Atikaya killed | Yuddha-Kanda-Sarga-071 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அதிகாயனின் தோற்றம் கண்டு பயந்த வானரர்கள்; ராமனை நோக்கிச் சென்று தற்புகழ்ச்சி செய்த அதிகாயன்; பயங்கர யுத்தம் செய்து அதிகாயனைக் கொன்ற லக்ஷ்மணன்...
உரோமஹர்ஷணம் கொள்ளும் {மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும்} வகையில் தன் பலம் {படை} கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டும், சக்ரனுக்கு {இந்திரனுக்குத்} துல்லியமான பராக்கிரமத்தைக் கொண்ட தன் பிராதாக்கள் {தன்னுடன் பிறந்தோர்} கொல்லப்படுவதைக் கண்டும்,{1} தன் பித்ருவ்யர்களும் {சிற்றப்பன்மாரும்}, ராக்ஷசரிஷப பிராதாக்களுமான {ராக்ஷசர்களில் உடன்பிறந்த காளைகளுமான} யுத்தோன்மத்தனும், மத்தனும் {மஹோதரனும், மஹாபார்ஷ்வனும்} போரில் வீழ்ந்ததைக் கண்டும்,{2} மஹாதேஜஸ்வியும், பிரம்மனால் வரங்கள் தத்தம் செய்யப்பட்டவனும், அத்ரிக்கு {மலைக்கு} ஒப்பானவனும், போரில் தேவதானவர்களின் செருக்கை அழிப்பவனுமான அதிகாயன் கோபமடைந்தான்.(1-3) சக்ராரியான அவன் {இந்திரனின் பகைவனான அதிகாயன்}, ஆயிரம் பாஸ்கரர்களின் {சூரியர்களின்} சங்கமத்தைப் போல் ஒளிரும் ஒரு ரதத்தில் ஏறி, வானரர்களை நோக்கி விரைந்தான்.(4) கிரீடியும் {கிரீடம் தரித்தவனும்}, தூய குண்டலங்களை அணிந்தவனுமான அவன் {அதிகாயன்}, சாபத்தை {வில்லை} வளைத்து, தன் நாமத்தை {பெயரை} உரக்க அறிவித்தபடியே மஹாஸ்வனத்துடன் நாதம் செய்தான்.(5) அவன், அந்த சிம்மநாதத்தாலும், உரக்க அறிவிக்கும் தன் பெயராலும், பயங்கரமான நாணொலியாலும் பயத்தை விளைவித்தபடியே வானரர்களை அச்சுறுத்தினான்.(6)


