Doubt warded off by Hanuman | Sundara-Kanda-Sarga-68 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரர்கள் கடலைக் கடந்து, தன்னை மீட்பது குறித்த சீதையின் சந்தேகங்களை எப்படி தீர்த்துவைத்தான் என்பதை ராமனிடம் சொன்ன ஹனுமான்...
{ஹனுமான் தொடர்ந்தான்}, "பிறகு, நரவியாகரரே {மனிதர்களில் புலியே, திரும்பி வருவதில்} பரபரப்பாக இருந்த என்னிடம், தான் கொண்டிருக்கும் மதிப்பினாலும், நான் உம்மிடம் கொண்டிருக்கும் சினேகத்தினாலும், நட்பினாலும், பின்நடக்க வேண்டியவை குறித்து மீண்டும் தேவி {பின்வருமாறு} பேசினாள்:(1) "போரில் ராவணனை சீக்கிரமே கொல்வதும், என்னை மீட்பதும் எப்படியோ, அப்படியே பல விதங்களில் தாசரதியான ராமரிடம் சொல்வாயாக.(2) அல்லது, வீரா, அரிந்தமா {பகைவரை வெல்பவனே}, நீ நினைத்தால் ஏதேனுமொரு தேசத்தில் {இடத்தில்} ஒரு நாள் வசித்து, ஓய்வெடுத்த பிறகு நாளை செல்வாயாக.(3) வீரியவானே, உன் இருப்பால், அல்ப பாக்யம் கொண்டவளான எனக்கு, ஒரு முஹூர்த்தமாவது சோகத்திலிருந்து விமோசனம் கிடைக்கும்.(4) விக்ராந்தனான நீ திரும்பிவரச் சென்றபிறகு, என் பிராணன்கள் நிலைப்பதும் சந்தேகமே. இதில் ஐயமில்லை.(5) துக்கத்தின் மேல் துக்கத்தையே பாகமாகக் கொண்டவளும், துக்கத்திலேயே மூழ்கிக் கிடப்பவளுமான எனக்கு, உன்னைக் காணாத சோகம், அதற்குமேலான துக்கத்தில் என்னைப் பரிதபிக்கவே செய்யும்.(6)



















