Saturday 22 October 2022

நயனம் இமைப்பிலன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 086 (25)

He did not blink his eyes | Ayodhya-Kanda-Sarga-086 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலக்ஷ்மணனுடன் இரவில் பேசியதையும், சீதையுடன் ராமலக்ஷ்மணர்கள் ஆற்றைக் கடந்தையும் பரதனிடம் நினைவுகூர்ந்த குஹன்...

Rama and Lakshmana matted their hair with the latex of a banyan tree

அதன்பின்னர், கஹனகோசரனான {காட்டில் திரிபவனான} குஹன், அளவிடற்கரிய மகிமை பொருந்திய பரதனிடம், மஹாத்மாவான லக்ஷ்மணனின் நற்குணங்களைக் குறித்து {பின்வருமாறு} சொன்னான்[1]:(1) "நற்குணங்களைக் கொண்டவனும், சரங்களையும், வில்லையும், வாளையும் ஏந்தியவனும், தன்னுடன் பிறந்தவனின் பாதுகாப்பிற்காக அதிக விழிப்புடன் இருந்தவனுமான அந்த லக்ஷ்மணனிடம், நான் {பின்வருமாறு} பேசினேன்:(2) "தாதா {ஐயா}, ராகவநந்தனா, இதோ உனக்காக சுகமான சயனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நிம்மதியாகவும், சுகமாகவும் இதில் நீ ஓய்ந்திருப்பாயாக.(3) தர்மாத்மாவே,  இந்த ஜனங்கள் அனைவரும் துக்கங்களுக்குப் பழக்கப்பட்டவர்கள். நீயோ சுகத்திற்குப் பழக்கப்பட்டவன். இவனை {ராமனைப்} பாதுகாப்பதற்காக நாங்கள் விழிப்புடன் இருப்போம்.(4) 

[1] அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
வில்லை ஊன்றிய கையோடும் வெய்து உயிர்ப்போடும் வீரன்
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்

- கம்பராமாயணம் 2344ம் பாடல்

பொருள்: "மலையை அடக்கும் உயர்ந்த தோள்களைக் கொண்டவனே {பரதா}, இருளை அடக்கி அமைந்த மேனி அழகனும் {கரிய ராமனும்}, அவளும் {சீதையும்} உறங்க, அந்த வீரன் {லக்ஷ்மணன்}, வில்லை ஊன்றிய கையோடும், வெப்பப் பெருமூச்சுடனும், கண்கள் நீர் சொரிய, இரவின் எல்லையைக் காணுமளவும் கண்களை இமைக்காமல் இருந்தான்" என்றான் {குகன்}.

இப்புவியில் ராமனைவிட எனக்குப் பிரியமானவன் வேறு எவனுமில்லை. மேலும் நீ நிம்மதியிழக்க வேண்டாம். உன் முன்னிலையில் நான் இந்த சத்திய வாக்கியத்தைச் சொல்கிறேன்.(5) இப்புவியில் மஹத்தான புகழையும், பெருந்தர்மத்தையும், கலப்பில்லா அர்த்தத்தையும் {செல்வத்தையும்}, காமத்தையும் {இன்பத்தையும்} இவனது {ராமனின்} அருளால் நான் அடைய விரும்புகிறேன்.(6) சீதையுடன் சயனங் கொண்டிருக்கும் பிரியசகாவான ராமனை என் ஞாதிகளுடனும் {உறவினர்களுடனும்}, கையில் தனுசுடனும் {வில்லுடனும்} நான் காப்பேன்.(7) சதா வனத்தில் திரியும் எனக்குத் தெரியாதது ஏதுமில்லை. யுத்தத்தில் சதுரங்க பலத்தையும் {நால்வகை படைகளையும்} பொறுத்து எதிர்க்க எங்களால் முடியும்" {என்றேன்}.(8)

நாங்கள் இவ்வாறு சொன்னதும், தர்மத்தை மட்டுமே உணரும் மஹாத்மாவான லக்ஷ்மணன், நீதியை அனுசரித்து எங்கள் அனைவரிடமும் {பின்வருமாறு} பேசினான்:(9) "தாசரதர் {ராமர்}, சீதையுடன் பூமியில் சயனித்திருக்கையில், நித்திரையையோ {உறக்கத்தையோ}, ஜீவிதத்தையோ {வாழ்வையோ}, சுகங்களையோ என்னால் எவ்வாறு பெற முடியும்?(10) குஹனே, தேவாசுரர்கள் அனைவராலும் சகித்துக் கொள்ள முடியாதவர் எவரோ, அவர் சீதையுடன் புல்லில் கிடப்பதைப் பார்.(11) இவர், விதவிதமான பரிசிரமங்களை எதிர்கொண்டு மஹத்தான தபசு செய்த தசரதருக்கு ஒப்பான லக்ஷணங்களுடன் பெறப்பட்ட ஏகபுத்திரர் ஆவார்.(12) இவர் நாடு கடத்தப்பட்டதால் அந்த ராஜா {தசரதர்} நீண்ட காலம் பிழைத்திருக்க மாட்டார். விரைவில் நிச்சயம் இந்த மேதினி  விதவையாகப் போகிறாள்.(13) பேரொலியுடன் அலறிய ஸ்திரீகள் களைத்துப் போய் அழுவதை நிறுத்தியிருப்பார்கள். இப்போது அந்த ராஜநிவேசனம் நிச்சயம் நிர்கோஷமாகவே {ஒலியின்றியே} கிடக்கும்.(14) 

கௌசல்யை, ராஜா {தசரதர்}, என்னைப் பெற்றவள் {சுமித்திரை} ஆகியோர் அனைவரும் இவ்விரவில் பிழைத்திருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.(15) சத்ருக்னனைப் பார்த்துக்கொண்டாவது என் மாதா {சுமித்திரை} ஜீவித்திருக்கலாம். ஆனால் இந்த வீரரைப் பெற்றவளான கௌசல்யை துக்கத்தால் மாண்டிருப்பாள்.(16) விஞ்சியது விஞ்சியும், ராஜ்ஜியத்தில் ராமனை நிறுவாமல், தன் மனோரதம் நிறைவேறாமலேயே என் பிதா அழியப் போகிறார்.(17) பூமிபதியான எங்கள் பிதா {தந்தை தசரதர்} இறக்கும்போது, சர்வ பிரேத காரியங்களையும் {ஈமச் சடங்குகள் அனைத்தையும்} அந்தந்த காலத்தில் சரியாகச் செய்பவர்களே சித்தார்த்தர்கள் {பரதனும், சத்ருக்னனுமே கொடுத்துவைத்தவர்கள்}.(18) 

ரம்மியமான நாற்சந்திகளுடன் கூடியதும், நன்கு பிரிக்கப்பட்ட மஹாபாதைகளை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதும், சர்வ ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மாடமாளிகைகள் நிறைந்ததும்,{19} கஜங்களும், அஷ்வங்களும், ரதங்களும் {யானைகளும், குதிரைகளும், தேர்களும் நெருக்கமாக} அடர்ந்திருப்பதும், இசைக் கருவிகளின் முழக்கங்களை எதிரொலிப்பதும், மங்கலங்கள் அனைத்தும் சம்பூர்ணமாக நிறைந்திருப்பதும், மகிழ்ச்சியான புஷ்டியான ஜன குலங்களை {மக்கள் கூட்டத்தைக்} கொண்டதும்,{20} உத்யானவனங்களாலும், தோட்டங்களாலும் சூழப்பட்டதும், சமூக உற்சவங்களால் {விழாக்களால்} பிரகாசிப்பதுமான என் பிதாவின் ராஜதானியில் {தலைநகரான அயோத்தியில்} அவர்கள் {பரதனும், சத்ருக்னனும்} மகிழ்ச்சியாக வசிக்கட்டும்.(19-21) வனவாசம் நிறைவடைந்ததும், சத்தியப்ரதிஜ்ஞையில் உறுதியாக இருக்கும் இவருடன் {ராமருடன்} நாங்கள் நலமாக அயோத்திக்குள் பிரவேசிப்போமா?" {என்றான் லக்ஷ்மணன்}[2].(22)

[2] இந்த சர்க்கத்தின் 3ம் சுலோகம் முதல் இந்த 22ம் சுலோகம் வரை தானும், லக்ஷ்மணன் பேசியதாக குஹன் சொல்லும் செய்திகள், அயோத்தியா காண்டம் 51ம் சர்க்கம் 2 முதல் 25ம் சுலோகம் வரையுள்ள பகுதியில் ஏற்கனவே நேரடியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே சொன்னவற்றில் சில இங்கே விடுபட்டிருக்கின்றன. 

மஹாத்மாவான அந்த ராஜபுத்திரன் {இளவரசனான லக்ஷ்மணன்}, இவ்வாறு புலம்பித் தவித்து நின்றபோதே அந்த இரவும் கழிந்தது.(23) விமலனான {மாசற்றவனான} சூரியன் உதித்ததும், அங்கே {கங்கைக்கரையில்} தங்கள் தலைமுடியை ஜடைகளாக்கிய அவர்கள் இருவரையும் {ராமனையும், லக்ஷ்மணனையும்}  நான் சுகமாக கரையைக் கடக்கச் செய்தேன்.(24) மஹாபலம் கொண்டவர்களும், ஜடாதாரிகளும், மரவுரி உடுத்தியவர்களும், வில்லும், கணைகளும், வாளும் ஏந்தியவர்களுமான அந்தப் பரந்தபர்கள் {பகைவரை அழிப்பவர்களான அவர்கள்} இருவரும், யானைக்கூட்டத்தின் தலைவர்களைப் போல் என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சீதையுடன் சென்றனர்" {என்றான் குஹன்}.(25)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 086ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை