Saturday 22 June 2024

சுக்ரீவனின் மகிழ்ச்சி | சுந்தர காண்டம் சர்க்கம் - 63 (29)

The joy of Sugreeva | Sundara-Kanda-Sarga-63 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மதுவன அழிவைக் குறித்துக் கவலையுற வேண்டாமென ததிமுகனிடம் சொன்ன சுக்ரீவன்; ஹனுமான், அங்கதன் உள்ளிட்டோரை உடனே அனுப்புமாறு கேட்டுக் கொண்டது...

Dadhimukha complaining to Sugreeva while Lakhsmana was watching

தலை {தன் காலில்பட} விழும் வானரத்தை {ததிமுகனைக்} கண்ட வானரரிஷபன் {சுக்ரீவன்}, கலங்கிய ஹிருதயத்துடன் இந்த வாக்கியங்களைக் கூறினான்:(1) "எழுவீர், எழுவீராக. நீர் என் பாதத்தில் விழுவது ஏன்? உமக்கு அபயம் அளிக்கிறேன். வீரரே, அனைத்தையும் உண்மையாகச் சொல்வீராக" {என்றான் சுக்ரீவன்}.(2)

மஹாபிராஜ்ஞனான {பெரும் ஞானியான} அந்த ததிமுகன், மஹாத்மாவான அந்த சுக்ரீவனால் நம்பிக்கை அளிக்கப்பட்டவனாக  எழுந்து {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(3) "இராஜாவே, ரிக்ஷராஜாவாலோ, உன்னாலோ, வாலியாலோ வனத்தில் பிறர் புக பூர்வத்தில் அனுமதிக்கப்பட்டதில்லை. அதை {வனத்தை} வானரர்கள் பக்ஷிக்கிறார்கள்.(4) வனரக்ஷகர்களான இவர்கள் அச்சுறுத்தியபோதும், வானரர்கள் அதைச் சிந்தனையிலும் கொள்ளாமல் {பழங்களை} பக்ஷித்துக் கொண்டும், மதுவைப் பருகிக் கொண்டும் இருக்கிறார்கள்.(5) சிலர் எஞ்சியவற்றை {எஞ்சிய மதுவை / தேனை} அங்கேயே வீசி எறிகிறார்கள். இன்னும் வேறு சிலர் பக்ஷிப்பதைத் தடுத்த அனைவரிடமும் தங்கள் புருவங்களை {நெரித்துக்} காட்டுகின்றனர்.(6) இவர்கள் கோபமடைந்து அந்த வனத்தில் இருந்து அவர்களை விரட்டியபோது, குரோதமடைந்த அந்த வானரபுங்கவர்களால் அச்சுறுத்தப்பட்டனர்.(7) வானரரிஷபா, சிவந்த நயனங்களுடன் கூடிய அந்த வானரவீரர்கள் பலரும், குரோதத்துடன் இந்த ஹரயர்களை விரட்டிவிட்டனர்.(8) சிலர் கைகளால் அறையப்பட்டனர்; சிலர் முழங்கால்களால் உதைக்கப்பட்டனர்; விரும்பியவாறு பிடித்திழுக்கப்பட்டு தேவமார்க்கம் காட்டப்பட்டனர் {வானத்தில் தூக்கி வீசப்பட்டனர்}.(9) நீ தலைவனாக இருக்கும்போது இந்த சூரர்களை அவர்கள் தாக்கியிருக்கின்றனர். மொத்த மதுவனமும் விரும்பியவாறு முழுமையாக பக்ஷிக்கப்படுகிறது" {என்றான் ததிமுகன்}.(10)

வானரரிஷபனான அந்த சுக்ரீவனிடம் இவ்வாறு {ததிமுகனால்} சொல்லப்பட்டபோது, பகைவீரர்களைக் கொல்பவனும், மஹாபிராஜ்ஞனுமான {பெரும் ஞானியுமான} லக்ஷ்மணன், {பின்வருமாறு} கேட்டான்:(11) "இராஜனே, வனபனான {வனத்தின் பாதுகாவலனான} இந்த வானரன் ஏன் வந்திருக்கிறான்? எந்த அர்த்தத்தைச் சுட்டிக் காட்டும் வாக்கியத்தை துக்கத்துடன் பேசினான்?" {என்று கேட்டான் லக்ஷ்மணன்}.(12)

மஹாத்மாவான லக்ஷ்மணன் இவ்வாறு உரைத்ததும், வாக்கியவிசாரதனான சுக்ரீவன் இந்த வாக்கியத்தை லக்ஷ்மணனிடம் மறுமொழியாகச் சொன்னான்:(13) "ஆரியரே, லக்ஷ்மணரே, வீரக்கபியான ததிமுகர், அங்கதன் முதலிய வீரர்கள் மதுவை பக்ஷிப்பதாகச் சொல்கிறார்.{14} தக்ஷிண திசையில் {சீதையைத்} தேடிச் சென்ற ஹரிபுங்கவர்கள் {குரங்குகளில் முதன்மையானவர்கள்} திரும்பிவிட்டார்கள்.(14,15அ) செய்ய வேண்டியதைச் செய்யாமல், இவர்கள் இத்தகைய உபக்கிரமத்தில் {செயல்பாட்டில்} ஈடுபடமாட்டார்கள். வந்திருக்கும் அந்த வானரர்களால் மொத்த வனமும் அலைக்கழிக்கப்படுகிறது; ஆக்கிரமித்துப் பயன்படுத்தப்படுகிறது.(15ஆ,16) எப்போது இவர்கள் வனத்தை நெருங்கினார்களோ, {அப்போதே} வானரர்களால் கர்மம் சாதிக்கப்பட்டது {என்றாகிறது}; ஹனூமதனால் தேவி காணப்பட்டிருப்பாள்; வேறொருவனாலும் முடியாது; சந்தேஹமில்லை.(17) இந்தக் கர்மத்திற்கு ஹேதுவானவன் ஹனூமதனைத் தவிர வேறொருவனும் இல்லை. அந்த வானரபுங்கவனிடம் காரிய சித்திக்கான மதியும்,{18} வியவசாயமும் {விடாமுயற்சியும்}, வீரியமும், கேள்வியும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.(18,19அ) எதில் ஜாம்பவான் நேதாவாகவும் {தலைவராகவும்}, மஹாபலவானான அங்கதன் பலத்தின் ஈஷ்வரனாகவும் {படைத்தலைவனாகவும்}, ஹனுமான் அதிஷ்டனாகவும் {நிர்வாகியாகவும்} இருப்பார்களோ அதன் கதி வேறாகிப் போகாது.(19ஆ,இ) அங்கதன் முதலிய வீரர்களால் மதுவனம் அழிக்கப்பட்டதாகவும், தடுத்தவர்கள் சகிதராக முழங்கால்களில் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.(20,21அ) விக்கிரமத்திற்காக கொண்டாடப்படுபவரும், ததிமுகர் என்ற பெயரில் புகழ்பெற்றவருமான ஹரி {குங்கானவர்}, இதன் அர்த்தத்தை மதுரவாக்கில் சொல்வதற்காக  இங்கே வந்திருக்கிறார்.(21ஆ,22அ) மஹாபாஹுவே, சௌமித்ரே, சீதை காணப்பட்டாள் என்ற தத்துவத்தை {உண்மையை உள்ளபடியே} உணர்வீராக. சர்வ வானரர்களும் ஒன்று கூடி மது பருகுவதையும் பார்ப்பீராக.(22ஆ,23அ) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, புகழ்பெற்றவர்களான வனௌகசர்கள், வைதேஹியைக் காணவில்லையெனில், வரமாக தத்தம் செய்யப்பட்ட திவ்யமான வனத்திற்குள் அத்துமீறியிருக்கமாட்டார்கள்" {என்றான் சுக்ரீவன்}.(23ஆ,24அ)

அப்போது தர்மாத்மாவான லக்ஷ்மணனும், ராகவனும் மகிழ்ச்சியடைந்தனர்.{24ஆ} சுக்ரீவனின் வதனத்தில் இருந்து வந்தவையும், காதுகளுக்கு சுகமானவையுமான சொற்களைக் கேட்டு ராமன் பெரும் மகிழ்ச்சியடைந்தான். மஹாபலவானான லக்ஷ்மணனும் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(24ஆ,25) ததிமுகனின் இந்த சொற்களைக் கேட்டு சுக்ரீவன் பெரும் மகிச்சியடைந்து, மீண்டும் வனபாலனிடம் {ததிமுகனிடம், பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகச் சொன்னான்:(26) "கர்மங்களை நிறைவேற்றியவர்களான அவர்களால் வனம் அனுபவிக்கப்படுவதில் நான் பிரீதியடைகிறேன். கர்மங்களை நிறைவேற்றியவர்களின் செயல்பாடுகள் பொறுத்துக் கொள்ளத்தகுந்தவையே. பொறுத்துக்கொள்ளவும்படுகிறது.(27) மிருகராஜனின் செருக்கைக் கொண்டவனும், கிருதார்த்தனுமான {நோக்கம் நிறைவேறியவனுமான} ஹனுமதனை முதன்மையாகக் கொண்ட அந்த சாகை மிருகங்களை, ராகவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} சகிதனாகச் சென்று சீக்கிரமே காணவும், சீதையை மீட்பதில் அவர்களின் பிரயத்னத்தைக் கேட்கவும் விரும்புகிறேன்" {என்றான் சுக்ரீவன்}.(28)

அந்த வானரர்களின் ராஜா {சுக்ரீவன்}, பிரீதியால் வரிந்த கண்களுடனும், பெரும்மகிழ்ச்சியுடனும் கூடியவர்களும், சித்தார்த்தர்களுமான {நோக்கம் நிறைவேறியவர்களுமான} குமாரர்களை {ராமலக்ஷ்மணர்களைக்} கண்டும்,  கர்மசித்தியானது தங்கள் கைகளை நெருங்குவதை அறிந்தும் பெரிதும் ஆனந்தம் அடைந்தான்; அங்கமெங்கும் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(29)

சுந்தர காண்டம் சர்க்கம் – 63ல் உள்ள சுலோகங்கள்: 29


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை