப்} போல துக்கத்தால் ஒளியிழந்தது.(12)

தனக்குப் பிரியமான புத்திரனை நினைத்தவன், துக்கத்தால் பீடிக்கப்பட்டுக் கதறி அழுதான். அதன்பிறகு தன் புத்திரன் நகர எல்லையை எட்டினான் என்பதை உணர்ந்ததும் {இவ்வாறு} சொன்னான்:(13) "என் மகனைச் சுமந்து சென்ற முக்கிய குதிரைகளின் காலடித்தடங்கள் பாதையில் தென்படுகின்றனவேயன்றி அந்த மஹாத்மா தென்படவில்லையே.(14) சந்தனம் பூசிக் கொண்டு, மிகச் சிறந்த ஸ்திரீகளால் சாமரம் வீசப்பட்டு, சுகமாக மெத்தைகளில் உறங்கிய என் உத்தம சுதன் {மகன்} ராமன், இனிமேல் எங்கோவொரு விருக்ஷத்தின் {மரத்தின்} வேரடியில் கிடப்பான், அல்லது மரக்கட்டையிலோ, கல்லிலோ சயனிப்பான் {படுப்பான்}.(15,16) அந்தப் பரிதாபத்திற்குரியவன், மலையருவிகளின் அருகில் {எழும்} கரேணுக்களின் ரிஷபத்தைப் போல {பெண் யானைகளின் தலைவனான ஆண் யானையைப் போலப்} புழுதிபடிந்தவனாக பெருமூச்சுவிட்டபடியே மேதினியில் விழித்தெழுவான்.(17) வனத்தில் திரியும் புருஷர்கள், தீர்க்கபாஹுவும் {நீண்ட கைகளைக் கொண்டவனும்}, லோகநாதனுமான ராமன் {அவ்வாறு} விழித்தெழுந்து, அநாதையைப் போலத் திரிவதை இனி காண்பார்கள்.(18) சுகத்திற்கே பழக்கப்பட்டவளான ஜனகனின் அன்புக்குரிய மகள் {சீதை}, இனி, கல்லும், முள்ளும் நிறைந்த வனத்தில் களைப்புடன் திரிவாள்.(19) வனம் குறித்து அறிமுகமில்லாத அவள், இனி மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கும் காட்டுவிலங்குகளின் கம்பீர ஒலிகளைக் கேட்டு பயப்படப் போகிறாள்.(20) கைகேயி, உன் விருப்பம் நிறைவேறட்டும். இந்த ராஜ்ஜியத்தில் விதவையாக வசிப்பாயாக. அந்தப் புருஷவியாகரன் {மனிதர்களில் புலியான ராமன்} இல்லாமல் ஜீவிப்பதில் எனக்கு விருப்பமில்லை" {என்றான் தசரதன்}.(21)

இவ்வாறு புலம்பிய ராஜா, ஜனக்கூட்டத்தால் சூழப்பட்டவனாக, உபஸ்நானம் செய்தவனின் {இறந்தவர்களுக்காக இறுதி நீராடல் செய்தவனின்} வீட்டைப் போலிருந்த தன் உத்தம நகருக்குள் பிரவேசித்தான்.(22) சூன்யமான நாற்சந்திகள், மாளிகைகள், மூடப்பட்ட கடைகள், கோவில்கள், துக்கத்தால் பீடிக்கப்பட்டு பலமற்றவர்களாக இருந்த மக்கள், நெரிசலற்ற மஹாபாதைகள் ஆகியவற்றுடன் கூடிய மொத்த நகரத்தையும் கண்ட அந்த ராஜா, ராமனையே நினைத்து புலம்பியபடி மேகத்திற்குள் சூரியனைப் போல அதற்குள் {அந்த நகரத்திற்குள்} பிரவேசித்தான்.(23) இராமன், வைதேஹி, லக்ஷ்மணன் ஆகியோரில்லாத அந்த மாளிகை, சுவர்ணனால் உரகங்களற்றதாக {கருடனால் பாம்புகளற்றதாகச்} செய்யப்பட்ட, கலங்கலற்ற பெருந்தடாகத்தைப் போலத் தெரிந்தது.(24)

புலம்பிக் கொண்டிருந்த அந்த வசுதாதிபன் {பூமியின் தலைவன் தசரதன்}, மிருதுவான, தீனமான, ஸ்வரமற்ற, மந்தமான, அர்த்தமற்ற சொற்களை கடகட சப்தத்துடன் {பின்வருமாறு} சொன்னான்:(25) "என்னை சீக்கிரமாக ராமனின் மாதாவான கௌசல்யையின் கிருஹத்திற்கு அழைத்துச் செல்வீராக. உண்மையில் வேறெங்கும் என் ஹிருதயம் ஆசுவாசத்தை {என் மனம் தேறுதலை} அடையாது" {என்றான்}.(26)

வாயிற்காவலர்கள், ராஜா சொன்னதுபோலவே கௌசல்யையின் கிருஹத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அங்கே அவன் {மஞ்சத்தில்} மென்மையாகக் கிடத்தப்பட்டான்.(27) கௌசல்யையின் வீட்டிற்குள் பிரவேசித்தும், சயனத்தில் கிடத்தப்பட்டும்கூட அவனது மனக்கலக்கம் அடங்கவில்லை.(28) அந்த ராஜா, புத்திரர்கள் இருவர் இல்லாமலும், மருமகள் சென்றும் சந்திரனில்லாத அம்பரத்தை {வானத்தைப்} போலிருக்கும் அந்த பவனத்தை கண்டான்.(29) வீரியமிக்க அந்த மஹாராஜா, அதைக் கண்டு, தன் புஜத்தை உயர்த்தி உச்ச ஸ்வரத்துடன் {பின்வருமாறு} அழுதான்: "ஆ, ராகவா, எங்களை விட்டுச் சென்றுவிட்டாய்.(30) ஐயோ, அந்தக் காலம் வரை {பதினான்கு ஆண்டுகள்} ஜீவித்திருந்து, ராமன் திரும்பி வருவதைக் கண்டு, அவனைத் தழுவி சுகிப்பவர்களே நரோத்தமர்கள் {மகிழ்பவர்களே உத்தம மனிதர்கள்}" {என்றான் தசரதன்}.(31)

அதன்பிறகு, அவனுக்கு காலராத்திரியைப் போன்ற அந்த  ராத்திரி வந்தபோது, அர்த்தராத்திரியில் {நடுராத்திரியில்} தசரதன் கௌசல்யையிடம் இதைச் சொன்னான்:(32) "கௌசல்யா, ராமனுடன் சென்ற என் பார்வை திரும்பவில்லை. இப்போதும் என்னால் உன்னை சரியாகப்பார்க்க முடியவில்லை. உன் கைகளால் என்னைத் தீண்டுவாயாக" {என்றான்}.(33)

சயனத்தில் இருந்த அந்த நரேந்திரன் {மனிதர்களின் தலைவன் தசரதன்}, ராமனை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த அந்த தேவி {கௌசல்யை}, அதிக மன உளைச்சலுடன் அவனருகே அமர்ந்து, பெருமூச்சுவிட்டபடியே துக்கத்துடன் புலம்பத் தொடங்கினாள்.(34)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 042ல் உள்ள சுலோகங்கள் : 34

Previous | Sanskrit | English | Next

Friday, 20 May 2022

இராமனின் வேண்டுகோள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 038 (18)

The request of Rama | Ayodhya-Kanda-Sarga-038 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மரவுரியில் இருக்கும் மருமகளைக் கண்டு சினமடைந்த தசரதன்; கௌசலையை மதிப்புடனும், கருணையுடனும் நடத்துமாறு தன் தந்தையிடம் சொன்ன ராமன்...

Dasharatha and Rama

நாதனால் {ராமனால்} பாதுகாக்கப்பட்டவளாக இருந்தாலும் அநாதையைப் போல மரவுரியை உடுத்திக் கொண்டிருந்த அவளைக் {சீதையைக்} கண்ட சர்வஜனங்களும், "தசரதனுக்கு ஐயோ" வென உரக்கக் கதறினார்கள்.(1) அங்கே எழுந்த உரத்தவொலியால் துக்கமடைந்த மஹீபதி {தசரதன்} தன் ஜீவிதத்திலும், தர்மத்திலும், மதிப்பிலும் உள்ள நம்பிக்கையை இழந்தான்.(2) 

அந்த ஐக்ஷ்வாகன் {இக்ஷ்வாகு குலத்தவனான தசரதன்} உஷ்ணமான பெருமூச்சை விட்டபடியே தன் பாரியையிடம் {மனைவியான கைகேயிடம்} இதைச் சொன்னான், "கைகேயி, குசப்புல்லாலான மரவுரியுடன் செல்ல சீதை தகுந்தவளல்ல.(3) சுகுமாரியும் {மென்மையான பெண்ணும்}, சிறுமியும், சுகத்திற்கே பழக்கப்பட்டவளுமான இவள் வனத்திற்குத் தகுந்தவளல்ல என்ற சத்தியத்தையே என் குரு {வசிஷ்டர்} சொன்னார்.(4) மரவுரியைப் பெற்றுக் கொண்டு ஜனங்களுக்கு மத்தியில் துறவியைப் போலக் கலங்கி நிற்கும் ராஜவரரின் கன்னிகை {மன்னர்களிற் சிறந்த ஜனகரின் மகள் சீதை}, எவருக்கேனும் தீங்கிழைத்திருக்கிறாளா?(5) ஜனகனின் கன்னிகை அந்த மரவுரிகளை வீசி எறியட்டும். பூர்வத்தில் இத்தகைய பிரதிஜ்ஞை எதுவும் தத்தம் செய்யப்படவில்லை. இந்த ராஜபுத்ரி {சீதை} சர்வ ரத்தினங்களுடனும், முழு மகிழ்ச்சியுடனும் வனத்திற்குச் செல்லட்டும்.(6) 

ஜீவிக்கத் தகுதியற்றவனான என்னால் கொடும் பிரதிஜ்ஞையான ஒரு நியமம் ஏற்படுத்தப்பட்டது. வேணுவை {மூங்கிலை} அதன் புஷ்பமே {மலரே} எரித்து விடுவதைப் போல குழந்தைத்தனத்துடன் உன்னால் தொடங்கப்பட்ட காரியம் என்னை எரித்துவிடும்.(7) பாபியே, அதமையே {இழிந்தவளே}, ராமன் உனக்கு சிறு குற்றத்தையேனும் செய்தானெனக் கொள்ளப்பட்டாலும், வைதேஹியால் உனக்கு இங்கே என்ன அபகாரம் {தீமை} செய்யப்பட்டது?(8) தபஸ்வினியைப் போல மிருதுவானவளும், சீலம் {ஒழுக்கம்} கொண்டவளும், பெண்மானைப் போல மலரும் விழிகளைக் கொண்டவளுமான ஜனகனின் மகளால் இங்கே என்ன அபகாரம் செய்ய முடியும்?(9) பாபியே, இவ்வாறு ராமனை நாடுகடத்துவதே உனக்குப் போதுமானது. இந்தப் பாதகமான செயல்களை மேலும் செய்வதன் மூலம் உனக்கு என்ன {பயன் உண்டாகும்}?(10) தேவி, அபிஷேகத்திற்காக இங்கே வந்த ராமனிடம் நீ எவற்றைச் சொன்னாயோ அவற்றை மட்டுமே நான் அறிவேன்.(11) இவை யாவற்றையும் கடந்தும், சீதையையும் மரவுரி உடுத்த வைப்பதை உணர்ந்தும் {இவ்வாறு நீ செயல்படுவதால்} ஏதோவொரு வகையில் நரகத்திற்குச் செல்ல விரும்புகிறாய்" {என்றான் தசரதன்}.(12)

இவ்வாறு புலம்பிய மஹாத்மாவான அந்த ராஜா {தசரதன்} அந்த சோகத்திற்கான அந்தத்தை {முடிவைக்} காணாமல், புத்திர விசனத்தில் மூழ்கி, அதிகம் புண்பட்டவனாக பூமியில் விழுந்தான்.(13) வனத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த ராமன், ஆசனத்தில் {எழுந்து} அமர்ந்து தலையைக் கவிழ்ந்தவாறே பேசிக்கொண்டிருந்த தன் பிதாவிடம் இந்த வசனத்தைச் சொன்னான்:(14) தார்மீகரே, தேவா, புகழ்பெற்றவளும், என் மாதாவுமான இந்தக் கௌசல்யை, {வயது} முதிர்ந்தவளாக இருக்கிறாள். ஒழுக்கமுள்ளவளான இவள் உம்மைச் சிறிதும் நிந்திக்கமாட்டாள்.(15) வரதரே, என்னை இழந்தவளும், பூர்வத்தில் இந்தத் துன்பத்தைக் காணாதவளும், சோக சாகரத்தை {துன்பக்கடலை} அடைந்தவளுமான இவளை நீர் மதிப்பதே தகும்.(16) பூஜிக்கத்தகுந்தவரான உம்மால் பூஜிக்கத்தகுந்தவளான இந்த தபஸ்வினி, உம்மில் ஜீவிதத்தை அடைந்தால் என்னையே நினைத்து புத்திர சோகத்தை அடையாமல் இருப்பாள்.(17) மஹேந்திரனுக்கு ஒப்பானவரே, பெற்ற மகனிடம் அன்பு கொண்ட என் அன்னை, நான் வனத்தில் இருக்கையில் சோகத்தால் மெலிந்து தன் ஜீவிதத்தைக் கைவிட்டு யமனின் வீட்டை அடையாத வகையில் நீர் அவளைப் பார்த்துக் கொள்வீராக" {என்றான் ராமன்}.(18)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 038ல் உள்ள சுலோகங்கள் : 18

Previous | Sanskrit | English | Next

Wednesday, 18 May 2022

வசிஷ்டர் பழித்துரை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 037 (37)

The blame of Vasistha | Ayodhya-Kanda-Sarga-037 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மரவுரியை அணிந்து கொண்ட ராமனும், லக்ஷ்மணனும்; கைகேயியைப் பழித்த வசிஷ்டர். மரவுரியை உடுத்த சீதைக்கு ராமன் சொல்லிக் கொடுத்தது. அந்தப்புரப் பெண்டிரின் அழுகை...

Vasishta Kaikeyi Seetha

விநயம் {நன்னடையை} அறிந்த ராமன், அந்த மஹாமந்திரியின் {சித்தார்த்தரின்} சொற்களைக் கேட்ட பிறகு, அடக்கமாக தசரதனிடம் {இவ்வாறு} பேசினான்:(1) "இராஜரே, போகத்தைத் துறந்து, அனைத்திலும் பற்றைக் கைவிட்டு வனத்தில் கிடைப்பனவற்றை உண்டு ஜீவிக்கப் போகும் எனக்குப் பரிவாரத்தால் {பின்தொடர்ந்து வரும் படையாலும், பணியாட்களாலும்} என்ன பயன்?(2) துவிப சிரேஷ்டத்தை {யானைகளில் சிறந்த யானையை} தத்தம் செய்துவிட்டு, அதைச் சுற்றிக் கட்டியிருந்த கயிற்றில் எவன் தன் மனத்தைச் செலுத்துவான்? உத்தம குஞ்சரத்தையே {சிறந்த யானையையே} துறந்தவனுக்கு அந்தக் கயிற்றிடம்  சினேகம் கொள்வதால் என்ன பயன்?(3) நன்மக்களில் சிறந்தவரே, ஜகத்பதியே, அவ்வாறே கொடி படையால் எனக்குப் பயனென்ன? {அவை} அனைத்தையும் நான் {பரதனுக்குக்} கொடுத்துவிட்டேன். கந்தலாடையை {மரவுரியை} மட்டும் என்னிடம் கொண்டு வரச்செய்வீராக.(4) சதுர்தச வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} வன வாசம் செய்யப் போகும் எனக்கு மண்வெட்டி, கூடை ஆகிய இரண்டையும் கொண்டு வரச் செய்வீராக" {என்றான் ராமன்}.(5)

Jute cloths given by Kaikeyi
அப்போது கைகேயி, கூடியிருந்த ஜனங்களின் மத்தியில் வெட்கமில்லாமல் தானே மரவுரிகளைக் கொண்டு வந்து ராகவனிடம் {ராமனிடம்}, "உடுத்திக் கொள்வாயாக" என்று சொன்னாள்.(6)

புருஷவியாகரனான {மனிதர்களில் புலியான} அவன், கைகேயியிடம் இருந்து மரவுரிகளைப் பெற்றுக் கொண்டு, நேர்த்தியான வஸ்திரங்களைக் களைந்து, முனிவஸ்திரங்களை உடுத்திக் கொண்டான்.(7) இலக்ஷ்மணனும் அழகிய உடையைக் களைந்து, பிதாவின் {தந்தையான தசரதனின்} முன்னிலையிலேயே தபசிகளின் உடையை உடுத்திக் கொண்டான்.(8) அப்போது பட்டாடை உடுத்தியிருந்த சீதை, தன்னால் உடுத்தப்பட வேண்டிய மரவுரிகளைக் கண்டு, வலையைக் கண்ட மானைப் போல அஞ்சினாள்.(9) சுபலக்ஷணங்களைக் கொண்டவளும், தர்மத்தை அறிந்தவளும், தர்மத்தை உணர்ந்தவளுமான அந்த ஜானகி {ஜனகனின் மகள் சீதை}, குசப்புல்லாலான மரவுரிகளை மனக்கலக்கத்துடன் பெற்றுக் கொண்டாள். 

வெட்கத்தால் கண்களில் நிறைந்த கண்ணீருடன் கூடியவள், கந்தர்வ ராஜனைப் போன்ற தன் பர்த்தாவிடம் {கணவன் ராமனிடம்} இதைச் சொன்னாள்:(10,11) "வனத்தில் வசிக்கும் முனிவர்கள் இந்த மரவுரிகளை எவ்வாறு உடுத்துவார்கள்?" {என்றாள்}. அனுபவமற்றவளான அந்த சீதை இவ்வாறே மீண்டும் மீண்டும் திகைத்து நின்றாள்.(12) அந்த ஜனகனின் மகள், அனுபவமில்லாததால் ஒரு மரவுரியைக் கழுத்தில் போட்டுக் கொண்டும், மற்றொன்றைக் கையில் வைத்துக் கொண்டும் வெட்கி நின்றாள்.(13) தர்மத்தை ஆதரிப்பவர்களில் முதன்மையான ராமன், சீக்கிரமாக தானே முன்வந்து சீதையுடைய பட்டாடையின் மேல் அந்த மரவுரிகளை உடுத்திவிட்டான்.(14) 

உத்தம ராமன், சீதைக்கு மரவுரியுடுத்துவதைக் கண்ட அந்தப்புரத்து நாரீகளின் {பெண்களின்} கண்களில் கண்ணீர் வழிந்தது.(15) மனம் வருந்திய அவர்கள், ஜ்வலிக்கும் தேஜஸ்ஸுடன் கூடிய ராமனிடம் {பின்வருமாறு} சொன்னார்கள், "வத்ஸா {குழந்தாய்}, மனஸ்வினியான {நற்குணங்களைக் கொண்ட} இவள் இவ்வாறு வனவாசம் செய்ய நியமிக்கப்படவில்லை.(16) பிரபுவே, உன் பிதாவின் வாக்கியத்தைப் பின்பற்றி ஜனங்களற்ற வனத்திற்கு நீ சென்று திரும்பிவரும் வரையில் இவளது தரிசனமாவது எங்களுக்கு நல்ல பலம் தருவதாக {வெகுமதியாக} அமையட்டும்.(17) இலக்ஷ்மணனை சஹாயனாகக் கொண்டு நீ வனத்திற்குச் செல்வாயாக. புத்திரகா, இந்தக் கல்யாணி {அழகிய பெண்}, ஒரு தபஸ்வினியைப் போல வனத்தில் வசிக்கத் தகாதவள்.(18) புத்திரா, எங்கள் யாசிப்பை {வேண்டுதலை} ஏற்பாயாக. நித்ய தர்மனான நீயோ இங்கிருக்க ஏற்க மாட்டாய். பாமினியான {அழகிய இளம்பெண்ணான} சீதை இங்கேயே இருக்கட்டும்" {என்றனர்}.(19)

இவ்விதமான அவர்களின் சொற்களைக் கேட்டவாறே அந்த தசரதாத்மஜன் {தசரதனின் மகன் ராமன்}, சீலம் {ஒழுக்கம்} பொருந்திய சீதைக்கு மரவுரிகளை உடுத்திக் கொண்டிருந்தான்.(20) நிருபதியின் {தசரத மன்னனின்} குருவும், ஆசானுமான வசிஷ்டர், அவள் {சீதை} மரவுரி ஏற்பதைக் கண்டு, அவளைத் தடுத்து, கைகேயியிடம் இதைச் சொன்னார்:(21) "கைகேயி, வரம்பைக் கடந்தவளே, துர்மதி கொண்டவளே, குலத்தைக் கெடுக்க வந்தவளே, ராஜனை வஞ்சித்தவளே, நீ பிரமாணத்தை நிறுவவில்லை {நியாயமாக நடந்து கொள்ளவில்லை}.(22) சீலவர்ஜிதையே {ஒழுக்கமற்றவளே}, சீதாதேவி வனத்திற்குச் செல்ல மாட்டாள். இராமனுக்குக் கொடுப்பதாயிருந்த ஆசனத்தில் இவள் {சீதை} வீற்றிருப்பாள்.(23) தாரத்தை காப்பவர்களான {இல்லறவாசிகள்} அனைவருக்கும் தாரமே ஆத்மாவாக இருக்கிறாள். ராமனின் ஆத்மாவாக இருப்பதால் இவள் மேதினியைப் பரிபாலிப்பாள்.(24) 

ராமனுடன் வைதேஹி {விதேஹ இளவரசியான சீதை} வனத்திற்குச் செல்வாளென்றால், நாங்களும் {அவளைப்} பின்தொடர்ந்து செல்வோம். இந்த நகரமும் அவ்வாறே செல்லும்.(25) ராமனும், அவனது தாரமும் எங்கே இருப்பார்களோ அங்கேயே அந்தபாலர்களும் {எல்லைப் பாதுகாவலர்களும்}, ராஷ்டிரத்தின் உபஜீவிகளும் {மாநிலத்தின் பணியாட்களும்}, தளவாடங்களுடனும், உடைமைகளுடனும் கூடிய நகரவாசிகளும் செல்வார்கள்.(26) பரதனும், சத்ருக்னனும் கூட மரவுரியுடுத்திக் கொண்டு, வனத்தில் வசிக்கும் தங்கள் அண்ணனான காகுத்ஸனை {ராமனைப்} பின்தொடர்ந்து வனத்தில் திரிவார்கள்.(27) அதன்பிறகு, பிரஜைகளுக்கு இதமற்றவளும், துர்விருத்தம் {தீய நடை} கொண்டவளுமான நீ, ஜனங்கள் விலகி, மரங்களே இருக்கும் சூன்யமான வசுதையை {வெற்று பூமியைத்} தனியாக ஆள்வாயாக.(28) 

எவ்விடத்தில் ராமன் பூபதியாக இல்லையோ அது {அவ்விடம்} ராஷ்டிரமாகாது. எந்த வனத்தில் ராமன் வாழ்ந்தாலும் அதுவே {அந்த வனமே} கூட ராஷ்டிரமாகும்.(29) பரதன் இந்த மஹீபதிக்கு {பூமியின் தலைவனான தசரதனுக்குப்} பிறந்திருந்தால், பிதாவால் தத்தம் செய்யப்படாத மஹீயை {பூமியை} ஆளவோ, உனக்குப் புத்திரனாக வாழவோ அவன் தகுந்தவனல்ல {அவன் சம்மதிக்க மாட்டான்}.(30) நீ தரையிலிருந்து வானத்திற்குக் குதித்துக் கொண்டிருந்தாலும், பிதாவின் வம்ச சரித்திரத்தை அறிந்தவன் {பரதன்}, மாறாகச் செயல்பட மாட்டான்.(31) புத்திரனிடம் அன்பு கொண்ட உன்னால், புத்திரனுக்குப் பிரியமில்லாத காரியமே செய்யப்பட்டிருக்கிறது. ராமனை பின்பற்றாதவன் எவனும் இவ்வுலகில் இல்லை.(32) 

கைகேயி, விலங்குகள், யானைகள், மான்கள், பறவைகள் ஆகியனவும் ராமனுடன் செல்வதை இப்போதே நீ காண்பாய். மரங்களும் முகம் திருப்பி அவனையே நோக்கும்.(33) இவளுக்கு {சீதைக்கு} மரவுரி விதிக்கப்படவில்லை. எனவே தேவி {கைகேயி}, மரவுரியை வீசிவிட்டு உன் மருமகளுக்கு {சீதைக்கு} சிறந்த ஆபரணங்களைக் கொடுப்பாயாக" {என்றார் வசிஷ்டர்}. இவ்வாறு வசிஷ்டர் அந்த வஸ்திரத்தை {மரவுரியைத்} தடுத்தார்.(34)

மேலும் அவர் {வசிஷ்டர்}, "கேகய ராஜபுத்ரியே {கேகய நாட்டு இளவரசியே}, ராமன் ஒருவனே வனத்தில் வசிக்க வேண்டுமென நீ வேண்டினாய். எனவே, இவள் {இந்த சீதை}, தினமும் ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளாக அரண்யத்தில் ராகவனுடன் {ராமனுடன்} வாழட்டும்.(35) வரங்களைக் கேட்ட போது நீ இவளைக் குறித்துக் கேட்கவில்லை. இந்த ராஜபுத்ரி {சீதை}, முக்கிய யானங்களுடனும் {பல்லக்குகளுடனும்}, பரிசாரகர்களின் {பணியாட்களின்} துணையுடனும், சர்வ வஸ்திரங்களுடனும் {ஆடைகள் அனைத்துடனும்}, பயனுள்ள பொருட்களுடனும் செல்லட்டும்" {என்றார் வசிஷ்டர்}.(36)

நிருபனின் {தசரதராஜனின்} குருவும், செல்வாக்கு மிக்கவரும், விப்ரர்களில் முக்கியருமான அவர் {வசிஷ்டர்} இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதும், தன் பிரியத்திற்குரிய பர்த்தாவை {கணவனை} மதிக்க விரும்பிய சீதை, தன் தீர்மானத்தை மாற்ற மனங்கொண்டாளில்லை.(37)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 037ல் உள்ள சுலோகங்கள் : 37

Previous | Sanskrit | English | Next

Tuesday, 17 May 2022

சித்தார்த்தர் நல்லுரை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 036 (33)

The advice of Siddhartha | Ayodhya-Kanda-Sarga-036 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: படையையும், செல்வத்தையும் ராமனுடன் அனுப்ப ஆணையிட்ட தசரதன்; தடை கூறிய கைகேயி; அவளைத் தணிக்க முற்பட்ட சித்தார்த்தர்; ராமனுடன் வனம் செல்ல விரும்பிய தசரதன்...

Dasharatha and Kaikeyi

அப்போது ஐக்ஷ்வாகன் {இக்ஷ்வாகு குலக் கொழுந்தான தசரதன்} அந்தப் பிரதிஜ்ஞையில் கட்டுண்டு, பெருமூச்சுவிட்டபடியே கண்ணீருடன் மீண்டும் மீண்டும் சுமந்திரனிடம் இதைச் சொன்னான்:(1) "சூதரே, இராகவனைப் பின்தொடர்ந்து செல்ல, இரத்ன சம்பூர்ணமான சதுர்வித பலங்களுடன் {ரத்தினங்கள் நிறைந்த நால்வகை படையுடன்} கூடிய ஒரு சம்முவை[1] சீக்கிரம் ஏற்பாடு செய்வீராக.(2) நாநயமிக்க அழகிய பெண்களும், வியாபரத்திற்குரிய மஹாதனம் கொண்ட வணிகர்களும் குமாரனின் வாஹினியை[2] {என் மகனின் படையை} அலங்கரிக்கட்டும்.(3) இவனுடைய உபஜீவிகளுக்கும் {பணியாட்களுக்கும்}, இவனுடன் விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் பலவித தனங்களைக் கொடுத்து அவர்களையும் {அந்தப் படையில்} நியமிப்பீராக.(4) 

[1] இங்கே படையைக் குறிக்க சம்மு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமஹாபாரதம் 2ம் அத்தியாயத்தின் 22ம் சுலோகத்தில் ஒரு சம்முவின் அளவு மூன்று பிருதனைகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு சம்மு என்பது 729 யானைகள், 729 தேர்கள், 2187 குதிரைகள், 3645 காலாட்படையினர் என மொத்தம் 7290 போர்வீரர்களையும்,  2916 விலங்குகளையும் கொண்டதாகும்.

[2] இங்கே படையைக் குறிக்க வாஹினி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாஹினியின் அளவு என்பது 81 யானைகள், 81 தேர்கள், 243 குதிரைகள், 405 காலாட்படையினர் என மொத்தம் 810 போர் வீரர்களையும், 324 விலங்குகளையும் கொண்டது.

முக்கிய ஆயுதங்களையும், நகரவாசிகள், சகடங்கள் {வாகனங்கள்}, ஆரண்யத்தை அறிந்த வியாதர்கள் {வேடர்கள்} ஆகியோரையும் காகுத்சனுடன் {ராமனுடன்} அனுப்புவீராக.(5) மிருகங்களையும் {மான்களையும்}, குஞ்சரங்களையும் {யானைகளையும்} கொன்றும், அரண்யகத்தின் மதுவை {காட்டுத்தேனைப்} பருகியும், விதவிதமான நதிகளைக் காணும் இவனுக்கு இந்த ராஜ்ஜியம் நினைவுக்கு வராது.(6) ஜனங்களற்ற வனத்தில் வசிக்கப்போகும் ராமனுடன் என்னுடைய தானியகோசமும், தனகோசமும் {தானிய, தனக் களஞ்சியங்களும்} பின்தொடர்ந்து செல்லட்டும்.(7) இவன் புண்ணிய தேசங்களில் யஜ்ஞம் செய்து கொண்டும், ஏராளமான தக்ஷிணைகளை அளித்துக் கொண்டும் வனத்தில் ரிஷிகளுடன் சுகமாக வாழட்டும்.(8) மஹாபாஹுவான {பெருந்தோள்களைக் கொண்ட} பரதன் அயோத்தியை பரிபாலிக்கட்டும். ஸ்ரீமானான ராமன், விரும்பிய பொருட்கள் அனைத்துடன் அனுப்பப்படட்டும்" {என்றான் தசரதன்}.(9)

அந்த காகுத்ஸன் {தசரதன்} இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, கைகேயிக்கு பயம் உண்டானது. அவளது முகமும் வாடியது, குரலும் தடைபட்டது.(10) விசனமடைந்து {மனந்தளந்து}, அச்சத்தில் வாட்டமடைந்த தன் முகத்தை அவனை {தசரதனை} நோக்கித் திருப்பிய கைகேயி இந்த வாக்கியத்தைச் சொன்னாள்:(11) "சாதுவே {உன்னத ஆன்மாவே}, சாரமில்லாமல் மண்டிய சுராபானத்தைப் போன்று அனுபவிக்க முடியாத ஜனங்களற்ற சூன்ய ராஜ்ஜியத்தை பரதன் ஏற்கமாட்டான்" {என்றாள்}.(12)

கைகேயி, இலஜ்ஜையை {வெட்கத்தைக்} கைவிட்டு இந்த அதிபயங்கர சொற்களைச் சொன்னபோது, அந்த நீள்விழியாளிடம் தசரதன் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(13) "அஹிதையே {இதமற்றவளே}, என் மீது நீ சுமத்திய சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் என்னை ஏன் துளைக்கிறாய்? அநாரியையே, பூர்வத்தில் {அபிஷேகம் குறித்த} இந்தச் செயல் தொடங்கும்போதே நீ ஏன் தடுக்கவில்லை?" {என்று கேட்டான்}.(14)

வாராங்கனையான {அழகிய பெண்ணான} கைகேயி, அவன் சொன்னதைக் கேட்டு இரு மடங்கு கோபமடைந்து, அந்த ராஜனிடம் இதைச் சொன்னாள்:(15) "உமது வம்சத்தைச் சேர்ந்த சகரன், அசமஞ்சன் என்றழைக்கப்பட்ட தன் ஜேஷ்ட புத்திரனை {மூத்த மகனைக்} கைவிட்டதைப் போலவே நீரும் இவனை அனுப்புவீராக" {என்றாள் கைகேயி}.(16) இவ்வாறு சொல்லப்பட்ட ராஜா தசரதன், "சீ, சீ" என்றான். சர்வஜனங்களும் வெட்கமடைந்தனர். அவள் அதை உணரவேயில்லை.(17) 

விருத்தரும் {முதிர்ந்தவரும்}, நேர்மையாளரும், ராஜனால் பெரிதும் மதிக்கப்பட்டவரும், சித்தார்த்தர் என்ற பெயரைக் கொண்டவருமான மஹாமந்திரி, கைகேயியிடம் இதைச் சொன்னார்:(18) "துர்மதி கொண்ட அசமஞ்சன், பாதையில் விளையாடும் பாலகர்களை சரயுவின் நீரில் வீசி எறிவதன் மூலம் மகிழ்ச்சியடைந்தான்.(19) அவனைக் கண்ட நகரவாசிகள் அனைவரும் கோபமடைந்து {சகர} ராஜனிடம் {இவ்வாறு} சொன்னார்கள், "இராஷ்டிரவர்தனா {மாநிலத்தை வளப்படுத்துபவனே}, அசமஞ்சனா? நாங்களா? எனத் தீர்மானிப்பாயாக" {என்றனர்}.(20)

அப்போது அந்த ராஜா {சகரன்}, அவர்களிடம், "இந்த பயத்திற்கான காரணம் என்ன?" என்று கேட்டான். ராஜனால் இவ்வாறு கேட்கப்பட்ட அந்த மக்கள், இந்த வாக்கியத்தைச் சொன்னார்கள்:(21) "விளையாடிக் கொண்டிருக்கும் எங்கள் பாலர்களைக் குழம்பிய புத்தியுடனும், மூர்க்கத்துடனும் கூடிய அவன் சரயுவில் வீசியெறிந்து ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைகிறான்" {என்றனர்}.(22)

அந்த மக்களின் சொற்களைக் கேட்ட நராதிபன் {சகரன்}, ஒவ்வாதவனான தன் புத்திரனை அவர்களின் நன்மைக்காகக் கைவிட்டான்.(23) அந்தப் பிதா, அவனையும், அவனது பாரியையையும் {மனைவியையும்}, அவர்களது உடைமைகளையும் சீக்கிரமாக யானங்களில் {பல்லக்குகளில்} ஏற்றி, தன் பணியாட்களிடம், "இவன் ஜீவிதம் முழுமைக்கும் நாடுகடத்தப்படுகிறான்" என்று ஆணையிட்டான்.(24) பாப கர்மங்களைச் செய்தவன் {அசமஞ்சன்}, ஒரு மண்வெட்டியையும், கூடையையும் எடுத்துக் கொண்டு மலைப் பாதைகளைச் சூறையாடியவாறே {கொத்தியவாறே} திசைகள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்தான்[3].(25) உயர்ந்த தார்மீகனான சகரராஜா இவ்வாறே அவனை {அந்த அசமஞ்சனை} வெளியேற்றினான். அவ்வாறே தடுக்கப்பட {பட்டமேற்க முடியாமல் நாடுகடத்தப்பட} இராமன் செய்த பாபம் என்ன?(26)

[3] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "இப்படியாய் பாபத் தொழில் செய்த அவன் களைவெட்டியோடு கூடிய ஓர் கூடையை எடுத்துக் கொண்டு எல்லா திக்குகளிலும் சென்று மலைகளிலும், காடுகளிலும் திரிந்தனன்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவனும் மண்வெட்டி புட்டிற்கூடை ஆகிய இவைகளைக் கொண்டு பாபிஷ்டன் போல எல்லாத் திசைகளிலும் திரிந்து மலைகளிலும் அரண்யங்களிலும் காய்களைப் பறித்தும், கிழங்கு முதலியவற்றை வெட்டியும் பிழைத்துக் கொண்டிருந்தனன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அதனால் அவன் காட்டில் காய் கிழங்குகளைத் தின்று திரிந்தனன்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரியின் ஆங்கிலப் பதிப்பில், "அசமஞ்சன் தன் கைகளில் கோடரியுடனும், கூடையுடனும் காட்டில் திரிந்து தன் தீச்செயல்களுக்கான கனிகளை அறுவடை செய்தான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் ஆங்கிலப்பதிப்பில், "அதன்பின் அந்தக் கொடுமைக்காரன் காட்டிற்குச் சென்று மலைக்காடுகளில் திரிந்து கொண்டிருந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் ஆங்கிலப் பதிப்பில் இந்தத் தகவல் இல்லை. முழுமஹாபாரதம் வனபர்வம் பகுதி 107ல் அசமஞ்சன் குறித்த கதை சொல்லப்பட்டிருக்கிறது.

இராகவனிடம் எந்தக் குற்றத்தையும் நம்மால் காண முடியவில்லை. {பௌர்ணமி} நிலவைப் போலவே அவனிடம் எந்தக் களங்கத்தையும் காண்பது துர்லபம் {அரிது}.(27) அல்லது ராகவனிடம் நீ தோஷமேதும் கண்டால், தேவி, அதை நீ இப்போது சரியாகச் சொல்வாயாக {நிரூபிப்பாயாக}. அதன்பிறகு ராமன் நாடுகடத்தப்படுவான்.(28) துஷ்டனல்லாதவனும், சத்பாதையில் {சன்மார்க்கத்தில் / நல்வழியில்} அர்ப்பணிப்புடன் செல்பவனுமான ஒருவனைக் கைவிடுவது தர்ம விரோதம் {தர்மத்தைத் துறப்பது}. அது சக்ரனின் {இந்திரனின்} பிரகாசத்தையும் எரித்துவிடும்.(29) எனவே தேவி, ராமனின் {ராஜ்ஜிய} செழிப்பை நீ தடுத்தது போதும். அழகிய முகம் கொண்டவளே, உலக நிந்தனையில் இருந்து உன்னைக் காத்துக் கொள்வாயாக" {என்றார் முதலமைச்சர் சித்தார்த்தர்}.(30)

சித்தார்த்தரின் சொற்களைக் கேட்ட ராஜா {தசரதன்}, மிகக் களைப்பான தொனியுடனும், சோகத்தால் தடைபட்டக் குரலுடனும் கைகேயியிடம் {பின்வருமாறு} பேசினான்:(31) "பாபவிருத்தம் {பாபநடை} கொண்டவளே,  {சித்தார்த்தரின்} இந்தச் சொற்களையும் நீ ஏற்கவில்லையா? தீய நடத்தை கொண்ட நீ, இரங்கத்தக்க மார்க்கத்தில் செல்வதன் மூலம் உனக்கு இதமானதையோ, எனக்கு இதமானதையோ அறியாதிருக்கிறாய். சாதுக்களின் பாதையில் இருந்து உன் செயல் விலகியிருக்கிறது.(32) நான் இப்போது ராஜ்ஜியத்தையும், சுகத்தையும், தனத்தையும் கைவிட்டு ராமனைப் பின்தொடர்ந்து செல்வேன். நீ ராஜா பரதன் சகிதம் சுகமாக நெடுங்காலம் ராஜ்ஜியத்தை அனுபவிப்பாயாக" {என்றான் தசரதன்}.(33)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 036ல் உள்ள சுலோகங்கள் : 33

Previous | Sanskrit | English | Next

Sunday, 17 April 2022

மின்னொளிர் கானகம் செல்வேன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 019 (40)

I'll go to the forest, where lightning glows | Ayodhya-Kanda-Sarga-019 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கைகேயி சொன்னதைக் கேட்டுக் கலங்காத ராமன்; கானகம் செல்ல முடிவெடுத்தது; கௌசல்யையைச் சந்திக்கச் சென்றது...


Dasharatha Kaikeyi Rama

பகைவரை அழிப்பவனான ராமன், மரணத்திற்கு ஒப்பான இந்தக் கொடுஞ்சொற்களைக் கேட்டும் கலக்கமில்லாமல் கைகேயியிடம் இதைச் சொன்னான்:(1) "அவ்வாறே ஆகட்டும். நான் இராஜரின் {தசரதனின்} பிதிஜ்ஞையை நிறைவேற்றுவேன். இங்கிருந்து வனம் சென்று ஜடையும், மான்தோலும் தரித்து அங்கே வசித்திருப்பேன்.(2) மீறக்கூடாதவரும், பகைவரை அடக்குபவருமான மஹீபதி {நிலத்தின் தலைவரான தசரதர்}, முன்பு போல் ஏன் என்னை வரவேற்கவில்லை என்பதை மட்டும் நான் அறிய விரும்புகிறேன்.(3) தேவி, கோபமடைய வேண்டாம். மரவுரியும், ஜடையும் தரித்து வனம் செல்வேனென உன் முன்னிலையில் நான் சொல்கிறேன். மகிழ்ச்சியடைவாயாக.(4) ஹிதம் செய்பவரும், குருவும், நிருபருமான பிதாவுக்குப் பிரியமானதை நான் நம்பிக்கையுடன் செய்ய மாட்டேனா?(5)

பரதனின் அபிஷேகத்தை என்னிடம் ராஜா தானே சொல்லவில்லையே என்ற ஒரே மனக்குறையால் என் ஹிருதயம் தஹிக்கிறது.(6) கேட்காமல் நானே கூட, சீதையுடன் கூடிய ராஜ்ஜியத்தையும், பிராணனையும், இஷ்டத்திற்குரியனவற்றையும், தனத்தையும் என்னுடன் பிறந்த பரதனுக்கு மகிழ்ச்சியுடன் கொடுத்திருப்பேன்[1].(7) மனுஜேந்திரரான என் பிதா ஏற்ற பிரதிஜ்ஞைக்குக் கீழ்ப்படிந்து, உன் விருப்பத்திற்குரிய ஆசையை நிறைவேற்றுவேன். இன்னும் நான் வேறென்ன சொல்ல?[2](8) எனவே நீ இவரைத் தேற்றுவாயாக. மஹீபதி ஏன் இங்கே வசுதையில் {பூமியில்} நிலைத்த கண்களுடன் மெல்லக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்?(9) நிருபசாசனத்தின் {அரச ஆணையின்} பேரில் தூதர்கள் இப்போதே குதிரையில் சென்று மாதுலகுலத்தாரிடம் {தாய்மாமன் வீட்டாரிடம்}இருந்து பரதனை சீக்கிரம் அழைத்து வரட்டும்.(10) பிதாவின் வாக்கியத்தை {என் தந்தை சொன்னாரா? சொல்லவில்லையா என்பதைக்} குறித்துச் சிந்தியாமல், உடனே தண்டகாரண்யத்தில் சதுர்தச வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} வசிக்க விரைந்து செல்வேன்" {என்றான் ராமன்}.(11)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "சீதையையாயினும் கொடுத்துவிடுவேன் - தனுர்ப்பங்கஞ் செய்தபொழுது பரதன் அபேக்ஷிப்பானாயின், அவனுக்குச் சீதையைக் கொடுத்து விவாஹஞ் செய்விப்பேனென்று கருத்து" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "ஒருவர் சொல்லாவிடினும் நானே பரதாழ்வான் பொருட்டுச் சீதையையும், ராஜ்ஜியத்தையும், உயிரையும், பொருள்களையும், மகிழ்ந்தளிப்பேன்" என்றிருக்கிறது.

[2] மன்னவன் பணி அன்றாகின் நுன்பணி மறுப்பெனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலை மேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்

- கம்பராமாயணம் 1604ம் பாடல்

பொருள்: அரசனின் ஆணை இல்லையென்றாலும் உன் ஆணை மறுப்பேனோ? என் தம்பி பெற்ற செல்வம் நான் பெற்றதன்றோ? இந்த உறுதிக்கப்பால் இனிமையானது வேறென்ன? இப்பணியை என் தலைமேல் கொண்டேன்; மின்னல் ஒளிரும் கானகத்திற்கு இன்றே செல்வேன்; உன்னிடம் விடையும் பெற்றேன்.

இராமனின் வாக்கியத்தைக் கேட்ட கைகேயி, மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அடைந்தவளாக இராகவன் புறப்படுவதைத் துரிதப்படுத்தும் வகையில்,(12) "அவ்வாறே ஆகட்டும். மாதுலகுலத்திடம் {தாய்மாமன் வீட்டில்} இருந்து பரதனை அழைத்துவர தூதர்கள் குதிரையில் சீக்கிரம் செல்லட்டும்.(13) ஆனால், {காட்டுக்குச் செல்வதில்} உற்சாகமுள்ள நீ, மேலும் தாமதிப்பது தகுந்ததல்ல என நான் நினைக்கிறேன். எனவே ராமா, நீ இங்கிருந்து சீக்கிரமாக வனத்திற்குச் செல்வதே தகுந்தது.(14) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே, ராமா}, நாணத்தால் நிருபர் {மன்னர் தசரதர்} உன்னிடம் பேசவில்லை என்பது இங்கே ஒன்றுமில்லை. இந்த வேதனையை {மனக்குறையை} நீ விலக்குவாயாக.(15) இராமா, உன் பிதா {தந்தை} நீ வனத்திற்கு விரைந்து செல்லும் வரை ஸ்நானமும், போஜனமும் செய்ய மாட்டார் {நீராடவும் மாட்டார், உண்ணவும் மாட்டார்}" {என்றாள் கைகேயி}.(16)

இராஜா {தசரதன்}, பெருமூச்சுவிட்டபடியே, "சீ! சீ! கஷ்டம்" என்று சொல்லி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த மஞ்சத்தில் சோகத்துடன் மூர்ச்சித்து விழுந்தான்.(17) அந்த ராஜனைத் தூக்கிய ராமன், சாட்டையால் அடிக்கப்பட்ட குதிரையைப் போலக் கைகேயியால் தூண்டப்பட்டவனாக வனத்திற்குச் செல்ல அவசரப்பட்டான்.(18)

கொடுமையானதும், கடுமையானதுமான அந்த அநாரியையின் வசனத்தைக் கேட்ட ராமன் கலக்கமடையாமல் அந்தக் கைகேயியிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(19) "தேவி, எனக்குச் செல்வம் ஒரு பொருட்டல்ல. உலக வாசத்தை உற்சாகத்துடன் நான் ஏற்கிறேன். தர்மத்தை மட்டுமே பின்பற்றும் ரிஷிகளுக்கு இணையானவனாக என்னை நீ அறிவாயாக.(20) என் மதிப்புக்குரியவரின் {தந்தையின்} விருப்பத்திற்குரிய செயலை என்னால் எவ்வகையிலேனும் செய்ய முடியுமென்றால், பிராணனை {உயிரைத்} துறந்தேனும் அதை நான் செய்வேன்.(21) பிதாவுக்கோ, அவரது வசனத்தின்படி செயல்படுவதற்கோ தொண்டாற்றுவதை விட மேலான தர்மம் {கடமை} வேறேதும் இல்லை.(22) எங்கள் மதிப்பிற்குரியவரால் {என்னிடம்} சொல்லப்படவில்லையெனினும், உன் வசனத்தின்படியே நான் ஜனங்களற்ற வனத்தில் சதுர்தச வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} வாசம் செய்வேன்.(23) கைகேயி {கேகயன் மகளே}, எனக்கு ஆணையிடும் அதிகாரம் உனக்கிருந்தும் நிச்சயம் என்னிடம் எந்தக் குணத்தையும் காணாததாலேயே நீ ராஜனிடம் இதைச் சொல்லியிருக்கிறாய்.(24) மாதாவிடம் {கௌசல்யையிடம்} விடைபெற்றுக் கொண்டு, சீதைக்கு ஆறுதலளித்துவிட்டு இன்றே நான் மகத்தான தண்டகாவனம் செல்வேன்.(25) பரதன் ராஜ்ஜிய பரிபாலனத்தையும், பிதாவுக்கான தொண்டையும் செய்வதை உறுதி செய்வது உன் கடப்பாடு; இதுவே சநாதன தர்மம்" {என்றான் ராமன்}.(26)

இராமனின் வசனத்தைக் கேட்ட அந்தப் பிதா {தசரதன்}, துக்கத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டவனாக, சோகத்தால் பேச இயலாதவனாகப் பேரொலியுடன் அழுதான்.(27) மதிமிக்கவனான ராமன், மயக்கமடைந்தவனான பிதாவின் பாதங்களையும், அநாரியையான கைகேயியின் பாதங்களையும் வணங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.(28) இராமன், தன் பிதாவையும், கைகேயியையும் பிரதக்ஷிணம் செய்து {வலம் வந்து}, அந்தப்புரத்திலிருந்து வெளியேறி தன் நண்பர்களைக் கண்டான்.(29) சுமித்திரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனான லக்ஷ்மணன், கண்ணீரால் பரிபூரணமாக நிறைந்த கண்களுடனும், பரம கோபத்துடனும் கூடியவனாக ராமனின் பின்னால் தொடர்ந்து சென்றான்.(30)

இராமன், அபிஷேகத்திற்கெனத் திரட்டப்பட்ட பாந்தங்களை {பொருட்களைப்} பிரதக்ஷிணஞ்செய்து {வலம் வந்து}, விலக்கமேதுமின்றி மதிப்புடன் அவற்றைப் பார்த்தவாறே மெதுவாக நகர்ந்து சென்றான்.(31) காந்தவானும் {விரும்பத்தக்க ஆளுமை கொண்டவனும்}, உலகத்தால் விரும்பப்படுபவனுமான அவனது மகத்தான காந்தியானது, ராஜ்ஜியம் கிட்டாதபோதும் நிலவின் ஒளியுடன் கூடிய இரவைப் போல மங்காதிருந்தது.(32) சர்வலோகத்தையும் துறந்த துறவியிடம் {காணப்படாத} சித்தவிக்ரியம் {மனக்குழப்பம்} போலவே வசுந்தரையை {பூமியை} விட்டுப் புறப்பட்டுச் செல்பவனும், வனம் செல்லத் தீர்மானித்தவனுமான அவனிடமும் அது {மனக்குழப்பம்} காணப்படவில்லை.(33)

அந்த ஆத்மவான் {ராமன்}, சுபமான குடையையும், அலங்காரமான சாமரங்களையும் மறுத்து, தன் ஜனங்களையும் {நண்பர்களையும்}, ரதத்தையும், நகரவாசிகளையும் அனுப்பிவிட்டு, இந்திரியங்களை அடக்கி, துக்கத்தைத் தன் மனத்திலேயே வைத்துக் கொண்டு, விரும்பத்தகாத செய்தியைச் சொல்ல தன் மாதாவின் {கௌசல்யையின்} வீட்டிற்குள் பிரவேசித்தான்.(34,35) சத்தியவாதியும், ஸ்ரீமானுமான ராமனின் முகத்தில், ஸ்ரீமான்களும், அண்மையிலுள்ளவர்களுமான சர்வஜனங்களாலும் எந்தச் சிறு மாறுதலையும் காணமுடியவில்லை.(36) கூதிர் காலச் சந்திரன் தன் தீர்க்க அம்சங்களை {நெடுங்கதிர்களை} இழக்காததைப் போலவே, அந்த மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்ட ராமனும்}, வழக்கமான தன் மகிழ்ச்சியையும், தேஜஸ்ஸையும் இழந்தானில்லை. (37) தீர ஆத்மா கொண்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான ராமன், அந்த ஜனங்களை மதிக்கும் வகையில் மதுரவாசகங்களைச் சொல்லிக் கொண்டே தன் மாதாவின் சமீபத்தில் பிரவேசித்தான் {அன்னை கௌசல்யையின் அருகில் சென்றான்}.(38)

{இராமனுக்கு இணையான} சம குண பிராப்தம் கொண்டவனும், விபுலவிக்ரமனும் {பெரும் வீரமும், துணிவும் கொண்டவனும்}, உடன் பிறந்தவனுமான சௌமித்ரி {சுமித்ரையின் மகன் லக்ஷ்மணன்}, துக்கத்தைத் தனக்குள் வைத்துக் கொண்டே ராமனுடன் சென்று கொண்டிருந்தான்.(39) பெரும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த அந்த வீட்டிற்குள் ராமன் பிரவேசித்தபோது, உண்மையில் நேரப்போகும் விபத்தை உணர்ந்தும், அதன் காரணமாகத் தன் நண்பர்களுக்கு ஏற்படப்போகும் அதிர்ச்சியைப் புரிந்து கொண்டும் விக்ரியமடைந்தானில்லை {மனக்குழப்பமடையவில்லை}[3].(40)

[3] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "ராமன் மாளிகைக்குச் சென்று அங்குத் தனக்கு அபிஷேகம் நடக்கப் போகிறதென்று மிகுந்த ஸந்தோஷத்தோடு கூடியிருக்கின்ற ஜனங்களைக் கண்டு, அப்பொழுது தனக்கு நேரிட்டிருக்கிற ராஜ்யநாசத்தையும் சிந்தித்து, அதனால் அவஸ்யமாக மனவருத்தம் உண்டாக வேண்டியதாயிருப்பினும் தான் வருத்தப்படுவது கண்டால் தனக்கு ஹிதர்களாகிய ஜனங்கள் ப்ராணனை விட்டுவிடுவார்களென்று சங்கைப்பட்டுத் துயரத்தையெல்லாம் உள்ளேயே அடக்கிக் கொண்டு வெளிக்கு ஒன்றும் பொலப்படாதிருக்கும்படி சிறிதும் விகாரமுறாதிருந்தனன்" என்றிருக்கிறது.

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 019ல் உள்ள சுலோகங்கள் : 40

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை