Kill and eat | Sundara-Kanda-Sarga-24 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சசி, அருந்ததி, ரோஹிணி முதலியோர் தங்கள் தங்கள் கணவனிடம் கொண்ட அர்ப்பணிப்பைக் குறிப்பிட்ட சீதை; ராக்ஷசிகள் சீதையைக் கொன்று உண்ணப்போவதாக அச்சுறுத்தியது...
பிறகு, கொடிய முகங்களையும், கடும் இயல்பையும் கொண்ட ராக்ஷஸ நாரியைகள் {ராக்ஷசப் பெண்கள்}, அந்த சீதையை நெருங்கி, கடுமைமிக்க, பிரியமற்ற வாக்கியத்தைப் பேசினார்கள்:(1) “சீதே, பெருஞ்சிறப்புடைய மஹத்தான சயனங்களுடன் {படுக்கைகளுடன்} கூடியதும், சர்வபூதங்களுக்கும் மனோஹரமானதுமான {அனைத்து உயிரினங்களின் மனங்களைக் கொள்ளை கொள்வதுமான} அந்தப்புரத்தில் வசிப்பதை நீ ஏற்க மறுப்பதேன்?(2) மானுஷியான நீ, ஒரு மானுஷ்யனின் பார்யத்வத்தை பஹுமானிக்கிறாய் {மனிதப்பெண்ணான நீ, மனிதனின் மனைவி என்ற நிலையை உயர்வாக மதிக்கிறாய்}. இராமனிடம் இருந்து மனத்தை விலக்குவாயாக. இல்லையெனில் நீ இல்லாமல் போவாய்.(3) மூவுலகங்களின் சுபமான செல்வங்களை அனுபவிக்கும் ராக்ஷசேஷ்வரர் ராவணரை ஏற்று, பர்த்தாவாக்கி {கணவராக்கிக்} கொண்டு விரும்பியபடி சுகமாக இருப்பாயாக.(4) சோபனே {அழகிய பெண்ணே}, அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, நீ மானுஷியாக இருப்பதால், ராஜ்ஜியத்திலிருந்து விரட்டப்பட்டவனும், வெற்றியடையாததால் வருந்தும் மானுஷனுமான அந்த ராமனை இச்சிக்கிறாய் {விரும்புகிறாய்}” {என்றனர் அந்த ராக்ஷசிகள்}.(5)
