Friday 17 November 2023

இராமன் வருவான் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 62 (15)

Rama will come | Kishkindha-Kanda-Sarga-61 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சம்பாதிக்கு ஆறுதல் சொன்ன முனிவர்; ராக்ஷசர்களையும், அவர்களது மன்னன் ராவணனையும் அழிக்க ராமன் வருவதைக் குறித்துச் சொன்ன நிசாகரர்...

Sampati and Nishakara
This picture was generated using Artificial Intelligence in Bing website | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கப்பட்ட படம்

இவ்வாறு {சம்பாதி, நிசாகரர் என்ற அந்தச் சிறந்த முனிவரிடம்} முனிசிரேஷ்டரிடம் சொல்லிவிட்டுப் பெரும் துக்கத்தில் அழுது கொண்டிருந்தபோது, அந்த பகவான் {நிசாகரர்}, ஒரு முஹூர்த்தம் தியானித்துவிட்டு, இதைச் சொன்னார்:(1) “உனக்கு மீண்டும் வேறு சிறகுகளும், நல்ல இறகுகளும் உண்டாகும். உன் கண்பார்வையும், பிராணன்களும், விக்கிரமும், பலமும் திரும்பக்கிடைக்கும்.(2) மஹத்தான காரியம் நடக்கப் போகிறதென்று கேள்விப்பட்டேன். என் தபத்தினாலும் அவ்வாறே உணர்ந்தேன். நான் சொல்வதைக் கேட்டு அறிந்து கொள்வாயாக.(3) 

தசரதன் என்ற பெயரில் இக்ஷ்வாகுவர்த்தனனான {இக்ஷ்வாகு குலத்தை வளர்ப்பவனான} எவனோ ஒரு ராஜா இருக்கிறான். அவனுக்கு ராமன் என்ற பெயரில் மஹாதேஜஸ்ஸுடன் கூடிய புத்திரன் உண்டாவான்.(4) அந்த சத்தியப் பராக்கிரமன் {ராமன்}, பிதாவால் {தசரதனால்} நியமிக்கப்பட்ட அர்த்தத்திற்காக, உடன்பிறந்த லக்ஷ்மணன் சகிதனாக அரண்யம் செல்வான்.(5) ஜனஸ்தானத்தில் இருந்து, அவனது பாரியையை {சீதையை}, ராக்ஷசேந்திரனும், ஸுரர்களாலும், தானவர்களாலும் வதம் செய்யப்பட முடியாதவனும், ராவணன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு நைர்ருதன் {ராக்ஷசன்} கடத்திச் செல்வான்.(6) 

மஹாபாக்கியவதியும், புகழ்பெற்றவளுமான அந்த மைதிலி, பக்ஷணங்கள், போஜனங்களை {ஆசையைத் தூண்டும் வகையில்} காட்டினாலும், அவற்றை பக்ஷிக்காமல் துக்கத்தில் மூழ்கியிருப்பாள்.(7) இதை வாசவன் {இந்திரன்} அறிந்து, ஸுரர்களுக்கும் கிடைப்பதற்கரியதும், அம்ருதம் என்றும் எந்த அன்னம் அறியப்படுமோ அந்தப் பரம அன்னத்தை வைதேஹிக்குக் கொடுப்பான்.(8) மைதிலி, அந்த அன்னத்தை அடைந்ததும், “இஃது இந்திரனுடையது” என்பதை அறிந்து, முதல் கவளத்தை எடுத்து, ராமனுக்காக பூதலத்தில் வைத்து,(9) “என் பர்த்தாவும் {ராமரும்}, மைத்துனரான லக்ஷ்மணரும் ஜீவித்திருந்தாலும், அல்லது தேவத்வத்தை அடைந்திருந்தாலும், அவ்விருவருக்குமே இந்த அன்னம்” என்பாள்.(10)

விஹங்கமா {வானில் பறப்பவனே, சம்பாதி}, ராம தூதர்களாக அனுப்பப்படும் பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள், சீதையைத் தேடி} அங்கே வருவார்கள். நீ அவர்களிடம் ராமனின் மஹிஷியை {சீதையைக்} குறித்துச் சொல்வாயாக.(11) எங்கும் போகாதே. இவ்வகையிலான நீ எங்கே செல்ல விரும்புவாய்? தேசத்திற்காகவும், காலத்திற்காகவும் காத்திருந்தால், உன் சிறகுகள் இரண்டையும் மீண்டும் அடைவாய்[1].(12) இப்போதே உனக்குச் சிறகுகளைக் கொடுக்கும் உற்சாகம் எனக்கில்லை. எனவே, நீ இங்கேயே இருந்து, உலகங்களுக்கு ஹிதமான காரியத்தைச் செய்து கொண்டிருப்பாயாக[2].(13)

[1] கம்பராமாயணத்தில் முனிவர் நிசாகரர் அல்லாமல், இந்த வரத்தை சூரியனே கொடுப்பதாக வருகிறது. அது பின்வருமாறு:

மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமர் பேரை
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான்

- கம்பராமாயணம் 4703ம் பாடல், சம்பாதிப் படலம்

பொருள்: மண்ணில் விழுந்த என்னை, வானத்தில் விளங்குகின்ற வள்ளல் {சூரியன்}, தன் கண்களால் நோக்கி, என் மீது கொண்ட இரக்கத்தால், “சனகனின் அன்பு மகளின் இடையீட்டால் {சீதை அபகரிக்கப்பட்ட பிறகு} வரும் வானர வீரர்கள், ராமன் பெயரை மனத்தில் எண்ணி உச்சரிக்குங்காலத்தில், நீ மீண்டும் சிறகுகள் பெற்று எழுவாய்” என்றான்.

[2] இந்த இடத்தில், “இப்போதைக்கு உனக்கு நல்ல சிறிய சிறகுகளைக் கொடுக்கிறேன்” என்று சில பதிப்புகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

Sampati and vanaras

அந்த நிருப புத்திரர்கள் {இளவரசர்களான ராமலக்ஷ்மணர்கள்} இருவருக்காகவும், பிராமணர்களுக்காகவும், குருக்களுக்காகவும், முனிக்களுக்காகவும், வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்} அந்தக் காரியத்தை நீ செய்வாயாக.(14) உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் நானும் காண விரும்பினாலும், நீண்ட காலம் பிராணன்களைத் தரித்துக் கொள்வதில் {எனக்கு} விருப்பமில்லை. களேவரத்தை {பூதவுடலைக்} கைவிடப் போகிறேன்” {என்றார் நிசாகரர்}. தத்துவார்த்தங்களைக் கண்டுணர்ந்த மஹரிஷி {நிசாகரர்} இதை இவ்வாறே சொன்னார்” {என்று அங்கதனிடம் சொன்னான் சம்பாதி}.(15)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 62ல் உள்ள சுலோகங்கள்: 15

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை