Sunday, 21 August 2022

கௌசல்யையின் வருத்தம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 062 (21)

Kaushalya repents | Ayodhya-Kanda-Sarga-062 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் தவறுக்கு வருந்தி மன்னனைத் தேற்றிய கௌசல்யை; துன்புற்ற தசரதன் உறக்கத்தில் ஆழ்ந்தது...

Kausalya Dasaratha Sumitra

சோகத்தில் பீடிக்கப்பட்ட ராமனின் மாதாவால் {கௌசல்யையால்} இவ்வாறு கோபத்துடன் சொல்லப்பட்ட கடும் வாக்கியங்களைக் கேட்ட ராஜா {தசரதன்} துக்கத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.(1) இவ்வாறு சிந்தித்த  அந்த நிருபன் {மனிதர்களின் தலைவனான தசரதன்}, இந்திரியங்கள் கலங்கியவனாக மோஹமடைந்தான் {பொறிகள் கலங்கி மூர்ச்சித்தான்}. அந்தப் பரந்தபன் {பகைவரை எரிப்பவனான தசரதன்}, நீண்ட நேரத்திற்குப் பிறகே தன் நினைவை அடைந்தான்.(2) 

அவன் {தசரதன்}, தன் நினைவு மீண்டதும், தீர்க்க உஷ்ண {நீண்ட வெப்பப்} பெருமூச்சைவிட்டான். தன் அருகில் நிற்கும் கௌசலையைக் கண்டு மீண்டும் {வருந்தி} சிந்திக்கத் தொடங்கினான்.(3) அவ்வாறு அவன் சிந்தித்த போது, சப்தத்தைக் கொண்டு துளைப்பவனாக {ஒலியைக் கொண்டே குறியை எய்பவனாகப்} பூர்வத்தில் அஞ்ஞானத்தால் {அறியாமையால்} தான் செய்த தீச்செயலை நினைத்தான்.(4) பிரபுவான அந்த மஹாராஜா {தசரதன்}, இந்த சோகத்தாலும், ராமனைக் குறித்த சோகத்தினாலும் பீடிக்கப்பட்டவனாக இரட்டை சோகங்களால் மனம் தளர்ந்தான்.(5)

இந்த சோகங்களால் பீடிக்கப்பட்ட அந்த பூபதி {நிலத்தலைவன் தசரதன்}, மெய்நடுங்கி, தலை கவிழ்ந்து கைக்கூப்பிக் கொண்டு, கௌசல்யையின் அருள் வேண்டி இதைச் சொன்னான்:(6) "கௌசல்யா, உன் அருளை வேண்டியே நான் இந்த அஞ்சலியைச் செய்கிறேன் {கைக்கூப்பிக் கெஞ்சுகிறேன். என்னை மன்னித்துக் கொள்வாயாக}. பிறரிடம் கூட நீ நித்தியம் வாத்சல்யத்துடனும் {பாசத்துடனும்}, அன்புடனும் இருந்து வருகிறாய்.(7) தேவி, தர்மத்தை உள்ளபடியே அறியும் நாரீகளுக்கு {பெண்களுக்கு}, பர்த்தா {கணவன்} குணவானாகவோ, நிர்குணனாகவோ {குணமற்றவனாகவோ} இருந்தாலும், உண்மையில் அவனே அவர்களுக்குப் பிரத்யக்ஷ தைவதமாவான் {கண்கண்ட தெய்வமாவான்}.(8) உலகத்திலுள்ள நன்மை தீமைகளைப் புரிந்து, நித்தியம் தர்மத்தையே நோக்கமாகக் கொண்டிருக்கும் நீ துக்கமடைந்திருந்தாலும், துக்கத்திலிருக்கும் என்னிடம் பிரியமற்ற {விரும்பத்தகாத} சொற்களைப் பேசக்கூடாது" {என்றான் தசரதன்}.(9)

கௌசல்யை, தீனனான ராஜனால் பரிதாபமாகச் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு, வாய்க்காலில் பெருகி ஓடும் புது மழைநீரைப் போலக் கண்ணீர் வடித்தாள்.(10) தாமரை மலர் போலக் கூப்பியிருந்த ராஜனின் கைகளைக் குவித்துத் தன் தலையைப் பற்றிக் கொண்டவள் {கௌசல்யை}, அழுது கொண்டே, பயத்துடன் கூடிய அவசரமான சொற்களைக் குழப்பத்துடன் சொன்னாள்:(11) "தேவா, சிரம்பணிந்து உம்மை யாசிக்கிறேன். பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுகிறேன். என்னைக் கேடு பீடித்தது. என்னிடம் நீர் பொறுமை காக்க வேண்டியதில்லை.(12) வீரரே, போற்றத்தகுந்தவனும், புத்திசாலியுமான கணவனால் எந்தப் பெண் வேண்டப்படுவாளோ, அவளுக்கு இரு உலகங்களும் இல்லை {இம்மையையும், மறுமையையும் இல்லை. இவ்வுலகத்திலுள்ளவர்களும் அவளை நிந்திப்பார்கள், பரலோகத்திலும் அவள் தண்டிக்கப்படுவாள்}.(13) தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, நான் தர்மங்களை அறிவேன். நீர் சத்தியவாதி என்பதையும் அறிவேன். ஆயினும் புத்திரசோகத்தில் தவித்த நான் மொழிதற்கரிய மொழிகளை மொழிந்தேன்.(14) 

சோகம் தைரியத்தை நாசம் செய்யும், சோகம் கேள்வியை {கல்வியை} நாசம் செய்யும், சோகம் அனைத்தையும் நாசம் செய்யும். சோகத்துக்கு இணையான ரிபு {எதிரி} வேறேதும் இல்லை.(15) எதிரியின் கையிலிருந்து விழும் அடியைத் தாங்கிக் கொள்ள முடியும். திடீரென நேரும் சூக்ஷ்ம {சிறு} சோகத்தையுந் தாங்கிக் கொள்ளவே முடியாது.(16) வீரரே, தர்மத்தை அறிந்தவர்களும், சுருதிகளைக் கற்றவர்களும், தர்மார்த்தங்களில் {அறம், பொருள்களில்} உள்ள சிறு ஐயங்களிலும் தெளிவடைந்தவர்களுமான யதிகளுங் கூட சோகத்தால் மனம் பீடிக்கப்படும்போது வழிதவறுகிறார்கள்.(17) இராமன் வனவாசம் சென்று இன்றோடு பஞ்சராத்திரிகள் {ஐந்து இரவுகள்} ஆகின்றன. சோகத்தால் மகிழ்ச்சி அழிந்த எனக்கு, அது பஞ்ச வருஷங்களை {ஐந்து ஆண்டுகளைப்} போன்றது.(18) நான் அவனை {ராமனைக்} குறித்து சிந்திக்கையில், வேகமான நதிகளால் பெருகும் மஹத்தான சமுத்திர நீரைப் போல என் ஹிருதய சோகம் வளர்கிறது {என்றாள் கௌசல்யை}.(19)

கௌசல்யை இந்த சுபச் சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சூரியன் மந்தமடைந்தான் {ஒளிமங்கினான் / மறைந்தான்}; இரவும் ஆனது.(20) இவ்வாறு கௌசல்யா தேவியால் மகிழ்ந்த அந்த நிருபன், சோகத்தைக் கடந்து நித்திரையின் வசமடைந்தான்.(21)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 062ல் உள்ள சுலோகங்கள் : 21

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்