Showing posts with label பகீரதன். Show all posts
Showing posts with label பகீரதன். Show all posts

Tuesday, 28 September 2021

கங்காவதரணம் | பால காண்டம் சர்க்கம் - 44 (23)

Gangaavatarana | Bala-Kanda-Sarga-44 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த பகீரதனைப் பாராட்டிய பிரம்மன்; பகீரதனின் மகளாக கங்கையை அருளிய பிரம்மன்; கங்கையின் புனித நீரை பித்ருக்களுக்குக் காணிக்கையளிக்க சொன்ன பிரம்மன்...

Bhagiratha and Ganga

{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "கங்கையால் பின்தொடரப்பட்ட அந்த ராஜா {பகீரதன்}, அவர்கள் {ஸகரனின் மகன்கள்} பஸ்மமாகிக் கிடந்த சாகரத்திற்குச் சென்று, பூமியின் தளத்திற்குள் {பாதாளத்திற்குள்} பிரவேசித்தான்.(1) இராமா, கங்கையின் நீரில் பஸ்மம் {சாம்பல்} நனைந்த போது, சர்வ லோக பிரபுவான பிரம்மன் அந்த ராஜனிடம் {பகீரதனிடம்} பேசினான்:(2) "நரசார்தூலா {மனிதர்களில் புலியே, பகீரதா}, மஹாத்மாவான ஸகரனின் அறுபதாயிரம் புத்திரர்களும் தங்கள் நிலை கடந்து {பிரேதமெனும் நிலையைக் கடந்து} தேவர்களைப் போல சொர்க்கத்தை அடைவார்கள்.(3) பார்த்திபா, சாகரத்தின் ஜலம் இவ்வுலகத்தில் இருக்கும் வரை ஸகராத்மஜர்கள் {சகரனின் மகன்கள்} யாவரும் தேவர்களைப் போன்ற திவ்ய ஸ்தானத்தில் இருப்பார்கள் {சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள்}.(4) இந்த கங்கை உன் மூத்த மகளாகட்டும். {கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்த} உன் செயலால் இனிமேல் அவளது பெயரும் உன் பெயராலேயே {பாகீரதி என்று} இந்த உலகில் புகழுடன் நிலைத்திருக்கும்[1].(5) திவ்யமான கங்கை, திரிபதகை என்ற பெயரிலும், பாகீரதி என்றும் {என்ற பெயரிலும்} அழைக்கப்படுவாள். {சுவர்க்கலோகம், பூலோகம், பாதாளலோகமென} மூன்று பாதைகளைப் புனிதப்படுத்துவதால் இவள் திரிபதகை என்று நினைவுகூரப்படுவாள்.(6)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகத்திற்கு, "நீ கங்கையின் தந்தை நிலையை அடைந்ததால், அவள் இனி பாகீரதி என்றழைக்கப்படுவாள். உன் பெயர் அவளது குடும்பப் பெயராகட்டும்" என்றும் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.

இராஜனே, மனிதாதிபா, நீ இதை {கங்கையின் நீரை} உன் பிதாமஹர்கள் {பாட்டன்மார்} அனைவருக்கும் நீர்க்காணிக்கையாக அளித்து {உன்} பிரதிஜ்ஞையை {உறுதிமொழியை} நிறைவேற்றிக் கொள்வாயாக.(7) இராஜனே, மகத்தானவனும், தர்மவான்களில் சிறந்தவனுமான உன் மூதாதையால் {ஸகரனால்} கூட அந்நேரத்தில் {தன் வாழ்நாளில்} தன் மனோரதத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை.(8) வத்ஸா {ஐயா}, உலகில் ஒப்பற்ற தேஜஸ்வியும், கங்கையைக் கொண்டு வர பிரார்த்தித்தவனுமான {உன் பாட்டன்} அம்சுமானாலும் தன் பிரதிஜ்ஞையை நிறைவேற்ற முடியவில்லை.(9) அநகா {குறையற்ற பகீரதா}, ராஜரிஷியும், குணவானும், மஹரிஷிகளுக்குச் சமமான தேஜஸ்வியும், தவத்தில் எனக்கு இணையானவனும், க்ஷத்ர {காக்கும்} தர்மத்தை திடமாகக் கடைப்பிடித்தவனும், அதிதேஜஸ்வியும், பெரும் நற்பேறு பெற்றவனும், கங்கையைப் பிரார்த்தித்தவனுமான உன் பிதா திலீபனுக்கும் அது சாத்தியப்படவில்லை[2].(10,11)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "10ம் சுலோகத்தின் உள்ளடக்கம் சில வேளைகளில் 9ம் சுலோகத்துடன் சேர்த்துப் படிக்கப்பட்டு திலீபன் என்பதற்குப் பதில் அம்சுமான் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது" என்றிருக்கிறது.

புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, உலகில் உன்னால் நிறைவேற்றப்பட்ட அந்தப் பிரதிஜ்ஞையானது பெரும் போற்றுதலுக்குரியது.(12) அரிந்தமா {பகைவரை ஒடுக்குபவனே}, உன்னால் ஏற்பட்ட இந்தக் கங்காவதரணத்தால் தர்மத்தின் அடிப்படையிலான அடித்தளத்தை நீ அமைத்திருக்கிறாய்.(13) நரோத்தமா {மனிதர்களில் உத்தமனே}, புருஷ சிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, உசிதமான இந்நீரில் எப்போதும் நீ நீராடுவாயாக. அதன் மூலம் தூய்மையடைந்து புண்ணிய பலத்தையும் அடைவாயாக[3].(14) உன் பிதாமஹர்கள் {பாட்டன்மார்கள்} அனைவருக்கும் நீர்க்கிரியை செய்வாயாக. நீ நலமாக இருப்பாயாக. நான் செல்கிறேன். நிருபா {பகீரத மன்னா}, நீ உன் உலகத்திற்குச் செல்வாயாக" {என்றான் பிரம்மன்}.(15)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிற ஆறுகளின் நீர்களில் ரஜஸ்வலை தோஷம், அதாவது மாதவிடாயின் தீட்டு உண்டு. சூரியன் கடக சிம்ம ராசிகளில் திரியும் இரண்டு மாதங்களிலும், புதுவெள்ளம் பாயும்போதும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைப் போன்று ஆறுகளுக்கும் தீட்டு ஏற்படும். ஆனால் கங்கை, வற்றாதவள் என்பதால் இந்தத் தடைகளுக்கு அப்பாற்பட்டு எப்போதும் புனிதப்படுத்துபவளாகவே இருக்கிறாள். இந்த சர்க்கத்தின் இறுதிக் குறிப்பில் கங்கை குறித்த மேலதிக தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன {அடுத்த அடிக்குறிப்பில் இருக்கின்றன}." என்றிருக்கிறது.

பெரும் மகிமைமிக்கவனும், தேவர்களின் ஈசனுமான சர்வலோக பிதாமஹன் {பிரம்மன்} இவ்வாறு சொல்லிவிட்டு, வந்தவாறே தேவலோகத்திற்குச் சென்றான்.(16) ராஜரிஷியும், பெரும் புகழ்பெற்றவனுமான ராஜா பகீரதன், வழிமுறைப்படியும், நியாயப்படியும் ஸாகரர்களுக்கு உத்தம உலகம் கிட்ட உத்தம நீரைக் காணிக்கையளித்துத் தூய்மையடைந்து தன் நகரத்தில் பிரவேசித்தான். நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்த ராமா}, நோக்கங்கள் நிறைவேறியவனான அவன், தன் ராஜ்ஜியத்தை நல்ல முறையில் ஆட்சி செய்தான்.(17,18) இராகவா, அவனை மீண்டும் தங்கள் நிருபனாக {மன்னனாக} அடைந்த குடிமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். அவனும் தன் நோக்கங்கள் நிறைவடைந்து, ஜுவரம் நீங்கி, சோகத்தில் இருந்து விடுபட்டான்.(19)

இராமா, கங்கையைக் குறித்து விஸ்தாரமாக நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். நீ செழிப்புடன் மங்கலமாக இருப்பாயாக. சந்தியா காலம் {செவ்வந்தி} கடந்து செல்கிறது.(20) தன்யத்தையும் {செழிப்பையும்}, புகழையும், ஆயுளையும், புத்திரர்களையும், சுவர்க்கத்தையும் பெருகச் செய்யும் இதை {கங்காவதரணத்தைக்} கேட்பவர்கள் விப்ரர்களாக {பிராமணர்களாக} இருந்தாலும், க்ஷத்திரியர்களாக இருந்தாலும், இதரர்களாக இருந்தாலும் பித்ருக்களும், தேவர்களும் அவர்களிடம் நிறைவடைவார்கள்.(21,22அ) காகுத்ஸ்தா, சுபமானதும், ஆயுளை வளர்ப்பதுமான இந்த கங்காவதரண ஆக்யானத்தை {கங்கை இறங்கி வந்த கதையைக்} கேட்பவன் எவனுக்கும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், அவனது பாவங்கள் அனைத்தும் முழுமையாக நாசமாகும், ஆயுளும் {நீண்ட வாழ்நாளும்}, கீர்த்தியும் {புகழும்} பெருகும்" {என்றார் விசுவாமித்ரர்}[4].(22ஆ,23)

[4] 3ம் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ள படி தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இந்த அத்தியாயத்தின் இறுதிக் குறிப்பாகப் பின்வருவன சொல்லப்பட்டுள்ளன: கிட்டத்தட்ட அனைத்துப் புராணங்களிலும் கங்கையின் புனிதம் தொடர்பான தொன்மம் இடம்பெறுகிறது. எனவே அவள் எப்படிப் புனிதப்படுத்துபவளாக இருக்கிறாள் என்று வினவப்பட்டு, எதிர் கேள்வியும் கேட்கப்படுகிறது. சாத்திரங்கள் பலவும் இதைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன. விஷ்ணு புராணத்தில், இந்த ஆறு விஷ்ணுவின் இடது கால் கட்டைவிரலில் இருந்து வெளிப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவள் சிவனின் சடையில் மூழ்கி மீண்டும் வெளிப்படுவதால் பாவமகற்றுபவளாகத் திகழ்கிறாள். அந்த ஆறானவள் மிகப் பிற்காலத்தில் சிவனின் சிரசில் விழுந்தாலும், அவளது பிறப்பிடம் விஷ்ணுவின் பாதம் என்பதால் அவள் முன்பும் புனிதமானவளே. சிவனின் சிரசில் விழுந்த பிறகு அவள் பெரும் வேகத்தில் பூமியில் பாய்கிறாள். எனவே, அவளது வேகமும், துரிதமும் மட்டுமே கூடப் புனிதப்படுத்தும் காரணிகளாக அமைகின்றன. திரிவிக்கிரம {வாமன} புராணத்தில் ஓரிடத்தில், "விஷ்ணுவின் அவதாரமான வாமனனின் அழுத்தத்தால் அண்டம் துளைக்கப்பட்டதும், வெளியில் தேவ கங்கையாக இருந்த நீர் உலகத்திற்குள் வந்தது" என்றிருக்கிறது. மற்றோரிடத்தில், "பிரம்மன் விஷ்ணுவின் பாதங்களைக் கழுவ, அவனது கமண்டதலத்தில் இருந்து பாய்ந்தவளே கங்கை" என்று சொல்லப்படுகிறது. இன்னுமோர் இடத்தில், "தர்மமே பிரம்மனின் ஆணையின் பேரில் கங்கையாகப் பாய்ந்தது" என்றிருக்கிறது. இவை மூன்றையும் ஒன்றிணைத்து, "பிரம்மன் விஷ்ணுவின் பாதங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது நீர் போதாமையால், தர்மத்தை நீராகப் பாயுமாறு ஆணையிட்டான், வாமனன் அண்டத்தைத் துளைத்தபோது தர்மமே கங்கையாகப் பாய்ந்தது" என்றும் சொல்லப்படுகிறது. யோகம் வேறொரு நோக்கில் இதைக் காண்கிறது. யோகிகளின் மஹாகுரு சிவன் என்பதால், ஒருவனின் உடலில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் கங்கை பாய்கிறாள் என்று கொள்கின்றனர். இராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில், "புனித ஆறான கங்கை, புனிதமான சிவனின் சிரசில் விழுந்தாள்" என்று சொல்லப்படுகிறது. அதாவது சிவனும், கங்கையும் தங்கள் தங்கள் இயல்பிலேயே புனிதப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவியும் செய்து கொள்கிறார்கள். சுய தர்மத்தால் ஒருவன் உயிரினங்களுக்கு உதவுவதை விடப் புனிதமடையச் செய்வது வேறென்ன இருக்க முடியும்?" என்றிருக்கிறது. பகீரதன், கங்காவதரணக் கதை மஹாபாரதத்தில் வனபர்வம் பகுதி 106-109 ல் இடம்பெறுகிறது. 

பாலகாண்டம் சர்க்கம் – 44ல் உள்ள சுலோகங்கள் : 23

Previous | Sanskrit | English | Next

Monday, 27 September 2021

கங்கை | பால காண்டம் சர்க்கம் - 43 (41)

Ganga | Bala-Kanda-Sarga-43 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பூமிக்குப் பாய்ந்து வந்த கங்கை; கங்கையைத் தலையில் தாங்க ஒப்புக்கொண்ட சிவன்; தன் பாட்டன்மாரின் சாம்பலை நோக்கி கங்கையை அழைத்துச் சென்ற பகீரதன்...

Birth of Ganga on Earth

{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "இராமா, அந்த தேவதேவன் {பிரம்மன்} சென்ற பிறகு, அவன் {பகீரதன்}, தன்னுடைய கால் கட்டைவிரலால் வசுமதியை {பூமியை} அழுத்தியபடியே நின்றான்[1]. அவ்வாறே அவன் மேலும் ஓராண்டு காலம் தவம் செய்தான்.(1) ஓராண்டு பூர்ணமடைந்ததும் சர்வலோக நமஸ்கிருதனும் {உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்படுபவனும்}, உமாபதியுமான பசுபதி {சிவன்}, அந்த ராஜனிடம் {பகீரதனிடம்} இதைச் சொன்னான்:(2) "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, நான் உன்னிடம் பிரீதியடைந்தேன். உன் பிரியத்தை {விருப்பத்தை} நான் நிறைவேற்றுவேன். சைலராஜனின் மகளை {மலைமகளான கங்கையை} என் சிரசில் தரிப்பேன்" {என்றான் சிவன்}.(3)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பகீரதன், மாறா நோக்குடனும், அசைவில்லா உடலுடனும், தன் கைகளை உயர்த்திய படியே இரவும், பகலும் காற்றை மட்டுமே உண்டு ஓராண்டு காலம் தவம் செய்து யோகச் செறிவை அதிகரித்து வந்ததே பூமியைப் பெரிதும் அழுத்தியது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பகீரத வேந்தன் பூமியில் காற்கட்டைவிரலை ஊன்றிக் கொண்டு நின்று புஜங்களிரண்டையும் உயரத்தூக்கி நிறுத்தி வாயுபக்ஷணஞ் செய்து கொண்டு எவ்விதத்திலும் அவலம்பமின்றி இரவும் பகலும் மொட்டை மரம் போல் அசையாமல் நின்று நிலை பெற்று ஒரு வருஷ காலம் சிவனை உபாஸித்தான்" என்றிருக்கிறது.

இராமா, அதன்பிறகு உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்படும் மூத்த ஹைமவதி {ஹிமவானின் மூத்த மகளான கங்கை}, அதி மஹா ரூபத்தை ஏற்று, சகிக்க முடியாத வேகத்தை அடைந்து, ஆகாசத்தில் இருந்து மங்கலமான சிவனின் சிரசில் விழுந்தாள் என்று சொல்லப்படுகிறது.(4,5அ) தாங்கிக் கொள்ளப்பட முடியாத அந்த கங்கா தேவி, "என் பிரவாஹங்களால் சங்கரரை எடுத்துக் கொண்டு பாதாளத்திற்குள் புகுவேன்" எனச் சிந்தித்தாள்.(5ஆ,6அ)

முக்கண்களைக் கொண்ட பகவான் சிவன், அவளது கர்வத்தை அறிந்து குரோதமடைந்து, அவளை அடக்குவதில் புத்தியைச் செலுத்தினான்.(6ஆ,7அ) இராமா, அந்தப் புண்யை {கங்காதேவி}, இமயத்துக்கு ஒப்பான {சிவனின் தலைமயிராலான} ஜடா மண்டலங்களால் சூழப்பட்டு அந்த ருத்திரனின் புண்ணியமான தலையில் விழுந்து அடங்கினாள்.(7ஆ,8அ) அவள் என்னதான் முயற்சி செய்தாலும் மஹீயை {பூமியை} அடையும் சக்தியற்றவளாக ஜடாமண்டலத்தைவிட்டு வெளியேற இயலாதவளானாள்.(8ஆ,9அ) அந்த தேவி எண்ணற்ற ஆண்டுகள் அங்கேயே {அந்த சடையின் சுழல்களில்} சுழன்று கொண்டு இருந்தாள். அவள் காணப்படாததால் பகீரதன் மீண்டும் அதே காரியத்திற்காக {கங்கையை பூமிக்குக் கொண்டு வருவதற்காக} உறுதிமிக்க பரம தவத்தில் ஈடுபட்டான்.(9ஆ,10அ)



இரகுநந்தனா, அதனால் {அந்த தவத்தால்} பெரிதும் மகிழ்ந்த ஹரன், கங்கையை பிந்துசரஸில் விழவிட்டான்.(10ஆ,11அ) அவ்வாறு அவள் விடுபட்ட போது, ஏழு பிரவாஹங்கள் உண்டாகின. மங்கல ஜலங்கொண்ட ஹலாதினி, பாவனி, நளினி {பிரம்மபுத்திரா} என்ற மூன்றும் {மூன்று பிரவாஹங்களும், ஏழாம் பிரவாஹமான} சுபமான கங்கையும் கிழக்கு முகமாகப் பாய்ந்தன.(11ஆ,12) சுபநீரோட்டம் கொண்ட ஸுசக்ஷு, ஸீதை, மஹாநதியான ஸிந்து என்று மூன்றும் மேற்கு முகமாகப் பெருகிச் சென்றன.(13) அவர்களில் சப்தமி {ஏழாமவளான கங்கை}, பகீரதனின் ரதத்தைப் பின்தொடர்ந்து சென்றாள். மஹாதேஜஸ்வியும், ராஜரிஷியுமான பகீரதன், திவ்யமான தேரில் அமர்ந்து முன்னே செல்ல, கங்கை அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.(14,15அ) ஆகாயத்திலிருந்து சங்கரனின் சிரசுக்கு வந்து, அங்கிருந்து தரணியை {பூமியை} அடைந்த அவளது ஜலம் தீவிர சத்தத்தை வெளியிட்டபடியே பாய்ந்தது[2].(15ஆ,16அ) அப்போது வசுந்தரை {பூமியானவள்}, விழுந்தவையும், மேலும் விழுந்து கொண்டிருப்பவையுமான மத்ஸ்யங்கள் {மீன்கள்}, ஆமைகள், சங்குகள், சிசுமார கணங்கள் {முதலை முதலிய நீர்வாழ் உயிரினங்கள்} ஆகியவற்றுடன் ஒளிர்ந்தாள்.(16ஆ,17அ)

[2] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கங்கையாறு திரிபதகையென்றும், அதாவது மூவழிகளில் பாய்பவள் என்றும் அழைக்கப்படுகிறது. அவள் இமயத்திலிருந்தும் சொர்க்கத்திற்கும், சொர்க்கத்தில் இருந்து சிவனின் தலைக்கும், அங்கிருந்து பூமிக்கும் பாய்ந்ததே மூவழி என்று சொல்லப்படுவது ஒருவகை எண்ணம். மேலுள்ள சுலோகங்களில் சொன்னபடி கிழக்கு, மேற்குத் திசைகளிலும், பகீரதனைப் பின்தொடர்ந்து தெற்குத் திசையிலும் என அவள் மூவழிகளில் பாய்கிறாள் என்பது மற்றொரு எண்ணம். மேற்கு நோக்கிப் பாயும் சிந்து இப்போது இண்டஸ் என்று அழைக்கப்படுகிறது, கிழக்கும் நோக்கிப் பாயும் நளினி இப்போது பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. கங்கையோ தெற்கு நோக்கிப் பாய்ந்து கடலை அடைகிறாள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவ்விடத்தில் கங்கை ஸ்வர்க்காகசபூமிகளாகிற மூன்று இடங்களிலும் ப்ரவஹித்தபடியால் த்ரிபதகை என்னும் பெயர் பெற்றதென்று சிலர் சொல்லுகின்றனர். மூன்று திசைகளிலும் ப்ரவஹித்தபடியால் அந்தப் பெயர் வந்ததென்று சிலர் சொல்லுகின்றனர்" என்றிருக்கிறது.

பிறகு, தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் ஆகியோரும் சித்த கணங்களும் அவ்வாறு அவள் ஆகாயத்திலிருந்து பூமியில் பாய்வதை ஆவலுடன் கண்டனர்.(17ஆ,18அ) அப்போது தேவர்களில் சிலர் நகரம் போன்ற அளவும், வடிவமும் கொண்ட விமானங்களிலும், வேறு சிலர் ஹயங்களிலும் {குதிரைகளிலும்}, இன்னுஞ் சிலர் கஜங்களிலும் {யானைகளிலும்} அந்த இடத்திற்கு வந்தனர்.(18ஆ,19அ) உலகில் அற்புதமானவளும், ஒப்பற்றவளும், உத்தமமானவளுமான கங்கையின் பாய்ச்சலை ஆவலுடன் கண்ட தேவகணங்கள் அளவில்லா பரபரப்படைந்தன.(19ஆ,20அ)

அந்த ஸுரகணங்களுடைய ஆபரணங்களுடைய மினுமினுப்பு மேகங்களற்ற வானத்தில் நூறு சூரியர்கள் ஒளிரும் தோற்றத்தைக் கொடுத்தது.(20ஆ,21அ) அந்நேரத்தில் சிம்சுமார, உரகக் கணங்களும் {முதலைகளும், பாம்புகளும்}, நெளியும் மீன்களும் விழுந்தது, ஆகாசத்தில் மின்னல் கீற்றுகள் மின்னுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.(21ஆ22அ) ஆயிரம் வழிகளில் தெரித்துச் சென்று, வெளுத்து விழும் நுரைகளால் நிரம்பிய ஆகாயமானது, ஹம்சங்களுடன் {அன்னப்பறவைகளுடன்} கூடிய கூதிர் கால வெள்ளி மேகங்களால் சூழப்பட்டதைப் போலத் தென்பட்டது.(22ஆ,23அ) அவள், சில இடங்களில் துரிதமாகவும், வேறெங்கும் வளைந்து நெளிந்தும், சில இடங்களில் நேராகவும், வேறெங்கும் மெதுவாகவும், சில இடங்களில் பெருகி வழிந்தும், சில இடங்களில் நிதானமாகவும், மெத்தனமாகவும் பாய்ந்தாள்.(23ஆ,24அ) சில இடங்களில் நீரோடு நீர் மோதி, மேலும் திரும்பியோடி அலையாக எழுந்து வசுதையின் {பூமியின்} மீது விழுந்தது.(24ஆ,25அ) சங்கரனின் சிரத்தில் இருந்து நழுவிய பின்பு பூமியின் பரப்பில் விழுந்த நிர்மலமான {தூய்மையான} அந்த நீர், கல்மஷங்களை அகற்றும் வகையில் ஒளிர்ந்தது.(25ஆ,26அ)

அங்கே ரிஷி கணங்களும், கந்தர்வர்களும் வசுதையின் தலத்தில் {பூமியின் பரப்பில்} வசிப்பவர்களும் பவனின் அங்கத்தில் விழுந்த நீரை பவித்ரமானதாகக் கருதி பருகுகின்றனர்.(26ஆ,27அ) சாபத்தால் சொர்க்கத்தில் இருந்து வசுதாதலத்தில் {பூமியின் பரப்பில்} விழுந்தவர்களும், அதில் அபிஷேகம் செய்து {நீராடி} கல்மஷங்கள் அகன்று தூய்மையடைகின்றனர்.(27ஆ,28அ) அவர்கள், அந்தச் சுப நீரைக் கொண்டு தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டு, மீண்டும் ஆகாசத்தை அடைந்து, தங்கள் தங்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்கின்றனர்.(28ஆ,29அ) உலகமானது, அந்த அற்புத நீரால் மகிழ்ச்சியடைகிறது. உலக மக்கள் கங்கையால் தலையில் அபிஷேகம் செய்து, பாவங்கள் முழுமையாக அகன்று எப்போதும் மகிழ்ச்சியடைகின்றனர்.(29ஆ,30அ)

மஹாதேஜஸ்வியும், ராஜரிஷியுமான பகீரதன் திவ்ய தேரில் அமர்ந்து முன்னே பயணிக்க, அவனைத் தொடர்ந்து கங்கையும் பின்னே சென்றாள்[3].(30ஆ,31) இராமா, ரிஷிகணங்களும், தேவர்கள் அனைவரும், தைத்திய, தானவ, ராக்ஷச, கின்னர, மஹா உரக, கந்தர்வ, யக்ஷர்களில் சிறந்தவர்களும், சர்ப்பங்களும், அப்சரஸ்களும் பிரீதியடைந்து, பகீரதனின் ரதத்தைத் தொடர்ந்து செல்லும் கங்கையின் பின்னால் சென்றனர். அவர்களுடன் ஜலசாரிகளும் {நீர்வாழ் உயிரினங்களும்} சென்றன.(31ஆ-33அ) இராஜா பகீரதன் எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் மகத்தானவளும், ஆறுகளில் சிறந்தவளும், சர்வ பாப பிரநாசினியுமான {பாவங்கள் அனைத்தையும் முழுமையாக அழிப்பவளுமான} கங்கையும் சென்றாள்.(33ஆ,34அ)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகம் 14ம் சுலோகத்தைப் போன்றே இருக்கிறது" என்றிருக்கிறது.

கங்கை அவ்வாறு பாய்ந்த போது, யஜமானரும் {யாகங்களைச் செய்பவரும்}, அற்புத கர்மங்களைச் செய்பவரும், மஹாத்மாவுமான ஜஹ்னுவின் யஜ்ஞவாடத்தை {வேள்விக்களத்தை} முழுமையாக மூழ்கடித்தாள்.(34ஆ,35அ) இராகவா, அவளது செருக்கை அறிந்து எரிச்சலடைந்த ஜஹ்னு, {அனைவரும்} பரம ஆச்சரியமடையும் வகையில் கங்கையின் ஜலம் முழுவதையும் குடித்தார்.(35ஆ,36அ) அப்போது கந்தர்வர்களும், தேவர்களும், ரிஷிகளும் பெரிதும் ஆச்சரியமடைந்தனர். பிறகு அவர்கள் மனிதர்களில் சிறந்தவரும், மஹாத்மாவுமான ஜஹ்னுவை பூஜித்து, கங்கை அந்த மஹாத்மாவின் மகளெனும் நிலையை அடைய வேண்டினர்.(36ஆ,37) மஹாதேஜஸ்வியான அந்த பிரபு {ஜஹ்னு}, மிகவும் மகிழ்ச்சியடைந்து தமது இரு காதுகளின் வழியே நீரை விடுவித்தார். எனவே, கங்கை ஜஹ்னுவின் மகளாகி ஜாஹ்னவி என்று புகழடைந்தாள்.(38) கங்கை மீண்டும் பகீரதனின் ரதத்தைப் பின்தொடர்ந்து சென்றாள். ஆறுகளில் மிக மேன்மையான அவள், சாகரத்தையும் அடைந்து[4], அவனது கர்மத்தை சித்திக்கச் செய்து {பகீரதனின் நோக்கத்தை நிறைவடையச் செய்து}, ரஸாதலத்தையும் அடைந்தாள்.(39,40அ)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சிலர், சாகரம் என்ற சொல்லுக்கு ஸகரனின் மகன்கள் தோண்டிய பாதாளம் என்று பொருள் கொண்டு கடலில் அவளது பயணத்தைத் தவிர்க்கின்றனர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "நதிகளிற்சிறந்த அக்கங்கையானது, மீளவும் பகீரதனுடைய ரதம் போகும் வழியாகப் பின்றொடர்ந்து அவனுடைய காரிய ஸித்திக்காகச் சென்று ஸமுத்திரத்தில் விழுந்து பாதாளத்திற்குச் சென்றது" என்றிருக்கிறது. ஸகரனின் மகன்களான ஸாகரர்கள் தோண்டியதில் உண்டானதே ஸாகரம் என்பது தொல்வழக்கு.

இராஜரிஷியான பகீரதன், பெரும் முயற்சி செய்து கங்கையை அழைத்துச் சென்று தன்னுடைய பிதாமஹர்கள் {பாட்டன்மார்} பஸ்மமாகக் கிடக்கும் இடத்தைக் கண்டு மனவருத்தமடைந்தான்.(40ஆ,41அ) இரகோத்தமா {ரகுக்களில் சிறந்தவனே, ராமா}, உத்தமமான கங்கை நீர் அந்தப் பஸ்மத்தை நனைத்தது. அவர்கள் {ஸகரனின் மகன்கள்}, தங்கள் பாவங்கள் தூய்மையடைந்து சுவர்க்கத்தை அடைந்தனர்" {என்றார் விசுவாமித்ரர்}.(41ஆ,இ)

பாலகாண்டம் சர்க்கம் – 43ல் உள்ள சுலோகங்கள் : 41

Previous | Sanskrit | English | Next

Sunday, 26 September 2021

பகீரதன் | பால காண்டம் சர்க்கம் - 42 (25)

Bhageeratha | Bala-Kanda-Sarga-42 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அம்சுமானாலும், அவனது மகனான திலீபனாலும் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர முடியவில்லை; திலீபனின் மகனான பகீரதன் செய்த பெரும் முயற்சி; பிரம்மன் தந்த வரம்; கங்கையைத் தன் தலையில் தாங்கிய சிவன்...

Bhagiratha and Brahma

{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "இராமா, ஸகரன் கால தர்ம கதியை அடைந்தும் {மரணம் அடைந்ததும்} அமைச்சர்களும், ஜனங்களும் தார்மிகனான {ஸகரனின் பேரனான} அம்சுமானை ராஜனாக அரியணையேற்றினர்.(1) இரகுநந்தனா, அந்த அம்சுமான் மஹாராஜனாகத் திகழ்ந்தான். அவனுக்கு திலீபன் என்ற புகழ்பெற்ற மஹான் புத்திரனாகப் பிறந்தான்.(2) இரகுநந்தனா, அவன் {அம்சுமான்}, திலீபனிடம் ராஜ்ஜியத்தை முழுமையாக ஒப்படைத்துவிட்டு, ரம்மியமான ஹிமய சிகரத்தில் கடுந்தவம் மேற்கொண்டான்.(3) பெரும்புகழ் பெற்ற அந்த ராஜா {அம்சுமான்}, வனத்தில் முப்பத்து இரண்டாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, தவத்தையே தனமாகக் கொண்டவனாக சுவர்க்கத்தை அடைந்தான்[1].(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவன் {அம்சுமான்}, தன் தவத்தின் வெகுமதியாக கங்கையை அடையாமல், தனக்காகப் புண்ணியத்தை மட்டுமே அடைந்து சொர்க்கத்தை அடைந்தான்" என்றிருக்கிறது.

மஹாதேஜஸ்வியான திலீபன், தன் பிதாமஹர்களின் {தன் பாட்டன் மாரும், ஸகரனுடைய அறுபதாயிரம் மகன்களுமான அவர்களின்} வதத்தைக் கேட்டு துக்கமடைந்து, {தன் தந்தையின் [அம்சுமானின்] அவல நிலையை நினைத்து} புத்தி சிதைந்து, ஒரு நிச்சயத்தை அடையாமல் இருந்தான்.(5) அவன், "கங்கையை அவதரிக்கச் செய்வது எவ்வாறு? அவர்களுக்கு {பாட்டன்மாருக்கு} ஜலக்கிரியை {தர்ப்பணம்} செய்வது எவ்வாறு? அவர்களை இந்தக் கதியில் இருந்து மீட்பதெவ்வாறு?" என்ற சிந்தனையில் எப்போதும் வருந்திக் கொண்டிருந்தான்.(6) ஆத்மாவை அறிந்தவனும், தர்மவானும், நித்தம் சிந்தித்துக் கொண்டிருந்தவனுமான அவனுக்கு {திலீபனுக்கு}, பகீரதன் என்ற பெயரில் தார்மிகனான புத்திரன் ஒருவன் பிறந்தான்.(7) மஹாதேஜஸ்வியான திலீபன் எண்ணற்ற யாகங்களைச் செய்தான். அந்த ராஜா முப்பத்தாயிரம் ஆண்டுகள் தன் ராஜ்ஜியத்தை ஆண்டான்.(8) நரசார்தூலா, அந்த ராஜா {திலீபன்} அவர்களின் {தன் பாட்டன்மாரின்} கதியை உயர்த்த ஒரு நிச்சயமான வழியை அறியாமல் வியாதியடைந்து காலதர்மத்தையும் அடைந்தான் {மரணமும் அடைந்தான்}.(9) நரரிஷபா {மனிதர்களில் காளையே ராமா}, அந்த ராஜா {திலீபன்}, தன் புத்திரன் பகீரதனுக்கு ராஜ்ஜியாபிஷேகம் செய்து வைத்து, தான் செய்த புண்ணியக் கர்மத்தால் இந்திரலோகத்தை அடைந்தான்.(10)

இரகுநந்தனா, தார்மிகனான ராஜரிஷி பகீரதன், பிள்ளையற்றவனாக இருந்தான். அந்த மஹாராஜா புத்திரர்களைப் பெற விரும்பியும், கங்கையை அவதரிக்கச் செய்ய விரும்பியும், பிரஜைகளையும் {குடிமக்களையும்}, ராஜ்ஜியத்தையும் மந்திரிகளின் கைகளில் ஒப்படைத்தான். மாதமொரு முறை ஆகாரம் கொண்டு, ஐந்து நெருப்புகளுக்கு[2] மத்தியில் உயர்த்திய கைகளுடன் கோகர்ணத்தில் {கோகர்ண மலையில்} நின்று, இந்திரியங்களை வென்றவனாகவும், உறுதிமிக்கவனாகவும் நீண்ட காலம் தவமிருந்தான்.(11,12,13அ) மஹாபாஹுவே {வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ராமா}, உறுதியுடன் கோர தவத்தை மேற்கொண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும், பிரஜைகளுக்குப் பதியும் {உயிரினங்களின் தலைவனும்}, ஈஷ்வரனுமான பகவான் பிரம்மன் அந்த மஹாத்மாவிடம் {பகீரதனிடம்} நிறைவடைந்தான்.(13ஆ,14)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஐந்து நெருப்புகள் என்பன பஞ்சாக்னிகளாகும். பூமியின் நான்கு திசைகளிலும் மூட்டப்பட்ட நெருப்பும், தலைக்கும் மேலே சூரியனும் சேர்ந்து பஞ்சாக்னிகளாகின்றன" என்றிருக்கிறது.

அப்போது பிதாமஹன் {பெரும்பாட்டன் பிரம்மன்}, தவம் செய்து கொண்டிருந்த மஹாத்மாவான பகீரதனிடம், ஸுர கணங்களுடன் {தேவர்களின் கூட்டத்துடன்} வந்து இவ்வாறு பேசினான்:(15) "ஜனாதிபா, மஹாராஜா பகீரதா, உன் தவம் முழுமை அடைந்தது. நான் பிரீதியடைந்தேன் {மகிழ்ச்சியடைந்தேன்}. நல்விரதம் கொண்டவனே, ஒரு வரத்தை வேண்டுவாயாக" {என்றான் பிரம்மன்}.(16)

மஹாதேஜஸ்வியும், மஹாபாஹுவுமான பகீரதன், கைகளைக் குவித்து நின்று அந்த சர்வலோக பிதாமஹனிடம் {உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மனிடம்} சொன்னான்:(17) "பகவானே, என் தவத்தில் நீ பிரீதியடைந்தால், என் தவத்திற்குப் பலனேதும் இருந்தால், ஸகராத்மஜர்கள் {ஸகரனின் மகன்கள்} அனைவரும் என்னிடம் இருந்து நீரைப் பெறட்டும்.(18) இந்த மஹாத்மாக்களின் பஸ்மம் {சாம்பல்} கங்கை நீரில் நனைந்தால், என் பிதாமஹர்கள் {பாட்டன்மார்கள்} அனைவரும் நித்தியமான சுவர்க்கத்தை அடைவார்கள்.(19) தேவா, இக்ஷ்வாகு குலத்திற்கான சந்ததியையும் நான் வேண்டுகிறேன். எங்கள் குலம் அழிவில் இருந்து மீள வேண்டும். தேவா, இதுவே நான் வேண்டும் மற்றொரு வரமாக இருக்கட்டும்" {என்றான் பகீரதன்}.(20)

சர்வலோக பிதாமஹன் {பிரம்மன்}, இத்தகைய வாக்கியத்தைச் சொன்ன ராஜனிடம் {பகீரதனிடம்} மறுமொழியாக சுபமான மதுராக்ஷரங்களுடன் கூடிய தன் நாவால்,(21) "மஹாரதனான {பெருந்தேர்வீரனான} பகீரதா, உன்னுடைய மனோரதம் மகத்தானது. இக்ஷ்வாகு குல வர்த்தனா {இக்ஷ்வாகு குலத்தைப் பெருகச் செய்பவனே}, நீ வேண்டியவாறே ஆகட்டும், நீ மங்கலமாக இருப்பாயாக.(22) இராஜாவே, ஹைமவதியான {இமயத்தில் பிறந்த} இந்த கங்கை, ஹிமவானின் மூத்த மகளாவாள். எனவே, இவளைத் தாங்குவதற்கு ஹரனை {சிவனை} நியமிக்க வேண்டும்.(23) இராஜாவே, கங்கையின் பாய்ச்சலை பிருத்வியால் {பூமியால்} சஹித்துக் கொள்ள முடியாது. இராஜாவே, அவளைத் தாங்கிக் கொள்ளும் சக்தனாக சூலபாணியை {சிவனைத்} தவிர வேறு ஒருவனையும் நான் காணவில்லை" {என்றான் பிரம்மன்}.(24)

உலகங்களைப் படைத்தவன் {பிரம்மன்}, அந்த ராஜனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, கங்கையிடமும் சொல்லிவிட்டு தேவ மருத் கணங்கள் அனைவருடன் திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்றான்" {என்றார் விசுவாமித்ரர்}.(25)

பாலகாண்டம் சர்க்கம் – 42ல் உள்ள சுலோகங்கள் : 25

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை