Assurance of Rakshasas | Yuddha-Kanda-Sarga-008 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பிரஹஸ்தன், துர்முகன், வஜ்ரதம்ஷ்டிரன், நிகும்பன், வஜ்ரஹனு ஆகியோர் ராமனையும், பிறரையும் கொல்வதாக ராவணனிடம் உறுதியளித்தது...
பிறகு, அப்போது, சூரனும், சேனாபதியும், நீலமேகம் போல் தெரிந்தவனும், பிரஹஸ்தன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன், கூப்பிய கைகளுடன் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "சர்வ தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், பதகர்கள், உரகர்கள் {பறவைகள், பாம்புகள்} ஆகியோரும் போரில் உம்மைத் தாக்கவல்லவர்களல்லர். வானரர்களை {குரங்குகளைக்} குறித்து என்ன சொல்வது?(2) அனைவரும் கவனக்குறைவாக விசுவாசத்துடன் {நம்பிக்கையுடன்} இருந்தபோது, ஹனூமதனால் நாம் வஞ்சிக்கப்பட்டோம். நான் ஜீவித்திருக்கையில் அந்த வனகோசரன் ஜீவனுடன் {திரும்பிச்} செல்லமாட்டான்.(3) சாகரம் வரை பரந்ததும், சைலங்கள், வனங்கள், கானனங்களுடன் {சோலைகளுடன்} கூடியதுமான சர்வ பூமியையும் வானரரற்றதாகச் செய்வேன். நீர் எனக்கு ஆணையிடுவீராக.(4) இரஜனீசரரே {இரவுலாவியான ராவணரே}, வானரங்களிடம் இருந்து {லங்கையை} ரக்ஷிக்கும் ஏற்பாட்டைச் செய்கிறேன். நீர் செய்த அபராதத்தால்[1] உண்டான துக்கம் உம்மைக் கொஞ்சமும் அண்டாது" {என்றான் பிரஹஸ்தன்}.(5)
