Wednesday 19 June 2024

மதுவனம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 61 (23)

Madhuvanam | Sundara-Kanda-Sarga-61 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கிஷ்கிந்தையின் புறநகரில் உள்ள மதுவனத்திற்குள் நுழைந்த வானரர்கள், மதுவெறியால் அதை அழித்தது...

Monkeys ruining Madhuvana

அப்போது, அங்கதன் முதலிய வீர வனௌகஸர்களும் {காட்டுவாசிகளும்}, மஹாகபியான ஹனுமானும் ஜாம்பவானின் வாக்கியத்தை ஏற்றுக் கொண்டனர்[1].(1)

[1] கம்பராமாயணத்தில் வானரவீரர்களின் உரைப்படி ஹனுமான் ராமனிடம் முந்திச் சென்றான். 

ஏத நாள்இறந்த சால வருந்தினது இருந்த சேனை
ஆதலால்விரைவின் செல்லல் ஆவதுஅன்று அளியம் எம்மைச்
சாதல் தீர்த்துஅளித்த வீர தலைமகன் மெலிவு தீரப்
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான்

- கம்பராமாயணம் 6018ம் பாடல், சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்

பொருள்: "{சீதையைத்} தேடி வரும் காலம் கடந்தது. உன் வரவை எதிர்நோக்கியிருந்த சேனை துயரம் அடைந்தது. வீரா, நீ அன்பு செலுத்தத்தக்க எங்களை சாவிலிருந்து காத்தாய். எங்களால் வேகமாகச் செல்ல முடியாது. எனவே, தலைமகன் {ராமன்} துன்பம் நீங்க, நீ முன்னதாகப் போவாயாக" என்றனர் {வானரர்கள்}. "நன்று" என்று சொல்லிவிட்டு அனுமன் {அவர்களுக்கு முன்பே கிஷ்கிந்தைக்குப் புறப்பட்டுச்} சென்றான். கம்பராமாயணத்தில் பிற வானரர்கள் செல்வதற்கு முன்பே ராமனிடம் ஹனுமான் செல்வது போல் வால்மீகியில் சொல்லப்படவில்லை. மதுவன அழிவின் போது ஹனுமானும் உடனிருக்கிறான்.

பிரீதியடைந்த அந்தப் பிலவகரிஷபர்கள் அனைவரும் வாயுபுத்திரனை {ஹனுமானை} முன்னிட்டுக் கொண்டு, மஹேந்திரத்தின் {மஹேந்திர மலையின்} உச்சியில் இருந்து தாவிச் சென்றனர்.{2} மேருவுக்கும், மந்தரத்திற்கும் {மேரு மலைக்கும், மந்தர மலைக்கும்} ஒப்பானவர்களும், மதங்கொண்ட மஹாகஜங்களைப் போன்றவர்களும், மஹாபலவான்களும், ஆகாசத்தை மறைத்துவிடுவது போன்ற பேருடல் படைத்தவர்களும்,{3} ஆத்மவந்தர்களான பூதங்களால் {தன்னம்பிக்கையுடன் கூடிய உயிரினங்களால்} புகழப்படுபவனும், மஹாபலவானும், மஹாவேகம் கொண்டவனுமான ஹனூமந்தனை திருஷ்டியால் {தங்கள் பார்வையாலேயே} சுமப்பது போலச் செல்பவர்களும்,{4} ராகவனின் அர்த்தத்தை நிறைவேற்றவும், பரம புகழடையவும் தீர்மானித்தவர்களுமான அவர்கள் {வானரர்கள்},  கர்மசித்திகளால் {செயல்கள் நிறைவேறியதால்} காரியம் கைகூடியதில் மேன்மை பெற்றவர்களாக இருந்தனர்.{5} அவர்கள் அனைவரும் பிரியமான செய்தியைச் சொல்லும் ஆவலுடனிருந்தனர்; அவர்கள் அனைவரும் யுத்தத்தை ஆனந்தமாக எதிர்பார்த்திருந்தனர்; அவர்கள் அனைவரும் ராமனுக்குப் பிரதிகாரம் {கைம்மாறு} செய்வதில் உற்சாக மனம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(2-6)

பிறகு அந்தக் கானனௌகசர்கள் {காட்டில் வாழ்பவர்கள்} வானத்தில் குதித்து, மிதந்து சென்று, நந்தவனத்திற்கு ஒப்பாக மரங்களும், கொடிகளும் நிறைந்த ஒரு வனத்தை அடைந்தனர்.(7) சுக்ரீவனுக்குரியதும், மதுவனம் என்ற பெயரைக் கொண்டதுமான அது {அந்த வனம்}, சர்வ பூதங்களும் அணுகமுடியாத வகையில் ரக்ஷிக்கப்படுவதாகவும், சர்வபூதங்களின் மனங்களையும் கொள்ளை கொள்வதாகவும் இருந்தது.(8) கபிக்களில் {குரங்குகளில்} மஹாவீரியனும், மஹாத்மாவும், கபிமுக்கியனான சுக்ரீவனின் மாதுலனுமான {தாய்மாமனுமான} ததிமுகன் {அந்த வனத்தை} சதா ரக்ஷித்துவந்தான்.(9) அந்த வானரர்கள், வானரேந்திரனின் {வானரர்களின் தலைவனான சுக்ரீவனின்} மனத்திற்கு விருப்பமான அந்த மஹத்தான வனத்தை அடைந்ததும் பரம உற்சாகம் அடைந்தனர்.(10) மதுபிங்களர்களான {தேன்போன்ற நிறம் கொண்டவர்களான} அந்த வானரர்கள், மஹத்தான மதுவனத்தைக் கண்டபோது, பெரும் மகிழ்ச்சியடைந்து, மதுவை {தேனைச்} சுவைப்பதற்கு குமாரனிடம் {அங்கதனிடம் அனுமதி} வேண்டினர்.(11) பிறகு குமாரனும் {அங்கதனும்}, ஜாம்பவதன் முதலிய முதிய கபிக்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, மதுவை பக்ஷிக்க அவர்களுக்கு விடை கொடுத்தான்.(12)

அப்போது, {அவ்வாறு} அனுமதிக்கப்பட்டதில் பெரும் மகிழ்ச்சியடைந்த சர்வ வனௌகசர்களும், களிப்பின் தூண்டுதலில் நர்த்தனம் செய்தனர் {நடனமாடினர்}.(13) சிலர் பாடினர்; சிலர் வணங்கினர் {கவிழ்ந்து விழுந்தனர்}; சிலர் ஆடினர்; சிலர் பரிஹசித்தனர் {சிரித்தனர்}; சிலர் விழுந்தனர்; சிலர் திரிந்தனர்; சிலர் தாவினர்; சிலர் பிதற்றினர்;(14) சிலர் பரஸ்பரம் {ஒருவர் மேல் ஒருவர்} சாய்ந்திருந்தனர்; சிலர் பரஸ்பரம் {ஒருவரையொருவர்} தள்ளிக் கொண்டிருந்தனர்; சிலர் பரஸ்பரம் {ஒருவரோடொருவர்} வாயாடிக் கொண்டிருந்தனர்; சிலர் பரஸ்பரம் {ஒருவரோடொருவர்} விளையாடிக் கொண்டிருந்தனர்;(15) சிலர் மரத்திற்கு மரம் தாவினர்; சிலர் மரத்தின் உச்சியில் இருந்து தரையில் விழுந்தனர்; சிலர் மஹீதலத்திலிருந்து {பூமியில் இருந்து} பெரும் மரங்களின் உச்சியை நோக்கிப் பெரும் வேகத்தில் பாய்ந்தனர்.(16) ஒருவன் பாடும்போது மற்றொருவன் சிரித்துக் கொண்டே அவனை அணுகினான். ஒருவன் சிரிக்கும்போது மற்றொருவன் அழுது கொண்டே அவனை அணுகினான். ஒருவன் அழும்போது மற்றொருவன் {மேலும் அழத்} தூண்டிக் கொண்டே அவனை அணுகினான். ஒருவன் தூண்டும்போது மற்றொருவன் பிதற்றிக் கொண்டே அவனை அணுகினான்.(17) அந்தக் கபி சைனியம், அளவுக்கதிகமாக மதுவைப் பருகியதால் குழம்பிய நிலையை அடைந்தது. அங்கே {அந்த சைனியத்தில்} மதமடையாதவன் எவனுமில்லை; அங்கே திருப்தி அடையாதவனும் எவனுமில்லை.(18)

Dadhimukha interrupting the monkeys angrily

அப்போது, இலைகளும், புஷ்பங்களும் உதிக்கப்பட்டு பக்ஷிக்கப்பட்ட மரங்களையும், பாழான அந்த வனத்தையும் நோக்கிய ததிவக்த்ரன்[2] {ததிமுகன்} என்ற பெயரைக் கொண்ட கபி {குரங்கானவன்}, கோபத்துடன் அந்தக் கபிக்களைத் தடுத்துநிறுத்தினான்.(19) அவர்களில் முதியவர்களால் கடிந்துரைக்கப்பட்டவனும், வனத்தின் கோப்தனும் {காவலனும்}, ஹரிவீரர்களில் முதியவனும், உக்கிர தேஜஸ் படைத்தவனுமான அவன் {ததிமுகன்}, வானரர்களிடமிருந்து வனத்தை ரக்ஷிக்கும் பொருட்டு மீண்டும் தன் மனத்தில் ஆலோசித்தான்.(20) 

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ததிவக்த்ரன் என்பதும், ததிமுகன் என்பதும் ஒன்றுதான் {ஒரே பொருள் கொண்ட பெயர்தான்}" என்றிருக்கிறது.

சிலரிடம் கடுமையாகச் சொன்னான். வேறு சிலரைப் பொருட்படுத்தாமல் தன் உள்ளங்கைகளால் இடைவிடாமல் தாக்கினான். சிலரை நெருங்கிச் சென்று கலகம் செய்தான். அதேபோல, சிலரிடம் சமாதானத்துடன் {நல்வார்த்தைகளுடன்} அணுகினான்.(21) அவனால் {ததிமுகனால்} பலவந்தமாகத் தடுக்கப்பட்டவர்களும், மதத்தால் எழுந்த அடங்கா வேகத்துடன் கூடியவர்களுமான அவர்களால் அவன் விலக்கப்பட்டான்; பயத்தைக் கைவிட்டு இழுக்கப்பட்டான். தோஷத்தை {குற்றத்தைப்} பார்க்காமல் தாக்கவும்பட்டான்.(22) மதத்தால், நகங்களைக் கொண்டு கீறியும், பற்களால் கடித்தும், உள்ளங்கைகளாலும், பாதங்களாலும் அந்தக் கபியை {குரங்கான ததிமுகனை} நன்றாகப் புடைக்கவும் செய்த கபயர்களால் மஹாவனம் விஷயம் {குரங்குகளால் அந்த பெருங்காடானது, மலர்கள், கனிகள், தேன் என ஏதும்} இல்லாததாகச் செய்யப்பட்டது.(23)

சுந்தர காண்டம் சர்க்கம் – 61ல் உள்ள சுலோகங்கள்: 23


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை