Showing posts with label சபளை. Show all posts
Showing posts with label சபளை. Show all posts

Saturday, 16 October 2021

பஹ்லவர்கள், யவனர்கள், சகர்கள் | பால காண்டம் சர்க்கம் - 54 (23)

Pahlavas, Yavanas and Shakas | Bala-Kanda-Sarga-54 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சபளையை அபகரிக்க முயன்ற விஷ்வாமித்ரர்; படைவீரர்களை உண்டாக்கிய காமதேனு; விஷ்வாமித்ரரின் படை அழிந்தது...

Kamadhenu Shabala

{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "இராமா, வசிஷ்ட முனிவர் காமதேனுவைக் கொடுக்காதபோது, விஷ்வாமித்ரர் அந்தச் சபளையைப் பிடித்து இழுத்தார்.(1) இராமா, மஹாத்மாவான அந்த ராஜா {விஷ்வாமித்ரர்} சபளையை இழுத்துச் சென்ற போது துக்கமடைந்து, சோகத்தால் பீடிக்கப்பட்டு அழுதவாறே அவள் இவ்வாறு சிந்தித்தாள்:(2) "தீனமாகவும், பெருந்துக்கம் கொண்டவளாகவும் இருக்கும் என்னை இந்த ராஜனின் பணியாட்கள் அபகரித்துச் செல்கின்றனர். மஹாத்மாவான வசிஷ்டர் என்னைக் கைவிட்டுவிட்டாரா என்ன?(3) அந்தத் தார்மீகரிடம் பக்திமிக்கவளாகவும், {அவரால்} பேணி பாதுகாக்கப்படுபவளாகவும் இருந்தேன். புண்ணிய ஆத்மாவான அந்த மஹரிஷி கைவிடும் அளவுக்கு நான் செய்த குற்றமென்ன?" {என்று சிந்தித்தாள்}.(4)

சத்ருசூதனா {பகைவரை அழிப்பவனான ராமா}, இவ்வாறு சிந்தித்து மீண்டும் மீண்டும் ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டாள். பிறகு நூற்றுக்கணக்கான அந்தப் பணியாட்களை உதறித் தள்ளிவிட்டு, காற்றின் வேகத்துடன் கூடியவளாகப் பேராற்றல் வாய்ந்த வசிஷ்டரை நோக்கிச் சென்றாள். விரைவாக அந்த மஹாத்மாவிடம் சென்று அவரது பாதத்தை அடைந்தாள்.(5,6) அந்தச் சபளை உரக்க கதறியபடியே வசிஷ்டரின் முன்பு நின்று மேகதுந்துபியைப் போன்ற முழக்கத்துடன் இதைப் பேசினாள்:(7) "பிரம்மனின் மகனே, பகவானே, உம்மால் நான் ஏன் கைவிடப்பட்டேன். இந்த ராஜனின் பணியாட்கள் உம்மிடமிருந்து என்னை எங்கே கொண்டு செல்கின்றனர்?" {என்று கேட்டாள்}.(8)

இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்தப் பிரம்மரிஷி, இதயத்தில் சோகம் கொண்டவராகத் துக்கித்துத் தமது தங்கையிடம் பேசுவதைப் போல இந்த வசனத்தைச் சொன்னார்:(9) "சபளையே, நான் உன்னைக் கொடுக்கவில்லை. நீயும் எனக்கு எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை. மஹாபலவானான இந்த ராஜா {விஷ்வாமித்திரன்} என்னிடம் இருந்து உன்னை பலவந்தமாக இழுத்துச் செல்கிறான்.(10) என் பலம் இவனுக்கு இணையானதல்ல. மேலும் இவன் ராஜாவாக இருக்கிறான். ஒரு ராஜா பலம்பொருந்திய க்ஷத்திரியனாகவும், இந்தப் பிருத்வியின் பதியாகவும் {பூமியின் தலைவனாகவும்} இருக்கிறான்.(11) கஜவாஜிரதாகுலங்களுடன் {ஏராளமான யானைகள், குதிரைகள், தேர்களுடன்} கூடியதும், யானைக் கொடிகளால் நிறைந்ததுமான இந்த முழு அக்ஷௌஹிணி என்னைவிடப் பெரும் வலிமைமிக்கதாகும்" {என்றார் வசிஷ்டர்}.(12)

வசிஷ்டரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், வசனங்களை அறிந்து கொள்பவளான அவள் {சபளை} ஒப்பற்ற பிரகாசம் கொண்ட அந்தப் பிரம்மரிஷியின் வசனத்திற்குப் பணிந்து இந்த மறுமொழியைச் சொன்னாள்:(13) "பிராமணரே, க்ஷத்திரிய பலத்தைக் குறித்துச் சொல்வதற்கொன்றும் இல்லை. பிராமணப் பலமோ க்ஷத்திரிய பலத்தைவிட வலிமைமிக்கது. பிரம்மபலமே திவ்யமானதும் பலமிக்கதுமாகும்.(14) வேறு பலமேதும் உமக்கு இணையானதல்ல. மஹாவீரியனான விஷ்வாமித்ரன் உம்மைவிடப் பலமிக்கவனல்ல. உமது தேஜஸ் ஒப்பற்றதாகும்.(15) மஹாதேஜஸ்வியே, உம்முடைய பிரம்ம பலத்தால் எனக்கு ஆணையிடுவீராக. துராத்மாவான இவனது பலத்தை {செருக்கையும், படைகளையும்} நான் அழிப்பேன்" {என்றாள் சபளை}.(16)

இராமா, அவள் இவ்வாறு பேசியதும், பெரும் மகிமைமிக்க வசிஷ்டர், "பரபலத்தை {எதிரியின் படைகளை} அழிக்கும் பலத்தை {படைகளை} உண்டாக்குவாயாக" என்று சொன்னார்.(17)

இந்த வசனத்தைக் கேட்ட அந்தச் சுரபி அதை உண்டாக்கினாள். நிருபா {மன்னா, ராமா}, அவளிடம் இருந்து வெளிப்பட்ட {ஹும்பா என்ற} ஹுங்காரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பஹ்லவர்கள்* உண்டாகி, விஷ்வாமித்ரர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது படைகளை அழித்தனர்.(18,19அ) பெருஞ்சீற்றமடைந்த அந்த மன்னர் {விஷ்வாமித்ரர்}, குரோதத்தால் விழிகள் விரிய பலவகைச் சஸ்திரங்களைக் கொண்டு அந்தப் பஹ்லவர்களை அழிக்கத் தொடங்கினார்.(19ஆ,20அ) நூற்றுக்கணக்கான பஹ்லவர்களும் விஷ்வாமித்ரரால் ஒடுக்கப்படுவதைக் கண்டு யவனர்களையும், கோரமான சகர்களையும் அவள் உண்டாக்கினாள்.(20ஆ,21அ) செயலை நிறைவேற்றுபவர்களும், மஹாவீர்யம் கொண்டவர்களும், பொன்மயமானவர்களுமான யவனர்களாலும், சகர்களாலும் பூமி நிறைந்திருந்தது.(21ஆ,22அ) கத்தி, பட்டிசங்களைத் தரித்தவர்களும், பொன்மயமான ஆடைகளை அணிந்திருந்தவர்களுமான அவர்கள் பாவகனை {அக்னியைப்} போல ஒளிர்ந்து கொண்டே {விஷ்வாமித்ரரின்} மொத்த படைகளையும் எரித்தனர்.(22ஆ,23அ) மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர், தம்முடைய அஸ்திரங்களை ஏவி யவன, காம்போஜ, பர்பரர்களை[1] சிதறடித்தார்" {என்றார் சதாநந்தர்}.(23ஆ,இ)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முன்னே பஹ்லவர்கள் என்று சொல்லப்பட்டவர்களே இங்கே பர்பரர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். காட்டுமிராண்டிகள் என்பதற்கு இது புராதனச் சொல்லாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது. 

பாலகாண்டம் சர்க்கம் – 54ல் உள்ள சுலோகங்கள் : 23

பஹ்லவர்கள்*
Bahlikas or Bactria
Bahlikas were located as a close neighbor to the Tusharas, Sakas, Yavanas and the Kambojas etc. Since the Kambojas were located in Badakshan and Pamirs, the Tusharas on the north of Pamirs and the Sakas on the river Jaxartes and beyond, the Bahlikas or Bahlams, as neighbors to these people should be placed in Bactria.
The Brahmanda Purana attests that river Chaksu (Oxus or Amu Darya) flowed through the land of Bahlavas (Bahlikas).

காஷ்மீர நாட்டின் தெற்கில், பஞ்சாப் சமவெளியின் மத்திர நாட்டு மன்னர் சல்லியனை பாக்லீகர்களின் முன்னோடி என மகாபாரதம் வர்ணிக்கிறது.

பாக்லீகர்களின் குலத்தில் பிறந்த மத்திர நாட்டு இளவரசி மாத்திரி ஆவாள். குரு நாட்டின் இளவரசன் பாண்டுவை மணந்தவள் மாத்திரி. மாத்திரி பாண்டவர்களில் இரட்டையரான நகுல - சகாதேவர்களின் தாயாவாள்.


Previous | Sanskrit | English | Next

Thursday, 14 October 2021

வசிஷ்டரின் மறுப்பு | பால காண்டம் சர்க்கம் - 53 (25)

Vasishta's denial | Bala-Kanda-Sarga-53 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விஷ்வாமித்ரரையும் அவரது படையையும் மகிழ்வித்த வசிஷ்டர்; வசிஷ்டரிடம் காமதேனுவை வேண்டிய விஷ்வாமித்ரர்; வசிஷ்டர் மறுத்தது...

Vasishtha Kamadhenu Vishvamitra

{சதாநந்தர் தொடர்ந்தார்}, "சத்ருசூதனா {ராமா}, வசிஷ்டரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், காமதேனுவான சபளை, எவரெவர் எப்படி விரும்பினரோ, அவரவருக்கு அப்படியே அனைத்தையும் கொடுத்தாள்.(1) கரும்பு, தேன், பொரி, வராஸவாம் {மலர்களில் எடுக்கப்பட்ட உயர்ந்த கள்}, மைரேயம் {உயர்ந்த வகை மது}, பணியாரங்கள், உயர்ந்த பானங்கள், பல்வேறு வகைப் பக்ஷணங்கள் ஆகியவற்றைக் கொடுத்தாள்.(2) பர்வதங்களுக்கு ஒப்பான சூடான அன்னக்குவியல்கள், பாயஸம் முதலியவை, பருப்பு வகைகள், தயிர், நானாவித பானங்கள், இனிப்பு வகைகள், பலவித உணவுப் பொருட்கள் ஆகியவை ஆயிரக்கணக்கில் அங்கே தோன்றின.(3,4) இராமா, விஷ்வாமித்ரரின் படைகள் அனைத்தும் வசிஷ்டரின் விருந்துண்ட மகிழ்ச்சியில் நிறைந்திருந்தன.(5) அந்தப்புரவாசிகள் {மங்கையர்}, பிராமணர்கள், புரோஹிதர்கள் ஆகியோரும், ராஜரிஷியான விஷ்வாமித்ரரும் உற்சாகத்தையும், ஆற்றலையும் அடைந்தனர்.(6)

இவ்வாறு {வசிஷ்டரால்} பூஜிக்கப்பட்ட விஷ்வாமித்ரர், ஆலோசனைகள் கூறும் தன் மந்திரிகள், பணியாட்கள் சஹிதராகப் பெரும் மகிழ்ச்சியுடன் வசிஷ்டரிடம் பேசினார்:(7) "பிராமணரே, பூஜிக்கத்தகுந்தவரான உம்மால் நான் பூஜிக்கப்பட்டேன். நல்ல காரியம் செய்தீர். வாக்கியங்களில் திறன்மிக்கவரே, நான் ஒரு வாக்கியத்தைச் சொல்கிறேன் கேட்பீராக.(8) பகவானே, நூறாயிரம் பசுக்களுக்கு மாற்றாக எனக்கு சபளையைக் கொடுப்பீராக. இவள் {இந்தப் பசு} உண்மையில் ரத்தினமாகும். பார்த்திபர்களே ரத்தினங்களைக் கொள்பவர்கள் ஆவர். எனவே, துவிஜரே, சபளையை எனக்குத் தருவீராக. தர்மப்படி இவள் எனதாவாள்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(9,10அ)

விஷ்வாமித்ரர் இவ்வாறு சொன்னதும் பகவானும், முனிசத்தமரும், தர்மாத்மாவுமான வசிஷ்டர் அந்த மஹீபதியிடம் {பூமியின் ஆட்சியாளரிடம்} மறுமொழியாக,(10ஆ,11அ) "ராஜாவே, நூறாயிரம் பசுக்களும் சபளைக்கு மாற்றாகாது. நூறுகோடியே {நூறு கோடி பசுக்களையே} கொடுத்தாலும் {காமதேனுவான இந்த சபளையை} நான் தரமாட்டேன். ஏராளமான வெள்ளியைக் கொடுத்தாலும் நான் {இவளைத்} தரமாட்டேன்.(11ஆ,12அ) அரிந்தமா {பகைவரை ஒடுக்குபவனே}, என் அருகில் இருக்கும் இவள் {உன்னால் அச்சுறுத்தப்பட்டாலும்} என்னால் கைவிடப்படத்தகாதவள். ஆத்மவானான ஒருவனுக்கு {சுயமதிப்புக் கொண்ட ஒருவனுக்கு} கீர்த்தியை {புகழைப்} போல, சபளை எப்போதும் என்னுடன் இருப்பவள்.(12ஆ,13அ) ஹவ்யம் {தேவர்களுக்கான ஆகுதிகள்}, கவ்யம் {பித்ருக்களுக்கான ஆகுதிகள்}, அக்னிஹோத்ரம், பலி, ஹோமம் ஆகியவை என் பிராண யாத்திரையான {என் வாழ்க்கைப் பயணத்தைச் சாத்தியமாக்கும் பசுவான} இவளைச் சார்ந்தே நடக்கின்றன.(13ஆ,14அ) ராஜரிஷியே, ஸ்வாஹாகாரம், வஷட்காரம்,[1] விதவிதமான பல்வேறு போதனைகள் அனைத்தும் இவளைச் சார்ந்தே நடைபெறுகின்றன என்பதில் ஐயமில்லை.(14ஆ,15அ) சத்தியமாக இவளே எனக்கு அனைத்துமாகவும், அனைத்தையும் நிறைவேற்றுபவளாகவும் இருக்கிறாள். இராஜாவே, இவ்வகையிலும், இன்னும் பல காரணங்களாலும் சபளையை என்னால் உனக்குக் கொடுக்க முடியாது" என்றார் {வசிஷ்டர்}.(15ஆ,16அ)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஹோமம் செய்யும்போது, வேத மந்திரங்களுடன் தீக்குண்டத்தில் நீர்க்காணிக்கையோ, திடப்பொருள் காணிக்கையோ அளிக்கப்படும்போது, அந்தக் காணிக்கையைப் பெறும் தேவனின் பெயருடன் ஸ்வாஹாகாரம் சொல்லப்படும். உதாரணத்திற்கு, "இந்த்ராய ஸ்வாஹா, இந்த்ராய இதம் ந மம... வருணாய ஸ்வாஹா, வருணாய இதம் ந மம", அஃதாவது, "இந்திரனுக்கே இது வேட்கப்படுகிறது, இஃது இந்திரனுக்கன்றி எனக்கில்லை. மழை தேவனுக்கே இது வேட்கப்படுகிறது. இது வருணனுக்கன்றி எனக்கில்லை" என்ற பொருளில் மந்திரங்கள் சொல்லப்படும். வஷட்காரம் பித்ருக்களுக்கான மந்திரங்களில் சொல்லப்படும். ஹோமம் செய்யும் தகுதியுடையவர் வேதங்களைக் கற்கலாம். ஹோமம் செய்பவர் சில அடிப்படை வேத மந்திரங்களைக் கற்க வேண்டும். இவை அனைத்தும் அதிகப் பொருள்கள் தேவைப்படும் ஒரு சுழற்சி முறையாகும். {இங்கே சொல்லப்படும் சபளை என்ற} இந்தப் பசு, ஆசிரியருக்காயினும், சீடருக்காயினும், அவர்கள் விரும்பிய அனைத்தையும் தாமதமின்றித் தரக்கூடியவள்" என்றிருக்கிறது.

வசிஷ்டர் இவ்வாறு பேசினாலும், வாக்கியவிஷாரதரான {வாக்கியங்களை அமைப்பதில் திறன்மிக்கவரான} விஷ்வாமித்ரர், பிடிவாதத்துடனும், படபடப்புடனும் இந்த வாக்கியத்தைப் பேசினார்:(16ஆ,17அ) "பொன்னாலான கழுத்தணிகளுடனும், பொன்னாலான காதணிகளுடனும் கூடிய பதினாலாயிரம் குஞ்சரங்களை {யானைகளை} நான் உமக்கு அளிப்பேன்.(17ஆ,18அ) வெள்ளைக் குதிரைகள் நான்கு பூட்டப்பட்டவையும், அழகிய சிறுமணிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பொன்னாலானவையுமான எண்ணூறு தேர்களை நான் உமக்குத் தருவேன்.(18ஆ,19அ) நல்ல விரதங்களை நோற்பவரே, புகழ்பெற்ற நாடுகளில் பிறந்தவையும், உயர்ந்த வகைகளைச் சேர்ந்தவையும், பெருவேகம் கொண்டவையுமான பதினோராயிரம் ஹயங்களை {குதிரைகளை} நான் உமக்குத் தருகிறேன்.(19ஆ,இ) நானாவித வண்ணங்களைக் கொண்டவையும், பல்வேறு வகைகளைச் சார்ந்தவையுமான ஒரு கோடி இளம்பசுக்களையும் நான் கொடுக்கிறேன். சபளையை எனக்குக் கொடுப்பீராக.(20) துவிஜோத்தமரே, ரத்தினங்களையோ, ஹிரண்யத்தையோ {தங்கத்தையோ} நீர் எவ்வளவு வேண்டினாலும், அவ்வளவையும் நான் கொடையளிப்பேன். சபளையை எனக்குக் கொடுப்பீராக" {என்றார் விஷ்வாமித்ரர்}.(21)

மதிமிக்கவரான விஷ்வாமித்ரர் இவ்வாறு பேசியதும், அந்த பகவான் {வசிஷ்டர்}, தெளிவாகச் சொல்லும் வகையில், "இராஜாவே, என்ன நடந்தாலும் சபளையை நான் கொடுக்கமாட்டேன்.(22) இவளே எனக்கு உண்மையில் ரத்தினம், இவளே உண்மையில் எனக்கு தனம் {செல்வம்}, இவளே உண்மையில் எனக்கு அனைத்துமாக இருக்கிறாள். இவளே உண்மையில் என் ஜீவிதம் {என் வாழ்க்கை}.(23) இராஜாவே, {வேத சடங்குகளான} தர்ஷத்திற்கும், பூர்ணமாஸங்களுக்கும் தகுந்த தக்ஷிணைகளையும், யஜ்ஞங்களில் பல்வேறு கிரியைகளையும் {காரியங்களையும்} உண்மையில் இவளால் மட்டுமே செய்ய முடியும்.(24) இராஜாவே, என் கிரியைகள் அனைத்திற்கும் இவளே மூலமாக இருக்கிறாள் என்பதில் ஐயமில்லை. பலவிதமான வீண்விவாதங்களால் ஆவதென்ன? {என்ன பிரயோஜனம்}. {விரும்பியவற்றைத் தருபவளான} இந்தக் காமதோஹினியை நான் கொடுக்க மாட்டேன்" என்றார் {வசிஷ்டர்}"[2].(25)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தியாவில் பசுக்கள் புனிதமானவையாகக் கருதப்படுவதைப் போலவே உலகமெங்கிலும் விலைமதிப்பற்றவையாகவே கருதப்படுகின்றன. பசு கொடுக்கும் பாலில் இருந்து சாணம் வரை அனைத்தும் பயன்படுகின்றன. மருத்தவத்தில் மருந்துகளாகவும் பயன்படுகின்றன. மஹாபாரதம் அனுசாஸன பர்வத்தில் {76 முதல் 83ம் பகுதிவரை} கோ மஹாத்மியம் {பசுவின் புனிதம்} குறித்துப் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு நீண்ட விளக்கம் கொடுக்கிறார்" என்றிருக்கிறது. 

பாலகாண்டம் சர்க்கம் – 53ல் உள்ள சுலோகங்கள் : 25

Previous | Sanskrit | English | Next

Tuesday, 12 October 2021

காமதேனுவான சபளை | பால காண்டம் சர்க்கம் - 52 (23)

Shabala, the Kamadhenu | Bala-Kanda-Sarga-52 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மன்னர் விஷ்வாமித்ரரின் விருந்தோம்பலுக்குரிய பொருட்களைப் படைக்குமாறு காமதேனுவுக்கு ஆணையிட்ட வசிஷ்டர்...

Vasishtha and Kamdhenu known as Shabala

{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "மஹாபலம்வாய்ந்தவரும், வீரரும், ஜபம் செய்பவர்களில் சிறந்தவருமான விஷ்வாமித்ரர் வசிஷ்டரைக் கண்டு, பரமபிரீதியடைந்து, பணிவுடன் அவரை வணங்கினார்.(1) மஹாத்மாவான வசிஷ்டர், "ஸ்வாகதம் {நல்வரவு}" என்று சொன்னார். பகவான் வசிஷ்டர் அவரை {விஷ்வாமித்ரரை} ஆசனத்தில் அமரச் சொன்னார்.(2) அந்த முனிவரர் {வசிஷ்டர்}, துணிவுமிக்கவரும், அமர்ந்திருப்பவருமான விஷ்வாமித்ரருக்கு முறைப்படி கனிகளையும், கிழங்குகளையும் கொடுத்தார்.(3) ராஜசத்தமரும் {எவராலும் விஞ்சப்பட முடியாத மன்னரும்}, மஹாதேஜஸ்வியுமான விஷ்வாமித்ரர், வசிஷ்டரின் பூஜையை ஏற்றுக் கொண்டு தவம், அக்னிஹோத்ரம், சீடர்கள், வனஸ்பதி கணங்கள் {வனத்தில் இருக்கும் மரஞ்செடி கொடிகள்} குறித்து குசலம் {நலம்} விசாரித்ததும், பதிலுக்கு வசிஷ்டரும் சுற்றிலும் உள்ள அனைத்தின் குசலத்தையும் அந்த ராஜசத்தமரிடம் {விஷ்வாமித்ரரிடம்} விசாரித்தார்.(4,5)

ஜபசிரேஷ்டரும், மஹாதபஸ்வியும், பிரம்மசுதருமான {பிரம்மனின் மகனுமான} வசிஷ்டர் சுகமாக அமர்ந்திருக்கும் ராஜாவான விஷ்வாமித்ரரிடம்,(6) "ராஜாவே, நீ நலமாக இருக்கிறாய் என நம்புகிறேன். ராஜாவே, தார்மீகனாகவும், ராஜமார்க்கத்தின்[1] துணைகொண்டு பிரஜா தர்மத்தை {குடிமக்களுக்கான நீதியை} நிறைவேற்றுபவனாகவும் நீ பரிபாலிக்கிறாய் {ஆட்சி செய்கிறாய்} என நம்புகிறேன்.(7) உனது பணியாட்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுகிறார்கள் என நம்புகிறேன். உன் சாசனத்தை அவர்கள் {அந்தப் பணியாட்கள்} பின்பற்றுகிறார்கள் என நம்புகிறேன். ருபுசூதனா {பகைவரை அழிப்பவனே}, உன்னுடைய பகைவர்கள் அனைவரும் நிச்சயம் வெல்லப்பட்டார்கள் என நம்புகிறேன்.(8) பரந்தபா {பகைவரை வாட்டுபவனே}, அநகா {குறையற்றவனே}, நரவியாகரா {மனிதர்களில் புலியே}, பலம் {படைகள்}, கோஷம் {கருவூலம்} ஆகியவையும், மித்ரர்கள் {நண்பர்கள்}, புத்திரர்கள் {மகன்கள்}, பௌத்திரர்கள் {பேரர்கள்} ஆகியோரும் நலமென நம்புகிறேன்" {என்று கேட்டார் வசிஷ்டர்}.(9)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆட்சித்திறனின் நான்கு முதன்மையான கூறுகள் பின்வருவனவாகும், "ந்யாயேந ஆர்ஜநம் அர்தஸ்ய வர்தநம் பாலநம் ததா | ஸத்பாத்ரே ப்ரதிபத்தி꞉ ச ராஜவ்ருத்தம் சதுர்விதம் ||" என்றிருக்கின்றன. அதாவது, "செல்வம் நேர்மையாக ஈட்டப்பட வேண்டும். அது நீதியுடன் பெருக்கப்பட வேண்டும். நீதியுடன் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் நலனுக்காகவோ, அறச்செயல்களுக்காகவோ, தனிப்பட்ட நல்ல மனிதர்களுக்காகவோ அது வழங்கப்பட வேண்டும்" என்றிருக்கிறது.

மஹாதேஜஸ்வியான ராஜா விஷ்வாமித்ரர் வசிஷ்டரை வணங்கி, "அனைத்தும் நலம்" என மறுமொழி கூறினார்.(10) அந்த தர்மிஷ்டர்கள் இருவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக நீண்ட காலம் கதைகள் பேசிக் கொண்டு, பரஸ்பரம் இன்புற்றிருந்தனர்.(11)

இரகுநந்தனா {ராமா}, அதன் முடிவில் பகவான் வசிஷ்டர் புன்னகைத்தவரே விஷ்வாமித்ரரிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(12) "மஹாபலம்வாய்ந்தவனே, இந்தப் படைகளுக்கும், ஒப்பற்றவனான உனக்கும் தகுந்த விருந்தோம்பலைச் செய்ய நான் விரும்புகிறேன். அதை நீ ஏற்றுக் கொள்வாயாக.(13) என்னால் செய்யப்படும் நற்பணிகளை நீ ஏற்பாயாக. ராஜாவே, முனைப்புடன் பூஜிக்கப்படத்தகுந்தவனான நீ அதிதிசிரேஷ்டனாவாய் {விருந்தினர்களில் சிறந்தவனாவாய்}"[2] {என்றார் வசிஷ்டர்}.(14)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மன்னர் விஷ்வாமித்ரர், "காட்டின் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழும் இந்த முனிவர் {வசிஷ்டர்} அரசனுக்கு விருந்தையோ, குதிரைகள், யானைகளுடன் கூடிய படைகளுக்கு உணவையோ அளிப்பதற்கு வாய்ப்பே இல்லை" என்று கருதுகிறார். அதற்கு அந்த முனிவர், "முனைப்புடன்" ஒரு ராஜா மதிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் விஷ்வாமித்ரரோ ஓர் ஏழைத்துறவியிடம் இருந்து ஒரு ராஜவிருந்தையோ, படைகளுக்கான விருந்தையோ தயக்கத்துடன் தவிர்க்கிறார்" என்றிருக்கிறது.

வசிஷ்டரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹாமதியாளரான ராஜா விஷ்வாமித்ரர், "உம்மால் பூஜாவாக்கியம் {மதிப்புமிக்கச் சொற்கள்} சொல்லப்பட்டது {இதுவே போதும், வேறேதும் வேண்டியதில்லை}.(15) பகவானே, உமது ஆசிரமத்தில் இருந்து பெறப்பட்ட கனிகள், கிழங்குகள், பாத்தியம் {பாதங்களைக் கழுவிக் கொள்வதற்கான நீர்}, ஆசமநீயம் {வாயைக் கழுவிக் கொள்வதற்கான நீர்}, பகவத் தரிசனம் {தேவரைப் போன்ற உமது தரிசனம்} ஆகியன பூஜிக்கத்தகுந்தன. அனைத்தையும் அறிந்தவரே, நான் விடைபெறுகிறேன். உம்மை வணங்குகிறேன்[3]. எப்போதும் {எங்களை} நண்பர்களாகக் காண்பீராக" என்றார்.(16,17)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "{உம்மை வணங்குகிறேன்} "நமஸ் தே அஸ்து" என்ற மதிப்புமிக்க வணக்கம் {இந்த சர்க்கத்தின்} இறுதிக்குறிப்பில் [5ம் அடிக்குறிப்பில்] விவாதிக்கப்படுகிறது.

ராஜா இவ்வாறு பேசினாலும், தர்மாத்மாவும், உதாரதீயுமான {கருணையால் மனம் நிறைந்தவருமான} வசிஷ்டர், மீண்டும் மீண்டும் விருந்தளிக்க முன்வந்தார்.(18) அப்போது காதேயர் {காதியின் மகனான விஷ்வாமித்ரர்}, வசிஷ்டரிடம், "முனிசத்தமரே {முனிவர்களில் உயர்ந்தவரே}, ஏற்றுக் கொள்கிறேன். பகவனான நீர் விரும்பியவாறே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினார்.(19)

அவர் இவ்வாறு சொன்னதும், ஜபவரரும் {ஜபம் செய்பவர்களில் சிறந்தவரும்}, கலக்கம் விலகியவருமான வசிஷ்டர் மகிழ்ச்சியடைந்து கல்மாஷியை {காமதேனுவான சபளையை} அழைத்தார்:(20) "சபளையே {ஆச்சரியகரமான நிறம் கொண்டவளே}, சீக்கிரமாக வா, நீ வருவாயாக. என் சொற்களைக் கேட்பாயாக. மிகச்சிறப்பானதும், மேலானதுமான போஜனத்தை இந்த ராஜரிஷிக்கும், இந்தப் படைகளுக்கும் விருந்தாக அளிக்க நான் ஆயத்தமாகிறேன். அதை எனக்காக நீ ஏற்பாடு செய்வாயாக.(21) திவ்யமான காமதேனுவே, விருப்பத்துடன் சுவைக்கும் ஒவ்வொருவருக்கும் ஆறு சுவைகளில் {ருசிகளில்} ஒவ்வொன்றையும் என் பொருட்டு ஏராளமாகப் பொழிவாயாக[4].(22) சபளையே {சபலையே}, ரசம் {சுவைக்கதக்கன}, அன்னம் {உண்ணத்தக்கன}, பானம் {பருகத்தக்கன}, லேஹியம் {நாவால் நனைக்க [அ] நக்கத் தக்க தேன் முதலியன}, சியேணம் {உறிஞ்சத்தக்க தயிர் முதலியன} ஆகிய அனைத்துவகை உணவுகளையும் குவியல் குவியலாக விரைந்து உண்டாக்குவாயாக" {என்றார் வசிஷடர்}"[5].(23)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்திய உணவு முறையில் ஆறு சுவைகள் என்பன, 1) கார்ப்பு, 2) துவர்ப்பு, 3) இனிப்பு, 4) புளிப்பு, 5) கசப்பு, 6) உவர்ப்பு ஆகியனவாகும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "அனதுபற்றி ஆறுவகை ரஸங்களில் எவனுக்கு எது இஷ்டமோ, அதையெல்லாம் அவர்களுக்கு நீ என்னைப் பற்றி அளிக்க வேண்டும்" என்றிருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் [மேலே 3ம் அடிக்குறிப்பில் சுட்டப்பட்ட படி] இந்த சர்க்கத்தின் இறுதிக்குறிப்பில், "நமஸ்தே என்ற மதிப்புக்குரிய வணக்கமொழி "நம்" என்ற வேர்ச்சொல்லில் இருந்து "உயர்நிலைக்கு முன்" என்ற பொருள் கொண்டுவரும் சொல்லாகும், பொதுவாக "சற்றே பணிவுடன் வணங்குவது" என்று அது மொழிபெயர்க்கப்படும். நமஸ்காரம் என்பது அவ்வாறு செயல்படும் செயலைக் குறிப்பதாகும். நமஹ என்ற இந்தச் சொல் "நான் அல்ல", "நீயே" என்ற பொருளைக் கொண்டதாகும். "நான், ’நான்’ என்ற அகங்காரத்தை இழந்து உயர்ந்த ஞானம் கொண்ட உன் முன் பணிகிறேன். நான் செய்வது ஏதுமில்லை அனைத்தும் நீ செய்வதே என்பது என்மேல் நிலைத்திருக்கட்டும். நான் உன்னை விடச் சிறியவன்" என்பதே நமஹ என்பதன் உட்பொருளாகும். குரலுடன் சொன்னால் நமஹ என்ற சொல்லும், செயலுடன் சொன்னால் அஞ்சலி {கைக்கூப்பி வணங்குதல்} என்ற செயலும் மேற்சொன்ன பொருளுக்கு உதாரணங்களாகும்" என்றும் இன்னும் அதிகமும் இருக்கின்றன. மேலதிகம் அறிய விரும்புவோர் https://valmikiramayan.net/utf8/baala/sarga52/bala_52_frame.htm என்ற சுட்டிக்குச் செல்லவும்.

பாலகாண்டம் சர்க்கம் – 52ல் உள்ள சுலோகங்கள் : 23

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை