Crow and Palm Tree syndrome | Aranya-Kanda-Sarga-41 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு மாரீசனின் அறிவுரைகளும், எச்சரிக்கைகளும்...
இராவணன் இவ்வாறு ராஜாவாகப் பிரதிகூலமாக {சாதகமில்லாமல்} ஆணையிட்டதும், {மாரீசன்} ராக்ஷசாதிபனிடம் {பின்வரும்} கடும் வாக்கியங்களைத் தயக்கமின்றி பேசினான்:(1) "நிசாசரா {இரவுலாவியே}, புத்திரர்களுடனும், ராஜ்ஜியத்துடனும், அமைச்சர்களுடனும் நாசத்தை அடைவதற்குரிய இந்தப் பாப கர்மத்தை உனக்குக் கற்பித்தவன் எவன்?(2) இராஜாவே, உன் சுகத்தில் ஆனந்திக்காத பாபி எவன்? இந்த மிருத்யு துவாரமே {மரண வாயிலே} உனக்கு உபாயமெனக் கற்பித்தவன் எவன்?(3) நிசாசரா, வீரியமற்ற உன் சத்ருக்களில் எவரோ, நீ பலமிக்க ஒருவனுடன் மோதி நாசமடைய வேண்டுமென விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.(4) நிசாரசா, எவன் உன் செயலாலேயே நீ நாசமடைய வேண்டுமென விரும்புகிறானோ அவன் ஹித புத்தி {நற்புத்தி} இல்லாத க்ஷுத்ரனாவான் {இழிந்தவனாவான்}. எவன் இதை உனக்கு உபதேசித்தான்?(5)