Showing posts with label கௌசல்யை. Show all posts
Showing posts with label கௌசல்யை. Show all posts

Thursday, 19 January 2023

அன்னையர் வருகை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 104 (32)

The arrival of the mothers | Ayodhya-Kanda-Sarga-104 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கௌசல்யை அடைந்த வேதனை; ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர் ராஜமாதாக்களையும், வசிஷ்டரையும் வணங்கியது...

Vasishta guiding royal mothers on path

வசிஷ்டர், தசரதனின் மனைவியரைப் பாதுகாப்பாக முன்னிட்டுக் கொண்டு, ராமனை தரிசிக்கும் ஆவலுடன் அவ்விடத்தை நாடி நடந்தார்.(1) அந்த ராஜபத்தினிகள் மந்தாகினியை {மால்யவதி நதியை} நோக்கி மெதுவாக நடந்து சென்று, ராம லக்ஷ்மணர்கள் சேவித்தத் தீர்த்தத்தைக் கண்டனர்.(2) 

கௌசல்யை, மெலிந்த முகத்தில் நிறைந்திருக்கும் கண்ணீருடன், சுமித்திரையிடமும், {அங்கிருந்த} பிற ராஜமகளிரிடமும் பரிதாபகரமாக {பின்வருமாறு} பேசினாள்:(3) "களைப்பின்றி செயல்புரிபவர்களான யாவர், அநாதைகளாக நாடு கடத்தப்பட்டனரோ அவர்கள் வனத்தின் கிழக்கு மூலையில் உள்ள இந்தத் தீர்த்தத்தை {இந்தப் புனிதத்தலத்தைத்} தான் பயன்படுத்துகிறார்கள்.(4) சுமித்ரே, உன் புத்திரனான சௌமித்ரி {லக்ஷ்மணன்}, இங்கிருந்துதான் என் புத்திரனின் {ராமனின்} காரணத்திற்காக எப்போதும் சோம்பலின்றி ஜலத்தைக் கொண்டு செல்கிறான்.(5) தாழ்ந்த இச்செயலைச் செய்தாலும், தன்னுடன் பிறந்தானுக்குப் பயன்படும் குணங்கள் நிறைந்த அனைத்தையும் செய்வதால் உன் புத்திரன் ஒருபோதும் பழிக்கப்படமாட்டான்.(6) துன்பத்திற்குப் பழகாதவனும், அதற்குத் தகாதவனுமான உன் புத்திரன், இழிவானதும், கஷ்டத்தைத் தரும் செய்தியுமான இக்கடுஞ்செயலில் இருந்து இனியாவது விடுபடட்டும்" என்றாள்.(7)

அப்போது அந்த நீள்விழியாள் {கௌசல்யை}, தரையில், தெற்கு நோக்கிய நுனிகளுடன் பரப்பப்பட்டிருந்த தர்ப்பையில், பிதாவுக்காக வைக்கப்பட்ட இங்குணப் பிண்ணாக்கை {பிண்டத்தைக்} கண்டாள்.(8) கௌசல்யா தேவி, துயருற்ற ராமனால் பிதாவுக்காக பூமியில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, தசரதன் ஸ்திரீகள் அனைவரிடமும் {பின்வருமாறு} சொன்னாள்:(9) "இராகவன் {ராமன்}, இக்ஷ்வாகுநாதரும், மஹாத்மாவும், ராகவருமான தன் பிதாவுக்காக விதிப்படி எதை தத்தம் செய்திருக்கிறான் பாரீர்.(10) தேவர்களுக்குச் சமமாக போகத்தின் மத்தியில் வாழ்ந்தவரும், மஹாத்மாவுமான அந்தப் பார்த்திபருக்கு {தசரத மன்னருக்குத்} தகுந்த போஜனமாக இதை நான் கருதவில்லை.(11) நான்கு எல்லைகளைக் கொண்ட பூமியை அனுபவித்தவரும், மஹேந்திரனுக்கு ஒப்பான வலிமைமிக்கவருமான அந்த வசுதாதிபர் {பூமியின் தலைவரான தசரதர்} இங்குணப் பிண்ணாக்கை எவ்வாறு புசிப்பார்?(12) செல்வந்தனான ராமன், தன் பிதாவுக்கு இங்குணப் பிண்ணாக்கை தத்தம் செய்திருப்பதைக் காட்டிலும் உலகத்தில் வேதனைமிக்கது வேறு எதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.(13) இராமன் தன் பிதாவுக்கு இங்குணப் பிண்ணாக்கை தத்தம் செய்திருப்பதைக் கண்டும், துக்கத்தால் ஏன் இன்னும் ஆயிரந்துண்டுகளாக என் ஹிருதயம் பிளவாமல் இருக்கிறது?(14) ஒரு மனிதன் உண்பதே அவனது தேவதைகளுக்கும் உணவாகிறது என்ற லௌகிக ஸ்ருதி {உலகத்தாரின் சொல் வழக்கு} உண்மை என்றே எனக்குத் தோன்றுகிறது" {என்றாள் கௌசல்யை}.(15)

சகபத்தினிமார், இவ்வாறு துன்பத்தால் பீடிக்கப்பட்டவளை {கௌசலையைத்} தேற்றிக் கொண்டே சென்று, ஸ்வர்க்கத்தில் இருந்து நழுவிய அமரனைப் போலிருந்த ராமனை ஆசிரமத்தில் கண்டனர்.(16) போகங்கள் அனைத்தையும் இழந்தவனாக ராமனைக் கண்ட அந்த மாதாக்கள், சோகத்தால் பீடிக்கப்பட்டுக் கண்ணீர் சிந்தி துக்கத்துடன் உரக்க அழுதனர்.(17) மனுஜவியாகரனும், சத்தியசங்கரனுமான {மனிதர்களில் புலியும், அனைவருக்கும் உண்மையுள்ளவனுமான} ராமன் எழுந்து தன் மாதாக்களான அவர்கள் அனைவரின் சுபச் சரணங்களை {அருள் பாதங்களைப்} பற்றிக் கொண்டான்.(18) அந்த நீள்விழியினர் {ராமனின் அன்னையர்}, சுக ஸ்பரிசத்தைத் தரும் மிருதுவான தங்கள் விரல்களாலும், உள்ளங்கைகளாலும், அழகிய கைகளாலும் ராமனின் முதுகில் உள்ள தூசியைத் துடைத்துவிட்டனர்.(19) சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்}, தன் மாதாக்கள் அனைவரையும் கண்டு துக்கமடைந்தவனாக, அர்ப்பணிப்புடன் ராமனுக்குப் பிறகு மெதுவாகத் தன் வணக்கத்தைச் செலுத்தினான்.(20) அந்த ஸ்திரீகள் அனைவரும், தசரதனுக்குப் பிறந்தவனும், சுபலக்ஷணங் கொண்டவனுமான லக்ஷ்மணனிடமும் ராமனிடம் போலவே நடந்து கொண்டனர்.(21) 

துக்கத்தால் பீடிக்கப்பட்ட சீதையும், தங்கள் மாமிமாரின் சரணங்களைப் பற்றி, அவர்களின் முன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் நின்றாள்.(22) கௌசல்யை, துக்கத்தால் பீடிக்கப்பட்டும், வனவாசத்தால் மெலிந்தும், பரிதாபகரமாக நிற்கும் அவளை {சீதையை}, மகளை அணைக்கும் தாய்ப் போலத் தழுவிக் கொண்டு {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னாள்:(23) "விதேஹ ராஜரின் {ஜனகரின்} மகளும், தசரதரின் மருமகளுமான ராமனின் பத்தினி {சீதை}, ஜனங்களற்ற இந்த வனத்தில் எப்படித் துன்புறலாம்?(24) வெப்பத்தில் வதங்கிய பத்மத்தைப் போலும், வாடிய நீலோற்பலத்தைப் போலவும், தூசி படிந்த காஞ்சனத்தைப் போலவும், மேகங்களில் மறைந்த சந்திரனைப் போலவும் உன் முகத்தைக் காணும்போது, வைதேஹி, விசனமெனும் அரணியால் மனத்துக்குள் உண்டாகும் சோகாக்னி என்னைக் கடுமையாக எரிக்கிறது" {என்றாள் கௌசல்யை}.(25,26)

பரதாக்ரஜனான ராகவன் {பரதனின் அண்ணனான ராமன்}, தன்னைப் பெற்றவள் இவ்வாறு துன்புற்றுப் பேசிக் கொண்டிருக்கையில், வசிஷ்டரிடம் சென்று அவரது பாதங்களைப் பற்றிக் கொண்டான்.(27) உண்மையில் அக்னிக்கு ஒப்பானவரும், மஹாதேஜஸ்வியுமான தன் புரோஹிதரின் பாதங்களைப் பற்றிய ராகவன் {ராமன்}, அமராதிபதியான இந்திரன் பிருஹஸ்பதியுடன் {அமர்வதைப்} போல, அவரது அருகில் அமர்ந்தான்.(28) 

அவர்கள் அமர்ந்த பிறகு, மந்திரிமார், நகரத்தலைவர்கள், சைனிகர்கள் ஆகியோருடனும், தர்மத்தை அறிந்த ஜனங்கள் சகிதனாக தர்மவானான பரதனும் தன் அண்ணனின் {ராமனின்} அருகில் அமர்ந்தான்.(29) வீரியவானான பரதன், கம்பீரத்துடன் ஜொலிக்கும் ராகவனை {ராமனை} தபஸ்வியின் வேஷத்தில் கண்டு, தன் கைகளைக் கூப்பி வணங்கி, பிரஜாபதியின் முன் மஹேந்திரனைப் போல அவனது முன்னிலையில் அமர்ந்தான்.(30) "இராகவனை {ராமனைப்} பணிந்து வணங்கிய இந்த பரதன், இப்போது என்னென்ன நல்ல வாக்கியங்களைச் சொல்லப் போகிறான்" என்ற உத்தமப் பேராவல் அந்த ஆரிய ஜனங்களின் மனங்களில் எழுந்தது.(31) சத்தியத்தில் திடமான ராகவனும் {ராமனும்}, மஹானுபாவனான லக்ஷ்மணனும், தார்மிகனான பரதனும், யாக சபையோரால் விளங்கும் மூன்று அக்னிகளை {கார்ஹபத்ய, ஆஹவனீய, தக்ஷிணமெனும் மூன்று வேள்வி நெருப்புகளைப்} போல நல்லிதயத்தார் {நண்பர்கள்} சூழ ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(32)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 104ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next

Wednesday, 9 November 2022

சித்திரகூடத்திற்குப் புறப்பட்ட பரதன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 092 (39)

Bharata set out to Chitrakuta | Ayodhya-Kanda-Sarga-092 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரத்வாஜரிடம் விடைபெற்றுக் கொண்ட பரதன்; சித்திரகூடத்திற்குப் புறப்பட்டது...

Bharata's army and the way they went

நல்ல விருந்தோம்பலுடன் கவனித்துக் கொள்ளப்பட்ட பரதன், தன் பரிவாரங்களுடன் அந்த இரவைக் கழித்துவிட்டு, தன்னிச்சையாக பரத்வாஜரிடம் சென்றான்.(1) ஹுதாக்னி ஹோத்ரம் செய்து முடித்த பரத்வாஜ ரிஷி, புருஷவியாகரனான {மனிதர்களில் புலியான} பரதன் தன் கைகளைக் கூப்பிக் கொண்டு வருவதைக் கண்டு {பின்வருமாறு} பேசினார்:(2) "அநகா {பாபமற்றவனே}, இங்கே ராத்திரியை நீ சுகமாகக் கழித்தாயா? உன் ஜனங்கள் என் ஆதித்யத்தில் {விருந்தோம்பலில்} முழுமையான திருப்தியடைந்தனரா? எனக்குச் சொல்வாயாக" {என்று கேட்டார்}.(3)

கைக்கூப்பி வணங்கிக் கொண்டிருந்த பரதன், தன் ஆசிரமத்தில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த அந்த ரிஷியிடம் {பரத்வாஜரிடம், பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(4) "பகவானே, நானும், என் அமாத்தியர்களும் {அமைச்சர்களும்}, மொத்த படையும், வாகனவிலங்குகளும் உம்மால் எல்லா ஆசைகளிலும் பெருந்திருப்தியடைந்து சுகமாக இருக்கிறோம்.(5) சேவகர்களுடன் கூடிய நாங்கள் அனைவரும், நல்ல பக்ஷணங்களும் {உணவும்}, இருப்பிடமும் கிடைக்கப்பெற்று, சோர்வில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் விடுபட்டு சுகமாக வசித்திருந்தோம்.(6) பகவானே, ரிஷிசத்தமரே {சிறந்த முனிவரே}, நான் உம்மிடம் விடைபெற்றுக் கொள்கிறேன். என்னுடன் பிறந்தவரின் {ராமரின்} சமீபத்திற் செல்லும் என்னை நட்பு பொருந்திய கண்களால் பார்ப்பீராக.(7) தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, தார்மீகரான அந்த மஹாத்மாவின் ஆசிரமத்திற்கு எந்த மார்க்கத்தில் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? எனக்குச் சொல்வீராக" {என்று கேட்டான் பரதன்}.(8)

தன்னுடன் பிறந்தவனைக் காணும் ஆவலில் இவ்வாறு கேட்ட பரதனுக்கு, மஹாதேஜஸ்வியும், மஹாதபஸ்வியுமான பரத்வாஜர் {இவ்வாறு} பதிலளித்தார்:(9) "பரதா, மூன்றரை யோஜனைகளுக்கப்பால்[1] ஜனங்களற்ற வனத்தில் ரம்மியமான குகைகளுடனுங் கானகங்களுங் கூடிய சித்திரகூட கிரி உள்ளது.(10) புஷ்பங்களில் முழுமையாக மறைந்திருக்கும் மரங்களுடனும், ரம்மியமாகப் புஷ்பித்திருக்கும் கானகங்களுடனுங் கூடிய அதன் உத்தர சாரலில் {அந்த மலையின் வடக்குப் பக்கத்தில்} மந்தாகினி நதி {மால்யவதி ஆறு}[2] இருக்கிறது.(11) ஐயா, அந்த ஆற்றுக்கு அப்பால் சித்திரகூட பர்வதம் இருக்கிறது. அங்கே அவ்விருவரும் தங்கள் பர்ணக்குடிலில் {ஓலைக்குடிசையில்} வசித்திருப்பார்கள். இது நிச்சயம்.(12) மஹாபாக்கியசாலியே, வாஹினிபதியே {படையின் தலைவனே}, கஜவாஜிரதங்கள் நிறைந்த வாஹினியை தக்ஷிணமார்க்கத்திலோ, {யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த படையைத் தென்புற வழியிலோ, இங்கிருந்து} இடது புறமாகச் சென்ற பின்னர் தக்ஷிணம் {தெற்கு} நோக்கியோ நடத்திச் சென்றால்[3] ராகவனை {ராமனைக்} காணலாம்" {என்றார் பரத்வாஜர்}.(13,14அ)

[1] ஒரு யோஜனை என்பது எட்டு மைல் தொலைவு எனக் கொண்டால். மூன்றரை யோஜனைகள் இருபத்தெட்டு மைல்களாகும்.

[2] அயோத்தியா காண்டம் 56ம் சர்க்கத்தில் சித்திரகூடத்தில் பாயும் இந்நதி மால்யவதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 

 
[3] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "தெற்கு வழியே சென்று தென்மேற்கு நோக்கி நடத்து" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "இவ்விடத்திற்குத் தென்புறமாகப் போகும் மார்க்கத்தில் கொஞ்சதூரம் கொண்டு போய் அதற்குப் பின் தென்மேற்காகச் செல்லும் ஓர் கிளைவழியைப் பற்றி நடப்பாயாக" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நம்முடைய ஆஸ்ரமத்திற்குத் தென்புறத்தில் ஒரு கொடிவழி செல்லுகின்றதே? இந்த வழியிலே சிறிது தூரம் சேனைகளுடன் செல்வாயாகில், நடுவில் தென்மேற்காகக் கிளைவழி பிரிகின்றது; அவ்வழியைச் சார்ந்து செல்வாயாகில்" என்றிருக்கிறது.

யானங்களில் செல்லத்தகுந்தவர்களான ராஜராஜனின் யோசிதைகள் {தசரதனின் மனைவியர்}, இவ்வாறு அந்தப் பிரயாணத்தைக் குறித்துக் கேள்விப்பட்டதும் தங்கள் யானங்களை விட்டு இறங்கி, அந்த பிராமணரை {பரத்வாஜரைச்} சூழ்ந்து நின்றனர்.(14ஆ,இ) தீனமாக {பரிதாபமாக} மெலிந்து, நடுங்கிக் கொண்டிருந்த கௌசல்யை, சுமித்ராதேவியுடன் சேர்ந்து, தன் கைகளால் அந்த முனிவரின் சரணங்களை {பாதங்களைப்} பற்றினாள்.(15) ஆசை நிறைவேறாதவளும், சர்வலோகத்தாலும் வெறுக்கப்பட்டவளுமான கைகேயி, நாணத்துடன் வந்து அவரது சரணங்களைப் பற்றினாள்.(16) பிறகு பகவானான அந்த மஹாமுனியை பிரதக்ஷிணஞ் செய்து {வலம் வந்து}, தீன மனத்துடன் {தளர்ந்த மனத்துடன்} பரதனின் அருகில் நின்றாள்.(17)

அப்போது, திடவிரதரான பரத்வாஜர், "இராகவா, உன் மாதாக்களின் விசேஷங்களை நான் அறிய விரும்புகிறேன்" என்று பரதனிடம் கேட்டார்.(18)

பரத்வாஜர் இவ்வாறு சொன்னதும், மதிமிக்கவனும், வசனகோவிதனுமான {பேச்சில் நிபுணத்துவம் வாய்ந்தவனுமான} பரதன், கைகளைக் கூப்பியபடியே {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(19) "பகவானே, சோகத்தினாலும், உண்ணாததினாலும் மெலிந்து தீனமாக இருக்கும் இந்த தேவியே பிதாவின் மஹிஷியாவாள் {பட்டத்து ராணியாவாள்}. தேவதைக்கு ஒப்பானவளாக நீர் காணும் இவளே, அதிதி தாதாவை {இந்திரனைப்} பெற்றதைப் போல, சிம்மத்திற்கு நிகரான நடை கொண்டவரும், புருஷவியாகரருமான {மனிதர்களில் புலியுமான} ராமரைப் பெற்ற கௌசல்யை ஆவாள்.(20,21) அவளது {கௌசல்யையின்} இடது புஜத்தைப் பற்றிக் கொண்டு, சோகத்தில் மூழ்கிய மனத்துடன், வனாந்தரத்தில் புஷ்பங்கள் உதிர்ந்த கர்ணிகார ஷாகாவை {கொன்றை மரக் கிளையைப்} போல நிற்பவள் எவளோ,{22} அந்த தேவியின் {சுமித்ரையின்} இரு மகன்களே, சத்தியபராக்கிரமர்களும், தேவ வர்ணம் {தெய்வீக நிறம்} கொண்டவர்களும், வீரக்குமாரர்களுமான லக்ஷ்மணசத்ருக்னர்கள்.(22,23)

எவளின் காரணமாக அந்த நரவியாகரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் இங்கிருந்து ஜீவநாசம் {வாழ முடியாத நிலையை} அடைந்தனரோ, {எவளால்} தசரத ராஜா புத்திரனை இழந்து ஸ்வர்க்கத்தை அடைந்தாரோ,{24} அப்படிப்பட்ட கோபமுடையவளும், விவேகமற்றவளும், அழகியாகத் தன்னைக் கருதும் செருக்குடையவளும், ஐச்வர்யத்தில் ஆசை கொண்டவளுமான இந்தக் கைகேயி, ஆரிய ரூபினியாக {நல்லவள் போலப்} புலப்படும் அநாரியையாவாள் {கொடியவளாவாள்}.{25} பாபத்தையே திடமாகக் கைப்பற்றுபவளும், என் மகத்தான விசனத்தின் மூலமென {எனக்கு ஏற்பட்டிருக்கும் பெருந்துன்பத்தின் வேரென} நான் காண்பவளுமான இவளே என் மாதா என்பதை அறிவீராக" {என்றான் பரதன்}.(24-26)

கண்ணீரால் திணறும் குரலுடன் இவ்வாறு பேசிவிட்டுக் கண்கள் சிவந்த அந்த நரசார்தூலன் {மனிதர்களில் புலியான பரதன்}, கோபத்துடன் சீறும் நாகத்தை {பாம்பைப்} போலப் பெருமூச்சுவிட்டான்.(27) பரதன் இவ்வாறு சொன்னதும், மஹாபுத்திமானான பரத்வாஜ மஹரிஷி, அர்த்தம் பொதிந்த இந்தச் சொற்களில் பதிலளித்தார்:(28) "பரதா, தோஷத்தால் கைகேயியை நீ புரிந்துகொள்வது தகாது {கைகேயியைத் தவறாக நீ புரிந்து கொள்ளக்கூடாது}. இராமனை நாடு கடத்தியது சுகத்தையே விளைவிக்கப் போகிறது.(29) இராமனை நாடு கடத்தியதால் இங்கே தேவர்களுக்கும், தானவர்களுக்கும், ஆத்மபக்தி கொண்ட ரிஷிகளுக்கும் ஹிதமே {நன்மையே} விளையப் போகிறது" {என்றார் பரத்வாஜர்}.(30)

இதனால் திருப்தியடைந்த பரதன், அவரை வணங்கி, பிரதக்ஷிணஞ் செய்து, விடைபெற்றுக் கொண்டு, தன் சைனியத்திடம், "புறப்பட ஆயத்தமாவீராக" என்று ஆணையிட்டான்.(31) அப்போது பலவித ஜனங்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட திவ்யமான ரதங்களில் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு, அவற்றில் ஏறி பிரயாணித்தனர்.(32) பொன்னாலான கச்சைகளுடனும், பதாகைகளுடனுங் கூடிய பெண்யானைகளும், ஆண் யானைகளும், கோடைகால முடிவில் எழும் {கார்கால} மேகங்களைப் போன்ற மணிகோஷத்துடன் அணிவகுத்துச் சென்றன.(33) பெரியவை, சிறியவை என விதவிதமான மதிப்புமிக்க யானங்களும் சென்றன. காலாட்கள் கால்நடையாகவே சென்றனர்.(34)

அப்போது, கௌசல்யையும், ஸ்திரீ பிரமுகர்கள் பிறரும், இராமனை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.(35) ஸ்ரீமான் பரதன் உதிக்கும் சந்திரனுக்கும், அர்க்கனுக்கும் {சூரியனுக்கும்} ஒப்பாகப் பிரகாசிப்பதும், ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்ததுமான சுபமான சிவிகை ஒன்றில் ஏறிப் பரிவாரங்களுடன் புறப்பட்டான்.(36) கஜவாஜிரதகுலங்களால் {யானை, குதிரை, தேர்க்கூட்டங்களால்} நிறைந்த அந்த பெரும்படையானது, ஆகாயத்தில் எழும் மஹாமேகத்தைப் போல தென்திசையை மறைத்தபடியே கங்கையின் மறுகரையில் உள்ள கிரிகளையும், நதிகளையும், மிருக பக்ஷிகள் வசிக்கும் வனங்களையும் கடந்து சென்றது.(37,38) மகிழ்ச்சிமிக்க யானைகள், குதிரைகள், படைவீரர்கள் ஆகியவற்றுடன் கூடிய பரதனின் சைனியமானது மிருக பக்ஷி கூட்டங்களை பயமுறுத்தியபடியே மஹாவனத்தில் பிரவேசித்துப் பிரகாசித்தது.(39)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 092ல் உள்ள சுலோகங்கள்: 39

Previous | Sanskrit | English | Next

Monday, 24 October 2022

செவ்வழி உள்ளத்து அண்ணல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 087 (24)

Master, whose mind set on right path | Ayodhya-Kanda-Sarga-087 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மயங்கி விழுந்த பரதன்; இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் எவ்வாறு தங்கள் நேரத்தைக் கடத்தினர் என்பதை பரதனிடம் சொன்ன குகன்...

Guha showing the place where Rama slept to Bharata

பரதன், கேட்பதற்கு மிகவும் பிரியமற்ற குஹனின் சொற்களைக் கேட்டு, எங்கே அந்த பிரியமற்ற சொற்கள் கேட்கப்பட்டனவோ அங்கேயே தன் மனத்தைக் குவித்து தியானம் செய்தான் {சிந்தித்தான்}.(1) சுகுமாரனும் {மென்மையானவனும்}, பெரும் வலிமை கொண்டவனும், பெருங்கைகளைக் கொண்டவனும், சிங்கத்திற்கு ஒப்பான தோள்களைக் கொண்டவனும், மலர்ந்த தாமரையைப் போன்ற நீண்ட விழிகளைக் கொண்டவனும், அழகிய தோற்றத்தைக் கொண்டவனுமான அந்த இளைஞன் {பரதன்},(2) பெருந்துயரில் ஒரு முஹூர்த்த காலம் பெருமூச்சுவிட்டபடியே இருந்து, தோமரங்களால் {அங்குசங்களால் / மாவெட்டிகளால்} நெஞ்சில் குத்தப்பட்ட துவிபத்தை {யானையைப்} போல சட்டெனத் தரையில் விழுந்தான்.(3) பரதன் மூர்ச்சித்ததைக் கண்ட குஹன், வதன நிறம் குன்றியவனாக {முகம் வெளுத்தவனாக}, நிலநடுக்கத்தில் ஒரு மரம் நடுங்குவதைப் போல அங்கே நடுங்கிக் கொண்டிருந்தான்[1].(4) அருகில் இருந்த சத்ருக்னன், அந்நிலையில் கிடக்கும் பரதனை ஆரத் தழுவிக் கொண்டு, சோகத்தில் மூழ்கிப் புலனுணர்வை இழந்து {மெய்மறந்து} உரக்க அழுதான்.(5)

[1] ஒரு சில பதிப்புகளில் இந்த சுலோகம் விடுபட்டிருக்கிறது.

பர்த்தாவின் {கணவன் தசரதனின்} சோகமுடிவில் ஆறுதலடையாமல் தீனமடைந்தவர்களும், உண்ணாமல் மெலிந்தவர்களுமான பரதனின் மாதாக்கள் அனைவரும் {அவனை நோக்கி} விரைந்து வந்தனர்.(6) அழுதவாறே இருந்த அவர்கள் அனைவரும் தரையில் விழுந்து கிடந்த பரதனைச் சூழ்ந்து கொண்டனர். சோக மனத்துடன் கூடிய கௌசல்யை, குனிந்து அவனை வாரி அணைத்துக் கொண்டாள்.(7) சோகத்தால் கலக்கமடைந்தவளும், பரிதாபத்திற்குரியவளுமான அந்த வத்சலை {பாசமுள்ள கௌசல்யை, பசுவானது}, தன் கன்றை அணைத்துக் கொள்வதைப் போல மார்போடு அணைத்துக் கொண்டு {பின்வருமாறு} பரதனைக் கேட்டாள்:(8) "புத்திரா, உன் சரீரத்தை வியாதிகள் ஏதும் பீடிக்கவில்லை என நான் நம்புகிறேன். இனி இந்த ராஜகுலத்தின் ஜீவிதம் உன் ஆதீனமே {இந்த ராஜகுலம் தழைப்பது உன்னைச் சார்ந்ததே}.(9) புத்திரா, ராமன் தன்னுடன் பிறந்தானுடன் {வனம்} சென்றுவிட்டான். ராஜா தசரதரும் இறந்துவிட்டார். உன்னைப் பார்த்தே நான் ஜீவித்து வருகிறேன். இப்போது நீயே எங்கள் நாதனாக {தலைவனாக / காவலனாக} இருக்கிறாய்.(10) புத்திரா, லக்ஷ்மணனையோ, தன் பாரியையுடன் {சீதையுடன்} வனம் சென்ற என் ஏக புத்திரனையோ {ராமனையோ} குறித்து பிரியமற்ற செய்தி எதையும் நீ கேட்கவில்லை என நம்புகிறேன்" {என்று கேட்டாள்}.(11)

பெரும்புகழ்மிக்கவனான அவன் {பரதன்}, ஒரு முஹூர்த்த காலம் ஓய்ந்த பிறகு, அழுது கொண்டிருந்த கௌசல்யையைத் தேற்றிவிட்டு, குஹனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(12) "குஹனே, என்னுடன் பிறந்தவரும் {ராமரும்}, சீதையும், லக்ஷ்மணனும் ராத்திரியை எங்கே கழித்தனர்? என்ன உண்டனர்? எந்த சயனத்தில் கிடந்தனர்? என்பனவற்றை எனக்குச் சொல்வாயாக" {என்று கேட்டான்}[2].(13)

[2] அவ்வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன
செவ்வழி உள்ளத்து அண்ணல் தென்திசைச் செங் கை கூப்பி
எவ்வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன்
இவ்வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான்.

- கம்பராமாயணம் 2340ம் பாடல்

பொருள்: அவ்வாறே அவனை {குகனை} நோக்கி, அருள் தரும் கடலுக்கு ஒப்பானவனும், நேர் வழியில் செல்லும் உள்ளம் கொண்டவனுமான {பரதன்}, தென் திசையைப் பார்த்து தன் சிவந்த கைகளைக் கூப்பி, "நம் அண்ணன் எங்கே தங்கினான்?" என்றதும், வேடர் வேந்தனான குகன், "இங்கேதான். வீரனே, நானே காட்டுவேன். எழுக" என்றான்.

நிஷாதாதிபதியான அந்த குஹன், தனக்குப் பிரியனும், ஹிதனும், அதிதியுமான {அன்பனும், நண்பனும், விருந்தினனுமான} ராமனுக்கு எவ்விதமான ஏற்பாடுகளைச் செய்தான் என்பதைப் பரதனிடம் மகிழ்ச்சியுடன் சொன்னான்:(14) "உண்பதற்கான பல வகைகளிலான அன்னங்களையும், பக்ஷணங்களையும், விதவிதமான பழங்களையும் ராமனிடம் ஏராளமாகக் கொண்டு வந்தேன்.(15) சத்தியபராக்கிரமனான ராமன் அவை அனைத்தையும் மறுத்தான். அவன் க்ஷத்ர தர்மத்தை நினைத்தே அவற்றை ஏற்கவில்லை.(16) ராஜாவே, அந்த மஹாத்மா {ராமன்}, "சகாவே, நாங்கள் எப்போதும் கொடுக்கவே வேண்டும்; எதையும் ஏற்கக்கூடாது" என்று சொல்லி, எங்களைத் தணித்தான்.(17) பெரும்புகழ்மிக்கவனான அந்த ராகவன் {ராமன்}, லக்ஷ்மணன் கொண்டு வந்த நீரை, சீதையுடன் சேர்ந்து பருகி உபவாசம் இருந்தான்.(18) பிறகு எஞ்சிய ஜலத்தை அந்நேரத்தில் லக்ஷ்மணன் பருகினான். அவர்கள் மூவரும் வாக்கு நியமத்துடன் {பேசாமல் இருந்து} மாலை சந்தியை வழிபட்டனர்.(19)

பிறகு சௌமித்ரி {லக்ஷ்மணன்}, தானே சென்று குச {தர்ப்பைப்} புற்களைக் கொண்டு வந்து, ஒரு சுபமான படுக்கையை அந்த ராகவனுக்காக சீக்கிரம் ஏற்பாடு செய்தான்.(20) இராமனும், சீதையும் அந்தப் படுக்கையில் அமர்ந்தனர். இலக்ஷ்மணன் அவர்களின் பாதங்களைக் கழுவிவிட்டுத் தொலைவாக நகர்ந்து சென்றான்.(21) இதோ இந்த இங்குண மரத்தின் அடியில், இந்தப் புல்லில்தான் அந்த ராத்திரியில் ராமனும், சீதையும் சயனித்திருந்தனர்.(22) பகைவரை தஹிக்கச் செய்பவனான லக்ஷ்மணன், விரல்களுக்குத் தோலுறை அணிந்து கொண்டும், சரங்கள் சம்பூர்ணமான அம்பறாதூணிகள் இரண்டை முதுகில் கட்டிக்கொண்டும், நாணேற்றப்பட்ட மஹத்தான தனுவைத் தரித்துக் கொண்டும் அவ்விரவில் அவனை {ராமனைச்} சுற்றித் தனியாக நடந்து கொண்டிருந்தான் {ராமனைக் காத்து நின்றான்}.(23) உத்தம பாணங்களையும், வில்லையும் தரித்துக் கொண்ட நான் அந்நேரத்தில், களைப்பில் இருந்து விடுபட்டவர்களும், விற்களைத் தரித்தவர்களுமான என் ஞாதிகளுடன் {உறவினர்களுடன்} சேர்ந்து, மகேந்திரனைக் காப்பது போல் {ராமனைக் காத்து} நின்ற லக்ஷ்மணன் இருந்த இடத்தில் நிலைத்தேன்" {என்றான் குஹன்}.(24)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 087ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Wednesday, 19 October 2022

அழிந்தது கேகயன் மடந்தை ஆசை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 083 (26)

Kekaya daughter's desire perished | Ayodhya-Kanda-Sarga-083 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராணிகள், அமைச்சர்கள் மற்றும் பிறருடன் புறப்பட்ட பரதன்; குஹன் ஆளும் சிருங்கிபேரபுரத்தை அடைந்தது...


Bharata's journey start to the forest

பிறகு காலையில் எழுந்த பரதன், தன் உத்தம சியந்தனத்தில் {தேரில்} ஏறி, ராமனை தரிசிக்கும் ஆசையில் சீக்கிரமாகப் புறப்பட்டுச் சென்றான்.(1) மந்திரிகள், புரோஹிதர்கள் அனைவரும் சூரிய ரதங்களுக்கு ஒப்பான குதிரைகள் பூட்டப்பட்ட ரதங்களில் அவனுக்கு {பரதனுக்கு} முன்னால் சென்றனர்.(2) விதிப்படி ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்பதாயிரம் நாகங்களும் {யானைகளும், இவ்வாறு} புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த இக்ஷ்வாகு குலநந்தனனான பரதனைப் பின்தொடர்ந்து சென்றன.(3) தன்விகளுடனும் {வில்லாளிகளுடனும்}, விதவிதமான ஆயுதங்களுடனும் கூடிய அறுபதாயிரம் ரதங்களும், புகழ்மிக்க ராஜபுத்திரனான பரதன் செல்லும் வழியில் அவனைப் பின்தொடர்ந்து சென்றன.(4) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான {அல்லது லட்சக்கணக்கான} குதிரைப்படையினரும் சத்தியசந்தனும், ஜிதேந்திரியனும் {புலன்களை வென்றவனும்}, ராகவனுமான பரதன் செல்லும் வழியில் அவனைப் பின்தொடர்ந்து சென்றன.(5)

கைகேயியும், சுமித்திரையும், புகழ்மிக்கவளான கௌசல்யையும் ராமன் திரும்பி வரப்போகும் எண்ணத்தில் மகிழ்ச்சியடைந்தவர்களாக ஒளிமிக்க யானத்தில் {தேரில்} பயணித்தனர்[1].(6) மகிழ்ச்சிமிக்க மனங்களுடன் கூடிய {மொத்த} ஆரியர்களும், அவனது {ராமனின்} சித்திரக் கதைகளைச் சொல்லிக் கொண்டே ராமனையும், லக்ஷ்மணனையும் காணச் சென்றனர்.(7)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே கைகேயி வருத்தம் தீர்ந்தவளாகிவிட்டாள் என்று தெரிகிறது" என்றிருக்கிறது.

எழுந்தது பெரும்படை ஏழு வேலையின்
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி முந்து எழ
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய்க்
கழிந்தது துயர் நெடுங்காதல் தூண்டவே

- கம்பராமாயணம் 2268ம் பாடல்

பொருள்: சொல்லப்படும் பேர் ஊழிக் காலத்தில் ஏழு கடல்களும் பொங்கி எழுந்ததுபோல முழக்கம் செய்தவாறே அந்தப் பெரும்படை முந்தி எழுந்து புறப்படும்போது, கேகயயனுடைய மகளின் {கைகேயியின்} ஆசை அழிந்தது; பேரன்பின் தூண்டுதலால் அவளது துயரம் போய்க்கழிந்தது.

"மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்டவனும்}, கருமேக நிறத்தோனும், திடமான துணிவு கொண்டவனும், ஜகத்திலிருந்து சோகத்தை நாசஞ் செய்த திட விரதனுமான ராமனை நாம் எப்போது காணப் போகிறோம்?(8) அந்த ராகவனைக் கண்டதும் நம் சோகமும், உதிக்கும் பாஸ்கரனை {சூரியனைக்} கண்ட சர்வலோக இருளைப் போல விலகும்" {என்றனர் மக்கள்}.(9) இவ்வாறே அந்த நகரில் வசிக்குஞ் ஜனங்கள், முன் சொன்னதைப் போன்ற சுபக்கதைகளை நினைவுகூர்ந்து, ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு மகிழ்ச்சியாகக் கலைந்து சென்றனர்.(10) 

சமர்த்தர்களான பிறரும், நைகாமர்களும் {வர்த்தகர்களும்}, பிரகிருதியர்கள் {அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட} அனைவரும் ராமனுடன் சேர்வதற்காக மகிழ்ச்சியாகச் சென்றனர்.(11) மணிக்காரர்கள் {ரத்தினங்களுக்கு சாணை பிடித்து இழைப்பவர்கள்}, சோபனக் கும்பக்காரர்கள் {நல்ல மண் பாண்டங்களைச் செய்யும் குயவர்கள்}, சூத்திரக் கர்மம் செய்பவர்கள் {நூல் பிடிக்கும் பணியாட்கள் / தச்சர்கள்}, சஸ்திரோபஜீவிகள் {ஆயுதங்களை நம்பி வாழும் போர் வீரர்கள்},{12} மாயூரகர்கள் {மயில் தோகைகளை விற்பவர்கள்}, கிராகசிகர்கள் {மரம் அறுப்பவர்கள்}, ரோசகர்கள் {கண்ணாடி செய்பவர்கள்}, வேதகர்கள் {பூமி, ரத்தினங்கள், முத்துக்கள் முதலியவற்றை வெட்டுபவர்கள்}, தந்தக்காரர்கள் {தந்த வேலை செய்பவர்கள்}, ஸுதாகாரர்கள் {சுண்ணாம்படிப்பவர்கள்}, கந்தோபஜீவிகள் {நறுமணப் பொருள்களை விற்பனை செய்பவர்கள்},{13} பிரக்யாத ஸுவர்ணக்காரர்கள் {மதிப்புமிக்க தட்டான்கள் / பொற்கொல்லர்கள்}, கம்பளதாவகர்கள் {கம்பளங்களை நெய்பவர்கள்}, ஸ்நாபகாச்சாதகர்கள் {நீராடலுக்கு முன் எண்ணை தேய்த்து உடம்பு பிடிப்பவர்கள்}, வைத்தியர்கள் {மருத்துவர்கள்}, தூபகர்கள் {நறுமணங்கமழச் செய்பவர்கள்}, சௌண்டிகர்கள் {மதுவை விற்பனை செய்பவர்கள்},{14} ரஜகர்கள் {வண்ணார்கள்}, துன்னவாயர்கள் {தயிர்க்காரர்கள்}, மஹத்தான கிராமகோஷர்கள் {கிராமங்களைச் சேர்ந்த மகத்தான பாடகர்கள்}, சைலூஷர்கள் {நடனமாடுபவர்கள்}, கைவர்த்தகர்கள் {செம்படவர்கள்} என ஸ்திரீகளுடன் கூடிய இவர்கள் யாவரும் இவ்வாறே சென்று கொண்டிருந்தனர்.(12-15) 

சமஹிதர்களும் {நலம் விரும்பும் பக்திமான்களும்}, நன்னடத்தைக்குப் புகழ் பெற்றவர்களும், வேத வித்துகளுமான ஆயிரக்கணக்கான பிராமணர்கள், கோரதங்களை {மாட்டு வண்டிகளைச்} செலுத்திக் கொண்டு பரதனுடன் சென்றனர்.(16) சுத்தமான வஸ்திரங்களை அணிந்தவர்களும், தூய்மையான சந்தனத்தைப் பூசிக் கொண்டவர்களுமான அவர்கள் அனைவரும், விதவிமான யானங்களில் மெதுவாகப் பரதனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(17)

மகிழ்ச்சியில் திளைத்திருந்த அந்த சேனையானது, உடன்பிறந்தானிடம் அன்பு கொண்டவனும், உடன் பிறந்தானை அழைத்து வருவதற்காகக் குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றவனுமான கைகேயி சுதனுடன் {பரதனுடன்} புறப்பட்டுச் சென்றது.(18) இரதங்கள் {தேர்கள்}, யானங்கள் {வண்டிகள்}, அச்வங்கள் {குதிரைகள்}, குஞ்சரங்கள் {யானைகள்} ஆகியவற்றில் இவ்வாறு வெகுதூரம் சென்றவர்கள், ஞாதி கணங்களுடன் அந்த தேசத்தை {உறவினர்களுடன் சேர்ந்து அவ்விடத்தைக்} கவனமாக ஆண்டு வந்தவனும், வீரனும், ராமனின் சகாவுமான குஹன் இருந்த சிருங்கிபேரபுரத்தை நோக்கிச் சென்று கங்கையை அடைந்தனர்.(19,20) இவ்வாறு சென்று, சக்கரவாகங்களால் அழகூட்டப்பட்ட கங்கை தீரத்தை அடைந்த அந்த சேனை, அங்கேயே அப்படியே நின்றது.(21)

வாக்கிய கோவிதனான {வாக்கியங்களை அமைப்பதில் நிபுணனான} பரதன், தன்னைப் பின்தொடர்ந்து வந்த சேனையையும், மங்கல நீரைக் கொண்ட கங்கையையும் கண்டு, தன் அதிகாரிகள் அனைவரிடமும் {பின்வருமாறு} பேசினான்:(22) "என் சேனை அனைத்து வகையிலும் ஓய்வெடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். இங்கே முகாமிட்டுவிட்டு நாளை நாம் இந்நதியைக் கடப்போம்.(23) அதே வேளையில், ஸ்வர்க்கத்திற்குச் சென்ற மஹீபதியின் {தசரதரின்} மறுமை வாழ்வுக்காக, இந்த நதியில் இறங்கிப் புனித நீர்க்காணிக்கை அளிக்க நான் விரும்புகிறேன்" {என்றான் பரதன்}.(24)

இவ்வாறு அவன் சொன்னதைக் கவனித்த அமாத்தியர்கள் {அமைச்சர்கள்} ஒவ்வொருவரும், "அவ்வாறே ஆகட்டும்" என்று மறுமொழி கூறி, தத்தமக்குரிய ஒவ்வொருவரும் விரும்பியவாறு தனித்தனியாக முகாமிட்டனர்.(25) பரதன், படைக்குரிய அனைத்தையும் தரித்த அழகிய பரிவாரங்களுடன் கூடிய தன் சம்முவை {படையை} மஹாநதியான கங்கையின் அருகில் குடியமர்த்திவிட்டு, மஹாத்மாவான ராமனைத் திருப்பி அழைத்து வருவது குறித்துச் சிந்தித்தான்.(26)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 083ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Monday, 3 October 2022

தசரதன் தகனம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 076 (23)

The cremation of Dasaratha | Ayodhya-Kanda-Sarga-076 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரதனை அறிவுறுத்திய வசிஷ்டர்; சரயு நதியின் கரையில் தசரதனின் ஈமச் சடங்குகளைச் செய்த பரதன்...

Cremaion of Dasratha

வாக்கிலும், வாதம் செய்வதிலும் சிறந்த வசிஷ்ட ரிஷி, இவ்வாறு சோக சந்தாபத்துடன் கூடிய கைகேயி சுதனான பரதனிடம் {பின்வருமாறு} பேசினார்:(1) "இராஜபுத்திரா, பெரும்புகழ்பெற்றவனே, உனக்கு மங்கலம் உண்டாகட்டும். நீ சோகமடைந்தது போதும். நரபதியின் {தசரதனின்} பிராப்த காலத்திற்கான வழிமுறையை {ஈமச்சடங்குகளைச்} சிறப்பாகச் செய்வாயாக" {என்றார் வசிஷ்டர்}.(2)

தர்மத்தை அறிந்தவனான பரதன், வசிஷ்டரின் சொற்களைக் கேட்டு, தரணியில் இருந்து எழுந்து, பிரேத காரியங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்யத் தொடங்கினான்.(3) தைலத் தொட்டியிலிருந்து தூக்கி பூமியில் கிடத்தப்பட்ட பூமிபதியான தசரதன், பொன்னிற வதனத்துடன் உறங்குபவனைப் போலத் தோற்றமளித்தான்.(4) 

அவனது புத்திரன் {பரதன்}, நானாவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மகத்தான சயனத்தில் அவனைக் கிடத்திவிட்டு, பெருந்துக்கத்துடன் {பின்வருமாறு} புலம்பியழுதான்:(5) "இராஜரே, நான் இங்கிருந்து சென்று திரும்பி வருவதற்குள் என்ன முடிவு செய்துவிட்டீர்? தர்மத்தை அறிந்த ராமரையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணனையும் விரட்டிவிட்டீர்.(6)  துக்கத்திலிருக்கும் இந்த ஜனங்களையும் விட்டு, களைப்பில்லா செயல்புரியும் புருஷசிம்மரான ராமரும் இல்லாமல் எங்கே சென்றுவிட்டீர்?(7) தாதையே, ராஜரே, நீரோ சொர்க்கம் சென்றுவிட்டீர். இராமரும் வனத்தில் தஞ்சம் புகுந்துவிட்டார். இந்நகரின் யோகக்ஷேமத்தை விசாரிப்பது {நலத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது} யார்?(8) இராஜரே, நீர் இல்லாமல் விதவையாகியிருக்கும் பிருத்வி பொலிவிழந்திருக்கிறாள். இந்நகரும் சந்திரனில்லாத இரவைப் போலத்தெரிகிறது" {என்றான் பரதன்}.(9)

தீன மனத்துடன் {மனம் நொந்து} இவ்வாறு புலம்பிக் கொண்டிருந்த பரதனிடம், மஹாமுனியான வசிஷ்டர் மீண்டும் இந்தச் சொற்களைச் சொன்னார்:(10) "மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்டவனே}, தயக்கமில்லாமலும்,  ஏக்கமடையாமலும் இந்த விசாம்பதிக்கு {மன்னனுக்குச்} செய்ய வேண்டிய பிரேத காரியங்களைச் செய்வாயாக" {என்றார் வசிஷ்டர்}.(11)

வசிஷ்டரின் வாக்கியத்திற்குக் கீழ்ப்படிந்த பரதன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, ரித்விக்குகளையும், புரோஹிதர்களையும், ஆசாரியர்களையும் துரிதமாக அழைத்தான்.(12) நரேந்திரனின் {மனிதர்களின் மன்னனான தசரதனுக்குரிய} அக்னிகள், அக்னியகாரத்திற்கு {நெருப்பறைக்கு} வெளியே ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த ரித்விக்குகளாலும், யாஜகர்களாலும் {வேள்விப் பணியாளர்களாலும்} விதிப்படி மூட்டப்பட்டன.(13) கண்ணீரால் தொண்டை அடைக்கப்பட்ட பரிசாரகர்கள் {பணியாட்கள்}, உயிரிழந்த ராஜனை ஒரு சிவிகையில் ஏற்றி மனமின்றி வெளியே கொண்டு சென்றனர்.(14) 

Dasaratha's funeral and cremation

ஜனங்கள், ஹிரண்யங்களையும் {பொன் நாணயங்களையும்}, சுவர்ணத்தையும் {தங்கத்தையும்}, விதவிதமான வஸ்திரங்களையும் மார்க்கத்தில் {வழியில்} இறைத்தபடியே அந்த நிருபதிக்கு {மன்னனுக்கு} முன் சென்றனர்.(15) அதே போலவே சிலர் சந்தனம், அகில், குங்கில்யம் ஆகியவற்றையும், சரளம், பத்மகம், தேவதாரு ஆகிய கட்டைகளையும், இன்னும் பல சுகந்த பொருள்களையும் கொண்டு சென்று செய்த சிதையின் மத்தியில் ரித்விக்குகள் அந்த பூமிபதியை கிடத்தினர்.(16,17) 

பிறகு அந்த ரித்விக்குகள், அவனது நன்மைக்கென ஹுதாசனத்தில் {நெருப்பில்} ஆகுதிகளையிட்டு ஜபித்தனர். சாமகர்கள் {சாம வேதமறிந்த புரோகிதர்கள்} சாஸ்திரப்படி சாமங்களை {சாம வேத மந்திரங்களை} ஓதினர்.(18) அப்போது அவனது யோசிதைகள் {தசரதனின் மனைவியர்}, முதியவர்களால் சூழப்பட்டவர்களாகத் தங்களுக்குத் தகுந்த சிவிகைகளிலும், யானங்களிலும் நகரத்திலிருந்து அவ்விடத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(19) பிறகு ரித்விக்குகளும், சோகசந்தாபத்துடன் கூடிய கௌசல்யை முதலிய ஸ்திரீகளும் அக்னி சிதையில் புதைந்த அந்த நிருபனை அப்ரதக்ஷிணஞ் செய்தனர் {மன்னனை தங்கள் இடப்புறம் வைத்து அவனைச் சுற்றி வந்தனர்}.(20) 

அந்நேரத்தில் துயருற்று பரிதாபகரமாக அழுது கொண்டிருந்த ஆயிரக்கணக்கான நாரீகளின் கதறல், கிரௌஞ்சங்களுடைய ஒலியைப் போலக் கேட்டது.(21) புலம்பியபடியே மன உறுதியை இழந்த வராங்கனைகள் {உத்தமப் பெண்கள்} மீண்டும் மீண்டும் அழுதபடியே தங்கள் யானங்களிலிருந்து சரயுவின் தீரத்தில் இறங்கினர்.(22) பரதனுடன் சேர்ந்து அந்த நிருபாங்கனைகளும் {தசரதனின் மனைவியரும்}, மந்திரிகளும், புரோஹிதர்களும் நீர்க்காணிக்கை அளித்துவிட்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடன் நகருக்குள் பிரவேசித்தனர்; துக்கத்துடன் பத்து நாட்களைப் பூமியில் {வெறுந்தரையில்} கிடந்து கடத்தினர்.(23)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 076ல் உள்ள சுலோகங்கள்: 23

Previous | Sanskrit | English | Next

Friday, 30 September 2022

பரத சபத வியாஜம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 075 (65)

The pretext of Bharata's vows | Ayodhya-Kanda-Sarga-075 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கௌசல்யையின் அரண்மனைக்குச் சென்ற பரதன்; கடுஞ்சொற்கள் பேசிய கௌசல்யை; சபதம் என்ற சாக்கில் தீயோரை சபித்த பரதன்; நம்பிக்கையடைந்த கௌசல்யை...

Bharata Satrugna and Kausalya

வீரியவானான பரதன், நீண்ட காலத்திற்குப் பிறகு சுயநனவை அடைந்து, எழுந்ததும், கண்கள் நிறைந்த கண்ணீருடன் நிற்கும் தன் மாதாவைக் கண்டான்.(1) தன்னைப் பெற்றவளான அவளை அமாத்யர்களுக்கு {அமைச்சர்களுக்கு} மத்தியில் வைத்து நிந்திக்கும் வகையில், அவன், "நான் ஒருபோதும் ராஜ்ஜியத்தை விரும்பியதில்லை. என் மாதாவிடமும் {அது குறித்து} ஆலோசித்ததில்லை.(2) இராஜர் கருத்தில் கொண்டிருந்த அபிஷேகம் {பட்டாபிஷேகம்} குறித்தும் எனக்குத் தெரியாது. நான் சத்ருக்னன் சகிதனாகத் தொலைதூர தேசத்தில் வசித்திருந்தேன்.(3) மஹாத்மாவான ராமரின் வனவாசத்தையோ, சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்}, சீதையும் நாடுகடத்தப்பட்டதையோ நான் அறியமாட்டேன்" {என்றான் பரதன்}.(4)

இவ்வாறு அழுது கொண்டிருக்கும் மஹாத்மாவான பரதனின் சப்தத்தை அறிந்த கௌசல்யை, சுமித்ரையிடம் இதைச் சொன்னாள்:(5) "குரூரக் காரியங்களைச் செய்பவளான கைகேயியின் மகன் பரதன் வந்திருக்கிறான். தீர்க்கதரிசனம் கொண்டவனான {தொலைநோக்குப் பார்வை கொண்டவனான / வருவன அறிந்தவனான}[1] அந்த பரதனை நான் காண விரும்புகிறேன்" {என்றாள்}.(6)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதற்கு "தீர்கதர்ஷிநம்" என்று மூலம். இதனால் பரதனுக்கு ராமனைத் துரத்தினது ஸம்மதமன்றென்று {சம்மதம் இல்லையென்று} கௌசஸல்யைக்குத் தெரியுமென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.

வர்ணமிழந்தும், அழுக்கடைந்தும், மெலிந்தும் இருந்தவள் {கௌசல்யை}, இவ்வாறு சுமித்திரையிடம் சொல்லி நடுக்கமுற்று, நனவிழந்தவளாக பரதன் இருக்குமிடத்திற்குப் புறப்பட்டாள்.(7) அதேவேளையில், ராமானுஜனான {ராமனின் தம்பியான} பரதனும், சத்ருக்னன் சகிதனாக கௌசல்யையின் இருப்பிடத்திற்குப் புறப்பட்டான்.(8) துக்கத்தால் பீடிக்கப்பட்டவளும், {வழியில்} நனவிழந்து விழுந்தவளும், உன்னத மனங்கொண்ட ஆரியையுமான கௌசல்யை அழுது கொண்டிருப்பதைக் கண்டு, துக்கமடைந்த சத்ருக்னனும், பரதனும், அந்த துக்கத்துடனே சென்று அவளைத் தழுவிக் கொண்டனர்.(9,10அ)

பெரிதும் துக்கமடைந்திருந்த கௌசல்யை, பரதனிடம் இதைச் சொன்னாள்:(10ஆ) "இராஜ்ஜியத்தில் ஆசை கொண்ட உனக்கு, இதோ அகண்டகமான {முட்களற்ற / பகைவரற்ற} ராஜ்ஜியம் கிடைத்தது. ஐயோ, கைகேயி செய்த குரூர கர்மத்தினால் அதை சீக்கிரமே அடைந்தாய்.(11) குரூரதர்சினியான கைகேயி, என் புத்திரனை மரவுரி அணியச் செய்து, வனத்தில் வசிக்க விரட்டினாள். இதன் மூலம் என்ன குணத்தை அவள் காண்கிறாள் {என்ன பயன் அடைந்தாள்}?(12) பெரும்புகழ்பெற்ற ஹிரண்யநாபனான  என் மகன் {பொன்மயமான உந்தியைக் கொண்ட ராமன்} எங்கே இருக்கிறானோ அங்கேயே என்னையும் சீக்கிரமாக அனுப்புவாள் அந்தக் கைகேயி.(13) அல்லது, நானே சுயமாக சுமித்ரையுடன் சேர்ந்து, அக்னிஹோத்ரத்தை {இருபிறப்பாளர் சுமக்கும் புனித நெருப்பை} முன்னிட்டுக் கொண்டு[2], ராகவன் எங்கே இருக்கிறானோ அங்கே சுகமாகப் புறப்பட்டுச் செல்வேன்.(14) அல்லது, நீ விரும்பினால் புருஷவியாகரனான என் புத்திரன் {மனிதர்களிற்புலியான என் மகன் ராமன்} எங்கே தபம் செய்து கொண்டிருக்கிறானோ அங்கே நீயே என்னை அழைத்துச் செல்வாயாக.(15) சம்பூர்ணமான ஹஸ்தங்கள் {யானைகள்}, அச்வங்கள் {குதிரைகள்}, ரதங்கள் {தேர்கள்} ஆகியவற்றையும், குவியல் குவியலான தன, தானியங்களையும் கொண்ட இந்த ராஜ்ஜியத்தை அவள் {கைகேயி} உனக்குப் பெற்றுத் தந்து விட்டாள்" {என்றாள் கௌசல்யை}.(16)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "நான் ஸுமித்ரையைக் கூடவே அழைத்துக் கொண்டு ஸுகமாகத் தசரதனது அக்னியையும் அவரது சரீரத்தையும் எடுத்துக் கொண்டு ராமனிருக்குமிடத்திற்குப் போகின்றனன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அக்னி ஜ்யேஷ்ட பார்யைக்கு அதீனமாகையாலும், தசரதன் பரதன் ஸம்ஸ்காரஞ் செய்ய வேண்டாமென்று நிஷேதித்தமையாலும் அவ்வக்னியைத் தான் எடுத்துக் கொண்டு போவதாகக் கௌஸல்யை சொல்லினள். இதனால் - கௌஸல்யை பரதனுக்குக் கைகேயி செய்த பாப ஸம்பந்தத்தினால் ராஜஸம்ஸ்காரத்திற்கு அதிகாரமில்லையென்று ஸூசிப்பித்தாளென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.

பாபமற்றவனான பரதன், ரணத்தில் {புண்ணில்} ஊசியால் குத்துவது போன்ற இவையாலும், இன்னும் பிற எண்ணற்ற குரூர வாக்கியங்களாலும் கடிந்து கொள்ளப்பட்டுப் பெரிதும் துன்புற்றான்.(17) இதனால் மனங்கலங்கியவன், பலவாறு புலம்பியபடியே சுயநனவிழந்தவனாக அவளது சரணங்களில் {பாதங்களில்} விழுந்து, மீண்டும் நனவுமீண்டு எழுந்து நின்றான்.(18)

பிறகு பரதன், இவ்வாறு சோகத்தில் மூழ்கி பல்வேறு வகைகளில் புலம்பிக் கொண்டிருந்த கௌசல்யையிடம், தன் கைகளைக் கூப்பியவாறே இந்த மறுமொழியைச் சொன்னான்:(19) "ஆரியையே, அறியாதவனும், அப்பாவியுமான என்னை ஏன் நிந்திக்கிறாய்? இராகவரிடம் {ராமரிடம்} நான் கொண்ட பரந்த, ஸ்திரமான பிரீதியை {அன்பை} நீ அறிவாய்[3].(20)

[3] 21ம் சுலோகம் முதல் 58ம் சுலோகம் வரை வரப்போகும் பகுதி "பரதசபதவ்யாஜம்" என்றழைக்கப்படுகிறது. "இதன் மூலம் வால்மீகி தர்ம விசேஷங்களைத் தெரிவிக்கிறார்" என்று நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

சத்தியசந்தரும், நல்லோர்களில் சிறந்தவருமான ஆரியரை {என் அண்ணன் ராமரை, வனத்திற்குப் புறப்பட்டுச்} செல்ல அனுமதித்தவன் எவனோ, அவனுடைய புத்தி, சாஸ்திரங்களைப் பின்பற்றும் உறுதியை ஒருபோதும் அடையாதிருக்கட்டும்.(21) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், பாபிகளிடம் பணிபுரிவானாக; சூரியனுக்கு எதிராக மலஜலம் கழிப்பானாக; அவன் உறங்கும் பசுவை பாதத்தால் உதைப்பானாக {மேற்கண்ட தீச்செயல்களைச் செய்வோரின் பாபத்தை அடைவானாக}.(22) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன் பணியாளுக்குக் கூலி கொடுக்காமல் கடும் வேலையை விதிக்கும் பர்த்தாவின் {தலைவனின்} பாபத்தை அடையட்டும்.(23) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தன் புத்திரர்களைப் போல மக்களைப் பாதுகாக்கும் ராஜனுக்குத் தீங்கிழைத்தவனின் பாபத்தை அடையட்டும்.(24) 

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவனுக்கு, பிரஜைகளிடம் ஆறிலொரு பங்கை எடுத்துக் கொண்டு அவர்களை ரக்ஷிக்கத் தவறும் நிருபனின் {மன்னனின்} அதர்மம் நேரட்டும்.(25) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், சத்ரத்தில் தபஸ்விகளுக்கு {வேள்வியில் புரோஹிதர்களுக்கு} உறுதியளித்த யஜ்ஞ தக்ஷிணையைக் கொடுக்காதவனின் பாபத்தை அடையட்டும்.(26) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், ஹஸ்த {யானைகள்}, அச்வ {குதிரைகள்}, ரதங்கள் நிறைந்ததும், ஜனம் {மக்கள்} சூழ்ந்ததுமான நல்ல யுத்தத்தில் தர்மத்தைப் பின்பற்றாதவனாகட்டும்.(27) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அந்த துஷ்டாத்மா, மதிமிக்கவர்களால் கவனமாக உபதேசிக்கப்பட்ட சாஸ்திரங்களின் சூக்ஷ்ம அர்த்தங்களை மறந்து போகட்டும்.(28) 

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், நீண்ட கரங்களையும், அகன்ற தோள்களையும் கொண்ட ராமர், சந்திரனையும், அர்க்கனையும் {சூரியனையும்} போன்ற ஒளியுடன் ராஜ்ஜியஸ்தத்தில் {நாட்டின் அரியணையில்} அமர்வதைக் காணாதிருக்கட்டும்.(29) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அந்தக் கருணையற்றவன், பெரியோரை மதியாமல் பாயஸத்தையும், கிருசரத்தையும் {எள்ளும், வெல்லமும் கலந்த உணவையும்}, ஆட்டு மாமிசத்தையும் வீணாக உண்பவனாகட்டும் {பெரியோருக்குக் கொடுக்காமல் அப்படி வீணாக உண்பவனின் பாபத்தை அடையட்டும்}.(30) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், பசுக்களை உதைப்பவனாகட்டும்; பெரியோரை அவமதிப்பவனாகட்டும்; மித்ரனை {நண்பனை} வஞ்சிப்பவனாகட்டும் {இவர்கள் அடையும் பாபத்தை அடையட்டும்}.(31) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அந்த துஷ்டாத்மா, அவ்வப்போது ரகசியமாக விசுவாசத்தில் {நம்பிக்கையில்} சொல்லப்படும் சிறு பரிவாதங்களையும் {பழிச்சொற்களையும்} வெளிப்படுத்தட்டும் {அப்படி வெளிப்படுத்துபவனின் பாபத்தை அடையட்டும்}.(32) 

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், அகர்த்தனாகவும் {எத்தொழிலுமற்றவனாகவும்}, நன்றியற்றவனாகவும், கைவிடப்பட்டவனாகவும், வெட்கமற்றவனாகவும், வெறுக்கத்தக்கவனாகவும் ஆகட்டும்.(33) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தன் கிருஹத்தில் {வீட்டில்} புத்திரர்கள், தாரங்கள், பணியாள்கள் சூழ்ந்திருந்தாலும் சுவைமிக்க உணவை தனியாக உண்பவனாகட்டும்.(34) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தனக்குரிய தர்ம காரியங்களை நிறைவேற்றாமல், தனக்குத் தகுந்த தாரங்களை அடையாமல், பிள்ளையற்றவனாக சாகட்டும்.(35) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தீர்க்காயுள் இல்லாதவனாகவும், தாரத்தின் மூலம் தன் பிள்ளையைக் காணாதவனாகவும் ஆகட்டும்.(36) அவன் ராஜனையோ, ஸ்திரீயையோ, பாலரையோ, விருத்தரையோ கொன்ற பாபத்தை அடையட்டும். அடியவர்களை {தன்னைச் சார்ந்தவர்களைக்} கைவிட்டவனின் பாபத்தை அவன் அடையட்டும்.(37) 

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், அரக்கு, மது, மாமிசம், இரும்பு, விஷம் ஆகியவற்றை விற்பதன் மூலம் தன் அடியவர்களுக்கு {தன்னைச் சார்ந்தவர்களுக்கு} உணவளிப்பவனாகட்டும்.(38) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், சத்ரு தரப்பில் பயம் உண்டாகி தப்பி ஓடும் நிலையில் கொல்லப்படட்டும்.(39) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், கந்தையாடையுடுத்தியும், கையில் கபாலத்துடன் பிச்சையெடுத்தும், பிருத்வியில் உன்மத்தனாக {பித்தனாகத்} திரியட்டும்.(40) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், குடியிலும், ஸ்திரீகளிடமும், சூதாட்டங்களிலும் எப்போதும் ஈடுபடும் காம, குரோதனாகட்டும்.(41) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவனது மனம் தர்மத்தில் திளைக்காதிருக்கட்டும். அவன் அதர்மத்தில் ஈடுபட்டு, தகாதவர்களுக்குக் கொடையளிப்பவனாகட்டும்.(42)

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், ஆயிரமாயிரமாகத் திரட்டிய விதவிதமான செல்வங்களை தஸ்யுக்கள் {திருடர்கள்} கொள்ளையடிக்கட்டும்.(43) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், சந்திப்பொழுதுகள் இரண்டிலும் {அதிகாலையிலும், மாலையிலும்} உறங்குபவனுக்கு எந்தப் பாபம் நேருமோ அந்த பாபத்தை அடைவானாக.(44) அக்னிதாயகனுக்கு {தீ வைப்பவனுக்கு} எந்தப் பாபம் நேருமோ, குருதல்பகனுக்கு {குருவின் படுக்கைக்குக் களங்கமேற்படுத்தியவனுக்கு} எந்தப் பாபம் நேருமோ, மித்ரதுரோஹத்திற்கு {நண்பனை வஞ்சித்ததற்கு} எந்தப் பாபம் நேருமோ அதே பாபத்தை அவன் அடைவானாக.(45) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும், அதே போல மாதா, பிதாவுக்கும் தொண்டாற்றாதவனாகட்டும்.(46)

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், நல்லொழுக்கமுள்ளவர்களின் உலகத்தில் இருந்தும், நல்லொழுக்கமுள்ளவர்களின் புகழில் இருந்தும், நேர்மையான செயல்பாடுகளிலிருந்தும் சீக்கிரமாக நழுவுவானாக.(47) நீண்ட கைகளையும், அகன்ற மார்பையும் கொண்ட அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தன் மாதாவுக்குத் தொண்டாற்றாத அனர்த்தத்தில் உழல்வானாக.(48) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தரித்திரனாக இருக்கும் நிலையில் தன்னைச் சார்ந்திருப்பவர்கள் பலரைக் கொண்டவனாகவும், எப்போதும் ஜுவரம் கொண்டவனாகவும் இருப்பானாக.(49) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், பொருளற்றவர்களாகவும், தீனமாகவும், கண்களை உயர்த்தி யாசிப்பவர்களின் நம்பிக்கையை வீணடிப்பானாக.(50)

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், வஞ்சகனாகவும், கொடூரனாகவும், கபடனாகவும், தூய்மையற்றவனாகவும், நேர்மையற்றவனாகவும் நித்தியம் ராஜன் மீதான பயத்தில் பீடிக்கப்பட்டிருப்பானாக.(51) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அந்த துஷ்டாத்மா, ருதுஸ்நானம் செய்தவளும், ருதுகால தர்மத்தைப் பின்பற்றுபவளும், சதியுமான தன் பாரியாளை {உத்தமியுமான தன் மனைவியை} புறக்கணிப்பானாக.(52) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அந்த மூடன், தர்மத்தின் மீது கொண்ட தன் பற்றைவிட்டு, தர்ம தாரங்களைக் கைவிட்டு, பரதாரங்களுக்கு {சட்டப்படியான மனைவியரைக் கைவிட்டு, மாற்றான் மனைவியருக்குத்} தொண்டு செய்வானாக.(53) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், பிரஜைகளற்ற {சந்ததியற்ற} பிராமணன் அடையும் பாபத்தை அடைவானாக.(54)

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், குடிநீரை மாசடையச் செய்பவனும், விஷத்தை வைப்பவனும் ஈட்டும் பாபத்தை அடைவானாக.(55) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், இந்திரியங்கள் கெட்டு பிராமணருக்குச் செய்யும் வழிபாட்டைக் கெடுத்தவனாவானாக; அவன் இளங்கன்றுடைய பசுவிடம் பால் கறப்பவனாவானாக[4].(56) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், பருகும் நீர் இருந்தாலும், தாகவிடாய் கொண்டவனை வஞ்சிப்பவனின் பாபத்தை அடைவானாக.(57) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், மார்க்கத்தில் வாதிடுவோருக்கிடையில் {பாதையில் இரு தரப்புக்கிடையில் நடக்கும் சச்சரவைத் தீர்க்க முயலாமல்} வேடிக்கை பார்த்து நிற்பவனின் பாபத்தை அடைவானாக" {என்றான் பரதன்}.(58)

[4] கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்
மன்றிடைப் பிறப் பொருள் மறைத்து வவ்வினோன்
நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே

- கம்பராமாயணம் 2206ம் பாடல்

பொருள்: கன்று உயிர் இல்லாமல் போகுமளவுக்கு பாலனைத்தையும் தானே கறந்து உண்டவனும், மன்றத்தில் பிறர் பொருளை மறைத்துக் கைப்பற்றிக் கொண்டவனும், நன்றியை மறந்து பழிக்கும் நாக்கை உடையவனும் எந்த நரகை அடைவார்களோ அது என்னதாகட்டும்.

அந்தப் பார்த்திவாத்மஜன் {மன்னன் தசரதனின் மகனான பரதன்}, பதியையும், புத்திரனையும் விட்டுப் பிரிந்த கௌசலையை இவ்வாறு ஆசுவாசப்படுத்தி {தேற்றிக்} கொண்டிருந்தபோதே துக்கம் தாங்காமல் கீழே விழுந்தான்.(59) சோக சந்தாபத்தில் மூழ்கி, நனவிழந்து, இவ்வாறான சபதங்களை உறுதியேற்றுக் கொண்டிருந்த பரதனிடம் கௌசல்யை இந்த வாக்கியங்களைச் சொன்னாள்:(60) "புத்திரா, என்னுடைய இந்த துக்கம் இன்னும் அதிகரிக்கிறது. இந்த சபதங்களைச் சொல்லி, நீ என் பிராணனை வாட்டுறாய்[5].(61) வத்ஸா {குழந்தாய்}, அதிர்ஷ்டவசமாக சத்யப்ரதிஜ்ஞையுடன் கூடிய உன் ஆத்மா தர்மத்தில் இருந்து விலகாமல் இருக்கிறது. இலக்ஷ்மணன் சகிதனாக நீயும் நல்லோரின் உலகங்களை அடைவாயாக" {என்றாள் கௌசல்யை}.(62)

[5] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "'ப்ராணாநபருணத்ஸிமே' என்று மூலம். ப்ராணன்களைத் தடுக்கிறாயென்று பொருள். ராமவியோகத்தினால் போகின்ற பிராணன்களைச் சபதங்களையிட்டுப் போகவொட்டாமல் நிறுத்துகிறா யென்று கருத்து. இங்ஙனம் அர்த்தாந்தரம்" என்றிருக்கிறது.

உடன் பிறந்தானிடம் பற்றுடன் இருந்த பரதனிடம் இவ்வாறு பேசியவள் {கௌசல்யை}, அந்த மஹாபாஹுவை தன் மடியில் ஏற்றித் தழுவிக் கொண்டு, பெருந்துக்கத்துடன் அழுதாள்.(63) துக்கத்தில் ஆழ்ந்து புலம்பிய அந்த மஹாத்மாவின் {பரதனின்} மனம், சோக சுமையால் நொறுங்கி, மயக்கத்தால் கலக்கமுற்றது.(64) இவ்வாறு அழுது, நனவிழந்து, புத்தியிழந்து, மீண்டும் மீண்டும் பூமியில் விழுந்து கொண்டிருந்த அவனுக்கு, நீண்ட பெருமூச்சுகளுடன் கூடிய சோகத்திலேயே அந்த ராத்திரி கழிந்தது.(65)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 075ல் உள்ள சுலோகங்கள்: 65

Previous | Sanskrit | English | Next

Thursday, 29 September 2022

காமதேனு | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 074 (36)

Kamadhenu | Ayodhya-Kanda-Sarga-074 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கைகேயியை நிந்தித்த பரதன்; அயோத்தியின் மகிமையை மீட்கத் தீர்மானித்தது; இராமனை மன்னனாக்குவதாக உறுதி ஏற்றது...

Bharata

அப்போது அவளை இவ்வாறு கண்டித்த பரதன், பெருங்கோபத்தில் ஆழ்ந்தவனாக மீண்டும் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "கைகேயி, கொடூரியே, துஷ்டசாரிணியே, இந்த ராஜ்ஜியத்தில் இருந்து தொலைந்து போவாயாக. தர்மத்தைக் கைவிட்டவளான நீ, என்னை மரணமடைந்தவனாக நினைத்து அழுது கொண்டிருப்பாயாக.(2) உன்னால் யாருக்கு உடனடியாக மரணமும், நாடு கடத்தலும் விளைந்ததோ, அந்த இராஜாவோ {தசரதரோ}, பெருந்தார்மிகரான இராமரோ உனக்கு என்ன கெடுதலைச் செய்தார்கள்?(3) 

Kaikeyi Bharata

கைகேயி, இந்தக் குலத்திற்கு அழிவை ஏற்படுத்தியதால், கருவைக் கொன்ற பாபத்தை நீ செய்திருக்கிறாய். கைகேயி, நீ நரகத்திற்குச் செல்வாயாக. பர்த்தாவின் லோகத்தை {உன் கணவர் அடைந்த உலகத்தை நீ} அடையாமல் இருப்பாயாக.(4) கோர கர்மத்தைச் செய்து இத்தகைய பாபத்தை இழைத்துவிட்டாய். சர்வலோகப்ரியர்களை {அனைவராலும் விரும்பப்பட்டவர்களைக்} கைவிட்டு என்னிலும் பயத்தை விளைவித்துவிட்டாய்.(5) என் பிதா இறந்ததும், ராமர் அரண்யத்தில் வசிப்பதும், இந்த ஜீவலோகத்தில் நான் புகழை இழக்கப்போவதும் உன்னால்தான்.(6) அமித்ரையே {நட்பில்லாத எதிரியே}, தாயின் வடிவில் வந்த கொடூரியே, இராஜ்ஜியகாமுகியே {நாட்டை ஆளும் பேராசை கொண்டவளே}, துர்விருத்தம் கொண்ட பதிமாதினியே {தீய நடத்தை கொண்டவளே, கணவரைக் கொன்றவளே}, நான் உன்னிடம் பேச மாட்டேன்.(7)

கௌசல்யையும், சுமித்ரையும், என்னுடைய மற்ற மாதாக்களும், குலதூஷிணியான {குலத்தைக் கெடுக்க வந்தவளான} உன்னை அடைந்து மஹத்தான துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.(8) நீ, தர்மராஜரும், மதிமிக்கவருமான அசுவபதியின் கன்னியல்ல {பெண்ணல்ல / மகளல்ல}; என் பிதாவின் குல வம்சத்தை அழிக்க அங்கே ராக்ஷசியாகப் பிறந்தவள்.(9) {எனவேதான்}, தார்மிகரும், நித்தியம் சத்தியத்தையே நிலைநிறுத்துபவருமான ராமரை வனத்திற்கு அனுப்பினாய்; அந்த துக்கத்துடன் என் பிதாவை திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்கு} அனுப்பிவைத்தாய்.(10) நீ எதைப் பிரதானமாகச் செய்தாயோ அந்தப் பாபத்தால் நான் பிதாவற்றவனானேன். உடன் பிறந்தவர்களால் கைவிடப்பட்டேன். சர்வலோகத்திற்கும் பிரியமற்றவனானேன்.(11) 

நரகத்திற்குச் செல்லும் பாபநிச்சயம் கொண்டவளே, தர்மசம்யுக்தையான {தர்மமே நிறைந்தவளான} கௌசலையை மகனற்றவளாக்கினாய். இனி, நீ எந்த உலகத்தை அடையப் போகிறாய்?(12) குரூரியே, கௌசல்யையின் ஆத்மசம்பவரான {மகனான} ராமர், தன்னடக்கமும், பந்துக்களிடம் அர்ப்பணிப்பும் மிக்கவர் என்பதையும், பிதாவுக்கு சமமானவர் என்பதையும் நீ அறிய மாட்டாயா?(13) அங்கங்கள், பிரத்யங்கங்கள் {உறுப்புகள், துணை உறுப்புகள்} ஆகியவற்றில் இருந்து உண்டாகும் புத்திரன், ஹிருதயத்திலிருந்தும் பிறக்கிறான். இதன் காரணமாகவே மாதாவுக்கு மிகப் பிரியமானவன் ஆகிறான். பிரியத்தால் மட்டுமே அவன் பந்து {அன்பால் மட்டுமே அவன் உறவினன்} ஆவதில்லை.(14)

ஒரு காலத்தில், தர்மத்தை அறிந்தவளும், ஸுரர்களால் {தேவர்களால்} வழிபடப்பட்டவளுமான சுரபி {காமதேனு}, பூமியில் தன் புத்திரர்கள் இருவர் {காளைகள் இரண்டு}, சுமையைச் சுமந்தவாறே மயக்கமடைவதைக் கண்டாள்.(15) மஹீதலத்தில் அர்த்த திவசம் {பூமியில் அரை நாள் / நடுப்பகல் வரை} உழைத்துக் களைத்த தன் புத்திரர்களைக் கண்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடன் புத்திர சோகத்தால் அழுது கொண்டிருந்தாள்.(16) 

Kamadhenu Indra Peasant and Bulls

நறுமணமிக்க அவளது சிறு கண்ணீர் துளிகள், கீழே சென்று கொண்டிருந்த மஹாத்மாவான ஸுரராஜனின் {இந்திரனின்} அங்கங்களில் விழுந்தன.(17) ஸுரேஷ்வரனான இந்திரன், புண்ணிய மணங்கமழும் அந்த கண்ணீர்த்துளிகள் தன் அங்கங்களில் விழுவதைக் கண்டு, அவளே மகிமைமிக்க சுரபி {காமதேனு} என நினைத்தான்.(18) ஆகாயத்தை நோக்கிய சக்ரன் {இந்திரன்}, அந்த சுரபி, பெருந்துக்கத்துடனும், வேதனையுடனும் தீனமாக அழுதவாறே நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.(19) 

வஜ்ரபாணியும், ஸுரராஜனுமான இந்திரன், சோக சந்தாபத்துடன் கூடியவளும், புகழ்மிக்கவளுமான அவளைக் கண்டு, நடுக்கத்துடன் கைகளைக் கூப்பியவாறே இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(20) "சர்வஹிதைஷிணியே {அனைத்தின் நலத்தை விரும்புகிறவளே}, எங்கிருந்தாவது நமக்கு மஹத்தான பயம் உண்டாகிறதா? உன் சோகத்திற்கான காரணம் யாது?" {என்று கேட்டான்}(21)

மதிமிக்கவனான ஸுரராஜன் இவ்வாறு சொன்ன போது, தீரமிக்கவளும், வாக்கிய விசாரதையுமான {சொற்களை பயன்படுத்துவதில் திறன்மிக்கவளுமான} சுரபி, இந்த வாக்கியங்களை மறுமொழியாகச் சொன்னாள்:(22) "அமராதிபா, பாபம் சாந்தமடையட்டும் {பாபம் செய்ததால் உண்டான பயமேதும் இருப்பினும் அஃது ஒழியக்கடவது}. எங்கிருந்தும் உங்களுக்கு ஏதுமில்லை {எந்த ஆபத்துமில்லை}. துன்புற்றுக் கொண்டிருக்கும் என் புத்திரர்களான இவர்கள் இருவருக்காகவே நான் வருந்தித் தவிக்கிறேன்.(23) ஸுராதிபா, சூரியக் கதிர்களால் எரிக்கப்படுகிறவர்களாகவும், உழைப்பின் களைப்பால் இளைத்துப் போகிறவர்களாகவும், உழுபவரால் துன்புறுபவர்களாகவும் {என் புத்திரர்களான} இந்தக் காளைகளைக் காண்கிறேன்.(24) என் காயத்தில் {உடலில்} இருந்து பிறந்தவர்களான இவர்கள், பாரத்தால் பீடிக்கப்படுவதைக் கண்டு துக்கம் அடைகிறேன். புத்திரர்களுக்கு சமமான பிரியத்திற்குரியவர்கள் வேறெவருமில்லை" {என்றாள் சுரபி}.(25)

இந்த ஜகம் முழுவதும் நிறைந்திருக்கும் நூற்றுக்கணக்கான புத்திரர்களைக் கொண்டவள் இவ்வாறு அழுவதைக்  கண்ட சக்ரன் {இந்திரன், ஒரு தாய்க்கு} மகனைவிட அருமையான வேறேதுமில்லை என்று நினைத்தான்.(26) எப்பொழுதும் ஒப்பில்லாத ஒழுக்கம் கொண்டவளும், இயங்கும் சுபாவத்தால் புனிதமானவளும், உத்தம குணங்களில் நித்தியம் பற்றுடையவளும், உலகைத் தாங்க விரும்புகிறவளும்,(27) ஆயிரமாயிரம் புத்திரர்களைக் கொண்டவளுமான அத்தகைய காமதேனுவே {விரும்பியவற்றைத் தரவல்ல சுரபியே} துக்கமடைந்தாள் எனும்போது, ராமரை விட்டுப் பிரிந்த கௌசல்யை இனி எவ்வாறு உயிர் பிழைத்திருப்பாள்?(28) 

ஏக புத்திரனை {ஒரே மகனைக்} கொண்டவளும், சாத்வியுமான {புனிதவதியுமான} அவள், உன்னால் பிள்ளையற்றவள் ஆனாள். எனவே, நீ இங்கும், பிரேதமான பிறகும் {இம்மையிலும், மறுமையிலும்} சதா துக்கத்தையே அனுபவிப்பாய்.(29) நானோ, என் பிதாவையும், என்னுடன் பிறந்தவரையும் சம்பூர்ணமாகப் பூஜித்து, அவர்களின் பெருங்கீர்த்தியை வளரச் செய்வேன். இதில் ஐயமேதும் வேண்டாம்.(30) மஹாபலம் பொருந்திய கௌசல்யா தனயரை {கௌசல்யையின் மகனான ராமரை} அழைத்து வருவதற்காக, முனிவர்களால் சேவிக்கப்படும் வனத்திற்குள் நானே பிரவேசிப்பேன்.(31) பாபியே, பாப சங்கல்பம் கொண்டவளே, நகரவாசிகள் கண்ணீரால் அடைக்கப்படும் கண்டங்களைக்  கொண்டவர்களாக {துக்கத்தால் தொண்டை அடைக்கப்பட்டவர்களாகத்} தென்படுகிறார்கள். நீ செய்த பாபத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(32) நீ அக்னிக்குள் பிரவேசிப்பாயாக, அல்லது தனியே தண்டகாரண்யத்திற்குள் நுழைவாயாக. அல்லது கண்டத்தில் {தொண்டையில்} கயிற்றை இறுக்கிக் கொள்வாயாக. உனக்கு வேறு கதியேதும் இல்லை.(33) சத்திய பராக்கிரமரான ராமர் அவனியை அடைந்ததும், என் பாபங்கள் கழுவப்பட்டு, நினைத்தன நிறைவேறியவனாவேன்" {என்றான் பரதன்}.(34) 

இவ்வாறு, அரண்யத்தில் தோமரத்தாலும் {ஈட்டியாலும்}, அங்குசத்தாலும் {மாவெட்டியாலும்} குத்தப்பட்ட நாகத்தைப் {யானையைப்} போலக் கோபமடைந்தவன், பன்னகம் {பாம்பைப்} போல் சீறியபடியே புவியில் விழுந்தான்.(35) பரந்தபனான அந்த நிருபாத்மஜன் {பகைவரை அழிப்பவனான அந்த அரசகுமாரன் பரதன்}, கோபத்தால் கண்கள் சிவக்கவும், ஆடை தளரவும், ஆபரணங்கள் சிதறவும், உத்சவத்தின் முடிவில் விழும் சசிபதியின் கொடியை {இந்திரத்வஜத்தைப்} போலவும் பூமியில் விழுந்து கிடந்தான்.(36)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 074ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Thursday, 15 September 2022

தைலத் தொட்டி | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 066 (29)

Oil trough | Ayodhya-Kanda-Sarga-066 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கைகேயியை நிந்தித்த கௌசல்யை; ஈமச்சடங்குகளுக்காக காத்திருக்கும் மன்னனின் சடலத்தைப் பதப்படுத்திப் பாதுகாத்தது; இருளில் மூழ்கிய அயோத்தி...

Dasaratha's death

இறந்துவிட்ட பார்த்திபன் {மன்னன் தசரதன்}, முற்றிலும் அணைந்த அக்னியைப் போலவும், நீர் வற்றிய ஆர்ணவத்தை {கடலைப்} போலவும், பிரபையிழந்த ஆதித்யனை {சூரியனைப்} போலவும் கிடப்பதைக் கண்ட கௌசல்யை, அந்த ராஜனின் சிரஸைப் பற்றிக் கொண்டு {தசரதனின் தலையை மடியில் வைத்துக் கொண்டு}, பல்வேறு வகைகளில் சோகத்தால் பீடிக்கப்பட்டும், கண்கள் நிறைந்த கண்ணீருடனும், கைகேயியிடம் {இதைச்} சொன்னாள்:(1,2) "கைகேயீ, கொடூரியே, துஷ்டசாரிணியே {தீய நடத்தை கொண்டவளே}, ஆசைகள் நிறைவேறியவளாக இருப்பாயாக. ராஜரைக் கைவிட்டு, எந்தத் தடையுமில்லாமல், இடையூறேதுமில்லாமல் இந்த ராஜ்ஜியத்தை நீ அனுபவிப்பாயாக.(3) இராமன் என்னை விட்டுச் சென்றுவிட்டான். என் பர்த்தாவும் ஸ்வர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். உடன் வந்த கூட்டத்தை இழந்து, தீய வழியை அடைந்து ஜீவிப்பதில் எனக்கு விருப்பமில்லை.(4) 

தர்மத்தைக் கைவிட்ட கைகேயியைத் தவிர, எந்த ஸ்திரீதான் தன் தைவதமான பர்த்தாவை {தெய்வமான கணவனை} விட்டு விட்டு ஜீவிக்க விரும்புவாள்?(5) கெட்ட உணவை உண்பவனைப் போலவே ஒரு லுப்தனால் தன் தோஷத்தை {ஒரு பேராசைக்காரனால் தன் குற்றத்தைப்} புரிந்து கொள்ள முடியாது. ஒரு குப்ஜையினால் {கூனியினால்} ராகவ குலத்தை இந்தக் கைகேயி அழித்துவிட்டாள்.(6) தகாத செயலைச் செய்ய வற்புறுத்தப்பட்டதன் காரணமாக ராஜரால் ராமனும், அவனது பாரியாளும் {மனைவியும்} நாடுகடத்தப்பட்டனர் என்பதைக் கேட்டு ஜனகரும் என்னைப் போலவே பரிதபிக்கப் போகிறார்.(7) கமலபத்ரங்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், தார்மிகனுமான ராமன் ஜீவித்திருந்தாலும் இங்கில்லாமல் போனதால், இப்போது நான் அனாதையும், விதவையுமானதை அறியமாட்டான்.(8) 

விதேஹராஜனின் மகளும், பரிதாபத்திற்குரியவளும், துக்கத்திற்குத் தகாதவளுமான சீதையும், வனத்தில் துக்கத்துடன் பயந்திருப்பாள்.(9) அவள், இரவுகளில் நாதமெழுப்பும் மிருக பக்ஷிகளின் {விலங்குகள், பறவைகளின்} பயங்கர கோஷங்களைக் கேட்டு நிச்சயம் பேரச்சங்கொண்டு ராகவனிடம் தஞ்சம் அடைவாள்.(10) புத்திரர்களற்றவரான அந்த விருத்தரும் {ஜனகரும்}, வைதேஹியை நினைத்தவாறே சோகத்தால் பீடிக்கப்பட்டவராகத் தமது ஜீவிதத்தை நிச்சயம் கைவிடுவார்.(11) பதிவிரதையான நானும், {தசரதரின்} இந்த சரீரத்தை ஆலிங்கனம் செய்தவாறு ஹுதாசனத்தில் {நெருப்பில்} நுழைந்து, இன்றே என் திஷ்டாந்தத்தை {எனக்கான முடிவை} அடைவேன்" {என்றாள் கௌசல்யை}.(12)

அப்போது வியாவஹாரிகள் {அரண்மனை அதிகாரிச்சிகள்}, துக்கத்தால் பீடிக்கப்பட்டவளும், பரிதாபத்திற்குரியவளும், {தசரதனின் உடலை} ஆரத்தழுவிக் கொண்டிருந்தவளுமான அந்தக் கௌசலையை அந்த இடத்தில் இருந்து தூக்கிச் சென்றனர்.(13) அதன் பிறகு குறிப்பிட்ட அமாத்தியர்கள் {அமைச்சர்கள்}, அந்த ஜகத்பதியை தைலதுரோண்யத்திலிட்டு {எண்ணெய்த் தொட்டியிலிட்டு} அந்த ராஜனுக்குச் செய்ய வேண்டிய சர்வ கர்மங்களையும் செய்தனர்.(14) சர்வத்தையும் அறிந்தவர்களான அந்த மந்திரிகள், புத்திரர்களில்லாத போது ராஜனை சங்கலனஞ் செய்ய {தகனஞ் செய்ய / எரியூட்ட} விரும்பாததால் அந்த பூமிபதியை இவ்வாறு {பதப்படுத்தி} பாதுகாத்தனர்.(15) 

அந்த நராதிபனை அவர்கள் {மந்திரிகள்} தைலதுரோண்யத்தில் கிடத்துவதை அறிந்த ஸ்திரீகள், "ஹா {ஐயோ}, இவர் இறந்துவிட்டாரே" என்று கதறி அழுதனர்.(16) கண்ணீர் வழியும் கண்களுடன் கூடிய முகங்களைக் கொண்ட அந்தப் பரிதாபத்திற்குரியவர்கள், சோகசந்தாபத்தால் பீடிக்கப்பட்டு அழுதவாறே தங்கள் கைகளை உயர்த்திக் கொண்டு {பின்வருமாறு} பரிதாபமாக அழுது புலம்பினார்கள்:(17) "ஹா, மஹாராஜா, பிரியவாதியும் {அன்புடன் பேசுபவனும்}, சதா சத்தியசந்தனுமான {எப்போதும் சத்தியத்தைக் காப்பவனுமான} ராமன் இல்லாதபோது, ஏன் எங்களை விட்டுச் சென்றீர்?(18) இராமன் தொலைதூரத்தில் இருக்கும்போது விதவைகளாகியிருக்கும் நாங்கள், துஷ்டஸ்வபாவம் கொண்டவளும், பதிக்னையுமான {பதியைக் கொன்றவளுமான} கைகேயியின் அருகில் எப்படி வாழ்வோம்?(19) பிரபுவும், ஆத்மவானும், ஸ்ரீமானும், சதா எங்களுக்கும், உமக்கும் நாதனாக {பாதுகாவலனாக} விளங்கியவனுமான அந்த ராமன், நிருபதிசிரியத்தை {ராஜ்ஜியலக்ஷ்மியை} விட்டு விட்டு வனத்திற்குச் சென்றுவிட்டான்.(20) நீரும் இல்லாமல், அந்த வீரனுமில்லாமல் விசனமோஹத்தில் இருக்கும் {துன்பத்தில் மெய்மறந்திருக்கும்} நாங்கள், கைகேயியால் இகழப்பட்டு எவ்வாறு காலங்கழிப்போம்?(21) ராஜரையும், ராமனையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணனையும், சீதையையும் எவள் கைவிட்டாளோ அவள் பிறரையும் ஏன் கைவிடமாட்டாள்?" {என்று சொல்லி அழுதுபுலம்பினர்}.(22)

சோகத்தில் அதிகமாகக் கண்ணீர் சிந்திய அந்த ராகவனின் வரஸ்திரீகள் {தசரதனின் சிறந்த மனைவியர்}, ஆனந்தமிழந்தவர்களாக வரிசையாகத் தரையில் உருண்டு புரண்டனர்.(23) மஹாத்மாவான அந்த ராஜன் இல்லாத அயோத்தியாபுரி, பர்த்தா இல்லாத ஸ்திரீயைப் போலவும், சந்திரனில்லாத நிசியைப் போலவும் ஒளியிழந்திருந்தது.(24) கண்ணீருடன் கலங்கி நின்ற ஜனங்கள், "ஹா, ஹா" வென அழுது புலம்பிய குலாங்கனைகள் {கற்புடைய பெண்கள்}, சூன்யமான மாளிகைகளின் வாயில்கள், சதுரசாலைகள் ஆகியவற்றுடன் கூடிய அது {அந்த அயோத்தி}, பூர்வத்தைப்போன்ற ஒளியுடன் துலங்கவில்லை.(25)

நராதிபன் சோகத்துடன் திரிதிவத்திற்கு {ஸ்வர்க்கத்திற்குச்} சென்று, நிருபாங்கனைகள்  மஹீதலத்தில் கிடந்தபோது {மன்னனின் மனைவியர் தரையில் கிடந்தபோது}, ரவி {சூரியன்} தன் இயக்கத்தில் இருந்து பின்வாங்கி விரைவாகச் சென்றுவிட்டான். இருள் பரப்பத் தொடங்கும் ரஜனியும் {இரவும்} வந்தாள்.(26) அங்கே வந்த நண்பர்களும், உறவினர்களும், புத்திரர்கள் இல்லாத போது அந்த மஹீபதியின் தகனத்தை விரும்பவில்லை. இவ்வாறு சிந்தித்துக் கொண்டே சிந்தனைக்கும் புலப்படாத அந்த சயனத்தில் ராஜனை வைத்திருந்தனர்.(27) அந்த மஹாத்மாவால் {தசரதனால்} கைவிடப்பட்டதும், கண்ணீரால் குரலுடைந்த மக்களுடன் கூடிய சாலைகளையும், நாற்சந்திகளையும் கொண்ட அந்த நகரம், பாஸ்கரன் இல்லாத வானத்தைப் போலவும், நக்ஷத்ராகணங்கள் இல்லாத இரவைப் போலவும் பிரபையற்று ஒளியிழந்தது.(28) அந்த நரதேவன் {தெய்வீகனான தசரதன்} இறந்தபோது, அந்நகரத்தின் நரநாரீகள் கூட்டங்கூட்டமாகச் சேர்ந்து பரதனின் மாதாவை இகழ்ந்தும் அமைதியடையாமல் வேதனையடைந்தனர்.(29)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 066ல் உள்ள சுலோகங்கள் : 29

Previous | Sanskrit | English | Next

Monday, 12 September 2022

அந்தப்புர ஸ்திரீகள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 065 (29)

The women of gynaecium | Ayodhya-Kanda-Sarga-065 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தசரதன் இறந்ததைக் கண்டுபிடித்த பெண்கள்; தசரதனின் மனைவியர் அனைவரும் பரிதாபமாக அழுதது...

Dasaratha's death

அந்த ராத்திரி கடந்து விடியத் தொடங்கிய அடுத்த நாளில், உயர்ந்த பண்பாட்டைக் கொண்டவர்களும், உத்தம கல்வியைக் கற்றவர்களுமான சூதர்களும், மங்கல ஆசிகளை உதிர்ப்பவர்களும், துதிப்பதையே வழக்கமாகக் கொண்டவர்களுமான காயகர்களும் {பாடகர்களும்}, பல்வேறு வகைகளில் தங்கள் வாழ்த்துகளைச் சொல்பவர்களான வந்திகளும் அந்த பார்த்திப நிவேசனத்திற்கு {ராஜமாளிகைக்குத்} தனித்தனியாக வந்தனர்.(1,2) அவர்களின் துதிகளும், ராஜனைக் குறித்த உரத்த குரல் வாழ்த்துகளும், பாராட்டுகளும் அந்த மாளிகையின் உள்ளரங்குகளை நிறைக்கும் வண்ணம் முற்றாகப் பரவியது.(3) அந்த சூதர்கள் துதித்ததும், சில பாணிவாதகர்கள் {கைத்தாளமிடும் பாடகர்கள்}, அவனது {தசரதனின்} செயல்களைப் புகழ்ந்து கைத்தாளத்துடன் பாடிக்கொண்டிருந்தனர்.(4) 

இராஜகுல கோசரங்களிலும் {ராஜமாளிகை வசிப்பிடங்களிலும்}, மரக்கிளைகளிலும், கூண்டுகளிலும் இருந்த பறவைகள் அவ்வொலியால் விழித்தெழுந்து கீச்சொலி எழுப்பத் தொடங்கின.(5) வீணையின் ஒலியுடன் வெளிப்பட்ட புண்ணிய சப்தங்களும், பூர்ண ஆசீர்வாதங்களுடன் கூடிய காதானங்களும் {புனிதப் பாடல்களும்} அந்த வேஷ்மத்தை {மாளிகையை} நிரப்பின.(6) பூர்வத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் தூய நடைமுறைகளைப் பராமரித்தவர்களும், கோவின் {அரசனின்} தொண்டில் திறம்படைத்தவர்களுமான பெண்களும், அலிகளும் அங்கே தொண்டாற்ற வந்தனர்.(7) 

ஸ்நானத்தை {நீராடலைக்} குறித்து அறிந்தவர்கள், உரிய காலத்திலும், உரிய விதிப்படியும் மஞ்சள், சந்தனம் கலந்த நீரைக் காஞ்சன கடங்களில் {பொற்குடங்களில்} அங்கே கொண்டு வந்தனர்.(8) அவ்வாறே ஸ்திரீகுமாரிகளும் {கன்னிப் பெண்களும்}, மேனியில் பூசிக் கொள்வதற்கான மங்கல பொருட்களையும், சிற்றுண்டிகளையும், அலங்காரப் பொருட்களையும் கொண்டு வந்தனர்.(9) அவனருகே கொண்டு வரப்பட்ட சர்வமும், விதிப்படி மதிப்புடன் அங்கே வைக்கப்பட்டன. சர்வ லக்ஷணங்களும் பொருந்திய அவை அனைத்தும் சுகுணலக்ஷ்மீகரமாக {பேரருள் நிறைந்தவையாக} இருந்தன.(10) அதன்பிறகு பெரும் பரபரப்புடன் வந்த அவர்கள் அனைவரும், "இஃது என்ன" என்ற ஐயத்துடன் சூரியோதயம் வரையில் அவனை நெருங்காமல் அங்கேயே நின்றனர்.(11)

பிறகு அந்தக் கோசலேந்திரனின் {கோசல நாட்டுத் தலைவனான தசரதனின்} சயனம் வரை தடையில்லாமல் செல்லக்கூடிய ஸ்திரீகள் மட்டும் ஒன்றுகூடிச் சென்று, தங்கள் பர்த்தாவை நெருங்கி {தலைவனை / கணவனை நெருங்கி, மெதுவான வாக்கியங்களைச் சொல்லி} அவனை எழுப்பினர்.(12) விநயத்திலும், நயத்திலும் {பணிவிலும், அறிவிலும்}  உசிதமான நடத்தை கொண்ட அவர்களும், அவனது சயனத்தை ஸ்பரிசிக்காததால் எதையும் உணராமலிருந்தனர்.(13) உறக்கத்தில் கனவு காணும்போதான உடலின் நிலை, அங்க அசைவுகள் போன்றவற்றை அறிந்தவர்களான அந்த ஸ்திரீகள், ராஜனின் பிராணனைக் குறித்த அச்சத்தில், பிரவாஹத்தை {நீரோட்டத்தை} எதிர்த்து நிற்கும் நீர்வஞ்சிப்புல் நுனிகளைப் போல நடுங்கிக் கொண்டிருந்தனர்.(14,15அ) எதிர்வரப்போகும் பாபத்தை நினைத்து அஞ்சிக் கொண்டிருந்த அந்த ஸ்திரீகளின் சந்தேக மனங்கள், அந்தப் பார்த்திபனை {மன்னன் தசரதனை} இவ்வாறு கண்டதும் ஒரு நிச்சயத்தையடைந்தன.(15ஆ,16அ)

புத்திரசோகத்தால் பீடிக்கப்பட்டவர்களும், உறங்கிக் கொண்டிருந்தவர்களுமான கௌசல்யையும், சுமித்திரையும் காலனால் முற்றிலும் பீடிக்கப்பட்டவர்களைப் போல விழிக்காமல் கிடந்தனர்.(16ஆ,17அ) பிரகாசமிழந்தவளும், வர்ணமிழந்தவளும் {நிறம் மங்கியவளும்}, சோகத்தாலும், சன்னதத்தாலும்  {மயக்கத்தாலும்} மெலிந்திருந்தவளுமான கௌசல்யை, இருளில் மூழ்கிய தாரையை {நட்சத்திரத்தைப்} போல ஒளியிழந்திருந்தாள்.(17ஆ,18அ) ராஜனுக்கு அருகிலேயே இருந்த கௌசல்யா தேவியும், அவளது அருளில் இருந்த சுமித்திரையும் சோகக்கண்ணீரில் மறைந்த முகத்துடன், {முன்பு போல} ஒளிராமல் இருந்தனர்.(18ஆ,19அ) சுபர்களான அந்த தேவிகள் உறங்குவதையும், நிருபனின் நிலையையும் கண்ட அந்தப்புரத்தினர், உறக்கத்திலேயே அவனது பிராணன் போயிருக்க வேண்டுமென மனத்தில் நினைத்தனர்.(19ஆ,20அ) பிறகு பரிதாபத்திற்குரிய அந்த வராங்கனைகள் {பெண்கள்}, அரண்யத்தின் ஸ்தானத்தில் இருந்து விலக்கப்பட்ட கரேணங்களை {பெண் யானைகளைப்} போல உரத்த குரலில் அழுதனர்.(20ஆ,21அ)

அவர்களின் அலறலைக் கேட்ட கௌசல்யையும், சுமித்திரையும் உடனே நித்திரையில் இருந்து விடுபட்டு சுயநனவை அடைந்தனர்.(21ஆ,22அ) அப்போது அந்தப் பார்த்திபனைக் கண்டும், ஸ்பரிசித்தும் பார்த்த கௌசல்யையும், சுமித்திரையும், "ஹா நாதரே" என்று அலறியவாறே தரணீதலத்தில் {பூமியின் தரையில்} விழுந்தனர்.(22ஆ,23அ) மஹீதலத்தில் {பூமியின் தரையில்} உருண்டு, புரண்ட அந்த கௌசல்யேந்திரன் மகள் {கௌசல்யை}, ககனத்திலிருந்து விழுந்த தாரையை {வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரத்தைப்} போலப் பிரகாசிக்காமல் இருந்தாள்.(23ஆ,24அ) அந்த நிருபன் குணமழிந்தவனான போது {இறந்த பிறகு}, கொல்லப்பட்டு விழுந்த நாகவதுவை {பெண்யானையைப்} போலப் புவியில் விழுந்த கௌசலையை அந்த ஸ்திரீகள் அனைவரும் கண்டனர்.(24ஆ,25அ)

அதன்பிறகு, கைகேயீ பிரமுகர்களும் {கைகேயியைச் சார்ந்தவர்களும்}, நரேந்திரனின் ஸ்திரீகள் அனைவரும் சோகத்தால் பீடிக்கப்பட்டு அழுதவாறே சுயநனவு அகன்று விழுந்தனர்.(25ஆ,26அ) அழுது கொண்டிருந்தவர்களால் உண்டான பலத்த சந்நாதத்துடன் {ஓங்கி ஒலித்த ஒலியுடன்} இவர்களின் ஒலியும் இணைந்து, அந்தக் கிருஹத்தையே {வீட்டையே} பிளக்கும் பேரொலியானது.(26ஆ,27அ) திஷ்டாந்தத்தை {இறுதி முடிவை} அடைந்த அந்த நரதேவனின் சத்மம் {மன்னனின் அந்தப்புரம்}, மனவேதனையுற்று திகிலடைந்த ஜனாகுலத்தால் {மக்கள் கூட்டத்தால்} நிறைந்ததாகவும், முற்றிலும் கலக்கமுற்றதாகவும், சுற்றிலும் கலங்கிய பந்துக்களுடன் {உறவினர்களுடன்} கூடியதாகவும், துன்பத்தாலும், விரக்தியாலும் ஆனந்தம் இழந்ததாகவும் காணப்பட்டது.(27ஆ-29அ) புகழ்பெற்றவனான அந்த பார்த்திபரிஷபன் {மன்னர்களில் காளையான தசரதன்} காலமானதை அறிந்த அவனது பத்தினிகள் {மனைவியர்}, பெருந்துக்கத்துடன் அவனைச் சூழ்ந்து, அநாதைகளைப் போல ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக் கொண்டு பரிதாபகரமாக அழுது புலம்பினர்.(29ஆ-29உ)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 065ல் உள்ள சுலோகங்கள் : 29

Previous | Sanskrit | English | Next

Sunday, 21 August 2022

கௌசல்யையின் வருத்தம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 062 (21)

Kaushalya repents | Ayodhya-Kanda-Sarga-062 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் தவறுக்கு வருந்தி மன்னனைத் தேற்றிய கௌசல்யை; துன்புற்ற தசரதன் உறக்கத்தில் ஆழ்ந்தது...

Kausalya Dasaratha Sumitra

சோகத்தில் பீடிக்கப்பட்ட ராமனின் மாதாவால் {கௌசல்யையால்} இவ்வாறு கோபத்துடன் சொல்லப்பட்ட கடும் வாக்கியங்களைக் கேட்ட ராஜா {தசரதன்} துக்கத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.(1) இவ்வாறு சிந்தித்த  அந்த நிருபன் {மனிதர்களின் தலைவனான தசரதன்}, இந்திரியங்கள் கலங்கியவனாக மோஹமடைந்தான் {பொறிகள் கலங்கி மூர்ச்சித்தான்}. அந்தப் பரந்தபன் {பகைவரை எரிப்பவனான தசரதன்}, நீண்ட நேரத்திற்குப் பிறகே தன் நினைவை அடைந்தான்.(2) 

அவன் {தசரதன்}, தன் நினைவு மீண்டதும், தீர்க்க உஷ்ண {நீண்ட வெப்பப்} பெருமூச்சைவிட்டான். தன் அருகில் நிற்கும் கௌசலையைக் கண்டு மீண்டும் {வருந்தி} சிந்திக்கத் தொடங்கினான்.(3) அவ்வாறு அவன் சிந்தித்த போது, சப்தத்தைக் கொண்டு துளைப்பவனாக {ஒலியைக் கொண்டே குறியை எய்பவனாகப்} பூர்வத்தில் அஞ்ஞானத்தால் {அறியாமையால்} தான் செய்த தீச்செயலை நினைத்தான்.(4) பிரபுவான அந்த மஹாராஜா {தசரதன்}, இந்த சோகத்தாலும், ராமனைக் குறித்த சோகத்தினாலும் பீடிக்கப்பட்டவனாக இரட்டை சோகங்களால் மனம் தளர்ந்தான்.(5)

இந்த சோகங்களால் பீடிக்கப்பட்ட அந்த பூபதி {நிலத்தலைவன் தசரதன்}, மெய்நடுங்கி, தலை கவிழ்ந்து கைக்கூப்பிக் கொண்டு, கௌசல்யையின் அருள் வேண்டி இதைச் சொன்னான்:(6) "கௌசல்யா, உன் அருளை வேண்டியே நான் இந்த அஞ்சலியைச் செய்கிறேன் {கைக்கூப்பிக் கெஞ்சுகிறேன். என்னை மன்னித்துக் கொள்வாயாக}. பிறரிடம் கூட நீ நித்தியம் வாத்சல்யத்துடனும் {பாசத்துடனும்}, அன்புடனும் இருந்து வருகிறாய்.(7) தேவி, தர்மத்தை உள்ளபடியே அறியும் நாரீகளுக்கு {பெண்களுக்கு}, பர்த்தா {கணவன்} குணவானாகவோ, நிர்குணனாகவோ {குணமற்றவனாகவோ} இருந்தாலும், உண்மையில் அவனே அவர்களுக்குப் பிரத்யக்ஷ தைவதமாவான் {கண்கண்ட தெய்வமாவான்}.(8) உலகத்திலுள்ள நன்மை தீமைகளைப் புரிந்து, நித்தியம் தர்மத்தையே நோக்கமாகக் கொண்டிருக்கும் நீ துக்கமடைந்திருந்தாலும், துக்கத்திலிருக்கும் என்னிடம் பிரியமற்ற {விரும்பத்தகாத} சொற்களைப் பேசக்கூடாது" {என்றான் தசரதன்}.(9)

கௌசல்யை, தீனனான ராஜனால் பரிதாபமாகச் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு, வாய்க்காலில் பெருகி ஓடும் புது மழைநீரைப் போலக் கண்ணீர் வடித்தாள்.(10) தாமரை மலர் போலக் கூப்பியிருந்த ராஜனின் கைகளைக் குவித்துத் தன் தலையைப் பற்றிக் கொண்டவள் {கௌசல்யை}, அழுது கொண்டே, பயத்துடன் கூடிய அவசரமான சொற்களைக் குழப்பத்துடன் சொன்னாள்:(11) "தேவா, சிரம்பணிந்து உம்மை யாசிக்கிறேன். பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுகிறேன். என்னைக் கேடு பீடித்தது. என்னிடம் நீர் பொறுமை காக்க வேண்டியதில்லை.(12) வீரரே, போற்றத்தகுந்தவனும், புத்திசாலியுமான கணவனால் எந்தப் பெண் வேண்டப்படுவாளோ, அவளுக்கு இரு உலகங்களும் இல்லை {இம்மையையும், மறுமையையும் இல்லை. இவ்வுலகத்திலுள்ளவர்களும் அவளை நிந்திப்பார்கள், பரலோகத்திலும் அவள் தண்டிக்கப்படுவாள்}.(13) தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, நான் தர்மங்களை அறிவேன். நீர் சத்தியவாதி என்பதையும் அறிவேன். ஆயினும் புத்திரசோகத்தில் தவித்த நான் மொழிதற்கரிய மொழிகளை மொழிந்தேன்.(14) 

சோகம் தைரியத்தை நாசம் செய்யும், சோகம் கேள்வியை {கல்வியை} நாசம் செய்யும், சோகம் அனைத்தையும் நாசம் செய்யும். சோகத்துக்கு இணையான ரிபு {எதிரி} வேறேதும் இல்லை.(15) எதிரியின் கையிலிருந்து விழும் அடியைத் தாங்கிக் கொள்ள முடியும். திடீரென நேரும் சூக்ஷ்ம {சிறு} சோகத்தையுந் தாங்கிக் கொள்ளவே முடியாது.(16) வீரரே, தர்மத்தை அறிந்தவர்களும், சுருதிகளைக் கற்றவர்களும், தர்மார்த்தங்களில் {அறம், பொருள்களில்} உள்ள சிறு ஐயங்களிலும் தெளிவடைந்தவர்களுமான யதிகளுங் கூட சோகத்தால் மனம் பீடிக்கப்படும்போது வழிதவறுகிறார்கள்.(17) இராமன் வனவாசம் சென்று இன்றோடு பஞ்சராத்திரிகள் {ஐந்து இரவுகள்} ஆகின்றன. சோகத்தால் மகிழ்ச்சி அழிந்த எனக்கு, அது பஞ்ச வருஷங்களை {ஐந்து ஆண்டுகளைப்} போன்றது.(18) நான் அவனை {ராமனைக்} குறித்து சிந்திக்கையில், வேகமான நதிகளால் பெருகும் மஹத்தான சமுத்திர நீரைப் போல என் ஹிருதய சோகம் வளர்கிறது {என்றாள் கௌசல்யை}.(19)

கௌசல்யை இந்த சுபச் சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சூரியன் மந்தமடைந்தான் {ஒளிமங்கினான் / மறைந்தான்}; இரவும் ஆனது.(20) இவ்வாறு கௌசல்யா தேவியால் மகிழ்ந்த அந்த நிருபன், சோகத்தைக் கடந்து நித்திரையின் வசமடைந்தான்.(21)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 062ல் உள்ள சுலோகங்கள் : 21

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை