Monday 12 September 2022

அந்தப்புர ஸ்திரீகள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 065 (29)

The women of gynaecium | Ayodhya-Kanda-Sarga-065 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தசரதன் இறந்ததைக் கண்டுபிடித்த பெண்கள்; தசரதனின் மனைவியர் அனைவரும் பரிதாபமாக அழுதது...

Dasaratha's death

அந்த ராத்திரி கடந்து விடியத் தொடங்கிய அடுத்த நாளில், உயர்ந்த பண்பாட்டைக் கொண்டவர்களும், உத்தம கல்வியைக் கற்றவர்களுமான சூதர்களும், மங்கல ஆசிகளை உதிர்ப்பவர்களும், துதிப்பதையே வழக்கமாகக் கொண்டவர்களுமான காயகர்களும் {பாடகர்களும்}, பல்வேறு வகைகளில் தங்கள் வாழ்த்துகளைச் சொல்பவர்களான வந்திகளும் அந்த பார்த்திப நிவேசனத்திற்கு {ராஜமாளிகைக்குத்} தனித்தனியாக வந்தனர்.(1,2) அவர்களின் துதிகளும், ராஜனைக் குறித்த உரத்த குரல் வாழ்த்துகளும், பாராட்டுகளும் அந்த மாளிகையின் உள்ளரங்குகளை நிறைக்கும் வண்ணம் முற்றாகப் பரவியது.(3) அந்த சூதர்கள் துதித்ததும், சில பாணிவாதகர்கள் {கைத்தாளமிடும் பாடகர்கள்}, அவனது {தசரதனின்} செயல்களைப் புகழ்ந்து கைத்தாளத்துடன் பாடிக்கொண்டிருந்தனர்.(4) 

இராஜகுல கோசரங்களிலும் {ராஜமாளிகை வசிப்பிடங்களிலும்}, மரக்கிளைகளிலும், கூண்டுகளிலும் இருந்த பறவைகள் அவ்வொலியால் விழித்தெழுந்து கீச்சொலி எழுப்பத் தொடங்கின.(5) வீணையின் ஒலியுடன் வெளிப்பட்ட புண்ணிய சப்தங்களும், பூர்ண ஆசீர்வாதங்களுடன் கூடிய காதானங்களும் {புனிதப் பாடல்களும்} அந்த வேஷ்மத்தை {மாளிகையை} நிரப்பின.(6) பூர்வத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் தூய நடைமுறைகளைப் பராமரித்தவர்களும், கோவின் {அரசனின்} தொண்டில் திறம்படைத்தவர்களுமான பெண்களும், அலிகளும் அங்கே தொண்டாற்ற வந்தனர்.(7) 

ஸ்நானத்தை {நீராடலைக்} குறித்து அறிந்தவர்கள், உரிய காலத்திலும், உரிய விதிப்படியும் மஞ்சள், சந்தனம் கலந்த நீரைக் காஞ்சன கடங்களில் {பொற்குடங்களில்} அங்கே கொண்டு வந்தனர்.(8) அவ்வாறே ஸ்திரீகுமாரிகளும் {கன்னிப் பெண்களும்}, மேனியில் பூசிக் கொள்வதற்கான மங்கல பொருட்களையும், சிற்றுண்டிகளையும், அலங்காரப் பொருட்களையும் கொண்டு வந்தனர்.(9) அவனருகே கொண்டு வரப்பட்ட சர்வமும், விதிப்படி மதிப்புடன் அங்கே வைக்கப்பட்டன. சர்வ லக்ஷணங்களும் பொருந்திய அவை அனைத்தும் சுகுணலக்ஷ்மீகரமாக {பேரருள் நிறைந்தவையாக} இருந்தன.(10) அதன்பிறகு பெரும் பரபரப்புடன் வந்த அவர்கள் அனைவரும், "இஃது என்ன" என்ற ஐயத்துடன் சூரியோதயம் வரையில் அவனை நெருங்காமல் அங்கேயே நின்றனர்.(11)

பிறகு அந்தக் கோசலேந்திரனின் {கோசல நாட்டுத் தலைவனான தசரதனின்} சயனம் வரை தடையில்லாமல் செல்லக்கூடிய ஸ்திரீகள் மட்டும் ஒன்றுகூடிச் சென்று, தங்கள் பர்த்தாவை நெருங்கி {தலைவனை / கணவனை நெருங்கி, மெதுவான வாக்கியங்களைச் சொல்லி} அவனை எழுப்பினர்.(12) விநயத்திலும், நயத்திலும் {பணிவிலும், அறிவிலும்}  உசிதமான நடத்தை கொண்ட அவர்களும், அவனது சயனத்தை ஸ்பரிசிக்காததால் எதையும் உணராமலிருந்தனர்.(13) உறக்கத்தில் கனவு காணும்போதான உடலின் நிலை, அங்க அசைவுகள் போன்றவற்றை அறிந்தவர்களான அந்த ஸ்திரீகள், ராஜனின் பிராணனைக் குறித்த அச்சத்தில், பிரவாஹத்தை {நீரோட்டத்தை} எதிர்த்து நிற்கும் நீர்வஞ்சிப்புல் நுனிகளைப் போல நடுங்கிக் கொண்டிருந்தனர்.(14,15அ) எதிர்வரப்போகும் பாபத்தை நினைத்து அஞ்சிக் கொண்டிருந்த அந்த ஸ்திரீகளின் சந்தேக மனங்கள், அந்தப் பார்த்திபனை {மன்னன் தசரதனை} இவ்வாறு கண்டதும் ஒரு நிச்சயத்தையடைந்தன.(15ஆ,16அ)

புத்திரசோகத்தால் பீடிக்கப்பட்டவர்களும், உறங்கிக் கொண்டிருந்தவர்களுமான கௌசல்யையும், சுமித்திரையும் காலனால் முற்றிலும் பீடிக்கப்பட்டவர்களைப் போல விழிக்காமல் கிடந்தனர்.(16ஆ,17அ) பிரகாசமிழந்தவளும், வர்ணமிழந்தவளும் {நிறம் மங்கியவளும்}, சோகத்தாலும், சன்னதத்தாலும்  {மயக்கத்தாலும்} மெலிந்திருந்தவளுமான கௌசல்யை, இருளில் மூழ்கிய தாரையை {நட்சத்திரத்தைப்} போல ஒளியிழந்திருந்தாள்.(17ஆ,18அ) ராஜனுக்கு அருகிலேயே இருந்த கௌசல்யா தேவியும், அவளது அருளில் இருந்த சுமித்திரையும் சோகக்கண்ணீரில் மறைந்த முகத்துடன், {முன்பு போல} ஒளிராமல் இருந்தனர்.(18ஆ,19அ) சுபர்களான அந்த தேவிகள் உறங்குவதையும், நிருபனின் நிலையையும் கண்ட அந்தப்புரத்தினர், உறக்கத்திலேயே அவனது பிராணன் போயிருக்க வேண்டுமென மனத்தில் நினைத்தனர்.(19ஆ,20அ) பிறகு பரிதாபத்திற்குரிய அந்த வராங்கனைகள் {பெண்கள்}, அரண்யத்தின் ஸ்தானத்தில் இருந்து விலக்கப்பட்ட கரேணங்களை {பெண் யானைகளைப்} போல உரத்த குரலில் அழுதனர்.(20ஆ,21அ)

அவர்களின் அலறலைக் கேட்ட கௌசல்யையும், சுமித்திரையும் உடனே நித்திரையில் இருந்து விடுபட்டு சுயநனவை அடைந்தனர்.(21ஆ,22அ) அப்போது அந்தப் பார்த்திபனைக் கண்டும், ஸ்பரிசித்தும் பார்த்த கௌசல்யையும், சுமித்திரையும், "ஹா நாதரே" என்று அலறியவாறே தரணீதலத்தில் {பூமியின் தரையில்} விழுந்தனர்.(22ஆ,23அ) மஹீதலத்தில் {பூமியின் தரையில்} உருண்டு, புரண்ட அந்த கௌசல்யேந்திரன் மகள் {கௌசல்யை}, ககனத்திலிருந்து விழுந்த தாரையை {வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரத்தைப்} போலப் பிரகாசிக்காமல் இருந்தாள்.(23ஆ,24அ) அந்த நிருபன் குணமழிந்தவனான போது {இறந்த பிறகு}, கொல்லப்பட்டு விழுந்த நாகவதுவை {பெண்யானையைப்} போலப் புவியில் விழுந்த கௌசலையை அந்த ஸ்திரீகள் அனைவரும் கண்டனர்.(24ஆ,25அ)

அதன்பிறகு, கைகேயீ பிரமுகர்களும் {கைகேயியைச் சார்ந்தவர்களும்}, நரேந்திரனின் ஸ்திரீகள் அனைவரும் சோகத்தால் பீடிக்கப்பட்டு அழுதவாறே சுயநனவு அகன்று விழுந்தனர்.(25ஆ,26அ) அழுது கொண்டிருந்தவர்களால் உண்டான பலத்த சந்நாதத்துடன் {ஓங்கி ஒலித்த ஒலியுடன்} இவர்களின் ஒலியும் இணைந்து, அந்தக் கிருஹத்தையே {வீட்டையே} பிளக்கும் பேரொலியானது.(26ஆ,27அ) திஷ்டாந்தத்தை {இறுதி முடிவை} அடைந்த அந்த நரதேவனின் சத்மம் {மன்னனின் அந்தப்புரம்}, மனவேதனையுற்று திகிலடைந்த ஜனாகுலத்தால் {மக்கள் கூட்டத்தால்} நிறைந்ததாகவும், முற்றிலும் கலக்கமுற்றதாகவும், சுற்றிலும் கலங்கிய பந்துக்களுடன் {உறவினர்களுடன்} கூடியதாகவும், துன்பத்தாலும், விரக்தியாலும் ஆனந்தம் இழந்ததாகவும் காணப்பட்டது.(27ஆ-29அ) புகழ்பெற்றவனான அந்த பார்த்திபரிஷபன் {மன்னர்களில் காளையான தசரதன்} காலமானதை அறிந்த அவனது பத்தினிகள் {மனைவியர்}, பெருந்துக்கத்துடன் அவனைச் சூழ்ந்து, அநாதைகளைப் போல ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக் கொண்டு பரிதாபகரமாக அழுது புலம்பினர்.(29ஆ-29உ)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 065ல் உள்ள சுலோகங்கள் : 29

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை