Showing posts with label சாந்தை. Show all posts
Showing posts with label சாந்தை. Show all posts

Thursday, 29 July 2021

அயோத்தியில் ரிஷ்யசிருங்கர் | பால காண்டம் சர்க்கம் - 11 (31)

Rishyasringa's arrival at Ayodhya | Bala-Kanda-Sarga-11 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தசரதனை அறிவுறுத்திய சுமந்திரன்; ரிஷியசிருங்கரையும், அவரது மனைவியையும் அயோத்திக்கு அழைத்து வந்த தசரதன்...


Rishyashringa travels to Ayodhya

{சுமந்திரன் தொடர்ந்தான்}, "இராஜேந்திரரே, தேவர்களில் சிறந்தவரான அவர் {சனத்குமாரர்}, எவ்வாறு கதையைச் சொன்னாரோ அவ்வாறே நான் மீண்டும் சொல்லப் போகும் ஹிதமான சொற்களைக் கேட்பீராக.(1) {சனத்குமாரர் தொடர்ந்தார்}, "தர்மவானும், ஸ்ரீமானும், சத்தியத்தில் நிலைநிற்பவனுமான ஒருவன் தசரதன் என்ற பெயரில் இக்ஷ்வாகு குலத்தில் பிறப்பான்.(2) அந்த ராஜன் {தசரதன்}, அங்கராஜனுடன் நட்பு கொள்வான். அவனுக்கு[1] சாந்தை என்ற பெயரில் மஹாபாக்யவதியான ஒரு கன்னிகை இருப்பாள்.(3) அங்கராஜனின் புத்திரன் ரோமபாதன் என்ற பெயரில் அறியப்படுவான். பெரும்புகழ் படைத்த தசரத ராஜன் அவனை {ரோமபாதனை} அணுகி,(4) "தர்மாத்மாவே {ரோமபாதா}, நான் பிள்ளையற்றவனாக இருக்கிறேன். சாந்தையின் பர்த்தா {கணவர் ரிஷ்யசிருங்கர்} உன் ஆணையின் பேரில் என் குல சந்ததிக்காகச் செய்யப்படும் வேள்விக்குத் தலைமை தாங்கட்டும்" என்று கேட்பான்.(5) ஆத்மவானான ரோமபாதன், அந்த ராஜாவின் {தசரதனின்} வாக்கியத்தைக் கேட்டு, மனத்தில் சிந்தித்து, புத்திரவந்தத்திற்காக[2] சாந்தையின் பர்த்தாவைக் கொடுப்பான்.(6) அந்த ராஜன் {தசரதன்}, அந்த விப்ரரை {ரிஷ்யசிருங்கரை} அழைத்துச் சென்று, பிணி விலகியவனாக அந்தராத்மாவில் மகிழ்ச்சியடைந்து அந்த யஜ்ஞத்தைச் செய்வான்.(7)

[1] இங்கே குறிப்பிடப்படுவது தசரதனா, அங்கராஜனா என்பதில் மொழிபெயர்ப்புப் பதிப்புகளுக்கிடையில் பெருங்குழப்பம் இருக்கிறது. இதற்கு அடுத்த ஸ்லோகத்தில் அங்கராஜனின் புத்திரன் ரோமபாதன் என்றிருக்கிறது. எனவே, இங்கே அங்கராஜனின் மகள் சாந்தை என்று கொண்டால், அவள் ரோமபாதனுக்குத் தமக்கை ஆவாள். ஆனால், இதே சர்க்கத்தின் 19ம் ஸ்லோகத்தில் தசரதன் ரோமபாதனிடம் பேசும்போது உன் மகள் சாந்தை என்று சொல்கிறான். அவ்வாறெனில் சாந்தை ரோமபாதனின் மகளாவாள்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், ப்ரதா³ஸ்யதே புத்ரவந்தம் என்பது, "ஏற்கனவே மகனைக் கொண்டிருந்த ரிஷ்யசிருங்கர்" என்று சில மொழிபெயர்ப்புகளில் காணப்படுகிறது. மற்ற மொழிபெயர்ப்புகளிலோ, "புத்ரகாமேஷ்டி சடங்கின் மூலம் சந்ததியை அளிக்கும் முனிவர்" என்று காணப்படுகிறது. மஹாபாரதத்தில் விபாண்டர் ரிஷ்யசிருங்கரிடம் ஒரு மகனைப் பெறும் வரை அங்க நாட்டில் இருந்து விட்டுத் திரும்பி வந்துவிடு என்பார். இதைக் கொண்டு ரிஷ்யசிருங்கருக்கு ஒரு மகன் இருந்தான் என்று சிலர் சொல்கிறார்கள்" என்றிருக்கிறது. மஹாபாரதம் வனபர்வம் பகுதி 113ல் விபாண்டகர் ரிஷ்யசிருங்கரிடம் சொன்ன செய்தி இருக்கிறது.

வேள்வி செய்யும் விருப்பம் கொண்டவனும், தர்மம் அறிந்தவனும், நரேஷ்வரனுமான {மக்களின் தலைவனுமான} தசரத ராஜன், யஜ்ஞார்த்தத்திற்காகவும் {வேள்வியைச் செய்வதற்காகவும், அதன் மூலம் அமையும்} பிரசவார்த்தத்திற்காகவும் {சந்ததியைப் பெறுவதற்காகவும்}, ஸ்வர்க்கார்த்தத்திற்காகவும் {வீடு பேற்றுக்காகவும்} அந்தத் துவிஜ சிரேஷ்டரான {இருபிறப்பாளர்களில் சிறந்தவரான} ரிஷ்யசிருங்கரிடம் கைகளைக் கூப்பி வேண்டுவான். அந்த விஷாம்பதி {பூமியின் திக்குகள் அனைத்திற்கும் பேரரசனான தசரதன்}, அந்தத் துவிஜமுக்கியரின் {ரிஷ்யசிருங்கரின்} மூலம் தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வான்.(8,9) அவனுக்கு வீரம் நிறைந்த நான்கு புத்திரர்கள் பிறந்து வம்சத்தின் மதிப்பை உயர்த்தி உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் புகழுடன் இருப்பார்கள்" {என்றார் சனத்குமாரர்}.(10) தேவர்களில் மேலானவரும், பகவானும், பிரபுவுமான அந்தச் சனத்குமாரர் பூர்வத்தில், தேவ யுகத்தில் {கிருத யுகத்தில்} இவற்றை உரைத்தார்.(11) எனவே, புருஷர்களில் புலியே, மஹாராஜா {தசரதரே}, தனிப்பட்ட முறையில் பரிவாரத்துடன் நீரே சென்று, வாகனத்தில் அவரை {ரிஷ்யசிருங்கரை} இங்கே அழைத்து வந்து துதிப்பீராக" {என்றான் சுமந்திரன்}.(12)

சுமந்திரனின் சொற்களைக் கேட்ட தசரதன் மகிழ்ச்சியடைந்தான். அந்தச் சூதனின் மொழியை வசிஷ்டரையும் கேட்கச் செய்து, அவரது அனுமதியையும் பெற்றான். பிறகு அவன் சாந்தபுரத்தை {அந்தப்புரத்தைச்} சேர்ந்தவர்களுடனும், அமாத்யர்களுடனும் {அமைச்சர்களுடன்} சேர்ந்து, அந்தத் துவிஜர் இருந்த இடத்திற்குப் பிரயாணம் செய்தான்.(13,14அ) மெல்ல மெல்ல வனங்களையும், ஆறுகளையும் கடந்து சென்று, அந்த முனிபுங்கவர் இருக்கும் தேசத்திற்குள் நுழைந்தான்.(14ஆ,15அ) அந்தத் துவிஜ சிரேஷ்டர் {ரிஷ்யசிருங்கர்}, ரோமபாதனின் அருகில் வேள்வி நெருப்பைப் போல ஒளிர்வதைக் கண்டான்.(15ஆ,16அ)

அப்போது அந்த ராஜா {ரோமபாதன்}, அந்தராத்மாவில் பெரும் மகிழ்ச்சியடைந்து, முறைப்படியும், நட்பின் அடிப்படையிலும் அந்த ராஜனை {தசரதனை} விசேஷமாகப் பூஜித்தான்.(16ஆ,17அ) ரோமபாதன், தங்கள் நட்பையும், உறவையும் ஞானமிக்க ரிஷிபுத்திரரிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} சொன்னான். அப்போது அவரும் அவனுக்கு {தசரதனுக்குப்} பிரதிபூஜை செய்தார்.(17ஆ,18அ) நரரிஷபனான {மனிதர்களில் காளையான} அந்த ராஜன் {தசரதன்}, இவ்வாறு வரவேற்கப்பட்டு, ஏழு, எட்டு நாட்கள் கழிந்த பிறகு அந்த ராஜனிடம் {ரோமபாதனிடம்}, இவ்வாறு {பின்வருமாறு} பேசினான்,(18ஆ,19அ) "விஷாம்பதியே {விஷயங்களின் தலைவனான ரோமபாதா}, உன் மகள் சாந்தை தன் பர்த்தாவுடன் என் நகரத்திற்கு {அயோத்திக்கு} வர வேண்டும். ஒரு மகத்தான காரியத்தைச் செய்ய உத்தேசித்திருக்கிறேன்" {என்றான் தசரதன்}.(19ஆ,20அ) "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்ன அந்த ராஜன் {ரோமபாதன்}, நுண்ணறிவுமிக்க அந்த விப்ரரும் {ரிஷ்யசிருங்கரும்} ஏற்றுக் கொண்ட பிறகு அவரிடம், "நீர் உமது பார்யையுடன் {மனைவியுடன்} செல்வீராக" என்று சொன்னான்.(20ஆ,21அ) அப்போது அந்த ரிஷிபுத்திரர், "அவ்வாறே ஆகட்டும்" என்று அவனிடம் மறுமொழி கூறினார். அவர் அவனால் அனுமதிக்கப்பட்டுத் தன் பார்யையுடன் புறப்பட்டுச் சென்றார்.(21ஆ,22அ)

அந்த வீரியவான்கள் இருவரும் {ரோமபாதனும், தசரதனும்} அன்யோன்ய அஞ்சலி செய்தும், ஸ்னேகத்தால் மார்புறத் தழுவிக் கொண்டும் மகிழ்ச்சியடைந்தனர்.(22ஆ,23அ) ரகுநந்தனனான {ரகுவின் வழித்தோன்றலான} தசரதன் அந்த நல்லிதயம் கொண்டவனிடம் {ரோமபாதனிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்ற போது, சீக்கிரமாகச் செல்பவர்களை {தூதர்களை} நகரவாசிகளிடம் {அயோத்திபுரிவாசிகளிடம்} அனுப்பி,(23ஆ,24அ) "நகரம் முழுவதும் சீக்கிரமாக நல்லலங்காரத்துடன் {நறுமண} தூபமிட்டு, {சாலைகள்} தூய்மைப்படுத்தப்பட்டு, நீர் தெளிக்கப்பட்டு, பதாகைகளால் அலங்கரிக்கப்படட்டும்" {என்று அறிவிக்கச் செய்தான்}.(24ஆ,25அ) ராஜனின் வரவைக் கேட்ட குடிமக்கள் மகிழ்ச்சியடைந்து, அந்த ராஜனால் ஆணையிடப்பட்ட பணிகளைச் செய்தனர்.(25ஆ,26அ)

அப்போது, ராஜா {தசரதன்} அந்தத் துவிஜரிஷபரை {இருபிறப்பாளர்களில் காளையான ரிஷ்யசிருங்கரைத்} தனக்கு முன்னிட்டுக் கொண்டு, சங்கு, துந்துபிகளின் ஒலிகளை எதிரொலித்ததும், நன்கு அலங்கரிக்கப்பட்டதுமான அந்த நகரத்திற்குள் {அயோத்திக்குள்} விரைவாகப் பிரவேசித்தான்.(26ஆ,27அ) நகரவாசிகள் அனைவரும் ஆயிரம் கண்களைக் கொண்ட சூரேந்திரனால் {இந்திரனால்} அழைத்து வரப்படும் காசியபரின் மகனை {வாமனனைப்} போல நன்கு கௌரவிக்கப்பட்டு நரேந்திரனுடன் {தசரதனுடன்} பிரவேசிக்கும் அந்தத் துவிஜரை {ரிஷ்யசிருங்கரைக்} கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(27ஆ,28) அவர் அந்தப்புரத்திற்குள் பிரவேசித்ததும், சாஸ்திரங்கள்படி பூஜித்த அவன் {தசரதன்}, அவரை அழைத்து வந்த உடனேயே தன் விருப்பம் நிறைவேறியதாக நம்பினான்.(29) அந்தப்புரத்து ஸ்திரீகள் அனைவரும், இவ்வாறு பர்த்தாவுடன் வரும் விசாலாக்ஷியான {நீள் விழியாளான} சாந்தையைக் கண்ட பிரீதியால் {பாசத்தால்} ஆனந்தம் அடைந்தனர்.(30) அவள் {சாந்தை} அவர்களாலும், தசரதனாலும் விசேஷமாகப் பூஜிக்கப்பட்டுச் சிறிது காலம் அங்கே அந்த ரித்விஜருடன் {ரிஷ்யசிருங்கருடன்} சுகமாக வசித்திருந்தாள்.(31)
 

பாலகாண்டம் சர்க்கம் –11ல் உள்ள சுலோகங்கள்: 31

Previous | Sanskrit | English | Next

Tuesday, 27 July 2021

ரிஷ்யசிருங்கர் | பால காண்டம் சர்க்கம் - 09 (20)

Rishyasringa | Bala-Kanda-Sarga-09 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம் : ரிஷ்யசிருங்கரை வேள்விக்கு அழைக்க வேண்டுமென தசரதனிடம் சொன்ன சுமந்திரன்...

Dasharatha and Sumantra

இவையனைத்தையும் கேள்விப்பட்ட சூதன் {எட்டாவது அமைச்சனான தேரோட்டி சுமந்திரன்}[1], ராஜனிடம் {தசரதனிடம்} ரகசியமாக வந்து, "நான் மொத்த புராணத்தையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) ராஜா, ரித்விக்குகள் உமக்கு உபதேசித்தார்கள். பகவான் ஸனத்குமாரர்உமக்குப் புத்திரர்கள் பிறப்பதைக் குறித்துப் பூர்வத்தில் சொன்னதை நான் கேட்டேன்.(2,3அ)

[1] இந்தச் சர்க்கத்தின் 20ம் ஸ்லோகத்தில், இவனது பெயர் சுமந்திரன் என்று சொல்லப்படுகிறது. 8ம் சர்க்கத்தின் 3வது சுலோகத்தில் அமைச்சர்களின் பட்டியிலில் எட்டாவதாக வருபவனும், இங்கே சொல்லப்படும் சூதனும் ஒருவர் என்றே மொழிபெயர்ப்பாளர்கள் பலராலும் ஏற்கப்படுகிறது.

அவர் {ஸனத்குமாரர்}, "காசியபருக்கு விபாண்டகன் என்று அறியப்படும் ஒரு புத்திரன் இருக்கிறான், அவனுக்கு ரிஷ்யசிருங்கன்[2] என்ற புகழ்வாய்ந்த மகன் பிறப்பான். அந்த முனிவன் {ரிஷ்யசிருங்கன்} எப்போதும் வனத்தில் வளர்ந்து வரும் வனவாசியாக இருப்பான்.(3ஆ,4) அந்த விப்ரேந்திரன் {பிராமணர்களி தலைவன்/இந்திரன்,  ரிஷ்யசிருங்கன்}, வேறு ஒருவரையும் அறியாதவனாக எப்போதும் தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்திருந்து இருவகையான பிரம்மசரியத்தைக் கடைப்பிடிப்பான்[3]" என்றார்.(5)

[2] மஹாபாரதம், வனபர்வம் அத்தியாயம் 110 முதல் 113 வரை இந்த ரிஷ்யசிருங்க முனிவரின் கதை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படும் த்வைவித்யம் என்பது விரதித்வம், பிரஜாபத்யம் என்ற இருவகைப் பிரம்மசரியத்தைக் குறிப்பிடுகிறது. ஒன்று திருமணம் செய்வதற்கு முன்பு உள்ள நிலையாகும். அடுத்தது திருமணம் செய்த பின்பு முழுநிலவு, புதுநிலவு, கிரஹண காலங்கள் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டும் மனைவி விட்டுப் பிரிந்திருக்கும் நிலையாகும். இங்கே இந்தச் சொல் தடையேற்படல் என்ற பொருளையும் கொள்கிறது. இருவகைப் பிரம்மச்சரியத்திற்கும் தடை ஏற்படும் நிலை என்று பொருள் தரும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அம்முனி இவ்வண்ணஞ்செய்து கொண்டிருக்கையில், ப்ரஹ்மசர்யத்திற்குப் பங்கம் வந்து இல்லறத்திற்கு வருவார்" என்றிருக்கிறது. அதே போலவே, ஸ்ரீநிவாஸய்யங்கார் பதிப்பிலும், "அக்னி காரியங்களையே கவனித்துக் கொண்டிருக்கும் அந்த ரிஷிபுத்திரனுடைய பிரஹ்மசரிய விரதத்திற்குச் சிலகாலத்திற்குப் பின் கெடுதி நேரும்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "உலகத்தில் பிரசித்தமான பிரமசரியம் (அதாவது, முஞ்சி, மான்தோல் பலாசங்கொம்பு முதலானவைகளைத் தரித்துக் கொண்டு வேதமோதுதல்) பெண்களோடு சேராமலிருப்பதாகிய பரமசரியமாகி இவ்விரண்டும் அவரிடத்திலுண்டாயிருக்கும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கூட "ரிஷ்யசிருங்கர் இருவகைப் பிரம்மசரியத்தைப் பின்பற்றுவார்" என்றிருக்கிறது.

{தசரத} ராஜாவே, மேலும் அவர் {ஸனத்குமாரர்}, "அவன் {ரிஷ்யசிருங்கன்} விப்ரர்களால் புகழப்பட்டு, உலகப் புகழ் பெற்றிருப்பான், இவ்வாறான ஒழுக்கத்திலேயே காலம் கடக்கும்.(6) அவன் அக்னிக்கும், தன் தந்தைக்கும் தொண்டு செய்து செழிப்பான். அதேவேளையில், அங்க நாட்டின் பிரதாபவானான ராஜா ரோமபாதன் மஹாபலவானாக அங்கே புகழ்பெற்றிருப்பான்.(7,8அ) அந்த ராஜாவின் அறமீறலினால் அங்கே அதிர்ச்சியூட்டும் வகையில் அனைத்து உயிரினங்களுக்கும் அச்சத்தைத் தரும் பஞ்சம் ஏற்படும்.(8ஆ,9அ) {அவ்வாறு} பஞ்சமேற்படும்போது துக்கத்தால் பீடிக்கப்படும் ராஜா {ரோமபாதன்}, சாத்திரங்களை நன்கறிந்தவர்களான பிராமணர்களை அழைத்து அவர்களிடம்,(9ஆ,10அ) "நீங்கள் அனைவரும் சடங்குகளை நன்கறிந்தவர்களாகவும், உலகச் சரித்திரங்களை அறிந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். {இதற்கான} பிராயசித்தத்திற்கு என்ன செய்ய வேண்டும்?" {என்று கேட்பான்}.(10ஆ,11அ)

ராஜன் அவர்களிடம் இவ்வாறு சொன்னதும், பிராமண அறிஞர்களும், பிராமண வேதபாரகர்களும், அந்த மன்னனிடம், "ராஜாவே, விபாண்டகரின் மகனை சர்வ உபாயங்களினால் {அனைத்து வழிமுறைகளினாலும்} இங்கே அழைத்து வருவாயாக.(11ஆ,12) மஹீபாலா {பூமியைக் காப்பவனே / ரோமபாதா}, விபாண்டகரின் மகனான ரிஷ்யசிருங்கரை அழைத்துவந்து, கவனமாக அவரைக் கௌரவித்து, விதிப்படி சாந்தையென்ற {உன்} கன்னிகையை வேதபாரகரான அந்தப் பிராமணருக்கு {மணமுடித்துக்} கொடுப்பாயாக" என்பார்கள்.(13)

அவர்களின் மொழியைக் கேட்கும் ராஜா {ரோமபாதன்}, "அந்த வீரியவானை {புலன்களை வென்றவரான ரிஷ்யசிருங்கரை} இங்கே அழைத்து வருவதற்கான வழிமுறைகளென்ன?" எனச் சிந்திப்பான்.(14) ஆத்மவானான அந்த ராஜா, மந்திரிகளுடன் ஆலோசித்து, புரோஹிதர்களையும், அமைச்சர்களையும் அனுப்புவதாகச் சொல்வான்.(15)

ஆனால் ராஜனின் மொழியைக் கேட்டுப் பீதியடைந்து முகம் கவிழும் அவர்கள், "அந்த ரிஷியிடம் பீதியடைகிறோம், நாங்கள் அங்கே செல்லமாட்டோம்" என்று அவனிடம் கெஞ்சுவார்கள்.(16) பிறகு மீண்டும் சிந்தித்து, ஓர் உபாயத்தைக் கண்டறியும் அவர்கள், "நாங்கள் அந்த விப்ரரை அழைத்து வருகிறோம். எந்தத் தோஷமும் நேராது" என்பார்கள்.(17)

இவ்வாறு அந்த அங்காதிபனாலும் {அங்க நாட்டு மன்னன் ரோமபாதனாலும்}, கணிகையராலும் அந்த ரிஷிமகன் அழைத்துவரப்படுவான். தேவர்கள் மழையைப் பொழிவார்கள், சாந்தையும் அவனுக்கு {ரிஷ்யசிருங்கனுக்குக்} கொடுக்கப்படுவாள்" என்றார் {ஸனத்குமாரர்}.(18)

{ரோமபாதனின்} மருமகனான[4] அந்த ரிஷ்யசிருங்கரே, உமக்குப் புத்திரர்களை அருள்வார். என்னால் சொல்லப்படும் இவையாவும் ஸனத்குமாரர் சொன்னவையாகும்" என்றான் {சூதன் / சுமந்திரன்}.(19)

[4] தாதாசாரியர் பதிப்பில் உள்ள அடிக்குறிப்பில், "சாந்தை என்பவள் தசரதருக்கு மகள். அவளை ரோமபாதர் தத்துவாங்கிக் கொண்டார். அதனாலே தான் கலைக்கோட்டு முனியை {ரிஷ்யசிருங்கரை} உமக்கும் மருமகன் என்றது" என்றிருக்கிறது. முன் ஸ்லோகம் அங்காதிபனைக் குறிப்பதால். சாந்தை ரோமபாதனின் மகள் என்றே ஆங்கில மொழிபெயர்ப்புகள் கொள்கின்றன. இனி வரப்போகும் 11ம் சர்க்கம் 3ம் ஸ்லோகத்திலும் இத்தகைய குழப்பம் நேர்கிறது. 

இதனால் மகிழ்ச்சியடைந்த தசரதன், மீண்டும் சுமந்திரனிடம், "ரிஷியசிருங்கர் எவ்வாறு {அந்த அங்கநாட்டுக்கு} அழைத்துவரப்பட்டார் என்பதை விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(20)
 

பாலகாண்டம் சர்க்கம் – 09ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை