Sugriva consoled Rama | Kishkindha-Kanda-Sarga-07 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையை மீட்டு வருவதாக உறுதியளித்து ராமனைத் தேற்றிய சுக்ரீவன்; வாலியைக் கொல்வதாக உறுதியளித்த ராமன்...
இராமன் வருத்தத்துடன் {இவ்வாறு} சொன்னதும், வானரனான சுக்ரீவன், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடனும், கண்ணீரால் தழுதழுக்கும் குரலுடனும் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(1) "துஷ்ட குலத்தைச் சேர்ந்தவனும், பாபியுமான அந்த ராக்ஷசனின் நிலயம் {வசிப்பிடம்}, சாமர்த்தியம், விக்கிரமம், குலம் ஆகியன எதையும் நான் அறிவேனில்லை.(2) அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, உமக்கு சத்தியப்ரதிஜ்ஞை செய்கிறேன். மைதிலியை எவ்வாறு மீட்க முடியுமோ அவ்வாறு யத்னம் {முயற்சி} செய்வேன். சோகத்தைக் கைவிடுவீராக.(3) இராவணனையும், அவனது கணங்களையும் {தொண்டர்களையும்} கொன்று, ஆத்ம பௌருஷத்திற்கு {என் ஆற்றலுக்கு} நிறைவளிக்கும் வகையிலும், நீர் மகிழ்ச்சியடையும் வகையிலும் விரைவிலேயே நான் செயல்படுவேன்[1].(4)