Showing posts with label சுஷேணன். Show all posts
Showing posts with label சுஷேணன். Show all posts

Tuesday, 23 September 2025

உயிர் மீண்ட லக்ஷ்மணன் | யுத்த காண்டம் சர்க்கம் – 101 (57)

The fall of Lakshmana | Yuddha-Kanda-Sarga-100 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் புலம்பல்; ஹனுமானை மூலிகை மலைக்கு அனுப்பி வைத்த சுஷேணன்; ஹனுமான் கொண்டு வந்த மூலிகைகளை முகர்ந்து நலமடைந்த லக்ஷ்மணன்...

Hanuman Uproots the Mighty Herbal Mountain

சூரனான லக்ஷ்மணன், பலவானான ராவணனின் சக்தியால் {வேலாயுதத்தால்} சமரில் வீழ்த்தப்பட்டு, சோணிதத்தில் {குருதியில்} நனைந்திருப்பதைக் கண்டு,{1} துராத்மாவான ராவணனுக்கு கொந்தளிப்பான யுத்தத்தை தத்தம் செய்த அவன் {ராமன்}, பாண ஓகங்களை ஏவுகையில் சுஷேணனிடம் இதைச் சொன்னான்:(1,2) "இராவணனின் வீரியத்தால் புவியில் விழுந்திருக்கும் வீரனான இந்த லக்ஷ்மணன், சர்ப்பத்தைப் போல பூமியில் புரள்வது என் சோகத்தை அதிகரிக்கிறது.(3) என் பிராணனைவிடப் பிரியமான இந்த வீரனை சோணிதத்தில் நனைந்தவனாகப் பார்த்து, மனஞ்சிதறும் எனக்குள், யுத்தம் செய்ய இருக்கும் சக்தி என்ன?(4) 

Thursday, 28 August 2025

விரூபாக்ஷ வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 096 (36)

Virupaksha killed | Yuddha-Kanda-Sarga-096 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை அணுக முயற்சித்த ராவணன்; ராக்ஷசர்கள் சிலரைக் கொன்ற சுக்ரீவன்; சுக்ரீவனைத் தாக்கிய விரூபாக்ஷன்; விரூபாக்ஷனைக் கொன்ற சுக்ரீவன்...

Sugreeva fighting with Virupaksha

தசக்ரீவனின் கணைகளால் காத்திரங்கள் பிளக்கப்பட்ட அந்த ஹரீக்கள் அப்போது அங்கே வசுதையில் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனின் கணைகளால் உடல் உறுப்புகள் பிளக்கப்பட்ட அந்தக் குரங்குகள் அப்போது அங்கே பூமியில்} சிதறிக் கிடந்தனர்.(1) சுடர்மிக்க நெருப்பில் பதங்கங்களை {விட்டிற்பூச்சிகளைப்} போல, ராவணன் ஒருவனால் ஏவப்பட்ட அந்தத் தடுக்கப்பட முடியாத சரங்களின் பாய்ச்சலை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.(2) கூரிய பாணங்களால் துன்புற்ற அவர்கள் {வானரர்கள்}, பாவகனின் {அக்னியின்} சுடர்களால் சூழப்பட்டு, எரிக்கப்படும் கஜங்கள் {யானைகள்} எப்படியோ, அப்படியே அலறியபடி ஓடிச் சென்றனர்.(3) அந்தச் சமரில் ராவணன், பெரும் மேகங்களை {விரட்டும்} மாருதம் {காற்று} போல, பிலவங்கமர்களின் அனீகத்தை {தாவிச் செல்பவர்களான குரங்குகளின் படையை} விரட்டியபடி விரைந்து சென்றான்.(4) அந்த யுத்தத்தில் ராக்ஷசேந்திரன், வனௌகசர்களை கதனம் செய்தவாறே {வனத்தில் வசிப்பவர்களான வானரர்களை அழித்தவாறே}, ரணத்தில் ராகவனைத் துரிதமாக அணுகினான்.(5)

Friday, 15 August 2025

நலமடைந்த லக்ஷ்மணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 091 (28)

Lakshmana healed | Yuddha-Kanda-Sarga-091 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்தைக் கொன்றதற்காக லக்ஷ்மணனைப் பாராட்டிய ராமன்; இலக்ஷ்மணனின் காயங்களுக்கு சிகிச்சை அளித்து, அவனை குணப்படுத்திய சுஷேணன்...

Rama embracing wounded Lakshmana

சுப லக்ஷணங்களைக் கொண்டவனும், உதிரத்தால் நனைந்த காத்திரங்களுடன் {உடல் உறுப்புகளுடன்} கூடியவனுமான லக்ஷ்மணன், போரில் அந்த இந்திரஜித்தைக் கொன்றதில் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(1)  பிறகு ஜாம்பவந்தன், ஹனூமந்தன், சர்வ வனௌகசர்களையும் அழைத்த அந்த வீரியவான்{2} லக்ஷ்மணன், விபீஷணனையும், ஹனூமந்தனையும் ஊன்றிக் கொண்டு {அவர்களின் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டு}, ஸுக்ரீவனும், ராகவனும் {ராமனும்} எங்கிருந்தனரோ அங்கே சென்றான்.(2,3) இராமனை அணுகி வணங்கியவன் {லக்ஷ்மணன்}, சக்ரனிடம் இந்திரானுஜன் எப்படியோ {இந்திரனின் அருகில் இந்திரனின் தம்பியான உபேந்திரன் எப்படி நிற்பானோ}[1], அப்படியே தன் பிராதாவின் சமீபத்தில் நின்றான்.(4) மஹாத்மாவான ராகவனை அடைந்தபிறகு, அந்த வீரன், இந்திரஜித்தின் கோர வதத்தைக் குறித்து சோர்வுடன் சொன்னான்.(5) அப்போது, மகிழ்ச்சியுடன் கூடிய விபீஷணன், மஹாத்மாவான லக்ஷ்மணனால் ராவணியின் சிரம் {இந்திரஜித்தின் தலை} துண்டிக்கப்பட்டதைத் தெரிவித்தான்[2].(6)

Tuesday, 24 October 2023

தோல்வியடைந்த தேடல் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 47 (14)

Search failed | Kishkindha-Kanda-Sarga-47 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கிழக்கு, வடக்கு, மேற்குத் திசைகளில் தோல்வியடைந்த தேடல்; சீதை குறித்த செய்தி ஏதும் இல்லாமல் வினதன், சதபலி, சுஷேணன் ஆகியோர் திரும்பி வந்தது...

Search for seetha failed
Bing - Artificial Intelligence Picture | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படம் 

கபிராஜனால் ஆணையிடப்பட்ட கபிகுஞ்சரர்கள் {குரங்குகளின் மன்னனான சுக்ரீவனால் ஆணையிடப்பட்டவர்களும், குரங்குகளில் யானைகளைப் போன்றவர்களுமான அந்த வானரர்கள்}, எப்படி சொல்லப்பட்டதோ அப்படி வைதேஹியை தரிசிக்கும் அர்த்தத்திற்காக எங்கும் சென்றனர்.(1) அவர்கள், சரஸ்கள் {பொய்கைகள்}, சரிதங்கள் {ஆறுகள்}, கக்ஷங்கள் {இருளடர்ந்த வனங்கள்}, ஆகாசம், நகரங்கள், அதேபோல நதிகளும் கடப்பதற்கரிய சைலங்கள் {மலைகள்} என எங்கும் முழுமையாகத் தேடினர்.(2) சர்வ வானரயூதபர்களும், சுக்ரீவனால் நன்கு சொல்லப்பட்ட சைலங்கள் உள்ளிட்ட, வனங்களிலும், கானகங்களிலும், தேசங்களிலும் கவனமாகத் தேடினர்.(3) சர்வ வானரர்களும், திவசங்களில் {பகல் வேளைகளில்} சீதையை அடைவதில் திடத்துடன் தேடினர்; நிசாகாலங்களில் {இரவு வேளைகளில்} மேதினியில் ஒன்றுகூடினர்.(4) அந்த வானரர்கள், அந்த நாட்கள் அனைத்திலும், சர்வ ருதுக்களிலும் பழங்களை விளைவிக்கும் மரங்களைக் கொண்ட தேசங்களை {இடங்களை} அடைந்து, அங்கே இரவு வேளைகளில் தங்கள் படுக்கையை அமைத்துக் கொண்டனர்[1].(5)

[1] தர்மாலயப் பதிப்பில், “வானரர்கள் எல்லோரும் சீதாதேவியைக் கண்டுபிடிப்பதில் ஊக்கமுடையவர்களாய் பகலில் பூமியில் தேடித்திரிந்து, இரவுகளில் ஓரிடத்தில் கூடியிருப்பார்கள். அந்த வானரர்கள் எல்லா தேசங்களிலும் ஒவ்வொரு தினங்களிலும், எல்லா ருதுக்களிலும் வேண்டியவைகளையளிக்கவல்ல பழங்கள் செறிந்த மரங்களை இரவில் அடைந்து உறங்கினார்கள்” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், “அந்த வானரர்கள் அந்தந்த இடங்களில் அம்மாதத்திலுள்ள எல்லாத் தினங்களிலும் பகல் முழுவதும் ஸீதையைத்தேடி, ராத்ரிகளில் ஸமஸ்தருதுக்களிலும் பூத்துக் காய்த்துப் பழுத்திருக்கின்ற வ்ருக்ஷங்களைச் சேர்ந்து, அங்குப் படுக்கையேற்படுத்திப் படுத்துக் கொண்டு வந்தனர்” என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், “எல்லோரும் இவ்வண்ணம் பகல் முழுதும் ஆகாயத்தின்மேற்சென்று தேடி இரவில் பாரிலிறங்கினர்கள்; இவ்வண்ணம் புறப்பட்ட தினம் முதலாகக் கொண்டு, ஒரு மாசம் வரையிலும் தேடியெங்கும் பிராட்டியைக் காணாமல் ஆசையொடுங்கி மீண்டெய்தி, மஹாராஜரைக் கண்டு செய்தியுரைசெய்து, மாலியவந்த மலை சேர்ந்தனர்கள்” என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், “சீதாப்பிராட்டியைக் கண்டுபிடிப்பதில் பேரார்வமுடைய அந்த வானரர்கள், பகல் முழுவதும் பூமியில் சுற்றித் திரிந்து தேடிவிட்டு, இரவுகளில் ஓரிடத்தில் வந்து கூடுவார்கள். பகல் முழுவதும் வெவ்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துவிட்டு, எல்லாக் காலங்களிலும் பழங்களைக் கொடுக்கக்கூடிய மரங்கள் இருக்கும் இடத்தின் அருகே வந்து களைப்பாறினார்கள்” என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பில் உள்ளவை அனைத்தும், தமிழில் நாம் ஒப்புநோக்கும் பதிப்புகளில் இருந்து மட்டுமே தரப்பட்டிருக்கின்றன.

அந்த நாள் முதலாகக் கொண்டு, ஒரு மாசத்திற்குள் நிராசையுடன் கூடிய அந்த கபிகுஞ்சரர்கள் பிரஸ்ரவணத்தை {நம்பிக்கையிழந்தவர்களும், குரங்குகளில் யானைகளுமான அந்த வானரர்கள், மால்யவத மலையை} அடைந்து, கபிராஜனை {குரங்குகளின் மன்னனான சுக்ரீவனைச்} சந்தித்தனர்.(6) மஹாபலவானான வினதன், {சுக்ரீவனால்} எப்படிச் சொல்லப்பட்டதோ, அப்படி அமைச்சர்கள் சகிதனாகப் பூர்வ {கிழக்குத்} திசையில் தேடி, சீதையைக் காணாமல் திரும்பிவந்தான்.(7) பிறகு, வீரனும், மஹாகபியுமான {பெருங்குரங்குமான} சதபலி, சைனியத்துடன் கூடியவனாக உத்தர {வடக்குத்} திசை முழுவதையும் தேடிவிட்டுத் திரும்பிவந்தான்.(8) வானரர்களுடன் கூடிய {சுக்ரீவனின் மாமனாரும், தாரையின் தந்தையுமான} சுஷேணன், பஷ்சிம {மேற்குத்} திசையைத் தேடிவிட்டு, மாசம் பூர்ணமடைந்ததும், திரும்பி வந்து சுக்ரீவனை அடைந்தான்.(9)

இராமன் சகிதனாக {மால்யவத மலையின்} பிரஸ்ரவண சிகரத்தில் அமர்ந்திருந்த அந்த சுக்ரீவனை அடைந்ததும், வணங்கிவிட்டு {அவர்கள் அனைவரும்} இதைச் சொன்னார்கள்:(10) “சர்வ பர்வதங்களிலும், கஹனங்களிலும் {ஆழமான பகுதிகளிலும்}, வனங்களிலும், ஆறுகளிலும், சாகர அந்தங்களிலும் {கடலின் எல்லைகளிலும்}, அதே போல சர்வ ஜனபதங்களிலும் {நாடுகளிலும் / கிராமங்களில்} தேடிவிட்டோம்.(11) நீர் புகழ்ந்து சொன்ன அனைத்துக் குகைகளிலும் தேடிவிட்டோம். லதைகள் {கொடிகள்} படர்ந்து மூடிக்கிடந்த மஹாகுல்மங்களிலும் {பெரும்புதர்களிலும்} தேடிவிட்டோம்.(12) கஹனங்களிலும் {ஆழ்ந்த காடுகளிலும்}, துர்கங்களிலும் {கடப்பதற்கரிய இடங்களிலும்}, சமமற்ற தேசங்களிலும் அதிபிரமாணம் கொண்ட {பேருடல் படைத்த} உயிரினங்களை வேட்டையாடி, கஹன தேசங்களிலும் {கடப்பதற்கரிய இடங்களிலும்} மீண்டும் மீண்டும் தேடிவிட்டோம்.(13) வானரேந்திரரே, உதார ஸத்வ அபிஜனனான {சிறந்த நற்குணங்களுடன் பிறந்த} அந்த ஹனுமான், மைதிலியைக் குறித்து அறிந்து கொள்வான். சீதை எந்த திசையில் சென்றாளோ, அப்படியே வாயுசுதனான ஹனூமானும் சென்றிருக்கிறான்” {என்றனர்}.(14)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 47ல் உள்ள சுலோகங்கள்: 14

Previous | Sanskrit | English | Next

Saturday, 14 October 2023

சுக்ரீவன் சொன்ன மேற்கு | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 42 (58)

West as said by Sugreeva | Kishkindha-Kanda-Sarga-42 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுஷேணனின் தலைமையில் மேற்குத் திசைக்கு மற்றொரு படையை அனுப்பிய சுக்ரீவன்; அத்திசையில் உள்ள ஆறுகள், மலைகளின் வர்ணனை...

Sugreeva orders Sushena

சுக்ரீவன், ஹரிக்களை தக்ஷிணதிசைக்கு {குரங்குகளை தென்திசைக்கு} அனுப்பியபிறகு, மேகத்திற்கு ஒப்பானவனும், சுஷேணன் என்ற பெயரைக் கொண்டவனுமான வானரனிடம் பேசினான்.(1) இராஜா {சுக்ரீவன்}, தாரையின் பிதாவும், தன் மாமனாருமான அந்த பீமவிக்கிரமனை {அஞ்சத்தக்க வீரம் படைத்த சுஷேணனை} அணுகி, கைகளைக் கூப்பி வணங்கி, இந்த வாக்கியங்களைச் சொன்னான்.(2) மஹரிஷியின் {மரீசியின்} புத்திரனும், கபிகளிற்சிறந்த சூரர்களால் சூழப்பட்ட மஹாகபியும் {சிறந்த குரங்குகளால் சூழப்பட்ட பெருங்குரங்கும்}, மஹேந்திரனுக்கு ஒப்பாக ஒளிர்பவனுமான மாரீசன்,{3} புத்தி விக்கிரம சம்பன்னர்களும், வைனதேயனுக்கு {கருடனுக்கு} இணையான ஒளி படைத்தவர்களும், மரீசியின் புத்திரர்களுமான மாரீசர்கள், மஹாபலவான்களான அர்ச்சிஷ்மாலயர்கள்,{4} ரிஷிபுத்திரர்கள் ஆகியோருள்ளிட்ட அனைவரையும் பிரதீசீம் திசைக்கு {மேற்குத் திசைக்கு} அனுப்ப {பின்வருமாறு} ஆணையிட்டான்:(3-5அ) “கபிசத்தமர்களே {குரங்குகளில் உயர்ந்தவர்களே}, நீங்கள் அனைவரும், இருநூறாயிரம்  கபிக்களுடன் {இரண்டு லக்ஷம் குரங்குகளுடன்}, சுஷேணரை முன்னிட்டுக் கொண்டு, வைதேஹியைத் தேடிச் செல்வீராக.(5ஆ,6அ) சௌராஷ்டிரம், பாஹ்லீகம், அதேபோல சந்திரசித்திரம் {மதுரா}[1] ஆகியவற்றிலும்,{6ஆ} செழிப்புமிக்கவையும், ரம்மியமானவையுமான ஜனபதங்களிலும் {கிராமப்புறங்களிலும்}, பெரிய நகரங்களிலும், புன்னாகம் {புன்னை}, வகுலம் {மகிழம்}, உத்தாலகம்[2], ஆகுலம் {நறுவிலி மரங்கள்} நிறைந்த காடுகளின் உட்புறங்களிலும்,{7} அதேபோல, ஹரிபுங்கவர்களே {குரங்குகளில் மேலானவர்களே}, கேதகங்கள் {தாழைகள்} அடர்ந்த காடுகளிலும் தேடுவீராக.(6ஆ-8அ)

[1] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “சந்திரசித்திரம் என்பது இன்றைய மதுராவைக் குறிக்கும். வேறு பதிப்புகளில் இது சூரதேசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சௌராஷ்டிரம் என்பது இன்றைய குஜராத் ஆகும்” என்றிருக்கிறது. இராமாயண காலத்தில் மதுரா, “மதுவனம்” என்று அறியப்பட்டிருந்தது. இருந்தாலும் சுக்ரீவன் இங்கே ராமாயண காலத்திற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த தேசத்தைக் குறிப்பிடுகிறான். அதனாலேயே பிற்காலத்தில் “மதுவனம்” என்றும், “மதுரா” என்றும் அறியப்படும் இவ்விடம் “சந்திரச்சித்திரம்” என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. ஹரிவம்சம், விஷ்ணு பர்வம், 94ம் அத்தியாயம், 39,40 சுலோகங்களில் {2:94:39,40}, “இராமனின் தம்பியான சத்ருக்னன், லவணாசுரனைக் கொன்று மதுவனத்தை அழித்தான். சுமித்ரையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான அந்தத் தலைவன் {சத்ருக்னன்}, தன்னால் அழிக்கப்பட்ட அந்த மதுவனத்தில்தான் மதுரா நகரை அமைத்தான்” என்றிருக்கிறது. வெவ்வேறு புராணங்களில் மதுவனத்தை அழித்து, மதுரா நகராக்கியது சத்ருக்னனா? லக்ஷ்மணனா? என்பதில் குழப்பம் தென்படுகிறது.

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “உத்தாலகம் என்பது தேனைக் குறிக்கும். எனவே, இது தேனை அடைவதற்கான ஒரு மரமாகும்” என்றிருக்கிறது

மேற்கு நோக்கிப் பாய்பவையும், குளிர்ந்த ஜலங்கொண்டவையும், மங்கலமானவையுமான நதங்களிலும் {மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளிலும்},{8ஆ} தாபஸர்களின் அரண்யங்களிலும் {தபம் செய்யும் முனிவர்கள் இருக்கும் காடுகளிலும்}, காந்தாரங்களிலும் {ஆழ்ந்த கானகங்களிலும்}, கிரிகளிலும் {மலைகளிலும்}, நீரில்லா ஸ்தலங்களிலும், அதியுச்ச சிகரங்களைக் கொண்டவையும், குளிர்ந்தவையுமான மலைகளிலும்,{9} கிரி ஜாலங்கள் சூழ்ந்த துர்கங்களிலும் பஷ்சிம {கடப்பதற்கரிய மலைத்தொகுப்புகள் சூழ்ந்த பகுதிகளிலும் மேற்குத்} திசையில் தேடிய பிறகு, இன்னும் மேற்கே சென்றால் சமுத்திரத்தைக் காணலாம்.{10} வானரர்களே, அங்கே திமிகளுடனும் {திமிங்கலங்களுடனும்}, முதலைகளுடனும் கூடிய கலங்கிய ஜலத்தைக் காண்பீர்கள்.(8ஆ-11அ) அங்கே கபயர்கள் {குரங்குகள்}, கேதக கண்டங்களிலும் {தாழை மரங்களிலும்}, தமால கஹனங்களிலும் {பச்சிலைக் காடுகளிலும்}, நாரிகேல வனங்களிலும் {தென்னந்தோப்புகளிலும்} நடமாடுகிறார்கள்.(11ஆ,12அ) அங்கே, சீதையையும், ராவணனின் நிலயத்தையும் தேடுவீராக.{12ஆ} கடல்முனையில் அமைந்திருக்கும் பர்வதங்களிலும், வனங்களிலும் {மலைகளிலும், காடுகளிலும்}, முரசீ பட்டணத்திலும், ரம்மியமான ஜடாபுரத்திலும்,{13} அவந்தியிலும், அங்களேபத்திலும், அதே போல அலக்ஷித வனத்திலும், ஆங்காங்கே உள்ள ராஷ்டிரங்களிலும், விசாலமான பட்டணங்களிலும் {தேடுவீராக}[3].(12ஆ-14) 

[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “வேறுபதிப்புகளில் முரளீ, ஜதீபுரம், மௌர்வி என்ற பெயர்களைக் கொண்ட நகரங்கள் சொல்லப்படுகின்றன” என்றிருக்கிறது

சிந்து சாகர சங்கமத்தில் {சிந்து நதியும், அரபிக்கடலும் கலக்கும் இடத்தில்}, ஹேமகிரி {பொன்மலை} என்ற பெயரைக் கொண்டதும், சதசிருங்கங்களை {நூறு சிகரங்களைக்} கொண்டதும், பெரும் மரங்களுடன் கூடியதுமான மஹாபர்வதம் இருக்கிறது.(15) அங்கே ரம்மியமான பிரஸ்தங்களில் {மலைகளின் புல்வெளிகளில்} சிறகுகளுடன் கூடிய சிம்ஹங்கள் {சிங்கங்கள்} இருக்கின்றன. அவை, திமி, மத்ஸ்யம், கஜங்கள் {திமிங்கலங்கள், மீன்கள், யானைகள்} ஆகியவற்றைத் தங்கள் கூடுகளுக்குக் கொண்டு செல்கின்றன.(16) கிரி சிருங்கத்தை {அந்தப் பொன்மலைச்சிகரத்தை} அடைந்ததும்,  இடிமேகத்தைப் போல ஒலியெழுப்புபவையும் {பிளிறுபவையும்}, செருக்கு நிறைந்தவையும், திருப்தி அடைந்தவையுமான மாதங்கங்கள் {யானைகள்}, பூரண நீர் கொண்டவையும், விசாலமானவையுமான அந்த சிம்ஹங்களின் குகைகளில் திரிந்து கொண்டிருக்கின்றன.(17,18அ) காமரூபிகளான கபிக்களே {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான குரங்குகளே}, திவத்தை ஸ்பரிசிக்கும் சித்திரமான {சொர்க்கத்தைத் தீண்டும் அழகிய} மரங்கள் நிறைந்த அதன் காஞ்சன சிருங்கத்தை {தங்கச்சிகரத்தை} முழுமையாகவும், விரைவாகவும் தேடுவீராக.(18ஆ,19அ)

வானரர்களே, அங்கே சென்றதும், சமுத்திரத்தில் உள்ள பாரியாத்ரத்தில் {பாரியாத்ர மலையில்} நூறு யோஜனைகள் கொண்டதும், காஞ்சனமயமானதும், {பொன்மயமானதும்}, கடப்பதற்கரியதுமான சிகரத்தைக் காண்பீர்கள்.(19ஆ,20அ) அங்கே, வலிமைமிக்கவர்களும், அக்னிக்கு ஒப்பாகப் பிரகாசிப்பவர்களும், கோரர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} கந்தர்வர்கள் இருபத்துநான்கு கோடி பேர் வசித்திருக்கின்றனர்[4].(20ஆ,21அ) எங்கேயும் நிறைந்திருப்பவர்களும், பாவகனின் நாவுகளை {நெருப்பின் தழல்களைப்} போலப் பிரகாசிப்பவர்களுமான அவர்களை, பீம விக்கிரமர்களான {அஞ்சத்தக்க வெற்றிநடை கொண்ட} வானரர்கள் நெருங்கக்கூடாது.(21ஆ,22அ) அந்த தேசத்தில் பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்} பழங்களைக் கூடப் பறிக்கக்கூடாது. சத்வவந்தர்களும் {நன்னெறியைப் பின்பற்றுபவர்களும்}, மஹாபலவான்களுமான அந்த வீரர்கள், வெல்வதற்கரியவர்கள். பீமவிக்கிரமர்களான {அஞ்சத்தக்க வெற்றிநடை கொண்டவர்களான} அவர்கள், அங்கே பழங்களையும், கிழங்குகளையும் ரக்ஷித்து {காத்துக்} கொண்டிருக்கிறார்கள்[5].(22ஆ,23) அங்கேயும் யத்னம் செய்து {முயற்சியுடன்} ஜானகியை {சீதையைத்} தேடுவீராக. கபித்வத்தை {குரங்குத் தன்மையைப்} பின்பற்றுபவர்களுக்கு அவர்களிடம் {அந்த கந்தர்வர்களிடம்} எந்த பயமும் உண்டாகாது.(24) அங்கிருந்து வைடூரிய வர்ணத்தில் ஒளிர்வதும், வடிவில் வஜ்ரம் {வைரம்} போல் நிற்பதும், நானாவித மரங்கள், கொடிகள் ஆகியவை நிறைந்ததும், ஸ்ரீமான் வஜ்ரம் என்ற பெயரைக் கொண்டதுமான மஹாகிரியானது {பெரும்மலையானது},{25} அங்கே ஒரு யோஜனை அகலத்திலும், அதே அளவு உயரத்திலும் இருக்கிறது. பிலவங்கமர்களே {தாவிச் செல்லும் குரங்குகளே}, அங்கேயுள்ள குகைகளில் பிரயத்னத்துடன் தேடுவீராக.(25,26) 

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே சொல்லப்படும் கந்தர்வர்கள் தெய்வீக இசைக்கலைஞர்களல்ல; மனித கந்தர்வர்கள். இங்கே குறிப்பிடப்படும் “பாரியாத்ரம்”, விந்தியமலைப்பகுதியில் உள்ளதல்ல; இன்றைய பாகிஸ்தானில் உள்ள “சுலைமான்” மலைத்தொடரில் உள்ள ஏதேனுமொரு மலையாக இருக்க வேண்டும்” என்றிருக்கிறது. மஹாபாரதம், பீஷ்ம பர்வம், பகுதி 9ல் பாரதத்தின் எல்லைகளாகத் திகழும் மலைகளின் பட்டியலில் இந்த பாரியாத்ரமும் குறிப்பிடப்படுகிறது.  

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இந்தப் பகுதி உலர்ந்த பழங்களுக்குப் பிரசித்தி பெற்ற இன்றைய ஆப்கானிஸ்தானமாக இருக்கலாம். காபூல்வாசிகள் சுவைமிகுந்த உலர்ந்த பழங்களை விற்பனை செய்வது, பழங்கால வழக்கமேயாகும். அவர்கள், அவ்வகையிலான உயர்ரக பழங்களைத் தோட்டங்களில் விளைவிக்கும் போது, எந்தத் தோட்டக்காரன்தான் குரங்குகள் பழங்களைப் பறிக்க அனுமதிப்பான்?” என்றிருக்கிறது.

சமுத்திரத்தின் நான்காம் பாகத்தில், சக்ரவான் என்ற பெயரில் ஒரு பர்வதம் {மலை} இருக்கிறது. அங்கே விஷ்வகர்மனால் ஆயிரம் ஆரங்களைக் கொண்ட சக்கரம் நிர்மாணிக்கப்பட்டது[6].(27) அங்கே புருஷோத்தமன் {விஷ்ணு}, பஞ்சஜனனையும், ஹயக்ரீவன் என்ற தானவனையும் கொன்று, அங்கிருந்து சக்கரத்தையும், {பாஞ்சஜன்யம் என்ற} சங்கையும் எடுத்துக் கொண்டான்.(28) அங்கே {அந்த சக்ரவான் மலையின்} ரம்மியமான தாழ்வரைகளிலும், விசாலமான குகைகளிலும் ஆங்காங்கே ராவணனையும், வைதேஹியையும் தேடுவீராக.(29) 

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இது வெறும் ஆயிரம் ஆரங்களைக் கொண்ட சக்கரமல்ல; ஆனால் ஆயிரம் பகுதிகளைக் கொண்ட, அல்லது ஆயிரம் துணை ஆயுதங்களைக் கொண்ட ஓர் இயந்திர ஆயுதம் என்று சொல்லப்படுகிறது. தேவதச்சனான விஷ்வகர்மன் இத்தகைய அற்புதமானவற்றை தேவர்களுக்கு மட்டுமல்லாமல், இந்திரனின் சொர்க்கத்தை அசுரர்கள் கைப்பற்றும்போது, அந்த அச்சுறுத்தலின் கீழ், அசுரர்களுக்கும் நிர்மாணித்துக் கொடுத்திருக்கிறான்” என்றிருக்கிறது.

அதற்கப்பாலுள்ள வருணாலயத்தில் {கடலில்}, அறுபத்திநான்கு யோஜனைகள் கொண்டதும், சுவர்ண சிருங்கத்துடன் {தங்கச் சிகரத்துடன்} கூடியதும், வராஹம் என்ற பெயரைக் கொண்டதுமான மஹத்தான பர்வதம் இருக்கிறது.(30) அங்கே பிராக்ஜ்யோதிஷம் என்ற பெயரில் ஜாதரூபமயமான புரம் {பொன்மயமான நகரம்} இருக்கிறது. அங்கே துஷ்டாத்மாவும், நரகன் என்ற பெயரைக் கொண்டவனுமான தானவன் வசிக்கிறான்[7].(31) இரம்மியமான அதன் தாழ்வரைகளிலும், விசாலமான குகைகளிலும் ராவணனையும், வைதேஹியையும் ஆங்காங்கே தேடுவீராக.(32) 

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “காளிதாசனின் படைப்புகளில் குறிப்பிடப்படும் இந்தப் பிராக்ஜோதிஷம், இன்றைய அசாம் என்று கருதப்படுகிறது. சிலர் இந்த இடத்தில் இந்த இடம் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடாது என்று சொல்கின்றனர். இந்த சுலோகத்தை சேர்த்திருப்பது நகலெடுத்தவர்கள் செய்த பிழை என்றும் சொல்லப்படுகிறது. ஜியோகரஃபி ஆஃப் புராணாஸ் (Geography of Puranas) நூலில், எஸ்.எம்.அலி, “நாட்டின் கிழக்கு விளிம்பில் இருந்த புகழ்பெற்ற ஜனபதம் இஃது” என்று சொல்கிறார். இது கிட்டத்தட்ட பிரம்மபுத்திரா நதியின் பள்ளத்தாக்கில் அமைகிறது. “பிராக்” என்பதற்கு “முதல்”, அல்லது “கிழக்கு” என்றும், “ஜ்யோதிஷ்” என்பதற்கு, “கிரகம்”, “சூரியன்”, “ஒளி” என்றும் பொருள் கொள்ளலாம். இந்தப் பெயருக்கான முழு பொருள், “முதல் ஒளியைப் பெறும் இடம்”, அதாவது கிழக்கிந்தியா, அதாவது அசாம் என்பதாகும்” என்றிருக்கிறது.

காஞ்சனக் கொள்ளிடம் {பொன்கருவூலம்} போல் தெரியும் அந்த சைலேந்திரத்தை {சிறந்த மலையான வராஹ மலையைக்} கடந்தால், நீர்த்தாரைகளைப் பொழியும் அருவிகளுடன் கூடிய சர்வசௌவர்ண பர்வதம் இருக்கிறது.(33) சுற்றிலும் கஜங்கள், வராஹங்கள், சிம்ஹங்கள், வியாகரங்கள் {யானைகள், பன்றிகள், சிங்கங்கள், புலிகள்} ஆகியவை, அவற்றின் {நீரருவிகளின்} சப்தங்களால் செருக்குற்று எப்போதும் {அந்த மலையை நோக்கி} கர்ஜித்துக் கொண்டிருக்கின்றன.(34) ஹரிஹயனும் {பச்சை குதிரைகளைக் கொண்டவனும்}, ஸ்ரீமானும், பாகசாசனனுமான மஹேந்திரன் {பகன் என்ற அசுரனை அழித்தவனுமான பெரும் இந்திரன்} எங்கே ஸுரர்களால் {தேவர்களால்} ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டானோ, அத்தகைய பர்வதம் மேகம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(35) மஹேந்திரனால் பரிபாலிக்கப்படும் அந்த சைலேந்திரத்தை {சர்வசௌவர்ண / மேகவந்த மலையைக்} கடந்ததும், இளம் ஆதித்யனின் வர்ணம் கொண்டவையும், சுற்றிலும் ஒளிமயமானவையும், முழுமையாகப் புஷ்பித்த ஜாதரூபமயமான விருக்ஷங்களைக் {முற்றிலும் மலர்ந்த பொன்மயமான மரங்களைக்} கொண்டவையுமான அறுபதுனாயிரம் காஞ்சன கிரிகளுக்கும் {பொன் மலைகளுக்கும்} செல்வீராக.(36,37) 

அதன் மத்தியில் ராஜா மேரு என்ற உத்தம பர்வதம் இருக்கிறது. பூர்வத்தில் அந்த சைலத்திற்கு, அருள்நிறைந்த ஆதித்யன் {சூரியன்} வரம் ஒன்றை தத்தம் செய்தான்.(38) சைலேந்திரத்திடம் அவன் {அந்த மேரு மலையிடம் சூரியன்} இவ்வாறு சொன்னான், “உன்னைப் புகலிடமாகக் கொள்ளும் அனைத்தும், பகலிலும், ராத்திரியிலும் என் அருளால் காஞ்சனமயமாகும் {பொன்மயமாகும்}.{39} தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்களென எவரானாலும் உன்னில் வசிக்கும் பக்தர்களும் என் பிரபையால் காஞ்சனப் பிரபையுடன் {பொன்னொளியுடன்} ஒளிர்வார்கள்” {என்று மேரு மலைக்கு வரமளித்தான் சூரியன்}.(39,40) விஷ்வேதேவர்களும், வசுக்களும், மருத்துக்களும், திவ ஓகஸர்களும் {சொர்க்கவாசிகளும்}, பஷ்சிம சந்தியில் {மேற்கில் தோன்றும் மாலை சந்தியா வேளையில்} உத்தம பர்வதமான மேருவுக்கு வரும் ஆதித்யனிடம் {சூரியனிடம்} நெருங்கி அமர்கின்றனர். அவர்கள் அனைவராலும் வழிபடப்படும் சூரியன், சர்வ பூதங்களுக்கும் {அனைத்து உயிரினங்களுக்கும்} புலப்படாத வகையில் அஸ்த பர்வதத்திற்குச் செல்கிறான்.(41,42) 

திவாகரன் {பகலை உண்டாக்கும் சூரியன்}, அரை முஹூர்த்தத்தில் பத்தாயிரம் யோஜனைகளைக் கடந்து, உயர்ந்த மலையை {அஸ்தகிரியை} சீக்கிரமே அடைகிறான்.(43) அதன் சிருங்கத்தில் {சிகரத்தில்}, பல அடுக்குகளைக் கொண்டதும், சூரியனின் ஒளிக்கு ஒப்பானதும், மஹத்தானதும், திவ்யமானதுமான ஒரு பவனத்தை {வசிப்பிடத்தை} விஷ்வகர்மன் ஏற்படுத்தியிருக்கிறான்.(44) சித்திரமானவையும் {அழகானவையும்}, நானாவித பக்ஷிகளின் {பறவைகளின்} இன்னொலியுடன் கூடியவையுமான மரங்களுடன் சோபிப்பதும், மஹாத்மாவும், பாசஹஸ்தனுமான {கையில் பாசக்கயிற்றுடன் கூடியவனுமான} வருணனின் நிகேதம் {வசிப்பிடம்} அங்கேயே இருக்கிறது.(45) மேருவுக்கும், அஸ்தத்திற்கும் இடையில் தசசிரம் {பத்துத் தலை} கொண்டதும், ஜாதரூபமயமான ஸ்ரீமானும், சித்திர வேதிகையுடன் {அழகிய வேள்விப்பீடத்துடன்} கூடியதுமான மஹாதாலம் {பெரும் பனை  / பெரும் பேரீச்ச மரம்} ஒளிர்ந்து கொண்டிருக்கிறது[8].(46) துர்கங்கள், சரஸ்கள், சரிதங்கள் {கடப்பதற்கரிய மலைப்பகுதிகள், பொய்கைகள், ஆறுகள்} ஆகியவற்றைக் கொண்ட அவை அனைத்திலும் ஆங்காங்கே வைதேஹியையும், ராவணனையும் தேடுவீராக.(47) 

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இது தற்கால அரேபியாவாகவும், புராதன பாரசீக மாகாணமுமாக இருக்க வேண்டும். ஏனெனில் அங்கேயும், தென்கிழக்காசிய முழுவதுங்கூட பேரீச்ச மரங்கள் உயர்வாக மதிக்கப்படுகின்றன” என்றும், இன்னும் அதிகமும் சொல்லப்பட்டிருக்கிறது.

தர்மஜ்ஞரும் {தர்மத்தை அறிந்தவரும்}, தானே தாபஸ பாவம் அடைந்தவரும் {தன் தவத்தால் ஞானமடைந்தவரும்}, பிரம்மனுக்கு சமமானவர் என்று புகழ்பெற்றவருமான மேருசாவர்ணி {முனிவர்} இங்கேயே வசித்து வருகிறார்.(48) சூரியனுக்கு ஒப்பான ஒளி கொண்ட மஹரிஷியான மேருசாவர்ணியின் முன், பூமியை சிரஸால் வணங்கிவிட்டு, மைதிலியைக் குறித்தும், அவள் எங்கிருக்கிறாள் என்பதைக் குறித்தும் அவரிடம் கேட்பீராக.(49) பாஸ்கரன், ஜீவலோகத்தில் {சூரியன், உயிரினங்களின் உலகத்தில்} இதுவரைதான் ரஜனியின் {இரவின்} சிதைவில் இருளில்லாமல் செய்துவிட்டு, அஸ்த பர்வதத்தை {அஸ்த மலையை} அடைகிறான்.(50) வானரபுங்கவர்களே, அதுவரையே வானரர்கள் செல்வது சாத்தியம். பாஸ்கரனற்றவையும் {சூரியனற்றவையும்}, எல்லையற்றவையுமாக அதற்கப்பாலும் இருப்பனவற்றை {இருக்கும் நிலப்பரப்புகளை} நான் அறிந்தவனல்ல[9].(51)

[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “தி ஏன்சியன்ட் ஜியோகிரஃபி ஆஃப் இந்தியா {The ancient geography of India} என்ற நூலில் கே.பாசு, “வால்மீகி இங்கே சில இடங்களை மட்டுமே குறிப்பிடுகிறார், அதிலும் மேற்கிலிருக்கும் மலைகளையும், கவித்துவமாக சூரியன் மறையும் நிலத்தையும் மட்டுமே குறிப்பிடுகிறார் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எகிப்து, அசிரியா, கிரேக்கம் ஆகியவை பெரும் பழமைவாய்ந்தவையாக இருந்தாலும், அந்தக்காலத்தில் {ராமாயண காலத்தில்} அவற்றைக் குறித்து இங்கே அறியப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. வால்மீகியின் காலத்தில் இதுபோன்ற தேசங்களே கூட இருந்திருக்க வாய்ப்பில்லை, இருந்தாலும் இந்திய ஆரியர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டிருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்கிறார். அபாஸ்கரம் {சூரியனில்லாத}, அமர்யாதம் {எல்லையற்ற} என்ற இந்த சொற்களுக்கு, “ஞானமில்லாத, ஒழுக்கமில்லாத” என்றும் பொருள் கொள்ளலாம். எனவே, பாரசீகத்திற்கு மேற்கே இருந்த இந்த நாகரிங்கள் அனைத்தும், பாபிலோன், அசிரிய நாகரியங்களுக்கு முன்பிருந்தவை என்று கணிக்கலாம். “கல்விமானும், பண்பாடு தெரிந்தவனுமான ராவணனே கூட, இதற்கப்பாலுள்ள இழிந்த நாகரிகம் கொண்டவர்களுடன் தொடர்பில்லாதவன். இதற்கப்பால் நிச்சயம் அவன் சீதையைக் கொண்டு சென்றிருக்கமாட்டான். எனவே அங்கே நீங்கள் தேட வேண்டியதில்லை” என்று சுக்ரீவன் சொல்வதாகவும் இங்கே எடுத்துக் கொள்ளலாம்” என்றிருக்கிறது.

வைதேஹியையும், ராவணனின் நிலயத்தையும் அறிந்து கொண்டு, அஸ்த பர்வதத்தில் இருந்து மாசம் பூர்ணமாவதற்குள் {ஒரு மாதம் முடிவதற்குள்} திரும்பி வருவீராக.(52) மாசம் கடந்தும் வராமல் இருப்பவர்கள் என்னால் வதம் செய்யப்படத்தக்கவர்கள். சூரரான என் மாமனார் {சுஷேணர்} உங்களுடன் வருவார்.(53) திஷ்டகாரிகளான {ஆணையிடப்பட்டவற்றை நிறைவேற்றுபவர்களான} நீங்கள், மஹாபாஹுவும், மஹாபலம்வாய்ந்தவரும், என் மாமனாருமான குரு {மதிப்பிற்குரிய சுஷேணர்} சொல்லும் அனைத்தையும் கேட்பீராக.(54) விக்ராந்தர்களான நீங்கள் அனைவரும், “இதுவே பிரமாணம்” என்று, இவரது பிரமாணங்களை நிறைவேற்றி பஷ்சிம திசையில் {மேற்குத் திசையில்} தேடுவீராக.(55) அமிததேஜஸ்வியான நரேந்திரரின் பத்தினியை {அளவற்ற வலிமை கொண்ட மனிதர்களின் மன்னனான ராமரின் மனைவி சீதையைக்} கண்ட பிறகு, செய்ய வேண்டிய காரியங்களைச் செய்துவிட்டு, கிருதார்த்தர்களாவீராக {காரியம் நிறைவேறியவர்களாக ஆவீராக}.(56) இந்தக் காரியத்தில் வேறு எதையும்விட, எது பிரியத்திற்குரியதோ, தேசம், காலம், அர்த்தம் ஆகியவற்றுக்கு {இடத்திற்கும், நேரத்திற்கும், பொருளுக்கும் / நோக்கத்திற்கும்} எது சம்மதமானதோ அதைத் தீர்மானித்துக் காரியத்தை நிறைவேற்றுவீராக” {என்றான் சுக்ரீவன்}.(57)

பிறகு, சுஷேணனும், பிலவங்கம {தாவிச்செல்லும் குரங்குப்} பிரமுகர்களும், சுக்ரீவனின் வாக்கியங்களை நிபுணத்துவத்துடன் கேட்டவர்கள் அனைவரும், பிலவகாதிபனிடம் {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனுமான சுக்ரீவனிடம்} விடைபெற்றுக் கொண்டு வருணன் வசிக்கும் அந்தத் திசையை {மேற்குத் திசையை} நோக்கிச் சென்றனர்.(58)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 42ல் உள்ள சுலோகங்கள்: 58

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை