Showing posts with label சிவன். Show all posts
Showing posts with label சிவன். Show all posts

Wednesday, 29 September 2021

பாற்கடல் கடைதல் | பால காண்டம் சர்க்கம் - 45 (45)

Churning of Milk Ocean | Bala-Kanda-Sarga-45 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விசாலாபுரத்தை அடைந்ததும் பாற்கடல் கடையப்பட்ட கதையைச் சொன்ன விஷ்வாமித்ரர்; ஹாலாஹல நஞ்சு; பாற்கடலில் திரட்டப்பட்ட அமுதம்; நஞ்சுண்ட சிவன்; விஷ்ணுவின் ஆமை அவதாரம்...

Kshir Sagar mathan Churning of Milk ocean

இலக்ஷ்மணனும், ராகவனும் {ராமனும்} விஷ்வாமித்ரரின் வசனத்தைக் கேட்டுப் பரம ஆச்சரியம் அடைந்து விஷ்வாமித்ரரிடம் பேசினர்:(1) "பிராமணரே, நீர் சொன்ன பெருங்கதைகளான கங்காவதரணமும், ஸாகரம் {தோண்டப்பட்டு} நிறைக்கப்பட்டதும் புண்ணியமானதாகவும், அதியற்புதமானதாகவும் இருக்கிறது.(2) பரந்தபரே {பகைவரை எரிப்பவரே}, நீர் சொன்ன கதைகள் யாவைற்றையும் முழுமையாகச் சிந்தித்ததால் இந்த ராத்திரியானது எங்களுக்கு க்ஷணம் {ஒரேயொரு கணம்} போல உருண்டு சென்றது.(3) விஷ்வாமித்ரரே, சௌமித்ரியுடன் {லக்ஷ்மணனுடன்} சேர்ந்து இந்த சுபக்கதையைச் சிந்திக்கும்போதே மொத்த ராத்திரியும் கடந்துவிடும்" {என்றான் ராமன்}[1].(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமனின் பேச்சைப் பொறுத்தவரையில் இந்தச் சுலோகங்களின் அமைப்பு ஒரு தொடர்ச்சியைக் கொடுக்கவில்லை. பிற பதிப்புகள் தொடர்ச்சியான விளக்கத்தைக் கொண்டுள்ளன" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், மேற்கண்ட 2ம் சுலோகம் வரை இராமன் பேசுவதாக அமைந்திருக்கிறது. அதன் பிறகு குசன் இராமாயணத்தைத் தொடர்வதைப் போல, "விச்வாமித்ர மாமுனிவர் சொன்ன அவ்வழகான கதையைச் சிந்தித்துக் கொண்டே அவ்விருவரும் அன்றிரவெல்லாங் கடக்கச் செய்தனர்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் மேற்கண்ட வகையிலேயே 1 முதல் 4ம் சுலோகம் வரையுள்ள செய்தி இருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில் நரசிம்மாசாரியரின் பதிப்பில் தமிழில் உள்ளதைப் போன்றே ஆங்கிலத்தில் இருக்கிறது.

பொழுது விடிந்தபோது, அரிந்தமனான {பகைவரை ஒடுக்குபவனான} ராகவன் {ராமன்}, ஆஹ்னிக கர்மங்களை {காலைச் சடங்குகளை} செய்துவிட்டு, தவத்தையே தனமாகக் கொண்ட விஷ்வாமித்ரரிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(5) "சிறந்ததும், கேட்கத்தகுந்ததும் கேட்டோம். தெய்வீக இரவும் கடந்தது. ஆறுகளில் முதன்மையானதும், புண்ணியம் நிறைந்ததும், மூன்று பாதைகளில் செல்வதுமான இந்த நதியை இனி நாம் கடப்போம்.(6) சுகமான அமரத்தகுந்ததும், புண்ணிய கர்மங்களைச் செய்யும் ரிஷிகளுக்கானதுமான இந்த ஓடம், பகவானான நீர் இங்கே வந்திருக்கிறீர் என்பதை அறிந்து துரிதமாக வந்திருக்கிறது" {என்றான் ராமன்}.(7)

மஹாத்மாவான ராகவனின் அந்த வசனத்தைக் கேட்ட கௌசிகர் {விசுவாமித்ரர்}, ரிஷி சங்கத்துடன் {முனிவர்கள் கூட்டத்துடனும், ராகவர்கள் இருவருடனும் கங்கையைக்} கடக்க ஆயத்தமானார்.(8) அவர்கள், உத்தர தீரத்தை {கங்கையின் வட கரையை} அடைந்தும் ரிஷி கணங்களைப் பூஜித்தனர் {உடன் வந்த முனிவர்களை வழிபட்டு அனுப்பி வைத்தனர்}. பிறகு கங்கைக் கரையில் சற்றே ஓய்ந்து, {அதன் பிறகு பயணித்து} விசாலாபுரியைக் கண்டனர்.(9) அதன் பிறகு அந்த முனிவரர் {விசுவாமித்ரர்}, ரம்மியமானதும், திவ்யமானதும், சுவர்க்கத்திற்கு ஒப்பானதுமான விசாலை நகரத்திற்கு ராகவர்களுடன் {ராமலக்ஷ்மணர்களுடன்} சென்றார்.(10)

அப்போது மஹாபிரஜ்ஞை கொண்டவனான {அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவல் கொண்ட} ராமன், குவிந்த கைகளுடன் மஹாமுனி விஷ்வாமித்ரரிடம் உத்தமமான விசாலாபுரியைக் குறித்து விசாரித்தான்:(11) "மஹாமுனிவரே, விசாலையின் ராஜவம்சத்தைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன். மங்கலமாக இருப்பீராக. நான் பரம குதூகலத்துடன் இருக்கிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(12)

அந்த முனிபுங்கவர் {முனிவர்களில் சிறந்த விசுவாமித்ரர்}, ராமனின் அந்த வசனத்தைக் கேட்டு விசாலையின் புராதனத்தை {பழங்கதையைச்} சொல்ல ஆரம்பித்தார்:(13) "இராமா, சொல்லப்பட்ட படியே, கேட்கப்பட்ட படியே சக்ரனின் கதையைக் கேட்பாயாக. இராகவா, இந்த தேசத்தில் என்ன நடந்தது என்பதையும் சுருக்கமாகக் கேட்பாயாக.(14) பெரும்பேறு பெற்ற ராமா, பூர்வத்தில், கிருத யுகத்தில் திதியின் புத்திரர்கள் மஹாபலவான்களாக இருந்தனர். அதிதியின் புத்திரர்கள் வீரியவான்களாகவும், தார்மிகர்களாகவும் இருந்தனர்[2].(15) நரவியாகரா {மனிதர்களில் புலியே}, அந்த மஹாத்மாக்களின் புத்தியில், "ஜரையற்றவர்களாகவும் {மூப்பற்றவர்களாகவும்}, மரணமற்றவர்களாகவும், பிணியற்றவர்களாகவும் இருப்பது எவ்வாறு?" என்று தோன்றியது.(16)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "திதியானவள், அதிதியின் தமக்கையும், காசியப முனிவரின் முதல் மனைவியும் ஆவாள். அவளது மகன்களே அசுரர்கள் என்றழைக்கப்பட்டனர். பின்னர் ராக்ஷசர்கள் என்றும் பெயரிடப்பட்டனர். காசியப முனிவரின் இரண்டாம் மனைவியான அதிதி, பின்னர் தேவர்கள் என்றழைக்கப்பட்ட ஸுரர்களின் சந்ததியைப் பெற்றாள். இந்த இரு பெண்களும் தக்ஷப்ரஜாபதியின் மகள்களாவர்" என்றிருக்கிறது.

இதைச் சிந்தித்துக் கொண்டிருந்த அந்த விபஷ்சிதர்களின் {புத்திசாலிகளின்} புத்தியில், "பாற்கடலைக் கடைந்தால் {அமுத} ரசம் கிடைக்கும்" என்று தோன்றியது.(17) பிறகு, அளவற்ற ஆற்றலைக் கொண்டவர்களான அவர்கள், {பாற்கடலைக்} கடைய நிச்சயித்துக் கொண்டு, வாசுகியைக் கயிறாக்கி, மந்தரத்தை {மந்தர மலையை} மத்தாக்கி {பாற்கடலை} முற்றாகக் கடைந்தனர்.(18) ஆயிரம் வருடங்கள் கடந்ததும் கயிறாக இருந்த சர்ப்பத்தின் தலைகள் அங்கே அதிவிஷத்தைக் கக்கி {தங்கள்} பற்களால் {மந்தர} மலையைக் கொத்தின.(19) {இதனால்} அக்னிக்கு ஒப்பான ஹாலாஹல மஹாவிஷம் உற்பத்தியானது. இதனால் தேவர்கள், அசுரர்கள், மனுஷர்கள் உள்ளிட்ட ஜகம் முழுவதும் தகித்தது {எரிந்தது}.(20) அப்போது தேவர்கள், மஹாதேவனும், பசுபதியும், சங்கரனுமான ருத்திரனிடம் சரணம் அடைந்து, "காப்பாயாக. எங்களைக் காப்பாயாக" என்று அவனிடம் வேண்டினர்.(21)

பிரபுவான தேவ ஈஷ்வரனிடம் {சிவனிடம்} தேவர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டிருந்தபோது, சங்கு சக்கரதரனான ஹரி {விஷ்ணு} அங்கே தன்னை உடனே வெளிப்படுத்திக் கொண்டான்.(22) ஹரி புன்னகைத்தவாறே சூலதரனான ருத்திரனிடம் பேசினான்: "ஸுரசிரேஷ்டே {தேவர்களில் சிறந்தவனே}, தேவர்கள் கடையும்போது முதலில் வெளிப்படுவது உனதாகும் என்பதால், ஸுரர்களில் முதன்மையான பிரபுவாக {அக்ரபூஜையாக} நீயே முதலில் பூஜிக்கப்படும் இந்நிலையில் இந்த விஷத்தை நீயே பருகுவாயாக" {என்றான் விஷ்ணு}.(23,24)

ஸுரசிரேஷ்டன் {தேவர்களில் முதன்மையான விஷ்ணு} இவ்வாறு சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து மறைந்ததும், தேவர்களின் பயத்தைக் கண்டும், சாரங்கியின் {சாரங்க வில் தரித்த விஷ்ணுவின்} வாக்கியத்தைக் கேட்டும் அவன் {சிவன்}, கோரமான ஹாலாஹல விஷத்தை அமுதம் போல் பருகினான்.(25,26அ) தேவர்களின் ஈசனான பகவான் ஹரன் {சிவன்}, தேவர்களை விட்டுச் சென்றதும் {கைலாசத்திற்குச் சென்றதும்}, தேவாசுரர்கள் அனைவரும் {பாற்கடலைக்} கடைவதைத் தொடர்ந்தனர்.(26ஆ,27அ) இப்போதோ மத்தாக இருந்த உத்தம பர்வதம் {மந்தர மலை} பாதாளத்திற்குள் பிரவேசித்தது {மூழ்கியது}. எனவே தேவர்களும் கந்தர்வர்களும் மதுசூதனனை {விஷ்ணுவை} வேண்டினர்:(27ஆ,28அ) "மஹாபாஹுவே, நீயே சர்வபூதங்களின் {அனைத்து உயிரினங்களின்} கதியாவாய். விசேஷமாக திவௌகஸர்களின் {சொர்க்கவாசிகளின்} கதியாவாய். எங்களை நீ காப்பாயாக. இந்த கிரியை {மலையை} உயர்த்துவதே உனக்குத் தகும்" {என்று தேவர்கள் வேண்டினர்}.(28ஆ,29அ)

ரிஷிகேசனான ஹரி, இதைக் கேட்டு ஆமை வடிவை ஏற்று {கூர்ம அவதாரம் செய்து} அந்தப் பர்வதத்தைத் தன் முதுகில் நிறுத்தி அந்தக் கடலில் {அடித்தளமாகக்} கிடந்தான்.(29ஆ, 30அ) லோகாத்மாவும், உத்தம புருஷனுமான கேசவன், தேவர்களின் மத்தியில் நின்று, பர்வதத்தின் உச்சியைத் தன் கைகளில் தாங்கிக் கடைந்தான்.(30ஆ,31அ) இவ்வாறே ஆயிரம் வருடங்கள் கடந்ததும், தண்டம் கமண்டலம் ஆகியவற்றுடன் கூடியவனும், தன்வந்தரி என்ற பெயரைக் கொண்டவனும், ஆயுர்வேதபுமானுமான {ஆயுள் அறிவியலின் ஆளுமையுமான} தர்மாத்மா முதலில் தோன்றினான்.

நல்லழகு பொருந்திய அப்சரஸ்கள் பிறகும் {அந்தக் கடலில் இருந்து} உதித்தனர்.(31ஆ,32) மநுஜசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே, ராமா}, அப்புவை {நீரை} முழுமையாகக் கடைந்ததும் அதிலிருந்த ரஸத்தில் {பாலில்} இந்த வரஸ்திரீகள் {சிறந்த பெண்கள்} உற்பத்தியானதால் அப்ஸரஸ்கள் என்ற பெயரைப் பெற்றனர்[3].(33) காகுத்ஸ்தா, எழிலொளியுடன் கூடிய அந்த அப்சரஸ்கள் அறுபது கோடி பேராவர். அவர்களின் பரிசாரிகைகள் {பணிப்பெண்கள்} கணக்கிலடங்காதோராவர்.(34) தேவர்கள், தானவர்கள் ஆகியோரில் எவரும் அவர்களைக் கொள்வதில்லை {மணந்து கொள்வதில்லை}. எவராலும் கைப்பற்றப்படாதவர்கள் என்பதால் அவர்கள் சாதாரணர்களாக {அனைவருக்கும் பொதுவானவர்களாக} அறியப்படுகிறார்கள்[4].(35)

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அப்பென்றால் ஜலம், இங்கு ஜலம்போல் த்ரவமாகி அதன் விகாரமாகிய பாலைச் சொல்லுகிறது. அதினின்றுமுண்டான ரஸம் அப்ரஸம். அதினின்று பிறந்தவர் அப்ஸரஸ்ஸுக்கள். "அப்ரஸர்" என்றுரைக்க வேண்டியிருக்க, "ரஸசப்தம்" வ்யாகரண ஸூத்ரத்தின்படி "ஸரஸ்" என்று மாறிக்கிடக்கிறது. ஆகையால் "அப்ஸரஸ்" என்று காரணப் பெயராயிருக்கின்றது" என்றிருக்கிறது.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த அப்சரஸ்கள், தேவர்களையோ, தானவர்களையோ கணவர்களாகத் தேர்ந்தெடுப்பதை அலட்சியம் செய்யும் தேவகன்னிகளாவர். பின்னர் மேனகை விஷ்வாமித்ரர் கதையில் அவர்கள் பிள்ளைகளைப் பெறுபவர்களானார்கள். அப்ஸு ரஸத்தில் இருந்து வந்ததால் நீரின் ரஸத்தில் பிறந்தவர்கள் என்ற பொருளில் அவர்கள் அப்ஸரஸ்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சொற்பிறப்பியல் அடிப்படையில் இந்தப் பெயரிடலானது, வேறெதையும் விட ஒலிக்கு இணங்க வழிநடத்தப்படுவதாகத் தெரிகிறது. சொற்பிறப்பியலுக்கான சிறப்பான சான்று பின்வருவதாகும். அஸுரன் என்ற சொல்லானது, அஸு {முழுமையான ஆன்ம வாழ்வு} என்ற சொல்லில், ர {அற்ற} என்ற பின்னொட்டைச் சேர்த்து உண்டானது. நூதனமான சொற்பொருள் மாற்ற செயல்முறையால் இஃது அரக்கன் என்று பொருள் கொள்ளப்படுகிறது" என்றிருக்கிறது. இங்கே குறிப்பிடப்படும் சான்று இந்த சர்க்கத்தின் 37, 38ம் சுலோகங்களுடன் ஒப்பிடத்தக்கது.

இரகுநந்தனா, பிறகு வருண கன்னியான மஹாபாகை {பாக்கியம் பொருந்திய} வாருணி, தன்னைக் கைப்பற்றுவாரைத் தேடியபடியே உயர வந்தாள்.(36) இராமா, வருணனின் மகளான அவளை திதியின் புத்திரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வீரா, குறையற்றவளான அவளை அதிதியின் சுதன்கள் {தேவர்கள்} ஏற்றுக் கொண்டனர்.(37) இதனால் தைத்தியர்கள் அஸுரர்கள் {என்றழைக்கப்பட்டனர்}. அதிதியின் மகன்கள் ஸுரையான {ஸுராபானமான} வாருணியின் கைப்பற்றியதால் ஸுரர்கள் {என்றழைக்கப்பட்டனர்}[5].(38)

[5] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், ""வாருணி" யென்றால் கள்ளு. அதற்கு அதிஷ்டாந்தேவதை இங்கு வாருணியென்னப்பட்டது. ஸுரையென்றால் கள்ளு. இதுவே வாருணியென்றுரைக்கப்படுகின்றனது. "ஸுரா ஏதாமஸ்தீதி ஸுரா:" அந்த வாருணியை உடையவர்களாகையால் ஸுரர்கள். மத்வர்த்தத்தில் "அர்சாசித்வாத் அச்ப்ரத்யய:" இங்ஙனமே (ஸுரா நாஸ்தி ஏஷாமிதி அஸுரா:) அந்த வாருணியில்லாதவராகையால் அஸுரர்கள்" என்றிருக்கிறது.

நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்த ராமா, அதன்பிறகு} ஹயசிரேஷ்டம் {குதிரைகளில் சிறந்த} உச்சைஷ்ரவம், கௌஸ்து மணி ரத்தினம், அதே போல உத்தமமான அமிருதம் ஆகியவை உதித்தன.(39) இராமா, இதன் {அமுதத்தின்} காரணமாக இந்தக் குலங்களின் {ஸுராஸுர [தேவாசுர] குலங்களின்} பேரழிவு நேரிட்டது. அப்போது அதிதியின் புத்திரர்கள், திதியின் புத்திரர்களைக் கொன்றனர்.(40) வீரா, அஸுரர்கள், ராக்ஷசர்கள் அனைவரும் ஒரு தரப்பில் குவிந்தனர். மூவுலக மோஹனத்தில் {மயக்கத்தில்} மஹா கோர யுத்தம் நேரிட்டது.(41)

அனைத்தும் அழிவடைந்தபோது மஹாபலவானான விஷ்ணு, மாய மோஹினி வடிவை ஏற்று அமுதத்தை துரிதமாகக் கைப்பற்றினான்.(42) அழிவில்லா உத்தம புருஷனான விஷ்ணுவை யுத்தத்தில் எதிர்த்துச் சென்றவர்கள், விஷ்ணு பிரபையில் {விஷ்ணுவின் நெருப்பில்} எரிந்து தூளாகினர்.(43) தைத்தியர்களுக்கும் {திதியின் மகன்கள்}, ஆதித்யர்களுக்கும் {அதிதியின் மகன்களுக்கும்} இடையில் நடந்த கோரமான மஹாயுத்தத்தில் வீரர்களான அதிதியாத்மஜர்கள் {அதிதியின் மகன்கள்} திதியின் புத்திரர்களை மொத்தமாக அழித்தனர்.(44) புரந்தரன் {பகைவரின் நகரங்களை அழிப்பவனான இந்திரன்}, திதியின் புத்திரர்களை அழித்து ராஜ்ஜியத்தை அடைந்து இன்புற்று, ரிஷி சங்கத்தினருடனும், சாரணர்களுடனும் உலகங்களை ஆண்டான்" {என்றார் விசுவாமித்ரர்}.(45)

பாலகாண்டம் சர்க்கம் – 45ல் உள்ள சுலோகங்கள் : 45

Previous | Sanskrit | English | Next

Monday, 27 September 2021

கங்கை | பால காண்டம் சர்க்கம் - 43 (41)

Ganga | Bala-Kanda-Sarga-43 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பூமிக்குப் பாய்ந்து வந்த கங்கை; கங்கையைத் தலையில் தாங்க ஒப்புக்கொண்ட சிவன்; தன் பாட்டன்மாரின் சாம்பலை நோக்கி கங்கையை அழைத்துச் சென்ற பகீரதன்...

Birth of Ganga on Earth

{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "இராமா, அந்த தேவதேவன் {பிரம்மன்} சென்ற பிறகு, அவன் {பகீரதன்}, தன்னுடைய கால் கட்டைவிரலால் வசுமதியை {பூமியை} அழுத்தியபடியே நின்றான்[1]. அவ்வாறே அவன் மேலும் ஓராண்டு காலம் தவம் செய்தான்.(1) ஓராண்டு பூர்ணமடைந்ததும் சர்வலோக நமஸ்கிருதனும் {உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்படுபவனும்}, உமாபதியுமான பசுபதி {சிவன்}, அந்த ராஜனிடம் {பகீரதனிடம்} இதைச் சொன்னான்:(2) "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, நான் உன்னிடம் பிரீதியடைந்தேன். உன் பிரியத்தை {விருப்பத்தை} நான் நிறைவேற்றுவேன். சைலராஜனின் மகளை {மலைமகளான கங்கையை} என் சிரசில் தரிப்பேன்" {என்றான் சிவன்}.(3)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பகீரதன், மாறா நோக்குடனும், அசைவில்லா உடலுடனும், தன் கைகளை உயர்த்திய படியே இரவும், பகலும் காற்றை மட்டுமே உண்டு ஓராண்டு காலம் தவம் செய்து யோகச் செறிவை அதிகரித்து வந்ததே பூமியைப் பெரிதும் அழுத்தியது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பகீரத வேந்தன் பூமியில் காற்கட்டைவிரலை ஊன்றிக் கொண்டு நின்று புஜங்களிரண்டையும் உயரத்தூக்கி நிறுத்தி வாயுபக்ஷணஞ் செய்து கொண்டு எவ்விதத்திலும் அவலம்பமின்றி இரவும் பகலும் மொட்டை மரம் போல் அசையாமல் நின்று நிலை பெற்று ஒரு வருஷ காலம் சிவனை உபாஸித்தான்" என்றிருக்கிறது.

இராமா, அதன்பிறகு உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்படும் மூத்த ஹைமவதி {ஹிமவானின் மூத்த மகளான கங்கை}, அதி மஹா ரூபத்தை ஏற்று, சகிக்க முடியாத வேகத்தை அடைந்து, ஆகாசத்தில் இருந்து மங்கலமான சிவனின் சிரசில் விழுந்தாள் என்று சொல்லப்படுகிறது.(4,5அ) தாங்கிக் கொள்ளப்பட முடியாத அந்த கங்கா தேவி, "என் பிரவாஹங்களால் சங்கரரை எடுத்துக் கொண்டு பாதாளத்திற்குள் புகுவேன்" எனச் சிந்தித்தாள்.(5ஆ,6அ)

முக்கண்களைக் கொண்ட பகவான் சிவன், அவளது கர்வத்தை அறிந்து குரோதமடைந்து, அவளை அடக்குவதில் புத்தியைச் செலுத்தினான்.(6ஆ,7அ) இராமா, அந்தப் புண்யை {கங்காதேவி}, இமயத்துக்கு ஒப்பான {சிவனின் தலைமயிராலான} ஜடா மண்டலங்களால் சூழப்பட்டு அந்த ருத்திரனின் புண்ணியமான தலையில் விழுந்து அடங்கினாள்.(7ஆ,8அ) அவள் என்னதான் முயற்சி செய்தாலும் மஹீயை {பூமியை} அடையும் சக்தியற்றவளாக ஜடாமண்டலத்தைவிட்டு வெளியேற இயலாதவளானாள்.(8ஆ,9அ) அந்த தேவி எண்ணற்ற ஆண்டுகள் அங்கேயே {அந்த சடையின் சுழல்களில்} சுழன்று கொண்டு இருந்தாள். அவள் காணப்படாததால் பகீரதன் மீண்டும் அதே காரியத்திற்காக {கங்கையை பூமிக்குக் கொண்டு வருவதற்காக} உறுதிமிக்க பரம தவத்தில் ஈடுபட்டான்.(9ஆ,10அ)



இரகுநந்தனா, அதனால் {அந்த தவத்தால்} பெரிதும் மகிழ்ந்த ஹரன், கங்கையை பிந்துசரஸில் விழவிட்டான்.(10ஆ,11அ) அவ்வாறு அவள் விடுபட்ட போது, ஏழு பிரவாஹங்கள் உண்டாகின. மங்கல ஜலங்கொண்ட ஹலாதினி, பாவனி, நளினி {பிரம்மபுத்திரா} என்ற மூன்றும் {மூன்று பிரவாஹங்களும், ஏழாம் பிரவாஹமான} சுபமான கங்கையும் கிழக்கு முகமாகப் பாய்ந்தன.(11ஆ,12) சுபநீரோட்டம் கொண்ட ஸுசக்ஷு, ஸீதை, மஹாநதியான ஸிந்து என்று மூன்றும் மேற்கு முகமாகப் பெருகிச் சென்றன.(13) அவர்களில் சப்தமி {ஏழாமவளான கங்கை}, பகீரதனின் ரதத்தைப் பின்தொடர்ந்து சென்றாள். மஹாதேஜஸ்வியும், ராஜரிஷியுமான பகீரதன், திவ்யமான தேரில் அமர்ந்து முன்னே செல்ல, கங்கை அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.(14,15அ) ஆகாயத்திலிருந்து சங்கரனின் சிரசுக்கு வந்து, அங்கிருந்து தரணியை {பூமியை} அடைந்த அவளது ஜலம் தீவிர சத்தத்தை வெளியிட்டபடியே பாய்ந்தது[2].(15ஆ,16அ) அப்போது வசுந்தரை {பூமியானவள்}, விழுந்தவையும், மேலும் விழுந்து கொண்டிருப்பவையுமான மத்ஸ்யங்கள் {மீன்கள்}, ஆமைகள், சங்குகள், சிசுமார கணங்கள் {முதலை முதலிய நீர்வாழ் உயிரினங்கள்} ஆகியவற்றுடன் ஒளிர்ந்தாள்.(16ஆ,17அ)

[2] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கங்கையாறு திரிபதகையென்றும், அதாவது மூவழிகளில் பாய்பவள் என்றும் அழைக்கப்படுகிறது. அவள் இமயத்திலிருந்தும் சொர்க்கத்திற்கும், சொர்க்கத்தில் இருந்து சிவனின் தலைக்கும், அங்கிருந்து பூமிக்கும் பாய்ந்ததே மூவழி என்று சொல்லப்படுவது ஒருவகை எண்ணம். மேலுள்ள சுலோகங்களில் சொன்னபடி கிழக்கு, மேற்குத் திசைகளிலும், பகீரதனைப் பின்தொடர்ந்து தெற்குத் திசையிலும் என அவள் மூவழிகளில் பாய்கிறாள் என்பது மற்றொரு எண்ணம். மேற்கு நோக்கிப் பாயும் சிந்து இப்போது இண்டஸ் என்று அழைக்கப்படுகிறது, கிழக்கும் நோக்கிப் பாயும் நளினி இப்போது பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. கங்கையோ தெற்கு நோக்கிப் பாய்ந்து கடலை அடைகிறாள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவ்விடத்தில் கங்கை ஸ்வர்க்காகசபூமிகளாகிற மூன்று இடங்களிலும் ப்ரவஹித்தபடியால் த்ரிபதகை என்னும் பெயர் பெற்றதென்று சிலர் சொல்லுகின்றனர். மூன்று திசைகளிலும் ப்ரவஹித்தபடியால் அந்தப் பெயர் வந்ததென்று சிலர் சொல்லுகின்றனர்" என்றிருக்கிறது.

பிறகு, தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் ஆகியோரும் சித்த கணங்களும் அவ்வாறு அவள் ஆகாயத்திலிருந்து பூமியில் பாய்வதை ஆவலுடன் கண்டனர்.(17ஆ,18அ) அப்போது தேவர்களில் சிலர் நகரம் போன்ற அளவும், வடிவமும் கொண்ட விமானங்களிலும், வேறு சிலர் ஹயங்களிலும் {குதிரைகளிலும்}, இன்னுஞ் சிலர் கஜங்களிலும் {யானைகளிலும்} அந்த இடத்திற்கு வந்தனர்.(18ஆ,19அ) உலகில் அற்புதமானவளும், ஒப்பற்றவளும், உத்தமமானவளுமான கங்கையின் பாய்ச்சலை ஆவலுடன் கண்ட தேவகணங்கள் அளவில்லா பரபரப்படைந்தன.(19ஆ,20அ)

அந்த ஸுரகணங்களுடைய ஆபரணங்களுடைய மினுமினுப்பு மேகங்களற்ற வானத்தில் நூறு சூரியர்கள் ஒளிரும் தோற்றத்தைக் கொடுத்தது.(20ஆ,21அ) அந்நேரத்தில் சிம்சுமார, உரகக் கணங்களும் {முதலைகளும், பாம்புகளும்}, நெளியும் மீன்களும் விழுந்தது, ஆகாசத்தில் மின்னல் கீற்றுகள் மின்னுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.(21ஆ22அ) ஆயிரம் வழிகளில் தெரித்துச் சென்று, வெளுத்து விழும் நுரைகளால் நிரம்பிய ஆகாயமானது, ஹம்சங்களுடன் {அன்னப்பறவைகளுடன்} கூடிய கூதிர் கால வெள்ளி மேகங்களால் சூழப்பட்டதைப் போலத் தென்பட்டது.(22ஆ,23அ) அவள், சில இடங்களில் துரிதமாகவும், வேறெங்கும் வளைந்து நெளிந்தும், சில இடங்களில் நேராகவும், வேறெங்கும் மெதுவாகவும், சில இடங்களில் பெருகி வழிந்தும், சில இடங்களில் நிதானமாகவும், மெத்தனமாகவும் பாய்ந்தாள்.(23ஆ,24அ) சில இடங்களில் நீரோடு நீர் மோதி, மேலும் திரும்பியோடி அலையாக எழுந்து வசுதையின் {பூமியின்} மீது விழுந்தது.(24ஆ,25அ) சங்கரனின் சிரத்தில் இருந்து நழுவிய பின்பு பூமியின் பரப்பில் விழுந்த நிர்மலமான {தூய்மையான} அந்த நீர், கல்மஷங்களை அகற்றும் வகையில் ஒளிர்ந்தது.(25ஆ,26அ)

அங்கே ரிஷி கணங்களும், கந்தர்வர்களும் வசுதையின் தலத்தில் {பூமியின் பரப்பில்} வசிப்பவர்களும் பவனின் அங்கத்தில் விழுந்த நீரை பவித்ரமானதாகக் கருதி பருகுகின்றனர்.(26ஆ,27அ) சாபத்தால் சொர்க்கத்தில் இருந்து வசுதாதலத்தில் {பூமியின் பரப்பில்} விழுந்தவர்களும், அதில் அபிஷேகம் செய்து {நீராடி} கல்மஷங்கள் அகன்று தூய்மையடைகின்றனர்.(27ஆ,28அ) அவர்கள், அந்தச் சுப நீரைக் கொண்டு தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டு, மீண்டும் ஆகாசத்தை அடைந்து, தங்கள் தங்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்கின்றனர்.(28ஆ,29அ) உலகமானது, அந்த அற்புத நீரால் மகிழ்ச்சியடைகிறது. உலக மக்கள் கங்கையால் தலையில் அபிஷேகம் செய்து, பாவங்கள் முழுமையாக அகன்று எப்போதும் மகிழ்ச்சியடைகின்றனர்.(29ஆ,30அ)

மஹாதேஜஸ்வியும், ராஜரிஷியுமான பகீரதன் திவ்ய தேரில் அமர்ந்து முன்னே பயணிக்க, அவனைத் தொடர்ந்து கங்கையும் பின்னே சென்றாள்[3].(30ஆ,31) இராமா, ரிஷிகணங்களும், தேவர்கள் அனைவரும், தைத்திய, தானவ, ராக்ஷச, கின்னர, மஹா உரக, கந்தர்வ, யக்ஷர்களில் சிறந்தவர்களும், சர்ப்பங்களும், அப்சரஸ்களும் பிரீதியடைந்து, பகீரதனின் ரதத்தைத் தொடர்ந்து செல்லும் கங்கையின் பின்னால் சென்றனர். அவர்களுடன் ஜலசாரிகளும் {நீர்வாழ் உயிரினங்களும்} சென்றன.(31ஆ-33அ) இராஜா பகீரதன் எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் மகத்தானவளும், ஆறுகளில் சிறந்தவளும், சர்வ பாப பிரநாசினியுமான {பாவங்கள் அனைத்தையும் முழுமையாக அழிப்பவளுமான} கங்கையும் சென்றாள்.(33ஆ,34அ)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகம் 14ம் சுலோகத்தைப் போன்றே இருக்கிறது" என்றிருக்கிறது.

கங்கை அவ்வாறு பாய்ந்த போது, யஜமானரும் {யாகங்களைச் செய்பவரும்}, அற்புத கர்மங்களைச் செய்பவரும், மஹாத்மாவுமான ஜஹ்னுவின் யஜ்ஞவாடத்தை {வேள்விக்களத்தை} முழுமையாக மூழ்கடித்தாள்.(34ஆ,35அ) இராகவா, அவளது செருக்கை அறிந்து எரிச்சலடைந்த ஜஹ்னு, {அனைவரும்} பரம ஆச்சரியமடையும் வகையில் கங்கையின் ஜலம் முழுவதையும் குடித்தார்.(35ஆ,36அ) அப்போது கந்தர்வர்களும், தேவர்களும், ரிஷிகளும் பெரிதும் ஆச்சரியமடைந்தனர். பிறகு அவர்கள் மனிதர்களில் சிறந்தவரும், மஹாத்மாவுமான ஜஹ்னுவை பூஜித்து, கங்கை அந்த மஹாத்மாவின் மகளெனும் நிலையை அடைய வேண்டினர்.(36ஆ,37) மஹாதேஜஸ்வியான அந்த பிரபு {ஜஹ்னு}, மிகவும் மகிழ்ச்சியடைந்து தமது இரு காதுகளின் வழியே நீரை விடுவித்தார். எனவே, கங்கை ஜஹ்னுவின் மகளாகி ஜாஹ்னவி என்று புகழடைந்தாள்.(38) கங்கை மீண்டும் பகீரதனின் ரதத்தைப் பின்தொடர்ந்து சென்றாள். ஆறுகளில் மிக மேன்மையான அவள், சாகரத்தையும் அடைந்து[4], அவனது கர்மத்தை சித்திக்கச் செய்து {பகீரதனின் நோக்கத்தை நிறைவடையச் செய்து}, ரஸாதலத்தையும் அடைந்தாள்.(39,40அ)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சிலர், சாகரம் என்ற சொல்லுக்கு ஸகரனின் மகன்கள் தோண்டிய பாதாளம் என்று பொருள் கொண்டு கடலில் அவளது பயணத்தைத் தவிர்க்கின்றனர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "நதிகளிற்சிறந்த அக்கங்கையானது, மீளவும் பகீரதனுடைய ரதம் போகும் வழியாகப் பின்றொடர்ந்து அவனுடைய காரிய ஸித்திக்காகச் சென்று ஸமுத்திரத்தில் விழுந்து பாதாளத்திற்குச் சென்றது" என்றிருக்கிறது. ஸகரனின் மகன்களான ஸாகரர்கள் தோண்டியதில் உண்டானதே ஸாகரம் என்பது தொல்வழக்கு.

இராஜரிஷியான பகீரதன், பெரும் முயற்சி செய்து கங்கையை அழைத்துச் சென்று தன்னுடைய பிதாமஹர்கள் {பாட்டன்மார்} பஸ்மமாகக் கிடக்கும் இடத்தைக் கண்டு மனவருத்தமடைந்தான்.(40ஆ,41அ) இரகோத்தமா {ரகுக்களில் சிறந்தவனே, ராமா}, உத்தமமான கங்கை நீர் அந்தப் பஸ்மத்தை நனைத்தது. அவர்கள் {ஸகரனின் மகன்கள்}, தங்கள் பாவங்கள் தூய்மையடைந்து சுவர்க்கத்தை அடைந்தனர்" {என்றார் விசுவாமித்ரர்}.(41ஆ,இ)

பாலகாண்டம் சர்க்கம் – 43ல் உள்ள சுலோகங்கள் : 41

Previous | Sanskrit | English | Next

Friday, 17 September 2021

கார்த்திகேயன் | பால காண்டம் சர்க்கம் - 37 (32)

Karthikeya | Bala-Kanda-Sarga-37 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கார்த்திகேயனைப் பெற்ற கங்கை; ஸ்கந்தனுக்குப் பால் கொடுத்த கிருத்திகை நட்சத்திரங்கள்; தேவர்களின் படைத்தலைவனாக நியமிக்கப்பட்ட சண்முகன்...

Karthikeya

{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "தேவன் {சிவன் அவ்வாறு} தவம் செய்து கொண்டிருந்தபோது, இந்திரனுடன் கூடியவர்கள் {தேவர்கள்} ஒரு சேனாபதியை {ஒரு படைத்தலைவனை} விரும்பியவர்களாக அக்னியை முன்னிட்டுக் கொண்டு பிதாமஹனை {பிரம்மனை} அடைந்தனர்.(1) இராமா, இந்திரனுடன் கூடியவர்களும், அக்னியை முன்னிட்டு வந்தவர்களுமான தேவர்கள் அனைவரும் பகவானான பிதாமஹனை வணங்கி இவ்வாறு பேசினார்கள்:(2) "தேவா, சேனாபதியாக முன்பிருந்த பகவான் {சிவன்} உமையுடன் பரம தவத்தில் மூழ்கி தவத்தில் லயித்திருக்கிறான்[1].(3) விதங்களை {நடைமுறைகளை} அறிந்தவனே, உலக நன்மைக்காக அடுத்துச் செய்ய வேண்டிய காரியத்தைத் தெளிவாகச் சொல்வாயாக. நீயே எங்கள் பரம கதியாக இருக்கிறாய்" {என்று பிரம்மனிடம் சொன்னார்கள் தேவர்கள்}.(4)

Sunday, 12 September 2021

உமையின் மகிமை | பால காண்டம் சர்க்கம் - 36 (27)

The glory of Uma | Bala-Kanda-Sarga-36 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நீலகண்டனின் காதல்; தேவர்களின் கோரிக்கை; உமையின் சினம் ...

Shiva and Uma

{விஷ்வாமித்ர} முனிவர் இவ்வாறு சொன்னதும், ராகவன் {ராமன்}, லக்ஷ்மணன் எனும் வீரர்கள் இருவரும் அந்தக் கதையைப் புகழ்ந்து அந்த முனிபுங்கவரிடம் பேசினார்கள்:(1) "பிராமணரே, நீர் சொன்ன இந்தக் கதை பரம தர்மம் பொருந்தியதாக இருக்கிறது. சைலராஜனின் ஜேஷ்ட மகளை {மலைகளின் மன்னனான இமயத்தின் மூத்த மகளான கங்கையைக்} குறித்து திவ்ய மானுஷ சம்பவங்களுடன் {தெய்வீக, மானிட நிகழ்வுகளுடன்} விஸ்தாரமாகச் சொல்வீராக. நீர் இவை அனைத்தையும் அறிந்தவர்.(2) லோகபாவனீயான {உலகத்தின் பாவங்களைப் போக்குபவளான} அவள் மூன்று பாதைகளில் பாய்வதற்கான காரணமென்ன? தர்மத்தை அறிந்தவரே, எந்தக் கர்மங்களின் தொடர்பினால் திரிபதகையான கங்கை மூவுலகங்களில் உத்தம நதியாகப் புகழ்பெற்றாள்?" {என்று ராமனும் லக்ஷ்மணனும் விசுவாமித்ரரைக் கேட்டனர்}.(3,4அ)

Thursday, 9 September 2021

கங்கா நதி | பால காண்டம் சர்க்கம் - 35 (24)

River Ganga | Bala-Kanda-Sarga-35 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கங்கையாற்றங்கரையை அடைந்து பயணித்தது; கங்கை ஆற்றைக் குறித்துக் கேட்ட ராமன்; கங்கையின் வரலாற்றைச் சொன்ன விஷ்வாமித்ரர்...

Goddess Ganga


விஷ்வாமித்ரர் எஞ்சியிருக்கும் ராத்திரியில் சோணை ஆற்றங்கரையில் மஹரிஷிகளுடன் தங்கி, இரவு கடந்து விடிந்ததும் பேசினார்:(1) "இராமா, பொழுது விடிந்துவிட்டது. கிழக்கில் வெள்ளந்தி முளைக்கிறது; விழித்தெழுவாயாக. நீ பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. பயணத்திற்கு ஆயத்தமாவாயாக" {என்றார் விஷ்வாமித்ரர்}.(2)

அவரது அந்த வசனத்தைக் கேட்டவன் {இராமன் எழுந்து}, விடியற்காலையில் செய்ய வேண்டிய அறச்சடங்குகளைச் செய்து, பயணத்தில் விருப்பத்துடன் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(3) "பிராமணரே, சுபஜலம் {நல்ல நீரைக்} கொண்டதும், மணற்குன்றுகளால் அலங்கரிக்கப்பட்டதுமான இந்த சோணை ஆழமற்றதாகவே இருக்கிறது. நாம் {நீர்வழி, நில வழி என்ற} இவ்விரு பாதைகளில் எவ்வழியில் எளிதாகக் கடக்க முடியும்?" {என்று கேட்டான் ராமன்}.(4)

இராமன் இவ்வாறு விஷ்வாமித்ரரிடம் சொன்னதும் அவர், "{இந்த} மஹரிஷிகள் எவ்வழியில் செல்வார்களோ அதே பாதையில் நாம் {நடந்தே} செல்வோம்" என்று சொன்னார்.(5)

மதிமிக்கவரான விஷ்வமித்ரர் இதைச் சொன்னதும், அந்த மஹரிஷிகள் விதவிதமான வனங்களைக் கண்டவாறே பயணம் செய்தனர்.(6) அவர்கள் தூரமாகச் சென்று பாதி நாளும் கடந்த போது, முனிவர்களால் துதிக்கப்படுபவளும், ஆறுகளில் சிறந்தவளுமான ஜாஹ்னவியை {கங்கையாற்றைக்} கண்டனர்.(7) புண்ணிய நீரைக் கொண்டவளும், ஹம்ஸங்களாலும் {அன்னங்களாலும்}, சாரஸங்களாலும் துதிக்கப்படுபவளுமான அவளைக் கண்டு ராகவர்கள் இருவருடன் கூடிய முனிவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.(8) பிறகு அனைவரும் அந்த தீரத்தில் களைப்பாறினர். அதன்பிறகு நீராடி, விதிப்படி பித்ருதேவதைகளுக்குத் தர்ப்பணஞ் செலுத்தி, அக்னிஹோத்திரத்திற்கான நெருப்பைத் தூண்டி, {ஹோமத்தில் எஞ்சிய} அமுதம் போன்ற ஹவியை உண்டு, நிறைந்த மனங்களுடன் மஹாத்மாவான விஷ்வாமித்ரரைச் சூழ்ந்திருந்த பரிவாரங்கள் அனைத்தும் {முனிவர்கள் அனைவரும்} மங்கலமான ஜாஹ்னவி தீரத்தில் {கங்கையாற்றங்கரையில்} அமர்ந்தனர்.(9-11அ)

{அவர்கள்} சுகமாக அமர்ந்ததும் ராகவர்களும் {ராமனும், லக்ஷ்மணனும்} விதிப்படி {அமர்வதற்கான} அனுமதிபெற்றனர் {அமர்ந்தனர்}. அப்போது ராமன் மனமகிழ்ச்சியுடன் விஷ்வாமித்ரரிடம் பேசினான்:(11ஆ,இ) "பகவானே, மூவழிகளில் செல்லும் கங்கா நதியைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன். மூவுலகங்களில் பாய்பவளான இவள் நதநதீபதியை {நதங்களுக்கும், நதிகளுக்கும் தலைவனான பெருங்கடலை} எவ்வாறு அடைகிறாள்?" {என்று கேட்டான் ராமன்}.(12)

இராமவாக்கியத்தால் ஊக்கமடைந்த விஷ்வாமித்ர மஹாமுனி, கங்கையின் ஜன்மம் {பிறப்பு / தோற்றம்}, விருத்தம் {ஏற்றம் / வரலாறு} ஆகியனவற்றையும், தொடர்பானவற்றையும் இவ்வாறு சொன்னார்:(13) "இராமா, தாதுக்களின் மஹா கொள்ளிடமும், சைலேந்திரனுமான {மலைகளின் மன்னனுமான} ஹிமவானுக்கு {இமயமலைக்கு} ரூபத்தால் புவியில் ஒப்பற்ற கன்னிகைகள் இருவர் இருந்தனர்.(14) இராமா, மேனை {மனோரமை}[1] என்ற பெயர் படைத்தவளும், மேருவின் மகளும், மனங்கவர்பவளுமான ஒரு கொடியிடையாள் அந்த ஹிமவானின் பிரிய பத்தினியாக {அன்பு மனைவியாக} இருந்தாள்.(15) இராகவா, இந்த கங்கை ஹிமவானின் ஜேஷ்ட சுதையாக {மூத்த மகளாக} அவளிடமே {அந்த மேனையிடமே} தோன்றினாள். அதேவழியிலேயே உமை என்ற பெயரைக் கொண்ட இரண்டாவது கன்னிகையும் தோன்றினாள்.(16)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ், மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் ஆங்கிலப் பதிப்புகளில் இவளது பெயர் மேனை என்றும், நரசிம்மாசாரியர், தாதாசாரியர் ஆகியோரின் தமிழ்ப் பதிப்புகளில் இவளது பெயர் மனோரமை என்றும் இருக்கிறது.

பின்னர் தேவ காரியத்தில் விருப்பங்கொண்ட ஸுரர்கள் {தேவர்கள்} அனைவரும் திரிபதகையான {மூவழிகளில் பாய்பவளான} மூத்தவள் கங்கையை அந்த சைலேந்திரனிடம் {ஹிமவானிடம்} வரமாக வேண்டினர்.(17) தர்மவானான ஹிமவான், மூவுலகங்களின் நன்மையை எதிர்பார்த்தவனாக, உலகப் பாவங்களை அகற்றுபவளும், நினைத்த வழியில் பாய்பவளுமான கங்கையைக் கொடுத்தான்.(18) அப்போது அவர்கள் {தேவர்கள்}, மூவுலகங்களின் நன்மையை விரும்பி மூவுலகங்களின் அர்த்தமாக {செல்வமாக} விளங்கக்கூடிய கங்கையை வரவேற்று, அந்தராத்ம காரியம் நிறைவடைந்தவர்களாக {சொர்க்கத்திற்கே} திரும்பிச் சென்றனர்.(19)

இரகுநந்தனா, மலைமகளாக இருந்த இன்னொரு கன்னிகை {உமை} தவமே தனமாக உக்கிர விரதங்களை மேற்கொண்டு வந்தாள்.(20) சைலவரன் {மலைகளிற்சிறந்த ஹிமவந்தன்}, உக்கிர தவத்தில் ஐக்கியமடைந்தவளும், உலகங்களால் துதிக்கப்படுபவளும், ஒப்பற்றவளுமான தன் மகள் உமையை ருத்திரனுக்கு {திருமணம் செய்து} கொடுத்தான்.(21)

இராகவா, சைலராஜனின் {இமயத்தின்} மகள்களான ஆறுகளிற் சிறந்த கங்கையும், உமாதேவியும் உலகத்தால் நமஸ்கரிக்கப்படுகின்றனர்.(22) சிறந்த நடையைக் கொண்ட தாதா {ஐயா ராமா}, அந்தத் திரிபதகாமினி {மூவழிகளில் பாய்பவள்} சொர்க்கத்திற்குச் சென்றதையும், அவளது கதி தொடர்பான அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்[2].(23) ரம்யமானவளும், பாவமற்றவளும், ஜலவாஹினியுமான இந்த சைலேந்திரதனையள் {பர்வதராஜனின் மகளான இந்த கங்கை}, ஸுரநதியாகி {தேவநதியாகி} ஸுரலோகத்திற்கு {சொர்க்கத்திற்கு} உயர்ந்து சென்றவளாவாள்[3]" {என்றார் விசுவாமித்ரர்}.(24)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த ஆற்றின் மூவழி பாய்ச்சலில் கங்கையாக இமயத்தின் மடியில் பாய்வது முதல் வழியும், பிறகு அவள் தேவகங்கையாகவோ, மந்தாகினியாகவோ, சுதீர்கிகையாகவோ தேவர்களுடன் சொர்க்கம் நோக்கிச் செல்வது இரண்டாம் வழியும், பிறகு அவள் சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு ஜாஹ்னவியாக வந்து, கடலை அடைந்து பாதாளத்திற்கும் செல்வது மூன்றாம் வழியும் ஆகும். இதில் சில வேறுபாடுகளும் சொல்லப்படுகின்றன. இந்த ஆறு முதலில் ஆகாயத்தில் இருந்தது, அடுத்தது சொர்க்கத்தில் நுழைந்தது, மூன்றாவதாகப் பூமியை அடைந்தது என்று சிலர் சொல்கின்றனர். தேவர்கள், பிற்காலத்தில் அவள் சொர்க்கத்திற்கு வருவதற்காக வானின் மத்தியில் விடவில்லை, எனவே, கங்கை, மந்தாகினி, ஜாஹ்னவி என்பவையே அவளது மூவழிகள் என்கின்றனர்" என்றிருக்கிறது.

[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "இந்நதி மூன்று மார்க்கங்களைப் பெற்ற விதத்தைச் சொல்லுகிறேன். இக்கங்கை, முதலில் ஆகாயமார்க்கத்தில் சென்றனள். பின்பு பாபமின்றி அழகாய் விளங்கி வற்றாத வெள்ளங்கொண்ட பர்வதராஜன் மகளாகிய இந்நதியே தேவலோகத்திற்குச் சென்று தேவநதியென்னும் பெயர் பெற்றனள்" என்றிருக்கிறது. 

பாலகாண்டம் சர்க்கம் – 35ல் உள்ள சுலோகங்கள் : 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை