Mountain of herbs and the son of the carrier of fragrance | Yuddha-Kanda-Sarga-074 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இமய மலைக்குச் சென்று, மூலிகைகளுடன் கூடிய மலைச்சிகரத்தை எடுத்து வந்த ஹனுமான்; மூலிகையின் மகிமையால் உணர்வு மீண்ட வானரர்களும், ராமலக்ஷ்மணர்களும்...
போர்க்களத்தில் அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள் இருவரும்} விழுந்துகிடந்தபோது, ஹரியூதபர்களின் சைனியம் திகைத்திருந்தது. சுக்ரீவன், நீலன், அங்கதன், ஜாம்பவந்தன் ஆகியோரும் ஏது செய்வதெனக் கொஞ்சமும் அறியாதிருந்தனர்.(1) புத்திமான்களில் சிறந்தவனான விபீஷணன், அனைத்தையும் கண்டு விசனமடைந்தான். பிறகு, ஒப்பற்ற சொற்களால், சாகை மிருக ராஜ வீரர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பயம் வேண்டாம். மனச்சோர்வடைவதற்கான காலம் இதுவல்ல. ஸ்வயம்பூவின் {பிரம்மாவின்} வாக்கியத்தை மதிக்கும் வகையிலேயே ஆரியபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் இந்திரஜித்தின் அஸ்திரஜாலங்களால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். அதன்காரணமாக, சுதந்திரத்தை இழந்து உணர்விழந்துள்ளனர்.(3) அமோக {வீண்போகாத} வீரியம் கொண்ட பிரம்மம் என்ற இந்தப் பரமாஸ்திரம், ஸ்வயம்பூவால் அவனுக்கு {பிரம்மனால் இந்திரஜித்துக்கு} தத்தம் செய்யப்பட்டது. அதற்கு மதிப்பளிக்கவே ராஜபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் யுத்தத்தில் விழுந்தனர். இங்கே விஷாதகாலம் ஏது? {இது வருந்துவதற்கான காலமல்ல)" {என்றான் விபீஷணன்}.(4)