Monday 24 October 2022

செவ்வழி உள்ளத்து அண்ணல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 087 (24)

Master, whose mind set on right path | Ayodhya-Kanda-Sarga-087 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மயங்கி விழுந்த பரதன்; இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் எவ்வாறு தங்கள் நேரத்தைக் கடத்தினர் என்பதை பரதனிடம் சொன்ன குகன்...

Guha showing the place where Rama slept to Bharata

பரதன், கேட்பதற்கு மிகவும் பிரியமற்ற குஹனின் சொற்களைக் கேட்டு, எங்கே அந்த பிரியமற்ற சொற்கள் கேட்கப்பட்டனவோ அங்கேயே தன் மனத்தைக் குவித்து தியானம் செய்தான் {சிந்தித்தான்}.(1) சுகுமாரனும் {மென்மையானவனும்}, பெரும் வலிமை கொண்டவனும், பெருங்கைகளைக் கொண்டவனும், சிங்கத்திற்கு ஒப்பான தோள்களைக் கொண்டவனும், மலர்ந்த தாமரையைப் போன்ற நீண்ட விழிகளைக் கொண்டவனும், அழகிய தோற்றத்தைக் கொண்டவனுமான அந்த இளைஞன் {பரதன்},(2) பெருந்துயரில் ஒரு முஹூர்த்த காலம் பெருமூச்சுவிட்டபடியே இருந்து, தோமரங்களால் {அங்குசங்களால் / மாவெட்டிகளால்} நெஞ்சில் குத்தப்பட்ட துவிபத்தை {யானையைப்} போல சட்டெனத் தரையில் விழுந்தான்.(3) பரதன் மூர்ச்சித்ததைக் கண்ட குஹன், வதன நிறம் குன்றியவனாக {முகம் வெளுத்தவனாக}, நிலநடுக்கத்தில் ஒரு மரம் நடுங்குவதைப் போல அங்கே நடுங்கிக் கொண்டிருந்தான்[1].(4) அருகில் இருந்த சத்ருக்னன், அந்நிலையில் கிடக்கும் பரதனை ஆரத் தழுவிக் கொண்டு, சோகத்தில் மூழ்கிப் புலனுணர்வை இழந்து {மெய்மறந்து} உரக்க அழுதான்.(5)

[1] ஒரு சில பதிப்புகளில் இந்த சுலோகம் விடுபட்டிருக்கிறது.

பர்த்தாவின் {கணவன் தசரதனின்} சோகமுடிவில் ஆறுதலடையாமல் தீனமடைந்தவர்களும், உண்ணாமல் மெலிந்தவர்களுமான பரதனின் மாதாக்கள் அனைவரும் {அவனை நோக்கி} விரைந்து வந்தனர்.(6) அழுதவாறே இருந்த அவர்கள் அனைவரும் தரையில் விழுந்து கிடந்த பரதனைச் சூழ்ந்து கொண்டனர். சோக மனத்துடன் கூடிய கௌசல்யை, குனிந்து அவனை வாரி அணைத்துக் கொண்டாள்.(7) சோகத்தால் கலக்கமடைந்தவளும், பரிதாபத்திற்குரியவளுமான அந்த வத்சலை {பாசமுள்ள கௌசல்யை, பசுவானது}, தன் கன்றை அணைத்துக் கொள்வதைப் போல மார்போடு அணைத்துக் கொண்டு {பின்வருமாறு} பரதனைக் கேட்டாள்:(8) "புத்திரா, உன் சரீரத்தை வியாதிகள் ஏதும் பீடிக்கவில்லை என நான் நம்புகிறேன். இனி இந்த ராஜகுலத்தின் ஜீவிதம் உன் ஆதீனமே {இந்த ராஜகுலம் தழைப்பது உன்னைச் சார்ந்ததே}.(9) புத்திரா, ராமன் தன்னுடன் பிறந்தானுடன் {வனம்} சென்றுவிட்டான். ராஜா தசரதரும் இறந்துவிட்டார். உன்னைப் பார்த்தே நான் ஜீவித்து வருகிறேன். இப்போது நீயே எங்கள் நாதனாக {தலைவனாக / காவலனாக} இருக்கிறாய்.(10) புத்திரா, லக்ஷ்மணனையோ, தன் பாரியையுடன் {சீதையுடன்} வனம் சென்ற என் ஏக புத்திரனையோ {ராமனையோ} குறித்து பிரியமற்ற செய்தி எதையும் நீ கேட்கவில்லை என நம்புகிறேன்" {என்று கேட்டாள்}.(11)

பெரும்புகழ்மிக்கவனான அவன் {பரதன்}, ஒரு முஹூர்த்த காலம் ஓய்ந்த பிறகு, அழுது கொண்டிருந்த கௌசல்யையைத் தேற்றிவிட்டு, குஹனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(12) "குஹனே, என்னுடன் பிறந்தவரும் {ராமரும்}, சீதையும், லக்ஷ்மணனும் ராத்திரியை எங்கே கழித்தனர்? என்ன உண்டனர்? எந்த சயனத்தில் கிடந்தனர்? என்பனவற்றை எனக்குச் சொல்வாயாக" {என்று கேட்டான்}[2].(13)

[2] அவ்வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன
செவ்வழி உள்ளத்து அண்ணல் தென்திசைச் செங் கை கூப்பி
எவ்வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன்
இவ்வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான்.

- கம்பராமாயணம் 2340ம் பாடல்

பொருள்: அவ்வாறே அவனை {குகனை} நோக்கி, அருள் தரும் கடலுக்கு ஒப்பானவனும், நேர் வழியில் செல்லும் உள்ளம் கொண்டவனுமான {பரதன்}, தென் திசையைப் பார்த்து தன் சிவந்த கைகளைக் கூப்பி, "நம் அண்ணன் எங்கே தங்கினான்?" என்றதும், வேடர் வேந்தனான குகன், "இங்கேதான். வீரனே, நானே காட்டுவேன். எழுக" என்றான்.

நிஷாதாதிபதியான அந்த குஹன், தனக்குப் பிரியனும், ஹிதனும், அதிதியுமான {அன்பனும், நண்பனும், விருந்தினனுமான} ராமனுக்கு எவ்விதமான ஏற்பாடுகளைச் செய்தான் என்பதைப் பரதனிடம் மகிழ்ச்சியுடன் சொன்னான்:(14) "உண்பதற்கான பல வகைகளிலான அன்னங்களையும், பக்ஷணங்களையும், விதவிதமான பழங்களையும் ராமனிடம் ஏராளமாகக் கொண்டு வந்தேன்.(15) சத்தியபராக்கிரமனான ராமன் அவை அனைத்தையும் மறுத்தான். அவன் க்ஷத்ர தர்மத்தை நினைத்தே அவற்றை ஏற்கவில்லை.(16) ராஜாவே, அந்த மஹாத்மா {ராமன்}, "சகாவே, நாங்கள் எப்போதும் கொடுக்கவே வேண்டும்; எதையும் ஏற்கக்கூடாது" என்று சொல்லி, எங்களைத் தணித்தான்.(17) பெரும்புகழ்மிக்கவனான அந்த ராகவன் {ராமன்}, லக்ஷ்மணன் கொண்டு வந்த நீரை, சீதையுடன் சேர்ந்து பருகி உபவாசம் இருந்தான்.(18) பிறகு எஞ்சிய ஜலத்தை அந்நேரத்தில் லக்ஷ்மணன் பருகினான். அவர்கள் மூவரும் வாக்கு நியமத்துடன் {பேசாமல் இருந்து} மாலை சந்தியை வழிபட்டனர்.(19)

பிறகு சௌமித்ரி {லக்ஷ்மணன்}, தானே சென்று குச {தர்ப்பைப்} புற்களைக் கொண்டு வந்து, ஒரு சுபமான படுக்கையை அந்த ராகவனுக்காக சீக்கிரம் ஏற்பாடு செய்தான்.(20) இராமனும், சீதையும் அந்தப் படுக்கையில் அமர்ந்தனர். இலக்ஷ்மணன் அவர்களின் பாதங்களைக் கழுவிவிட்டுத் தொலைவாக நகர்ந்து சென்றான்.(21) இதோ இந்த இங்குண மரத்தின் அடியில், இந்தப் புல்லில்தான் அந்த ராத்திரியில் ராமனும், சீதையும் சயனித்திருந்தனர்.(22) பகைவரை தஹிக்கச் செய்பவனான லக்ஷ்மணன், விரல்களுக்குத் தோலுறை அணிந்து கொண்டும், சரங்கள் சம்பூர்ணமான அம்பறாதூணிகள் இரண்டை முதுகில் கட்டிக்கொண்டும், நாணேற்றப்பட்ட மஹத்தான தனுவைத் தரித்துக் கொண்டும் அவ்விரவில் அவனை {ராமனைச்} சுற்றித் தனியாக நடந்து கொண்டிருந்தான் {ராமனைக் காத்து நின்றான்}.(23) உத்தம பாணங்களையும், வில்லையும் தரித்துக் கொண்ட நான் அந்நேரத்தில், களைப்பில் இருந்து விடுபட்டவர்களும், விற்களைத் தரித்தவர்களுமான என் ஞாதிகளுடன் {உறவினர்களுடன்} சேர்ந்து, மகேந்திரனைக் காப்பது போல் {ராமனைக் காத்து} நின்ற லக்ஷ்மணன் இருந்த இடத்தில் நிலைத்தேன்" {என்றான் குஹன்}.(24)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 087ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை