Monday 13 November 2023

சம்பாதி கொடுத்த குறிப்புகள் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 58 (37)

The indications given by Sampaati | Kishkindha-Kanda-Sarga-58 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சம்பாதி தன் கதையை வானரர்களிடம் சொன்னது; இராவணன் சீதையை லங்கைக்குக் கொண்டு சென்றதைச் சொன்னது...

Sampaati speaking to vanaras

ஜீவிதத்தைத் துறந்த வானரர்கள், இவ்வாறான கருணைக்குரிய வாக்கியத்தைச் சொன்னபோது, மஹாஸ்வனம் கொண்ட கிருத்ரன் {பெருங்குரல் படைத்த கழுகான சம்பாதி}, கண்ணீருடன் வானரர்களிடம் {பின்வருமாறு} பேசினான்:(1) “வானரர்களே, எவன் பலவானான ராவணனால் யுத்தத்தில் கொல்லப்பட்டானெனச் சொல்லப்படுகிறானோ, அந்த ஜடாயு என்ற பெயருடையவன் என்னுடன் பிறந்த இளையவனாவான்.(2) அதைக் கேட்டாலும், விருத்தபாவத்தாலும் {முதுமையாலும்}, சிறகுகள் இல்லாததாலும் நான் பொறுத்திருக்கிறேன். இப்போது என்னிடம் உடன்பிறந்தானின் வைரியை {பகைவனை} எதிர்க்கும் சக்தி இல்லையே.(3)

பூர்வத்தில் விருத்திர வதம் நடைபெற்றபோது, அவனும் {ஜடாயுவும்}, நானும் ஜயம் கொள்ள {உயரப் பறப்பதில் ஒருவரையொருவர் வெல்ல} விரும்பினோம். ஜுவலிக்கும் கதிர்களை மாலையாகக் கொண்ட ஆதித்யனை {சூரியனை} நாங்கள் நெருங்கினோம்.(4) பரந்த ஆகாச மார்க்கத்தில், பெரும் வேகத்துடன் சென்று கொண்டிருந்த போது, மத்திய பிராப்த {நடுப்பகல் வேளைச்} சூரியனால் ஜடாயு கீழே இறங்கினான்.(5) உடன்பிறந்தவன் சூரியக் கதிர்களால் வேதனையடைவதைக் கண்டு, பரம வருத்தமடைந்த நான், சினேகத்தால் என்னிரு சிறகுகளால் {அவனை} மறைக்கத் தொடங்கினேன்.(6) வானரரிஷபர்களே, நான் முழுமையாக எரிந்த சிறகுகளுடன் விந்தியத்தில் விழுந்தேன்[1]. இங்கே வசித்திருக்கும்போது நான் என்னுடன்பிறந்தானின் அனுபவங்களைக் கவனியாதிருந்துவிட்டேன்” {என்றான் சம்பாதி}.(7)

[1] முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி
வந்ததெனன் மறைத்தலொடும் மற்று அவன் மறையப் போனான்
வெந்து மெய் இறகு தீந்து விழுந்தெனன் விளிகிலாதேன்

- கம்பராமாயணம் 4702ம் பாடல், சம்பாதி படலம்

பொருள்: எனக்குமுன் மேலே சென்ற என் தம்பியின் {சடாயுவின்} மேனியை எரிக்கும் நெருப்பு விரைவாகச் சுட்டெரிக்கும் காலத்தில், "என் தந்தையே நீ என்னைக் காப்பாற்று" என்றான். நானும் பெரிய என்னிரு சிறகுகளையும் பரப்பி வந்து மறைக்கவே அவன் {தன்மேல் வெப்பம் படாதபடி} மறைந்து சென்றான். {நான்} உடல் வெந்து, இறகுகள் கருகியும் உயிர் அழியாதவனாக விழுந்தேன்.

ஜடாயுவுடன் பிறந்த சம்பாதி, இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, மஹாபிராஜ்ஞனும் {பேரறிவாளனும்}, யுவராஜாவுமான அங்கதன் அதற்கு {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(8) “நீர் சொன்னதை நான் கேட்டேன். ஜடாயுவுடன் பிறந்தவரான நீர், அந்த ராக்ஷசனின் நிலயத்தை அறிந்திருந்தால் சொல்வீராக.(9) தீர்க்க தரிசனமற்ற ராக்ஷச அதமனான அந்த ராவணன் அருகிலோ, தூரத்திலோ இருப்பதை நீர் அறிந்தால், எங்களுக்குச் சொல்வீராக” {என்றான் அங்கதன்}.(10)

அப்போது ஜடாயுவுடன் பிறந்த மூத்தவனான அந்த மஹாதேஜஸ்வி {சம்பாதி}, வானரர்களுக்குப் பெரிதும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதும், தனக்குத் தகுந்ததுமான {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(11) “பிலவங்கமர்களே {தாவிச் செல்லும் குரங்குகளே}, முழுமையாக எரிந்த சிறகுகளுடன் கூடியவனும், வீரியம் இல்லாத கிருத்ரனுமான {கழுகுமான} நான், வாக்கில் மாத்திரமே ராமனுக்கான உத்தம சகாயத்தைச் செய்ய இயன்றவனாக இருக்கிறேன்.(12) வாருண லோகம் தொடர்பாக, திரைவிக்கிரம விஷ்ணுவையும் {மூன்றடியில் உலகை அளந்த வாமனனையும்}, தேவாசுரப் போர்களையும், அம்ருத மந்தனத்தையும் {அமுதத்திற்காகப் பெருங்கடல் கடையப்பட்டதையும்} நான் அறிவேன்.(13) இராமனுக்கு எது இங்கே காரியமோ அதுவே நான் பிரதமமாக {முதன்மையாகச்} செய்ய வேண்டியதாகும். முதுமையினால் என் தேஜஸ் குன்றியது; பிராணன்களும் தளர்ந்திருக்கின்றன.(14) 

ரூபசம்பன்னையும் {வடிவத்தையே செல்வமாகக் கொண்டவளும்}, சர்வ ஆபரண பூஷிதையுமான {அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமான} ஓர் இளம்பெண்ணை, துராத்மாவான ராவணன் கடத்திச் செல்வதை நான் கண்டேன்.{15}, “இராமரே, ராமரே” என்றும், “இலக்ஷ்மணரே” என்றும் கதறியவளும், மேனியெல்லாம் நடுங்கியவளுமான அந்த பாமினி {அழகிய பெண்}, தன் பூஷணங்களை {ஆபரணங்களை} வீசி எறிந்துக் கொண்டிருந்தாள்.(15,16) கரிய ராக்ஷசனிடம் {ராவணனின் இடையில்} இருந்த அவளது உத்தம கௌஷேயம் {பட்டாடை}, சைலத்தின் உச்சியில் சூரியப்பிரபையைப் போலவோ, மேகத்தில் மின்னலைப் போலவோ பிரகாசித்துக் கொண்டிருந்தது.(17) இராமனின் கீர்த்திகளை அவள் சொல்லிக் கொண்டிருந்ததால், அவளே சீதை என்று நான் நினைக்கிறேன். நான் அந்த ராக்ஷசனின் நிலயத்தைச் சொல்கிறேன், கேட்பீராக.(18)

விஷ்ரவஸின் புத்திரனும், சாக்ஷாத் வைஷ்ரவணனுடன் {குபேரனுடன்} பிறந்தவனும், ராவணன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன் லங்கை என்ற நகரை ஆள்கிறான்[2].(19) இங்கிருந்து சம்பூர்ணமாக நூறு யோஜனை தொலைவில், சமுத்திர த்வீபம் {கடற்தீவு ஒன்று} இருக்கிறது. அதில் விஷ்வகர்மனால் நிர்மாணிக்கப்பட்ட ரம்மியமான லங்காபுரி இருக்கிறது[3].(20) ஜாம்பூநதமயமான சித்திர துவாரங்களுடனும் {தங்கமயமான அழகிய வாயில்களுடனும்}, காஞ்சன வேதிகைகளுடனும், ஹேம வர்ணத்துடனும் கூடிய மஹத்தான பிராசாதங்கள் {பெரும் மாளிகைகள்} அங்கே சமமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. அர்க்கனின் {சூரியனின்} வர்ணத்திலான மஹத்தான பிராகாரங்களால் {மதில்களால்} அது நன்றாக சூழப்பட்டிருக்கிறது.(21,22அ) தீனமானவளும், கௌஷேய வாசினியுமான {பட்டு வஸ்திரம் அணிந்தவளுமான} வைதேஹி, அங்கே ராவணனின் அந்தப்புரத்தில் அடைக்கப்பட்டு, ராக்ஷசிகளால் காவல் காக்கப்படுபவளாக வசித்து வருகிறாள். அங்கே ராஜா ஜனகனின் மகளான மைதிலியைக் காணலாம்.(22ஆ,23) சுற்றிலும் சாகரத்தால் சூழப்பட்ட லங்கையை, சாகரத்தின் அந்தத்திலிருந்து சம்பூர்ணமாக நூறு யோஜனை தொலைவில் அடையலாம்.{24} பிலவங்கமர்களே, தக்ஷிண தீரத்தை {கடலின் தென் கரையை} அடையும்போது ராவணனைக் காணலாம்[4]. காலதாமதமின்றி அங்கே துரிதமாகத் தாண்டிச் சென்று வெல்வீராக.(24,25)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே வால்மீகியின் நடை போற்றப்படுகிறது. ஆரண்ய காண்டத்தில் இந்த சுலோகத்தின் முதல் வரியை அப்படியே ஜடாயு சொல்கிறான், ஆனால் இரண்டாம் வரியைச் சொல்வதற்குள் இறக்கிறான் {3:68:16}. ஜடாயு மேற்கண்டவாறு, “கடத்தியவன் ராவணன்; அவன் இலங்கையில் இருக்கிறான்” என்ற இரண்டாம் வரியையும் சொல்லியிருந்தால், ராமன் நேரடியாக லங்கைக்குச் சென்றிருப்பான் என்பதால் கிஷ்கிந்தா காண்டமோ, சுந்தரகாண்டமோ தேவைப்படாது. வாலியோ, சுக்ரீவனோ, ஹனுமானோ தேவைப்படமாட்டார்கள். இராமாயணம் இன்றும் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக ஜீவிப்பதற்கு, பல சந்தர்ப்பங்களில் இந்த வகையில் அமையும் உணர்ச்சிமிகுந்த பகுதிகளே காரணமாகும்” என்றிருக்கிறது.

[3] சம்பாதி இருப்பது விந்தியம் என்றும், அங்கதன் தென் கடற்கரையில் பிராயத்தில் அமர்ந்திருக்கிறான் என்பதையும், தென் கடற்கரையில் இருந்து நூறு யோஜனை தொலைவில் ஒரு சமுத்திர த்வீபத்தில் லங்காபுரி இருக்கிறது என்பதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். தெற்கிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் கூட விந்தியம்தான் என்று கொண்டாலும், அங்கதன் தற்போது இருக்கும் தென் கடற்கரையில் இருந்து லங்காபுரி நூறு யோஜனை என்ற தொலைவில் ஒரு யோஜனை என்பது 8 கி.மீ என்று கொண்டாலும் 800 கி.மீ. தொலைவில் இருக்கிறது என்று கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய இலங்கைத் தீவின் சுற்றளவு 1,340 கி.மீ. ஆகும். தலைமன்னாரில் இருந்து ஹம்பன்தொட்டா வரை 500 கி.மீ ஆகும்.  மற்றொரு சாத்தியக்கூறும் இருக்கிறது. குஜராத்தில் உள்ள விந்திய மலைத்தொடரின் தெற்கேயும் கடல் அமைந்திருக்கிறது. அங்கிருந்து ராமேஸ்வரம் வரையிலான தூரமே கிட்டத்தட்ட 2000 கி.மீ. ஆகும். அதாவது 250 யோஜனைகளாகும். இந்தக் குழப்பத்தினாலேயே சில ஆய்வாளர்கள் ராமாயண கால லங்காபுரி இன்றைய இலங்கைத் தீவல்ல என்ற முடிவுக்கு வருகின்றனர்.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இந்த சர்க்கத்தின் இறுதிக்குறிப்பில், “பிரம்மனின் மானஸபுத்திரர்களில் ஒருவர் புலஸ்தியராவார். அவர், தமது மனைவியான ஹவிர்புக்கிடம் அகஸ்தியர், விஷ்வஸ்ரஸ் {விஷ்ரவஸ்} என்ற மகன்களைப் பெறுகிறார். இந்த விஷ்வரஸுக்கு நான்கு மனைவியர் இருந்தனர். அவரது முதல் மனைவி இளபிதை {இளவிதை / இடபிடை / ஸ்வேதாதேவி} ஆவாள். அவளிடமே விஷ்வஸ்ரஸ் குபேரனை மகனாகப் பெறுகிறான். இரண்டாம் மனைவியானவள், சுமாலியின் மகள் கைகசி {கைகேசி} ஆவாள். இந்தக் கைகசி ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற மூன்று மகன்களைப் பெற்றாள். விஷ்ரவஸின் மூன்றாம் மனைவி, கைகசியின் தங்கையான புஷ்போதகையாவாள். இந்த புஷ்போதகையே யுத்த காண்டத்தில் நாம் சந்திக்கப் போகும் மஹோதரன், பார்ஷ்வாதன் மற்றும் பிறரைப் பெற்றாள். விஷ்ரவஸின் நான்காம் மனைவி, கைகசியின் மற்றொரு தங்கையான ராகை ஆவாள். அவளே சூர்ப்பணகையைப் பெற்றவளாவாள். இராவணனின் மனைவியும், லங்கையின் பேரரசியுமான மண்டோதரி, திதியின் மகனான மயனின் மகளாவாள். மண்டோதரியானவள், சீதை, சாவித்ரி, அனசூயை, திரௌபதி உள்ளிட்ட பெரும் பெண்மணிகளுக்கு சமமாக ஒப்பிடத்தக்கவளாவாள். மந்த உதரி என்றால் மந்தமான கருப்பையைக் கொண்டவள் என்று பொருள் எனவே அவள் மெதுவாகக் கருவுறும் பெண்ணாகக் கருதப்படுகிறாள். மண்டோதரியின் மகன் இந்திரஜித் ஒருவனே ஆவான்” என்றிருக்கிறது.

நீங்கள் {சீதையைக்} கண்டுவிட்டுத் திரும்பி வருவதை நிச்சயம் ஞானத்தால் காண்கிறேன். குலிங்கங்களும் {ஊர்க்குருவிகளும்}, தானியங்களில் ஜீவிக்கும் பிறவும் {பிற பறவைகளும், பூமிக்கு சமீபமான} முதல் பாதையிலும், எஞ்சியவற்றை உண்பவையும் {காக்கைகளும்}, விருக்ஷங்களின் பழங்களை உண்பவையும் {அதற்கு மேல்} இரண்டாம் பாதையிலும், பாசங்கள் {மீன்கொத்திப் பறவைகள்}, குரரங்கள் {ராஜாளிகள்}, கிரௌஞ்சங்கள் ஆகியன மூன்றாம் பாதையிலும், சியேனங்கள் {பருந்துகள்} நான்காம் பாதையிலும், கிருத்ரங்கள் {கழுகுகள்} ஐந்தாம் பாதையிலும் பறக்கின்றன.(26-28அ) பலமும், வீரியமும் நிறைந்தவையும், ரூபத்திலும், யௌவனத்திலும் {வடிவத்திலும், இளமையிலும்} பிரகாசிப்பவையுமான ஹம்சங்களுக்கு {அன்னப்பறவைகளுக்கு} ஆறாம் பாதை. அடுத்தது {ஏழாம் பாதை} வைனதேயனின் {கருடனின்} கதியாகும். வானரரிஷபர்களே, எங்கள் அனைவரின் ஜன்மமும் வைனதேயர்களிடம் {வினதையின் மகன்களான அருணன், கருடன் ஆகியோரிடம்} இருந்து உண்டானதே[5].(28ஆ,29)

[5] 3:14:32,33ல் ஜடாயு, “அருணனும், கருடனும் வினதையின் மகன்கள்” என்றும், “தானும், சம்பாதியும் அருணனின் புதல்வர்கள்” என்றும் ராமனிடம் சொல்கிறான். “சம்பாதி ஆகிய நான், ஜடாயு உள்ளிட்ட எங்கள் குலத்தவர் அனைவருக்கும் ஏழாம் பாதை உண்டு” என்பது இங்கே கருத்து. 

எவனால் இகழத்தக்க கர்மம் செய்யப்பட்டதோ அந்த பிசிதாசனன் {பச்சை மாமிசம் உண்பவன்}, என்னுடன் பிறந்தவனுடன் கொண்ட வைரத்திற்குப் பிரதிகாரியம் {பகைக்கான கைம்மாறு} நிச்சயம் விளையும்.(30) இங்கிருந்தே நான் ராவணனையும், அதேபோல ஜானகியையும் தெளிவாகப் பார்க்கிறேன். எங்களுக்கும் சுபர்ணருக்குரிய {கருடனுக்குரிய} திவ்ய பார்வையும், பலமும் உண்டு.(31) வானரர்களே, எனவே நாங்கள் எங்கள் ஆஹாரத்தை வீரியத்தினாலும், பிறவிப்பயனாலும் நூறு யோஜனை தொலைவிலும் நித்தியம் பார்க்கிறோம்.(32) எங்களின் வாழ்வாதாரம் பிறவிப்பயனால் தூரத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது. சரணயோதினங்களுக்கு {கால்களால் சண்டையிடும் கோழிகளுக்கு} பாத மூலத்தில் {காலடியில்} வாழ்வாதாரம் விதிக்கப்பட்டிருக்கிறது.(33) லவண அம்பசத்தை {உப்பு நீரைத்} தாண்டுவதற்கு ஏதாவது உபாயத்தைக் கண்டு, வைதேஹியை நோக்கிச் சென்று, நோக்கம் நிறைவேறியவர்களாகத் திரும்புவீராக.(34) உங்களின் மூலம் வருணாலயமான சமுத்திரத்தை அடைய விரும்புகிறேன். ஸ்வர்க்கம் சென்றவனும், மஹாத்மாவுமான உடன் பிறந்தவனுக்கு {என் தம்பி ஜடாயுவுக்கு} நீர்க்காணிக்கைக் கொடுக்கப் போகிறேன்” {என்றான் சம்பாதி}.(35)

மஹா ஓஜசர்களான வானரர்கள் {பெரும் வலிமைமிக்க குரங்குகள்}, முற்றிலும் எரிந்த சிறகுகளுடன் கூடிய சம்பாதியை அப்போது நதநதிபதியின் தீரம் இருக்கும் தேசத்திற்கு {நதங்களுக்கும், நதிகளுக்கும் கணவனான கடல் இருக்கும் இடத்திற்கு} அழைத்துச் சென்றனர். {சம்பாதி நீர்க்காணிக்கை அளித்ததும், அவன் வசிப்பிடம் இருந்த} அந்த தேசத்திற்கே அந்தப் பதகேஷ்வரனை {பறவைகள் அரசனைத்} திரும்பக் கொண்டு வந்து சேர்த்தனர். அந்த வானரர்களும் {சீதை பற்றிய} குறிப்புகளை அறிந்து கொண்டதில் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(36,37)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 58ல் உள்ள சுலோகங்கள்: 37

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை