Tuesday 30 April 2024

பிரஹஸ்தனின் விசாரணை | சுந்தர காண்டம் சர்க்கம் - 50 (19)

Prahasta's enquiry | Sundara-Kanda-Sarga-50 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமானை விசாரித்த பிரஹஸ்தன்; இராமனின் தூதனாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஹனுமான்...

Hanuman enquired by Ravana and Prahasta

மஹாபாஹுவும், உலகத்தை ராவணஞ் செய்ய {கதறி அழ} வைப்பவனுமான அந்த ராவணன், தன் எதிரில் நிற்கும் அந்த பிங்காக்ஷனை {மஞ்சள் நிறக் கண்களைக் கொண்ட ஹனுமானைப்} பார்த்து, மஹத்தான கோபத்தை அடைந்தான். தேஜஸ்ஸால் நிறைந்த கபீந்திரனைக் குறித்த சந்தேகத்தால் மனம் பீடிக்கப்பட்டவனாக {பின்வருமாறு} ஆலோசித்தான்:(1,2அ) "சாக்ஷாத் நந்தி பகவானே இங்கே வந்திருக்கிறானா என்ன? பூர்வத்தில் கைலாசத்தை நான் அசைத்தபோது, எவன் என்னை சபித்தானோ அவனா {அதே நந்தியா} இவன்? அல்லது மஹாசுரன் பாணன் {பாணாசுரன்} வானர மூர்த்தியாக வந்திருக்கிறானா என்ன?" {என்று நினைத்தான் ராவணன்}.(2ஆ,3)

கோபத்தால் கண்கள் சிவந்த அந்த ராஜா, மந்திரிசத்தமனான {மந்திரிகளில் சிறந்தவனான} பிரஹஸனிடம் காலத்திற்குப் பொருத்தமானவையும், சுருக்கமானவையும், அர்த்தம் பொதிந்தவையுமான {பின்வரும்} இந்தச் சொற்களைச் சொன்னான்:(4) "எங்கிருந்து இங்கே வந்தான்? என்ன காரணத்திற்காக வனபங்கம் செய்தான்? என்ன அர்த்தத்திற்காக ராக்ஷசிகளை அச்சுறுத்தினான்? என்பதை இந்த துராத்மாவிடம் கேட்பாயாக.(5) என்ன பிரயோஜனத்திற்காக வெல்லப்படமுடியாத என் புரீக்கு {நகரத்திற்கு} வந்தான்? என்ன காரியத்திற்காகப் போரிடுகிறான்? என்பதை இந்த துர்மதியனிடம் கேட்பாயாக" {என்றான் ராவணன்}[1].(6)

[1] கம்பராமாயணத்தில் இந்தக் கேள்வியை நேரடியாக ராவணனே ஹனுமானிடம் கேட்கிறான். அது பின்வருமாறு:

யாரை நீ என்னை இங்கு எய்து காரணம்
ஆர் உனைவிடுத்தவர் அறிய ஆணையால்
சோர்விலை சொல்லுதி என்னச் சொல்லினான்
வேரொடும் அமரர்தம் புகழ் விழுங்கினான்

- கம்பராமாயணம் 5877ம் பாடல், சுந்தரகாண்டம், பிணிவீட்டு படலம்

பொருள்: "யார் நீ? இங்கு வந்த காரணம் என்ன? உன்னை அனுப்பியவர் யார்? {என்பனவற்றை நான்} அறிய {என்} ஆணையால் தவறில்லாமல் உள்ளபடியே சொல்வாயாக" என்று சொன்னான் அமரர்களின் புகழை வேரோடு விழுங்கியவன் {ராவணன்}.

Rakshasa minister Prahasta enquires Hanuman

இராவணனின் சொற்களைக் கேட்ட பிரஹஸ்தன், {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், "கபியே {குரங்கே}, ஆசுவாசமடைவாயாக. உனக்கு பத்ரம் {மங்கலம்}. நீ பீதியடைவதற்குக் காரியமேதுமில்லை.(7) வானரா, இந்திரன் உன்னை ராவணாலயத்திற்கு  அனுப்பியிருந்தால், உண்மையைச் சொல்வாயாக. பயம் வேண்டாம். நீ விடுவிக்கப்படுவாய்.(8) நீ வைஷ்ரவணனுக்காகவோ {குபேரனுக்காகவோ}, யமனுக்காகவோ, வருணனுக்காகவோ இந்த சார ரூபத்தை {ஒற்றன் வடிவை} ஏற்று எங்களுடைய இந்தப் புரீக்குள் நுழைந்திருக்கிறாயா? அல்லது வெற்றியை வேண்டி விரும்பும் விஷ்ணுவால் அனுப்பப்பட்ட தூதனா?(9,10அ) வானரா, உன்னுடைய ரூபம் மாத்திரமே வானரம் போலிருக்கிறது. தேஜஸ் வானரத்தினுடையதல்ல. இப்போதே உண்மையைச் சொல்வாயாக. பிறகு, விடுவிக்கப்படுவாய்.(10ஆ,11அ) நீ பொய் சொன்னால் ஜீவிதம் துர்லபமாகும் {உன் வாழ்வு அரிதாகும்}. அல்லது, {யாரும் அனுப்பாமல் நீ வந்திருக்கிறாய் என்றால்}, எதன் நிமித்தம் நீ ராவணாலயத்தில் பிரவேசித்தாய்?" {என்று கேட்டான் பிரஹஸ்தன்}.(11ஆ,12அ)

இவ்வாறு சொல்லப்பட்டபோது, ஹரிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்தவனான ஹனுமான்}, ரக்ஷோகணேஷ்வரனிடம் {ராக்ஷசக் கூட்டத்தின் தலைவனான ராவணனிடம்,{12ஆ} பின்வருமாறு} கூறினான், "நான் சக்ரனுடையவனோ {இந்திரனுடையவனோ}, யமனுடையவனோ, வருணனுடையவனோ அல்ல. எனக்கு தனதனிடம் {குபேரனிடம்} நட்பு இல்லை. அல்லது விஷ்ணுவால் அனுப்பப்பட்டவனுமல்ல.{13} இதுவே என்னுடைய ஜாதி {பிறவி}. இங்கே வந்திருக்கும் நான் வானரனே.(12ஆ-14அ) இராக்ஷசேந்திரனின் தரிசனம் துர்லபமானது {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனைப் பார்ப்பது அரிது}. இராக்ஷசராஜனின் தரிசன அர்த்தத்தை நோக்கமாகக் கொண்டே வனத்தை நான் நாசம் செய்தேன்.(14ஆ,15அ) பிறகு, யுத்தம் செய்யும் விருப்பத்துடன் கூடிய அந்த பலமிக்க ராக்ஷசர்கள் வந்தனர். தேஹத்தை ரக்ஷித்துக் கொள்ளும் அர்த்தத்திற்காகவே ரணத்தில் நான் பிரதியுத்தம் செய்தேன் {போரில் நான் எதிர் தாக்குதல் தொடுத்தேன்}.(15ஆ,16அ) தேவர்களாலும், அசுரர்களாலும் கூட அஸ்திரபாசங்களைக் கொண்டு என்னைக் கட்ட இயலாது. இந்த வரத்தையும் பிதாமஹனிடம் {பிரம்மனிடம்} இருந்தே நான் பெற்றேன்.(16ஆ,17அ) இராஜனைக் காணும் விருப்பத்தால் நான் அஸ்திரத்தை ஏற்றுக் கொண்டேன். இராக்ஷசர்களால் பீடிக்கப்படும்போதே, நான் அஸ்திரத்தில் இருந்து விடுபட்டேன். ஏதோ ராஜகாரியத்தினால் நான் உன்னருகில் வந்திருக்கிறேன்.(17ஆ,18) அளவற்ற ஆற்றல் வாய்ந்த ராகவரின் தூதன் என்று என்னை அறிவாயாக. {இதுவரை பிரஹஸ்தனிடம் பேசிக்கொண்டிருந்தவன், இப்போது ராவணனிடம் பின்வருமாறு பேசினான்} பிரபோ, என்னுடைய இந்த பத்தியமான வசனம் கேட்கப்படட்டும் {நான் சொல்லும் நன்மை பயக்கும் சொற்களை நீ கேட்பாயாக}", {என்றான் ஹனுமான்}.(19)

சுந்தர காண்டம் சர்க்கம் – 50ல் உள்ள சுலோகங்கள்: 19


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை