Showing posts with label விபாண்டகர். Show all posts
Showing posts with label விபாண்டகர். Show all posts

Wednesday, 28 July 2021

அங்கநாடு சென்ற ரிஷ்யசிருங்கர் | பால காண்டம் சர்க்கம் - 10 (33)

Rishyasringa's arrival at Anga | Bala-Kanda-Sarga-10 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அங்க நாட்டுக்கு ரிஷ்யசிருங்கரின் வருகை; ரோமபாதனின் மகள் சாந்தையை மணந்து கொண்ட ரிஷ்யசிருங்கர்...

Rishyashringa lured into AngaDesha by Dancing Girls

இவ்வாறு ராஜனால் கேட்கப்பட்ட சுமந்திரன், இவ்வாறு மொழிந்தான், "ரிஷ்யசிருங்கர், எந்த உபாயங்களைக் கொண்டு மந்திரிகளால் அழைத்துவரப்பட்டார் என்பதைச் சொல்கிறேன், நான் சொல்பவை அனைத்தையும் உமது மந்திரிகளுடன் சேர்ந்து கேட்பீராக.(1)

புரோஹிதர்களுடன் கூடிய அந்த அமைச்சர்கள், {அங்க மன்னன்} ரோமபாதனிடம் இவ்வாறு {பின்வருமாறு} சொன்னார்கள், "அபாயமில்லாத இந்த உபாயத்தை நாங்கள் சிந்தித்திருக்கிறோம்.(2) வனவாசியான ரிஷ்யசிருங்கர் தவத்திலும், வேதகல்வியிலும் ஈடுபடுகிறாரேயன்றி, நாரீகளையோ {பெண்களையோ}, உலக விஷயங்களையோ, சுகத்தையோ அறிவாரில்லை.(3) நரர்களின் {ஆண்களின்} சித்தத்தை அமைதியடையச் செய்பவையும், இந்திரியங்களால் விரும்பப்படுபவையுமான அவற்றைக் கொண்டு அவரை நகரத்திற்கு அழைத்துவர விரும்புகிறோம். இது குறித்து உடனே தீர்மானிக்கப்படட்டும்.(4) {உம்மால்} வெகுவாகக் கொடையளிக்கப்பட்டவர்களும், அழகிகளும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களுமான கணிகையர் அங்கே சென்று பலவித உபாயங்களால் அவரை இங்கே கொண்டு வருவார்கள்" என்றனர்.(5)

இதைக் கேட்ட ராஜன், தன் புரோஹிதரிடம் {"அவ்வாறே ஆகட்டும்" என்று} மறுமொழி கூறிய பிறகு புரோஹிதர்களும், மந்திரிகளும் அவ்வாறே {ஏற்கனவே சொன்னது போலவே} செயல்பட்டனர்.(6) அதை {மன்னனின் ஆணையைக்} கேட்ட சிறந்த கணிகையர்[1] சிலர், அந்த மஹாவனத்திற்குள் பிரவேசித்து, எப்போதும் ஆசிரமத்திலேயே வசிக்கும் அந்த தீரரைத் தரிசிப்பதற்காக, அந்த ஆசிரமத்திற்கு அருகிலேயே வசித்து அந்த ரிஷி புத்ரரைக் காண முயற்சி செய்தனர்.(7,8அ) தந்தையின் ஆசிரமத்தில் எப்போதும் நிறைவுடன் இருந்த அந்தத் தவசி, {ஆசிரமத்தைவிட்டு} வெளியே வராதவர் என்பதால், நகரத்து, ராஷ்டிரத்து ஸ்திரீகளையோ, புருஷர்களையோ[2], வேறு எதையுமோ அதற்கு முன்பு கண்டவரில்லை.(8ஆ,9)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "எந்த அகராதியும் கணிகையர் என்பதற்குப் பரத்தை, விலைமகள் என்ற பொருளையே கொடுக்கும். ஆனால் இந்தியப் பின்புலத்தில் கணிகையரை விலைமகளாகவோ, பரத்தையாகவோ இழிந்த வகையில் எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் ஒரு வகைக் கலைஞர்கள். இசை, நடனம் ஆகியவற்றில் பெரும் திறமை கொண்டவர்கள்" என்றிருக்கிறது.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அஃதாவது ஆண்பெண் பாகுபாட்டை அவர் அறிந்தவரில்லை. சுகமேதும் கண்டவருமில்லை. உயர்ந்த கதியை அடைவதற்காகத் தமது தந்தையால் அந்தப் பக்குவத்தில் வளர்க்கப்பட்டிருந்தார்" என்றிருக்கிறது.

விபாண்டகரின் மகனான அவர் {அந்த ரிஷ்யசிருங்கர்}, ஒருகாலத்தில் {தற்செயலாக} அந்த இடத்திற்கு வந்து, அந்த அழகிய பெண்களைக் கண்டார்.(10) சித்திரவேஷம் பூண்ட அந்த மடந்தையர் யாவரும், மதுரஸ்வரத்தில் கானம் செய்தபடியே அந்த ரிஷிபுத்ரரின் அருகில் வந்து இந்தச் சொற்களைப் பேசினர்,(11) "பிராமணரே, நீர் யார்? ஜனங்களற்ற இந்தக் கோர வனத்தில் தனியாகத் திரிந்து கொண்டிருக்கிறீரே? ஏன் இவ்வாறு திரிகிறீர்? இதை நாங்கள் அறிய விரும்புகிறோம் சொல்வீராக" {என்றனர்}.(12)

காமரூபம் {விரும்பத்தக்க வடிவம்} கொண்ட அந்த ஸ்திரீகளைப் போன்ற ரூபங்களை அந்த வனத்தில் கண்டவரில்லை என்பதால், தம் மதியில் பிறந்த நட்புடன் தமது தந்தையைக் குறித்த விபரங்களைச் சொல்லும் வகையில், அவர்,(13) "என் தந்தை விபாண்டகர், நான் அவருடைய ஔரஸசுதன் {உண்மையான மகன்}, ரிஷ்யசிருங்கன்[3] என்ற பெயரில் இப்புவி என்னை அறியும்.(14) காண்பதற்கு இனியவர்களே, எங்கள் ஆசிரமம் இங்கே சமீபத்தில் இருக்கிறது. அங்கே உங்கள் அனைவரையும் விதிப்பூர்வமாகப் பூஜிக்க விரும்புகிறேன்" என்றார்.(15)

[3] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "அவர் தலையின் உச்சியில் கொம்புடன் பிறந்தவர். கொம்புடன் பிறந்த ரிஷி என்பதால் ரிஷ்யசிருங்கன் என்ற அவருடைய பெயர் பூமியில் புகழ்பெற்றிருந்தது" என்றிருக்கிறது.

ரிஷிபுத்திரரின் சொற்களைக் கேட்ட அவர்கள் அனைவரும் அந்த ஆசிரமத்தைக் காண மனத்தில் ஆசை கொண்டனர். பிறகு அவர்கள் அனைவரும் அங்கே சென்றனர்.(16) அந்த ரிஷிபுத்திரர் அங்கே சென்றதும் அவர்களைப் பூஜித்து, "இதோ அர்க்கியம் {வாய் மற்றும் கை கழுவும் நீர்}, இதோ பாத்யம் {கால் கழுவும் நீர்}, இதோ கனிகளும், கிழங்குகளும்" என்றார்.(17) அவர்கள் அனைவரும் நல்ல உற்சாகத்துடன் அந்தப் பூஜையை ஏற்றுக் கொண்டாலும் ரிஷியிடம் {விபாண்டகரின் வரவை எண்ணி} பீதியடைந்து சீக்கிரமாகச் சென்று விடவேண்டும் என்ற எண்ணத்தை அடைந்தவர்களாக.(18) "துவிஜரே, முக்கியமான இந்தக் கனிகளை எடுத்துக் கொள்வீராக. பத்திரமாக இருப்பீராக. விரைவில் இவற்றை உண்பீராக" என்றனர்.(19)

பிறகு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரை ஆலிங்கனம் செய்து மோதகங்கள் {லட்டுகள்}, விதம் விதமான சிறந்த பக்ஷ்யங்கள் {பணியாரம் போன்ற இனிப்பு வகைகள்} ஆகியவற்றை அவருக்குக் கொடுத்தனர்.(20) வனத்திலேயே நித்தியம் வசிக்கும் அந்தத் தேஜஸ்வி {பேரொளி படைத்தவர்}, இதற்கு முன்பு அவற்றைச் சுவைத்ததில்லை என்பதால் அவற்றை உண்டதும் கனிகள் என்றே அவற்றை நினைத்தார்.(21) அப்போது அந்த ஸ்திரீகள், அவரது தந்தையிடம் கொண்ட பீதியில் செல்பவர்களாக இருந்தாலும், விரதங்களும், நிவேத்யமும் {அறக்கடமைகளைச்} செய்ய வேண்டும் என்ற பாசாங்குடன் அந்த விப்ரரிடம் விடைபெற்றுச் சென்றனர்.(22)

காசியபரின் பேரரான அந்தத் துவிஜர், அவர்கள் அனைவரும் சென்ற பிறகு இதயம் கலங்கியவராகத் துக்கத்துடன் இருந்தார்.(23) அதற்கு அடுத்த நாளில், வீரியவானும், ஸ்ரீமானுமான அந்த விபாண்டகசுதன் {ரிஷ்யசிருங்கர்}, மனத்துக்கு இனியவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களுமான அந்த வாரமுக்யர்களை {கணிகையரைத்} தமது மனத்தில் மீண்டும் மீண்டும் சிந்தித்து, {முன்தினம்} அவர்களை எங்கே கண்டாரோ அதே இடத்திற்குச் சென்றார்.(24,25அ) அந்த விப்ரர் அங்கே வந்ததைக் கண்டு, இதயத்தில் மகிழ்ச்சியடைந்த அவர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு, "சௌம்யரே {நல்லியல்பைக் கொண்டவரே}, எங்கள் ஆசிரமத்திற்கு வாரும்" என்ற இந்தச் சொற்களைச் சொன்னார்கள்.(25ஆ,26) {மேலும் அவர்கள்}, "அங்கே மிகச்சிறந்த கனிகளும், கிழங்குகளும் இருக்கின்றன, அங்கே உண்மையில் விசேஷமான விருந்தோம்பல் நிச்சயம் நடக்கும்" என்றனர்.(27)

இதயத்திற்கு நிறைவைத் தரும் அவர்கள் அனைவருடைய சொற்களையும் கேட்டு அவர் அங்கே செல்ல நினைத்தார்; அந்த ஸ்திரீகளும் அவரை {அங்க தேசத்திற்கு} அழைத்துச் சென்றனர்[4].(28) மஹாத்மாவான அந்த விப்ரர் அங்கே அழைத்துச் செல்லப்பட்ட உடனேயே, ஜகத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் {மழை} தேவன் மழையைப் பொழிந்தான்.(29) நராதிபன் {ரோமபாதன்}, மழையுடன் தன் தேசத்திற்கு வந்து கொண்டிருக்கும் விப்ரமுனியிடம் தன்னடக்கத்துடன் சென்று, தலையால் தரையைத் தீண்டி வணங்கி[5], விதிப்படி அர்க்கியம் கொடுத்து, {தன் வஞ்சனையைக் கருதி} அந்த விப்ரேந்திரர் {ரிஷ்யசிருங்கரின் தந்தையான விபாண்டகர்} கோபமடையாமல் இருக்க அவரிடம் வரத்தை வேண்டினான்.(30,31)

[4] மஹாபாரதம் வனபர்வம் பகுதி 111ல் ஒரேயொரு கணிகை ரிஷ்யசிருங்கரை அழைத்துச் சென்றதாக இருக்கிறது. மஹாபாரதத்தில் இந்தப் பகுதி இன்னும் விரிவாக இருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "வழிபடப்படும் தேவனிடம் முழுச் சரணாகதியை அடைந்ததை வெளிப்படுத்தும் பொருட்டு உடலின் எட்டு அங்கங்களும் தரையில் தீண்டும் வகையில் வணங்குவது சாஷ்டாகப் பிரணாமம் {சாஷ்டாக நமஸ்காரம்} என்றழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. இங்கே ரோமபாதன் ரிஷ்யசிருங்கரின் முன் தன் தலை மட்டும் தரையைத் தீண்டும் வகையில் வணங்குகிறான்.

அந்த ராஜன் {ரோமபாதன்}, {நகருக்குச் சென்று} அந்தப்புரத்திற்குள் பிரவேசித்துக் கன்னிகை சாந்தையை விதிப்படி அவருக்கு {மணமுடித்துக்} கொடுத்து, {மனக்கவலை தீர்ந்து} மன அமைதியை அடைந்து மகிழ்ந்திருந்தான்.(32) மஹாதேஜஸ்வியான ரிஷ்யசிருங்கர், இவ்வாறே தம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வழிபடப்பட்டவராகத் தன் பார்யையான {மனைவியான} சாந்தையுடன் அங்கே {அங்க தேசத்தில்} வாழ்ந்திருந்தார். {என்றான் சுமந்திரன்}.(33)
 

பாலகாண்டம் சர்க்கம் –10ல் உள்ள சுலோகங்கள்: 33

Previous | Sanskrit | English | Next

Tuesday, 27 July 2021

ரிஷ்யசிருங்கர் | பால காண்டம் சர்க்கம் - 09 (20)

Rishyasringa | Bala-Kanda-Sarga-09 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம் : ரிஷ்யசிருங்கரை வேள்விக்கு அழைக்க வேண்டுமென தசரதனிடம் சொன்ன சுமந்திரன்...

Dasharatha and Sumantra

இவையனைத்தையும் கேள்விப்பட்ட சூதன் {எட்டாவது அமைச்சனான தேரோட்டி சுமந்திரன்}[1], ராஜனிடம் {தசரதனிடம்} ரகசியமாக வந்து, "நான் மொத்த புராணத்தையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) ராஜா, ரித்விக்குகள் உமக்கு உபதேசித்தார்கள். பகவான் ஸனத்குமாரர்உமக்குப் புத்திரர்கள் பிறப்பதைக் குறித்துப் பூர்வத்தில் சொன்னதை நான் கேட்டேன்.(2,3அ)

[1] இந்தச் சர்க்கத்தின் 20ம் ஸ்லோகத்தில், இவனது பெயர் சுமந்திரன் என்று சொல்லப்படுகிறது. 8ம் சர்க்கத்தின் 3வது சுலோகத்தில் அமைச்சர்களின் பட்டியிலில் எட்டாவதாக வருபவனும், இங்கே சொல்லப்படும் சூதனும் ஒருவர் என்றே மொழிபெயர்ப்பாளர்கள் பலராலும் ஏற்கப்படுகிறது.

அவர் {ஸனத்குமாரர்}, "காசியபருக்கு விபாண்டகன் என்று அறியப்படும் ஒரு புத்திரன் இருக்கிறான், அவனுக்கு ரிஷ்யசிருங்கன்[2] என்ற புகழ்வாய்ந்த மகன் பிறப்பான். அந்த முனிவன் {ரிஷ்யசிருங்கன்} எப்போதும் வனத்தில் வளர்ந்து வரும் வனவாசியாக இருப்பான்.(3ஆ,4) அந்த விப்ரேந்திரன் {பிராமணர்களி தலைவன்/இந்திரன்,  ரிஷ்யசிருங்கன்}, வேறு ஒருவரையும் அறியாதவனாக எப்போதும் தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்திருந்து இருவகையான பிரம்மசரியத்தைக் கடைப்பிடிப்பான்[3]" என்றார்.(5)

[2] மஹாபாரதம், வனபர்வம் அத்தியாயம் 110 முதல் 113 வரை இந்த ரிஷ்யசிருங்க முனிவரின் கதை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படும் த்வைவித்யம் என்பது விரதித்வம், பிரஜாபத்யம் என்ற இருவகைப் பிரம்மசரியத்தைக் குறிப்பிடுகிறது. ஒன்று திருமணம் செய்வதற்கு முன்பு உள்ள நிலையாகும். அடுத்தது திருமணம் செய்த பின்பு முழுநிலவு, புதுநிலவு, கிரஹண காலங்கள் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டும் மனைவி விட்டுப் பிரிந்திருக்கும் நிலையாகும். இங்கே இந்தச் சொல் தடையேற்படல் என்ற பொருளையும் கொள்கிறது. இருவகைப் பிரம்மச்சரியத்திற்கும் தடை ஏற்படும் நிலை என்று பொருள் தரும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அம்முனி இவ்வண்ணஞ்செய்து கொண்டிருக்கையில், ப்ரஹ்மசர்யத்திற்குப் பங்கம் வந்து இல்லறத்திற்கு வருவார்" என்றிருக்கிறது. அதே போலவே, ஸ்ரீநிவாஸய்யங்கார் பதிப்பிலும், "அக்னி காரியங்களையே கவனித்துக் கொண்டிருக்கும் அந்த ரிஷிபுத்திரனுடைய பிரஹ்மசரிய விரதத்திற்குச் சிலகாலத்திற்குப் பின் கெடுதி நேரும்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "உலகத்தில் பிரசித்தமான பிரமசரியம் (அதாவது, முஞ்சி, மான்தோல் பலாசங்கொம்பு முதலானவைகளைத் தரித்துக் கொண்டு வேதமோதுதல்) பெண்களோடு சேராமலிருப்பதாகிய பரமசரியமாகி இவ்விரண்டும் அவரிடத்திலுண்டாயிருக்கும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கூட "ரிஷ்யசிருங்கர் இருவகைப் பிரம்மசரியத்தைப் பின்பற்றுவார்" என்றிருக்கிறது.

{தசரத} ராஜாவே, மேலும் அவர் {ஸனத்குமாரர்}, "அவன் {ரிஷ்யசிருங்கன்} விப்ரர்களால் புகழப்பட்டு, உலகப் புகழ் பெற்றிருப்பான், இவ்வாறான ஒழுக்கத்திலேயே காலம் கடக்கும்.(6) அவன் அக்னிக்கும், தன் தந்தைக்கும் தொண்டு செய்து செழிப்பான். அதேவேளையில், அங்க நாட்டின் பிரதாபவானான ராஜா ரோமபாதன் மஹாபலவானாக அங்கே புகழ்பெற்றிருப்பான்.(7,8அ) அந்த ராஜாவின் அறமீறலினால் அங்கே அதிர்ச்சியூட்டும் வகையில் அனைத்து உயிரினங்களுக்கும் அச்சத்தைத் தரும் பஞ்சம் ஏற்படும்.(8ஆ,9அ) {அவ்வாறு} பஞ்சமேற்படும்போது துக்கத்தால் பீடிக்கப்படும் ராஜா {ரோமபாதன்}, சாத்திரங்களை நன்கறிந்தவர்களான பிராமணர்களை அழைத்து அவர்களிடம்,(9ஆ,10அ) "நீங்கள் அனைவரும் சடங்குகளை நன்கறிந்தவர்களாகவும், உலகச் சரித்திரங்களை அறிந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். {இதற்கான} பிராயசித்தத்திற்கு என்ன செய்ய வேண்டும்?" {என்று கேட்பான்}.(10ஆ,11அ)

ராஜன் அவர்களிடம் இவ்வாறு சொன்னதும், பிராமண அறிஞர்களும், பிராமண வேதபாரகர்களும், அந்த மன்னனிடம், "ராஜாவே, விபாண்டகரின் மகனை சர்வ உபாயங்களினால் {அனைத்து வழிமுறைகளினாலும்} இங்கே அழைத்து வருவாயாக.(11ஆ,12) மஹீபாலா {பூமியைக் காப்பவனே / ரோமபாதா}, விபாண்டகரின் மகனான ரிஷ்யசிருங்கரை அழைத்துவந்து, கவனமாக அவரைக் கௌரவித்து, விதிப்படி சாந்தையென்ற {உன்} கன்னிகையை வேதபாரகரான அந்தப் பிராமணருக்கு {மணமுடித்துக்} கொடுப்பாயாக" என்பார்கள்.(13)

அவர்களின் மொழியைக் கேட்கும் ராஜா {ரோமபாதன்}, "அந்த வீரியவானை {புலன்களை வென்றவரான ரிஷ்யசிருங்கரை} இங்கே அழைத்து வருவதற்கான வழிமுறைகளென்ன?" எனச் சிந்திப்பான்.(14) ஆத்மவானான அந்த ராஜா, மந்திரிகளுடன் ஆலோசித்து, புரோஹிதர்களையும், அமைச்சர்களையும் அனுப்புவதாகச் சொல்வான்.(15)

ஆனால் ராஜனின் மொழியைக் கேட்டுப் பீதியடைந்து முகம் கவிழும் அவர்கள், "அந்த ரிஷியிடம் பீதியடைகிறோம், நாங்கள் அங்கே செல்லமாட்டோம்" என்று அவனிடம் கெஞ்சுவார்கள்.(16) பிறகு மீண்டும் சிந்தித்து, ஓர் உபாயத்தைக் கண்டறியும் அவர்கள், "நாங்கள் அந்த விப்ரரை அழைத்து வருகிறோம். எந்தத் தோஷமும் நேராது" என்பார்கள்.(17)

இவ்வாறு அந்த அங்காதிபனாலும் {அங்க நாட்டு மன்னன் ரோமபாதனாலும்}, கணிகையராலும் அந்த ரிஷிமகன் அழைத்துவரப்படுவான். தேவர்கள் மழையைப் பொழிவார்கள், சாந்தையும் அவனுக்கு {ரிஷ்யசிருங்கனுக்குக்} கொடுக்கப்படுவாள்" என்றார் {ஸனத்குமாரர்}.(18)

{ரோமபாதனின்} மருமகனான[4] அந்த ரிஷ்யசிருங்கரே, உமக்குப் புத்திரர்களை அருள்வார். என்னால் சொல்லப்படும் இவையாவும் ஸனத்குமாரர் சொன்னவையாகும்" என்றான் {சூதன் / சுமந்திரன்}.(19)

[4] தாதாசாரியர் பதிப்பில் உள்ள அடிக்குறிப்பில், "சாந்தை என்பவள் தசரதருக்கு மகள். அவளை ரோமபாதர் தத்துவாங்கிக் கொண்டார். அதனாலே தான் கலைக்கோட்டு முனியை {ரிஷ்யசிருங்கரை} உமக்கும் மருமகன் என்றது" என்றிருக்கிறது. முன் ஸ்லோகம் அங்காதிபனைக் குறிப்பதால். சாந்தை ரோமபாதனின் மகள் என்றே ஆங்கில மொழிபெயர்ப்புகள் கொள்கின்றன. இனி வரப்போகும் 11ம் சர்க்கம் 3ம் ஸ்லோகத்திலும் இத்தகைய குழப்பம் நேர்கிறது. 

இதனால் மகிழ்ச்சியடைந்த தசரதன், மீண்டும் சுமந்திரனிடம், "ரிஷியசிருங்கர் எவ்வாறு {அந்த அங்கநாட்டுக்கு} அழைத்துவரப்பட்டார் என்பதை விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(20)
 

பாலகாண்டம் சர்க்கம் – 09ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை