Dhumraksha killed | Yuddha-Kanda-Sarga-052 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரர்களைத் தாக்கிய தூம்ராக்ஷன்; போரில் பெரும் எண்ணிக்கையிலான வானரர்களும், ராக்ஷசர்களும் கொல்லப்பட்டது; ஹனுமானுடன் போரிட்டு மடிந்த தூம்ராக்ஷன்...
யுத்தத்தை எதிர்பார்த்திருந்த சர்வ வானரர்களும், பீமவிக்கிரமனான ராக்ஷசன் தூம்ராக்ஷன் புறப்பட்டு வருவதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் முழக்கமிட்டனர்.(1) பயங்கர யுத்தத்தை நடத்திய கபிராக்ஷசர்கள் {குரங்குகளும், ராக்ஷசர்களும்} மரங்கள், சூலங்கள், முத்கரங்கள் ஆகியவற்றைக் கொண்டு அன்யோன்யம் கோரமாகத் தாக்கிக் கொண்டனர்.(2) கோரமான வானரர்கள், அனைத்துப் பக்கங்களிலும், ராக்ஷசர்களால் வெட்டி அழிக்கப்பட்டனர். இராக்ஷசர்களும், மரங்களுடன் கூடிய வானரர்களால் பூமி மட்டமாக்கப்பட்டனர்.(3) குரோதமடைந்த ராக்ஷசர்கள், கங்கபத்ரங்களுடன் {கழுகின் இறகுகளுடன்} நேராகச் செல்லக் கூடிய, கோரமான தோற்றம் கொண்ட கூரிய சரங்களால் வானரர்களைத் துளைத்தனர்.(4)

