Showing posts with label கிஷ்கிந்தா காண்டம். Show all posts
Showing posts with label கிஷ்கிந்தா காண்டம். Show all posts

Tuesday, 21 November 2023

இலங்கைக்குப் புறப்பட்டது | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 67 (49)

Depart to Lanka | Kishkindha-Kanda-Sarga-67 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமான் அளவற்ற தன் வலிமையை வெளிப்படுத்தி, மஹேந்திர மலைக்குச் சென்றது...

Hanuman about to jump from Mahendra mountain
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு
நூறு யோஜனைகள் கடப்பதற்காக, அகன்று விரிந்த வேகத்துடனே முழுமையாகத் தன்னைப் பெருக்கிக் கொண்ட அந்த மஹாபலவானை {ஹனுமானைக்} கண்ட வானரோத்தமர்கள்,{1} உடனேயே தங்கள் சோகத்தை விட்டுவிட்டு, மகிழ்ச்சியில் மூழ்கியவர்களாக கர்ஜித்தபடியே ஹனூமந்தனைப் போற்றினர்.(1,2) சுற்றிலும் இருந்த அவர்கள், திரிவிக்கிரமச் {மூன்றடியால் உலகளந்த} செயலில் உற்சாகம் அடைந்த பிரஜைகள் நாராயணனை {கண்டதைப்} போல அவனைக் கண்டு, மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.(3) மஹாபலம்வாய்ந்த ஹனுமான், {இவ்வாறு} போற்றப்படுகையில் மகிழ்ச்சியடைந்து, பலம் அதிகரித்தவனாகத் தன் வாலை வேகமாக வளைத்து அடித்தபடியே இன்னும் அளவில் அதிகரித்தான்.(4)

சர்வ வானரபுங்கவர்களாலும் போற்றப்படுகையில், தேஜஸ்ஸில் நிறைந்த அவனது ரூபம் மிதமிஞ்சியதானது.(5) அகல விரிந்த கிரியின் குகையில், சிம்ஹம் எப்படித் துள்ளிக் குதிக்குமோ, அப்படியே இப்போது மாருதனின் ஔரஸ புத்திரன் {வாயு மைந்தன் ஹனுமான்} துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான்.(6) பெரிதும் வளர்ந்த அந்த மதிமிக்கவனின் முகம், பழுக்கக் காய்ந்த சட்டிக்கு ஒப்பாகச் சிவந்து, தூமமில்லாத பாவகனை {புகையற்ற நெருப்பைப்} போல சோபித்துக் கொண்டிருந்தது.(7)

ஹரிக்களின் {குரங்குகளின்} மத்தியில் ஊக்கத்துடன் முனைந்தெழுந்தவனும், பெரிதும் மகிழ்ச்சியடைந்தவனும், மயிர்க்கூச்சம் அடைந்த மேனியுடன் கூடியவனுமான ஹனுமான், முதிர்ந்த ஹரிக்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு {பின்வருமாறு} சொன்னான்:(8) “பர்வத உச்சிகளைத் தகர்ப்பவரும், ஹுதாசனனின் சகாவும் {அக்னியின் நண்பரும்}, அநிலரும் {காற்றாக வீசுபவரும்}, ஒப்பற்ற பலவானுமான வாயு ஆகாசகோசரராவார் {வானத்தில் திரிபவராவார்}.(9) சீக்கிர வேகம் கொண்டவரும், சீக்கிர நடை கொண்டவரும், மஹாத்மாவுமான அந்த மாருதரின் {வாயு தேவனின்} ஔரஸ புத்திரனான நான், தாவிச்செல்வதில் அவருக்குச் சமானனாவேன்.(10)  

விஸ்தீரணமான அம்பரத்தை {வானத்தை} கிழித்துவிடுவதைப் போல நிற்கும் மேரு கிரியைத் தடையில்லாமல் ஆயிரம் முறை வலம் வரும் உற்சாகம் கொண்டவனாக இருக்கிறேன்.(11) என் கைகளின் வேகத்தால் சாகரத்தைக் கலக்கி, பர்வதங்கள், நதிகள், ஹிரதங்கள் {மடுக்கள்} உள்ளிட்ட உலகம் முழுவதையும் {அந்த சாகரத்திலேயே} மூழ்கடிக்கும் உற்சாகம் கொண்டவனாக இருக்கிறேன்.(12) வருணாலயமான சமுத்திரத்தை என் தொடைகளாலும்,  முழங்கால்களின் வேகத்தாலும் மேலெழச் செய்து, மஹாகிராஹங்களையும் {பெரும் முதலைகளையும் / சுறாக்களையும்} மேலெழச் செய்து வெளியே புரளச் செய்வேன்.(13) பன்னகங்களை உண்பவரும், பக்ஷிகளால் {பறவைகளால்} சேவிக்கப்படுபவரும், ஆகாசத்தில் பறப்பவருமான வைனதேயரை {வினதையின் மகன் கருடரை} ஆயிரம் முறை வலம் வரும் சக்தனாக இருக்கிறேன்.(14)

பிலவகரிஷபர்களே {சாவிச் செல்பவர்களில் காளைகளே}, அல்லது உதயத்திலிருந்து {உதய மலையில் இருந்து} புறப்பட்டு, ஜுவலிக்கும் கதிர்களை மாலையாகக் கொண்ட ஆதித்யன் அஸ்தமிக்கும் {அஸ்த மலையை அடையும்} முன் செல்லும் உற்சாகம் கொண்டவனாக இருக்கிறேன். அதன்பிறகும், பூமியைத் தீண்டாமல், மஹத்தான பீம வேகத்துடன் மீண்டும் திரும்பி வரும் உற்சாகம் கொண்டவனாக இருக்கிறேன்.(15,16) ஆகாச கோசரர்கள் {வானில் திரியும்} அனைவரையும் தாண்டிச் செல்லும் உற்சாகம் கொண்டவனாக இருக்கிறேன். சாகரத்தை வற்றச் செய்வேன், மேதினியைப் பிளப்பேன்.(17) பிலவங்கமர்களே, தாண்டிச் செல்லும்போது பர்வதங்களைப் பொடியாகச் செய்வேன். தாண்டிச் செல்லும்போது என் தொடை வேகத்தால் மஹார்ணவத்தையும் {பெருங்கடலையும்} பற்றி இழுப்பேன்.(18)

இப்போது ஆகாயத்தில் தாவப் போகும் என்னை, விதவிதமான புஷ்பங்களுடன் கூடிய கொடிகளும், மரங்களும் எங்குமிருந்து பின்தொடர்ந்து வரப் போகின்றன. அம்பரத்தில் {வானத்தில்} என் பாதை, ஸ்வாதியின் {சுவாதி நட்சத்திரத்தின்} பாதையைப் போல விளங்கும்.(19,20அ) வானரர்களே, கோரமான ஆகாசத்தில் பாய்ந்துச் செல்லும் என்னை, பறந்து செல்லும் சர்வபூதங்களும் பார்க்கப் போகின்றன.(20ஆ,21அ) பிலவங்கமர்களே {தாவிச் செல்பவர்களே}, மஹாமேருவின் பிரதிகாசத்துடன், திவத்தை {சொர்க்கத்தை} மறைத்துச் செல்பவனான என்னை, அம்பரத்தை விழுங்கப் போகிறவனைப் போலக் காண்பீர்கள்.(21ஆ,22அ) சமாஹிதத்துடன் தாவிச் செல்லும்போது மேகங்களைச் சிதறடிக்கவும், பர்வதங்களை நடுங்கச் செய்யவும், சாகரத்தைக் கலக்கவும் விரும்புகிறேன்.(22ஆ,இ) வைனதேயர் {வினதையின் மகனான கருடன்}, அல்லது மாருதரின் {வாயு} சக்தியுடன் தாவப் போகும் என்னை, வேறு எந்தப்பூதமும் பின்தொடர முடியாது. சுபர்ணராஜாவையோ {கருடரையோ}, மஹாபலம் பொருந்திய மாருதரையோ {வாயுவையோ} தவிர, அத்தகைய வேறு எவரையும் நான் பார்க்கவில்லை.(23) கருமேகத்தில் உதிக்கும் மின்னலைப் போல் உடனேயே, நிமிஷாந்தர மாத்திரத்தில் ஆலம்பனமில்லாத அம்பரத்தில் {தாங்கும் ஆதாரம் இல்லாத வானத்தில்} நான் பாயப் போகிறேன்.(24) 

சாகரத்தைத் தாண்டும்போது, மூன்றடிகளையும் எளிதாக எடுத்து வைத்த விஷ்ணுவைப் போலவே என் ரூபமும் தோன்றப்போகிறது.(25) நான் புத்தியால் தெளிவாகப் பார்க்கிறேன். மனமும், சேஷ்டைகளும் {சகுனங்களும்} அவ்வாறே தெரிவிக்கின்றன. நான் வைதேஹியைப் பார்ப்பேன். பிலவங்கமர்களே, மகிழ்ச்சியடைவீராக.(26) மாருதருக்குச் சமமான வேகத்துடனும், கருடனுக்குச் சமமான வேகத்துடனும் பத்தாயிரம் யோஜனைகளையும் என்னால் கடக்க முடியும். இதுவே என் மதியாகும் {எண்ணமாகும்}.(27) எழுந்து சென்றால், வஜ்ரதாரியான வாசவனின் {இந்திரனின்}, அல்லது ஸ்வயம்பூவான பிரம்மனின் கையிலிருக்கும் அம்ருதத்தையும் வேகமாக இங்கே கொண்டு வந்துவிடுவேன்.{28} இலங்கையை அடியோடு பெயர்த்துக் கொண்டும் இங்கே வந்துவிடுவேன். இதுவே என் மதியாகும் {எண்ணமாகும்”, என்றான் ஹனுமான்}.(28,29அ)

அப்போது, அவ்வாறு கர்ஜனை செய்தவனும், அளவில்லா ஒளியைக் கொண்டவனுமான அந்த வானரசிரேஷ்டனிடம் {ஹனுமானிடம்} பெரும் மகிழ்ச்சியடைந்த ஹரயர்கள் {குரங்குகள், வளர்ந்த உடலுடன் கூடிய அவனைக் காண} வியப்புடன் மேலே பார்த்தனர்.(29ஆ,30அ) ஞாதிகளின் {உறவினரின்} சோகத்தை நாசம் செய்யும் அவனது அந்த வசனத்தைக் கேட்ட பிலவகேஷ்வரனான {தாவிச் செல்பவர்களின் தலைவனான} ஜாம்பவான், பெரிதும் மகிழ்ச்சியடைந்தவனாக {பின்வருமாறு} சொன்னான்:(30ஆ,31அ) “வீரா, கேசரிபுத்திரா, வேகவானே, மாருதாத்மஜனே, தாதா {ஐயா}, உன்னால் ஞாதிகளின் எல்லையற்ற சோகம் முற்றிலும் ஒழிந்தது.(31ஆ,32அ) உன் நன்மையை விரும்பி ஒன்றுகூடியிருக்கும் கபிமுக்கியர்கள், சமாஹிதத்துடன் {ஒரு முகமாக} காரியசித்தியின் பொருட்டு மங்கலக் காரியங்களைச் செய்வார்கள்.(32ஆ,33அ) இரிஷிகளின் அருளாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட முதிய கபிக்கள், குருக்கள் {பெரியோர்} ஆகியோரின் அருளாலும், நீ மஹார்ணவத்தை {பெருங்கடலைத்} தாண்டுவாய்.(33ஆ,34அ) வனஓகஸர்கள் அனைவரின் ஜீவன்களும் உன்னையே பின்தொடர்ந்து வருவதால், நீ திரும்பி வரும்வரை ஒற்றைக்காலில் நிற்கப் போகிறோம்” {என்றான் ஜாம்பவான்}.(34ஆ,35அ)
 
அப்போது அந்த ஹரிசார்தூலன் {ஹனுமான்}, அந்த வன ஓகஸர்களிடம் {வனத்தில் வசிப்பவர்களான குரங்குகளிடம் பின்வருமாறு} சொன்னான், “உலகத்தைக் கடக்கும் என் வேகத்தை எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது.(35ஆ,36அ) பெரும்பாறைகளுடனும், நெடும்பாறைகளுடனும் ஒளிரும் மஹேந்திர நகத்தின் {மலையின்} இந்தச் சிகரங்கள், ஸ்திரமானவையாகவும், உயர்ந்தவையாகவும் இருக்கின்றன.(36ஆ,37அ) நானாவித மரங்கள் படர்ந்தவையும், தாதுக்களின் வழியே சோபிப்பவையுமான இந்த மஹேந்திர சிகரங்களில் இருந்து நான் வேகமாகச் செல்லப் போகிறேன்.(37ஆ,38அ) இங்கிருந்து நூறு யோஜனைகளைத் தாண்டப்போகும் என்னுடைய வேகத்தை மஹத்தான இந்த சிகரங்களால் தாங்கமுடியும்” {என்றான் ஹனுமான்}.(38ஆ,39அ)

பிறகு, மாருதனாகவே {வாயுவாகவே} அறியப்பட்டவனும், மாருதாத்மஜனும் {வாயுவின் மகனும்}, அரிந்தமனுமான அந்த ஹரி {பகைவரை அழிக்கும் குரங்குமான அந்த ஹனுமான்}, நகசிரேஷ்டமான {சிறந்த மலையான} மஹேந்திரத்தில் ஏறினான்.{39ஆ,இ} அங்கே {அந்த மஹேந்திர மலையில்}, நானாவித புஷ்பங்களால் நிறைந்ததும்; மிருகங்களால் {மான்களால்} சேவிக்கப்படுவதுமான புல்வெளி இருந்தது; மலர்ந்த கொடிகளும், நித்தியம் புஷ்பங்கள், பழங்களைத் தரும் மரங்களும் இருந்தன;{40} சிம்ஹங்களும், சார்தூலங்களும் {புலிகளும்} திரிந்தன; மத்த மாதங்கங்கள் {மதங்கொண்ட யானைகள்} அதை சேவித்தன; மதங்கொண்ட துவிஜகணங்களின் {பறவைக்கூட்டங்களின்} ஒலி அலைமோதியது; நீரோடைகளும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன.(39-41) விக்கிரமத்தில் மஹேந்திரனுக்கு சமமானவனும், மஹாபலம் வாய்ந்தவனுமான ஹரிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்த ஹனுமான்}, மகத்தான உயரம் கொண்ட மஹேந்திர சிகரத்தில் ஏறினான்.(42) 

அந்த மஹாத்மாவின் கைகளால் பீடிக்கப்பட்ட மஹாசைலம் {பெரும் மலை}, சிம்ஹத்தின் உள்ளங்கால்களால் தாக்கப்பட்ட மத்தமஹாதுவீபத்தை {மதங்கொண்ட பெரும் யானையைப்} போலப் பிளிறியது.(43) பரந்து விரிந்து சிதறிய பாறைக் குவியலால் மிருகங்களும், மாதங்கங்களும் அச்சமடைந்தன; பெரும் மரங்கள் குலுங்கின; {புதிய} நீரருவிகளும் வெளிப்பட்டன[1].(44) அப்போது உயர்ந்த முகடுகளுடன் கூடிய அந்த மஹாகிரியை {பெரும் மலையை}, பானத்தில் {குடியில்} ஈடுபட்டு வெறி கொண்ட எண்ணற்ற கந்தர்வ மிதுனங்களும் {ஜோடிகள்}, பறக்கும் பறவைகளும், வித்யாதரகணங்களும் முற்றிலும் கைவிட்டன. உரகங்கள் {பாம்புகள்} ஓடி ஒளிந்தன. சைல சிருங்கங்களில் இருந்து பாறைகள் விழுந்தன.(45,46) அப்போது, அந்த தரணீதரம் {மஹேந்திர மலை}, பெருமூச்சுவிட்டபடியே பாதி அளவு வெளியே வந்த புஜகங்களினால் {பாம்புகளினால்}, பதாகைகளுடன் கூடியதைப் போலப் பிரகாசித்தது.(47) அச்சத்தில் கலங்கிய ரிஷிகளாலும் கைவிடப்பட்டபோது, அந்த உயர்ந்த மலையானது,  மஹத்தான காந்தாரத்தில் {ஆழமான காட்டில்} வாட்டமுறும் வழிப்போக்கனைப் போலத் தெரிந்தது.(48) 

[1] பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின்
நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான்
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான்

- கம்பராமாயணம் 4738ம் பாடல், மயேந்திரப் படலம்

பொருள்: திறந்த வாயையுடைய ஆண்சிங்கங்கள் வாழ்கின்றதும், பரந்துள்ளதுமான {அந்த மகேந்திர} மலை முழுவதும் {அனுமனின் பாரத்தால்} மூழ்கவும், வரிசையாய்த் தோன்றும் சிதைந்த இடங்களையுடைய சிகரங்கள் பலவும் நெரிந்து பொடியாக, நஞ்சைக் கக்குகின்ற வாயையுடைய பாம்பினைப் போன்ற வாலைச் சுற்றிக் கொண்டு {பெரும்வடிவத்தில்} நின்றான். {திருமாலான} பெரிய ஆமையின் முதுகில் தோன்றிய மந்தர மலையைப் போலத் தெரிந்தான்.

வேகவானும், பரவீரஹந்தனும் {பகை வீரர்களைக் கொல்பவனும்}, மனஸ்வியும் {மனக்கட்டுப்பாடு கொண்டவனும்}, மஹானுபாவனுமான {பெருந்திறன்மிக்கவனுமான} அந்த ஹரிபிரவீரன் {ஹனுமான்}, மனத்தை திடப்படுத்திக் கொண்டு, வேகத்தில் ஆத்மாவை ஒருமுகப்படுத்தி, மனத்தால் லங்கையை அடைந்தவனானான்.(49)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 67ல் உள்ள சுலோகங்கள்: 49

*******கிஷ்கிந்தா காண்டம் முற்றும்*******

Previous | Sanskrit | English | Next

Monday, 20 November 2023

ஹனுமான் மகிமை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 66 (38)

Hanuman’s glory | Kishkindha-Kanda-Sarga-66 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: காலத்தைச் சொல்லி, ஹனுமானின் மஹிமையை நினைவூட்டிய ஜாம்பவான்...

Lord Hanuman and Jambavan
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு

ஜாம்பவான், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமென அநேகருடன் கூடிய ஹரிவாஹினி மனச்சோர்வடைந்திருப்பதைக் கண்டுவிட்டு ஹனுமந்தனிடம் இதைச் சொன்னான்:(1) “வானரலோகத்தின் வீரா, சர்வசாஸ்திரவிதாம்வரா {அனைத்து சாஸ்திர வித்தகர்களில் சிறந்தவனே}, ஹனுமனே, மௌனமாகத் தனிமையை ஆசரித்தவனாக ஏன் பேசாதிருக்கிறாய்?(2) ஹனுமனே, தேஜஸ்ஸிலும், பலத்திலும் ஹரிராஜா சுக்ரீவனுக்கும், ராமலக்ஷ்மணர்களுக்கும் சமமானவனாக நீ இருக்கிறாய்.(3) 

அரிஷ்டநேமியின் {கசியபரின்} புத்திரனும், சர்வ பக்ஷிகளிலும் உத்தமனும், வைனதேயனும் {வினதையின் மகனும்}, மஹாபலவானும், புகழ்பெற்றவனுமான கருத்மானை {கருடனைப்} போன்றவன் நீ.(4) மஹாபலவானும், மஹாவேகம் கொண்டவனும், பெரும்புகழ்பெற்றவனுமான அந்த பக்ஷி {கருடன்}, சாகரத்தில் இருந்து புஜகங்களை {பாம்புகளைத்} தூக்கிச் செல்வதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.(5) அவனது சிறகுகளுக்கு என்ன பலமோ, அவ்வளவு பலம் உன் புஜங்களுக்கு {தோள்களுக்கு} இருக்கிறது. உன் விக்கிரமமும், வேகமும் அவனைக் காட்டிலும் குறைந்தவையல்ல.(6) ஹரிசத்தமா {குரங்குகளில் முதன்மையானவனே}, பலம், புத்தி, தேஜஸ், நல்லியல்பு ஆகியவற்றில் சர்வபூதங்களிலும் {உயிரினங்கள் அனைத்திலும்} நீ விசிஷ்டனாவாய் {மேன்மையான குணம் படைத்தவனாவாய்}.(7) 

அப்சரஸ்களில் சிறந்தவளும், புகழ்பெற்றவளுமான புஞ்சிகஸ்தலை என்ற அந்த அப்சரஸே, ஹரியான {அந்தப் புஞ்சிகஸ்தலையே, குரங்கான} கேசரியின் பத்தினி அஞ்சனை என்று அறியப்படுகிறாள்.(8) தாதா {ஐயா}, ரூபத்தில் ஒப்பற்றவளென மூவுலகங்களிலும் புகழ்பெற்றவள், ஒரு சாபத்தால் புவியில் காமரூபிணியாக கபித்வத்தை {விரும்பிய வடிவை ஏற்பவளாகக் குரங்குத் தன்மையை} அடைந்தாள்.(9) 

வானரேந்திரனும், மஹாத்மாவுமான குஞ்சரனின் பெண்ணானவள் {அஞ்சனை}, ரூப யௌவனசாலினியாக {வடிவில் இளமையில் மிளிர்ந்த} ஒரு காலத்தில், மானுஷ வடிவை ஏற்று, விசித்திர மாலைகளையும், ஆபரணங்களையும், பட்டாடைகளையும் தரித்துக் கொண்டு, மழைக்கால மேகத்தின் ஒளியுடன், பர்வத உச்சியில் உலவிக் கொண்டிருந்தாள்.(10,11) பர்வதத்தின் உச்சியில் இருந்தபோது, விசாலாக்ஷியான {நீள்விழியாளான} அவளது சிவப்பு தலைப்புடைய சுபமான மஞ்சள் வஸ்திரத்தை மாருதன் {வாயு தேவன்} மெல்ல அபகரித்தான்.(12) அப்போது அவன் {வாயு தேவன்}, அவளுடைய உருண்டு திரண்ட தொடைகளையும், நல்ல விகிதங்களில் கட்டமைந்து ஒன்றோடொன்று சேர்ந்த பருத்த ஸ்தனங்களையும், அழகிய முகத்தையும் கண்டான்.(13) அகன்று நீண்ட நிதம்பங்களையும், மெல்லிடையையும் கொண்டவளும், புகழ்பெற்றவளும், சர்வ அங்கங்களும் சுபமாக அமையப்பெற்றவளுமான அவளை {அஞ்சனையைக்} கண்ட பவனன் {வாயு தேவன்}, காமத்தில் மோஹித்தான் {ஆசையில் மதிமயங்கிப் போனான்}.(14) அநிந்தையான {நிந்திக்கத்தகாதவளான} அவளிடம் ஆத்மாவைத் தொலைத்த அந்த மாருதன், அனைத்து அங்கங்களிலும் நேர்ந்த மன்மத அவஸ்தையால், தன் நீண்ட கரங்கள் இரண்டைக் கொண்டும் அவளைத் தழுவினான்.(15)

நன்னடையுடையவளான அவள், இதனால் கலக்கமடைந்து, “இந்த ஏகபத்னி விரதையை நாசம் செய்ய விரும்புகிறவன் எவன்?” என்ற வாக்கியத்தைச் சொன்னாள்.(16)

அஞ்சனையின் சொற்களைக் கேட்ட மாருதன், மறுமொழியாக, “ஸுஷ்ரோணியே {நல்லிடையாளே}, நான் ஹிம்சிக்கமாட்டேன். உன் மனத்தில் பயம் வேண்டியதில்லை.(17) உன்னதமானவளே, எதன் மூலம் உன்னைத் தழுவி மனத்தால் நுழைந்தேனோ, அதனால் உனக்கு வீரியவானும், புத்திசம்பன்னனுமான புத்திரன் {வீரம் மிக்கவனும், புத்தி நிறைந்தவனுமான மகன்} உண்டாவான்.(18) மஹாசத்வனும் {நற்குணமிக்கவனும்}, மஹாதேஜஸ்வியுமான அந்த மஹாபலவான், பராக்கிரமத்திலும், தாவிக் குதிப்பதிலும் எனக்குச் சமமானவனாக இருப்பான்” என்றான் {வாயு தேவன்}.(19)

மஹாபாஹுவே, மஹாகபியே, இவ்வாறு சொல்லப்பட்டதும், உன் ஜனனி {உன்னைப் பெற்றவள்} மகிழ்ச்சியடைந்தாள். பிலவகரிஷபா {தாவிச் செல்பவர்களில் காளையே}, பிறகு, உன்னை ஒரு குகையில் நல்ல முறையில் பெறாமல் பெற்றாள்[1].(20) அதன் பிறகு, பாலனான நீ, மஹாவனத்தில் அப்போது உதித்த சூரியனைக் கண்டு, பழம் என்று நினைத்து, குதித்து திவத்தில் {வானத்தில்} எழுந்தாய்.(21) மஹாகபியே, முன்னூறு யோஜனைகள் சென்றபிறகு, அவன் {சூரியன்} தனது தேஜஸ்ஸால் {உன்னைத்} தள்ளினாலும் நீ மனச்சோர்வு அடைந்தாயில்லை.(22) மஹாகபியே, துரிதமாக அந்தரீக்ஷத்தை {வானத்தை / சொர்க்கத்தை} நெருங்கியதும், உன்னிடம் கோபமடைந்த இந்திரன், தன் தேஜஸ்ஸால் வஜ்ரத்தை உன் மீது ஏவினான்.(23) அப்போது, சைல உச்சியில் உள்ள சிகரத்தில் விழுந்து, இடது பக்க கன்னத்தின் எலும்பு உடைந்தது. அதன் பிறகே {இடது கன்னம் உடைந்தவன் என்ற பொருளில்} ஹனுமான் என்ற பெயரில் நீ அழைக்கப்படுகிறாய்.(24) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், “ப்ரஜஜ்ஞே” என்ற இந்த சொல்லுக்கு “கருவழி பெறாமல் மாயம்போலப் பெற்றாள்” என்ற பொருள் அடைப்புக்குறிக்குள் தரப்படுகிறது.

பிறகு, கந்தவாஹனும் {மணத்தைச் சுமந்து செல்பவனும்}, பிரபஞ்சனனுமான {மரங்களை முறிப்பவனுமான} வாயு, உன்னை சிதைந்தவனாக தானே கண்டு, பெரும் குரோதமடைந்து மூவுலகங்களிலும் வீசாதிருந்தான்.(25) மூவுலகங்களும் அதிர்ச்சியடைந்தது; புவனேஷ்வரர்களான சர்வ ஸுரர்களும் கலக்கமடைந்தனர். மாருதனின் கோபத்தை  தணிக்கத் தொடங்கினர்.(26) சமரில் சித்திய விக்கிரமா {போரில் உண்மையான வீரம் கொண்டவனே}, தாதா {ஐயா}, பவனன் {வாயு} அமைதியடைந்ததும், எந்த சஸ்திரத்தாலும் {ஆயுதங்களால்} அழியாத வரத்தை பிரம்மன் உனக்கு தத்தம் செய்தான்.(27) பிரபுவே, சஹஸ்ரநேத்திரன் {ஆயிரங்கண்களைக் கொண்ட இந்திரன்} வஜ்ரத்தை ஏவியும், நீ காயமடையாததைக் கண்டு, உனக்கான ஆத்ம பிரீதியுடன், “இஷ்டமரணம் {தன் விருப்பப்படி மரணம் நேரட்டும்}” என்ற உத்தம வரத்தை உனக்கு தத்தம் செய்தான்.(28,29அ) பீமவிக்கிரமா, கேசரியின் க்ஷேத்திரஜபுத்திரனும், மாருதனின் ஔரஸபுத்திரனுமான நீ[2], தேஜஸ்ஸில் அவனுக்கு சமமானவனாக இருக்கிறாய். வத்ஸா {குழந்தாய்}, வாயுவின் மகனான நீ, தாண்டுவதிலும் அவனுக்கு சமமானவனே.(29ஆ,30)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் வரும் அடிக்குறிப்பின் சுருக்கம் பின்வருமாறு, “க்ஷேத்ரஜன், தன் சொந்த மகன். ஔரஸன், தன் மனைவியிடம் வேறு அமானுஷ்ய சக்திகளால் பெறப்பட்ட மகன்.  நியோகம் என்பது தன் மனைவியிடம், வேறு மேன்மையான மனிதர்கள் மூலம் மகனைப் பெற்றுக் கொள்ளுதல். கிருத்ரிமம் என்பது தற்காலத்து குளோனின், டெஸ்ட்யூப் போன்ற முறைகளில் செயற்கை முறையில் பெற்றுக் கொள்ளுதல்”.

இப்போது நாம் {நான்} பிராணன்கள் போனவராக இருக்கிறோம். இப்போது எங்களில் திறமையும், விக்கிரமம் நிறைந்த மற்றொரு கபிராஜாவாக {குரங்குகளின் மன்னனாக} நீயே இருக்கிறாய்.(31) தாதா, திருவிக்கிரமரின் {மூன்றடியில் உலகளந்த வாமனரின்} காலத்தில், சைலங்கள், வனங்கள், கானகங்களுடன் கூடிய பிருத்வியை நான் மூவேழு முறை பிரதக்ஷிணை {இருபத்தோரு முறை வலம் வந்திருக்கிறேன்} செய்திருக்கிறேன்.(32) அப்போது அவ்வாறான தேவசாசனத்தின்படி, அம்ருதம் கடைவதற்கான ஔஷதங்களை நாம் திரட்டினோம். அப்போது எமக்கு மஹத்தான பலம் இருந்தது.(33) இப்போது விருத்தனான {கிழவனாக இருக்கும்} எனக்குப் பராக்கிரமம் முற்றிலும் குறைந்துவிட்டது. தற்போதைய காலத்தில் நீயே எங்களில் சர்வகுணங்களுடன் கூடியவனாக இருக்கிறாய்.(34) 

எனவே, விக்கிராந்தா, வளர்ந்து நிற்பாயாக. பிலவதர்களில் {தாவிச் செல்பவர்களில்} உத்தமன் நீயே. இந்த சர்வவானரவாஹினியும் {வானரப்படை மொத்தமும்} உன் வீரியத்தைக் காண விரும்புகிறது.(35) ஹரிசார்தூலா {குரங்குகளில் சிங்கம் போன்றவனே}, ஹனுமானே, எழுவாயாக. மஹார்ணவத்தை {பெருங்கடலைத்} தாண்டுவாயாக. உன் கதி எதுவோ, அதுவே சர்வபூதங்களுக்கும் மேன்மையானதாகும் {மேன்மையான கதியாகும்}.(36) ஹனுமானே, ஹரயர்கள் அனைவரும் மனம் தளர்ந்திருக்கின்றனர். ஏன் அசட்டையாக இருக்கிறாய்? மஹாவேகம் கொண்ட திரிவிக்கிரம விஷ்ணுவைப் போல நீ தாண்டுவாயாக[3]” {என்றான் ஜாம்பவான்}.(37)

[3] ஏகுமின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர்
ஓகை கொணர்ந்து நம் மன்னையும் இன்னல் குறைவு இல்லாச்
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இக்கடல் தாவும்
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான்.

- கம்பராமாயணம் 4729ம் பாடல், மயேந்திரப்படலம்

பொருள்: “நீர் இக்கடலைத் தாண்டிச் சென்று மீள்வதற்குரிய வேகத்தைப் பெற்றிருக்கிறீர். விரைந்து செல்வீராக. அவ்வாறு சென்று எங்களுக்கு உயிரைக் கொடுத்துப் பெரும் புகழை அடைவீராக. உமது தலைவனாக ராமனையும், {சீதை குறித்த} செய்தி கொண்டு வந்து, இன்னல் குறையாத துன்ப சாகரத்திலிருந்து முற்றும் கடந்து கரையேறச் செய்வீராக” என்று கூறி பிரம்மனின் மகனான ஜாம்பவான் {அனுமனைத்} தூண்டிவிட்டான்.

பிறகு, கபிக்களில் ரிஷபனால் {ஜாம்பவானால்} தூண்டப்பட்டவனும், புகழ்பெற்றவனும், வேகம் நிறைந்தவனும், பவனாத்மஜனுமான கபி {வாயுவின் மகனுமான ஹனுமான்}, அந்த ஹரிவீரவாஹினி பெரிதும் மகிழ்ச்சியடையும் வகையில் தன் ரூபத்தை மஹத்தானதாக்கினான்.(38)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 66ல் உள்ள சுலோகங்கள்: 38

Previous | Sanskrit | English | Next

Saturday, 18 November 2023

ஹனுமானை நெருங்கிய ஜாம்பவான் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 65 (35)

Jambavan getting near Hanuman | Kishkindha-Kanda-Sarga-65 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் தாண்டக்கூடிய தொலைவை அறிவித்தது; கடலைத் தாண்ட அங்கதனுக்குப் பதில் ஹனுமானை அனுப்ப வேண்டுமெனத் தீர்மானித்த ஜாம்பவான்...

Hanuman and Jambavan
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு

அப்போது, அங்கதனின் சொற்களைக் கேட்ட கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன், மைந்தன், துவிவிதன், சுஷேணன், ஜாம்பவான் உள்ளிட்ட அந்த வானரோத்தமர்கள் அனைவரும், கிரமப்படி, அங்கிருந்து தாண்டுவதில் தங்கள் தங்கள் திறனைச் சொன்னார்கள்.(1,2)

அப்போது, கஜன், “பத்து யோஜனைகள் தாண்டுவேன்” என்றான். கவாக்ஷன், “இருபது யோஜனைகள் கடப்பேன்” என்றான்.(3) பிறகு, சரபன் என்ற வானரன், அந்த வானரர்களிடம், “பிலவங்கமர்களே, முப்பது யோஜனைகள் கடப்பேன்” என்று சொன்னான்.{4} அங்கே ரிஷரபன் என்ற வானரன், “நாற்பது யோஜனைகள் கடப்பேன். இதில் ஐயமில்லை” என்று அந்த வானரர்களிடம் சொன்னான்.{5} மஹாதேஜஸ்வியான கந்தமாதனன், “ஐம்பது யோஜனைகள் கடப்பேன். இதில் ஐயமில்லை” என்றான் வானரர்களிடம்.{6} அங்கே மைந்தன் என்ற வானரன், அந்த வானரர்களிடம், “நான் அறுபது யோஜனைகள் வரை உற்சாகமாகத் தாண்டுவேன்” என்றான்.{7} அப்போது, மஹாதேஜஸ்வியான துவிவிதன், “நான் எழுபது யோஜனைகள் கடப்பேன். சந்தேகமில்லை” என்று அங்கே பதிலளித்தான்.{8} மஹாதேஜஸ்வியும், சத்வவானும் {வலிமைமிக்கவனும்}, கபிசத்தமனுமான {குரங்குகளில் உயர்ந்தவனுமான} சுஷேணன், “என் பராக்கிரமம் எண்பது யோஜனைகள்” என்று பிரதிஜ்ஞை செய்தான்.(4-9)

அப்போது அனைவரிலும் விருத்தனான {முதிர்ந்தவனான} ஜாம்பவான், அவர்கள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, அனைவரையும் பாராட்டிவிட்டு, {பின்வருமாறு} பதிலளித்தான்:(10) “பூர்வத்தில் எமக்கும்[1] கொஞ்சம் கதி பராக்கிரமம் இருந்தது. அத்தகைய நாம், தற்போது வயதின் அக்கரையை அடைந்துவிட்டோம் {வயது வரம்பைக் கடந்துவிட்டோம்}.(11) இஃது இப்படி இருந்தாலும், எந்த அர்த்தத்திற்காக கபிராஜாவும் {குரங்குகளின் மன்னனான சுக்ரீவனும்}, ராமனும் பணியை நிச்சயித்து, இந்தக் காரியத்தைச் செய்ய முடிவெடுத்தார்களோ, அதைப் புறக்கணிப்பது சாத்தியமில்லை[2].(12) தற்போதைய காலத்தில், நாம் எந்த கதியை அடைந்திருக்கிறோமோ, அதைச் சொல்கிறோம் {கேட்பீராக}. தொண்ணூறு யோஜனைகள் கடப்போம். சந்தேகமில்லை” {என்றான் ஜாம்பவான்}.(13)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “எமக்கும்” என்ற இந்தச் சொல்லின் பொருள், “எனக்கும்” என்பதாகும். இங்கே “நாம்”, “எம்” போன்றவை அரசப் பயன்பாட்டு வகையிலான சொற்களாகும்” என்றிருக்கிறது. எனினும், இந்த சர்க்கத்தில் 11 முதல் 13ம் சுலோகம் வரையே ஜாம்பவான் இந்த அரசவகைச் சொற்களைப் பயன்படுத்துகிறான்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே ஜாம்பவந்தன், ராவணனின் லங்கைக்குச் செல்வதைத் தவிர்க்கும் குரங்குகளை எச்சரிக்கிறான். சுக்ரீவன், இதே குரங்குகளைத் திசைகள் அனைத்திலும் அனுப்பியபோது, “நீங்கள் தடையில்லா கதியைக் கொண்டவர்கள், உங்கள் திறன்களுக்கு எல்லையே இல்லை” என்றெல்லாம் சொல்லி அனுப்புகிறான். இருப்பினும், இங்கே இந்தக் குரங்குகள் அனைவரும், ‘நூறு யோஜனைகளைத் தாண்டுவதைக் காட்டிலும், தங்கள் திறன் குறைவானது’ என்று சொல்கின்றனர். இது வெறுமனே தாண்டுவதில் உள்ள தயக்கமல்ல; ராவணன் மீதான பயமே அவர்களைத் தடுக்கிறது. எனவே, இங்கே அவர்களில் கிழவனான ஜாம்பவந்தன், “புறக்கணித்தல், அலட்சியம்” முதலிய சொற்களால் அவர்களைக் கண்டிக்கிறான்” என்றிருக்கிறது.

அந்த ஹரிசிரேஷ்டர்கள் அனைவரிடமும், ஜாம்பவான் {பின்வரும்} இதையும் சொன்னான், “என்னுடைய கடக்கும் பராக்கிரமம் இதுவரையே {தொண்ணூறு யோஜனையே} என்பது நிச்சயமல்ல.(14) பூர்வத்தில் வைரோசனன் {மஹாபலி}, யஜ்ஞங்களை கிரமப்படி செய்து கொண்டிருந்தபோது, பிரபுவும், ஸநாதன விஷ்ணுவுமான திரிவிக்கிரமரை {மூன்றடியால் உலகை அளந்த வாமனரை} நான் பிரதக்ஷிணை செய்திருக்கிறேன் {வலம் வந்திருக்கிறேன்}.(15) இப்போது விருத்தனாக {கிழவனாக} இருக்கும் நான், கடப்பதில் மந்தவிக்கிரமனாக இருக்கிறேன். அப்போது யௌவனத்தில் {இளமையில்}, என் பலம் ஒப்புயர்வற்றதாக இருந்தது.(16) தற்காலத்தில் {இந்த வயதில்}, தானாக நான் கடந்து செல்வது இவ்வளவே இப்போது சாத்தியம். இவ்வளவு அந்தக் காரியத்திற்குப் போதாது” {என்றான் ஜாம்பவான்}.(17)

அப்போது மஹாபிராஜ்ஞனான {பேரறிஞனான} அங்கதன், மஹாகபியான {பெருங்குரங்கான}[3] ஜாம்பவந்தனுக்கு மரியாதை செலுத்திய பிறகு, உயர்ந்த அர்த்தத்துடன் கூடிய {பின்வரும்} மறுமொழியைக் கூறினான்:(18) “நான் இந்த மஹத்தான நூறு யோஜனைகளையும் கடப்பேன். திரும்புவதற்கு என்னிடம் சக்தி இருக்கிறதா, இல்லையா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை” {என்றான்}.(19)

[3] 4:59ல் 1ம் அடிக்குறிப்பில் இதே போலவே ஜாம்பவானைக் குரங்கு என்ற பொருளில் குறிப்பிடுவதில் உள்ள முரண்பாடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கே 59 முதல் 63 வரையுள்ள சர்க்கங்களே முரண்பட்ட செய்திகளைக் கொண்டவை என்று தேசிராஜுஹனுமந்தராவ் குறிப்பிடுகிறார். “மஹாகபி {பெருங்குரங்கு}” என்ற இந்தக் குறிப்பு இதோ 65ம் சர்க்கத்தில் வருகிறது. இங்கே இதற்கு சமாதானமாக, தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “கரடியின் இயல்பும், நடத்தையும் கிட்டத்தட்ட மனிதக்குரங்குகளுக்கும், வாலில்லா குரங்குகளுக்கும், ஏன் சாதாரண குரங்குகளுக்கும்கூட இணையாக இருப்பதால், கரடியாக இருந்தாலும், ஜாம்பவான் இங்கே குரங்குகளில் ஒருவனாகவே கருதப்படுகிறான்” என்றிருக்கிறது.

வாக்கியகோவிதனான ஜாம்பவான், அந்த ஹரிசிரேஷ்டனிடம் {குரங்குகளில் சிறந்த அங்கதனிடம், பின்வருமாறு} சொன்னான், “ஹரிரிக்ஷசத்தமா {குரங்குகளிலும், கரடிகளிலும் உயர்ந்தவனே}, கடப்பதில் உன் சக்தி அறிந்ததே.(20) நீ தேவைப்பட்டால் நூறாயிரம் யோஜனைகளைக் கடந்து, திரும்பக்கூடிய சக்தி கொண்டவன். இந்த விதி உசிதமானதல்ல.(21) தாதா {ஐயா}, அனுப்பிவைக்கும் ஸ்வாமியை {தலைவனை}, எவ்வகையிலும் அனுப்பக்கூடாது. பிலவகசத்தமா {தாவிச் செல்பவர்களில் உயர்ந்தவனே}, இந்த ஜனங்கள் அனைவரும் உன்னால் அனுப்பப்படத்தகுந்தவர்கள்.(22) பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, ஸ்வாமி பாவத்தில் நிறுவப்பட்டிருக்கும் நீயே, எங்களின் களத்திரம் {காப்பு / நீயே எங்களால் காக்கப்பட வேண்டியவன்}. ஸ்வாமியே சைனியத்தின் களத்திரம் {காப்பு / தலைவனே படையால் காக்கப்பட வேண்டியவன்}. இதுவே கதியாகும்.(23) தாதா {ஐயா}, அரிந்தமா {பகைவரை அடக்குபவனே}, நீயே இந்தக் காரியத்தின் மூலமாக {வேராக} இருக்கிறாய். எனவே களத்திரவானான {காக்கப்பட வேண்டியவனான} நீ சதா பாதுகாக்கப்பட வேண்டியவன்.(24) 

“அர்த்தத்தின் மூலமானது {நோக்கத்தின் / காரியத்தின் வேரானது} காக்கப்பட வேண்டும்” என்பதே காரிய விதாம் நயம் {காரியம் உணர்ந்தவர்களுக்குத் தகுந்த நீதியாகும்}. மூலம் {வேர்} இருந்தால்தான், பழங்களும், புஷ்பங்களும் விளையும்; சர்வ குணங்களும் சித்தியாகும் {நன்மைகள் அனைத்தும் நடந்தேறும்}.(25) எனவே, சத்தியவிக்கிரமா, பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, {சீதையைத் தேடும்} இந்தக் காரியத்தில் புத்தியும், விக்கிரமமும் நிறைந்த சாதனமாக {கருவியாக} நீயே இருக்கிறாய்.(26) கபிசத்தமா {குரங்குகளில் உயர்ந்தவனே}, எங்களின் குருபுத்திரனாகவும் {மதிப்புக்குரிய வாலியின் மகனாகவும்} , குருவாகவும் {மதிப்பிற்குரியவனாகவும்} நீ இருக்கிறாய். உன்னை ஆசரித்தால் {சார்ந்திருந்தால்} நாங்கள் அர்த்தத்தை சாதிப்பதில் சமர்த்தராவோம்” {என்றான் ஜாம்பவான்}.(27)

அப்போது மஹாகபியும், வாலியின் மகனுமான அங்கதன், இந்த வாக்கியத்தைச் சொன்னவனும், மஹாபிராஜ்ஞனுமான {பேரறிஞனுமான} ஜாம்பவந்தனுக்கு பதில்வாக்கியமாக {பின்வரும்} மறுமொழியைச் சொன்னான்:(28) “நானோ, வேறு வானரபுங்கவர்களோ கடக்கவில்லை என்றால், நாம் மீண்டும் இந்தப் பிராயோபவேசன {பட்டினி கிடந்து உயிர் துறக்கும்} காரியத்திலேயே ஈடுபடவேண்டும்.(29) மதிமிக்க அந்த ஹரிபதியின் சந்தேசத்தை {குரங்குகளின் தலைவரான சுக்ரீவரின் கட்டளையை} நிறைவேற்றாமல், அங்கே {கிஷ்கிந்தைக்குச்} சென்றாலும், பிராணன்களின் பாதுகாப்பைப் பார்க்க முடியவில்லை.(30) அந்த ஹரியேஷ்வரர் {குரங்குகளின் தலைவனான சுக்ரீவர்}, அருளிலும், கோபத்திலும் மிதம் மிஞ்சியவராவார். அவரது சந்தேசத்தை {கட்டளையை} மீறிச் செல்வதால் நாசமே விளையும்.(31) அந்தக் காரியத்தின் கதி அதுவே; அப்படியே. எனவே, அர்த்தத்தைக் காண்பவரான {காரியத்தின் முடிவைத் தெரிந்தவரான} நீரே, இது வேறுவகையாகிவிடாதபடி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்” {என்றான் அங்கதன்}.(32)

அங்கதனால் இவ்வாறு பதில் கூறப்பட்டவனும், வீரனும், பிலவகரிஷபனுமான {தாவிச் செல்பவர்களில் காளையுமான / சிறந்தவனுமான} அந்த ஜாம்பவான், அப்போது அங்கதனிடம் உத்தமமான இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(33) “வீரா, உன்னுடைய இந்தக் காரியத்தில் குறையேதும் நேராது. இந்தக் காரியத்தை எவன் சாதிப்பானோ {நிறைவேற்றுவானோ}, அவனை நான் ஊக்கப்படுத்தப் போகிறேன்” {என்றான் ஜாம்பவான்}.(34) 

பிறகு, ஹரிபிரவீரர்களில் மேலானவன் {உயர்வான குரங்கு வீரர்களில் மேலான ஜாம்பவான்}, பிலவதர்களில் வரிஷ்டனை {தாவிச் செல்பவர்களில் ஒப்பற்றவனை} ஏகாந்தத்தில் ஆசரித்து {தனிமையில் அணுகி}, சுகமாக அமர்ந்து கொண்டிருந்த ஹரிபிரவீரனான {குரங்குகளில் உயர்ந்தவீரனான} ஹனுமந்தனை ஊக்கப்படுத்தத் தொடங்கினான்[4].(35)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே ஹனுமான், வெறித்தனமான குரங்களின் கூட்டத்திலிருந்து விலகி, சுகமாக அமர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அனைவரும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது, ஹனுமான் எப்படி வசதியாக அமர முடியும். இது சந்தேகம்? “அவன், வசதியாக அமர்ந்திருந்தாலும், அவனது இதயத்தில் கடலைக் கடப்பது குறித்த எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன” என்று பதிலுக்குச் சொல்லப்படுகிறது. ஒருபுறம், ராமன் தன் தங்க மோதிரத்தை ஹனுமானிடம், இதே குரங்குகளின் முன்னிலையில்தான் கொடுத்தான். மறுபுறம் அங்கதனோ, கடலைக் கடக்கப்போவது யார் என பிற குரங்குகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான். பிறகு குரங்குகளால், இந்த சந்தர்ப்பத்தில், நூறு யோஜனை தூரத்தைத் தாண்ட முடியாததாலல்ல; ராவணனிடம் கொண்ட பயத்தாலேயே ஏதோவொரு வகையில் தப்ப முயல்கின்றன என்பதை முழுமையாக அறிகிறான். ஹனுமான், ராவணனுக்கோ, அவனது கைக்கூலி அரக்கர்களுக்கோ அஞ்சவில்லை; ஆனால், அவன் தனது கடமையைக் குறித்துக் கவலைப்படுகிறான். எவரும் தாண்டுவதற்கு முன்வரவில்லையென்றாலும், துணையில்லாமலேயே அவன் லங்கைக்கு நிச்சயம் செல்ல வேண்டியிருக்கும். இதில் எதுவாக இருந்தாலும், ஹனுமானே போகவேண்டும். இதனால்தான் அந்த “வசதியும்”, “தீர்மானமான முடிவும்”. எனவேதான் அவன் தன் கடமையிலேயே குறியாக இருக்கிறான். ஸ்கந்த புராணத்தில் இருந்து ஒரு சுலோகம், “நீலோ அங்க³தோ³ ஹனூமான் ச ஜாம்ப³வான் அத² கேஸரீ . ஸமுத்³ர தீரம் ஆக³ம்ய ந ஷே²கு꞉ ஸ்பந்தி³தும் பத³ம். ராவணஸ்ய ப³லம் ஜ்ஞாத்வா தீரே நத³ நதீ³ பதே꞉ . ஸ்காந்த³ புராண” என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் இந்த அடிக்குறிப்பில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சுலோகத்தின் பொருள்: “நீலன், அங்கதன், ஹனுமான், ஜாம்பவான், கேசரி ஆகியோர் கடற்கரையை அடைந்ததும், அவர்களால் கால்களை அசைக்கமுடியவில்லை. இராவணனின் வலிமையை அறிந்த அவர்கள், நத, நதிக்கரையில் வீழ்ந்தனர் என்று கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது” என்பதாகும்.

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 65ல் உள்ள சுலோகங்கள்: 35

Previous | Sanskrit | English | Next

Friday, 17 November 2023

அங்கதன் ஆலோசனை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 64 (22)

Counsel of Angadha | Kishkindha-Kanda-Sarga-64 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சமுத்திரத்தைக் கடப்பதற்கான உத்திகளைக் குறித்து சக வானரர்களுடன் விவாதித்த அங்கதன்...

Angada discussing with vanaras

கிருத்ரராஜனால் {கழுகரசனான சம்பாதியால் செய்தி} அறிவிக்கப்பட்டவர்களும், சிம்ஹவிக்ரமர்களுமான பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள் அனைவரும் ஒன்று} கூடி பிரீதியுடன் குதித்து ஆரவாரம் செய்தனர்.(1) சம்பாதியின் வசனத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த ஹரயர்கள் {குரங்குகள்}, சீதையைத் தரிசிக்கும் ஆவலில் ராவணனின் வசிப்பிடத்தை அடைய சாகரத்திற்கு வந்து சேர்ந்தனர்.(2) அந்த தேசத்தை அடைந்த பீமவிக்கிரமர்கள் {பயங்கர வீரமிக்க வானரர்கள்}, மஹத்தான உலகம் முழுவதின் பிரதிபிம்பம் போன்ற தோற்றத்தை {தோன்றும் அந்த சாகரத்தை} அங்கே கண்டனர்.(3) அந்த வானரோத்தமர்கள் அனைவரும், தக்ஷிணசமுத்திரத்தின் உத்தர திசையை {தென்கடலின் வடகரையை} அடைந்ததும், ஒன்றுகூடி முகாமிட்டனர்.(4அ,ஆ)

வடிவம் குலைந்த மஹத்தான உயிரினங்கள் பலவும், பேருடல்களுடனும், அகன்று விரிந்த வாய்களுடனும், அலைகளுக்கு ஒப்பாக ஆர்ப்பரித்தபடியே ஜலத்தில் விளையாடிக் கொண்டிருந்தன[1].{4இ,ஈ} சில இடங்களில் நன்கு தூங்குவதைப் போலவும், சில இடங்களில் விளையாடுவதைப் போலவும், சில இடங்களில் பர்வதங்கள் அளவுக்கு ஜலத்திரள்களைப் பரப்பும்{5} பாதாளதலவாசிகளான தானவேந்திரர்களால் கலக்கப்படுவதைப் போலவும், அது {தென்பட்ட கடல்} மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதைக் கண்டு கபிகுஞ்சரர்கள் {குரங்குகளில் யானைகள் } வருத்தமடைந்தனர்.(5,6)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இந்த சுலோகம் கோரக்பூர் பதிப்பைத் தவிர மற்ற பதிப்புகளில் இடம்பெற்றிருக்கிறது. அடுத்தடுத்த சுலோகங்களைப் புரிந்து கொள்வதற்காகவே இந்த சுலோகம் இங்கே கொடுக்கப்படுகிறது” என்றிருக்கிறது.

வானரர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, ஆகாசத்தைப் போல கடப்பதற்கரிய சாகரத்தைக் கண்டு, “காரியம் என்னாகும்?” என்று சொல்லி விசனமடைந்தனர்.(7) சாகரத்தைக் கண்டு விசனமடையும் வாஹினியை {படையைக்} கண்ட ஹரிசத்தமன் {குரங்குகளில் உயர்ந்தவனான அங்கதன்}, பயத்தால் பீடிக்கப்பட்ட ஹரிக்களை {குரங்குகளைப் பின்வருமாறு} ஆசுவாசப்படுத்தத் தொடங்கினான்:(8) “மனவருத்தமடைவது, காரியத்திற்கு ஆகாது. விசனம் தோஷமாகும். குரோதங்கொண்ட உரகம் பாலனை {கோபம் கொண்ட பாம்பு குழந்தையைக் கொல்வதைப்} போல, இந்த விசனம் புருஷத்தை {ஆண்மையை} அழித்துவிடும்.(9) விக்கிரமம் வேண்டியபோது, விசனப்படும் {மனத்தளர்ச்சியடையும்} எவனும், தேஜஸ் இழந்தவனாக புருஷார்த்தத்தையும் {தன் தனிப்பட்ட நோக்கத்தையும்} அடையமாட்டான்” {என்றான் அங்கதன்}.(10)

அந்த ராத்திரி கடந்ததும், அங்கதன், ஹரிக்களில் முதிர்ந்த வானரர்களைச் சந்தித்து, மீண்டும் ஆகவேண்டிய காரியத்தைக் குறித்து ஆலோசித்தான்.(11) வாசவனைச் சூழ்ந்திருக்கும் மருத்தர்களின் வாஹினியை {வாயுப் படையைப்} போல, துவஜினீகள் {படைக்கொடிகளை ஏற்றுபவர்களான வானரர்கள்} அங்கதனைச் சூழ்ந்து நின்றனர்.(12) வாலிதனயனை {வாலியின் மகனான அங்கதனைக்} காட்டிலும், ஹனூமதனைக் காட்டிலும் அந்த வானரசேனையை அடக்கியாளும் சக்தன் வேறு எவன்?[2](13)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “அங்கதன் பட்டத்து இளவரசனாவான். ஹனுமானோ வானரப்படையின் தளபதியாவான். இது படையமைப்பின் ஒழுங்கில், உயர் பதவியில் இருப்பவர்களை முதல் நிகழ்விலேயே பயன்படுத்தக்கூடாது என்ற வழக்கமேயாகும். இங்கேயும் அதே நெறிமுறைதான் பின்பற்றப்படுகிறது. இவ்வாறே {மஹாபாரதத்தில்} துரியோதனனும், பீஷ்மரைப் படைத்தளபதி ஆக்குகிறான்” என்றிருக்கிறது.

பிறகு, அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} ஸ்ரீமான் அங்கதன், அந்த ஹரிவிருத்தர்களுக்கும் {முதிர்ந்த குரங்குகளுக்கும்}, அந்த சைனியத்திற்கும் மரியாதை செலுத்திவிட்டு, அர்த்தம் பொதிந்த {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(14) “இப்போது, இந்த சாகரத்தைத் தாண்டப் போகும் மஹாதேஜஸ்வி யார்? அரிந்தமரான {பகைவரை அழிப்பவரான} சுக்ரீவரை சத்தியசந்தராக்க {வாய்மையைக் கடைப்பிடிப்பவராக்கப்} போகிறவர் யார்?(15) பிலவங்கமர்களே, நூறு யோஜனைகளைத் தாண்டப் போகும் வீரர் யார்? இந்த யூதபர்கள் {குழுத்தலைவர்கள்} அனைவரையும் மஹாபயத்தில் இருந்து விடுவிக்கப் போகிறவர் யார்?(16) நாம் எவருடைய அருளின் மூலம், சுகமாக இங்கிருந்து திரும்பிச் சென்று, தாரங்களையும் {மனைவிமாரையும்}, புத்திரர்களையும், கிருஹங்களையும் {வீடுகளையும்} பார்க்கப் போகிறோம்?(17) எவருடைய அருளால், ராமரையும், மஹாபலம்வாய்ந்த லக்ஷ்மணரையும், மஹாபலம்வாய்ந்த சுக்ரீவரையும் மகிழ்ச்சியுடன் அணுகப் போகிறோம்?(18) நம்மில் எந்த ஹரியும் {குரங்கும்}, சாகரத்தைத் தாண்டும் சமர்த்தராக இருந்தால், அவர் நமக்கு சீக்கிரமே புண்ணியமான அபய தக்ஷிணையை தத்தம் செய்வாராக {பயத்தில் இருந்து விடுவிக்கும் புண்ணியக் கொடையை நமக்கு அளிப்பாராக}” {என்றான் அங்கதன்}.(19)

அங்கதனின் சொற்களைக் கேட்ட எவரும், எதுவும் சொல்லவில்லை. அங்கிருந்த சர்வ ஹரிவாஹினியும் {குரங்களின் படை முழுவதும்} அசைவற்றிருந்தது.(20)

ஹரிசத்தமனான அங்கதன், அந்த ஹரிக்களிடம் மீண்டும் {பின்வருமாறு} பேசினான், “திடவிக்கிரமர்களும், தேச, குல களங்கமின்றி ஜனித்தவர்களும், பலம்வாய்ந்தவர்களில் சிறந்தவர்களுமான உங்கள் அனைவரையும் மீண்டும் மீண்டும் பூஜிக்கிறேன்.(21)  நம்மில் எவருக்கும், தாண்டிச் செல்வதில் எப்போதும் தடையிருந்ததில்லை. பிலவகரிஷபர்களே {தாவிச் செல்பவர்களில் சிறந்தவர்களே}, தாண்டிச் செல்வதில் யாருக்கு, என்ன சக்தி இருக்கிறது என்பதைச் சொல்வீராக” {என்றான் அங்கதன்}.(22)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 64ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

சிறகுகள் முளைத்தன | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 63 (15)

New wings | Kishkindha-Kanda-Sarga-63 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சிறகுகளை மீண்டும் அடைந்த சம்பாதி; மகிழ்ச்சியடைந்த வானரர்கள் தெற்கு நோக்கிச் சென்றது...

Sampati with new wings
This picture was generated using Artificial Intelligence in Bing website | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கப்பட்ட படம்

{அங்கதனிடம் சம்பாதி தொடர்ந்தான்}, “வாக்கியவிசாரதரானவர் {பேச்சில் வல்லவரான நிசாகரர்}, இவற்றையும், இன்னும் பிறவற்றையும், பல வாக்கியங்களில் சொல்லி, என்னைப் பாராட்டி, எனக்கு விடைகொடுத்தனுப்பி, தன் ஆலயத்திற்குள் {ஆசிரமத்திற்குள்} பிரவேசித்தார்.(1) நான் பர்வதத்தின் குகையில் இருந்து, மெல்ல மெல்ல வெளியேறி, விந்தியத்தில் ஏறி, உங்களுக்காக {உங்கள் வரவுக்காகக்} காத்திருந்தேன்.(2) முனிவரின் சொற்களை ஹிருதயத்தில் எண்ணிய இந்தக் காலம் முதல் இப்போது வரை, கடந்த நூறு வருஷங்களுக்கும் சற்றே அதிகமாக[1] தேசகாலங்களை {தகுந்த இடத்தையும், நேரத்தையும்} எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன்.(3) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “நிசாகரர் வாழ்ந்தது, இறந்தது, அந்த முனிவர் இறந்த பிறகு சம்பாதி அந்த மலையில் தொடர்ந்து இருந்தது ஆகியவற்றைக் கணக்கிடுவதில் இங்கே முரண் தெரிகிறது. 40-60-9ல், சம்பாதி, “அந்த ரிஷி இல்லாமல் இந்த கிரியில் வசித்து வரும் எனக்கு எட்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன” என்று சொல்கிறான். இங்கேயோ, நூறு ஆண்டுகள் கடந்திருப்பதாகச் சொல்கிறான். வேறு சில பதிப்புகளில், “நிசாகரர் எட்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் இறந்து முன்னூறு ஆண்டுகள் ஆகின்றன. நூறு ஆண்டுகளாக நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்” என்று பொருள்படும்படியான சுலோகம் இருக்கிறது” என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பையும், பின்வரும் சுலோகங்களின் பொருளையும், தமிழ்ப்பதிப்புகளில் உள்ள வாக்கியங்களையும் ஒப்பு நோக்கி, இந்த வாக்கியத்தின் சொற்றொடர் சற்றே முன்னும், பின்னுமாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

நிசாகரர், மஹாபிரஸ்தானம் {நெடும்பயணம்} சென்று ஸ்வர்க்கத்தை அடைந்தார். தர்க்கமற்ற பல எண்ணங்களால் சூழப்பட்ட நான், சந்தாபத்தில் {மனத்துயரில்} எரிந்து கொண்டிருந்தேன்.(4) மரணத்தில் உதித்த புத்தியை, முனி வாக்கியங்களால் அடக்கி, என் பிராணன்களையும் ரக்ஷித்துக் கொண்டேன். அவர் {நிசாகரர்} எனக்கு எந்த புத்தியை தத்தம் செய்தாரோ, அது {அந்த புத்தி} சுடர்மிகும் அக்னியின் சிகையானது இருளை {போக்குவதைப்} போல என் துக்கத்தைப் போக்கியது.(5,6அ)

துராத்மாவான ராவணனின் வீரியத்தை புத்தியில் அடைந்த {எண்ணிப் பார்த்த} நான், “மைதிலியை எவ்வாறு காக்காமல் விட்டாய்?” என்ற வார்த்தைகளால் புத்திரனை {சுபார்ஷ்வனைக்} கண்டித்தேன்.(6ஆ,7அ) அவள் அழுததைக் கேட்டும், அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள்} சீதையைப் பிரிந்ததையும், எனக்கும், தசரதனுக்கும் இடையிலான ஸ்னேகத்தையும் அறிந்தும்[2] என் புத்திரன் {சுபார்ஷ்வன்} நான் விரும்பியதைச் செய்யாதிருந்துவிட்டான்” என்றான் சம்பாதி.(7ஆ,8அ) 

[2] 4:56:24ல், “அந்த தசரதன் என்னுடன் பிறந்தவனின் சகாவானது {ஜடாயுவின் தோழனானது} எவ்வாறு?” என்று கேட்கிறான். அதாவது, தசரதனுக்கும், சம்பாதிக்கும் ஏற்கனவே நட்பிருந்தது என்றும், ஜடாயுவுக்கு தசரதனுடன் ஏற்பட்ட நட்பு, சம்பாதியின் சிறகெரிந்த பிறகு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் தெரிகிறது.

அப்போது தன்னைச் சூழ்ந்திருந்த வானரர்கள் மத்தியில் அவன் {சம்பாதி} இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வனசாரிகளின் {காடுகளில் திரிபவர்களின்} கண்களுக்கு முன்பாகவே அவனுக்கு {சம்பாதிக்குப்} பறப்பதற்கான சிறகுகள் முளைத்தன.(8ஆ,9அ) அருணத்தால் {செவ்வண்ணத்தால்} மறைக்கப்பட்ட அவன் {சம்பாதி}, சிறகுகள் முளைத்ததும், தன் உடலைக் கண்டதும் ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைந்து வானரர்களிடம் இதைச் சொன்னான்:(9ஆ,10அ) “அமித ஓஜஸரும், ராஜரிஷியுமான நிசாகரரின் பிரபாவத்தால், ஆதித்யனின் கதிர்களால் எரிந்த சிறகுகள் இரண்டும் மீண்டும் முளைத்துவிட்டன.(10ஆ,11அ) யௌவனத்தில் {இளமையில்} நான் கொண்டிருந்த பராக்கிரமமும் {ஆற்றலும்}, பலமும், பௌருஷமும் {ஆண்மையும்} இதுதான்.(11ஆ,12அ) அனைத்து வகையான யத்தனங்களையும் {முயற்சிகளையும்} செய்து, சீதையை நீங்கள் கண்டடைய வேண்டும். என்னுடைய இந்தச் சிறகுகளை அடைந்ததால், உங்கள் அனைவரின் மூலமும் நான் காரியசித்தியடைந்துவிட்டேன்” {என்றான் சம்பாதி}.(12ஆ,13அ)

Sampati with new wings

பதகோத்தமனான {பறவைகளில் மேன்மையான} சம்பாதி, அந்த ஹரிக்கள் அனைவரிடமும் இவ்வாறு சொல்லிவிட்டு, கிரிசிருங்கத்தில் இருந்து, ஆர்வத்துடன் எழுந்து, வானத்தில் பறப்பவர்களின் {பறவைகளின்} கதியை அடைந்தான்.(13ஆ,14அ) ஹரிசார்தூலர்கள் {குரங்குகளில் புலிகள்} அவனது அந்த வசனத்தைக் கேட்டதன் பயனாக மனத்தில் மகிழ்ச்சியடைந்து, விக்கிரமத்தை அடையும் ஆவலுடையவர்கள் ஆனார்கள்.(14ஆ,இ) பிறகு, பவனனுக்கு {வாயு தேவனுக்கு} சமமான விக்கிரமத்துடன், பௌருஷத்தை {ஆண்மையை} மீட்டுக் கொண்ட பிலவகவரர்கள் {தாவிச் செல்லும் குரங்குகளில் சிறந்தவர்கள்}, அபிஜித்தை {நல்ல வேளையை} எதிர்பார்த்து ஜனகசுதையை {ஜனகனின் மகளான சீதையைத்} தேடும் மார்க்கத்தை நோக்கிய திசையில் {தென் திசையில்} சென்றனர்.(15)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 63ல் உள்ள சுலோகங்கள்: 15

Previous | Sanskrit | English | Next

இராமன் வருவான் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 62 (15)

Rama will come | Kishkindha-Kanda-Sarga-61 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சம்பாதிக்கு ஆறுதல் சொன்ன முனிவர்; ராக்ஷசர்களையும், அவர்களது மன்னன் ராவணனையும் அழிக்க ராமன் வருவதைக் குறித்துச் சொன்ன நிசாகரர்...

Sampati and Nishakara
This picture was generated using Artificial Intelligence in Bing website | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கப்பட்ட படம்

இவ்வாறு {சம்பாதி, நிசாகரர் என்ற அந்தச் சிறந்த முனிவரிடம்} முனிசிரேஷ்டரிடம் சொல்லிவிட்டுப் பெரும் துக்கத்தில் அழுது கொண்டிருந்தபோது, அந்த பகவான் {நிசாகரர்}, ஒரு முஹூர்த்தம் தியானித்துவிட்டு, இதைச் சொன்னார்:(1) “உனக்கு மீண்டும் வேறு சிறகுகளும், நல்ல இறகுகளும் உண்டாகும். உன் கண்பார்வையும், பிராணன்களும், விக்கிரமும், பலமும் திரும்பக்கிடைக்கும்.(2) மஹத்தான காரியம் நடக்கப் போகிறதென்று கேள்விப்பட்டேன். என் தபத்தினாலும் அவ்வாறே உணர்ந்தேன். நான் சொல்வதைக் கேட்டு அறிந்து கொள்வாயாக.(3) 

தசரதன் என்ற பெயரில் இக்ஷ்வாகுவர்த்தனனான {இக்ஷ்வாகு குலத்தை வளர்ப்பவனான} எவனோ ஒரு ராஜா இருக்கிறான். அவனுக்கு ராமன் என்ற பெயரில் மஹாதேஜஸ்ஸுடன் கூடிய புத்திரன் உண்டாவான்.(4) அந்த சத்தியப் பராக்கிரமன் {ராமன்}, பிதாவால் {தசரதனால்} நியமிக்கப்பட்ட அர்த்தத்திற்காக, உடன்பிறந்த லக்ஷ்மணன் சகிதனாக அரண்யம் செல்வான்.(5) ஜனஸ்தானத்தில் இருந்து, அவனது பாரியையை {சீதையை}, ராக்ஷசேந்திரனும், ஸுரர்களாலும், தானவர்களாலும் வதம் செய்யப்பட முடியாதவனும், ராவணன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு நைர்ருதன் {ராக்ஷசன்} கடத்திச் செல்வான்.(6) 

மஹாபாக்கியவதியும், புகழ்பெற்றவளுமான அந்த மைதிலி, பக்ஷணங்கள், போஜனங்களை {ஆசையைத் தூண்டும் வகையில்} காட்டினாலும், அவற்றை பக்ஷிக்காமல் துக்கத்தில் மூழ்கியிருப்பாள்.(7) இதை வாசவன் {இந்திரன்} அறிந்து, ஸுரர்களுக்கும் கிடைப்பதற்கரியதும், அம்ருதம் என்றும் எந்த அன்னம் அறியப்படுமோ அந்தப் பரம அன்னத்தை வைதேஹிக்குக் கொடுப்பான்.(8) மைதிலி, அந்த அன்னத்தை அடைந்ததும், “இஃது இந்திரனுடையது” என்பதை அறிந்து, முதல் கவளத்தை எடுத்து, ராமனுக்காக பூதலத்தில் வைத்து,(9) “என் பர்த்தாவும் {ராமரும்}, மைத்துனரான லக்ஷ்மணரும் ஜீவித்திருந்தாலும், அல்லது தேவத்வத்தை அடைந்திருந்தாலும், அவ்விருவருக்குமே இந்த அன்னம்” என்பாள்.(10)

விஹங்கமா {வானில் பறப்பவனே, சம்பாதி}, ராம தூதர்களாக அனுப்பப்படும் பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள், சீதையைத் தேடி} அங்கே வருவார்கள். நீ அவர்களிடம் ராமனின் மஹிஷியை {சீதையைக்} குறித்துச் சொல்வாயாக.(11) எங்கும் போகாதே. இவ்வகையிலான நீ எங்கே செல்ல விரும்புவாய்? தேசத்திற்காகவும், காலத்திற்காகவும் காத்திருந்தால், உன் சிறகுகள் இரண்டையும் மீண்டும் அடைவாய்[1].(12) இப்போதே உனக்குச் சிறகுகளைக் கொடுக்கும் உற்சாகம் எனக்கில்லை. எனவே, நீ இங்கேயே இருந்து, உலகங்களுக்கு ஹிதமான காரியத்தைச் செய்து கொண்டிருப்பாயாக[2].(13)

[1] கம்பராமாயணத்தில் முனிவர் நிசாகரர் அல்லாமல், இந்த வரத்தை சூரியனே கொடுப்பதாக வருகிறது. அது பின்வருமாறு:

மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமர் பேரை
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான்

- கம்பராமாயணம் 4703ம் பாடல், சம்பாதிப் படலம்

பொருள்: மண்ணில் விழுந்த என்னை, வானத்தில் விளங்குகின்ற வள்ளல் {சூரியன்}, தன் கண்களால் நோக்கி, என் மீது கொண்ட இரக்கத்தால், “சனகனின் அன்பு மகளின் இடையீட்டால் {சீதை அபகரிக்கப்பட்ட பிறகு} வரும் வானர வீரர்கள், ராமன் பெயரை மனத்தில் எண்ணி உச்சரிக்குங்காலத்தில், நீ மீண்டும் சிறகுகள் பெற்று எழுவாய்” என்றான்.

[2] இந்த இடத்தில், “இப்போதைக்கு உனக்கு நல்ல சிறிய சிறகுகளைக் கொடுக்கிறேன்” என்று சில பதிப்புகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

Sampati and vanaras

அந்த நிருப புத்திரர்கள் {இளவரசர்களான ராமலக்ஷ்மணர்கள்} இருவருக்காகவும், பிராமணர்களுக்காகவும், குருக்களுக்காகவும், முனிக்களுக்காகவும், வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்} அந்தக் காரியத்தை நீ செய்வாயாக.(14) உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் நானும் காண விரும்பினாலும், நீண்ட காலம் பிராணன்களைத் தரித்துக் கொள்வதில் {எனக்கு} விருப்பமில்லை. களேவரத்தை {பூதவுடலைக்} கைவிடப் போகிறேன்” {என்றார் நிசாகரர்}. தத்துவார்த்தங்களைக் கண்டுணர்ந்த மஹரிஷி {நிசாகரர்} இதை இவ்வாறே சொன்னார்” {என்று அங்கதனிடம் சொன்னான் சம்பாதி}.(15)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 62ல் உள்ள சுலோகங்கள்: 15

Previous | Sanskrit | English | Next

Thursday, 16 November 2023

சிறகுகள் எரிந்தன | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 61 (17)

Wings burnt | Kishkindha-Kanda-Sarga-61 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் சிறகுகள் எரிந்தது எவ்வாறு என்பதையும், தான் தற்கொலை செய்து கொள்ள விரும்பியதையும் முனிவர் நிசாகரரிடம் சொன்ன சம்பாதி...

Sampati and Jatayu fly high and see the earth and sun in same size
This picture was created using Artificial Intelligence in Bing website and edited elsewhere | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கி திருத்தப்பட்ட படம்

{அங்கதனிடம் சம்பாதி}, “அப்போது, சாகசமாகச் செய்யப்பட்டதும், செய்வதற்கரியதுமான அந்த பயங்கரமான கர்மத்தையும், சூரியனைப் பின்தொடர்ந்து சென்றது என, அனைத்தையும் முனிவரிடம் {நிசாகரரிடம் பின்வருமாறு} சொன்னேன்:(1) “பகவானே, புண்களுடனும், லஜ்ஜையுடனும் {வெட்கத்துடனும்}, கலங்கிய இந்திரியங்களுடனும் கூடியவனாகச் சோர்ந்திருக்கும் எனக்கு நெடும்வசனம் பேசும் சக்தியில்லை.(2) நானும், ஜடாயுவும் ஆணவத்தால் மோஹமடைந்து, பராக்கிரமத்தை அறிய விரும்பும் போட்டியில், தூரமாக ஆகாயத்தில் பாய்ந்து சென்றோம்.(3) கைலாச சிகரத்தில் இருந்த முனிவர்களின் முன்னிலையில், ‘அஸ்த மஹாகிரிவரை ரவியை {சூரியனைப்} பின்தொடர்ந்து செல்வது’ என்ற பந்தயத்திற்குக் கட்டுப்பட்டோம்.(4) 

ஒரே நேரத்தில் {வானத்தை} அடைந்த நாங்கள், மஹீதலத்தில் ரதச்சக்கரத்தின் பிரமாணத்தில் {பூமியில் தேர்ச்சக்கரத்தின் அளவில்} நகரங்களைத் தனித்தனியாகப் பார்த்தோம்.(5) சிலவேளைகளில் வாத்திய கோஷங்களுடனும், சிலவேளைகளில் பூஷணங்களின் {ஆபரணங்களின்} மெல்லொலிகளுடனும் பாடும், செவ்வாடை உடுத்திய அங்கனைகள் {பெண்கள்} பலரைப் பார்த்தோம்.(6) ஆகாசத்தில் துரிதமாக எழுந்து, ஆதித்யனின் பாதையை அனுசரித்த நாங்கள், புல்வெளித்தரை போல அந்த வனத்தைப் பார்த்தோம்.(7) உயரமான சைலங்களுடன் கூடிய பூமி சிறுகற்களால் மறைக்கப்பட்டதைப் போலவும், ஆறுகளுடன் கூடிய வசுந்தரை {நிலம்} சூத்திரங்களால் பின்னப்பெற்றதை {நூல்களால் சுற்றப்பட்டதைப்} போலவும் தெரிந்தன.(8) பூதலத்தில் ஹிமவானும் {இமயமும்}, விந்தியமும், மஹாகிரியான மேருவும், ஜலாஷயங்களில் நாகங்களை {நீர்க்கொள்ளிடங்களில் / மடுக்களில் யானைகளைப்} போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.(9)

Jatayu and Sampati flying high

பிறகு, நாங்கள் இருவரும் தீவிர வியர்வையும், களைப்பும், பயமும் அடைந்தபோது, மோஹமும் {மயக்கமும்}, பயங்கரமான மூர்ச்சையும் {நினைவிழக்கும் நிலையும்} எங்களை ஆட்கொண்டன.(10) யாம்ய {தென்} திக்கும் தெரியாமல், ஆக்நேயீயும் {தென்கிழக்கும்} தெரியாமல், வாருணீயும் {மேற்கும்} தெரியாமல், உலகம் யுகாந்தத்தில் அக்னியால் எரிக்கப்பட்டு அழிவதைப் போன்ற நிலையை அடைந்தோம்.(11) மனம் நிலைகுலைந்தாலும், கண்களின் சார்பை அடையும் மஹத்தான யத்னத்துடன் {பெரும் முயற்சியுடன்} கூடிய நான், மீண்டும் மீண்டும் மனத்தையும், கண்களையும் அதில் {பார்வையை அடைவதில்} நிலைக்கச் செய்தேன்.{12} மீண்டும் மஹத்தான யத்னத்துடன் பாஸ்கரனை நேரடியாக நோக்கினேன். பாஸ்கரன், பிருத்வியின் பிரமாணத்திற்குத் துல்லியனாக எங்களுக்குப் புலப்பட்டான் {சூரியன், பூமிக்கு இணையான அளவில் எங்களுக்குத் தெரிந்தான்}.(12,13) 

ஜடாயு, {என்னைக்} கேட்காமல் கொள்ளாமல் மஹீயை {பூமியை} நோக்கி இறங்கியபோது, அவனைக் கண்ட நான், துரிதமாக ஆகாசத்தில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்.(14) என் சிறகுகள் இரண்டால் மறைக்கப்பட்டதால், ஜடாயு அதிகம் எரியவில்லை. அங்கே பிரமாதமாக வாயு பாதையில் இருந்து இறங்கிய நான் முழுமையாக எரிக்கப்பட்டேன்.(15) அந்த ஜடாயு, ஜனஸ்தானத்தில் விழுந்தான் என்று யூகிக்கிறேன். நானோ எரிந்த சிறகுகளுடன் ஜடமாக்கப்பட்டவனாக விந்தியத்தில் விழுந்தேன்.(16) இராஜ்ஜியத்தையும், உடன்பிறந்தவனையும் {தம்பி ஜடாயுவையும்}, சிறகுகளையும், விக்கிரமத்தையும் இழந்த நான், எப்படியாவது மரிக்க வேண்டி, கிரி சிகரத்தில் இருந்து விழ விரும்பினேன்” {என்று நிசாகரரிடம் சொன்னேன்” என்றான் சம்பாதி}.(17)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 61ல் உள்ள சுலோகங்கள்: 17

Previous | Sanskrit | English | Next

Wednesday, 15 November 2023

நிசாகரர் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 60 (21)

Nishakara | Kishkindha-Kanda-Sarga-60 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விந்தியத்தில் விழுந்ததையும், நிசாகரர் என்ற ரிஷியை அடைந்ததையும் வானரர்களிடம் விளக்கிச் சொன்ன சம்பாதி...

Sage Nishakara with animals and Sampaati waiting for him at his hermitage
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு

அப்போது, ஹரியூதபர்கள் {குரங்குக் குழுத்தலைவர்கள்}, நீர்க்காணிக்கை செலுத்திவிட்டு, ஸ்நானம் செய்து வந்த அந்த கிருத்ரனை {கழுகான சம்பாதியைச்} சூழ்ந்தபடி அந்த ரம்மியமான கிரியில் அமர்ந்தனர்.(1) அந்த ஹரிக்கள் {குரங்குகள்} அனைவரும் சூழத் தன் அருகில் அமர்ந்திருந்த அங்கதனிடம் நம்பிக்கை கொண்ட சம்பாதி, மகிழ்ச்சியுடன் மீண்டும் {பின்வருமாறு} பேசினான்:(2) “ஹரயர்களே {குரங்குகளே}, மைதிலியைக் குறித்து எப்படி அறிந்தேன் என்ற உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். நிசப்தம் அடைந்தவர்களாக {அமைதியாக}, ஒரே கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பீராக.(3) 

அனகா {களங்கமற்ற அங்கதா}, பூர்வத்தில் சூரியக் கதிர்களால் முழுமையாக எரிந்து, சூரியனின் வெப்பம் பரவிய அங்கங்களுடன் இந்த விந்தியத்தின் சிகரத்தில் நான் விழுந்தேன்.(4) ஆறு ராத்திரிகள் கழிந்ததும், உணர்வை அடைந்தாலும், வெறி கொண்டவனைப் போல வசமிழந்து, சர்வ திசைகளிலும் பார்த்தும், எதையும் அறிந்தேனில்லை.(5) பிறகு, சர்வ சாகரங்கள், சைலங்கள், நதிகள், சரஸ்கள், வனங்கள், பிரதேசங்கள் ஆகியவற்றையும் கண்ட பிறகே மதியில் உரைத்தது.(6) மகிழ்ச்சியான பக்ஷிகணங்களால் {பறவைக் கூட்டங்களால்} சூழப்பட்டதும், தக்ஷிணத்தில் உள்ள உததியின் {தெற்கே உள்ள நீர்க்கொள்ளிடத்தின் / கடலின்} தீரத்தில் அமைந்ததும், இடையிடையே குகைகள், கூடங்கள் {முகடுகள்} ஆகியவற்றைக் கொண்டதுமான இது விந்தியம் என்ற நிச்சயத்தை அடைந்தேன்.(7) 

இங்கே ஸுரர்களால் {தேவர்களால்} நன்கு பூஜிக்கப்படும் ஒரு புண்ணிய ஆசிரமம் இருக்கிறது. அதில் நிசாகரர் என்ற பெயரைக் கொண்டவரும், உக்ர தபம் மேற்கொள்பவருமான ஒரு ரிஷி இருந்தார்.(8) தர்மஜ்ஞரான {தர்மத்தை அறிந்தவரான} நிசாகரர் ஸ்வர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். அந்த ரிஷி இல்லாமல் இந்த கிரியில் வசித்து வரும் எனக்கு எட்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன.(9)

{அப்படி நான் விழுந்த காலத்தில்}, சீரற்ற சாரல்களைக் கொண்ட விந்தியத்தின் உச்சியில் இருந்து மெதுவாகவும், சிரமத்துடனும் இறங்கி, கூரிய தர்ப்பைகளுடன் கூடிய வசுமதியை {பூமியை} துக்கத்துடன் மீண்டும் அடைந்தேன்.(10) அந்த ரிஷியை {நிசாகரரைக்} காண ஆசைப்பட்ட நான், பெரும் துக்கத்துடன் அணுகினேன். ஜடாயுவும், நானும் பலமுறை அவரை அணுகியிருக்கிறோம்.(11) அவரது ஆசிரமபதத்தின் அருகில் சுகந்தமான வாதம் {நறுமணமிக்க தென்றல்} வீசிக்கொண்டிருந்தது. அங்கே புஷ்பங்களற்ற விருக்ஷமேதும் காணப்படவில்லை; பழமற்றதும் இல்லை.(12) அந்தப் புண்ணிய ஆசிரமத்தின் அருகே சென்றதும், ஒரு விருக்ஷத்தின் அடியில் தஞ்சமடைந்து, பகவான் நிசாகரரைக் காணும் ஆசையில் காத்திருந்தேன்.(13)

அப்போது, அபிஷேகம் செய்துவிட்டு {நீராடிவிட்டு}, ஜுவலிக்கும் தேஜஸ்ஸுடன் வடக்குமுகமாகத் திரும்பி வந்து கொண்டிருப்பவரும், வெல்லப்படமுடியாதவருமான ஒரு ரிஷியை தூரத்தில் பார்த்தேன்.(14) பிராணிகள் தாதாவின் {உயிரினங்கள் பிரம்மனின்} பின் வருவதைப் போல, அவரைச் சுற்றிலும் ரிக்ஷங்கள், சிருமாரங்கள், வியாகரங்கள், சிம்ஹங்கள், நானாவித சரீசிருபங்கள் {கரடிகள், மான்கள், புலிகள், சிங்கங்கள், பலவகையான யானைகள், பாம்புகள்} ஆகியனப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.(15) இராஜன் பிரவேசித்ததும், சர்வ அமைச்சர்களும், படைகளும் {செல்வதைப்} போல ரிஷி {நிசாகரர், தமது ஆசிரமத்திற்கு} வந்து சேர்ந்ததை அறிந்த அந்தந்த உயிரினங்களும் சென்றுவிட்டன.(16)

Sage Nishakara and Sampaati

என்னைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த ரிஷி {நிசாகரர்}, ஆசிரமத்திற்குள் பிரவேசித்த பிறகு, மீண்டும் ஒரு முஹூர்த்த மாத்திரத்தில் வெளியே வந்து, காரியத்தைக் குறித்து {பின்வருமாறு} கேட்டார்:(17) “சௌம்யா {மென்மையானவனே}, உன் ரோமம் விகல்யமாக இருப்பதால் {மயிர்கள் குறைந்திருப்பதால்}, அடையாளம் கண்டு அறிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சிறகுகள் இரண்டும் அக்னியால் எரிக்கப்பட்டிருக்கின்றன, சரீரத்தில் பிராணன்கள் மட்டுமே இருக்கின்றன.(18) கிருத்ரர்களின் {கழுகுகளின்} ராஜாக்களும், வேகத்தில் மாதரிஷ்வனுக்கு {அக்னிக்கு} சமமானவர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும்}, உடன்பிறந்த கிருத்ரர்களுமான {கழுகுகளுமான} உங்கள் இருவரையும் பூர்வத்தில் நான் கண்டிருக்கிறேன்.(19) சம்பாதி, நீயே ஜ்யேஷ்டன் {மூத்தவன்}. உன் அனுஜன் {தம்பி} ஜடாயு. மானுஷ ரூபம் தரித்து வந்து, என் சரணங்களைப் பற்றிக் கொள்வீர்களே.(20) உனக்கு வியாதியை விளைவித்தது எது? சிறகுகள் எப்படி விழுந்தன? அல்லது, எவனால் இந்த தண்டனை விதிக்கப்பட்டது? கேட்பவனுக்கு {கேட்கும் எனக்கு} அனைத்தையும் சொல்வாயாக” {என்று நிசாகரர் சொன்னதாக அங்கதனிடம் சொன்னான் சம்பாதி}.(21)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 60ல் உள்ள சுலோகங்கள்: 21

Previous | Sanskrit | English | Next

Tuesday, 14 November 2023

சுபார்ஷ்வன் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 59 (29)

Suparshva | Kishkindha-Kanda-Sarga-59 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சம்பாதி தன் கதையை விரிவாகச் சொன்னது; சுபார்ஷ்வனிடம் வழிவிடுமாறு கெஞ்சிய ராவணன்; சீதையின் கடத்தலுக்கு சாட்சியான சுபார்ஷ்வன்...

Ravana obstructed by Suparshva, while abducting Sita
This picture was created using Artificial Intelligence in Bing website and edited elsewhere | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கி திருத்தப்பட்ட படம்

அப்போது,[1] அம்ருதச் சுவையில் அந்த கிருத்ரராஜனால் {கழுகரசன் சம்பாதியால்} பேசப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்ட பிலவகரிஷபர்கள் {தாவிச் செல்லும் குரங்குகளில் காளைகள்} பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(1) வானரசிரேஷ்டனான {வானரர்களில் சிறந்தவனான} ஜாம்பவான், சர்வ பிலவங்கமர்கள் சகிதனாக, பூதலத்தில் இருந்து உடனே எழுந்து, அந்த கிருத்ர ராஜனிடம் {சம்பாதியிடம், பின்வருமாறு} பேசினான்:(2) “சீதை எங்கே இருக்கிறாள்? யார் அவளைக் கண்டவர்? மைதிலியை எவன் அபகரித்தான்? அனைத்தையும் சொல்வீராக. நீரே வன ஓகஸர்களின் {வனத்தில் வசிப்பவர்களின்} கதியாக இருக்கிறீர்.(3) ஸ்வயமாக லக்ஷ்மணரால் ஏவப்படுவனவற்றின் {வல்லமையையும்}, வஜ்ர வேகத்தில் பாயும் தாசரதியுடைய {தசரதரின் மகனான ராமனுடைய} பாணங்களின் விக்கிரமத்தையும் {வல்லமையையும்} எவனாலும் சிந்திக்கவாவது முடியுமா?” {என்றான் சம்பாதி}.(4)

[1] இந்த சர்க்கம் தொடங்கும் முன் தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் உள்ள அறிமுகக்குறிப்பு பின்வருமாறு, “இனி வரப்போகும் 59 முதல் 63 வரையுள்ள சர்க்கங்களில் உள்ள முரண்பட்ட செய்திகளினால் அவை பல்வேறு பதிப்புகளில் இடம்பெறவில்லை. எனவே, அவை இடைச்செருகல்களாக இருக்கலாமெனச் சொல்லப்படுகின்றன. ஆனால் பண்டைய உரையாசிரியர்கள் பலரும் இவற்றுக்கும் உரைசெய்திருப்பதால் இங்கே சேர்க்கப்படுகின்றன” என்றிருக்கிறது. இங்கே சொல்லப்படும் முரண்பட்ட செய்திகளில், இந்த சர்க்கத்தின் 2ம் சுலோகத்தில் ஜாம்பவானை வானரன் என்று குறிப்பிடுவதும் ஒன்றாகும். 4:41:2ல் பிரம்மனின் மகன் என்று குறிப்பிடப்படும் இந்த ஜாம்பவான், 1:17:7ல் ரிக்ஷபுங்கவன் என்றும், 4:39:27ல் ரிக்ஷராஜா என்றும் கரடிகளைச் சார்ந்தவன் என்றே அடையாளப்படுத்தப்படுகிறான். மேலும் 4:58:15ல் சம்பாதி தானே சீதை கடத்திச் செல்லப்படுவதை நேரடியாகக் கண்டதாகச் சொல்கிறான். ஆனால் இந்த சர்க்கத்தின் 6ம் சுலோகத்தில், தான் அதைக் காணவில்லை, தன் மகன் சுபார்ஷ்வனே அதைக் கண்டான் என்ற முரண்பட்ட செய்தியைச் சொல்கிறான். மேலே சுட்டப்பட்ட சர்க்கங்களில் இவ்வாறான முரண்பாடுகள் ஆங்காங்கே இருப்பினும், செம்பதிப்பான பிபேக்திப்ராய் உட்பட நாம் ஒப்புநோக்கும் அனைத்துப் பதிப்புகளிலும் இந்த சர்க்கங்கள் தவிர்க்கப்படவில்லை. கம்பராமாயணத்தில் சம்பாதியின் மகன் சுபார்ஷ்வன் குறித்த செய்திகள் இல்லை.

இதில் மகிழ்ச்சியடைந்தவன் {சம்பாதி}, மனவூக்கத்துடன் சீதையைக் குறித்துக் கேட்டு சமாஹிதமடைந்த ஹரிக்களை {குரங்குகளை} ஆசுவாசப்படுத்தும் வகையில் மீண்டும் இந்த வசனத்தைச் சொன்னான்:(5) “வைதேஹி ஹரணம் {சீதை கடத்தப்பட்ட நிகழ்வு} என்னால் எப்படி கேட்கப்பட்டதோ, அப்படியே என்னால் சொல்லப்பட்டது. அந்த நீள்விழியாள் எங்கிருக்கிறாள் என்பது இப்போது கேட்கப்படட்டும்.(6) பல யோஜனைகள் அகலம் கொண்ட இந்த கிரி துர்க்கத்தில் {அடைவதற்கரிய மலையில்} நீண்ட காலத்திற்கு முன் விழுந்த நான், {இப்போது} பிராணனும், பராக்கிரமமும் குன்றியவனாக மூப்படைந்திருக்கிறேன்.(7) இந்நிலை அடைந்த என்னை, பறவைகளில் சிறந்தவனும், சுபார்ஷ்வன் என்ற பெயர் சூட்டப்பட்டவனுமான {என்} புத்திரன், உரிய காலத்தில் ஆஹாரம் கொடுத்து ஆதரித்து வருகிறான்.(8) கந்தர்வர்கள் தீக்ஷ்ணகாமர்கள் {கடுங்காமம் கொண்டவர்கள்}, புஜங்கமர்கள் தீக்ஷ்ணகோபர்கள் {பாம்புகள் கடுங்கோபம் கொண்டவர்கள்}, மிருகங்களுக்கு பயம் தீக்ஷ்ணம் {மான்கள் பேரச்சம் கொண்டவை} என்பதைப் போல நாங்கள் தீக்ஷ்ணக்ஷுதர்களாவோம் {கடும்பசி கொண்டவர்கள் ஆவோம்}.(9) 

என்றோ ஒரு சூரிய அஸ்தமன வேளையில் நான் பசியால் துன்புற்று ஆஹாரத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, என் புத்திரனானவன் {சுபார்ஷ்வன்} மாமிசமில்லாமல் வந்தான்.(10) ஆஹாரம் இல்லாமல் நான் பீடிக்கப்பட்டிருப்பதாக அனுமானித்த அந்த பிரீதிவர்தனன் {மகிழ்ச்சியை அதிகரிப்பவனான அந்த சுபார்ஷ்வன்}, எது தத்துவமோ அதை {உள்ளதை உள்ளபடியே} இந்த வசனத்தில் சொன்னான்:(11) “தாதா {ஐயா}, மாமிசம் விரும்பி, தகுந்த காலத்தில் வானத்தில் உயர்ந்து, மஹேந்திர கிரியின் துவாரத்தை மறைத்தபடியே பறந்து கொண்டிருந்தேன்.(12) அங்கே சாகரத்தின் அந்தரத்தில் திரியும் ஆயிரக்கணக்கான உயிரினங்களின் பாதையை முழுமையாகத் தடுத்தபடி கீழ்நோக்கிய முகத்துடன் நான் பறந்து கொண்டிருந்தேன்.(13) பிளந்த அஞ்சன மலைக்கு ஒப்பான எவனோ ஒருவன், சூரிய உதயத்திற்கு சமமான பிரபையுடைய ஸ்திரீயை எடுத்துக் கொண்டு செல்வதை நான் அங்கே கண்டேன்.(14) 

Suparshva obstructing Ravana

அவ்வாறு அவ்விருவரையும் கண்டதும், ஆஹாரத்திற்குப் பயன்படுவார்கள் என்று நிச்சயம் செய்து கொண்டேன். அப்போது, பணிவுடனும், அடக்கத்துடனும் வழிவிடுமாறு என்னிடம் அவன் யாசித்தான்.(15) நல்வார்த்தைகளால் வேண்டுவோரைத் தாக்கும் ஜனங்கள், புவியில் நீசர்களிலும் எவருமில்லையே. ஐயோ, என்விதமானவர்களைக் குறித்து என்ன சொல்வது?(16) அவன் தேஜஸ்ஸால் வானத்தை மறைத்தபடியே வேகமாக சென்று விட்டான். அப்போது வானத்தில் திரியும் பூதங்கள் என்னை அணுகி மெச்சினார்கள்.(17) “நல்லவேளை சீதை ஜீவித்திருக்கிறாள் {பிழைத்திருக்கிறாள்}. காக்கத்தகுந்தவளுடன் கூடிய அவன் எப்படியோ சென்றுவிட்டான். சந்தேகமில்லாமல் உனக்கு ஸ்வஸ்தி {மங்கலமே}” இவ்வாறே மஹரிஷிகள் என்னிடம் சொன்னார்கள்.(18) 

பிறகு, பரம சோபனமுடைய அந்த சித்தர்கள் என்னிடம் இவ்வாறு சொன்னார்கள், “அந்த ராக்ஷச ராஜா, ராவணன் என்று அழைக்கப்படுகிறான்.{19} கலைந்த ஆபரணங்களுடனும், கௌஷேயத்துடனும் {பட்டுடனும்} கூடியவளும், சோக வேகத்தால் வீழ்த்தப்பட்டவளும், தாசரதியான ராமனின் பாரியையுமான {மனைவியுமான} ஜனகாத்மஜையே {ஜனகனின் மகளான ஜானகியே},{20} அவிழ்ந்த தலைமயிருடன், ராமலக்ஷ்மணர்களின் பெயர்களைச் சொல்லிக் கதறிக் கொண்டிருக்கிறாள்” {என்றனர்}.(19-21அ) தாதா {ஐயா}, எனவேதான் காலதாமதமாகிவிட்டது” என்று வாக்கியவிதாம்வரனான {வாக்கியங்களை அமைப்பதில் சிறந்தவனான} சுபார்ஷ்வன், இந்த அர்த்தத்திலான அனைத்தையும் முழுமையாக என்னிடம் சொன்னான்.(21ஆ,22அ)

அதைக் கேட்டும், என் புத்தியில் பராக்கிரமம் கொஞ்சமும் உண்டாகவில்லை. சிறகுகளற்ற பக்ஷியால் எந்த கர்மத்தையும் எவ்வாறு ஆரம்பிக்க முடியும்?(22ஆ,23அ) வாக்கு, புத்தி, குணம் ஆகியவற்றில் பற்றுடைய என்னால் எதைச் செய்ய இயலுமோ, அது உங்கள் பௌருஷத்தை {ஆண்மையைப்} பொருத்தது. நான் சொல்வதைக் கேட்பீராக.(23ஆ,24அ) உங்கள் அனைவருக்கும் வாக்காலும், மதியாலும் பிரியத்தையே செய்ய விரும்புகிறேன். தாசரதியின் காரியம் எதுவோ, அதுவே எனக்கும் {காரியமாகும்}. இதில் சந்தேகமில்லை.(24ஆ,25அ) மதிசிரேஷ்டர்களும், மனஸ்வினர்களும் {அறிவிற்சிறந்தவர்களும், நல்ல மனநிலை அமைந்தவர்களும்}, பலவந்தர்களும், தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவர்களுமான உங்களை கபிராஜன் {சுக்ரீவன்} அனுப்பியிருக்கிறான்.(25ஆ,26அ) கங்க இறகுகளைக் கொண்டவையும், கூர்மையானவையுமான ராமலக்ஷ்மணர்களின் பாணங்கள், மூன்று உலகங்களையும் காக்கவும், தாக்கவும் போதுமாவை.(26ஆ,27அ) தசக்ரீவன், தேஜஸ்ஸுடனும், பலத்துடனும் கூடியவன்தான் என்றாலும், சமர்த்தர்களான உங்களால் செய்யமுடியாதது எதுவுமில்லை.(27ஆ,இ) எனவே, காலங்கடத்தியது போதும். புத்தியில் நிச்சயம் செய்து கொள்ளுங்கள். உங்களைப் போன்ற புத்திமான்கள், கர்மங்களைச் செய்வதில் தயக்கம் காட்டமாட்டார்கள்” {என்றான் சம்பாதி}.(28)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 59ல் உள்ள சுலோகங்கள்: 28

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை