Showing posts with label வாமதேவர். Show all posts
Showing posts with label வாமதேவர். Show all posts

Friday, 18 March 2022

ராஜ்யாபிஷேக ஏற்பாடுகள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 003 (49)

Arrangements for the anointing ceremony | Ayodhya-Kanda-Sarga-003 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வசிஷ்டரையும், வாமதேவரையும் கேட்டுக் கொண்ட தசரதன்; இராமனை சபைக்கு அழைத்து வந்த சுமந்திரன்; இராமனுக்கு அறிவுரை வழங்கிய தசரதன்...

Rama goes to Dasharatha

தாமரை மொட்டுகளுக்கு ஒப்பான அவர்களின் {அவர்களது கூப்பிய கைகளின்} வணக்கங்களை அனைத்து வகையிலும் ஏற்றுக் கொண்ட ராஜா {தசரதன்}, அவர்களிடம் இதமாகவும், இனிமையாகவும் {பின்வருமாறு} பேசினான்:(1) "அஹோ, என் பிரியத்திற்குரிய ஜேஷ்ட புத்திரனை {அன்புக்குரிய மூத்த மகன் ராமனை} யுவராஜனாக்க எதனால் நீங்கள் விரும்புகிறீர்களோ, அதனாலேயே நான் பரம பிரீதி {மகிழ்ச்சி} அடைகிறேன். என் நற்பேறும் ஒப்பற்றதாக இருக்கிறது" {என்றான் தசரதன்}.(2)

இவ்வாறு அவர்களை மதித்த அந்த ராஜா {தசரதன்}, அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வசிஷ்டரிடமும், வாமதேவரிடமும், பிற பிராமணர்களிடமும் இதைப் பேசினான்:(3) "புஷ்பங்கள் பூத்துக் குலுங்குவதும், மகத்தானதும், புண்ணியமானதுமான இந்தச் சைத்ர மாஸத்தில் {சித்திரை மாதத்தில் பட்டாபிஷேகத்திற்கான} ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படட்டும்" {என்றான் தசரதன்}. ராஜனின் இந்த வாக்கியம் நிறைவடைந்ததும் அங்கே மகத்தான ஜனகோஷம் உண்டானது {மக்களிடம் பேராரவாரவொலி எழுந்தது}.(4,5அ)

அந்த ஜனகோஷம் படிப்படியாகக் குறைந்ததும், ஜனாதிபனான அந்த ராஜா {தசரதன்}, முனிஷார்தூலரான {முனிவர்களில் புலியான / சிறந்தவரான} வசிஷ்டரிடம் இந்த வசனத்தைச் சொன்னான்:(5ஆ,6அ) "பகவானே, ராமனின் அபிஷேகத்திற்கு வேண்டிய கர்மங்கள் {செயல்பாடுகள்} அனைத்தையும் இனி நீர் ஆணையிடுவதே தகும்" {என்றான் தசரதன்}.(6ஆ,7அ)

துவிஜசத்தமரான {இருபிறப்பாளர்களில் சிறந்தவரான} வசிஷ்டர், பூமிபாலன் {பூமியை ஆளும் தசரதன்} சொன்னதைக் கேட்டதும், அந்த மன்னனின் முன்பு கூப்பிய கைகளுடன் நின்றிருந்த அதிகாரிகளுக்கு {பின்வருமாறு} கட்டளையிட்டார்:(7ஆ,8அ) "சுவர்ணம் {தங்கம்} முதலியவை, ரத்தினங்கள், பலிகள் {பூஜைக்குத் தேவையான நைவேதனங்கள்}, பல்வேறு மூலிகைகள், வெண்மலர்மாலைகள், பொரிகள், தேன், நெய், புத்தாடைகள், சாமரங்கள், துவஜம் {கொடிக்கம்பம்}, வெண்குடை, அக்னி போல் பிரகாசிக்கும் பொன்மயமான நூறு கும்பங்கள், கொம்புகளில் பொற்குப்பிப் பூட்டப்பட்ட ரிஷபம் {காளை}, முழுமையான {பழுதில்லாத} புலித்தோல் ஆகியவற்றை மஹீபதியின் அக்னியகாரத்தில் {பூமியின் தலைவனான தசரதன் நெருப்பு வளர்க்கும் அறையில் [தசரதனின் வேள்விச்சாலையில்]} அதிகாலையில் திரட்டி வைப்பீராக.

ரதங்கள், சகல ஆயுதங்கள், சதுரங்க பலம் {நால்வகைப் படை}, சுபலக்ஷணமுள்ள கஜம் {யானை} ஆகியவற்றையும் ஆயத்தமாக வைத்திருப்பீராக.(8ஆ-12அ) இன்னும் வேண்டிய சிறு பொருட்கள் வேறு எவையாக இருப்பினும் அவை அனைத்தையும் ஆயத்தமாக வைத்திருப்பீராக. அந்தப்புரத்தின் வாயில்களையும், நகரத்தில் உள்ள வாயில்கள் யாவற்றையும் நல்ல வாசனைத் திரவியங்களாலும், நல்ல மணத்தைத் தரும் சந்தன மாலைகளாலும், மலர்மாலைகளாலும் அலங்கரித்து வழிபடுவீராக.(12ஆ,13) நல்ல குணத்துடன் கூடியதும், தயிர், பால் முதலியவை கலந்ததுமான அன்னம், முழுமையாக நூறாயிரம் {ஒரு லட்சம்} துவிஜர்களுக்கு {இருபிறப்பாளர்களுக்குப்} போதுமான அளவுக்கு இருக்கட்டும்.(14) அது {அந்த அன்னம்}, நெய், தயிர், பொரி ஆகியவற்றுடனும், ஏராளமான தக்ஷிணைகளுடனும் நாளை அதிகாலையில் துவிஜமுக்கியர்களுக்கு மதிப்புடன் கொடுக்கப்படட்டும்.(15)

நாளை சூரியன் உதித்ததும், ஸ்வஸ்திவாசனம் {அனைவரின் நலத்தை நாடும் பிரார்த்தனை} நடைபெறப்போவதால் பிராமணர்களை அழைப்பீராக. ஆஸனங்களையும் ஆயத்தம் செய்து வைப்பீராக.(16) பதாகைகள் {கொடிகள்} கட்டப்படட்டும். ராஜமார்க்கம் நனைக்கப்படட்டும் {அரசவீதியில் நீர் தெளிக்கப்படட்டும்}. இசைக் கலைஞர்களும், கணிகையரும் சிங்காரித்துக் கொண்டு, ராஜமாளிகையின் இரண்டாவது கட்டில் இருக்கட்டும்.(17,18அ) அன்னத்துடனும், பக்ஷணங்களுடனும் {சிற்றுண்டிகளுடனும்}, தக்ஷிணைகளுடனும், மாலைகளுடனும் கூடிய தக்கார் {தகுந்த மனிதர்கள்} தேவாயதனங்கள் {கோவில்கள்}, வீதிகள், பொதுமண்டபங்கள் ஆகியவற்றில் தனித்தனியாகக் காத்திருக்கட்டும்.(18ஆ,19அ) நீண்ட வாள் தரித்துக் கொண்டும், கவசம் பூண்டு கொண்டும், தூய்மையான உடை உடுத்திக் கொண்டும் போர்வீரர்கள் அனைவரும் அந்த மஹோத்ஸவம் நடைபெறும் ராஜமாளிகையின் முன்பு ஓங்கி வளர்ந்திருக்கும் முகப்பில் நுழையட்டும்" {என்றார் வசிஷ்டர்}.(19ஆ,20அ)

நல்ல கவனத்துடன் கூடிய அந்த விப்ரர்கள் இருவரும் {வசிஷ்டரும், வாமதேவரும்}, அங்கே செய்யப்பட வேண்டிய காரியங்களை ஆணையிட்டுவிட்டு, அதை அந்தப் பார்த்திபனுக்கும் {மன்னன் தசரதனுக்கும்} தெரிவித்து, {அவற்றிலும்} எஞ்சிய காரியங்களைச் செய்து கொண்டிருந்தனர்.(20ஆ,21அ) அந்த துவிஜரிஷபர்கள் {இருபிறப்பாளர்களில் சிறந்த வசிஷ்டரும், வாமதேவரும்} நிறைவடைந்தவர்களாக, மகிழ்ச்சியுடன்  அந்த ஜகத்பதியை {உலகத்தலைவனான தசரதனை} அணுகி, அவனுடைய சொற்களின்படியே அனைத்தும் செய்யப்பட்டன என்பதை அவனுக்குத் தெரிவித்தனர்.(21ஆ,22அ)

அதன்பிறகு, பிரகாசமிக்கவனான அந்த ராஜா {தசரதன்}, சுமந்திரனிடம் இந்த வசனத்தைச் சொன்னான், "கிருதாத்மனான {புத்தி ஒழுங்குடன் கூடிய} ராமனை சீக்கிரம் அழைத்து வருவீராக" {என்றான் தசரதன்}.(22ஆ,23அ) தேரோட்டிகளில் சிறந்தவனான சுமந்திரன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, ராஜாவின் சாசனப்படி {ஆணைக்கிணங்க} ராமனை அங்கே ரதத்தில் அழைத்து வந்தான்.(23ஆ,24அ)

அதன்பிறகு, கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்குத் திசைகளைச் சேர்ந்த பூமிபாலர்களும் {நிலத்தின் ஆட்சியாளர்களும்}, மிலேச்சர்களும், ஆரியர்களும் {உன்னதர்களும்}, வனப்பகுதிகளில் உள்ள பிறரும், மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுமென அனைவரும் அங்கே அமர்ந்து வாசவனை {இந்திரனைக்} கவனிக்கும் தேவர்களைப் போல, அந்த தசரத நிருபனை கவனித்தனர்.(24ஆ-26அ) மருதர்களுக்கு {தேவர்களுக்கு} மத்தியிலுள்ள வாசவனை {இந்திரனைப்} போன்ற அந்த ராஜரிஷி {தசரதன்}, அவர்களின் மத்தியில், அரண்மனையில் இருந்தவாறே தன் ஆத்மஜன் {தன் மகனான ராமன்} ரதத்தில் வருவதைக் கண்டான்.(26ஆ,27அ)

கந்தர்வ ராஜனுக்கு இணையான அழகனும், உலகில் புகழ்பெற்றவனும், நீண்ட கரங்களையும், மஹாபலத்தையும், மதங்கொண்ட யானையின் நடையையும், சந்திரனைப் போன்ற காந்த முகத்தையும் கொண்டவனும், காண்பதற்கு இனிமையானவனும், ரூபத்தாலும், மகத்தான குணங்களாலும் மனிதர்களின் கண்களையும், மனங்களையும் கவர்பவனுமான ராமன், கோடைகால வெப்பத்தில் வேகும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பர்ஜன்யனை {மேகத்தைப்} போல வருவதைக் கண்டும் அந்த நராதிபனுக்கு {மனிதர்களின் தலைவனான தசரதனுக்குத்} தெவிட்டவில்லை.(27ஆ-30அ)

சுமந்திரன், அந்தச் சிறந்த தேரில் இருந்து ராகவன் {ராமன்} இறங்கத் துணை புரிந்து, கூப்பிய கைகளுடன் பின்தொடர்ந்து, பிதாவின் சமீபத்தில் {தசரதனின் அருகில்} அவனை அழைத்துச் சென்றான்.(30ஆ,31அ) நரபுங்கவனான அந்த ராகவன், நிருபனை {மனிதர்களிற் சிறந்த ராமன், தசரதமன்னனைக்} காண, கைலாச மலைக்கு ஒப்பான அந்த மாளிகைக்குள் சூதனுடன் {தேரோட்டியான சுமந்திரனுடன்} சென்றான்.(31ஆ,32அ)

இராமன், கூப்பிய கைகளுடன் தன் பிதாவின் அருகில் சென்று வணங்கியும், தன் நாமத்தை {பெயரைச்} சொல்லியும் தன் பிதாவின் பாதங்களை வழிபட்டான்.(32ஆ,33அ) அந்த நிருபன் {தசரதன்}, வணக்கம் தெரிவிக்கும் தன் பிரிய ஆத்மஜனின் {அன்புக்குரிய மகனின்} கூப்பிய கைகளைத் தன்னுடைய கூப்பிய கைகளால் பற்றித் தன்னருகே அழைத்து அவனை அணைத்துக் கொண்டான்.(33ஆ,34அ) அந்த ராஜா {தசரதன்}, உயர்ந்ததும், திவ்யமானதும், அழகானதும், மாணிக்கங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான பரமாசனத்தை {உயர்ந்த இருக்கையை} ராமனுக்கு அளித்தான்.(34ஆ,35அ)

அந்தச் சிறந்த ஆசனத்தைப் பெற்றுக் கொண்ட ராகவன் {ராமன்}, உதயத்தில் மேருவை ஒளிரச் செய்யும் களங்கமில்லா ரவியை {சூரியனைப்} போலத் தன் பிரபையால் அதை {தன்னொளியால் அந்த ஆசனத்தை} ஒளிரச் செய்தான்.(35ஆ,36அ) மங்காத கிரகநக்ஷத்திரங்களுடன் கூடிய கூதிர் கால வானம் இந்துவால் {சந்திரனால்} ஒளிர்வதைப் போல அந்தச் சபையானது அவனால் {ராமனால்} அங்கே அதிகமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.(36ஆ,37அ) அந்த நிருபன் {மன்னன் தசரதன்}, அலங்காரத்துடன் கூடிய தன்னையே கண்ணாடியில் காண்பதைப் போலத் தன் பிரிய ஆத்மஜனை {தன் அன்புக்குரிய மகனைக்} கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(37ஆ,38அ)

புத்திரர்களைக் கொண்டவர்களில் சிறந்தவனான அந்த ராஜா {தசரதன்}, தேவேந்திரனுடன் கசியபரைப் போலத் தன் புத்திரனிடம் {ராமனிடம்} புன்னகையுடன் இந்தச் சொற்களைச் சொல்லி உரையாடினான்:(38ஆ,39அ) "இராமா, நீ என் ஜேஷ்ட பத்தினிக்கு உண்டான தகுந்த சுதனாக {மூத்த மனைவிக்குப் பிறந்த தகுதிவாய்ந்த மகனாக} இருக்கிறாய். குணசிரேஷ்டனான {குணங்களில் சிறந்தவனான} நீ, என்னுடைய பிரிய ஆத்மஜனாகவும் {அன்புக்குரிய மகனாகவும்} இருக்கிறாய்.(39ஆ,40அ) உன்னால் இந்தப் பிரஜைகள் {மக்கள்} பேணப்பட்டனர். அந்த குணத்தால், புஷ்ய யோகத்தில் {பூச நட்சத்திரம் கொண்ட நாளில்} நீ யுவராஜ்ஜியத்தை {யுவராஜன் / இளவரசன் என்ற பட்டத்தை} அடைகிறாய்.(40ஆ,41அ) புத்திரனே, உன்னுடைய இயல்பாலேயே நீ அடக்கமானவனாகவும், குணவானாகவும் இருப்பதால், நான் உன்னிடம் கொண்ட சினேகத்தின் காரணமாக உனக்கு இதமானதைச் சொல்லப் போகிறேன்.(41ஆ,42அ)

இன்னும் பணிவுள்ளவனாவாயாக; நித்யம் ஜிதேந்திரியனாக {எப்போதும் புலன்களை வெல்பவனாக} இருப்பாயாக. காமத்திலும் {ஆசையிலும்}, குரோதத்திலும் {கோபத்திலும்} உண்டாகும் தீய பழக்கங்களைக் கைவிடுவாயாக.(42ஆ,43அ) நடத்தையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் அமாத்யர்களையும் {அமைச்சர்களையும்}, பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பாயாக.(43ஆ,44அ) மக்களை மகிழ்விக்கும் வகையில் களஞ்சியங்களும், ஆயுத சாலைகளும் விளிம்புவரை நிரம்பும்போது, அமுதத்தை அடைந்த அமரர்களைப் போல, மேதினி பாலனம் செய்பவனின் மித்ரர்களும் {பூமியை ஆள்பவனின் நண்பர்களும்} மகிழ்ச்சியடைகிறார்கள். எனவே நீயும் அவ்வாறே செயல்படுவாயாக" {என்றான் தசரதன்}.(44ஆ-46அ)

இராமனின் நலவிரும்பிகள் இதைக் கேட்டதும் கௌசல்யைக்கு நன்மை செய்யும் நோக்கில் அவளிடம் விரைந்து சென்று இதைத் தெரிவித்தனர்.(46ஆ,47அ) பெண்களில் சிறந்தவளான கௌசல்யை, இந்த நல்ல செய்தியைச் சொன்னவர்களுக்கு ஹிரண்யங்களையும் {தங்கத்தையும்}, கோவையும் {பசுக்களையும்}, பல்வேறு வகையான ரத்தினங்களையும் கொடையளித்தாள்.(47ஆ,48அ)

இராகவன் {இராமன், தசரத} ராஜனை வணங்கிய பின்னர், ரதத்தில் ஏறி தன்னுடைய அற்புதமான இல்லத்திற்குச் சென்று, ஜனக்கூட்டங்களால் வழிபடப்பட்டான்.(48ஆ,49அ) அந்த நிருபதியின் {மனிதர்களில் தலைவனான தசரதனின்} வசனத்தைக் கேட்டவர்களும், தங்கள் விருப்பம் நிறைவேறியவர்களுமான நகரவாசிகள், அந்த நரேந்திரனிடம் {மனிதர்களின் தலைவனான தசரதனிடம்} விடைபெற்றுத் தங்கள் இல்லங்களுக்குச் சென்றவுடன் தேவர்களை வழிபட்டனர்.(49ஆ,இ,ஈ,உ)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 003ல் உள்ள சுலோகங்கள் : 49

Previous | Sanskrit | English | Next

Thursday, 18 November 2021

தூதர்கள் வருகை | பால காண்டம் சர்க்கம் - 68 (19)

Arrival of envoys | Bala-Kanda-Sarga-68 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஜனகன் அனுப்பிய செய்தியை அறிந்த தசரதன்; அமைச்சர்களுடன் மிதிலை செல்லத் தீர்மானித்தது...

King Dasharatha Raja Sabha

ஜனகனால் தெளிவாக ஆணையிடப்பட்ட அந்தத் தூதர்கள், தங்கள் மார்க்கத்தில் {வழியில்} மூன்று ராத்திரிகள் தங்கினர். அவர்கள் களைத்துப் போன தங்கள் வாகனங்களுடன் {குதிரைகளுடன்} அயோத்தியாபுரிக்குள் பிரவேசித்தனர்.(1) ராஜவசனத்தின் {தசரதனின் அனுமதியின்} பேரில் அந்த {தசரத} ராஜனின் வசிப்பிடத்திற்குள் அவர்கள் பிரவேசித்தபோது, தெய்வீக மினுமினுப்புடன் கூடியவனும், விருத்தனும் {முதிர்ந்தவனும்}, நிருபனுமான தசரதனைக் கண்டனர்[1].(2)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பில் இதற்கு முன்பு, "அவர்கள் அங்ஙனம் அந்தப் பட்டணஞ் சேர்ந்து அங்கு அரசன் மாளிகைக்குச் சென்று அவ்விடமிருக்கும் வாசற்காப்பவர்களை நோக்கி, "நாங்கள் ஜநக மஹாராஜனது தூதர்கள். இதை உங்களரசனுக்கு விரைவாகத் தெரிவியுங்கோள்" என்றுரைத்து நிற்க, அந்த த்வாரபாலகர்களும் தசரத மன்னவனுக்கு அவர்கள் வந்திருப்பதைத் தெரிவித்தனர். தூதர்கள் தம்மை ஜநக மஹாராஜன் அனுப்பினதாகச் சொல்லக் கேட்டுத் தசரதசக்ரவர்த்தி அவர்களை அழைத்துக் கொண்டு வரக் கட்டளையிட்டனன். அந்தத் தூதர்களும் வாசற்காப்பவர்களைப் பின்பற்றிச் சென்று அரசன் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்து அங்குத் தேவதைப் போல் விளங்குபவனும், வயது சென்றவனுமாகிய தசரத வேந்தனைக் கண்டனர்" என்றிருக்கிறது.

பதற்றம் நீங்கிய அந்தத் தூதர்கள் அனைவரும், தங்கள் கைகளைக் குவித்து அந்த ராஜனிடம் மதுரமான சொற்களையும், இணக்கமான வாக்கியங்களையும் சொன்னார்கள்[2]:(3) "மஹாராஜாவே, அக்னிஹோத்ரங்களில் எப்போதும் ஈடுபடுபவனான உன்னையும், உன்னுடைய உபாத்யாயர்களையும் {ஆசிரியர்களையும்}, புரோஹிதர்களையும், நீ உனக்கு முன்னிட்டுச் செல்பவர்களையும் {குடிமக்களையும்}, உன் நல்வாழ்வையும், குறைவற்ற உன் செழிப்பையும் மிதிலையின் ஜனக ராஜா மதுரமான நட்பு மொழியில் மீண்டும் மீண்டும் குசலம் {நலம்} விசாரிக்கிறான்.(4,5)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தசரதன், கைகேயியின் சூழ்ச்சியில் அகப்பட்டதால் அவனை மூடனென மதிப்பிட முடியாது. அஃது அவர்களது குடும்பத்திற்குள்ளான பனிப்போர். அவன் தன் சாதனைகளுக்காகப் பிரபலமாக இருந்தவன், அவன் தேவர்களுக்காகவும் போர் புரிந்திருக்கிறான். வால்மீகி இவை குறித்து விவரிக்கவில்லையெனினும், மற்ற கதைகளில் அவற்றைக் குறித்து அதிகம் சொல்லப்படுகிறது. இராமனின் துணிவு, துடுக்கு, வீரம் ஆகியவை சுட்டிக்காட்டப்படும்போதெல்லாம் தசரதனின் மகன் {தாசரதி} என்றே அவன் குறிப்பிடப்படுகிறான். இவ்வளவு சக்தி வாய்ந்த ஒருவனை எப்படி எதிர்கொள்வது என்பதை அறியாத அந்தத் தூதர்களின் பதற்றம் அவனைக் கண்டதும் நீங்கியது என இந்த வாக்கியத்தில் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.

கலங்காமல் குசலம் விசாரிக்கும் மிதிலாதிபனான வைதேஹன் {ஜனகன்}, கௌசிகரின் {விஷ்வாமித்ரரின்} அனுமதியுடன் உன்னிடம் இந்த வாக்கியத்தைச் சொல்கிறான்:(6) "என் ஆத்மஜை வீரியசுல்கமாகப் பூர்வத்தில் {என் மகள் சீதை வீரத்திற்கான கொடையாக  முன்னர் என்னால்} பிரதிஜ்ஞை செய்யப்பட்டதும், வீரியமற்ற ராஜாக்கள் கோபமடைந்ததும், அவர்கள் புறமுதுகிட்டதும் நன்கறியப்பட்டதே.(7) இராஜாவே, விஷ்வாமித்ரரை முன்னிட்டு எதேச்சையாக {தற்செயலாக மிதிலை} வந்தவனும், வீரியமிக்கவனுமான உன் புத்திரன் அத்தகைய என் மகளை வென்றான்.(8) மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்ட தசரதா}, மஹாத்மாவான ராமன், மஹாஜனசபையில் திவ்யமான தனு ரத்தினத்தின் மத்தியை பங்கம் செய்தான் {மக்கள் கூட்டம் நிறைந்த சபையில் சிறந்த தெய்வீக வில்லை நடுவில் முறித்தான்}.(9)

வீரியசுல்கமான சீதையை அந்த மஹாத்மாவுக்கே நான் கொடுக்க வேண்டும். என் பிரதிஜ்ஞையை நான் காக்க விரும்புகிறேன். இதை அனுமதிப்பதே உனக்குத் தகும்.(10) மஹாராஜாவே, உபாத்யாயர்கள், புரோஹிதர்களை முன்னிட்டுக் கொண்டு சீக்கிரம் வருவாயாக. நீ மங்கலமாக இருப்பாயாக. இராகவர்களைக் காண்பதே உனக்குத் தகும்.(11) இராஜேந்திரா, என் பிரதிஜ்ஞையை நிவர்த்தி செய்வதே {நிறைவேற்றுவதே} உனக்குத் தகும். அவ்வகையில் நீ உன் புத்திரனைக் கண்டு மகிழ்ச்சி அடைவாய்" {என்று உனக்குச் சொல்லி அனுப்பினான் ஜனகன்}.(12) விஷ்வாமித்ரரின் அனுமதியின் பேரிலும், சதானந்தரின் ஆலோசனையின் பேரிலும் அந்த விதேஹாதிபதி இந்த மதுரமான வாக்கியத்தைச் சொல்லி அனுப்பினான்" {என்றனர் தூதர்கள்}.(13)

இராஜா {தசரதன்}, தூதர்களின் வாக்கியத்தைக் கேட்டுப் பரம மகிழ்ச்சியடைந்து வசிஷ்டரிடமும், வாமதேவரிடமும், மந்திரிகளிடமும் இவ்வாறு சொன்னான்:(14) "கௌசல்யையின் ஆனந்தத்தை அதிகரிப்பவன் {ராமன்}, குசிகபுத்திரரால் காக்கப்பட்டு, தம்பி லக்ஷ்மணனுடன் சேர்ந்து விதேஹத்தில் {விதேஹ நாட்டில்} வசித்து வருகிறான்.(15) காகுத்ஸ்தனின் வீரியத்தைக் கண்டவனும், மஹாத்மாவுமான ஜனகன், தன் மகளை {சீதையை மணமகளாக} ராகவனுக்கு {ராமனுக்குக்} கொடுக்க விரும்புகிறான்.(16) மஹாத்மா ஜனகன் சொன்ன நிகழ்வு உங்களுக்குப் பிடித்திருந்தால், காலத்தைக் கடத்தாமல் சீக்கிரமாக அந்த நகருக்கு {மிதிலாபுரிக்குச்} செல்வோம்" {என்றான் தசரதன்}.(17)

மஹாரிஷிகளுடன் கூடிய மந்திரிகள் அனைவரும், "இது நல்லது" என்றனர். மகிழ்ச்சியடைந்த {தசரத} ராஜாவும், "நாளை யாத்திரை செய்வோம் {பயணிப்போம்}" என்று தன் மந்திரிகளிடம் சொன்னான்.(18) சர்வ குணங்களையும் கொடையாகக் கொண்ட {ஜனகனின்} மந்திரிகள், நரேந்திரனின் {தசரதனின்} விருந்தோம்பலைப் பெற்று பரம மகிழ்ச்சியுடன் ராத்திரி முழுவதும் அங்கே {அயோத்தியில்} வசித்திருந்தனர்.(19)

பாலகாண்டம் சர்க்கம் – 68ல் உள்ள சுலோகங்கள் : 19

Previous | Sanskrit | English | Next

Monday, 26 July 2021

தசரதனின் அமைச்சர்கள் | பால காண்டம் சர்க்கம் - 07 (24)

Ministers of Dasharatha | Bala-Kanda-Sarga-07 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம் : தசரதனின் அமைச்சர்களுடைய குணங்கள்; அரசியல் சார்ந்த அமைச்சர்களுடன் அற அமைச்சகமும் நிறுவப்படுவது...

Dasharatha Vasishta and Vamadeva

இக்ஷ்வாகுக்களில் மஹாத்மாவான அவனது {தசரதனின்} அமாத்யர்கள் {அமைச்சர்கள்}, மந்திர ஞானமும் {ராஜகாரியங்களை ஆலோசிக்கும் அறிவும்}, இங்கித ஞானமும் {முகமலர்ச்சியுடன் பிறரின் கருத்தை நன்றாக ஆயும் அறிவும்} கொண்டவர்களாகவும், எப்போதும் நன்மை செய்வதில் ஈடுபடும் குணத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(1) வீரம் நிறைந்தவனும், மகிமைமிக்கவனுமான அவனது {தசரதனின்} எட்டு அமைச்சர்களும், தூய்மையான இதயம் கொண்டவர்களாகவும், எப்போதும் ராஜாவின் காரியங்களில் ஈடுபடுகிறவர்களாகவும் இருந்தனர்.(2) {அவர்கள்} திருஷ்டி, ஜயந்தன், விஜயன், ஸுராஷ்டிரன், ராஷ்டிரவர்தனன், அகோபன், தர்மபாலன், எட்டாவதாகச் சுமந்திரன் {ஆகியோராவர்}[1].(3) அதே போலவே, இசையும் இயல்புடையவர்களான வசிஷ்டர், வாமதேவர் என்ற உன்னத ரிஷிகள் இருவரும் {அறச்சடங்குகளைச் செய்யும்} ரித்விஜர்களாக இருந்தனர். இவர்களைத் தவிர இன்னும் சில மந்திரிகளும் இருந்தனர்.(4)

[1] நரசிம்மாசாரியரின் பதிப்பில் இந்த மந்திரிகளின் பெயர், "த்ருஷ்டியென்றும், ஜயந்தனென்றும், ஜயனென்றும், ஸித்தார்த்தனென்றும், அர்த்தஸாதகனென்றும், அசோகனென்றும், மந்த்ரபாலனென்றும் அவர்கள் வழங்கப்பட்டு வருவார்கள். எட்டாவது மந்த்ரி ஸுமந்த்ரனென்பவன்" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், நரசிம்மாசாரியரின் பதிப்பில் உள்ளதைப் போன்றே இருக்கின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பிலும், ஸ்ரீநிவாஸய்யங்கார் பதிப்பிலும் மேலே 3ம் ஸ்லோகத்தில் உள்ளதைப் போல இருக்கின்றன.

ஸுயஜ்ஞர், ஜாபாலி, காசியபர், கௌதமர், மார்க்கண்டேயர், தீர்க்காயு, காத்யாயனர் ஆகிய துவிஜர்களும், அவர்களுடன் சேர்ந்து எப்போதும் ரித்விக்குகளாகச் செயல்படும் பிரம்மரிஷிகளும்,(5,6அ) கல்வியிற்சிறந்தவர்களும், தீச்செயல்கள் செய்யாதவர்களும், திறன்மிக்கவர்களும், புலன்களை வென்றவர்களும், ஸ்ரீமான்களும் {செல்வம் நிறைந்தவர்களும்}, மஹாத்மாக்களும், சாத்திரங்களை அறிந்தவர்களும், திடமும், துணிவும் கொண்டவர்களும், கீர்த்திமான்களும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவர்களும், சொன்னது போல நடந்து கொள்பவர்களும், ஒளியும், பொறுமையும், புகழும் கொண்டவர்களும், உரையாடும் முன் புன்னகைப்பவர்களுமான அவர்கள்,(6ஆ-8அ) கோபம், பேராசை ஆகியவற்றால் ஒருபோதும் பொய் பேசாதவர்களாக இருந்தனர். அவர்கள் அறியாத சிறு தகவலும் இல்லை என்ற நிலை இருந்தது. தங்கள் நாட்டிலும், அந்நிய நாடுகளிலும் நடப்பவை, நடந்தவை, நடக்க இருப்பவை ஆகிய அனைத்தையும் அவர்கள் சாரர்கள் {ஒற்றர்கள்} மூலம் அறிந்து வந்தனர்.(8ஆ,9) விவகாரங்களில் {நிர்வாகத்தில்} அவர்கள் வல்லமையுள்ளவர்கள், நட்பில் {மன்னனால்} நன்றாகச் சோதிக்கப்பட்டவர்கள், காலம் விதித்தால் தங்கள் மகன்களையும் தண்டிக்கத் தயங்காதவர்கள்.(10) கருவூலத்திற்குச் செல்வத்தையும், படைகளுக்கு ஆயுதங்களையும் திரட்டுவதில் கடமையுணர்வு நிறைந்தவர்களான அவர்கள், தங்களுக்குப் பிடிக்காதவன் எனினும் குற்றமற்றவனை இம்சிக்காதவர்கள்.(11) உற்சாகத்துடன் கூடிய வீரர்களும், ராஜசாஸ்திரத்தின் படி நிர்வாகம் செய்பவர்களுமான அவர்கள், எப்போதும் தூய்மையானவர்களாகவும், அங்கே வசிப்பவர்களைப் பாதுகாப்பவர்களுமாக இருந்தனர்.(12)

அவர்கள் கருவூலத்தை நிரப்புவதற்காகப் பிராமணர்களையும், க்ஷத்திரியர்களையும் {அபராதங்கள் மூலமோ, மேலதிக வரிகள் மூலமோ} இம்சிப்பதில்லை, புருஷர்களின் பலத்தையும், பலவீனத்தையும் ஆய்வு செய்த பிறகே அவர்கள் கடுந்தண்டனைகளைக் கொடுத்தனர்.(13) அவர்கள் அனைவரும் ஒரே புத்தியுள்ளவர்களாக, நகரத்திலோ, நாட்டிலோ எங்கும் பொய்பேசும் ஒருவனும் இல்லாதவாறு தூய்மையாக நிர்வாகம் செய்தனர்.(14) தீய மனம் கொண்ட எவனும், அடுத்தவன் மனைவியை விரும்பும் எவனும் அங்கே இருப்பதில்லை. இவ்வாறே அந்த நாடும், நகரமும் எந்தத் தொல்லையுமின்றி இருந்தது.(15) நன்கு உடுத்தி, நன்கு அலங்காரம் செய்து கொள்ளும் அவர்கள், தங்கள் நரேந்திரனுக்கு {மனிதர்களின் மன்னனான தசரதனுக்கு} நன்மையைச் செய்யும் விரதத்துடனும், தளராமல் எப்போதும் நீதி எனும் கண் கொண்டு விழித்திருந்தனர்.(16)

அவர்கள் தங்கள் குருவிடம் இருந்து பெற்ற நல்ல குணங்களைக் கொண்டவர்களாகவும், பராக்கிரமத்தினால் நல்ல புகழ் பெற்றவர்களாகவும், புத்தி சார்ந்த அனைத்துக் காரியங்களில் அந்நிய நாடுகளிலும்கூடப் புகழ் வாய்ந்தவர்களாகவும் இருந்தனர்.(17) அவர்கள், பல துறைகளின் அறிவைக் கொண்டவர்களாகவும், எவராலும் பழிக்க இயலாத குணங்களைக் கொண்ட குணவான்களாகவும், போரையும், அதன் நிறுத்தத்தையும் தீர்மானிப்பவர்களாகவும், இயற்கையாகவே செல்வம் நிறைந்தவர்களாகவும் இருந்தனர்.(18) அவர்கள் இரகசிய உத்திகளை வெளியிடாதவர்களாகவும், மிகச்சிறிய காரியங்களிலும் புத்தியைச் செலுத்தவல்லவர்களாகவும், நீதிசாத்திரங்களை நன்கறிந்தவர்களாகவும், இனிமையாக வாதம் செய்பவர்களாகவும் இருந்தனர்.(19)

மேன்மையான தசரதன், இத்தகைய நல்ல குணம் கொண்ட அமைச்சர்கள் சூழ பூமியை ஆட்சி செய்தான்.(20) புருஷர்களில் புலியான தசரதன், ஒற்றர்கள் மூலம் கண்காணிப்பதற்காகவும், மக்களை தர்மப்படி காப்பதற்காகவும், அவர்களுக்கு நல்லாட்சியைத் தருவதற்காகவும், அதர்மத்தை முழுமையாக நீக்கி, தாராள மனங்கொண்டவனாகி, சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவனாக, மூவுலகங்களிலும் புகழ்பெற்றவனாக அங்கிருந்து ஆட்சி செய்தான்.(21,22) அவன் பல நண்பர்களைக் கொண்டவன் என்பதால் தனக்கு மேலாகவோ, ஒப்பாகவோ ஒருவனும் இல்லாதவனாகவும், தன் வீரத்தால் முட்களை {பகைவர்களை} நீக்கி அண்டைநாட்டு மன்னர்கள் அனைவரையும் அடக்கி, இணையான பகைவன் எவனும் இல்லாதவனாகச் சொர்க்கத்தின் தேவபதியைப் போல ஜகத்தை ஆண்டு வந்தான்.(23) தொடர்புடைய உத்திகளைச் செயல்படுத்த ஏற்றவர்களும், திறன்மிக்கவர்களும், சாமர்த்தியர்களுமான இந்த மந்திரிகளால் சூழப்பட்ட அந்தப் பார்த்திபன் {தசரதன்}, ஒளிமிக்கக் கதிர்களுடன் உதிக்கும் அர்க்கனை {சூரியனைப்} போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தான்.(24)
 

பாலகாண்டம் சர்க்கம் – 07ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை