Consolation of Trijata | Yuddha-Kanda-Sarga-048 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சோகத்தில் மூழ்கிய சீதை; அவளுக்கு நம்பிக்கை அளித்து மீண்டும் அசோக வனிகைக்கு இட்டுச் சென்ற திரிஜடை...
சீதை, தன் பர்த்தாவையும் {ராமனையும்}, மஹாபலவானான லக்ஷ்மணனையும் கொல்லப்பட்டவர்களாகக் கண்டு சோகத்தில் மூழ்கி கருணைக்குரிய வகையில் {பின்வருமாறு} அழுது புலம்பினாள்[1]:(1) “எந்த லக்ஷணிகர்கள் {லக்ஷணம் தெரிந்தவர்கள்}, என்னை புத்ரிணீ என்றும், அவிதவேதி என்றும் {புத்திர பாக்கியமுள்ளவள் என்றும், விதவையாகாத நித்யசுமங்கலி என்றும்} சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும், ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(2) யாவர் என்னை யஜ்ஞங்கள் செய்பவரின் மஹிஷி {பட்டத்து ராணி} என்றும், சாஸ்திரங்களை அறிந்தவரின் பத்தினி {மனைவி} என்றும் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(3) யாவர் என்னை பர்த்தாவால் {கணவனால்} பூஜிக்கப்படுபவள் என்றும், வீர பார்த்திபனின் பத்தினி என்றும் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(4) கார்தாந்திகர்களான எந்த துவிஜர்கள் {சோதிடர்களான இருபிறப்பாளர்கள் யாவர்} என்னை சுபமானவள் என்று உறுதியாகச் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(5)

