Showing posts with label வஜ்ரதம்ஷ்டிரன். Show all posts
Showing posts with label வஜ்ரதம்ஷ்டிரன். Show all posts

Tuesday, 31 December 2024

வஜ்ரதம்ஷ்ட்ர வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 054 (38)

Vajradamshtra killed | Yuddha-Kanda-Sarga-054 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வஜ்ரதம்ஷ்டிரனுடன் போரிட்டு வாளால் அவனது தலையை வெட்டிக் கொன்ற அங்கதன்...

Fight between Angadha and Vajradamshtra

மஹாபலவானான ராக்ஷசன் வஜ்ரதம்ஷ்ட்ரன், தன் பலத்தின் {படையின்} அழிவாலும், அங்கதனின் வெற்றியாலும் குரோதம் அடைந்தான்.(1) அவன், சக்ரனின் அசனியை {இந்திரனின் இடியைப் போல} ஒலிக்கும் கோரமான தன் தனுவை {பயங்கரமான வில்லை} வளைத்து, வானரர்களின் அனீகத்தை {படையை} சரமாரியால் {கணைமழையால்} சிதறடித்தான்.(2) அப்போது, முக்கியர்களும், சூரர்களுமான அந்த ராக்ஷசர்கள், ரதங்களில் அமர்ந்து, நானாவித ஆயுதங்களை ஏந்தியபடியே ரணத்தில் {போர்க்களத்தில்} யுத்தம் புரிந்தனர்.(3) வானரர்களில் சூரர்களான அந்த சர்வ பிலவக உத்தமர்களும், அப்போது பாறைகளைக் கைகளில் ஏந்தியபடியே அனைத்துப் பக்கங்களிலும் ஒன்று கூடியவர்களாக யுத்தம் புரிந்தனர்.(4)

Saturday, 28 December 2024

வஜ்ரதம்ஷ்டிரன் | யுத்த காண்டம் சர்க்கம் - 053 (33)

Vajradamshtra | Yuddha-Kanda-Sarga-053 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: போருக்கு வஜ்ரதம்ஷ்டிரனை அனுப்பிய ராவணன்; வானரர்களுக்கும் ராக்ஷசர்களுக்கும் இடையில் நடந்த கடும்போர்...

Vajradamshtra marching for war

இராக்ஷசேஷ்வரன் ராவணன், தூம்ராக்ஷன் ஹதம் செய்யப்பட்டதை {கொல்லப்பட்டதைக்} கேட்டு உரகத்தை {பாம்பைப்} போலப் பெருமூச்சு விட்டு மஹா குரோதத்தில் ஆழ்ந்தான்.{1} தீர்க்கமாகவும், உஷ்ணமாகவும் பெருமூச்சுவிட்டுக் குரோதத்தில் மதிமயங்கிய அவன் {ராவணன்}, குரூரனும், மஹாபலவானுமான வஜ்ரதம்ஷ்ட்ரன்[1] என்ற ராக்ஷசனிடம் {பின்வருமாறு} பேசினான்:(1,2) “வீரா, ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாக நீ புறப்பட்டுச் செல்வாயாக. சென்று, வானரர்களுடன் சேர்த்து தாசரதியான ராமனையும், சுக்ரீவனையும் கொல்வாயாக” {என்றான் ராவணன்}.(3)

[1] கம்பராமாயணத்தில், இந்த வஜ்ரதம்ஷ்ட்ரன், “வச்சிரத்து எயிற்றவன்” என்று குறிப்பிடப்படுகிறான். வால்மீகியில் வஜ்ரதம்ஷ்ட்ரன் அங்கதனால் கொல்லப்படுகிறான். கம்பனில் வச்சிரத்து எயிற்றவன் ஹனுமானால் கொல்லப்படுகிறான். கம்பனில் புகைநிறக் கண்ணன் {தூம்ராக்ஷன்} ஹனுமானால் கொல்லப்பட்ட பிறகு, மாபக்கன் என்ற ராக்ஷசனை அங்கதன் கொல்கிறான்.

“அப்படியே ஆகட்டும்” என்று ராக்ஷசேஷ்வரனிடம் சொன்ன அந்த மாயாவி {வஜ்ரதம்ஷ்ட்ரன்}, பரிவாரத்தைச் சேர்ந்த ஏராளமானோரால் சூழப்பட்டவனாகப் புறப்பட்டுச் சென்றான்[2].{4} நாகங்கள், அஷ்வங்கள் {யானைகள், குதிரைகள், கோவேறு} கழுதைகள், ஒட்டகங்கள், பதாகைகள், துவஜங்களுடன் கூடிய ரதங்கள் ஆகியவற்றால் சூழப்பெற்று ஒளிர்பவனாக அவன் இருந்தான்.(4,5) அப்படியே, விசித்திரமான கேயூரங்கள், மகுடம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவனாகவும், கவசந்தரித்து, தனுசை ஏந்தியவனாகவும் புறப்பட்டுச் சென்றான்.(6) சம்முபதியான அவன் {படைத்தலைவனான வஜ்ரதம்ஷ்ட்ரன்}, பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டதும், தப்த காஞ்சனத்தால் {புடம்போட்ட பொன்னால்} ஜொலிப்பதுமான ரதத்தை பிரதக்ஷிணம் செய்து {வலம் வந்து} அதில் ஏறினான்.(7)


யஷ்டிகள் {தடிகள்}, சித்திரமான தோமரங்கள், சூலங்கள், முசலங்கள், பிண்டிபாலங்கள், பாசங்கள், சக்திகள்,{8} பட்டிசங்கள், கட்கங்கள் {வாள்கள்}, சக்திகள், கதைகள், கூரிய பரசுகள், ஆகிய விதவிதமான சஸ்திரங்களுடன் காலாட்படையினர் அணிவகுத்துச் சென்றனர்.(8,9) விசித்திரமான ஆடைகளை அணிந்து ஒளிர்பவர்களும், மதங்கொண்ட கஜங்களில் இருக்கும் சூரர்களுமான சர்வ ராக்ஷச புங்கவர்களும், அசையும் பர்வதங்களைப் போல அணிவகுத்துச் சென்றனர்.(10) யுத்தகுசலர்களான {போரில் தேர்ந்தவர்களான} அவர்களும், தோமரங்கள், அங்குசங்கள் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவர்களும், மஹாபலவான்களுக்குரிய லக்ஷணங்கள் பொருந்திய வேறு சிலரும் {அவ்வாறே யானைகளில்} ஏறினர்.(11) 

அப்படிப் புறப்பட்டுச் சென்ற அந்த சர்வ ராக்ஷச பலமும் {படையும்}, மழைக்காலத்தில் மின்னலுடன் நாதம் செய்யும் மேகத்தைப் போல சோபித்தபடியே,{12} யூதபன் {குழுத் தலைவன்} அங்கதன் எங்கிருந்தானோ, அந்த தக்ஷிண துவாரத்தில் {தென்வாயிலில்} வெளிப்பட்டது.(12,13அ) அவர்கள் அப்படி வெளிப்பட்ட போது, அசுபங்கள் {தீய சகுனங்கள்} தோன்றின.{13ஆ} அப்போது, மேகமற்ற ஆகாசத்திலிருந்து தீவிரமான உல்முகங்கள் {விண்கற்கள்} விழுந்தன. கோரமான நரிகள், பாவக ஜுவாலைகளை {நெருப்புச் சுடர்களைக்} கக்கியபடியே பயங்கரமாக ஊளையிட்டன.(13ஆ,14) பிறகு, கோரமான மிருகங்கள், ராக்ஷசப் போர்வீரர்களின் மரணத்தை முன்னறிவித்தன. {அவ்வாறே} புறப்பட்டுச் சென்ற போர்வீரர்களும் அச்சமடைந்து கால் இடறி விழுந்தனர்.(15)

மஹாபலவானும், தேஜஸ்வியுமான வஜ்ரதம்ஷ்டிரன் இந்த உத்பாதங்களை {அபசகுனங்களைக்} கண்டு, தைரியத்தை நம்பி ரண உற்சாகத்துடன் {போரிடும் ஆவலுடன்} புறப்பட்டுச் சென்றான்.(16) வெற்றியை விரும்புகிறவர்களான வானரர்கள், அவர்கள் {ராக்ஷசர்கள்} புறப்பட்டு வருவதைக் கண்டு, பத்துத் திசைகளையும் தங்கள் மஹாநாதத்தால் நிறைத்தனர்.(17) பிறகு, அன்யோன்யம் வதம் செய்ய {ஒருவரையொருவர் கொல்ல} விரும்பும் ஹரிக்களுக்கும் {குரங்குகளுக்கும்}, கோரர்களும், பயங்கர ரூபம் கொண்டவர்களுமான அந்த ராக்ஷசர்களுக்கும் இடையில் பயங்கரமான போர் மூண்டது.(18) மஹா உற்சாகத்துடன் புறப்பட்டு வந்த அவர்கள், தேகங்களும், சிரங்களும் வெட்டப்பட்டு, சர்வாங்கங்களும் உதிரத்தால் நனைந்தவர்களாக தரணீதலத்தில் {தரையில்} விழுந்தனர்.(19) சமரில் புறமுதுகிடாத சில சூரர்கள், பரிகங்களைக் கையில் ஏந்திக் கொண்டு அன்யோன்யம் {ஒருவரையொருவர்} அணுகி விதவிதமான சஸ்திரங்களை ஏவினர்.(20)

அங்கே மரங்கள், பாறைகள், சஸ்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு கோரமாக ஹிருதயங்களைப் பிளக்கும் உரத்த ஒலி போர்க்களத்தில் கேட்டது.(21) அங்கே வெளிப்பட்ட ரதங்களின் நேமிஸ்வனம் {சக்கரவொலி}, தனுசின் {வில்லின்} ஒலி கேட்டது. சங்கு, பேரிகை, மிருதங்கங்களின் ஆரவார ஸ்வனமும் கேட்டது.(22,23அ) சிலர் அஸ்திரங்களைக் கைவிட்டு, கைகளைக் கட்டிக் கொண்டு போர் செய்யாதிருந்தனர்.{23ஆ} உள்ளங்கைகள், சரணங்கள் {கால்கள்}, முஷ்டிகள் {கைமுட்டிகள்}, மரங்கள், முழங்கால்கள் {கால்முட்டிகள்} ஆகியவற்றைக் கொண்டு வானரர்களால் ஹதம் செய்யப்பட்ட {கொல்லப்பட்ட} சில ராக்ஷசர்களின் சிதைந்த தேகங்கள் பாறைகளால் நசுக்கப்பட்டன.(23ஆ-25அ)

உலக சம்ஹாரத்தின் போது பாச ஹஸ்தனான அந்தகனை {பிரளய காலத்தில் கையில் பாசக்கயிற்றைக் கொண்ட யமனைப்} போல வஜ்ரதம்ஷ்ட்ரன், ரணத்தில் {போரில்} தன் பாணங்களால் ஹரிக்களை {குரங்குகளை} அச்சுறுத்தியபடியே திரிந்தான்.(25ஆ,26அ) நானாவித அஸ்திரங்களைக் கொண்டவர்களும், அஸ்திரவித்துகளும், பலவான்களுமான ராக்ஷசர்கள், குரோதத்தில் மூர்ச்சித்தவர்களாக ரணத்தில் {போரில்} வானர சைனியத்தை எதிர்த்துச் சென்றனர்.(26ஆ,27அ)

அதைக் கண்ட வாலிசுதன் {வாலி மைந்தன் அங்கதன்}, சம்வர்த்தக அனலனை {பிரளய கால அக்னியைப்} போல இரு மடங்கு குரோதத்துடன், ரணத்தில் {போரில்} அந்த ராக்ஷசர்கள் அனைவரையும் கொன்றான்.(27ஆ,28அ) குரோதத்தால் கண்கள் சிவந்தவனும், வீரியவானுமான அங்கதன், ஒரு விருக்ஷத்தைப் பிடுங்கி, இழிந்த மிருகங்களை {கொல்லும்} சிம்ஹம் போல, ராக்ஷச கணத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரையும், சக்ரனுக்குத் துல்லியமான பராக்கிரமத்துடன் கோரமாகக் கொன்றான்.(28ஆ,29) பீம விக்கிரமர்களான ராக்ஷசர்கள், அங்கே அங்கதனால் தாக்கப்பட்டு, சிதைந்த சிரசுகளுடன் {தலைகளுடன்}, வெட்டப்பட்ட மரங்களைப் போல விழுந்தனர்[3].(30)

[3] மாபக்கனும் அங்கதனும் மலைவார்
தீபத்தின் எரிந்து எழு செங் கணினார்
கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார்
தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால்

- கம்பராமாயணம் 7374ம் பாடல், யுத்த காண்டம், படைத் தலைவர் வதைப் படலம்

பொருள்:  போரிடுபவர்களான மாபக்கனும் {வஜ்ரதம்ஷ்ட்ரனும்}, அங்கதனும் விளக்கைப் போல் எரிந்து எழும் சிவந்த கண்களையும், சினத்தையும், தூபத்தைப் போல் புகை வெளிப்படும் பெருமூச்சினையும் உடையவர்களாக ஒருவரையொருவர் கொல்ல நினைத்து {எதிரிகளை} அழித்துக் கொல்வதைத் தொடர்ந்தனர்.

அப்போது ரதங்கள், சித்திரமான துவஜங்கள் {கொடிமரங்கள்}, அஷ்வங்கள் {குதிரைகள்}, உதிரத்தில் நனைந்த ஹரிராக்ஷசர்களின் சரீரங்கள் {ரத்தத்தில் நனைந்த குரங்குகள், ராக்ஷசர்களின் உடல்கள்} ஆகியவற்றுடன் பூமியானது பயங்கரமாகத் தெரிந்தது.(31) இரணத்தில் {போர்க்களத்தில்} பூமியானது, ஹாரங்கள், கேயூரங்கள் {கைவளைகள்}, வஸ்திரங்கள், சத்ரங்கள் {குடைகள்} ஆகியவற்றுடன் சரத்கால நிசியை {கூதிர்கால இரவைப்} போல அலங்கரிக்கப்பட்டது.(32) பவனனின் {வாயுவின்} வேகத்தால் மேகம் எப்படியோ, அப்படியே அங்கே அந்த மஹத்தான ராக்ஷச பலம் {படை} அங்கதனின் வேகத்தால் நடுக்கம் அடைந்தது.(33)

யுத்த காண்டம் சர்க்கம் – 053ல் உள்ள சுலோகங்கள்: 33

Previous | Sanskrit | English | Next

Wednesday, 24 July 2024

இராக்ஷசர்களின் உறுதிமொழி | யுத்த காண்டம் சர்க்கம் - 008 (24)

Assurance of Rakshasas | Yuddha-Kanda-Sarga-008 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரஹஸ்தன், துர்முகன், வஜ்ரதம்ஷ்டிரன், நிகும்பன், வஜ்ரஹனு ஆகியோர் ராமனையும், பிறரையும் கொல்வதாக ராவணனிடம் உறுதியளித்தது...

Rakshasa assuring victory to Ravana

பிறகு, அப்போது, சூரனும், சேனாபதியும், நீலமேகம் போல் தெரிந்தவனும், பிரஹஸ்தன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன், கூப்பிய கைகளுடன் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "சர்வ தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், பதகர்கள், உரகர்கள் {பறவைகள், பாம்புகள்} ஆகியோரும் போரில் உம்மைத் தாக்கவல்லவர்களல்லர்.  வானரர்களை {குரங்குகளைக்} குறித்து என்ன சொல்வது?(2) அனைவரும் கவனக்குறைவாக விசுவாசத்துடன் {நம்பிக்கையுடன்} இருந்தபோது, ஹனூமதனால் நாம் வஞ்சிக்கப்பட்டோம். நான் ஜீவித்திருக்கையில் அந்த வனகோசரன் ஜீவனுடன் {திரும்பிச்} செல்லமாட்டான்.(3) சாகரம் வரை பரந்ததும், சைலங்கள், வனங்கள், கானனங்களுடன் {சோலைகளுடன்} கூடியதுமான சர்வ பூமியையும் வானரரற்றதாகச் செய்வேன். நீர் எனக்கு ஆணையிடுவீராக.(4) இரஜனீசரரே {இரவுலாவியான ராவணரே}, வானரங்களிடம் இருந்து {லங்கையை} ரக்ஷிக்கும் ஏற்பாட்டைச் செய்கிறேன். நீர் செய்த அபராதத்தால்[1] உண்டான துக்கம் உம்மைக் கொஞ்சமும் அண்டாது" {என்றான் பிரஹஸ்தன்}.(5)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை