Showing posts with label குசநாபன். Show all posts
Showing posts with label குசநாபன். Show all posts

Thursday, 7 October 2021

விஷ்வாமித்ரர் | பால காண்டம் சர்க்கம் - 51 (28)

Vishvamitra | Bala-Kanda-Sarga-51 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தமது அன்னையான அஹல்யை குறித்து விசாரித்த சதானந்தர்; விஷ்வாமித்ரரின் முற்கதையை உரைத்தது...

Vishvamitra and his army

மதிமிக்கவரான விஷ்வாமித்ரரின் வசனத்தைக் கேட்டவரும், மஹாதேஜஸ்வியும், மஹாதபஸ்வியும், கௌதமரின் ஜேஷ்ட சுதனும் {மூத்த மகனும்}, தவத்தால் பிரகாசமான ஒளி பொருந்தியவருமான சதாநந்தர், ராமனைக் கண்ட உடனேயே மயிர்க்கூச்சத்துடன் கூடிய பெரும் வியப்பை அடைந்தார்.(1,2)

பிறகு அந்த சதானந்தர், தலைக்குனிந்து பணிவுடன் சுகமாக அமர்ந்திருந்த அந்த நிருபாத்மஜர்களை {ராஜபுத்திரர்களைக்} கண்ணாறக் கண்டு, முனிசிரேஷ்டரான விஷ்வாமித்ரரிடம் சொன்னார்:(3) "முனிசார்தூலரே {முனிவர்களில் புலியே}, இந்த ராஜபுத்திரர்கள், தீர்க்க தவம் செய்தவளும், பெரும் நற்பேறு பெற்றவளுமான என் மாதாவை {அகலிகையை} உம்மால் தரிசித்தனர்.(4) மஹாதேஜஸ்வியும், பெரும் நற்பேறு பெற்றவளுமான என் மாதா, உடல் கொண்ட எவராலும் பூஜிக்கத் தகுந்த ராமனை வனப்பொருள்களால் {மலர்களாலும், கனிகளாலும், கிழங்குகளாலும்} பூஜித்தாளா?(5) மஹாதேஜஸ்வியே, என் மாதாவுக்கு தெய்வ செயலால் நேர்ந்த புராதனத்தை {பழங்கதையை} நீர் நடந்தபடியே ராமனுக்குச் சொன்னீரா?(6) கௌசிகரே, மங்கலமாக இருப்பீராக. முனிசிரேஷ்டரே, ராமனைக் கண்ட என் மாதா {அஹல்யை}, என் குருவுடன் {கௌதமருடன்} சேர்ந்து அதிதி பூஜை {விருந்தோம்பல்} செய்தாளா?(7) குசிகாத்மஜரே {குசிகரின் மகனான விஷ்வாமித்ரரே}, மஹாதேஜ்வியான என் குரு {என் தந்தை கௌதமர்}, அங்கே வந்து ராமனை பூஜித்தாரா? இந்த மஹாத்மாவால் பிரதிபூஜை செய்யப்பட்டாரா?(8) குசிகாத்மஜரே, அவர் அங்கே வந்து தீங்கு விளைவிக்காதபடி, பூஜிக்கத்தகுந்தவனான ராமனால் மனசாந்தியை அடைந்தாரா?" {என்று கேட்டார் சதானந்தர்}.(9)

மஹாமுனியும், வாக்கியங்களை அறிந்தவருமான விஷ்வாமித்ரர் சதானந்தரின் வசனத்தைக் கேட்டு, அந்த வாக்கியங்களின் பொருள் உணர்ந்து மறுமொழி சொன்னார்:(10) "முனிசிரேஷ்டா, எதுவும் செய்யப்படாமல் விடப்படவில்லை. செய்யப்படவேண்டியவை அனைத்தும் என்னால் செய்யப்பட்டன. ரேணுகையுடன் பார்க்கவரை {ஜமதக்னியைப்} போல[1] அந்தப் பத்தினியும், முனியும் {அகலிகையும் கௌதமரும்} ஒன்று சேர்ந்தனர்" என்றார் {விசுவாமித்ரர்}.(11)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முந்தைய யுகத்தில் க்ஷத்திரிய மன்னர்களின் தவறுகளைக் கண்டிக்கும் பிராமணராக விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான பரசுராமரின் அன்னையாவாள் இந்த ரேணுகை. பிருகுவின் வழித்தோன்றலும், ரேணுகையின் கணவருமான ஜமதக்னி முனிவர் பார்க்கவர் என்றும் அழைக்கப்பட்டார். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஜமதக்னி தமது மகனான பரசுராமரிடம் அவரது தாயான ரேணுகையின் தலையைக் கொய்யச் சொல்கிறார். பரசுராமரும் தமது தந்தையின் ஆணையைத் தயக்கமில்லாமல் நிறைவேற்றினார். ஒப்பற்ற ஆயுதமான கோடரியுடன் கூடிய பரசுராமர் இவ்வாறே பார்க்கவ ராமர் என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பரசுராமர், இராமாயணத்தில் சீதா திருமணத்திற்குப் பிறகு ராமனை எதிர்த்து வருவார்" என்றிருக்கிறது.

மதிமிக்கவரான விஷ்வாமித்ரரின் வசனத்தைக் கேட்ட மஹாதேஜஸ்வியான சதானந்தர், ராமனிடம் இதைச் சொன்னார்:(12) "நரசிரேஷ்டா, ராகவா, அபராஜிதரான {வெல்லப்பட முடியாதவரான} விஷ்வாமித்ர மஹரிஷியை முன்னிட்டு வந்த உன் வரவு நல்வரவாகட்டும்[2].(13) மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் செய்த செயல்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை. இவர் தமது தவத்தின் மூலம் பிரம்மரிஷியானார். எல்லையற்ற ஒளி பொருந்திய இவரது பரமகதியை நீ அறிவாய் {நீ அறிய வேண்டும்}[3].(14) இராமா, புவியில் உன்னைவிடத் தன்யதரன் வேறு எவனும் இல்லை. உயர்ந்த தவம் பயின்ற குசிக புத்திரரே {விஷ்வாமித்ரரே} உன்னைப் பாதுகாப்பவராக இருக்கிறார்.(15) மஹாத்மாவான இந்தக் கௌசிகரின் பலமென்ன என்பதைக் கேட்பாயாக. அதனை நான் உனக்கு உரைக்கிறேன். நான் சொல்லும்போதே என்னிடம் கேட்பாயாக.(16)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சதானந்த முனிவரின் இந்த வாக்கியம் பாலகாண்டம் 19ம் சர்க்கம் 14ம் சுலோகத்தில் தரசரதன் சபையில் விசுவாமித்ரர் சொன்ன "மஹாத்மாவும், சத்தியபராக்கிரமனுமான ராமனை முற்றாக நான் அறிவேன்" என்ற வாக்கியத்தை நமக்கு நினைவுப்படுத்தும். அகலிகை, கௌதமர் ஆகியோரின் மகனானதால் சதானந்தரும் அங்கே விசுவாமித்ரர் சொன்னதைப் போலவே ராமனை அறிந்திருக்கிறார். அத்தகைய முனிவர் ஒருவர் ராமனை வழிநடத்துகிறார் எனும்போது அவரைக் குறித்த பின்னணியை ராமன் அறிந்திருக்க வேண்டும். இதனால் அடுத்தடுத்து வரப்போகும் சில சர்க்கங்களில் {15 சர்க்கங்களில்} சதானந்தர் சொல்வதாக விசுவாமித்ரரின் கதை இடம்பெறப்போகிறது" என்றிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த உரையை "ஏற்கனவே நீ அறிவாய்" என்று பொருள் கொண்டால், சதானந்தர் மேற்கொண்டு சொல்வதற்கு எதுவும் இல்லை. எனவே, "நீ அறிய வேண்டியது இன்னும் இருக்கிறது" என்று பொருள் கொள்வதே இங்குச் சிறப்பு. இவர் பரமஹிதசந்தாயகர், அஃதாவது அண்ட அமைதிக்கான நன்மையைச் செய்பவராக இருப்பதால் "விஷ்வம்" - அண்டம், "மித்ரன்" - நண்பன் என்ற பொருளில் அண்டத்தின் நண்பன் என்பதைக் குறிப்பதற்காக விஷ்வாமித்ரர் என்ற பெயரைப் பெற்றார்" என்றிருக்கிறது.

இந்தத் தர்மாத்மா, தர்மத்தை அறிந்தவராக இருந்து, {ஆட்சித்திறத்தில்} வித்தைகளைப் பயின்று பிரஜைகளின் நலத்தைக் காக்கும் அரிந்தம {பகைவரைத் தண்டிக்கும்} ராஜாவாக நீண்ட காலம் இருந்தார்.(17) பிரஜாபதியின் மகனும், குசன் என்ற பெயரைக் கொண்டவருமான ஒருவர் {ஒரு காலத்தில்} மஹீபதியாக {பூமியின் தலைவராக} இருந்தார். பலவானும், நல்ல தார்மிகருமான குசநாபர், இந்தக் குசரின் புத்திரனாவார்.(18) காதி என்று கேள்விப்படும் ஒருவர் குசநாபரின் மகனாவார். மஹாதேஜஸ்வியும், மஹாமுனியுமான இந்த விஷ்வாமித்ரர் அந்தக் காதியின் புத்திரனாவார்.(19) {பின்னொரு காலத்தில்} மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் மேதினியை பரிபாலித்து {பூமியை ஆண்டு} வந்தார். ராஜாவாகப் பல்லாயிரம் வருடங்கள் ராஜ்யத்தை ஆண்டுவந்தார்.(20)

இந்த மஹாதேஜஸ்வி ஒரு காலத்தில் ஓர் அக்ஷௌஹிணி சூழ படைகளைத் திரட்டிக் கொண்டு மேதினியை வலம் வந்தார்[4].(21) நகரங்கள், ராஷ்டிரங்கள், ஆறுகள், கிரிகள், ஆசிரமங்கள் என அடுத்தடுத்து திரிந்த அந்த ராஜா ஓரிடத்தில்{22} வசிஷ்டரின் ஆசிரமபதத்தைக் கண்டார். அங்கே பலவித புஷ்பங்கள், கொடிகள், மரங்கள், பலவித மிருக கணங்கள் நிறைந்தன. சித்தர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்படுவதும்,{23} தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் ஆகியோரால் ஒளிபெறுவதும், மான்கள் நிறைந்ததும், பறவைக்கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{24} பிரம்ம ரிஷி கணங்கள் நிறைந்ததும், தேவரிஷி கணங்களால் துதிக்கப்படுவதும், எப்போதும் தவப்பயிற்சிகள் நடைபெறுவதுமான இடமாக அஃது இருந்தது, அக்னிக்கு ஒப்பான மஹாத்மாக்களும்,{25} பிரம்மனுக்கு ஒப்பான மஹாத்மாக்களும், நீரைப்பருகி வாழ்பவர்களும், காற்றை உண்டு வாழ்பவர்களும், சருகுகளை உண்டு வாழ்பவர்களும்,{26} கனி கிழங்குகளை உண்டு வாழ்பவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், பாவங்களை வென்றவர்களும், புலன்களை வென்றவர்களும், ரிஷிகளும், வாலகில்யர்களும், ஜபங்கள், ஹோமங்கள் செய்பவர்களும்,{27} வைகானஸர்களும் அவ்விடத்தில் நிறைந்திருந்தனர்.(28அ) இவ்வாறே வெற்றியாளர்களில் சிறந்தவரும், மஹாபலம்வாய்ந்தவருமான விஷ்வாமித்ரர், பிரம்ம லோகத்திற்கு ஒப்பான வசிஷ்டரின் ஆசிரமபதத்தை அங்கே கண்டார்" {என்றார் சதானந்தர்}.(28ஆ,இ)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அக்ஷௌஹினி என்றழைக்கப்படும் ஒரு படைப்பிரிவானது, 21,870 தேர்களும், அதே எண்ணிக்கையிலான யானைகளும், 65,610 குதிரைகளும், 1,09,350 காலாட்களும் கொண்டதாகும்" என்றிருக்கிறது.


பாலகாண்டம் சர்க்கம் – 51ல் உள்ள சுலோகங்கள் : 28

Previous | Sanskrit | English | Next

Wednesday, 8 September 2021

கௌசிகி நதி | பால காண்டம் சர்க்கம் - 34 (23)

River Kaushiki | Bala-Kanda-Sarga-34 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: குசநாபனின் மகன் காதியின் பிறப்பு; விஷ்வாமித்ரரின் சகோதரி கௌசிகி நதியாகத் தோன்றியது...

Tapas


{விசுவாமித்ரர் தொடர்ந்தார்}, "இராகவா {ரகு குல ராமா}, பிரம்மதத்தன் திருமணம் செய்து சென்றதும் புத்திரரில்லாதவனானவன் {குசநாபன்} புத்திரலாபத்திற்காகப் பௌத்ரீமிஷ்டியை {புத்திரர்களைப் பெறுவதற்கான புத்திரகாமேஷ்டி யஜ்ஞத்தைத்} தொடங்கினான்.(1) அந்தச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பரமோதாரனும் {பெருந்தயாளனும்}, பிரம்மசுதனுமான {பிரம்மனின் மகனுமான} குசன், மஹீபதியான {பூமியின் தலைவனான தன் மகன்} குசநாபனிடம் பேசினான்:(2) "புத்திரா, உன்னைப் போன்றே நல்ல தார்மீகனான {சிறந்த தர்மவானான} காதி என்ற புத்திரனை நீ பெறுவாய். அவனால் நீ இவ்வுலகில் நீடித்த புகழடைவாய்" {என்றான் குசன்}.(3)

இராமா, அந்தக் குசன், மஹீபதியான குசநாபனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, ஆகாயத்தில் நுழைந்து, சனாதனமான {தொன்மையான} பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(4) அவ்வாறே {குசன் சொன்னபடியே} சில காலத்திற்குப் பிறகு நுண்ணறிவுமிக்கக் குசநாபனுக்குக் காதி என்ற பெயரில் பரமதர்மிஷ்டர் ஒருவர் பிறந்தார்.(5) காகுத்ஸ்தா, பரமதார்மீகரான அந்த காதியே என் பிதா ஆவார் {தந்தையாவார்}. இரகுநந்தனா, அந்தக் குச வம்சத்தில் பிறந்ததால் நான் கௌசிகன் ஆனேன் {கௌசிகன் என்ற பெயரைப் பெற்றேன்}.(6)

இராகவா, நல்விரதங்களைக் கொண்டவளும், சத்தியவதி என்ற பெயரைக் கொண்டவளுமான என் தமக்கை ரிசீகருக்கு {திருமணம் செய்து} கொடுக்கப்பட்டாள்.(7) அவள் தன் பர்த்தாவை {கணவரைத்} தொடர்ந்து சரீரத்துடன் {உடலுடன்} சொர்க்கத்திற்குச் சென்றாள். அந்த பரமோதாரையே {பெருந்தயாளரான என் தமக்கை சத்தியவதியே} கௌசிகீ மஹாநதியாகப் பாய்கிறாள்[1].(8) உலகத்திற்கு நல்ல காரியம் செய்யும் விருப்பத்தில் திவ்யமாகவும், ரம்யமாகவும் பாயும் புண்யோதகையான {புண்ணிய ஆறான} என் தமக்கை ஹிமவந்தத்தை {இமயமலையை} உறைவிடமாகக் கொண்டாள்.(9)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஆறே தற்போது கோசி ஆறு என்று அழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. இந்த ஆறு திபெத்தில் தோன்றி, நேபாளம் வழியாகப் பாய்ந்து இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் கலக்கிறது. இது கங்கையின் மிகப்பெரிய துணையாறுகளில் ஒன்றாகும்.

Kosi river kaushiki river

இரகுநந்தனா, எனவே என் தமக்கையான கௌசிகியிடம் கொண்ட சினேகத்தில் உறுதியுடன் இமயத்தின் சாரல்களில் நான் சுகமாக வசித்து வருகிறேன்.(10) சத்தியத்திலும் தர்மத்திலும் உறுதியுடன் இருந்தவளும், பதிவிரதையும், மஹாபாகையும் {பெரும் நற்பேறு பெற்றவளும்}, புண்ணியவதியுமான அந்தச் சத்தியவதியே ஆறுகளில் சிறந்த கௌசிகீ ஆனாள்.(11) இராமா, என் நியமத்தால் அவளைவிட்டு சித்தாசிரமம் வந்தடைந்து[2], உன் தேஜஸ்ஸால் நான் சித்தியடைந்தேன்.(12) மஹாபாஹுவே ராமா, இதுவே என்னுடைய வம்ச, தேச உற்பத்தியாகும் {பிறப்பின் வரலாறாகும்}. நீ என்னிடம் கேட்டவற்றை நான் சொல்லிவிட்டேன்.(13)

[2] சித்தாசிரமத்தின் இருப்பிடத்தை அறிய இந்த சுலோகமும் பயன்படும். மேலே சொல்லப்படும் கோசி ஆறு கங்கைக்கு வடக்கில் இருப்பது. முன் சர்க்கங்களில் சொல்லப்பட்ட சோணை ஆறு கங்கைக்குத் தெற்கில் இருப்பது. தாடகை வனம் தாண்டி சித்தாசிரமம் சென்றதாகவும் முன் சர்க்கங்களில் குறிப்பிருக்கிறது.

காகுத்ஸ்தா, நான் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அர்த்தராத்திரியும் {பாதி இரவும்} கடந்துவிட்டது. நித்திரை செய்வாயாக. பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. இங்கே {உறங்காமல் விழித்திருப்பதால்} நமது வழியில் இடையூறு ஏற்படலாகாது.(14) இரகுநந்தனா, மரங்கள் அசையவில்லை, மிருக பக்ஷிகள் அனைத்தும் {விலங்குகளும், பறவைகளும்} அடங்கிவிட்டன. திசைகளில் இரவின் இருள் வியாபித்திருக்கிறது.(15) சந்திப்பொழுது மெல்லக் கடந்து, நக்ஷத்திர தாரை கணங்களுடனும், ஜோதிகளுடனும் கூடிய சொர்க்கத்தின் கூரையானது {வானம்}, பல கண்களைக் கொண்டதைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.(16) குளிர்ந்த கதிர்களைக் கொண்ட சசியும் {நிலவும்}, இருண்ட உலகில் தன் பிரபையால் உலகப் பிராணிகளின் {உயிரினங்களின்} மனங்களை மகிழ்வித்தபடியே உதிக்கிறான்.(17) இரவுலாவி பூதங்கள் {உயிரினங்கள்}, யக்ஷ ராக்ஷச சங்கங்கள், ரௌத்திரமான {பச்சை மாமிசம் உண்ணும்}பிஷிதாஷனங்கள் அனைத்தும்  ஆங்காங்கே திரிகின்றன" {என்றார் விசுவாமித்ரர்}.(18)

மஹாதேஜஸ்வியான அந்த மஹாமுனி {விசுவாமித்ரர்}, இவ்வாறு சொல்லி நிறுத்திக் கொண்டார். முனிவர்கள் அனைவரும், "இது நன்று, நல்லது" என்று சொல்லி அவரைப் பெரிதும் பூஜித்தனர்.(19) {மேலும் அவர்கள்}, "இந்தக் குசிக வம்சம், தர்மத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளது. இந்தக் குச வம்சத்தைச் சேர்ந்த நரோத்தமர்களும் {மனிதர்களில் சிறந்தவர்களும்}, மஹாத்மாக்களும் பிரம்மனுக்கு ஒப்பானவர்களாவர்.(20) அவர்களிலும் பெரும்புகழ்பெற்ற விஷ்வாமித்ரரெனும் நீரும் விசேஷமானவரே {பிரம்மனுக்கு ஒப்பானவரே. ஆறுகளில் சிறந்த கௌசிகியும் உமது குலத்திற்கு மகிமை சேர்ப்பவளே" {என்றனர் அம்முனிவர்கள்}.(21)

அந்த முனிஷார்தூலர்களால் இவ்வாறு புகழப்பட்ட ஸ்ரீமான் குசிகாத்மஜர் {குசிகனின் வழித்தோன்றலான விசுவாமித்ரர்} நிறைவடைந்து, அஸ்த மலைக்குள் ஓயச் செல்லும் அம்சுமானை {சூரியனைப்} போல நித்திரையடைந்தார்.(22) சௌமித்ரியுடன் {லக்ஷ்மணனுடன்} கூடிய ராமனும் {அந்த வரலாற்றைக் கேட்டு} சற்றே ஆச்சரியமடைந்து, அந்த முனிஷார்தூலரைப் புகழ்ந்து நித்திரையின் {நித்ராதேவியின்} மடியில் துயில் கொண்டான்.(23) 

பாலகாண்டம் சர்க்கம் – 34ல் உள்ள சுலோகங்கள் : 23

Previous | Sanskrit | English | Next

Saturday, 28 August 2021

பிரம்மதத்தன் | பால காண்டம் சர்க்கம் - 33 (26)

Brahmadatta | Bala-Kanda-Sarga-33 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: குசநாபன் தன் மகள்களைப் பிரம்மதத்தனுக்கு மணமுடித்துக் கொடுத்தது; பிரம்மதத்தனின் தீண்டலில் மீண்டும் சுய வடிவை அடைந்த கன்னிகைகள்...

Kushanabha Brahmadatta Cuuli Somada


{விசுவாமித்ரர் தொடர்ந்தார்}, "மதிநிறைந்தவனான குசநாபனின் அந்த வசனத்தைக் கேட்ட அந்த நூறு கன்னிகைகளும், {தங்கள் தந்தையின்} பாதத்தைத் தங்கள் நெற்றியால் தீண்டி {வணங்கி, பின்வருமாறு} பேசினார்கள்:(1) "ராஜாவே, சர்வாத்மகனான {அனைவரிலும் இருப்பவனான} வாயு, எங்களை அவமதிக்க விரும்பி அசுப மார்க்கத்தைப் பின்பற்றி தர்மத்தை மீறினான்.(2) "நாங்கள் பிதாவைச் சார்ந்தவர்கள். நீ பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. நாங்கள் சுதந்திரமானவர்களல்ல. பிதா எங்களை உனக்குக் கொடுப்பாரோ, மாட்டாரோ. நீ அவரிடம் வேண்டுவாயாக"(3) என்று நாங்கள் அனைவரும் {அவனிடம்} சொன்னோம். பாவத்தில் பந்தப்பட்டவனும் {கட்டுண்டவனும்}, {எங்கள்} வசனத்தைப் புரிந்து {ஏற்றுக்} கொள்ளாதவனுமான அந்த வாயுவால் அதிகத் துன்பத்திற்கு உள்ளானோம்"[1] என்றனர் {குசநாபகன்னிகள்}.(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாயுவால் அந்த சத கன்னிகளும் கூனிகளாக்கப்பட்டதால் அந்த நகரம் கன்யாகுப்ஜம் {கூன்விழுந்த கன்னிகள்} என்ற பெயரில் புகழ்பெற்றது. அதுவே இன்றைய கன்னோஜ் நகரம் என்று கிரிஃபித் சொல்கிறார்" என்றிருக்கிறது. 1:32:6ல் குசநாபன் மஹோதயபுரத்தை அமைத்தான் என்றிருக்கிறது. அங்கே உள்ள 1ம் அடிக்குறிப்பில் தேசிராஜு ஹனுமந்தராவ் குசாம்பன் அமைத்த கௌசாம்பி நகரை கன்னோஜ் என்று குறிப்பிடுகிறார். இங்கே குசநாபன் அமைத்த மஹோதயபுரத்தை கன்யாகுப்ஜம் என்றும், இன்றைய கன்னோஜ் என்றும் கிரிஃபித் சொல்வதாகச் சொல்கிறார். ஆனால், இன்றும் உத்திரப்ரதேசத்தில் கௌசாம்பி என்ற பெயரிலும், கன்னோஜ் என்ற பெயரிலும் தனித்தனி மாவட்டங்கள் இருக்கின்றன. கன்னியாகுப்ஜம்தான் கன்னோஜ் என்று விக்கிபீடியா சொல்கிறது. கௌசாம்பி லக்னௌக்குத் தெற்கிலும், பிரயாக்ராஜ் {அலாஹாபாத்துக்கு} மேற்கிலும் இருக்கிறது. கன்னோஜ் லக்னௌக்கு மேற்கில் இருக்கிறது.

பரமதார்மீகனும், மஹாதேஜ்வியுமான ராஜா {குசநாபன்}, அவர்களுடைய அந்த வசனத்தைக் கேட்டு உத்தமமான அந்த நூறு கன்னிகைகளிடம் இதைச் சொன்னான்:(5) "புத்திரீகளே, பொறுமைசாலிகளின் கடமை பொறுமையே {மன்னிப்பதே} ஆகும். அதுவே மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கிறது. நம் குலத்தை உணர்ந்து நீங்கள் ஐக்கியத்துடன் {ஒற்றுமையுடன்} இருந்திருக்கிறீர்கள்.(6) நாரீகளுக்கும் {பெண்களுக்கும்}, புருஷர்களுக்கும் {ஆண்களுக்கும்} பொறுமையே அலங்காரம். இங்கே இருக்கும் பொறுமையைப் பயில்வது எவருக்கும், குறிப்பாக திரிதசர்களுக்கும் {தேவர்களுக்கும்} அரிதானதாகும். நீங்கள் அனைவரும் வேறுபாடின்றி அவ்வகைப் பொறுமையைப் பின்பற்றியிருக்கிறீர்கள்[2].(7,8அ) புத்திரீகளே, பொறுமையே தானம், பொறுமையே சத்தியம், பொறுமையே யஜ்ஞம், பொறுமையே புகழ், பொறுமையே தர்மம், இந்தப் பொறுமையாலேயே இந்த ஜகம் நிலைத்திருக்கிறது" {என்றான் குசநாபன்}.(8ஆ,9அ)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அப்சரஸ் கிருதாசியின் பிள்ளைகள் என்பதால் தேவர்களைப் போன்ற குணங்களையும், இயல்புகளையும், தோற்றத்தையும் நீங்கள் கொண்டிருந்தாலும், மனிதர்களுக்கேயுரிய உடல்சார்ந்த இன்பங்களுக்குப் பணிந்துவிடாமல் வாயு தேவனை மன்னித்திருக்கிறீர்கள் என்று பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.

காகுத்ஸ்தா {ராமா}, திரிசர்களின் {தேவர்களின்} துணிவையும், மந்திரஞானத்தையும் {சிந்திக்கும் திறனையும்} கொண்ட அந்த ராஜா {குசநாபன்}, கன்னிகைகளை விட்டு அகன்று, அவர்களை {திருமணம் செய்து} கொடுப்பது குறித்தும், அதற்கான தேசம், காலம், பொருத்தம் {திருமணத்திற்கான இடம், நேரம், பொருத்தமான மணமகன்}, செய்ய வேண்டிய முன்மொழிவுகள் ஆகியவற்றையும் மந்திரிகளுடன் ஆலோசித்தான்.(9ஆ,10)

அந்தக் காலத்தில் தான் பெரும்பிரகாசம் கொண்டவரும், ஊர்த்தவரேதஸும் {உயிர்நீரை மேல்நோக்கி எழச் செய்தவரும்}, நன்னடத்தைக் கொண்டவரும் சூளி என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு ரிஷி, வேதங்களில் சொன்னபடி தவம் செய்வதில் வெற்றி அடைந்தார்[3].(11) அந்த ரிஷி தவம் செய்து கொண்டிருந்த இடத்தில் ஊர்மிளையின் மகளும், ஸோமதை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு கந்தர்வீ அவருக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தாள்.(12) அவள் அவரிடம் பணிவுடன் நடந்து கொண்டு தர்மிஷ்டையாக சுஷ்ரூஷையில் {தொண்டில்} தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வசித்திருந்தாள். பத்ரமாக இருப்பாயாக {மங்கலம் உண்டாகட்டும்}. சிறிது காலத்தில் அந்தக் குரு {சூளி} அவளிடம் {அவளது தொண்டில்} நிறைவடைந்தார்.(13) ரகுநந்தனா, அவர் காலயோகத்தில் {ஒரு சந்தர்ப்பத்தில்} அவளிடம் நல்ல முறையில், "நான் முற்றிலும் நிறைவடைந்தேன். பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. நீ விரும்பும் எந்தக் காரியத்தை நான் செய்ய வேண்டும்?" {என்று கேட்டார்}.(14)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஹட யோகம் என்றழைக்கப்படும் தூய யோக முறையைப் பயிலும் யோகிகள், தங்கள் உயிர் நீரை வெளியேற்றாமல் இருக்கும் நிலையை ஊர்த்தவரேதஸ் என்று சொல்வார்கள். அவர்கள் உடலின் ஆறு நாளங்களின் வழியாக அந்த உயிர்நீரைத் தங்கள் தலைக்குக் கொண்டு செல்வார்கள். இவ்வகைப் பயிற்சி அவர்களின் மனத்தையும், உடலையும் பளபளக்கச் செய்து வளப்படுத்தி அவர்களைச் சுற்றிலும் ஒரு தெய்வீக ஒளிவட்டத்தை ஏற்படுத்தும்" என்றிருக்கிறது.

முனிவர் நிறைவடைந்ததை உணர்ந்தவளும், வாக்கியம் அமைப்பதை அறிந்தவளுமான கந்தர்வீ {ஸோமதை}, பரமபிரீதியுடன் {பெரும் மகிழ்ச்சியுடன்}, மதுரஸ்வரத்தில் {இனிய குரலில்} வாக்கியத்தை அமைத்துப் பேசினாள்:(15) "மஹாதவசியே, நீர் பிரம்மபூதராகும் போது {பிரம்மத்துடன் ஒன்றாகும்போது}, பிரம்ம ஒளி உம்மில் எழுகிறது. பிரம்ம தவத்துடன் கூடியவனும், தார்மீகனுமான ஒரு புத்திரனை நான் விரும்புகிறேன்.(16) நான் பதியற்றவளாக இருக்கிறேன். பத்ரமாக {மங்கலமாக} இருப்பீராக. நான் எவருடைய பாரியையும் {மனைவியும்} அல்லள் {திருமணமாகாதவள்}. உம்மை அண்டியிருக்கும் எனக்கு உமது பிரம்ம சக்தியின் மூலம் ஒரு சுதனை {மகனைக்} கொடுப்பதே உமக்குத் தகும்" {என்றாள் சோமதை}.(17)

அவளிடம் அன்பு கொண்ட அந்த பிரம்மரிஷி சூளி, பிரம்மனைப் போன்றவனும், பிரம்மதத்தன் என்று புகழ்பெற்றவனும், உத்தமனுமான ஒரு மானஸ சுதனை அவளுக்குக் கொடுத்தார்.(18) பிரம்மதத்தனான அந்த ராஜா, தேவலோகத்தில் தேவராஜனைப் போலக் காம்பில்யாபுரியில் இருந்து மகத்தான ஆட்சி செய்துவந்தான்.(19) 

காகுத்ஸ்தா {காகுத்ஸ்த குலத்தைச் சேர்ந்த ராமா}, தார்மீக ராஜாவான குசநாபன், அந்தச் சதகன்னியரையும் பிரம்மதத்தனுக்கு தத்தம் செய்ய புத்தியில் தீர்மானித்தான்.(20) மஹாதேஜஸ்வியும், மஹீபதியுமான அந்த ராஜா {குசநாபன்}, அந்தப் பிரம்மதத்தனை அழைத்து, அந்தராத்மாவில் பெரிதும் மகிழ்ந்து நூறு கன்னியரையும் {அவனுக்குத் திருமணம் செய்து} கொடுத்தான்.(21) ரகுநந்தனா, தேவபதியைப் போன்ற மஹீபாலன் பிரம்மதத்தன் அடுத்தடுத்து ஒவ்வொருவராக அவர்களின் உள்ளங்கைகளைப் பற்றினான்.(22) அப்போது அவனது உள்ளங்கை ஸ்பரிசத்தின் விளைவாக அந்த நூறு கன்னிகைகளின் கூன் நிமிர்ந்ததுடன் ஒளிமிக்கவர்களாகவும் பிரகாசித்தனர்.(23) மஹீபதியான குசநாபன், {தன் மகள்கள்} வாயுவில் இருந்து விடுபட்டதைக் கண்டு பரமபிரீதியடைந்து மீண்டும் மீண்டும் அவர்களைப் பார்த்து இன்புற்றான்.(24) அந்த மஹீபதி {குசநாபன்}, திருமணம் முடிந்ததும் மன்னன் பிரம்மதத்தனையும், அவனது தாரங்களையும் {மனைவிகளையும்}, உபாத்யாயகணங்களையும் {ஆசிரியர் கூட்டத்தினரையும் காம்பில்யத்திற்கு} அனுப்பிவைத்தான்.(25) கந்தர்வி ஸோமதை, தன் மகனைக் கண்டு, அந்தக் கன்னிகையரை மீண்டும் மீண்டும் தடவிக் கொடுத்து, குசநாபனைப் புகழ்ந்து, புத்திரனின் நற்செயலையும் புகழ்ந்து, அவர்களிடம் {மருமகள்களிடம்} மகிழ்ச்சியடைந்தாள் {அவர்களை ஆசீர்வதித்தாள்" என்றார் விசுவாமித்ரர்}.(26) 

பாலகாண்டம் சர்க்கம் – 33ல் உள்ள சுலோகங்கள் : 26

Previous | Sanskrit | English | Next

Thursday, 26 August 2021

குசநாபன் கன்னிகைகள் | பால காண்டம் சர்க்கம் - 32 (26)

Kushanabha's daughters | Bala-Kanda-Sarga-32 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: குசனின் நான்கு மகன்கள்; அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நகரங்கள்; வாயுவை மறுத்த குசநாபனின் மகள்கள்...

Kushanabha's Hundred Daughters


{விசுவாமித்ரர் சொல்லத் தொடங்கினார்}, "பிரம்மயோனியும் {பிரம்மனின் மனத்தில் தோன்றிய மகனும்}, மஹாதபஸ்வியும், தடைபடாத விரதங்களைக் கொண்டவனும், தர்மம் அறிந்தவனும், தர்மம் அறிந்தவர்களுக்குப் பிரதிபூஜை செய்பவனும், குசன் என்ற பெயர் கொண்டவனுமான மஹான் ஒருவன் இருந்தான்.(1) அந்த மஹாத்மா {குசன்}, உன்னதப் பிறவியைக் கொண்டவளும், தகுந்தவளுமான {தகுந்த மனைவியுமான} வைதர்ப்பியிடம் {விதர்ப்ப இளவரசியிடம்}, மஹாபலம் பொருந்தியவர்களும், தன்னையே போன்றவர்களுமான குசாம்பன், குசநாபன், ஆதூர்த்தரஜஸ், வஸு என்ற நான்கு சுதன்களை {மகன்களை} பெற்றான்.(2,3அ) அந்தக் குசன், யுக்திமிகுந்தவர்களும், மஹா உற்சாகம் கொண்டவர்களும், தர்மிஷ்டர்களும் {அறத்தைப் பின்பற்றுபவர்களும்}, சத்தியவாதிகளுமான தன் புத்திரர்கள் க்ஷத்திரிய தர்மங்களை நிலைநிறுத்த வேண்டுமென விரும்பி, அவர்களிடம், "புத்திரர்களே, பாலனஞ்செய்வீராக {ஆட்சியை நிறுவுவீராக}. {அவ்வாறு செய்து} தர்மத்தை அதிகம் ஈட்டுவீராக" என்றான்.(3ஆ,4)

குசனின் வசனத்தைக் கேட்டவர்களும், லோகஸத்தமர்களும் {உலகில் வல்லவர்களும்}, நிருவரர்களுமான {மனிதர்களில் சிறந்தவர்களுமான} அந்த நால்வரில் அனைவரும் நகரங்களைக் கட்டத் தொடங்கினர்.(5) மஹாதேஜஸ்வியான குசாம்பன், கௌசாம்பிபுரியை அமைத்தான். தர்மாத்மாவான குசநாபன், மஹோதயபுரத்தை அமைத்தான்.(6) இராமா, மஹாமதியாளனான ஆதூர்த்தரஜஸ், தர்மாரண்யபுரம் என்ற சிறந்த நகரத்தையும், ராஜா வஸு, கிரிவ்ரஜத்தையும்[1] அமைத்தனர்.(7) சுற்றிலும் இந்த ஐந்து சிறந்த மலைகளுடன் பிரகாசிப்பதும், வசுமதி என்ற பெயரைக் கொண்டதுமான இவ்விடம் மஹாத்மா வஸுவினுடையதாகும்.(8) இரம்யமானதும், நன்கறியப்பட்டதும், மாகதத்திற்குள் {மகதநாட்டிற்குள்} வந்து செல்வதுமான இந்த மாகதீ நதி {சோணை ஆறு}[2] முக்கியமான இந்த ஐந்து மலைகளுக்கிடையே பாய்ந்து மாலையைப் போல ஒளிர்கிறது.(9) இராமா, மஹாத்மாவான வஸுவினுடையதும், கிழக்கு நோக்கிப் பாய்வதுமான இந்த மாகதீ {சோணை ஆறு} பயிர்களை மாலையாகக் கொண்ட சிறந்த கழனிகளைக் கொண்டதாகும்.(10)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கௌசாம்பி தற்போதைய {உத்திரப்ரதேசத்திலுள்ள} கன்னோஜ் நகரமென்றும், கிரிவ்ரஜம் தற்போதைய {பீகாரிலுள்ள} ராஜகிரகம் என்றும் நம்பப்படுகிறது" என்றிருக்கிறது. அடுத்த சர்க்கத்தின் அடிக்குறிப்பில் குசநாபனின் மஹோதயபுரமே கன்னோஜ் என்று கிரிஃபித் சொல்வதாக தேசிராஜு ஹனுமந்தராவ் குறிப்பிடுகிறார்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஆறு தற்காலத்தைய சோன் ஆறு என்று சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. இது கங்கையாற்றின் தென் துணையாறுகளில் மிகப் பெரியதாகும். மத்தியப்ரதேசத்தில் உற்பத்தியாகி உத்திரப்ரதேசம், ஜார்க்கண்ட், பீகார் வழியாகப் பாட்னா நகரத்தின் அருகில் கங்கையில் கலக்கிறது. தற்காலத்தில் ஒரு மனிதனால் ஒரு நாளில் 50 கி.மீ. தொலைவைக் கடக்க முடியும். எனில் சித்தாசிரமம் இந்த ஆற்றில் இருந்து 50 கி.மீ. சுற்றுவட்டத்தில் எங்காவது அமைந்திருக்க வேண்டும்.

இரகுநந்தனா, தர்மாத்மாவும், ராஜரிஷியுமான குசநாபன் கிருதாசியின் மூலம் ஒப்பற்றவர்களாகத் திகழும் நூறு கன்னிகைகளைப் பெற்றான்.(11) இராகவா, யௌவனசாலினிகளும் {இளைமையுடையவர்களும்}, ரூபவதிகளுமான {அழகி வடிவங்கொண்டவர்களுமான} அவர்கள், தங்களைச் சிறந்த ஆரணங்களால் நன்கலங்கரித்துக் கொண்டு மழைக்காலத்தில் நூறு கீற்றுகளுடன் கூடிய மின்னலைப் போல உத்யானபூமிக்கு {பூங்கா / தோட்டத்திற்கு} வந்து, பாடியும், ஆடியும், வாத்தியங்களை இசைத்தும் இன்பத்தில் மூழ்கினர்.(12,13) அங்கங்கள் அனைத்திலும் அழகுடன் மிளிர்பவர்களும், புவியில் ஒப்பற்ற ரூபங்கொண்டவர்களுமான அவர்கள், உத்யானபூமிக்கு வந்து மேகங்களின் மத்தியிலுள்ள தாரைகளை {நட்சத்திரங்களைப்} போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(14) சர்வாத்மகனான {எங்கும் பரவுபவனான} வாயு, சர்வ குணங்களிலும் சிறந்தவர்களும், யௌவன ரூப அழகுடையவர்களுமான அவர்களைக் கண்டு இந்த வசனத்தைச் சொன்னான்:(15) "நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன். நீங்கள் என் பாரியைகளாவீராக. {அதனால் நீங்கள்} மனுஷத் தன்மையைக் கைவிட்டு, {தேவர்களைப் போன்ற} தீர்க்காயுளை அடைவீர்கள்.(16) நித்ய யௌவனம் மானிடர்க்கு வாய்க்ககாது. {எனவே, என்னை மணந்து} அழிவற்ற யௌவனத்தைப் பெற்று அமரர்களைப் போல விளங்குவீராக" {என்றான் வாயு தேவன்}.(17)

தடையற்ற செயல்களைச் செய்யும் வாயுவின் இந்த வசனத்தைக் கேட்டுச் சிரித்த அந்த நூறு கன்னிகைகளும், இந்த வாக்கியத்தைச் சொன்னார்கள்:(18) "ஸுரஸத்தமா {தேவர்களில் சிறந்தவா}, சர்வபூதங்களின் {அனைத்து உயிரினங்களின்} உள்ளே நகரும் உன் பிரபாவத்தை {வலிமையை} நாங்கள் அனைவரும் அறிவோம். எங்களை ஏன் நீ அவமதிக்கிறாய்?(19) ஸுரஸத்தமா, குசநாபரின் மகள்களான நாங்கள் அனைவரும் தேவஸ்தானத்தில் இருந்து உன்னை விலக்க வல்லவர்களாவோம். தேவா, இருப்பினும் நாங்கள் {எங்கள்} தவத்தைக் காத்துக் கொள்கிறோம்.(20) துர்மேதையே, ஸ்வதர்மத்துடன் கூடிய எங்களுக்கு, சத்தியவாதியான எங்கள் பிதாவை அவமதித்து ஸ்வயம்வரத்தில் {கணவரைத்} தேர்ந்தெடுக்கும் காலம் நேராது[3].(21) எங்களுக்குப் பிதாவே பிரபு. அவரே எங்கள் பரம தைவதை {பரமதெய்வம்}. எங்கள் பிதா எவருக்குக் கொடுக்கிறாரோ அவரே எங்கள் பர்த்தா {கணவர்} ஆவார்" {என்றர்}.(22)

[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "இதை எங்கள் தகப்பனாராகிய குசநாபர் அறிவாராயின், உனக்கு அவர் மிருத்யுவாகக் கூடுமே. அவர் அப்படியாகாதிருக்க வேண்டும். ஆகையால் ஸத்யத்தையே பேசுந்தன்மையுள்ள அம்மஹானுபவரை அவமதிக்க வேண்டாம். உலகத்தில் பெண்களைத் தகப்பன் உத்தேசித்துக் கொடுப்பதன்றோ தர்மம். அப்படியே தகப்பனாகிய குசநாபர் எங்களை எவனுக்குக் கொடுப்பாரோ, அப்படிப்பட்ட வரனையே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றம். (ஸத்யவாதியாகிய தகப்பனை அவமதித்து எங்களிஷ்டப்படி பர்த்தாவைத் தேடிக் கைக்கொள்ளுங்காலம் உண்டாக வேண்டாம்)" என்றிருக்கிறது.

அவர்களின் வசனத்தைக் கேட்டவனும், பகவானும், பிரபுவுமான அந்த ஹரி {வாயு}, பரமகோபத்துடன் {அவர்களின்} உடலெங்கும் பிரவேசித்து {அவர்களின் உறுப்புகளை முறித்து} முடக்கினான் {கூனிகளாக்கினான்}.(23) வாயுவால் சிதைக்கப்பட்ட அந்தக் கன்னிகைகள் நிருபதியின் கிருஹத்தில் {மன்னனின் இல்லத்தில்} கலக்கத்துடனும், லஜ்ஜையுடனும் {வெட்கத்துடனும்}, கண்ணீருடனும் பிரவேசித்தனர்.(24) அந்த ராஜா, தன் அன்புக்குரியவர்களும், தீனர்களும், பேரழகிகளுமான அந்தக் கன்னிகைகள் முடமானதைக் கண்டு பெருங்குழப்பமடைந்து இதைச் சொன்னான்:(25) "புத்ரிகளே, இஃது என்ன? தர்மத்தை அவமதித்தவன் எவன்? இதைச் சொல்வீராக. உங்கள் அனைவரையும் குப்ஜைகளாக்கியவன் {கூனிகளாக்கியவன்} எவன்? சைகைகள் செய்கிறீர்களேயன்றி பேசாதிருக்கிறீர்கள்" என்று சொன்ன ராஜன் {குசநாபன்} பெருமூச்சுவிட்டபடியே அவர்களின் மறுமொழியை எதிர்பார்த்து அமைதியடைந்தான்.(26) 

பாலகாண்டம் சர்க்கம் – 32ல் உள்ள சுலோகங்கள் : 26

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை