First encounter | Yuddha-Kanda-Sarga-042 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலங்கையின் வடக்கு வாயிலில் நிலை கொண்ட ராமலக்ஷ்மணர்கள்; தன் படையைத் திரட்டிய ராவணன்; இராட்ச வானரப் படைகளுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல்...
பிறகு, ராவணமந்திரத்திற்கு {ராவணனின் ஆலோசனை மண்டபத்திற்குச்} சென்ற அந்த ராக்ஷசர்கள், புரீயை {தங்கள் நகரத்தை} ராமனும், வானரர்களும் முற்றுகையிட்டிருப்பதைத் தெரிவித்தனர்.(1) நகரம் முற்றுகையிடப்பட்டதைக் கேட்டுப் பெருங்கோபமடைந்த நிசாசரன் {இரவுலாவியான ராவணன்}, பாதுகாப்பை இரண்டு மடங்காக்கிவிட்டு பிராசாதத்தின் {மதிலின்} மேல் ஏறி நின்றான்.(2) அவன், யுத்தத்தை விரும்புகிறவர்களும், எண்ணற்றவர்களுமான ஹரிகணங்களால் {குரங்குக் கூட்டத்தினரால்} சைலங்கள், வனங்கள் நிறைந்த லங்கை முழுவதும் முற்றுகையிடப்பட்டிருப்பதைக் கண்டான்.(3) அவன், வசுதை எங்கும் வானரர்கள் நிறைந்திருப்பதைக் கண்டு, அவர்களை எப்படி அழிப்பது என்ற எண்ணத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.(4) நீண்ட நேரம் சிந்தித்த அந்த ராவணன், தைரியத்தைத் திரட்டிக் கொண்டு, ஆலோசனையை வெளிப்படுத்தும் கண்களுடன் ராகவனையும், ஹரியூதபர்களையும் {குரங்குக் குழுத் தலைவர்களையும்} கண்டான்.(5)