Sunday, 26 September 2021

பகீரதன் | பால காண்டம் சர்க்கம் - 42 (25)

Bhageeratha | Bala-Kanda-Sarga-42 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அம்சுமானாலும், அவனது மகனான திலீபனாலும் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர முடியவில்லை; திலீபனின் மகனான பகீரதன் செய்த பெரும் முயற்சி; பிரம்மன் தந்த வரம்; கங்கையைத் தன் தலையில் தாங்கிய சிவன்...

Bhagiratha and Brahma

{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "இராமா, ஸகரன் கால தர்ம கதியை அடைந்தும் {மரணம் அடைந்ததும்} அமைச்சர்களும், ஜனங்களும் தார்மிகனான {ஸகரனின் பேரனான} அம்சுமானை ராஜனாக அரியணையேற்றினர்.(1) இரகுநந்தனா, அந்த அம்சுமான் மஹாராஜனாகத் திகழ்ந்தான். அவனுக்கு திலீபன் என்ற புகழ்பெற்ற மஹான் புத்திரனாகப் பிறந்தான்.(2) இரகுநந்தனா, அவன் {அம்சுமான்}, திலீபனிடம் ராஜ்ஜியத்தை முழுமையாக ஒப்படைத்துவிட்டு, ரம்மியமான ஹிமய சிகரத்தில் கடுந்தவம் மேற்கொண்டான்.(3) பெரும்புகழ் பெற்ற அந்த ராஜா {அம்சுமான்}, வனத்தில் முப்பத்து இரண்டாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, தவத்தையே தனமாகக் கொண்டவனாக சுவர்க்கத்தை அடைந்தான்[1].(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவன் {அம்சுமான்}, தன் தவத்தின் வெகுமதியாக கங்கையை அடையாமல், தனக்காகப் புண்ணியத்தை மட்டுமே அடைந்து சொர்க்கத்தை அடைந்தான்" என்றிருக்கிறது.

மஹாதேஜஸ்வியான திலீபன், தன் பிதாமஹர்களின் {தன் பாட்டன் மாரும், ஸகரனுடைய அறுபதாயிரம் மகன்களுமான அவர்களின்} வதத்தைக் கேட்டு துக்கமடைந்து, {தன் தந்தையின் [அம்சுமானின்] அவல நிலையை நினைத்து} புத்தி சிதைந்து, ஒரு நிச்சயத்தை அடையாமல் இருந்தான்.(5) அவன், "கங்கையை அவதரிக்கச் செய்வது எவ்வாறு? அவர்களுக்கு {பாட்டன்மாருக்கு} ஜலக்கிரியை {தர்ப்பணம்} செய்வது எவ்வாறு? அவர்களை இந்தக் கதியில் இருந்து மீட்பதெவ்வாறு?" என்ற சிந்தனையில் எப்போதும் வருந்திக் கொண்டிருந்தான்.(6) ஆத்மாவை அறிந்தவனும், தர்மவானும், நித்தம் சிந்தித்துக் கொண்டிருந்தவனுமான அவனுக்கு {திலீபனுக்கு}, பகீரதன் என்ற பெயரில் தார்மிகனான புத்திரன் ஒருவன் பிறந்தான்.(7) மஹாதேஜஸ்வியான திலீபன் எண்ணற்ற யாகங்களைச் செய்தான். அந்த ராஜா முப்பத்தாயிரம் ஆண்டுகள் தன் ராஜ்ஜியத்தை ஆண்டான்.(8) நரசார்தூலா, அந்த ராஜா {திலீபன்} அவர்களின் {தன் பாட்டன்மாரின்} கதியை உயர்த்த ஒரு நிச்சயமான வழியை அறியாமல் வியாதியடைந்து காலதர்மத்தையும் அடைந்தான் {மரணமும் அடைந்தான்}.(9) நரரிஷபா {மனிதர்களில் காளையே ராமா}, அந்த ராஜா {திலீபன்}, தன் புத்திரன் பகீரதனுக்கு ராஜ்ஜியாபிஷேகம் செய்து வைத்து, தான் செய்த புண்ணியக் கர்மத்தால் இந்திரலோகத்தை அடைந்தான்.(10)

இரகுநந்தனா, தார்மிகனான ராஜரிஷி பகீரதன், பிள்ளையற்றவனாக இருந்தான். அந்த மஹாராஜா புத்திரர்களைப் பெற விரும்பியும், கங்கையை அவதரிக்கச் செய்ய விரும்பியும், பிரஜைகளையும் {குடிமக்களையும்}, ராஜ்ஜியத்தையும் மந்திரிகளின் கைகளில் ஒப்படைத்தான். மாதமொரு முறை ஆகாரம் கொண்டு, ஐந்து நெருப்புகளுக்கு[2] மத்தியில் உயர்த்திய கைகளுடன் கோகர்ணத்தில் {கோகர்ண மலையில்} நின்று, இந்திரியங்களை வென்றவனாகவும், உறுதிமிக்கவனாகவும் நீண்ட காலம் தவமிருந்தான்.(11,12,13அ) மஹாபாஹுவே {வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ராமா}, உறுதியுடன் கோர தவத்தை மேற்கொண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும், பிரஜைகளுக்குப் பதியும் {உயிரினங்களின் தலைவனும்}, ஈஷ்வரனுமான பகவான் பிரம்மன் அந்த மஹாத்மாவிடம் {பகீரதனிடம்} நிறைவடைந்தான்.(13ஆ,14)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஐந்து நெருப்புகள் என்பன பஞ்சாக்னிகளாகும். பூமியின் நான்கு திசைகளிலும் மூட்டப்பட்ட நெருப்பும், தலைக்கும் மேலே சூரியனும் சேர்ந்து பஞ்சாக்னிகளாகின்றன" என்றிருக்கிறது.

அப்போது பிதாமஹன் {பெரும்பாட்டன் பிரம்மன்}, தவம் செய்து கொண்டிருந்த மஹாத்மாவான பகீரதனிடம், ஸுர கணங்களுடன் {தேவர்களின் கூட்டத்துடன்} வந்து இவ்வாறு பேசினான்:(15) "ஜனாதிபா, மஹாராஜா பகீரதா, உன் தவம் முழுமை அடைந்தது. நான் பிரீதியடைந்தேன் {மகிழ்ச்சியடைந்தேன்}. நல்விரதம் கொண்டவனே, ஒரு வரத்தை வேண்டுவாயாக" {என்றான் பிரம்மன்}.(16)

மஹாதேஜஸ்வியும், மஹாபாஹுவுமான பகீரதன், கைகளைக் குவித்து நின்று அந்த சர்வலோக பிதாமஹனிடம் {உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மனிடம்} சொன்னான்:(17) "பகவானே, என் தவத்தில் நீ பிரீதியடைந்தால், என் தவத்திற்குப் பலனேதும் இருந்தால், ஸகராத்மஜர்கள் {ஸகரனின் மகன்கள்} அனைவரும் என்னிடம் இருந்து நீரைப் பெறட்டும்.(18) இந்த மஹாத்மாக்களின் பஸ்மம் {சாம்பல்} கங்கை நீரில் நனைந்தால், என் பிதாமஹர்கள் {பாட்டன்மார்கள்} அனைவரும் நித்தியமான சுவர்க்கத்தை அடைவார்கள்.(19) தேவா, இக்ஷ்வாகு குலத்திற்கான சந்ததியையும் நான் வேண்டுகிறேன். எங்கள் குலம் அழிவில் இருந்து மீள வேண்டும். தேவா, இதுவே நான் வேண்டும் மற்றொரு வரமாக இருக்கட்டும்" {என்றான் பகீரதன்}.(20)

சர்வலோக பிதாமஹன் {பிரம்மன்}, இத்தகைய வாக்கியத்தைச் சொன்ன ராஜனிடம் {பகீரதனிடம்} மறுமொழியாக சுபமான மதுராக்ஷரங்களுடன் கூடிய தன் நாவால்,(21) "மஹாரதனான {பெருந்தேர்வீரனான} பகீரதா, உன்னுடைய மனோரதம் மகத்தானது. இக்ஷ்வாகு குல வர்த்தனா {இக்ஷ்வாகு குலத்தைப் பெருகச் செய்பவனே}, நீ வேண்டியவாறே ஆகட்டும், நீ மங்கலமாக இருப்பாயாக.(22) இராஜாவே, ஹைமவதியான {இமயத்தில் பிறந்த} இந்த கங்கை, ஹிமவானின் மூத்த மகளாவாள். எனவே, இவளைத் தாங்குவதற்கு ஹரனை {சிவனை} நியமிக்க வேண்டும்.(23) இராஜாவே, கங்கையின் பாய்ச்சலை பிருத்வியால் {பூமியால்} சஹித்துக் கொள்ள முடியாது. இராஜாவே, அவளைத் தாங்கிக் கொள்ளும் சக்தனாக சூலபாணியை {சிவனைத்} தவிர வேறு ஒருவனையும் நான் காணவில்லை" {என்றான் பிரம்மன்}.(24)

உலகங்களைப் படைத்தவன் {பிரம்மன்}, அந்த ராஜனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, கங்கையிடமும் சொல்லிவிட்டு தேவ மருத் கணங்கள் அனைவருடன் திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்றான்" {என்றார் விசுவாமித்ரர்}.(26)

பாலகாண்டம் சர்க்கம் – 42ல் உள்ள சுலோகங்கள் : 25

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்