Wednesday 22 May 2024

அரிஷ்ட மலை | சுந்தர காண்டம் சர்க்கம் - 56 (35)

Arishta mountain | Sundara-Kanda-Sarga-56 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையிடம் விடைபெற்றுக் கொண்ட ஹனுமான்; வடக்குக் கடற்கரை நோக்கிப் புறப்பட்டது; அரிஷ்ட மலை குறித்த வர்ணனை...

Hanuman on Arishta Mountain

பிறகு, சிம்சுபத்தினடியில் {நூக்கம் / கருங்காலி மரத்தினடியில்} நின்று கொண்டிருந்த ஜானகியை வணங்கிவிட்டு, "அதிர்ஷ்டவசமாக நீ இங்கு காயமின்றி இருப்பதைப் பார்க்கிறேன்" என்றான் {ஹனுமன்}.(1)

அப்போது, புறப்பட்டுக் கொண்டிருந்த அந்த ஹனூமந்தனை மீண்டும் மீண்டும் பார்த்த சீதை, பர்த்தாவிடம் கொண்ட சினேஹத்தினால் {தன் கணவன் ராமனின் மீது கொண்ட அன்பால், பின்வரும்} வாக்கியத்தைக் கூறினாள்:(2) "பரவீரக்னா {பகைவீரர்களை அழிப்பவனே}, இந்தக் காரியத்தை நிறைவேற்ற நிச்சயம் நீ மட்டுமே போதும். உன் பெரும்பலம் புகழத்தக்கது.(3) ஆனால், படைகளை அழிக்கவல்லவரான அந்த காகுத்ஸ்தர் {ராமர்}, தன் சரங்களால் லங்கையை நிறைத்து, என்னை அழைத்துச் செல்வதே அவருக்குத் தகுந்ததாக இருக்கும்.(4) எனவே, போரில் சூரரான  மஹாத்மா {ராமர்}, தனக்குத் தகுந்த விக்ராந்தத்தை வெளிப்படுத்துவது எப்படியோ, அப்படியே நீ செயல்படுவாயாக" {என்றாள் சீதை}.(5)

ஹனுமான், அர்த்தம் பொதிந்ததும், காரணங்கள் அமைந்ததும், அவள் அடக்கத்துடன் சொன்னதுமான அந்த வாக்கியத்தைக் கேட்டு, {பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகக் கூறினான்:(6) "காகுத்ஸ்தர் {ராமர்}, ஹரிக்கள், ரிக்ஷங்களின் {குரங்குகள், கரடிகளின்} தலைவர்கள் சூழ சீக்கிரமே வருவார். யுத்தத்தில் பகைவரை வீழ்த்தி, உன் சோகத்தைப் போக்குவார்" {என்றான் ஹனுமான்}.(7) மாருதாத்மஜனான ஹனுமான், இவ்வாறு வைதேஹியை ஆசுவாசப்படுத்திவிட்டு, புறப்படுவதில் தன் மதியை அமைத்துக் கொண்டு, வைதேஹியை வணங்கினான்[1].(8) 

[1] பார்த்தனள் சானகி பாரா
வேர்த்து எரிமேனி குளிர்ந்தாள்
வார்த்தை என் வந்தனை என்னா
போர்த்தொழில் மாருதி போனான்

- கம்பராமாயணம் 6005ம் பாடல், சுந்தர காண்டம் இலங்கை எரியூட்டு படலம்

பொருள்: சீதை பார்த்தாள். பார்த்தவுடன் (ஹனுமானுக்கு என்ன ஆயிற்றோ என) வியர்த்துக் கொதிக்கின்ற தன் உடல் குளிர்ந்தவளானாள். "நான் சொல்ல வேண்டியது ஏதும் உள்ளதா?" என்றாள். "வணக்கம்" என்று சொல்லிவிட்டுப் போர்த்தொழில் செய்யும் மாருதி {ஹனுமான்} புறப்பட்டுச் சென்றான்.

பிறகு, அரிமர்தனனான அந்தக் கபிசார்தூலன் {பகைவரை அழிப்பவனும், குரங்குகளில் புலியுமான ஹனுமான்}, ஸ்வாமியை {தன் தலைவன் ராமனை} தரிசிக்கும் உற்சாகத்துடன், அரிஷ்டம் எனும் சிறந்த கிரியில் {அரிஷ்ட மலையில்} ஏறினான்[2].(9) நெடிது வளர்ந்த பத்மகங்களுடன் {மரங்களுடன் / யானைகளுடன்} கூடிய நீலமயமான {அடர்ப்பச்சை வர்ணத்திலான} வனங்களால் மறைக்கப்பட்டிருந்ததும், சிருங்கங்களுக்கிடையில் உத்தரீயம் {சிகரங்களுக்கிடையில் மேலாடை} போல தொங்கும் மழைமேகங்களுடன் கூடியதும்,(10) ஆங்காங்கே சிதறியிருக்கும் தாதுக்களால், கண்கள் சிமிட்டுவதைப் போலிருந்ததும், சுபமான திவாகரனின் {சூரியக்} கதிர்களால் பிரீதியுடன் துயிலெழுவதைப் போலிருந்ததும்,(11) நானாவித பிரஸ்ரவணங்களில் {மலையருவிகளில்} தெளிவான நீர் பாய்ந்து விழும் உரத்த ஒலியால் பாடுவதைப் போலும், சாத்திரங்களை ஓதத் தொடங்குவதைப் போலும் அந்தப் பர்வதம் {அரிஷ்ட மலை} இருந்தது.(12)

[2] இப்போது இலங்கையில் இரம்பொடை கிராமம் (Ramboda Village) இருக்கும் பகுதியில் இந்த அரிஷ்ட மலை இருந்தது என்று நம்பப்படுகிறது.

ஓங்கி வளர்ந்த தேவதாருக்களுடன் {தேவதாரு மரங்களுடன்}, கைகளை உயர்த்தி நிற்கும் தவசியைப் போலிருந்ததும், பாய்ந்தோடும் ஜலத்தின் கோஷத்தை எங்கும் எதிரொலித்தபடியே உரக்கக் கதறுவதைப் போலிருந்ததும்,(13) வேணுவை {புல்லாங்குழலைப்} போல காற்றில் ஆடும் கீசகங்களால் {மூங்கில்களால்} கூவுவதைப் போலிருந்ததும், அசையும் கரிய சரத்கால வனங்களுடன் நடுங்குவதைப் போலத் தெரிந்ததும்,(14) கொடும் விஷமுடைய பாம்புகள் சீற்றத்துடன் பெருமூச்சுவிடுவதைப் போலிருந்ததும், பனியால் மறைக்கப்பட்ட கம்பீரமான {ஆழமான} குகைகளில் தியானம் செய்வது போலிருந்ததும்,(15) மேகங்கள் சூழ்ந்த சிகரங்களால் ஆகாசத்தில் பரவி இருப்பதைப் போலும், பாதங்களுடன் {தாழ்வரைகளுடன்} அனைத்துப் பக்கங்களிலும் பயணம் புறப்படுவது போல் இருந்ததும்,(16) சாலம், தாலம் {பனை}, அசுவகர்ணங்கள், மூங்கில்கள் ஆகியன பல்வேறு இடங்களில் பரவியிருக்கப்பெற்ற, ஏராளமான குகைகளால் அலங்கரிக்கப்பட்ட கூடங்களுடன் அது {முகடுகளுடன் அந்த அரிஷ்ட மலை} சோபித்துக் கொண்டிருந்தது.(17)

விதவிதமான புஷ்பங்களுடன் கூடிய லதைகளால் {கொடிகளால்} அலங்கரிக்கப்பட்டதும், நானாவித மிருகங்களால் நிறைந்ததும், தாதுப் பெருக்கால் அலங்கரிக்கப்பட்டதும்,(18) ஏராளமான பிரஸ்ரவணங்களுடன் {மலையருவிகளுடன்} கூடியதும், கற்குவியல்களால் அடர்ந்திருந்ததும், மஹரிஷிகள், யக்ஷ, கந்தர்வ, கின்னர, உரகர்களால் சேவிக்கப்பட்டதும்,(19) கொடிகளாலும், மரங்களாலும் நிறைந்ததும், சிங்கங்கள் வசிக்கும் குகைகளுடன் கூடியதும், புலிக்கூட்டங்களால் நிறைந்ததும், சுவையுள்ள கிழங்குகளுடனும், பழங்களுடனும் கூடிய மரங்களைக் கொண்டதுமான(20) அந்தப் பர்வதத்தில் {அரிஷ்ட மலையில்}, பவனாத்மஜனான ஹனுமான், சீக்கிரமே ராமனை தரிசிக்கும் ஆவலில், பெரும் மகிழ்ச்சியுடன் ஏறினான்.(21)

அப்போது, ரம்மியமான கிரிச்சாரல்களில், அவனது பாதத்தின் அடிப்பகுதியில் அழுந்தி, கோஷத்துடன் நொறுங்கிய பாறைகள் துண்டுகளாகச் சிதறி விழுந்தன.(22) லவணாம்பசத்தின் தக்ஷிணத்திலிருந்து உத்தர கரையை {உப்புநீரின் கொள்ளிடமான பெருங்கடலின் தெற்கிலிருந்து, வடகரையை} அடைய விரும்பிய மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, அந்த சைலேந்திரத்தில் ஏறி வளர்ந்தான் {தன் உடலைப் பெருக்கிக் கொண்டான்}.(23) வீரனான பவனாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, பர்வதத்தில் {அரிஷ்ட மலையில்} ஏறிய பிறகு, மீன்களாலும், உரகங்களாலும் {பாம்புகளாலும்} சேவிக்கப்படும் பயங்கரமான சாகரத்தைக் கண்டான்.(24) மாருதனின் ஆத்மசம்பவனான அந்த ஹரிசார்தூலன் {வாயுவின் மைந்தனும், குரங்குகளில் புலியுமான அந்த ஹனுமான்}, ஆகாசத்தில் மாருதனைப் போல, தக்ஷிணத்திலிருந்து உத்தர திசையை {தெற்கிலிருந்து வட திசையை} நோக்கிப் புறப்பட்டான்.(25)

அப்போது அந்தக் கபியால் {குரங்கான ஹனுமானால்} பீடிக்கப்பட்ட அந்த பர்வதோத்தமன் {உத்தம மலையான அரிஷ்ட மலையானவன்}, நடுங்கும் சிகரங்களுடனும், {முறிந்து} வீழும் மரங்களுடனும் பேரிரைச்சலிட்டபடியே, தன்னில் இருந்த பல்வேறு உயிரினங்களுடன் வசுதாதலத்திற்குள் {பூமிக்குள்} பிரவேசித்தான்.(26,27அ) புஷ்பங்களுடன் கூடிய மரங்கள், அவனுடைய {ஹனுமானுடைய} தொடைகளின் வேகத்தால் குலுங்கி, சக்ரனின் ஆயுதத்தால் {இந்திரனின் ஆயுதமான இடியால்} வீழ்த்தப்பட்டதைப் போல் பூதலத்தில் முறிந்து விழுந்தன.(27ஆ,28அ) குகைகளின் மத்தியில் அகப்பட்டுப் பீடிக்கப்பட்டவையும், பேராற்றல் வாய்ந்தவையுமான சிம்ஹங்களின் அந்தப் பயங்கர நாதம், வானத்தைப் பிளப்பதைப் போலக் கேட்டது.(28ஆ,29அ) அச்சமடைந்தவர்களும், கலைந்த ஆடைகளுடன் கூடியவர்களும், பூஷணங்கள் {ஆபரணங்கள்} சிதறியவர்களுமான வித்யாதரிகள் தரணிதரத்திலிருந்து {மலையில் இருந்து} உடனே மேலெழுந்தனர்.(29ஆ,30அ) அதிபிரமாணமுடையவையும் {பேருடல் வாய்த்தவையும்}, எரியும் நாவுகளுடன் கூடியவையும், மஹாவிஷங் கொண்டவையுமான பெரும்பாம்புகள், நசுங்கிய சிரங்களுடனும், கிரீவங்களுடனும் {தலையுடனும், கழுத்துடனும்} ஒன்றாகச் சுருண்டன.(30ஆ,31அ) அப்போது, கின்னர, உரக, கந்தர்வ, யக்ஷ, வித்யாதரர்கள் ஆகியோர், பீடிக்கப்பட்ட அந்தச் சிறந்த மலையைக் கைவிட்டு ககனத்தில் {வானத்தில்} உயர்ந்தனர்.(31ஆ,32அ) 

அந்த பலவானால் பீடிக்கப்பட்டவனும், மரங்களால் மகுடம் சூட்டப்பட்ட உயர்ந்த சிகரங்களுடன் கூடியவனும், பூமிதரனுமான {மலையுமான} அந்த ஸ்ரீமான் {அரிஷ்ட மலையானவன்}, ரசாதலத்திற்குள் பிரவேசித்தான்.(32ஆ,33அ) பத்து யோஜனைகள் விஸ்தாரத்துடனும், முப்பது யோஜனைகள் உயரத்துடனும் கூடிய அந்த தராதரன் {அரிஷ்ட மலையானவன்}, முழுமையாக தரணியின் {பூமியின்} மட்டத்தைக் கொண்டவனானான்.(33ஆ,34அ) அந்த ஹரி {குரங்கான ஹனுமான்}, அலைகள் மோதும் கரைகளைக் கொண்ட, பயங்கரமான லவணார்ணவத்தை {உப்புநீர்க்கடலை} விளையாட்டாகத் தாண்ட விரும்பி நபத்தில் {வானத்தில்} தாவினான்.(34ஆ,35)

சுந்தர காண்டம் சர்க்கம் – 56ல் உள்ள சுலோகங்கள்: 35


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை