Showing posts with label பாலகாண்டம். Show all posts
Showing posts with label பாலகாண்டம். Show all posts

Sunday, 5 December 2021

அயோத்தி பிரவேசம் | பால காண்டம் சர்க்கம் - 77 (29)

Return to Ayodhya | Bala-Kanda-Sarga-77 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மகன்கள், மருமகள்களுடன் அயோத்தி நகருக்குள் நுழைந்த தசரதன்; பரதனும், சத்ருக்கனும் தங்கள் தாய்மாமனுடன் புறப்பட்டுச் சென்றது; ராமன் மற்றும் சீதையின் குணங்கள்...

SitaRama

இராமர் {பரசுராமர்} புறப்பட்டுச் சென்றதும், பிரஷாந்தாத்மாவான தாசரதி {கோபத்தைவிட்டு இதயம் அமைதியடைந்தவனும், தசரதனின் மகனுமான} ராமன், பெரும்புகழ்வாய்ந்த அந்த தனுவை ஒப்பற்றவனான வருணனின் கைகளில் தத்தம் செய்தான்.(1) பின்பு, ரகுநந்தனனான ராமன், வசிஷ்டரையும், பிற முக்கிய ரிஷிகளையும் வணங்கி, திகைத்து நிற்கும் தன் பிதாவை {தசரதனைக்}[1] கண்டு அவனைத் தணிக்கும் வகையில்,(2) "ஜாமதக்னேய ராமர் சென்றுவிட்டார். பாலிக்கும் நாதனான {ஆளும் தலைவரான} உமது ஆணையை எதிர்பார்த்திருக்கும் சதுரங்க சேனைகளுடன் நாம் அயோத்திக்குப் புறப்படலாம்" {என்றான் ராமன்}.(3)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தசரதன் திகைத்து நின்று கொண்டிருந்ததனால், பரசுராமன் ராமனைப் பரதைவமாக ஸ்தோத்ரஞ் செய்ததும், விஷ்ணுதனுஸ்ஸை ராமன் வருணனது கையிற் கொடுத்ததும் அறியானென்று தோன்றுகின்றது. மற்றவர்களுக்கு மாயாதிரோதாநத்தினால் அவை தெரியவில்லை யென்றுணர்க" என்றிருக்கிறது.

தசரத ராஜன், ராமனின் வசனத்தைக் கேட்டுத் தன் மகனான அந்த ராகவனை இருகரங்களிலும் வாரி அணைத்துக் கொண்டு, நெற்றியில் முத்தமிட்டான். ராமர் {பரசுராமர்} சென்றுவிட்டதைக் கேட்டு மகிழ்ச்சியும், பேரானந்தமும் அடைந்த அந்த நிருபன் {மன்னன்}, புத்திரர்களுடன் தானும் புனர்ஜன்மம் அடைந்ததை {மீண்டும் பிறந்ததைப்} போல எண்ணினான்[2].(4,5) பிறகு அந்த ராஜா முன்னேறும்படி அந்தச் சேனைக்கு ஆணையிட்டான். பதாகைகளுடனும், துவஜங்களுடனும் {கொடிக் கம்பங்களுடனும்} கூடியதும், ரம்மியமானதும், தூரிய கோஷங்கள் முழங்கிக் கொண்டிருந்ததும், {புழுதி எழாமல் இருக்க} நனைக்கப்பட்ட ராஜபாதைகளுடன் கூடியதும், மலர்கள் தூவப்பட்டதும், ராஜனின் பிரவேசத்தில் மலர்ந்த முகங்களைக் கொண்டதும், மங்கலமொழிகளைக் கூறி வரவேற்கும் நகரத்தாருடன் கூடியதும், ஜனக்கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த ரம்மியமான {அயோத்தி} நகருக்குள் அவர்கள் நுழைந்தனர்.(6,7,8அ)

[2] தசரதனின் நிலை நரசிம்மாசாரியர் பதிப்பில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: "தசரதசக்ரவர்த்தி இங்ஙனம் ராமன் மொழிந்த வார்த்தைகளைக் கேட்டு அப்புதல்வனை இரண்டு கைகளாலும் கட்டியணைத்து உச்சி மோந்தனன். முதலில் பரசுராமன் போனானென்று ராமன் சொல்லியும், அப்பொழுது பயத்தினால் அவ்வார்த்தையை ஸ்பஷ்டமாகத் தசரத மன்னவன் அறியாதிருந்து கொஞ்சம் தெளிந்த பின்பு மீளவும் ராமன் உரைக்க, பரசுராமன் போனானென்று கேள்விப்பட்டு உடம்பெல்லாம் மயிர்க் கூச்சலிட்டுப் பேராநந்தம் அடைந்து, அப்பொழுது தானும் தன் புத்ரர்களும் தப்பிப் பிழைத்தது புநரிஜந்ம மென்றெண்ணினன்" என்றிருக்கிறது.

நகரத்தாரும், நகரில் வசிக்கும் துவிஜர்களும் {இரு பிறப்பாளர்களும்} தூரத்தில் எதிர்கொண்டு அழைக்க, ஸ்ரீமான்களான புத்திரர்கள் பின்தொடர, ஸ்ரீமானும், பெரும்புகழ்பெற்றவனுமான ராஜா {தசரதன்}, இமயத்தைப் போன்ற கிருஹத்திற்குள் பிரியத்துடன் பிரவேசித்தான் {தன்னுடைய பெரும் மாளிகைக்குள் மகிழ்ச்சியாக நுழைந்தான்}.(8ஆ,9) ராஜா அந்தக் கிருஹத்திற்குள் சென்றதும், ஆனந்தமிக்கத் தன் ஜனங்களால் ஆசையுடன் நன்கு பூஜிக்கப்பட்டான். கௌசல்யையும், சுமித்ரையும், நல்லிடை கொண்ட கைகேயியும், மற்றுமுள்ள ராஜயோஷிதைகளும் {அரசமகளிரும்} மருமகள்களை வரவேற்பதில் ஆனந்தம் அடைந்தனர்.(10,11அ) அப்போது, அந்த நிருபயோஷிதைகளும் {ராஜனின் மனைவியர் அனைவரும்}, மஹாபாக்கியவதியான சீதையையும், பெரும் நற்பேறுபெற்ற ஊர்மிளையையும், குசத்வஜனின் மகள்கள் இருவரையும் {மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோர்} வரவேற்றனர்.(11ஆ,12அ) பட்டாடை உடுத்தியிருந்த அவர்கள் அனைவரும் மங்கல ஆலாபனைகளும், ஹோமமும் செய்து தேவர்களை ஆலயங்களில் பூஜித்து ஒளிர்ந்தனர்.(12ஆ,13அ) அப்போது அந்த ராஜமகள்கள் அனைவரும் வணங்க வேண்டியவர்களை வணங்கி, தனிமையை அடைந்து, பர்த்தாக்களின் {கணவர்களின்} ஸஹிதம் மகிழ்ச்சியுடன் சுகமாக இருந்தனர்.(13ஆ,14அ) புதுமணம் புரிந்தவர்களும், அஸ்திரங்களில் தேர்ச்சியடைந்தவர்களுமான அந்த நரரிஷபர்கள் {மனிதர்களில் காளைகள்}, தனத்துடனும், நல்லிதயம் கொண்ட ஜனங்களுடனும் தங்கள் பிதாவுக்கு {தசரதனுக்குத்} துணை புரிவதில் ஈடுபட்டனர்.(14ஆ,15அ)

சில காலம் சென்றதும், ரகுநந்தனரான தசரதராஜன், கைகேயியின் புத்திரனான தன் மகன் பரதனிடம் சொன்னான்:(15ஆ,16அ) "புத்திரா, கேகயராஜனின் புத்திரனும், வீரனும், உன் மாதுலனுமான {தாய்மாமனுமான} இந்த யுதாஜித் உன்னை அழைத்துச் செல்ல காத்திருக்கிறான்" {என்றான்}.(16ஆ,17அ)

கைகேயி சுதனான பரதன், தசரதன் சொன்ன அனைத்தையும் கேட்ட பிறகு, சத்ருக்னனுடன் கூடியவனாகப் புறப்படத் தயாரானான்.(17ஆ,18அ) அந்த சூரன் {பரதன்}, தன் பிதாவிடமும் {தசரதனிடமும்}, எவருக்கும் வருத்தமின்றிக் காரியங்களைச் செய்யும் ராமனிடமும், மாதாக்களிடமும் விடைபெற்றுக் கொண்டான். பிறகு அந்த நரசிரேஷ்டன் {மனிதர்களில் சிறந்த பரதன்} சத்ருக்னனுடன் சேர்ந்து புறப்பட்டான்.(18ஆ,19அ) அப்போது யுதாஜித், பரதனையும், சத்ருக்னனையும் உறுதியாகப் பற்றிக் கொண்டான்[3]. அந்த வீரன் பெரும் மகிழ்ச்சியுடன் தன் நகருக்குள் பிரவேசித்துத் தன் பிதாவின் மகிழ்ச்சியை அதிகரித்தான்.(19ஆ,20அ)

[3] பாலகாண்டம் 73ம் சர்க்கத்தின் [1]ம் அடிக்குறிப்பில் தேசிராஜு ஹனுமந்தராவ் அவர்கள் விளக்கியிருப்பதற்கு முற்றிலும் வேறுவகையில் இங்கே யுதாஜித் நடந்து கொள்கிறான். அஃதாவது, அவன் தன் தங்கை கைகேயியின் மகனான பரதனை மட்டுமன்றி, அவளது சக்களத்தியான சுமித்ரையின் மகன் சத்ருக்னனையும் உறுதியாகப் பற்றிக் கொண்டு பாசத்துடன் அழைத்துச் செல்கிறான்.  

பரதன் புறப்பட்டுச் சென்ற பிறகு மஹாபலம் பொருந்திய ராமனும், லக்ஷ்மணனும் தேவனைப் போன்ற தங்கள் பிதாவைப் பூஜித்துக் கொண்டிருந்தனர்.(20ஆ,21அ) இராமன், தந்தையின் ஆஜ்ஞையை {ஆணையை} முன்னிட்டுக் கொண்டு, அனைவருக்கும் பிரியமானவையும், ஹிதமானவையுமான {நன்மை விளைவித்துத் தீமையைப் போக்கும்} நகரக் காரியங்களில் முழுமையாக ஈடுபட்டான். அவன் சுய ஒழுக்கத்துடன் மாதாக்களுக்கும், குருக்களுக்கும், குரு காரியங்களுக்கும் செய்ய வேண்டிய காரியங்களைக் காலாகாலத்திற்குக் கவனமாகச் செய்து வந்தான்.(21ஆ-23அ) ராமனின் நடவடிக்கைகளைக் கவனித்து தசரதன் பிரீதியடைந்ததைப் போலவே, பிராமணர்களும், வணிகர்களும், சர்வவிஷயவாசிகளும் {எந்தக் காரியத்திற்காகவும் நகரத்தில் வசித்து வருபவர்களும்} நிறைவடைந்தனர். உலகத்தில் பெரும்புகழ்பெற்றவனும், குணவானும், சத்தியபராக்கிரமனுமான ராமன், அவர்களுக்கு {மேற்சொன்ன பிராமணர் முதலிய அனைவருக்கும்} பூதங்களின் ஸ்வயம்பூவைப் போலத் {உயிரினங்களுக்குப் பிரம்மன் எவ்வாறோ அவ்வாறாகத்} திகழ்ந்தான்.(23ஆ-25அ)

மனஸ்வியான ராமன், எவள் மனத்தைத் துளைத்தானோ அந்த சீதையின் மனத்தில் அர்ப்பணிப்புடன் உறைந்து, அவளுடன் சேர்ந்து பல ருதுக்கள் {பருவ காலங்கள்} இன்புற்றிருந்தான்.(25ஆ,26அ) சீதை, பிதாவால் {தசரதனால்} ஏற்படுத்தப்பட்ட தாரமாக ராமனின் பிரியத்திற்குரியவளாகி இருந்தாள். {சீதையின்} குணத்தினாலும், ரூபகுணத்தினாலும் {அழகினாலும், ராமனிடம்} அந்தப் பிரீதி இன்னும் பெருகிவந்தது.(26ஆ,27அ) பர்த்தாவும் {கணவனும்}, அவளுடைய ஹிருதயத்தில் இருமடங்கு ஆழமாகப் பதிந்தான். ஹிருதயத்தின் அந்தரத்திற்குள் சென்று இருவரும் ஹிருதயங்களால் உரையாடிக் கொண்டனர்.(27ஆ,28அ) ரூபத்தில் தேவதைக்கு ஒப்பானவளும், ஸ்ரீரூபினியும் {உடல்கொண்டு வந்த லக்ஷ்மி தேவியும்}, மைதிலியும் {மிதிலையைச் சேர்ந்தவளும்}, ஜனகனின் மகளுமான {ஜானகியுமான} சீதை அதிக விசேஷங்களை அவனிடம் ஹிருதயப்பூர்வமாக உணர்ந்தாள்[4].(28ஆ,இ) இராஜரிஷிசுதனான {அரசமுனி தசரதனின் மகனான} ராமன், அதியாசை வைத்திருக்கும் அந்த உத்தம ராஜகன்னிகையுடன் சேர்ந்து, ஸ்ரீயுடன் கூடிய அமரேஷ்வரனும், விபுவுமான {எங்குமுள்ளவனுமான} விஷ்ணுவைப் போல அதிகப் பிரகாசத்துடன் ஒளிர்ந்தான்.(29)

[4] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "ராமனது ப்ரீதி அங்ஙனமிருக்க, ஸீதையின் மனத்திலும் அவள் பர்த்தாவாகிய ராமன் இருமடங்காகச் சுற்றிக் கொண்டிருந்தனன். (அதாவது ஸீதையின் மனத்திலும் பர்த்தாவினிடத்தில் ப்ரேமமானது இருமடங்காகப் பெருகிக்கொண்டிருந்தது.) ஸீதையின் மனத்திலுள்ள பதிப்ரேமமானது யாவருமறிய வொண்ணாதபடி மறைந்திருப்பினும், அதை ராமன் அதற்குள்ள அடையாளங்களால் ஊஹித்துத் தெரிந்து கொண்டிருந்தனன். எப்பொழுதும் தான் அவள் மனத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பவனாகையால் அவளது ப்ரேமம் எவ்வளவு மறைந்திருப்பினும், அதை அவன் அறியாதிருப்பனோ? சீதையும் தனது அந்தரங்கத்தை ராமன் அறிவதைக் காட்டிலும் மிகவும் மேலாகவே அவனது மனத்தைத் தான் அறிந்து கொண்டிருந்தனள். எப்படியெனில் ஹீதையோ மிதிலாபுரத்தில் பிறந்தவள்; ஜநகராஜன் புதல்வி. ஆகையால் தேசஸ்வபாவத்தினாலும், வம்ச ஸ்வபாவத்தினாலும் ஸூக்ஷ்மங்களை அறியுந்திறமுடையவள். தேவதைகளைப் போன்றவளாகையால் மிகுந்த திறமையுடையவள்; அழகில் அனைவர்க்கும் புலப்படும்படி வடிவு கொண்ட நேரே ஸ்ரீ மஹாலக்ஷ்மி போலிருப்பவள். ஆகையால் இத்தன்மையளான அப்பெண்மணிக்குப் புத்தி விசேஷம் ஸஹஜமென்பது சொல்ல வேண்டுமோ? ஆகையால் ராமனது மனத்தை அவனையும் விஞ்சித்தான் அறிபவளாகினள்" என்றிருக்கிறது. 

பாலகாண்டம் சர்க்கம் – 77ல் உள்ள சுலோகங்கள் : 29

*******பாலகாண்டம் முற்றும் *******

Previous | Sanskrit | English | Next

Saturday, 4 December 2021

பரசுராமர் கர்வபங்கம் | பால காண்டம் சர்க்கம் - 76 (24)

Parashurama's pride hurt | Bala-Kanda-Sarga-76 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வைஷ்ணவ தனுவை வளைத்த ராமன்; மஹேந்திர மலைக்குத் திரும்பிய பரசுராமர்...

Rama and Parashurama

அப்போது தாசரதி {தசரதனின் மகனான ராமன்}, ஜாமதக்னேயரின் {ஜமதக்னியின் மகனான பரசுராமரின்} வாக்கியத்தைக் கேட்டு, பிதாவின் {தன் தந்தையான தசரதனின்} கௌரவத்தைக் கருதி பேசாமல் இருந்தான். பிறகு ராமன் சொன்னான்:(1) "பார்க்கவரே {பிருகு குலத்தின் பரசுராமரே}, நீர் செய்த செயல்களை நான் கேட்டிருக்கிறேன். பிராமணரே, பிதாவின் கடன் தீர்க்க நீர் செய்தவற்றை நான் பாராட்டுகிறேன்.(2) பார்க்கவரே, வீரியஹீனன் {வீரியமற்றவன்} என்றும், க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் அசக்தன் என்றும் என்னை அவமதித்தீர். என் தேஜஸ்ஸையும், பராக்கிரமத்தையும் இதோ பார்ப்பீராக" {என்றான் ராமன்}.(3)

இலகுபராக்கிரமனான அந்த ராகவன் {கை நளினமும், ஆற்றலும் படைத்தவனான ராமன்}, கோபத்துடன் இதைச் சொல்லிவிட்டு, பார்க்கவரின் கையில் இருந்து அந்த வராயுதத்தையும் {விஷ்ணு தனுசையும்}, சரத்தையும் {கணையையும்} வாங்கினான்[1].(4) ராமன், அந்தத் தனுவை உயர்த்தி, சரத்தைப் பொருத்திக் குறி பார்த்தான். பிறகு ராமன் கோபத்துடன் ஜாமதக்னேய ராமரிடம் இதைச் சொன்னான்:(5) "இராமரே, நீர் பிராமணராக இருப்பதாலும், விஷ்வாமித்ரருக்காகவும்[2] என்னால் பூஜிக்கப்படத் தகுந்தவராக இருக்கிறீர். எனவே, உமது பிராணனைப் போக்கும் சரத்தை ஏவ நான் சக்தனாக இல்லை.(6) இராமரே, உமது நடக்கும் சக்தியையோ, உமது தபோபலத்தால் ஈட்டப்பட்ட ஒப்பற்ற உலகங்களையோ அழிக்க விரும்புகிறேன். நீர் எதை விரும்புகிறீர்?(7) பரபுரஜயம் {பகை நகரங்களில் வெற்றியைத்} தருவதும், வீரியமிக்கதும், பலத்தை {படைகளை} அழிப்பதும், திவ்யமானதுமான இந்த வைஷ்ணவ சரம் வீண் போகாது" {என்றான் ராமன்}.(8)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பத்மபுராணத்திற் சொல்லப்பட்டது: 'தேவி! அந்த ராமன் இங்ஙனம் உரைத்து அந்தப் பரசுராமனிடத்திலிருந்த விஷ்ணு சக்தியுடன் {விஷ்ணுவின் அவதாரமென்கிற விஷ்ணு அம்சத்தையும்} அவ்வைஷ்ண தநுஸ்ஸை வணக்கத்தோடு அவலீலையாக வாங்கிக் கொண்டனன்'" என்றிருக்கிறது.

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "விச்வாமித்ரமுனிவரது உடன்பிறந்தவளாகிய ஸத்தியவதியென்பவள் ரிசீகருடைய பாரியை. ரிசீகர் அவளிடத்தில் ஜமதக்நியைப் படைத்தனர். ஜமதக்நி பரசுராமனைப் பெற்றனன். இப்படிப் பரசுராமன் விச்வாமித்ரமாமுனியோடு பந்துத்வமுடையவனாகையால் விச்வாமித்ரரைப் பற்றிப் பரசுராமனை ராமன் கொல்ல முடியாதிருந்தனனென்று கருத்து" என்றிருக்கிறது.

வராயுததாரியான {சிறந்த ஆயுதத்தைத் தரிக்கும்} ராமனைக் காண்பதற்காக ரிஷிகணங்களும், ஸுரர்களும், பிதாமஹனை முன்னிட்டுக் கொண்டு வந்தனர். கந்தர்வர்கள், அப்சரஸ்கள், சித்தர்கள், சாரணர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள், நாகர்கள் ஆகியோர் அனைவரும் அந்த மஹா அற்புத நிகழ்வைக் காண அங்கே ஒன்றுகூடினர்[3].(9,10) இராமன், வரதனுதரனாக இருந்தபோது {சிறந்த வில்லை ஏந்திக் கொண்டிருந்தபோது} உலகமே திகைத்திருந்தது. ஜாமதக்னேய ராமர், நிர்வீரியராக ராமனை வெறித்துப் பார்த்தார்[4].(11)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படும் அற்புத நிகழ்வானது, ராமன் வில்லை எடுத்துக் கையாண்டது அல்ல; பார்க்கவ ராமரிடம் இருந்த முக்கிய இயல்பு {விஷ்ணு அம்சம்} தசரதராமனுக்கு மாற்றப்பட்டதே இங்கே முக்கிய நிகழ்வு" என்றிருக்கிறது.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பார்க்கவ ராமரிடம் இருந்த விஷ்ணுவின் ஒளியானது, விஷ்ணுவின் நீண்ட வில்லின் வழியாக தசரத ராமனுக்குள் புகுந்தபோது, தசரதர ராமனின் ஒளி, விஷ்ணுவின் ஒளியைப் போலப் பிரகாசித்தது. விஷ்ணு ஒளியின் அந்தப் பிரகாசமே உலகைத் திகைக்கச் செய்தது. அதன் பிறகு ஒளி குன்றிய பார்க்கவ ராமரால் விஷ்ணுவைப் போன்ற ராமனிடம் கண்களை உயர்த்தி வெறித்துப் பார்க்க மட்டுமே முடிந்தது" என்றிருக்கிறது.

{இராமனின்} தேஜஸ்ஸினால் முற்றிலும் வீரியம் அழிந்து திகைத்து நின்ற ஜாமதக்னேயர் {பரசுராமர்}, கமலபத்ராக்ஷனான {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட} ராமனிடம் மந்தம் மந்தமாக {மெதுமெதுவாக} பேசினார்:(12) "பூர்வத்தில் வசுந்தரையை {பூமி அனைத்தையும்} நான் காசியபருக்கு தத்தம் செய்தபோது, "என் ஆட்சிப்பகுதி உன் வசிப்பிடமல்ல" என்று காசியபர் என்னிடம் சொன்னார்.(13) எனவே அந்த குருவசனத்தைக் கேட்டதுமுதல் நான் இரவு காலங்களில் பிருத்வியில் தங்குவதில்லை. காகுத்ஸ்தா, {பூமியை} காசியபருக்குக் கொடுத்துவிட்டேன்.(14) எனவே, வீரா, ராகவா, என்னுடைய நடக்கும் சக்தியை அழிக்காதே. உத்தம பர்வதமான மஹேந்திரத்திற்கு மனோவேகத்தில் நான் செல்ல வேண்டும்.(15) இராமா, என்னுடைய தவத்தால் வென்று ஈட்டப்பட்ட ஒப்பற்ற உலகங்களை இந்த முக்கிய சரத்தால் {கணையால்} அழிப்பாயாக. காலதாமதம் வேண்டாம்.(16)

இந்த தனுசை அலட்சியமாகத் தீண்டியதால், அழிவற்றவனும், ஸுரேஷ்வரனான மதுஹந்தாரன் {தேவர்களின் தலைவனும், மதுவை அழித்த மதுசூதனுமான விஷ்ணு} நீ என நான் உணர்கிறேன். பரந்தபா {பகைவரை அழிப்பவனே}, அருள்நிலை உனக்கு வாய்க்கட்டும்.(17) சர்வ ஸுரகணங்களும் ஒன்றாகத் திரண்டுவந்து ஒப்பற்ற சாதனைகளைச் செய்தவனும், ஒப்பற்ற துவந்தம் செய்பவனுமான உன்னைக் காண்கின்றனர்.(18) காகுத்ஸ்தா, திரிலோகநாதனான உன்னால் நான் தலை கவிழச் செய்யப்பட்டது எனக்கு அவமானமானதல்ல.(19) நல்ல விரதம் கொண்டவனே, ராமா, இந்த ஒப்பற்ற சரத்தை ஏவுவதே உனக்குத்தகும். சரம் விடப்பட்டதும் நான் உத்தம பர்வதமான மஹேந்திரத்திற்குச் செல்வேன்" {என்றார் பரசுராமர்}.(20)

ஜாமதக்னேய ராமரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பிரதாபவானும், ஸ்ரீமானுமான தாசரதிராமன் அந்த உத்தம சரத்தை {கணையை} ஏவினான்.(21) ஜாமதக்னேயர், தாம் தவத்தால் அடைந்த அனைத்து உலகங்களும் ராமனால் அழிக்கப்படுவதைக் கண்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உத்தம பர்வதமான மஹேந்திரத்தை அடைந்தார்.(22) அப்போது சர்வ திசைகளும், உபதிசைகளும் மாசற்றவை ஆகின {இருள் அகன்றன}. ரிஷிகணங்களுடன் கூடிய ஸுரர்கள் {தேவர்கள்} உதாயுதனான {உயர்த்தப்பட்ட ஆயுதத்துடன் கூடிய} ராமனைப் புகழ்ந்தனர்.(23) பிரபுவான ஜாமதக்னேய ராமர், தாசரதி ராமனைக் கொண்டாடி, பிரதக்ஷிணம் செய்து, தம் வழி நோக்கிச் சென்றார்.(24)

பாலகாண்டம் சர்க்கம் – 76ல் உள்ள சுலோகங்கள் : 24

Previous | Sanskrit | English | Next

Thursday, 2 December 2021

பரசுராமர் நிந்தனை | பால காண்டம் சர்க்கம் - 75 (28)

Parashurama's censure | Bala-Kanda-Sarga-75 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தசரதனை அலட்சியம் செய்து, ராமனிடம் வைஷ்ணதனுசில் நாணேற்றச் சொன்ன பரசுராமர்...

Dasharatha Rama and Parashurama

{பரசுராமர் ராமனிடம்}, "தாசரதி {தசரதனின் மகனான} ராமா, வீரா, உன் வீரியம் அற்புதமெனக் கேள்விப்பட்டேன். {சைவ} தனுசை முறித்தது முதலிய காரியங்களையும் முழுமையாக நான் கேட்டேன்.(1) அவ்வகையில், தனுசை {வில்லை} முறித்தது, அற்புதமானதும், சிந்தனைக்கு அப்பாற்பட்டதுமாகும். அதைக் கேள்விப்பட்டதும் நான் மற்றொரு மேலான சுபதனுவை எடுத்து வந்தேன்.(2) கோரஸங்காசத்துடன் கூடியதும் {அதிபயங்கரமானதும்}, ஜமதக்னியிடம் இருந்து பெற்றதுமான இந்தத் தனு மகத்தானதாகும். இதில் சரத்தை {கணையைப்} பொருத்தி இழுத்து உன் பலத்தைக் காட்டுவாயாக.(3) அப்போது நான், இந்தத் தனுசை எடுத்து ஏவும் உன் பலத்தைக் கண்டு கொள்வேன். பிறகு நான், வீரத்திற்குத் தகுந்த துவந்த யுத்தத்தை உனக்குக் கொடுப்பேன் {உன்னுடன் போரிடுவேன்}" என்றார் {பரசுராமர்}.(4)

அப்போது அவரது வசனத்தைக் கேட்ட தசரத ராஜன், துயருற்ற முகத்துடன், தீனனாக {பரிதாபத்திற்குரியவனாகக்} கைகளைக் கூப்பிக் கொண்டு, இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(5) "க்ஷத்திரியர்களின் மீது கொண்ட கோபம் தணிந்தீர். மஹாதபஸ்வியான பிராமணராகவும் இருக்கின்றீர். பாலர்களான என் புத்திரர்களுக்கு அபயம் அளிப்பதே {என் மகன்களின் பயத்தைப் போக்குவதே} உமக்குத் தகும்.(6) {வேத} அத்தியாயங்கள், விரதங்கள் ஆகியவற்றில் ஈடுபடும் பார்க்கவ குலத்தில் பிறந்த நீர், சஸ்திரங்களைக் கைவிடுவதாக சஹஸ்ராக்ஷனிடம் {ஆயிரங்கண் இந்திரனிடம்} பிரதிஜ்ஞை செய்தீர்.(7) அத்தகைய நீர், தர்மத்தில் அர்ப்பணிப்புடன் கூடியவராக, காசியபருக்கு வசுந்தரையை {பூமியை} தத்தம் செய்து, வனத்திற்குச் சென்று, மஹேந்திரத்தை {மகேந்திரமலையை} வசிப்பிடமாக்கிக் கொண்டீர்[1].(8) மஹாமுனியே, நீர் எங்களைச் சர்வநாசம் செய்யவே திரும்ப வந்திருக்கிறீர். {இதன் மூலம்} இராமனை மட்டுமே அழித்தாலும், நாங்கள் அனைவரும் ஜீவித்திருக்க மாட்டோம்" {என்றான் தசரதன்}.(9)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிராமணர்கள் சாந்தமாக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் அது குலைக்கப்பட்டாலும், இரக்கமற்ற க்ஷத்திரியர்களை அழித்துச் சாந்தத்தை அடைந்தீர். இவ்வாறு உமது சீற்றம் தணிந்தது. அமைதியாக தவம் செய்து, உயர்ந்த அருளையும் பெற்றீர். எல்லாம் அறிந்த, முதிர்ந்த பிராமணராக இருந்தும், இப்போது சிறுவர்களுடன் மோதி உமது சாந்தியை மீண்டும் குலைத்துக் கொள்ள விரும்புகிறீர். "சஸ்திரசந்நியாசம் கொள்கிறேன் {ஆயுதம் எடுப்பதைக் கைவிடுகிறேன்}" என்று செய்த உறுதிமொழியை நீர் மீறலாமா? காசியபருக்கு பூமியை தானமளித்துவிட்டு இங்கே நீர் திரும்பிவரலாமா? என்பது இங்கே மறைமுகப் பொருள்" என்றிருக்கிறது


தசரதன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, பிரதாபவானான ஜாமதக்னேயர் {ஜமதக்னியின் மகனான பரசுராமர்}, அந்த வாக்கியத்தை அலட்சியம் செய்து, ராமனிடம் நேரடியாகச் சொன்னார்:(10) "சிரேஷ்டமானவையும், திவ்யமானவையும் {சிறந்தவையும், தெய்வீகமானவையும்}, உலகத்தால் பூஜிக்கப்படுபவையும், திடமானவையும், பலமானவையும், முக்கியமானவையுமான இரண்டு தனுக்கள் விஷ்வகர்மனால் நன்றாக அமைக்கப்பட்டனவாகும்.(11) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, காகுத்ஸ்தா, எதை நீ பங்கம் செய்தாயோ, அது போரிடும் திரையம்பகன் {சிவன்}, திரிபுரத்தை அழிப்பதற்காக ஸுரர்களால் {தேவர்களால்} கொடுக்கப்பட்டது.(12)
அழிவற்றதான இந்த இரண்டாவது {வில்}, ஸுரோத்தமர்களால் விஷ்ணுவுக்குத் தத்தம் செய்யப்பட்டது. காகுத்ஸ்தா, ராமா, பரபுர ஜயத்தை {அடுத்தவர் / பகைவர் நகரங்களைக் கைப்பற்றுவதில் வெற்றியைக்} கொடுத்த வைஷ்ணவ தனுவான இது, {மிதிலையில் நீ முறித்த} ரௌத்ரதனுசுக்கு சமமான சாரம் கொண்டதாகும்.(13,14அ)

ஒரு காலத்தில் சர்வ தேவர்களும், சிதிகண்டன் {சிவன்}, விஷ்ணு ஆகியோரின் பலாபலத்தை {பலத்தையும், பலவீனத்தையும்} அறிந்து கொள்ளப் பிதாமஹனிடம் {பிரம்மனிடம்} கேட்டுக் கொண்டிருந்தனர்[2]. சத்தியவாதிகளில் சிறந்த பிதாமஹன், தேவர்களின் நோக்கத்தை உணர்ந்து, அவர்களுக்கிடையில் {சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில்} விரோதத்தை உண்டாக்கத் தொடங்கினான்[3].(14ஆ-16அ) விரோதத்தில் பரஸ்பரம் ஜயமடைய விரும்பிய சிதிகண்டனும், விஷ்ணுவும், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கும் மஹாயுத்தம் செய்தனர்.(16ஆ,17அ) அப்போது உண்டான {விஷ்ணுவின்} ஹுங்காரத்தில், பயங்கரப் பராக்கிரமம் வாய்ந்த சைவதனு கொட்டாவி விட்டது {சிதிலமடைந்தது}. திரிலோசனனான {முக்கண்ணனான} மஹாதேவனும் ஸ்தம்பித்து நின்றான்.(17ஆ,18அ) தேவர்களால் கூட்டப்பட்ட ரிஷி சங்கங்களும், சாரணர்களும் அவ்விருவரிடம் {சிவனிடமும், விஷ்ணுவிடமும்} வேண்டினர். பிறகு அந்த ஸுரோத்தமர்கள் {சிவனும், விஷ்ணுவும்} தணிவடைந்து, நட்புறவை அடைந்தனர்.(18ஆ,19அ) {விஷ்ணுவின்} பராக்கிரமத்தால் சிதிலமடைந்த அந்தச் சைவ தனுவைக் கண்டு ரிஷிகணங்களும், தேவர்களும் விஷ்ணுவே அதிகன் {அதிக பலம் வாய்ந்தவன்} என்று கருதினர்.(19ஆ,20அ)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தேவதைகள் ப்ரஹ்மாவைப் பார்த்து 'முன்பு வராஹாதி ரூபங்களால் பூமியையெடுக்கை முதலிய காரியங்களை விஷ்ணு செய்தது பற்றி அவ்விஷ்ணுவே அதிகனென்று நீ புகழ்ந்தரைக்க, நாங்கள் கேட்டிருக்கின்றனம். இப்பொழுது சிவன் விஷ்ணுவைக் கேவலம் ஒரு ஸாதநமாகச் செய்து கொண்டு தானே முக்கியனாகி த்ரிபுரங்களையுங் கொளுத்தினதைக் கண்டால் சிவனே அதிகனென்று எங்களுக்குத் தோன்றுகின்றது. ஆகையால் இவ்விருவரிலும் மேலானவன் யாவன்?" என்று வினாவினரென்றுத் தெரிகின்று" என்றிருக்கிறது.

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ப்ர்மதேவன் விஷ்ணுவைப் பார்த்து 'த்ரிபுரஜயத்தில் சிவன்தானே வில்லாளியாயிருந்தபடியால் அந்த ஜயத்தில் தானே முக்கியனென்றும், நீ ஸாதநமாக மாத்திரமிருந்தாயாகையால் அமுக்கியனென்றும் எனக்குச் சொன்னான்' என்றுரைத்து அத்தேவனுக்குச் சிவனிடத்தில் விரோதத்தையும், சிவனைப் பார்த்து 'விஷ்ணு, உனது பாணத்தின் நுனியில் தானிருந்தது பற்றி, நானே த்ரிபுரங்களை ஜயித்தேனென்றும் சிவனல்லவென்றும் என்னுடன் சொன்னான்' என்று மொழிந்து அச்சிவனுக்கு விஷ்ணுவிடத்தில் விரோதத்தையும் விளைவித்தானென்றுணர்க" என்றிருக்கிறது.

இதனால் தூண்டப்பட்டவனும், பெரும் புகழ்பெற்றவனுமான ருத்திரன், விதேஹர்களில் ராஜரிஷியான தேவராதனிடம், கணையுடன் கூடிய அந்த நீண்ட தனுவை {சைவதனுசை} ஒப்படைத்தான்[4].(20ஆ,21அ) இராமா, அந்த விஷ்ணு, பரபுரஜயம் {பகைநகரை வெற்றி} கொண்ட இந்த வைஷ்ண தனுவை, பார்க்கவரான ரிசீகருக்கு நம்பத்தகுந்த பெரும் நம்பிக்கையுடன் கொடுத்தான்.(21ஆ,22அ) மஹாதேஜஸ்வியான ரிசீகரும், ஒப்பற்ற செயல்களைச் செய்தவரும், தமது புத்திரரும், மஹாத்மாவும், என் பிதாவுமான {தந்தையுமான} ஜமதக்னிக்கு, இந்த திவ்யத்தை {தெய்வீக வில்லை} தத்தம் செய்தார்.(22ஆ,23அ) நற்புத்தியற்ற அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, தபோபலமிக்கவரும், சஸ்திரங்களை {ஆயுதங்களைத்} துறந்தவருமான என் பிதாவைக் கொன்றான்.(23ஆ,24அ)

[4] தேசிராஜுஹனுமந்தாவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சிவனுக்குச் சொந்தமான இந்தப் பெரிய வில்லானது, சதியின் தந்தையும், சிவனின் மாமனாருமான தக்ஷப்ரஜாபதியின் வேள்வி அழிந்த பிறகு கொடுக்கப்பட்டதாக 1:66:9ல் {இராமாயணம், பாலகாண்டம் 66ம் சர்க்கம், 9ம் சுலோகத்தில்} சொல்லப்படுகிறது. தக்ஷனின் இந்த வேள்வி பல பிரச்சனைகளின் கலவையாகத் திகழ்கிறது. சிவன், ஒரு தேவனாகவோ, தக்ஷனின் மருமகனாகவோ அந்த வேள்விக்கு அழைக்கப்படவில்லை. {இதனால்} சிவனின் மனைவியான சதி, தன் தந்தையின் வேள்வியில் தீக்குளிக்கிறாள். வீரபத்திரனும், சிவனின் தொண்டர்கள் பிறரும் அந்த வேள்வியை அழிக்கிறார்கள். இந்தச் சிவ கேசவ யுத்தமும் நிகழ்கிறது. ஒரு தனி நபரின் விருப்பமின்மையானது, புனிதமான திருமணத்தையும் கெடுத்துவிடும் என்பதையே இவையாவும் காட்டுகின்றன. தக்ஷன் தன் மகளான சதியை சிவனுக்குக் கொடுப்பதில் விருப்பமில்லாமல் இருந்தான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தக்ஷயஜ்ஞத்தின் முடிவில் சிவன் தநுஸ்ஸைத் தேவர்களுக்குக் கொடுத்தானென்று முன்பு சொல்லப்பட்டது. சிவன் வில்லைத் தேவராதனிடம் கொடுத்தானென்று இவ்விடத்திற் சொல்லப்பட்டது. விச்வாமித்ராச்ரமத்தில் ரிஷிகள் 'தேவதைகள் ஜநகனுக்கு யாகத்திற் கொடுத்தன்' என்று மொழிந்தனர். சீதை, அநஸூயையுடன் வருணன் அந்த வில்லை ஜநகனுக்குக் கொடுத்தானென்று சொல்லினள். இவையெல்லாம் ஒன்றோடொன்று விருத்தமாயிருக்கின்றன. இவைக்கு ஸங்கதியெப்படியெனில், தக்ஷ யாகத்தின் முடிவில் சிவன் கோபத்தோடு அவ்வில்லைத் தேவர்களுக்குக் கொடுக்க முயலுகையில், அக்கோபத்தைக் கண்டு தேவதைகள் அவனருற் சென்று அவ்வில்லை வாங்கிக் கொள்ளப் பயந்து, அதைத் தமக்குப் பதிலாகத் தேவராதனிடங் கொடுக்கும்படி ப்ரார்த்திக்க, சிவன் அதைத் தேவராதனிடம் வைத்தனன். ஆனது பற்றியே சிவன் அதைத் தேவர்களுக்குக் கொடுத்தானென்றும், தேவராதனுக்குக் கொடுத்தானென்றும் இரண்டும் பொருந்துகின்றன. சிவன் தேவராதனிடம் வைத்தனென்கையால் அவனுக்குத் தேவதைகள் சொந்தமாகக் கொடாமல் வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்தனரென்று தெரிகின்றது. பின்பு ஜநகன் யாகத்தினால் தேவதைகளைக் களிக்கச் செய்து, தன்னிடம் வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்த வில்லைச் சொந்தமாகத் தனக்குக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்க, தேவர்களும் அதை அவனுக்குச் சொந்தமாகக் கொடுத்துவிட்டனர்" என்றிருக்கிறது.

இராமா, மாற்றற்ற ரூபம் கொண்டதும், பயங்கரமானதுமான பிதாவின் வதத்தைக் கேட்டு சீற்றமடைந்த நான், பிறந்து கொண்டேயிருந்த க்ஷத்திரியர்களை அநேக காலம் அழித்து, பிருத்வி முழுவதையும் என் வசப்படுத்தி, ஒரு யஜ்ஞத்தின் {வேள்வியில்} முடிவில், மஹாத்மாவும், புண்ணியக் கர்மங்களைச் செய்தவருமான காசியபருக்குத் அதை தக்ஷிணையாகக் கொடுத்து, தபோபலத்துடன் மஹேந்திர நிலையத்தில் இருக்கிறேன் {மகேந்திர மலையில் வசித்து வருகிறேன்}.(24ஆ-26அ) இராமா, அந்தத் தனுசை முறித்ததைக் கேட்டதால், இங்கே நான் விரைந்து வந்தேன். {முன்பு} க்ஷத்திரிய தர்மத்தை முன்னிட்டதைப் போல் {சிவதனுசைத் தரித்தது போல} பித்ருபைதாமஹர்களுக்குரியதும் {தந்தை, பாட்டன் வழி வந்ததும்}, மஹத்தானதும், உத்தமமானதுமான {இந்த} வைஷ்ணவ தனுவை நீ எடுப்பாயாக[5].(26ஆ,27) காகுத்ஸ்தா, பரபுரஜயம் தந்த சரத்துடன் {பகைவரின் நகரங்களை வெற்றிகொண்ட கணையுடன்} கூடிய இந்தச் சிறந்த தனுவை ஏற்கும் சக்தனாக நீ இருந்தால், உனக்கு நான் துவந்தம் தருவேன்" {உன்னுடன் நான் போரிடுவேன்", என்றார் பரசுராமர்}.(28)

[5] நரசிம்மாசாரியர் பதிப்பில், "தகப்பன் பாட்டன் வரிசையிலிருந்து க்ரமமாக எனக்கு வந்ததும், அவ்விஷ்ணுதேவன் வைத்துக்கொண்டிருந்ததும், பெருமை பொருந்தியதுமாகிய அவ்வில் இதோ இருக்கின்றது. நீ க்ஷத்ரியனாயிருப்பவன். ப்ராஹ்மணனைப்போல் என் கையிலாகாதென்று உரையாமல், க்ஷத்ரிய தர்மத்தை முன்னிட்டுக்கொண்டு சிவனது வில்லைப் போல் சிதிலமாகாமல் மிகுந்த வலிவுடைய இம்மேலான வில்லை வாங்கிக்கொள்வாயாக. விற்களனைத்திலும் உயர்ந்த இவ்வில்லில் நீ வல்லவனாயின், சத்ருபட்டணங்களைத் தொலைக்கவல்லதான ஒரு பாணத்தைத் தொடுப்பாயாக. காகுத்தனே! பிறகு உன் சக்தியை அறிந்து கொண்டு, உன்னுடன் தவந்தவயுத்தஞ் செய்கின்றேன்" என்றிருக்கிறது.

பாலகாண்டம் சர்க்கம் – 75ல் உள்ள சுலோகங்கள் : 28

Previous | Sanskrit | English | Next

Wednesday, 1 December 2021

பரசுராமர் | பால காண்டம் சர்க்கம் - 74 (24)

Parashurama | Bala-Kanda-Sarga-74 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இமயத்திற்கு விடைபெற்றுச் சென்ற விஷ்வாமித்ரர்; மகள்களுக்கு சீதனமளித்த ஜனக மன்னன்; தன் நாட்டுக்குப் புறப்பட்ட தசரத மன்னன்; எதிர்வந்த பரசுராமர்...

Parashurama

அந்த ராத்திரி கடந்ததும் விஷ்வாமித்ர மஹாமுனிவர், மன்னர்களிடமும் {தசரதன், ஜனகன் ஆகியோரிடமும்}, அவ்விருவரிடமும் {ராமலக்ஷ்மணர்களிடமும்} விடைபெற்றுக் கொண்டு உத்தரப் பர்வதத்திற்கு {இமய மலைக்குப்} புறப்பட்டார்.(1) விஷ்வாமித்ரர் சென்ற பிறகு, தசரத ராஜன், மிதிலாதிபதனான வைதேஹனிடம் {ஜனகனிடம்} விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய {அயோத்தி} நகரத்திற்குப் புறப்பட்டான்.(2)

அப்போது மிதிலேஷ்வரனான விதேஹராஜன், {தசரதனுடன் சேர்ந்து பாதி வழி சென்று} ஏராளமான கன்யாதனத்தை தத்தம் செய்தான் {தன் பெண்களுக்கு சீதனங்களைக் கொடுத்தான்}. ஏராளமான பசுக்களையும், நூறாயிரம் {லட்சம்} சிறந்த கம்பளங்களையும், கோடிக்கணக்கான பட்டாடைகளையும், ஹஸ்த, அஷ்வ, ரதப் பாதாதிகளையும் {யானைகள், குதிரைகள், தேர்கள், காலாள்களையும்}, திவ்யரூபம் கொண்டவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும், உத்தமர்களுமான தாசிகளையும் {பணிப்பெண்களையும்}, தாசர்களையும் {பணியாட்களையும்}, நூறு கன்னிகைகளையும் தத்தம் செய்தான்.(3-5அ) அந்த ராஜன் {ஜனகன்}, பெரும் மகிழ்ச்சியுடன் ஹிரண்யங்களையும், சுவர்ணங்களையும் {பொன், வெள்ளிகளையும்}, முத்துக்களையும், பவளங்களையும் உத்தம கன்யாதனமாக {தன் பெண்களுக்கான சிறந்த சீதனமாகக்} கொடுத்தான்.(5ஆ,6அ) மிதிலேஷ்வரனான அந்த ராஜன் பலவிதப் பொருட்களை தத்தம் செய்து, அந்தப் பார்த்திபனுக்கு {தசரதனுக்கு} விடை கொடுத்தனுப்பி, தன் நிலையமான மிதிலைக்குள் பிரவேசித்தான்[1].(6ஆ,7அ)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "{சம்மந்திகள்}, கிராமம், அல்லது நகரத்தின் எல்லைவரை திருமணக்கூட்டத்தைப் பின்தொடர்ந்து செல்வது வழக்கம். அந்த இடைப்பட்ட வேளையில், மணமகளின் தாயாரும், மணமகளும் இரண்டு மூன்று முறை ஆரத்தழுவிக் கொள்ளும் தருணங்களும், மணமகளின் தந்தை முகத்தை மறைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தும் தருணங்களும் வாய்க்கும். மணமகளை அனுப்பி வைக்கையில், விரும்பியபோதெல்லாம் அவள் தன் தந்தையின் வீட்டிற்கு வர முடியாது என்பதால் அத்தருணம் அவளது மறுபிறப்பாகக் கருதப்படுகிறது. இத்தருணத்தில் இருந்து கணவனின் வீடே அவளது வீடாகப் போவதால், அவள் தந்தை வீட்டிற்கு வந்தாலும், அவள் எந்நிலையிலும் தன் கணவனின் இடத்திற்குத் திரும்பவே வேண்டும். ஆனால் இங்கேயோ, இந்த சர்க்கத்திற்குப் பிறகு சீதை மிதிலைக்குத் திரும்பிச் செல்லப் போவதே இல்லை. இராமன் அவளைக் கைவிடும்போதும், அவள் தன் அன்னையான பூமிமாதாவின் கருவறையை அடைகிறாளேயன்றி மிதிலையையல்ல" என்றும், இன்னும் சில வரிகளும் இருக்கின்றன.

அயோத்யாதிபதியான ராஜா {தசரதன்}, மஹாத்மாக்களான புத்திரர்கள் ஸஹிதம் ரிஷிகள் அனைவரையும் முன்னிட்டுக் கொண்டு, படைகள் பின்தொடரச் சென்றான்.(7ஆ,8அ) ரிஷிகணங்களுடனும், ராகவர்களுடனும் {ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களுடனும்} அந்த நரவியாகரன் {மனிதர்களில் புலியான தசரதன்} சென்று கொண்டிருந்த போது, சுற்றிலும் பக்ஷிகள் கோரவொலி எழுப்பத் தொடங்கின.(8ஆ,9அ) பூமியின் மிருகங்கள் அனைத்தும் பிரதக்ஷிணம் செய்து {இடமிருந்து வலம் வந்து} கொண்டிருந்தன. இவற்றைக் கண்ட அந்த ராஜஷார்தூலன் {மன்னர்களில் புலியான தசரதன்}, வசிஷ்டரிடம் இதுகுறித்துக் கேட்டான்:(9ஆ,10அ) "சௌம்யமற்ற கோரவொலியெழுப்பும் பக்ஷிகளையும், பிரதக்ஷிணம் செய்யும் மிருகங்களையும் {மென்மையற்றுக் கதறும் பறவைகளையும், வலம் வரும் விலங்குகளையும்} கண்டு இதயம் நடுங்குகிறது. இஃது என்னவென என் மனம் வருந்துகிறது" என்று கேட்டான்.(10ஆ,11அ)

தசரத ராஜன் சொன்னதைக் கேட்ட அந்த மஹாரிஷி {வசிஷ்டர்}, இந்த மதுரமான வாக்கியத்தைச் சொன்னார்: "இதற்கான பலனைக் கேட்பாயாக.(11ஆ,12அ) பக்ஷிகள் முகத்தில் இருந்து வெளிப்படுவது {பறவைகள் வெளிப்படுத்தும் கதறலானது, ஏற்படவிருப்பதும்,} திவ்யமானதும், கோரமானதுமான பயத்தைக் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த மிருகங்களின் நடத்தை அது {பயம்} நீங்கும் என்பதை அறிவிக்கிறது. எனவே இந்த மன வருத்தத்தை நீ கைவிடுவாயாக" {என்றார் வசிஷ்டர்}.(12ஆ,13அ)

அவர்கள் இவ்வாறு விவாதித்துக் கொண்டிருந்தபோது, மேதினி நடுங்கி, பெரும் மரங்கள் அனைத்தும் விழும் வகையில் அங்கே பெருங்காற்றுச் சுழன்று விசிற்று.(13ஆ,14அ) சூரியன் இருளால் மறைக்கப்பட்டான். சர்வ திசைகளும் இருண்டன. {தசரதனின்} அந்தப் படைகள் அனைத்தும் புலப்படாத வகையில் பஸ்மத்தில் {சாம்பல் போல எழுந்த புழுதியில்} மறைந்தன.(14ஆ,15அ) அப்போது வசிஷ்டரும், பிற ரிஷிகளும், மகன்களுடன் கூடிய ராஜாவும் திரிந்து கொண்டிருந்தாலும், அவர்கள் இருந்த இடத்தில் அனைத்தும் அசைவற்றிருந்தன.(15ஆ,16அ)

கோரமான அந்த இருளில், பஸ்மத்தில் {சாம்பலில்} மூழ்கியதைப் போன்றிருந்த அந்த சம்முவானது {சமூ என்று அழைக்கப்படும் அந்தப் படைப்பிரிவானது},{16ஆ} பயங்கரத் தோற்றமுடையவரும், ஜடாமண்டலதாரியும் {சடை தரித்தவரும்}, ராஜாராஜவிமர்தனரும் {ராஜர்களை அடக்கிய ராஜரும்},{17} கைலாசத்தைப் போல அசைக்கமுடியாதவரும், காலாக்னியைப் போலத் தடுக்கப்படமுடியாதவரும், தேஜஸ்ஸில் ஜுவலிப்பதால் {தன்னொளியில் ஒளிர்வதால்} பொதுஜனங்களுக்குப் புலப்படாதவரும்,{18} ஸ்கந்தத்தில் பரசை {தோளில் கோடரியை} தரித்தவரும், மின்னற்கூட்டத்தைப் போன்ற தனுவை {வில்லைக்} கொண்டவரும், உக்கிர சரத்தை {பயங்கரமான கணையைப்} பிடித்திருப்பவரும், திரிபுரக்னம் செய்த {திரிபுரத்தை எரித்த} சிவனைப் போன்றவரும், பார்க்கவருமான ஜாமதக்னியரை {பரசுராமரைக்} கண்டது.{19}(16ஆ-19)

ஜப, ஹோம பாராயணம் செய்யும் விப்ரர்களான வசிஷ்டரும், பிற பிரமுகர்களும், முனிவர்கள் அனைவரும் ஒன்று கூடி, பாவகனைப் போல ஜுவலித்துக் கொண்டிருக்கும் {வேள்வி நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கும்} அந்தப் பயங்கரத் தோற்றத்தைக் கொண்டவரை {பரசுராமரை} மேலும் கீழுமாகப் பார்த்து முணுமுணுக்கத் தொடங்கினர்:(20,21அ) "பித்ருவதத்திற்கு {தந்தை ஜமதக்னியின் கொலைக்குப்} பழிதீர்க்க இப்போதும் இவன் க்ஷத்திரியர்களை அழிப்பானோ? பூர்வத்தில் க்ஷத்ரவதம் செய்ததில் இவன் கோபம் தணிந்திருக்காதோ? இனி மீண்டும் க்ஷத்திரியர்களை அழிப்பது இவனது நோக்கமாக இராது" {என்று அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்தனர்}[2].(21ஆ,22)

[2] பரசுராமரின் பூர்வக் கதைகளை மஹாபாரதத்தில் பரசுராமர் என்ற சுட்டிக்குச் சென்றால் அறியலாம்.

ரிஷிகள் இவ்வாறு சொல்லிக்கொண்டே அர்க்கியத்தை எடுத்து, பயங்கரத் தோற்றம் கொண்ட அந்தப் பார்க்கவரிடம் {பரசுராமரிடம்}, "இராமரே, ராமாரே" என்ற இந்த மதுரவாக்கியத்தைச் சொன்னார்கள்.(23) பிரதாபவானான ஜாமதக்னேய ராமர் {ஜமதக்னியின் மகனான பரசுராமர்}, ரிஷிகள் செய்த பூஜையை {வழிபாட்டை} ஏற்றுக் கொண்டு, தாசரதியான {தசரதனின் மகனான} ராமனிடம் பேசத்தொடங்கினார்.(24)

பாலகாண்டம் சர்க்கம் – 74ல் உள்ள சுலோகங்கள் : 24

Previous | Sanskrit | English | Next

Tuesday, 30 November 2021

பாணிக்ரஹணம் | பால காண்டம் சர்க்கம் - 73 (40)

Wedding Ceremony | Bala-Kanda-Sarga-73 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை ராமனுக்கும், ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும், மாண்டவியை பரதனுக்கும், சுருதகீர்த்தியை சத்ருக்னனுக்கும் தாரைவார்த்துக்  கொடுத்த ஜனகன்...

The marriage of Sita and Rama

ராஜா {தசரதன்} எந்த நாளைக் குறித்தானோ, அதே நாளில் உத்தம கோதானம் செய்தபோது, சூரனான யுதாஜித் அங்கே வந்தான்.(1) கேகயராஜனின் புத்திரனும், சாக்ஷாத் பரதனின் மாதுலனுமான அவன் {பரதனின் தாய்மாமனுமான அந்த யுதாஜித், தசரத} ராஜனைக் கண்டு குசலம் விசாரித்து இதைச் சொன்னான்:(2) "நீர் குசலம் விசாரிக்க விரும்பும் கேகயாதிபதியான ராஜா தற்போது நலமாக இருக்கிறார். அவர் ஸ்நேஹத்துடன் குசலம் விசாரிக்கிறார்.(3) இரகுநந்தனரே, ராஜேந்திரரே, அந்த மஹீபதி {கேகயராஜர்} என் தங்கையின் மகனை {கைகேயியின் மகனான பரதனைக்} காண விரும்புவதால் என்னை அயோத்திக்கு அனுப்பி வைத்தார்.(4) மஹீபதியே {நிலத்தின் தலைவரே}, உமது ஆத்மஜர்களின் {மகன்களின்} விவாஹத்திற்காக நீர் மிதிலை சென்றதாக அயோத்தியில் நான் கேள்விப்பட்டேன். என் தங்கையின் மகனைக் காணும் விருப்பத்தில் துரிதமாக இங்கு வந்து சேர்ந்தேன்[1]" {என்றான் யுதாஜித்}.(5,6அ)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பரதனுடைய தாய்மாமன் வருகை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதா, அல்லது காவிய ஒழுங்கிற்கு அவசியமானதா என்பது கேள்வியல்ல என்றாலும் ஓர் ஐயத்தை எழுப்பவே செய்கிறது. மேலும் அவன், தன் மருமகன்கள் அனைவரையும் கேட்காமல் பரதனை மட்டுமே "என் தங்கையின் மகனை" என்று கேட்கிறான். இந்தப் பகுதி இனி வரப்போகும் நிகழ்வுகளுக்குப் பொருந்தி வந்தாலும், வராவிட்டாலும் இந்தியக் காவியங்களில் ஒரு மாமா எப்போதும் நுழைகிறார். மஹாபாரதத்தில் சகுனியைப் போல" என்றிருக்கிறது.

அப்போது தசரதராஜன், பிரிய அதிதியின் {அன்புக்குரிய விருந்தினரின்} வரவைக் கண்டு பூஜிக்கத்தகுந்த அவனுக்குப் பரமசத்காரங்களையும் {நல்ல காரியங்கள் அனைத்தையும்} செய்து நன்றாகப் பூஜித்தான்.(6ஆ,7அ) பிறகு மஹாத்மாக்களான தன் புத்திரர்கள் ஸஹிதம் ராத்திரியில் ஓய்ந்திருந்த அந்தத் தத்வவித் {கடமையில் கட்டுண்டவனான தசரதன்}, விடியலில் எழுந்து, கர்மங்களைச் செய்து, ரிஷிகளை முன்னிட்டுக் கொண்டு யஜ்ஞவாடத்தில் {யாகசாலையில்} வந்து சேர்ந்தான்[2].(7ஆ,8) சர்வ ஆபரணங்களையும் பூண்டு கொண்டு தம்பிகள் ஸஹிதனாக இருந்த ராமன், மங்கலச் சடங்குகளைச் செய்து விட்டு, வசிஷ்டரையும், இதர மஹாரிஷிகளையும் முன்னிட்டுக் கொண்டு உரிய விஜய முஹூர்த்தத்தில் வந்து சேர்ந்தான் {தசரதன் இருக்கும் யாகசாலைக்கு வந்தான்}.(9,10அ)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவன் சில நாட்களாக வந்து போகும் வேள்வி மண்டபத்தைத் தானாகவே அடைந்தான். மணமகன் தரப்பினர், அழைக்கப்படுவதற்கு முன்னர்த் திருமண மண்டபத்திற்குள் நுழையமாட்டார்கள். மணமகன் விஷ்ணுவாகவும், மணமகள் லக்ஷ்மிதேவியாகவும் கருதப்படுவதால் இன்றைய காலத்தில் வரபூஜை என்றழைக்கப்படும் சிறிய நிகழ்வுடன் இந்த அழைப்புச் செய்யப்படுகிறது. இந்த வேள்வி மண்டபத்தின் அருகிலேயே திருமண மண்டபம் இருந்திருக்குமெனக் கருதப்படுகிறது" என்றிருக்கிறது.

பகவானான வசிஷ்டர், வைதேஹனிடம் {ஜனகனிடம்} சென்று இதைச் சொன்னார்: "நரவரசிரேஷ்டா {சிறந்த மனிதர்களில் சிறந்தவனே}, இராஜாவே, தசரதராஜன் மங்கலச் சடங்குகளைச் செய்து கங்கணங்கட்டிய புத்திரர்களுடன் தாதாவை {கன்னிகையைக் கொடையளிக்கும் உன்னை} எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.(10ஆ,11) கொடுப்பவனுக்கும், பெற்றுக் கொள்பவனுக்கும் சர்வ அர்த்தங்களும் {அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை} வாய்க்கும். இந்த உத்தம வைவாஹத்தைச் செய்வதால் ஸ்வதர்மத்தை {கடமையைச்} செய்யும் பிரதிபலன் உனக்குக் கிட்டும்" {என்றார் வசிஷ்டர்}.(12)

மஹாத்மாவான வசிஷ்டர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு மஹாதேஜஸ்வியும், பரமதர்மவானுமான அந்தப் பரமோதாரன் {ஒப்பற்ற கொடையாளி ஜனகன்} இந்த வாக்கியத்தை மறுமொழியாகச் சொன்னான்:(13) "உங்களைத் தடுப்பவன் எவன்? எவருடைய ஆணையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சொந்த கிருஹத்தில் {வீட்டில்} தயக்கம் ஏன்? இந்த ராஜ்யம் உங்களுடையதே[3].(14) முனிசிரேஷ்டரே, என் கன்னிகைகள் மங்கலச் சடங்குகளைச் செய்துவிட்டு, அக்னி ஜுவாலைகளால் ஒளிர்ந்து கொண்டிருக்கும் வேதிமூலத்தின் {வேள்விப்பீடத்தின்} அருகில் வந்துவிட்டனர்.(15) ஏற்கனவே நானும் இந்த வேதிகையில் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இஃது இடையூறுகள் இன்றி நடைபெறட்டும். {தசரத} ராஜா எதற்காகத் தாமதம் செய்கிறான்?" {என்றான் ஜனகன்}[4].(16)

[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவை கேள்விகளோ, ஆச்சரியமடையும் தருணங்களோ அல்ல. வட நாட்டுக்காரர்களால் சந்திகள் என்றும், தென்னாட்டுக்காரர்களால் சம்மந்திகள் என்றும் அழைக்கப்படும் இரு தரப்பும் திருமண விழாக்களில் சொல்லும் வழக்கமான பதில்களும், வழக்கமான விவாதங்களுமாகும் இவை" என்றிருக்கிறது.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வசிஷ்டர் இதை தசரதனுக்குச் சொல்ல, தசரதனும் அவனது பரிவாரங்களும் நிதானமாக ஊர்வலமாகச் சென்றனர். இன்றும் இந்த ஊர்வலங்கள் நடக்கின்றன. மணமகன் தரப்பின் அலங்கார அணிவகுப்பு இரண்டு ஃபர்லாங் தொலைவை இரண்டு மணி நேரத்தில், அல்லது அதற்கும் அதிகமான நேரத்தில் கடந்து மணமகள் தரப்பை ஓர் எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கும்" என்றிருக்கிறது.

அப்போது தசரதன், ஜனகன் சொன்ன வாக்கியத்தை {வசிஷ்டர் மூலம்} கேட்டு சுதர்களுடனும் {மகன்களுடனும்}, சர்வ ரிஷி கணங்களுடனும் {வேள்வி மண்டபத்திற்குள்} பிரவேசித்தான்.(17) பிறகு விதேஹராஜன் {ஜனகன்} வசிஷ்டரிடம் இதைச் சொன்னான்: "தார்மிகரே, ரிஷியே, பிரபுவே, உலகங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ராமனின் விவாஹ காரியங்களை ரிஷிகளுடன் சேர்ந்து நடத்துவீராக" {என்றான் ஜனகன்}.(18,19அ)

பகவானும், மஹாதபஸ்வியுமான வசிஷ்ட ரிஷி ஜனகனிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, தார்மிகரான விஷ்வாமித்ரரையும், சதாநந்தரையும் முன்னிட்டுக் கொண்டு, பச்சை ஓலைகளால் கட்டப்பட்ட திருமணப் பந்தலின் மத்தியில், விதிப்படி வேதியை {வேள்வி நெருப்பை} ஏற்படுத்தி, கந்தம் {சந்தனம் / நறுமணப்பொருள்கள்}, புஷ்பங்கள், {முளைத்த நவதானியங்கள் நிறைந்த} சுவர்ண பாலிகைகள், அரும்புகள், சித்திரக் கும்பங்கள், மடக்குகள் {முளைகளுடன் கூடிய மண் அகல்கள்}, தூபங்களுடன் கூடிய தூபப்பாத்திரங்கள் {நறுமணப் புகையுடன் கூடிய பாத்திரங்கள்}, சங்கு பாத்திரங்கள், ஸ்ருவங்கள் {மூங்கிலாலான அகப்பை}, ஸ்ருக்குகள் {நெருப்பில் நெய்விடும் மூங்கில் கரண்டி}, அர்க்கிய பூஜைக்கான நீர் நிரம்பிய பாத்திரங்கள், பொரிகள் நிறைந்த பாத்திரங்கள், மஞ்சள் பூசப்பட்ட புனித அரிசி {அக்ஷதை} நிறைந்த பாத்திரங்கள் ஆகியவற்றையும் அந்த வேதியைச் சுற்றிலும் புனித அலங்காரமாகத் திகழச் செய்தார்.(19ஆ-23அ) மஹாதேஜஸ்வியும், முனிபுங்கவருமான வசிஷ்டர், சமமான அளவுள்ள தர்ப்பைகளை மந்திரப்பூர்வமாகச் சரியாகப் பரப்பி, விதிப்படி மந்திரங்களைச் சொல்லி அந்த வேதியில் அக்னியைத் தூண்டி வளர்த்தார்.(23ஆ,24)

அப்போது ஜனக ராஜன், சர்வ ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சீதையை அக்னிக்கு முன்பாக அழைத்துவந்து, ராகவனின் {ராமனின்} முகத்திற்கு நேராக நிறுத்தி, அந்தக் கௌசல்யானந்தவர்த்தனனிடம் {கௌசல்யையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனான ராமனிடம்}[5] இதைச் சொன்னான்:(25,26அ) "என் மகளான இவளை {சீதையை} உன் ஸஹதர்மினியாக {வாழ்வின் கடமைகளில் உடன் பங்கேற்பவளாக} ஏற்றுக் கொண்டு மங்கலமாக இருப்பாயாக. பாணிக்ரஹணஞ்செய்வாயாக {இவளது உள்ளங்கையை உன் உள்ளங்கையில் ஏற்பாயாக}.(26ஆ,27அ) மஹாபாக்யவதியான இவள் பதிவிரதையாக சதா நிழல் போல் {உன்னைப்} பின்தொடர்வாள்" என்று சொன்ன அந்த ராஜன், பின்னர் மந்திரப்பூர்வமான ஜலத்தை {நீரை ராமனின் கைகளில்} ஊற்றினான்[6].(27ஆ,28அ) அப்போது தேவர்களும், ரிஷிகளும், "சாது {நன்று}, சாது" என்றனர், தேவதுந்துபிகள் உரக்க முழங்கின, மஹாபுஷ்பவர்ஷம் {மாமலர்மாரி} பொழிந்தது.(28ஆ,29அ)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சரி, இந்தக் கௌசல்யை எங்கிருக்கிறாள்? ராமன் அவளை அழைத்து வராமலேயே தன் திருமணத்தால் அவளது மகிழ்ச்சியை அதிகரிக்கிறானா? கடந்த மூன்று நான்கு நாட்களில் அவளையோ, மற்ற ராணிகளையோ குறித்து நாம் கேள்விப்படவில்லையே. உண்மையில் அவள் வந்திருக்கிறாளா? சிறிய செய்திகளைப் பதிவு செய்யாத வால்மீகியின் பாணியைக் கொண்டு, "ஆம், அவள் வந்திருந்தாள்" என்று சிலர் வாதிடுகின்றனர். இவை மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளன. தசரதன் பசுதானம் செய்தான் என்றால், மனைவி தன்னருகே இல்லாமல் அவனால் அறச்சடங்குகளைச் செய்யவோ, தானம் செய்யவோ முடியாது. பாலகாண்டம் 69ம் சர்க்கம் 1ம் சுலோகத்தில் "உபாத்யாயர்கள், பந்துக்களுடன்" என்று வருகிறது. அங்கே குறிப்பிடப்பட்ட பந்துக்களில் இந்த மனைவியரும் அடங்குவர். மேலும் இங்கே ஐந்து ராகவர்கள் இருக்கும்போது இஃது எப்படி ராமனைக் குறிக்கிறது என்றால், கௌசல்யானந்தவர்த்தனன் என்ற அடைமொழி  ராகவனை ராமனாக்குகிறது. இங்கே ராமனைக் குறிக்க தசரதாத்மஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம். இன்னும் வேறு பல அடைமொழிகளையும் பயன்படுத்தியிருக்கலாம். கௌசல்யையுடன் இந்த அடைமொழியைப் பொருத்தி வால்மீகிப் புலவர் மறைமுகமாக அவளது இருப்பைத் தெரிவிக்கிறார்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தானம் அளிக்கும்போதும் தானம் பெறுபவனின் கைகளில் நீரை ஊற்றுவது தானமளிப்பவனின் வற்றாத விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது. "நிழல்" என்ற சொல் "எப்போதும் தொடர்புடையவள்" என்பதைக் குறிக்கிறது. இதுவரை அவர்கள் தனித்தனியாக வாழ்ந்த காலம் இந்தப் புனித நீரால் கழுவப்படுகிறது" என்றிருக்கிறது.

ஜனகராஜன் இவ்வாறு மந்திரப்பூர்வமாகப் புனிதப்படுத்தப்பட்ட நீரால் தன் மகள் சீதையைத் தத்தம் செய்ததும் {தாரைவார்த்துக் கொடுத்ததும்} பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியவனாகச் சொன்னான்:(29ஆ,30அ) "லக்ஷ்மணா வருவாயாக[7]. என்னால் உத்தேசிக்கப்பட்டபடி ஊர்மிளையை ஏற்றுக் காலத்தைத் தாழ்த்தாமல் பாணிக்ரஹணஞ் செய்து மங்கலமாக இருப்பாயாக" {என்றான் ஜனகன்}.(30ஆ,31அ) அவனிடம் {லக்ஷ்மணனிடம்} இவ்வாறு சொன்ன ஜனகன், பரதனை அழைத்து, "இரகுநந்தனா, மாண்டவியின் உள்ளங்கையை உன் உள்ளங்கையில் ஏற்பாயாக" {என்றான்}.(31ஆ,32அ) பிறகு, தர்மாத்மாவான அந்த மிதிலேஷ்வரன் {ஜனகன்} சத்ருக்னனிடம் சொன்னான், "மஹாபாஹுவே {பருத்த தோள்களைக் கொண்டவனே சத்ருக்னா}, சுருதகீர்த்தியின் உள்ளங்கையை உன் உள்ளங்கையில் ஏற்பாயாக[8].(32ஆ,33அ) காகுத்ஸ்தர்களே {ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களே}, நீங்கள் அனைவரும் சௌம்யர்களாகவும் {மென்மையானவர்களாகவும்}, நன்னடத்தை எனும் விரதம் கொண்டவர்களாகவும் பத்தினிகளுடன் சேர்வீராக. கால விரயம் செய்ய வேண்டாம்" {என்றான் ஜனகன்}.(33ஆ,34அ)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பரதனே மூத்தவன் எனும்போது ஏன் லக்ஷ்மணன் அழைக்கப்படுகிறான்? சக்களத்திகளுக்குப் பிறந்த சகோதரர்களுக்குள் மூத்தவனுக்கே முதலில் திருமணம் என்ற விதி பொருந்தாது. தந்தையின் சகோதரர்கள், அல்லது தாயின் சக்களத்திகளுக்குப் பிறந்த மகன்களின் மத்தியில் மூத்தவன் என்ற கணக்குத் திருமணங்களிலும், தானச் சடங்குகளிலும் பொருந்தாது, அத்தகைய நிகழ்வுகளில் இளையவனும் முதலில் அழைக்கபடலாம்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பரதன் பெரியவனாயிருக்கச் சிறியவனாகிய லக்ஷ்மணனுக்கு முன்பு விவாஹஞ் செய்வது தோஷமென்று நினைக்கலாகாது. பெரியவனுக்கு முன்பு விவாஹஞ் செய்ய வேண்டுமென்கிற விதி ஸஹோதரர்களுக்கேயன்றிச் சக்களத்திப் பிள்ளைகளுக்கில்லை" என்றிருக்கிறது.

[8] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பத்னிகளுடன் கூடி என் கையால் தாரை வார்த்தாயிற்றென்று தோற்றுகின்றது. ஜனகன் மூத்தவனாகையால் மாண்டவீச்ருதகீர்த்திகளைப் பற்றி அநுஜ்ஞை மாத்திரஞ் செய்தனன். அவர்களைத் தாரைவார்த்துக் கொடுத்தவன் குசத்வஜனே" என்றிருக்கிறது.

ஜனகனின் சொற்களைக் கேட்ட அந்த நால்வரும் {ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள்}, வசிஷ்டரின் கருத்தைக் கேட்டுத் தங்கள் உள்ளங்கைகளில் அந்த நால்வரின் {சீதை, ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின்} உள்ளங்கைகளைப் பற்றினர்.(34ஆ,35அ) மஹாத்மாக்களான அந்த ரகூத்வஹர்கள் {ரகுவில் இருந்து வெளிப்பட்டவர்கள்} தங்கள் பாரியைகள் ஸஹிதராக அக்னி, வேதி ஆகியவற்றையும், ராஜனையும் {ஜனகனையும்}, ரிஷிகளையும் பிரதக்ஷிணம் செய்தனர். எவ்வாறு சொல்லப்பட்டதோ அவ்வாறே விதிப்பூர்வமாக அந்த விவாஹம் நடைபெற்றது[9].(35ஆ,36)

[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முதலில் வசிஷ்டர் புனித நெருப்பை மூட்டி ராமனின் நலத்திற்கும், அவனது தம்பிகள் நலத்திற்கும் ஆகுதிகளைக் காணிக்கை அளித்தார். அடுத்ததாக ராமனும், அவனது தம்பியரும் திருமணத்திற்கான ஆகுதிகளைச் செலுத்தியபோதும் புனித நெருப்பைத் தூண்டினார். மணமகள்களின் கைகளைப் பற்றிய பின்னர் அவர்கள் பிரதக்ஷிணம் செய்தனர். அதன் பிறகு ஒவ்வொரு ஜோடியும் தங்களுக்கான சடங்குக்கென நெருப்பை நிறுவி, அதில் காணிக்கைகளை அளித்தனர். அதன்பிறகு ஒவ்வொரு ஜோடியும் பொரியை நெருப்புக்குள் இட்டு மீண்டும் வேள்வி நெருப்பைப் பிரதக்ஷிணம் செய்தனர். எனவே திருமணம் என்பது ஒரு நிமிடத்தில் கைகளைக் குலுக்கி முடித்துக் கொள்ளும் காரியமல்ல, ஒரு நாள் நெடுகிலும் நெருப்பின் முன்னிலையில் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம் உண்டு" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அப்பொழுது மஹாநுபாவர்களாகி ரகுக்களில் சிறப்புற்ற ராமலக்ஷ்மண பரத சத்ருக்நர்கள் தம் பாரியைகளுடன் கூட அக்நிக்கும் விவாஹவேதிகைக்கும் ஜநகமஹாராஜனுக்கும் மற்றும் அங்குள்ள ரிஷிகளுக்கும் ப்ரதக்ஷிணஞ் செய்து சாஸ்த்ரங்களிற் சொல்லியபடி கல்பஸூத்ரங்களையும் அநுஸரித்து வேறுவேறாக விவாஹத்தை நடத்திக்கொண்டனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "முதலில் வசிஷ்ட மாமுனிவர் ஹோமஞ்செய்தது ராமாதிகளின் நன்மைக்காவென்று தெரிகின்றது. பின்பு அக்நியைப்ரதிஷ்டை செய்து விவாஹ ஹோமம் ராமாதிகள் செய்தனர். பாணிக்ரஹணமான பின்பு அவ்வக்நிக்கும் ப்ராஹ்மணர்களுக்கும் கந்யாதாநஞ் செய்கிற ஜனகனுக்கும் ராமாதிகள் பிரதக்ஷிணஞ் செய்து, பின்பு ஸ்வகல்பாநுஸாரமாக ஒவ்வொருவரும் வேறு வேறாக அக்நியை ப்ரதிஷ்டை செய்து விவாஹோமஞ் செய்தனர். பின்பு லாஜஹோமமும் நடத்தி தத்தமது அக்நிகளுக்கு மும்முறை ப்ரதக்ஷிணஞ் செய்தனரென்று க்ரமங் கண்டு கொள்வது" என்றிருக்கிறது.

அந்த ரகுமுக்கியர்களின் விவாகத்தின்போது, அந்தரிக்ஷத்தில் {ஆகாயத்தில்} இருந்து பளபளக்கும் மஹாபுஷ்பவிருஷ்டி {மாமலர்மாரி} பொழிந்ததும்,  வாத்தியங்களுடன் கூடிய திவ்யதுந்துபிகளின் முழக்கமும், அப்சரஸ் சங்கத்தினரின் நர்த்தனமும், கந்தர்வர்களின் கீதமும் அற்புதமாகத் தெரிந்தது.(37,38) இவ்வாறு தூரியங்கள் முழங்கிக் கொண்டிருந்தபோது, பெரும் தேஜஸ்விகளான அவர்கள் {ராம லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள்}, தங்கள் பாரியைகளுடன் மும்முறை அக்னியை வலம் வந்தனர்.(39) அந்த ரகுநந்தனர்கள் தங்கள் தாரங்களுடன் விடுதிக்குச் செல்வதைக் கண்ணாறக் கண்ட {தசரத} ராஜனும், ரிஷிசங்கங்களுடனும், பந்துக்களுடனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.(40)

பாலகாண்டம் சர்க்கம் – 73ல் உள்ள சுலோகங்கள் : 40

Previous | Sanskrit | English | Next

Monday, 29 November 2021

கோதானம் | பால காண்டம் சர்க்கம் - 72 (25)

Cow donation | Bala-Kanda-Sarga-72 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரதனுக்கும், சத்ருக்னனுக்கும் குசத்வஜன்களின் மகள்களைத் திருமணம் செய்ய முன்மொழிந்த விஷ்வாமித்ரர்; ஜனகன் சம்மதித்தது; பசுக்களையும், செல்வங்களையும் கொடையளித்த தசரதன்...

Rama sita and sacred Cow

விஷ்வாமித்ர மஹாமுனிவர், வசிஷ்டரிடம் இவ்வாறு பேசிய வீர நிருபன் வைதேஹனிடம் {ஜனகனிடம்} இந்தச் சொற்களைச் சொன்னார்:(1) "நரபுங்கவா {மனிதர்களில் மேன்மையானவனே}, கற்பனைக்கெட்டாதவர்களும், அளவிடப்பட முடியாதவர்களுமான இக்ஷ்வாகுகுலத்தினருடனும், விதேஹ குலத்தினருடனும் ஒப்பிடத்தக்கவர்கள் எவரும் இல்லை.(2) இராஜாவே, சீதையும், ஊர்மிளையும் ராமலக்ஷ்மணர்களுக்குத் தகுந்தவர்கள். {இரு குலங்களுக்கு இடையிலான} இந்த தர்மசம்பந்தம் அழகிலும், செழிப்பிலும் {இவ்விரு குலங்களுக்கும்} பொருத்தமானதாக இருக்கிறது.(3)

நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, என்னால் சொல்லப்படும் வசனத்தையும் கேட்பாயாக. உன் தம்பியான இந்தக் குசத்வஜ ராஜனும் தர்மஜ்ஞனாக {தர்மங்களை அறிந்தவனாக} இருக்கிறான்.(4) இராஜாவே, நரசிரேஷ்டா, இந்த தர்மாத்வாவின் மகள்கள் இருவர் புவியில் ஒப்பற்ற ரூபம் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். பத்தினி அர்த்தத்திற்காக அவர்களையும் கேட்கிறோம்.(5) இராஜாவே, மஹாத்மாக்களான குமாரன் பரதனுக்கும், மதிமிக்கவனான சத்ருக்னனுக்கும் அந்த மகள்களைக் கேட்கிறோம்.(6) தசரதனின் புத்திரர்கள் அனைவரும் நல்ல ரூபத்தையும் {வடிவத்தையும்}, யௌவனத்தையும் {இளமையையும்} உடையவர்களாகவும், லோகபாலர்களுக்கு இணையானவர்களாகவும், தேவதுல்யபராக்கிரமர்களாகவும் {தேவர்களைப் போன்ற பராக்கிரமம் பொருந்தியவர்களாகவும்} இருக்கிறார்கள்.(7) இராஜேந்திரா, இக்ஷ்வாகு குலமும், புண்ணியக் கர்மங்களைச் செய்த உன் குலமும் இந்த சம்பந்தத்தால் வலிமையும், மேன்மையும் அடையட்டும்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(8)

விஷ்வாமித்ரரின் சொற்களைக் கேட்ட ஜனகன், வசிஷ்டரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, கைகளைக் கூப்பியபடியே அந்த முனிபுங்கவர்களிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(9) "எது தகுந்ததோ அந்தக் குலசம்பந்தம், முனிபுங்கவர்களான உங்கள் இருவரின் ஆணையின் பேரில் ஏற்படுவதால், என் குலம் தன்யமடைந்தது {மேன்மையடைந்தது} எனக் கருதுகிறேன்.(10) அவ்வாறே ஆகட்டும். நீங்கள் மங்கலமாக இருப்பீராக. குசத்வஜனின் மகள்கள் இருவரும் சத்ருக்னபரதர்கள் இருவருக்கும் பத்தினிகளாகட்டும்.(11) மஹாமுனிவரே {விஷ்வாமித்ரரே}, மஹாபலவான்களான ராஜபுத்திரர்கள் நால்வரும், ஒரே நாளில் இந்த ராஜபுத்திரிகள் நால்வரின் கரங்களைப் பற்றட்டும்.(12) பிராமணரே, பிரஜாபதி பகனின் உத்தரப் பல்குனியில் {உத்தர நட்சத்திரம் கொண்ட நாளில் திருமணம்} பிற்பகலில் வைவாஹிகம் செய்வது உத்தமம் என்று பண்டிதர்கள் புகழ்கின்றனர்[1]" {என்றான் ஜனகன்}.(13)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சோதிட நோக்கில் இந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்வது குறித்து நிறைய உரைகள் இருக்கின்றன. "உத்தர திவசம்" என்ற சொல்லுக்குச் சிலர் சிறந்த நாள் என்றும் பொருள் கொள்கின்றனர். திருமணங்களுக்கு "ரோஹிணி, மிருகசீரிஷம், உத்தரம், சுவாதி ஆகிய நட்சத்திரங்கள் சிறந்தவை" என்று போதாயன சூத்திரம் சொல்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "உத்தர நட்சத்திரத்தின் தலைமை தேவன் பகன் ஆவான். அவன் திருமணம் மூலம் கிட்டும் மகிழ்ச்சிக்கும், செழிப்புக்கும் உரிய தேவன் ஆவான். இங்கே உத்தரம் என்று சொல்லப்படுவது பிற்பகலையும் குறிக்கும்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "உடன்பிறந்தவர்களுக்கு ஓர் யாண்டுக்குள் மணஞ்செய்யக் கூடாதென்று சோதிட நூல்கள் விதித்திருக்க, ஸ்ரீராமாதிகள் நால்வருக்கும் ஒரே வருஷத்தில் திருமஞ் செய்யலாகுமோவெனின்? மற்றும் பல ஜோதிட நூலில் உடன் பிறந்தார்களுக்கும் ஒரு தினத்திலே ஒரு லக்கினத்தில் விவாஹஞ்செய்யலாகுமென விதித்திருப்பதினால், ஒரு வருஷத்துக்குள் உடன் பிறந்தார்களுக்குத் தனித்தனித் திருமணஞ்செய்யலாகாதென்பது கருத்தே அன்றி, ஒரு தினத்தில் செய்யலாகுமென்பது கருத்தெனக் கொள்க" என்றிருக்கிறது.

ஜனகராஜன் இவ்வாறு அழகான சொற்களைச் சொல்லி மீண்டும் கரங்களைக் குவித்துக் கொண்டு அந்த முனிவரர்கள் இருவரிடமும் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(14) "எனக்குப் பரம தர்ம காரியத்தைச் செய்தீர்கள். நான் என்றும் உங்கள் சிஷ்யனாக இருப்பேன். முனிபுங்கவர்களே, இந்த முக்கிய ஆசனங்களில் அமர்வீராக.(15) இது {மிதிலை} தசரதனுடையது என்பது போலவே, அயோத்யாபுரி எனதாகும். பிரபுத்வத்தில் சந்தேகமில்லை. இதற்குப் பொருந்த நீங்கள் நடப்பீராக[2]" {என்றான் ஜனகன்}.(16)

[2] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "நீங்கள் என் தம்பி குசத்வஜனுடையவும் என்னுடையவும் தசரதமஹாராஊனுடையவும் ஆகிய இம்மூவருடையவும் ஸிம்ஹாஸநங்களில் ஏறி வீற்றிருந்து எங்கள் மூவருடைய ராஜ்யத்தையுங் கைப்பற்றிப் பரிபாலித்து வருவீர்களாக. "தசரதனுடைய ராஜ்யத்தைக் கொடுக்க நீ ஆர்?" என்று கேட்க வேண்டாம். இந்த மிதிலாநகரம் எப்படித் தசரத மஹாராஜனுக்கு ஸ்வாதீநமோ, அப்படியே அயோத்யாபுரி எனக்கு ஸ்வாதீநம். ஆகையால் நான் தசரதனது ராஜ்யத்தையும் உங்களுக்குக் கொடுக்கத் தகும். ஆனது பற்றி இம்மூன்று ராஜ்யத்திலும் உங்களுக்கு ப்ரபுத்வம் உண்டென்பதற்கு ஸந்தேஹமில்லை. நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஸ்வாதீநர்களாயிருப்பவர்கள். நீங்கள் எல்லோரும் எங்களுக்கு ஹிதத்தை உபதேசித்து எங்களுக்குத் தகுந்தபடி எக்கார்யமாயினும் செய்து கொள்ளத் தகும்" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "தசரதசக்ரவர்த்திக்கு இம்மிதிலாநகரம் எவ்வாறுரிமையுள்ளதாயிற்றோ? அவ்வாறு அடியேனுக்கும், அயோத்தி மாநகருரிமையுள்ளதாயிற்று. ஆதலால், அடியேனுக்கும், தம்பி குசத்வஜனுக்கும், தசரதப் புரவலர் பெருமானுக்கும் நீயிரேவிதிப்பவர்களாதலால், எங்களுடைய மடங்கல் சுமந்த ஆதன மூன்றிலும் தேவர்கள் வீற்றிருந்து ஏவுதல் செய்மமின்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் ஆங்கிலப் பதிப்பில், "இந்த அற்புத இருக்கைகளில் அமர்வீராக. ஆட்சியில் என் ராஜ்ஜியத்திற்கும், தசரதனின் அயோத்திய நகருக்கு எந்த வேறுபாடும் இல்லை. எனவே, அனைத்தும் உரிய முறையில் நடைபெறும் வகையில் நீங்கள் செயல்படுவீராக" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரியின் ஆங்கிலப் பதிப்பில், "உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்ட இந்த இருக்கைகளுக்கு நீங்கள் தகுந்தவர்கள். என் நாடு மன்னன் தசரதனுடையதாகட்டும். என் அன்பும் அயோத்தியாபுரிக்கு நீள்கிறதுழ நான் உண்மையைச் சொல்கிறேன். புனிதமானவர்களே, தேவையானதைச் செய்வீராக" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "துறவிகளே, (உங்களுக்குச் சொந்தமான) இந்தச் சிறந்த அரியணைகளில் அமர்வீராக. இந்த நாடு எவ்வாறு தசரதனுடையதோ, அவ்வாறே அயோத்தியும் என்னுடையதாகும். தலைமைத்துவத்தில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். உங்களுக்குத் தகுந்த வகையில் நீங்கள் நடந்து கொள்வீராக" என்றிருக்கிறது.

வைதேஹ ஜனகன் {விதேஹ நாட்டு ஜனகன்}, இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது ரகுநந்தனான ராஜ தசரதன் மகிழ்ச்சியடைந்தவனாக அந்த மஹீபதிக்கு {பூமியின் தலைவனான ஜனகனுக்கு} மறுமொழி கூறினான்:(17) "மிதிலேஷ்வரர்களும், சகோதரர்களுமான நீங்கள் இருவரும், அளவற்ற நற்குணங்கள் பொருந்தியவர்களாக இருக்கிறீர்கள். உங்களால் ரிஷிகளும், ராஜ சங்கத்தினரும் பூஜிக்கப்படுகின்றனர்.(18) பேரின்பம் அடைவீராக. நீங்கள் மங்கலமாக இருப்பீராக. எங்கள் ஆலயத்திற்கு நாங்கள் செல்கிறோம். சிராத்தகர்மங்களை {துணைச் சடங்குகளை} நான் விதிப்படி செய்வேன்" என்று சொன்னான் {தசரதன்}.(19)

அப்போது, பெரும்புகழ்பெற்றவனான ராஜா தசரதன், அந்த நரபதியின் {மனிதர்களின் தலைவனான ஜனகனின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, முனிவர்கள் இருவரையும் முன்னிட்டுக் கொண்டு புறப்பட்டுச் சென்றான்.(20) அந்த ராஜா {தசரதன்}, தன் நிலையத்திற்குச் சென்று முறைப்படி சிராத்தங்களைச் செய்து, அடுத்த விடியலில் எழுந்திருந்து உரிய நேரத்தில் உத்தமமான கோதானம் செய்தான்.(21)

நராதிபனான அந்த ராஜா {மனிதர்களின் தலைவனான தசரதன்} தன் புத்திரர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஒரு லக்ஷம் பசுக்களை தர்மத்துடன் பிராமணர்களுக்கு தத்தம் செய்தான் {கொடையளித்தான்}.(22) புருஷரிஷபனும், புத்ரவத்சலனுமான {மனிதர்களில் காளையும், மகன்களிடம் அன்பு கொண்டவனுமான} அந்த ரகுநந்தனன் {தசரதன்}, தன் புத்திரர்களுக்காக உத்தேசிக்கப்பட்ட கோதானத்தில், கொம்புகளில் பொன்கொப்பிகள் பூட்டப்பட்டவையும், நிரம்பியவையும் {பாலுடன் மடிகள் பெருத்தவையும்}, கன்றுகளுடன் கூடியவையும், {பால்கறப்பதற்கான} வெண்கலப் பாத்திரங்களுடன் கூடியவையுமான நான்கு லக்ஷம் பசுக்களைப் பலவிதக் கொடைகளுடன் {செல்வங்களுடன்} துவிஜர்களுக்கு {இருபிறப்பாளர்களுக்குக்} கொடையளித்தான்.(23,24) கோதானமளித்த பிறகு, சுதன்களால் {மகன்களால்} சூழப்பட்ட அந்த நிருபதி {தசரதன்}, லோகபாலர்களால் சூழப்பட்ட சௌம்யமான பிரஜாபதியை {பிரம்மனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(25)

பாலகாண்டம் சர்க்கம் – 72ல் உள்ள சுலோகங்கள் : 25

Previous | Sanskrit | English | Next

Thursday, 25 November 2021

நிமி வம்சம் | பால காண்டம் சர்க்கம் - 71 (24)

Nimi's bloodline | Bala-Kanda-Sarga-71 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஜனகன் தன் குல வரலாற்றைச் சொன்னது; சீதையை ராமனுக்கும், ஊர்மிளையை லக்ஷ்மணனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பியது...

Rama and Lakshmana

இவ்வாறு சொன்னவரிடம் {வசிஷ்டரிடம்} ஜனகன் தன் கைகளைக் கூப்பி மறுமொழி சொன்னான்: "நீர் மங்கலமாக இருப்பீராக. பெரும்புகழ்வாய்ந்த என் குலத்தைக் குறித்தும் கேட்பதே உங்களுக்குத் தகும்.(1) முனிசிரேஷ்டரே, மஹாமுனியே, நற்குலத்தில் பிறந்தவன் {கன்னியாதானம் செய்து} கொடுக்கும்போது தன் குலத்தைக் குறித்து அறிவிக்க வேண்டியதை மிச்சமில்லாமல் சொல்ல வேண்டும். எனவே, நான் சொல்கிறேன்.(2) ஸ்வகர்மங்களால் {தன் செயல்களால்} மூவுலகங்களிலும் புகழ்பெற்றவனும், பரமதர்மாத்மாவும், சர்வ சத்வ ஆத்மாக்களிலும் சிரேஷ்டனுமான ராஜா நிமி {என்றொருவன்} இருந்தான்.(3) மிதி என்ற பெயர் கொண்ட ஒருவன் அவனுடைய புத்திரனாக இருந்தான். அவனுடைய {மிதியின்} புத்திரன் ஜனகன். பிரதம {முதல்} ஜனகன் என்ற பெயரை அடைந்த ஜனகனுக்கு உதாவசு பிறந்தான்.(4) உதாவசுவுக்கு, தர்மாத்மாவான நந்திவர்த்தனன் பிறந்தான். நந்திவர்த்தனனின் புத்திரன் சுகேது என்ற பெயர் படைத்தவன் ஆவான்.(5) சுகேதுவுக்கு, தர்மாத்மாவும், மஹாபலனுமான தேவராதனும், அந்த தேவராதனுக்கு ராஜரிஷியான பிருஹத்ரதனும் பிறந்தனர்.(6) 

பிருஹத்ரதனுக்கு, சூரனும், பிரதாபவானுமான மஹாவீரன் பிறந்தான். மஹாவீரனுக்குத் துணிவுமிக்கவனும், சத்தியவிக்கிரமனுமான {நிச்சயம் வெல்பவனான} ஸுத்ருதி பிறந்தான்.(7) அந்த ஸுத்ருதிக்கு, தர்மாத்மாவும், சுதர்மிகனுமான திருஷ்டகேதுவும், ராஜரிஷியான அந்தத் திருஷ்டகேதுவுக்கு ஹர்யஷ்வனும் பிறந்தனர்.(8) ஹர்யஷ்வனின் புத்திரன் மருவாவான். மருவின் புத்திரன் பிரதீந்தகன் ஆவான். பிரதிந்தகனின் மகன் தர்மாத்மாவான ராஜா கீர்த்திரதனாவான்.(9) கீர்த்திரதனின் புத்திரன் தேவமீடன் என்பது நினைவுகூரத்தக்கது. தேவமீடனுக்கு விபுதனும், விபுதனுக்கு மஹீத்ரகனும் பிறந்தனர்.(10) மஹாபலனான ராஜா கீர்த்திராதன் மஹீத்ரகனின் மகனாவான். ராஜாரிஷியான அந்தக் கீரத்திராதனுக்கு மஹாரோமன் பிறந்தான்.(11) மஹாரோமனுக்குத் தர்மாத்மாவான ஸ்வர்ணரோமனும், ராஜரிஷியான ஸ்வர்ணரோமனுக்கு ஹிரஸ்வரோமனும் பிறந்தனர்.(12) தர்மத்தை அறிந்தவரும், மஹாத்மாவுமான அவருக்கு {ஹிரஸ்வரோமருக்கு} இரண்டு புத்திரர்கள் பிறந்தனர். {அவர்களில்} நான் ஜேஷ்டன் {மூத்தவன்}. வீரனான குசத்வஜன் எனக்குப் பின் பிறந்த என்னுடைய தம்பியாவான்.(13)

நராதிபரான எங்கள் பிதா {ஹிரஸ்வரோமர்} ஜேஷ்டனான என்னை ராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்தார். அவர் {ஹிரஸ்வரோமர், வளர்க்க வேண்டிய கடமையென்ற} பாரமாக குசத்வஜனை என்னிடம் ஒப்படைத்துவிட்டு வனத்திற்குச் சென்றார்.(14) விருத்தரான {முதிர்ந்தவரான} எங்கள் பிதா சுவர்க்கத்திற்குச் சென்றதும், என் தம்பியும், தேவனுக்கு ஒப்பானவனுமான குசத்வஜனை நான் ஸ்நேகத்துடனும், பாசத்துடனும் வளர்த்து வந்தேன். {ராஜ்ஜியமெனும்} இந்தச் சுமையையும் தர்மம் தவறாமல் சுமந்து வந்தேன்.(15) சிறிது காலம் கழிந்த பிறகு, வீரியவானான சுதன்வ ராஜன், ஸாங்காஷியாபுரத்தில் இருந்து வந்து மிதிலையை முற்றுகையிட்டான்.(16) அவன் {சுதன்வன்}, "உத்தமமான சைவதனுஸையும் {சிவனின் வில்லையும்}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட கன்னிகை சீதையையும் எனக்குக் கொடுக்க வேண்டும்" என்று சொல்லி அனுப்பினான்.(17)

பிரம்மரிஷியே {வசிஷ்டரே, நான் என் மகளை} தானமளிக்காததால் என்னுடன் யுத்தம் செய்ததில் அந்தச் சுதன்வ ராஜன் என்னால் முடிக்கப்பட்டான்.(18) முனிசிரேஷ்டரே, நராதிபதியான அந்தச் சுதன்வனைக் கொன்று, சூரனான என் தம்பி குசத்வஜனை ஸாங்காஷியத்தில் அபிஷேகம் செய்து வைத்தேன் {குசத்வஜனை ஸாங்காஷ்யாபுரியின் மன்னனாக நிறுவினேன்}.(19) மஹாமுனியே, இவன் என் தம்பி, நான் ஜேஷ்டன். முனிபுங்கவரே, பரமபிரீதியடைந்திருக்கும் நான் சீதையை ராமனுக்கும், ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும் கொடுக்கிறேன். நீர் மங்கலமாக இருப்பீராக.(20,21அ) வீர்யசுல்கமும், ஸுரசுதைக்கு {தெய்வீக மகளுக்கு} ஒப்பானவளுமான என் மகள் சீதையையும், இரண்டாமவளான ஊர்மிளையையும் திரிகரணங்களில் வேறுபாடின்றி[1] பரமபிரீதியுடன் நான் தத்தம் செய்கிறேன் என்பதில் ஐயமில்லை.(21ஆ,22)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மனம், வாக்கு, காயம் {உடல்} கரணங்கள் என்பன இந்த மூன்று கணங்களாகும். எனவே நான் முழு இதயத்துடனும், வாக்குத் தூய்மையுடனும், தூய்மையான உடலுடனும் மணமகள்களைக் கொடுக்கிறேன் என்பது இங்கே பொருளாகும்" என்றிருக்கிறது. இதுவரை வசிஷ்டரிடம் சொல்லப்படும் வாக்கியம், இதன் பிறகு தசரதனுக்குச் சொல்லப்படுவதாக மாறுகிறது.

இராஜாவே {தசரதா}, ராமலக்ஷ்மணர்களுக்காகக் கோதானம் செய்து முடித்ததும் பித்ருகாரியத்தையும் {தந்தை செய்ய வேண்டிய காரியங்களையும்}, வைவாஹிகத்தையும் {விவாஹ காரியங்களையும்} நீ செய்விப்பாயாக. நீ மங்கலமாக இருப்பாயாக[2].(23) மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்ட தசரதா}, பிரபுவே, இன்று மகம் {நட்சத்திரம் நடைபெறுகிறது}. இராஜாவே, இன்றிலிருந்து மூன்றாம் நாளில் உத்தரப் பல்குனியில் {உத்தர நக்ஷத்திரத்தில்} விவாஹிகத்தைச் செய்விப்பாயாக. இராமலக்ஷ்மணர்களுக்கு நலத்தை விளைவிக்கும் தானங்களை நீ செய்வாயாக" {என்றான் ஜனகன்}.(24)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே சொல்லப்படும் கோதானம் என்பது வேறு பரிமாணத்தை அடைந்து உடல் முடியை மழிப்பது என்ற பொருளைக் கொள்கிறது. மாணவர்கள் தங்கள் குருகுல வாசத்தை முடித்துத் திரும்பி முடி இறக்குதல், எண்ணெய்க் குளியல் உள்ளிட்ட சில சடங்குகளுக்குப் பிறகு இல்லறத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இங்கே மாணவன் முடியை இறக்கும்போது ஆசிரியர் {குரு} பசுக்களைக் கொடையாகப் பெறுவார். தேவையற்ற மயிர் நீங்கிய பின் ஸமாவர்த்தனம் எனும் சடங்கு மேற்கொள்ளப்படும். இங்கே சுட்டிக்காட்டப்படும் சச்சரவு என்னவென்றால், "ராமலக்ஷ்மணர்கள் பிறக்கும்போது தலையைத் தவிர மற்ற இடங்களில் தேவையற்ற மயிர் இன்றிப் பிறந்தவர்கள்" என்பதைப் போலவே நான்கு சகோதரர்களுக்கும் இந்தியத் தொன்மங்கள் அலங்காரம் செய்து காட்டுகிறது. அவ்வாறிருப்பின் ஜனகன் ஏன் இத்தகைய சடங்கைச் செய்யச் சொல்கிறான்? அவர்களிடம் தேவையற்ற மயிர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தச் சடங்கைச் செய்தே ஆக வேண்டும்" என்றிருக்கிறது.

பாலகாண்டம் சர்க்கம் – 71ல் உள்ள சுலோகங்கள் : 24

Previous | Sanskrit | English | Next

Wednesday, 24 November 2021

இக்ஷ்வாகு வம்சம் | பால காண்டம் சர்க்கம் - 70 (45)

Ikshvaku's bloodline | Bala-Kanda-Sarga-70 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஜனகன் தன் தம்பி குசத்வஜனை அழைத்து வரத் தூதர்களை அனுப்பியது; இக்ஷ்வாகு வம்ச பட்டியலையும் அதன் மகிமையையும் சொன்ன வசிஷ்டர்...

Janaka welcomes Rama

வாக்கியங்களை அறிந்தவனான ஜனகன், பொழுது விடிந்ததும் மஹாரிஷிகளின் மூலம் யஜ்ஞ கர்மங்களை முடித்துவிட்டு, புரோஹிதரான சதாநந்தரிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1) "{கரும்புச் சாற்றைப் போன்ற நீரைக் கொண்ட} இக்ஷுமதி நதியைப் பருகுபவனும், {அந்நதியின்} நீர் சூழ சூலங்களை நாட்டி வைத்திருப்பவனும்[1], அதிதார்மிகனும், மஹாதேஜஸ்வியும், குசத்வஜன் என்று புகழ்பெற்றவனுமான என் தம்பி {குசத்வஜன்}, புஷ்பக விமானத்தைப் போன்றதும், சுபமானதும், புண்ணியமானதுமான ஸாங்காஷ்யாபுரியில் {ஸாங்காஷ்ய நகரத்தில்} இருக்கிறான்[2].(2,3) நான் அவனைக் காண விரும்புகிறேன். அவனும் என்னுடன் சேர்ந்து இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்[3]" {என்றான் ஜனகன்}.(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே இருக்கும் மூலச் சொற்களான " வார்யா பலகபர்யந்தாம்" என்பதற்கு "ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் பெயர் பெற்ற திராட்சை {நீர்நெல்லித்} தோட்டத்தால் சூழப்பட்ட" என்றும் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது. இந்த சர்க்கத்தின் மூன்றாம் அடிக்குறிப்பில் வரும் நரசிம்மாசாரியர் பதிப்பின் உரையில் இது குறித்து மேலும் அறியலாம்.

[2] மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 3, 141ம் சுலோகத்தில், "தக்ஷகன், அஸ்வசேனன் ஆகிய நீங்கள் இக்ஷுமதி {நதியின்} கரையில் உள்ள குருக்ஷேத்திரத்தில் தங்கியிருப்பவர்கள்" என்று வருகிறது. இக்ஷுமதி என்றால் கரும்புச்சாறு என்று பொருள். சாங்காஷ்யபுரி இன்று உத்திரபிரதேசம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் சங்கிசபசந்தபுரம் என்று நம்பப்படுகிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜனகன் செய்து வரும் யஜ்ஞத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் இந்தக் குசத்வஜனே கொடுத்தானென்பதால் அவனும் இந்த யஜ்ஞ பலனை அனுபவிக்க வேண்டியவனாவான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியரின் பதிப்பில், "ஸாங்காச்யையென்று பட்டணம் உண்டல்லவா? அது மிகவும் அழகியது. அதைச் சுற்றிலும் அகழிபோல் சூழ்ந்திருக்கிற இக்ஷுமதியென்னும் ஆற்றின் ப்ரவாஹத்தில் பகைவர் அண்டவொண்ணாதபடி காக்கும்பொருட்டுச் சூலங்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. மேலும் அந்நதியைச் சுற்றி நீர் நெல்லி மரங்கள் நெருங்கி விளங்குகின்றன. ஸுக்ருதம் போல அப்பட்டணம் தன்னிடம் வசிப்பவர்களுக்கு ஸகல அபீஷ்டங்களையுங் கொடுத்துக் கொண்டு புஷ்பகவிமாநம் போல் ப்ரகாசிக்கின்றது. மஹாபராக்ரமசாலியும், மிகவும் தர்மஸ்வபாவனும் எனக்குப் பின் பிறந்தவனும் எங்கும் ப்ரஸித்துப் பெற்றவனுமாகிய குசத்வஜனென்பவன் அப்பட்டணத்தில் இக்ஷுமதியென்னும் அந்நதியின் ஜலத்தைப் பாநஞ்செய்து கொண்டு வஸித்திருக்கின்றனன். அவன் அப்பட்டணத்திலிருந்து கொண்டு எனது யாகத்திற்கு வேண்டிய ஸம்பாரங்களை அப்போதைக்கப்போது ஸித்தஞ்செய்து கொடுத்துக் கொண்டிருப்பது பற்றி எனது யாகத்தைக் காப்பவன் அவனேயென்று நான் நினைத்திருக்கின்றனன். ஆகையால் அவனை இப்பொழுது நான் பார்க்க விரும்புகின்றேன். அம்மஹாதேஜஸ்வியும் இந்த விவாகத்தைப் பற்றிய ஸந்தோஷப் பெருக்கை என்னோடு கலந்து அநுபவிக்க வேண்டியவன்" என்றிருக்கிறது.

அவன் {ஜனகன்}, சதாநந்தரின் சந்நிதானத்தில் {எதிரில்} இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது சுறுசுறுப்பான தூதர் சிலர் அங்கே வந்தனர். {குசத்வஜனை அழைத்து வரும்படி} ஜனகன் அவர்களுக்கு ஆணையிட்டான்.(5) இந்திரனின் ஆணையின் பேரில் விஷ்ணுவை அழைத்து வருபவர்களைப் போல அவர்கள் {அந்தத் தூதர்கள்} நரேந்திரனின் {மனிதர்களின் தலைவனான ஜனகனின்} சாசனத்தால் அந்த நரவியாகரனை {மனிதர்களில் புலியான குசத்வஜனை} அழைத்து வருவதற்காகக் குதிரைகளில் சீக்கிரம் சென்றனர்.(6) அவர்கள் ஸங்காஷ்யத்தை {ஸாங்காஷ்யாபுரியை} அடைந்து குசத்வஜனைக் கண்டு நடந்தவற்றைச் சொல்லி ஜனகனின் சிந்தனையையும் {எண்ணத்தையும்}[4] அறிவித்தனர்.(7)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜனகன் தன் தம்பியான குசத்வஜனின் மகள்கள் இருவருக்கும் ஓர் ஏற்பாட்டை எண்ணுகிறான். தசரதனுக்கு நான்கு மகன்கள் இருப்பதால், ஜனகன் தன் இரு மகள்களையும், தன் தம்பியான குசத்வஜனின் இரு மகள்களையும் அவர்களுக்குக் கொடுத்து தசரதனுடன் வலுவான கூட்டணியை அமைக்கும் ஆலோசனையைத் தன் தம்பியிடம் முன்வைக்கிறான்" என்றிருக்கிறது.

நிருபதியான குசத்வஜன், மிக விரைவாக வந்த தூதசிரேஷ்டர்களிடம் {சிறந்த தூதர்களிடம்} இருந்து நிகழ்வுகளை அறிந்து கொண்டு நரேந்திரனின் {ஜனகனின்} ஆஜ்ஞையின் பேரில் புறப்பட்டான்.(8) அவன் {குசத்வஜன்}, தர்மவத்ஸலனும் {கடமையில் கண்ணாயிருப்பவனும்}, மஹாத்மாவுமான ஜனகனைக் கண்டான். அவன் {முதலில்} சதாநந்தரையும், {அடுத்ததாக} அதிதார்மிகனான ஜனகனையும் வணங்கி ராஜனுக்குத் தகுந்த பரம திவ்ய ஆசனத்தில் அமர்ந்தான்.(9,10அ) அமிதௌஜஸ்விகளான {அளவற்ற ஒளி பொருந்தியவர்களான} அந்த வீரச் சகோதரர்கள் இருவரும் {ஜனகனும், குசத்வஜனும்} மந்திரிசிரேஷ்டனான {அமைச்சர்களிற்சிறந்த} சுதாமனை அழைத்து,(10ஆ,11அ) "மந்திரிபதியே {தலைமை அமைச்சனே}, சீக்கிரம் சென்று, அளவற்ற காந்தியுடையவனும், ஐக்ஷ்வாகனுமான துர்தர்ஷனை {இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த, வெல்லப்பட முடியாத தசரதனை}, அவனது மந்திரிகளுடனும், மகன்களுடனும் இங்கே அழைத்து வருவாயாக" {என்றனர்}.(11ஆ,12அ)

அவனும் {அந்த சுதாமனும்} விருந்தினர் மாளிகைக்குச் சென்று ரகுகுலவர்தனனை {தசரதனைக்} கண்டு அவனை சிரசால் வணங்கி {தலைவணங்கி} இதைச் சொன்னான்:(12ஆ,13அ) "வீரரே, அயோத்யாதிபதியே {தசரதரே}, மிதிலாதிபரான வைதேஹர் {ஜனகர்}, உபாத்யாயர்களுடனும், புரோஹிதர்களுடனும் உம்மைக் காண விரும்புகிறார்" {என்றான் சுதாமன்}.(13ஆ,14அ)

அப்போது அந்த ராஜா {தசரதன்}, மந்திரிசிரேஷ்டனின் வசனத்தைக் கேட்டு ரிஷிகணங்களுடனும், பந்துக்களுடனும் {உறவினர்களுடனும்} ஜனகன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(14ஆ,15அ) வாக்கியங்களைச் சிறந்த விதத்தில் அமைப்பவனான அந்த ராஜா {தசரதன்}, மந்திரிகள், உபாத்யாயர்கள், பந்துக்கள் சஹிதனாக இருந்த வைதேஹனிடம் {ஜனகனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(15ஆ,16அ) "மஹாராஜாவே, பகவானான வசிஷ்ட ரிஷி இக்ஷ்வாகுகுல தெய்வத்தைப் போன்றவர் என்பதையும், காரியங்கள் அனைத்தையும் அறிவிப்பவர் என்பதையும் நீ அறிவாய்.(16ஆ,17அ) தர்மாத்மாவான இந்த வசிஷ்டர், விஷ்வாமித்ரரின் அநுமதி பெற்ற மஹாரிஷிகள் அனைவருடன் கூடியவராக என் வம்சத்தை வரிசைக்ரமமாக விவரிப்பார்" {என்றான் தசரதன்}.

Rama's lineage

தசரதன் அமைதியடைந்ததும் வாக்கியங்களை அறிந்தவரான பகவான் வசிஷ்ட ரிஷி, தன்னைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து வைதேஹனிடம் {ஜனகனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(17ஆ,18,19அ) "அவ்யக்த பிரபாவனும் {அறிவதற்கரியவனும்}, சாஷ்வதனும் {காலமற்றவனும்}, அழிவற்றவனும், நித்தியனுமான பிரம்மனுக்கு[5] மரீசி பிறந்தார். மரீசிக்கு கசியபர் பிறந்தார், கசியபருக்கு விவஸ்வான் {சூரியன்} பிறந்தான். விவஸ்வானுக்கு மனு பிறந்தான்.(19ஆ,20) அந்த மனுவே பூர்வ பிரஜாபதியாவான். இக்ஷ்வாகு மனுவின் சுதனாவான் {மகனாவான்}. இக்ஷ்வாகு பூர்வத்தில் அயோத்தியின் ராஜனாக இருந்தான்.(21) ஸ்ரீமான் குக்ஷி, இக்ஷ்வாகுவின் மகனாக அறியப்படுகிறான். குக்ஷிக்கு புகழ்பெற்ற ஸ்ரீமான் விகுக்ஷி மகனாகப் பிறந்தான்.(22) மஹாதேஜஸ்வியும், பிரதாபவானுமான பாணன் விகுக்ஷியின் புத்திரனாவான். மஹாதேஜஸ்வியும், பிரதாபவானுமான அநரண்யன் பாணனின் புத்திரனாவான்.(23) அநரண்யனுக்குப் பிருது பிறந்தான். திரிசங்கு பிருதுவின் சுதனாவான் {மகனாவான்}. திரிசங்குவுக்குப் பெரும்புகழ்பெற்ற துந்துமாரன் புத்திரனாகப் பிறந்தான்.(24) துந்துமாரனுக்கு மஹாதேஜஸ்வியும், மஹாரதனுமான யுவனாஷ்வனும், அந்த யுவனாஷ்வனுக்குப் பிருதிவீபதியான மாந்தாதாவும் மகன்களாக இருந்தனர்.(25) மாந்தாதவுக்கு ஸ்ரீமான் ஸுஸந்தி மகனாகப் பிறந்தான், ஸுஸந்திக்கு, துருவஸந்தி, பிரஸேநஜித் என்ற இரு புத்திரர்கள் பிறந்தனர்.(26) துருவஸந்திக்கு பரதன் என்ற பெயரையும், பெருங்கீர்த்தியையும் கொண்டவன் பிறந்தான். பரதனுக்கு அஸிதன் என்ற பெயரைக் கொண்ட மஹாதேஜஸ்வி பிறந்தான்.(27)

[5] பிரம்மனின் இந்த அடைமொழிகள் குறித்து நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வெகுகாலமிருப்பவனாகையால் சாச்வதனென்றும், இரண்டு பரார்த்த காலம் {1 பரார்த்தகாலம் = 1014 x 1.5 மனித ஆண்டுகள், அதாவது 2 பரார்த்த காலங்கள் = 31,10,40,00,00,00,000 மனித ஆண்டுகள்} நாசமின்றி இருப்பவனாகையால் நித்யனென்றும், ப்ரவாஹ ரூபமாக இடையின்றிக் கல்பந்தோறும் இருப்பவனாகையால் அவ்யயனென்றும் கண்டுகொள்வது. சாச்வதன் வித்யன், அவ்யயன் என்கிற இம்மூன்று சப்தங்களும் நாசமின்றியிருக்கும் வஸ்துவைச் சொல்லுகின்றன" என்றிருக்கிறது.

அவனுக்கு {அஸிதனுக்கு} ஹைஹயர்கள், தாலஜங்கர்கள், சூரர்களான சசபிந்துக்களின் ராஜாக்கள் பகைவராக இருந்தனர்.(28) அவன் {அஸிதன்} அவர்களுடன் யுத்தமும், பிரதியுத்தமும் செய்து நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டான். அந்த ராஜா தன் பாரியைகள் {மனைவியர்} இருவருடன் ஹிமவந்தம் சென்றான் {இமய மலையை அடைந்தான்}.(29) ராஜா அஸிதன் அல்ப பலத்துடன் {சொற்ப படையுடன் இமயத்தில் வசித்து} காலதர்மத்தில் தன் இறுதி மூச்சை விட்டான். அவனது பாரியைகள் இருவரும் கர்ப்பவதிகளாக இருந்தனர். {அவர்களில்} ஒருத்தி தன் சக்களத்தியின் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக நஞ்சைக் கொடுத்தாள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(30,31அ)

பிறகு, சியவனர் என்ற பெயரைக் கொண்ட பார்க்கவ {பிருகு வம்ச} முனிவர், சிறந்த மலைகளின் அழகால் கவரப்பட்டு ஹிமவந்தத்தில் தஞ்சமடைந்தார்.(31ஆ,32அ) மஹாபாக்யமும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும் கொண்ட ஒருத்தி {அஸிதனின் மனைவியரில் ஒருத்தி}, உத்தம சுதனை விரும்பி அங்கே தேவனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த பார்க்கவரை {சியவனரை} வணங்கினாள்.(32ஆ,33அ) {அவளுக்கு நஞ்சூட்டிய சக்களத்தியான} காளிந்தியும் அந்த ரிஷியை அடைந்து வணங்கினாள். அந்த விப்ரர், புத்திரனை விரும்பி வந்தவளிடம் {நஞ்சுண்டவளிடம்}, புத்திரஜனனம் குறித்துச் சொல்லும் வகையில்[6],(33ஆ,34அ) "மஹாபாக்யவதியே, உன் வயிற்றில் பெரும் பலம்வாய்ந்தவனும், மஹாவீரியனும், மஹாதேஜஸ்வியும், ஸ்ரீமானுமான நல்ல புத்திரன் நஞ்சுடன் அதிசீக்கிரத்தில் பிறப்பான். கமலேக்ஷணையே {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளே}, நீ வருந்த வேண்டாம்" {என்றார் சியவனர்}.(34ஆ,35)

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த வரிகளுக்குப் பொருள் கொள்வதில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. சிலர் காளிந்தியானவள் சக்களத்திக்கு நஞ்சூட்டியவள் என்றும், வேறு சிலர் காளிந்தி நஞ்சுண்டவள் என்றும் சொல்கிறார்கள். "காளிந்தியும்" என்று இங்குச் சொல்லப்படுவதால் நஞ்சூட்டியவளே காளிந்தி என்று இங்கே பொருள் கொள்ளப்படுகிறது. நஞ்சூட்டிய குற்றவுணர்வுடன் கூடிய அவளும் கர்ப்பவதியாக இருந்தாள். இதனால்தான் "அவளும்" வந்தாள் என்று "உம்" விகுதி சேர்க்கப்படுகிறது" என்றிருக்கிறது.

ராஜபுத்திரியும், பதிவிரதையும், பதியற்றவளுமான அந்த தேவி சியவனரை நமஸ்கரித்தாள். அதன்பிறகு {அந்த முனிவரின் வரத்தால்} அவள் புத்திரனைப் பெற்றாள்.(36) கர்ப்பம் கலைய சக்களத்தியால் நஞ்சூட்டப்பட்டு, அந்த நஞ்சுடன் பிறந்ததால் அவன் சகரன் என்று அறியப்பட்டான்.(37) அந்த சகரனுக்கு அசமஞ்சன் பிறந்தான். அசமஞ்சனுக்கு அம்சுமான் பிறந்தான். திலீபன் அம்சுமானின் புத்திரனாகப் பிறந்தான். திலீபனுக்குப் பகீரதன் பிறந்தான்.(38) பகீரதனுக்குக் காகுத்ஸ்தனும், காகுத்ஸ்தனுக்கு ரகுவும் பிறந்தனர். தேஜஸ்வியான பிரவிருத்தன் ரகுவின் புத்திரனாவான். அவனே மனித ஊனுண்ணும் கல்மாஷபாதனானான்[7]. அவனுக்கு {பிரவிருத்தனுக்கு / கல்மாஷபாதனுக்கு} சங்கணன் பிறந்தான்.(39,40அ) சங்கணனுக்குச் சுதர்ஷனனும், சுதர்ஷனனுக்கு அக்னிவர்ணனும், அக்னிவர்ணனுக்குச் சீக்ரகனும், சீக்ரகனுக்கு மருவும் மகன்களாகப் பிறந்தனர். மருவுக்குப் பிரசுஷ்ருகனும், பிரசுஷ்ருகனுக்கு அம்பரீஷனும் பிறந்தனர்.(40ஆ,41) மஹீபதியான நஹுஷன் அம்பரீஷனின் புத்திரனாகப் பிறந்தான். நஹுஷனுக்கு யயாதியும், யயாதிக்கு[8] நாபாகனும் மகன்களாகப் பிறந்தனர்.(42) நாபாகனுக்கு அஜன் பிறந்தான், அஜனுக்குத் தசரதன் பிறந்தான். தசரதனுக்கு ராமலக்ஷ்மண சகோதரர்கள் பிறந்தனர்[9].(43)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "உண்மையில் பிரவிருத்தன் இந்த வம்சத்தின் பெரும் மன்னனாக இருந்தாலும் திமிர் பிடித்தவனாக இருந்தான். எனவே ஒரு நாள் வசிஷ்டரின் கோபத்துக்கு உள்ளாகி மனிதரை உண்ணும் ராக்ஷசனானான். அவனுக்கும் மாய சக்திகள் இருந்ததால் வசிஷ்டரைச் சபிக்கத் தன் கையில் நீரை எடுத்தான். பதிவிரதையான அவனது மனைவி மதயந்தி அவனைத் தடுத்தாள். மனைவியின் சொற்களைக் கேட்டு நீரை சிந்தியபோது அந்த நீர் அவனது பாதங்களில் விழுந்தது. சபிக்க எடுக்கப்பட்ட அந்த நீர் அவனது பாதத்தில் கறையாக இருந்தது. எனவே அவன் கல்மாஷபாதனான்" என்றிருக்கிறது. இந்தக் கல்மாஷபாதனின் கதை மஹாபாரதத்தில் ஆதிபர்வம் பகுதி 178 முதல் 184 வரை சொல்லப்படுகிறது. கர்ணபர்வத்தில் கல்மாஷபாதனைக் குறித்துக் கர்ணனிடம் சல்லியன் சொல்கிறான். அநுசாஸன பர்வம் 79, 80 பகுதிகளில் சௌதாசன் என்ற பெயரில் இவன் கதை வருகிறது. அஸ்வமேத பர்வம் 57,58ம் பகுதிகளிலும் இவன் கதை சொல்லப்படுகிறது. 

 

[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நஹுஷன், யயாதி என்ற இந்தப் பெயர்கள் ராமாயணக் காலத்திற்கு முந்தைய யுகத்தில் இருந்தவர்களாக வேறு புராணங்களில் சொல்லப்படுகின்றன" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த நஹுஷ யயாதிகள் சந்த்ரவம்சத்து நஹுஷ யயாதிகளைக் காட்டிலும் வேறுபட்டவர். இதில் முறை வேறுபாடு கல்ப பேதத்தினாலுண்டானதென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.

[9] ஹரிவம்சத்தில் இக்ஷ்வாகு வம்சம் இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஹரிவம்ச பர்வம் - பகுதி 9, பகுதி 10, பகுதி 11, பகுதி 12, பகுதி 13, பகுதி 14, பகுதி 15, ஆகியவற்றில் வரைபடங்களுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, நிருபா {ஜனக மன்னா}, ஆதியில் இருந்தே களங்கமற்ற வம்சத்தினரும், பரமதார்மிகர்களும், வீரர்களும், சத்தியவான்களும் இக்ஷ்வாகு குலத்தில் ராஜர்களாகப் பிறந்தனர். இராமலக்ஷ்மணர்களுக்கு உன் மகள்களைத் திருமணம் செய்து கொடுக்குமாறு நான் கேட்கிறேன். உன் மகள்களுக்கு இவர்களே தகுந்தவர்கள். தத்தம் செய்வதே {அவர்களை இவர்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதே} உனக்குத் தகும்" {என்றார் வசிஷ்டர்}.(44,45)

பாலகாண்டம் சர்க்கம் – 70ல் உள்ள சுலோகங்கள் : 45

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை