Tuesday 11 October 2022

செவிப்புலம் நுகர்வது தெய்வத்தேனோ | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 079 (17)

Excellent words close to the ears | Ayodhya-Kanda-Sarga-079 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்பட்ட பரதன்; அரியணையை மறுத்து, காட்டுக்குச் செல்லும் சாலைகளை அமைக்க உத்தரவிட்டு, ராமனை திரும்பி அழைத்துவர ஆயத்தமானது...

Bharata in his Sabha with ministers and people

பிறகு சதுர்தசி திவசத்தின் {பதினான்காம் நாள்} விடியுங்காலத்தில், ராஜகர்த்தர்கள் {King makers} கூடி, பரதனிடம் {பின்வரும்} வாக்கியங்களைப் பேசினார்கள்:(1) "உயர்ந்த மதிப்பிற்குரிய எங்கள் குரு {தசரதர்}, ஜேஷ்டனான {மூத்த புதல்வனான} ராமனையும், மஹாபலசாலியான லக்ஷ்மணனையும் நாடுகடத்திவிட்டு, ஸ்வர்க்கத்திற்குச் சென்றுவிட்டார்.(2) பெரும் புகழ்மிக்க ராஜபுத்திரரே {பரதரே}, இனி நீரே எங்கள் ராஜாவாக இருப்பீராக. நாயகனில்லாமல் இருந்தாலும் இந்த ராஜ்ஜியம் குற்றமற்றதாகவே இருக்கிறது.(3) நிருபாத்மஜரே, ராகவரே, உமது ஜனங்களும், குடிமக்களும் அபிஷேகத்திற்குரிய அனைத்தையும் கொண்டு வந்து உமக்காகக் காத்திருக்கின்றனர்.(4) பரதரே, நர ரிஷபரே {மனிதர்களில் காளையே}, உமது பித்ரு பிதாமஹர்களிடம் இருந்து வரும் நிலையான ராஜ்ஜியத்தை ஏற்று, அபிஷேகம் செய்து கொண்டு எங்களை நீரே ஆள்வீராக" {என்றனர் ராஜகர்த்தர்கள்}.(5)

திட விரதனான பரதன், அபிஷேகத்திற்குரிய அந்தப் பொருள்கள் அனைத்தையும் பிரதக்ஷிணம் செய்து (வலம் வந்து), ஜனங்கள் அனைவரிடமும் {பின்வருமாறு} பதிலுரைத்தான்:(6) "ஜேஷ்டரின் ராஜதானியே எங்கள் குலத்திற்கு நித்தியம் உசிதமானது {மூத்தவரின் அரசாட்சியே எங்கள் குலத்திற்கு எப்போதும் பொருந்தும்}. நன்மையை அறிந்த ஜனங்களான நீங்கள் இவ்வாறு என்னிடம் சொல்லக்கூடாது.(7) உடன்பிறந்த எங்களில் மூத்தவரான ராமரே மஹீபதியாக வேண்டும். நான் நவபஞ்ச {பதினான்கு} வருஷங்கள் அரண்யத்தில் வசிப்பேன்.(8) மஹத்தான சதுரங்க மஹாபலம் {நால் வகை துருப்புகளுடன் கூடிய பெரும்படை} ஆயத்தமாகட்டும். உடன்பிறந்தவர்களில் ஜேஷ்டரான ராகவரை வனத்தில் இருந்து நான் அழைத்து வருவேன்.(9) 

அபிஷேகத்திற்கென திரட்டப்பட்டிருக்கும் இவை அனைத்தையும் முன்னிட்டுக் கொண்டு, ராமரின் பொருட்டு நான் வனத்திற்குச் செல்வேன்.(10) நரவியாகரரான அவருக்கு அங்கேயே அபிஷேகம் செய்துவைத்து, வேள்விச்சாலையிலிருந்து புனித நெருப்பை {திரேதாக்னியைக்} கொண்டு வருவதைப் போல[1], நிச்சயம் ராமரை எனக்கு முன்னிட்டு அழைத்துக் கொண்டு வருவேன்.(11) என் மாதாவாக அழைக்கப்படுகிறவளின் {கைகேயியின்} ஆசையை நான் நிறைவேற்ற மாட்டேன். கடப்பதற்கு அரிதான வனத்தில் நான் வசித்திருப்பேன். இராமரே ராஜா ஆவார்.(12) சிற்பிகள், சமமற்றவற்றை சமமாக்கி பாதைகளைச் சீரமைக்கட்டும். கடப்பதற்கரிய காடுகளைக் கடக்கக்கூடிய காவலர்கள், அந்தப் பாதையில் எங்களைப் பின்தொடரட்டும்" {என்றான் பரதன்}.(13)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தக்ஷிணாக்னி கார்ஹபத்யாக்னி ஆஹவனீயாக்னி என்று யாகத்தில் வழங்கி வரும் இம்மூன்றக்னிகளே த்ரேதாக்னியென்று சொல்லப்படுகின்றன. யாகசாலையில் தென்புறத்திலிருக்கும் அக்னி தக்ஷிணாக்னி. க்ருஹபதியோடு {வீட்டின் தலைவனோடு} சேர்ந்திருக்கும் அக்னி கார்ஹபத்யாக்னி. ஆஹவனஞ் செய்யும் அக்னி ஆஹவனீயாக்னி" என்றிருக்கிறது.

இராமனின் பொருட்டு இவ்வாறு பேசிக் கொண்டிருந்த அந்த நிருபாத்மஜனிடம் {இளவரசன் பரதனிடம்}, சர்வஜனங்களும் இந்தச் சிறந்த உத்தம வாக்கியத்தைச் சொன்னார்கள்:(14) "மன்னனின் மகன்களில் மூத்தவனுக்குப் பிருத்வியை தத்தம் செய்ய விரும்பி இவ்வாறு பேசுபவரான உம்மிடம் எப்போதும் பத்மஸ்ரீ {தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமி தேவி} வசித்திருப்பாளாக" {என்றனர்}.(15)

தங்கள் காதுகளுக்கு நெருக்கமாக[2] அந்த நிருபாத்மஜன் சொன்ன உத்தமச் சொற்களைக் கேட்ட அந்த ஆரியர்களின் {நன்மக்களின்} முகக் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.(16) அமாத்யர்களுடன் கூடிய பரிசதர்களும் {அமைச்சர்களுடன் கூடிய சபை மக்களும்} அந்தச் சொற்களைக் கேட்டு, சோகத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியடைந்து, "பக்திமான்களும், சிற்பி வர்க்க ஜனங்களும் உமது சொற்களின்படியே பாதையை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்ற இந்தச் சொற்களைச் சொன்னார்கள்.(17)

[2] அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள 
புவித்தலை உயிர் எலாம், இராமன் பொன்முடி
கவிக்கும் என்று உரைக்கவே, களித்ததால் அது
செவிப்புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்

- கம்பராமாயணம் 2266ம் பாடல்

பொருள்: ஐம்புலன்களையும் அடக்கியவர்கள் முதலாக, புவியில் உள்ள உயிர்களெல்லாம், "ராமன் பொன்முடி தரிப்பான்" என்று உரைக்கவே, பெருமகிழ்ச்சியடைந்தன. அவர்களின் காதுகளெனும் புலன்கள் தெய்வத்தன்மை வாய்ந்த தேனைப் போல் அந்தச் சொற்களை நுகர்ந்தன.

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 079ல் உள்ள சுலோகங்கள்: 17

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை