Thursday 29 September 2022

காமதேனு | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 074 (36)

Kamadhenu | Ayodhya-Kanda-Sarga-074 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கைகேயியை நிந்தித்த பரதன்; அயோத்தியின் மகிமையை மீட்கத் தீர்மானித்தது; இராமனை மன்னனாக்குவதாக உறுதி ஏற்றது...

Bharata

அப்போது அவளை இவ்வாறு கண்டித்த பரதன், பெருங்கோபத்தில் ஆழ்ந்தவனாக மீண்டும் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "கைகேயி, கொடூரியே, துஷ்டசாரிணியே, இந்த ராஜ்ஜியத்தில் இருந்து தொலைந்து போவாயாக. தர்மத்தைக் கைவிட்டவளான நீ, என்னை மரணமடைந்தவனாக நினைத்து அழுது கொண்டிருப்பாயாக.(2) உன்னால் யாருக்கு உடனடியாக மரணமும், நாடு கடத்தலும் விளைந்ததோ, அந்த இராஜாவோ {தசரதரோ}, பெருந்தார்மிகரான இராமரோ உனக்கு என்ன கெடுதலைச் செய்தார்கள்?(3) 

Kaikeyi Bharata

கைகேயி, இந்தக் குலத்திற்கு அழிவை ஏற்படுத்தியதால், கருவைக் கொன்ற பாபத்தை நீ செய்திருக்கிறாய். கைகேயி, நீ நரகத்திற்குச் செல்வாயாக. பர்த்தாவின் லோகத்தை {உன் கணவர் அடைந்த உலகத்தை நீ} அடையாமல் இருப்பாயாக.(4) கோர கர்மத்தைச் செய்து இத்தகைய பாபத்தை இழைத்துவிட்டாய். சர்வலோகப்ரியர்களை {அனைவராலும் விரும்பப்பட்டவர்களைக்} கைவிட்டு என்னிலும் பயத்தை விளைவித்துவிட்டாய்.(5) என் பிதா இறந்ததும், ராமர் அரண்யத்தில் வசிப்பதும், இந்த ஜீவலோகத்தில் நான் புகழை இழக்கப்போவதும் உன்னால்தான்.(6) அமித்ரையே {நட்பில்லாத எதிரியே}, தாயின் வடிவில் வந்த கொடூரியே, இராஜ்ஜியகாமுகியே {நாட்டை ஆளும் பேராசை கொண்டவளே}, துர்விருத்தம் கொண்ட பதிமாதினியே {தீய நடத்தை கொண்டவளே, கணவரைக் கொன்றவளே}, நான் உன்னிடம் பேச மாட்டேன்.(7)

கௌசல்யையும், சுமித்ரையும், என்னுடைய மற்ற மாதாக்களும், குலதூஷிணியான {குலத்தைக் கெடுக்க வந்தவளான} உன்னை அடைந்து மஹத்தான துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.(8) நீ, தர்மராஜரும், மதிமிக்கவருமான அசுவபதியின் கன்னியல்ல {பெண்ணல்ல / மகளல்ல}; என் பிதாவின் குல வம்சத்தை அழிக்க அங்கே ராக்ஷசியாகப் பிறந்தவள்.(9) {எனவேதான்}, தார்மிகரும், நித்தியம் சத்தியத்தையே நிலைநிறுத்துபவருமான ராமரை வனத்திற்கு அனுப்பினாய்; அந்த துக்கத்துடன் என் பிதாவை திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்கு} அனுப்பிவைத்தாய்.(10) நீ எதைப் பிரதானமாகச் செய்தாயோ அந்தப் பாபத்தால் நான் பிதாவற்றவனானேன். உடன் பிறந்தவர்களால் கைவிடப்பட்டேன். சர்வலோகத்திற்கும் பிரியமற்றவனானேன்.(11) 

நரகத்திற்குச் செல்லும் பாபநிச்சயம் கொண்டவளே, தர்மசம்யுக்தையான {தர்மமே நிறைந்தவளான} கௌசலையை மகனற்றவளாக்கினாய். இனி, நீ எந்த உலகத்தை அடையப் போகிறாய்?(12) குரூரியே, கௌசல்யையின் ஆத்மசம்பவரான {மகனான} ராமர், தன்னடக்கமும், பந்துக்களிடம் அர்ப்பணிப்பும் மிக்கவர் என்பதையும், பிதாவுக்கு சமமானவர் என்பதையும் நீ அறிய மாட்டாயா?(13) அங்கங்கள், பிரத்யங்கங்கள் {உறுப்புகள், துணை உறுப்புகள்} ஆகியவற்றில் இருந்து உண்டாகும் புத்திரன், ஹிருதயத்திலிருந்தும் பிறக்கிறான். இதன் காரணமாகவே மாதாவுக்கு மிகப் பிரியமானவன் ஆகிறான். பிரியத்தால் மட்டுமே அவன் பந்து {அன்பால் மட்டுமே அவன் உறவினன்} ஆவதில்லை.(14)

ஒரு காலத்தில், தர்மத்தை அறிந்தவளும், ஸுரர்களால் {தேவர்களால்} வழிபடப்பட்டவளுமான சுரபி {காமதேனு}, பூமியில் தன் புத்திரர்கள் இருவர் {காளைகள் இரண்டு}, சுமையைச் சுமந்தவாறே மயக்கமடைவதைக் கண்டாள்.(15) மஹீதலத்தில் அர்த்த திவசம் {பூமியில் அரை நாள் / நடுப்பகல் வரை} உழைத்துக் களைத்த தன் புத்திரர்களைக் கண்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடன் புத்திர சோகத்தால் அழுது கொண்டிருந்தாள்.(16) 

Kamadhenu Indra Peasant and Bulls

நறுமணமிக்க அவளது சிறு கண்ணீர் துளிகள், கீழே சென்று கொண்டிருந்த மஹாத்மாவான ஸுரராஜனின் {இந்திரனின்} அங்கங்களில் விழுந்தன.(17) ஸுரேஷ்வரனான இந்திரன், புண்ணிய மணங்கமழும் அந்த கண்ணீர்த்துளிகள் தன் அங்கங்களில் விழுவதைக் கண்டு, அவளே மகிமைமிக்க சுரபி {காமதேனு} என நினைத்தான்.(18) ஆகாயத்தை நோக்கிய சக்ரன் {இந்திரன்}, அந்த சுரபி, பெருந்துக்கத்துடனும், வேதனையுடனும் தீனமாக அழுதவாறே நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.(19) 

வஜ்ரபாணியும், ஸுரராஜனுமான இந்திரன், சோக சந்தாபத்துடன் கூடியவளும், புகழ்மிக்கவளுமான அவளைக் கண்டு, நடுக்கத்துடன் கைகளைக் கூப்பியவாறே இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(20) "சர்வஹிதைஷிணியே {அனைத்தின் நலத்தை விரும்புகிறவளே}, எங்கிருந்தாவது நமக்கு மஹத்தான பயம் உண்டாகிறதா? உன் சோகத்திற்கான காரணம் யாது?" {என்று கேட்டான்}(21)

மதிமிக்கவனான ஸுரராஜன் இவ்வாறு சொன்ன போது, தீரமிக்கவளும், வாக்கிய விசாரதையுமான {சொற்களை பயன்படுத்துவதில் திறன்மிக்கவளுமான} சுரபி, இந்த வாக்கியங்களை மறுமொழியாகச் சொன்னாள்:(22) "அமராதிபா, பாபம் சாந்தமடையட்டும் {பாபம் செய்ததால் உண்டான பயமேதும் இருப்பினும் அஃது ஒழியக்கடவது}. எங்கிருந்தும் உங்களுக்கு ஏதுமில்லை {எந்த ஆபத்துமில்லை}. துன்புற்றுக் கொண்டிருக்கும் என் புத்திரர்களான இவர்கள் இருவருக்காகவே நான் வருந்தித் தவிக்கிறேன்.(23) ஸுராதிபா, சூரியக் கதிர்களால் எரிக்கப்படுகிறவர்களாகவும், உழைப்பின் களைப்பால் இளைத்துப் போகிறவர்களாகவும், உழுபவரால் துன்புறுபவர்களாகவும் {என் புத்திரர்களான} இந்தக் காளைகளைக் காண்கிறேன்.(24) என் காயத்தில் {உடலில்} இருந்து பிறந்தவர்களான இவர்கள், பாரத்தால் பீடிக்கப்படுவதைக் கண்டு துக்கம் அடைகிறேன். புத்திரர்களுக்கு சமமான பிரியத்திற்குரியவர்கள் வேறெவருமில்லை" {என்றாள் சுரபி}.(25)

இந்த ஜகம் முழுவதும் நிறைந்திருக்கும் நூற்றுக்கணக்கான புத்திரர்களைக் கொண்டவள் இவ்வாறு அழுவதைக்  கண்ட சக்ரன் {இந்திரன், ஒரு தாய்க்கு} மகனைவிட அருமையான வேறேதுமில்லை என்று நினைத்தான்.(26) எப்பொழுதும் ஒப்பில்லாத ஒழுக்கம் கொண்டவளும், இயங்கும் சுபாவத்தால் புனிதமானவளும், உத்தம குணங்களில் நித்தியம் பற்றுடையவளும், உலகைத் தாங்க விரும்புகிறவளும்,(27) ஆயிரமாயிரம் புத்திரர்களைக் கொண்டவளுமான அத்தகைய காமதேனுவே {விரும்பியவற்றைத் தரவல்ல சுரபியே} துக்கமடைந்தாள் எனும்போது, ராமரை விட்டுப் பிரிந்த கௌசல்யை இனி எவ்வாறு உயிர் பிழைத்திருப்பாள்?(28) 

ஏக புத்திரனை {ஒரே மகனைக்} கொண்டவளும், சாத்வியுமான {புனிதவதியுமான} அவள், உன்னால் பிள்ளையற்றவள் ஆனாள். எனவே, நீ இங்கும், பிரேதமான பிறகும் {இம்மையிலும், மறுமையிலும்} சதா துக்கத்தையே அனுபவிப்பாய்.(29) நானோ, என் பிதாவையும், என்னுடன் பிறந்தவரையும் சம்பூர்ணமாகப் பூஜித்து, அவர்களின் பெருங்கீர்த்தியை வளரச் செய்வேன். இதில் ஐயமேதும் வேண்டாம்.(30) மஹாபலம் பொருந்திய கௌசல்யா தனயரை {கௌசல்யையின் மகனான ராமரை} அழைத்து வருவதற்காக, முனிவர்களால் சேவிக்கப்படும் வனத்திற்குள் நானே பிரவேசிப்பேன்.(31) பாபியே, பாப சங்கல்பம் கொண்டவளே, நகரவாசிகள் கண்ணீரால் அடைக்கப்படும் கண்டங்களைக்  கொண்டவர்களாக {துக்கத்தால் தொண்டை அடைக்கப்பட்டவர்களாகத்} தென்படுகிறார்கள். நீ செய்த பாபத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(32) நீ அக்னிக்குள் பிரவேசிப்பாயாக, அல்லது தனியே தண்டகாரண்யத்திற்குள் நுழைவாயாக. அல்லது கண்டத்தில் {தொண்டையில்} கயிற்றை இறுக்கிக் கொள்வாயாக. உனக்கு வேறு கதியேதும் இல்லை.(33) சத்திய பராக்கிரமரான ராமர் அவனியை அடைந்ததும், என் பாபங்கள் கழுவப்பட்டு, நினைத்தன நிறைவேறியவனாவேன்" {என்றான் பரதன்}.(34) 

இவ்வாறு, அரண்யத்தில் தோமரத்தாலும் {ஈட்டியாலும்}, அங்குசத்தாலும் {மாவெட்டியாலும்} குத்தப்பட்ட நாகத்தைப் {யானையைப்} போலக் கோபமடைந்தவன், பன்னகம் {பாம்பைப்} போல் சீறியபடியே புவியில் விழுந்தான்.(35) பரந்தபனான அந்த நிருபாத்மஜன் {பகைவரை அழிப்பவனான அந்த அரசகுமாரன் பரதன்}, கோபத்தால் கண்கள் சிவக்கவும், ஆடை தளரவும், ஆபரணங்கள் சிதறவும், உத்சவத்தின் முடிவில் விழும் சசிபதியின் கொடியை {இந்திரத்வஜத்தைப்} போலவும் பூமியில் விழுந்து கிடந்தான்.(36)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 074ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை