The request of Ravana | Yuddha-Kanda-Sarga-062 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் மீது கொண்ட பயத்தைக் கும்பகர்ணனிடம் வெளிப்படுத்தி, ராமனை அழிக்குமாறு அவனைத் தூண்டிய ராவணன்...
விபுலவிக்கிரமனான அந்த ராக்ஷசசார்தூலன் {பேராற்றல் வாய்ந்தவனும், ராக்ஷசர்களில் புலியுமான கும்பகர்ணன்}, நித்திரையினாலும், மதத்தினாலும் {மதுவெறியினாலும்} ஆட்கொள்ளப்பட்டவனாக, அழகுடன் விளங்கும் ராஜமார்க்கத்தில் நடந்து சென்றான்.(1) பிறகு, அந்தப் பரமதுர்ஜயன் {வெல்வதற்கரிய கும்பகர்ணன்}, கிருஹங்களில் இருந்து புஷ்பவர்ஷம் {மலர்மாரி} பொழிய, ஆயிரக்கணக்கான ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாகச் சென்றான்.(2) ஹேமஜாலங்களால் {பொற்சாளரங்களால்} நிறைந்ததும், பெரியதும், பானுவை {சூரியனைப்} போன்ற பிரகாசத் தோற்றம் கொண்டதுமான ராக்ஷசேந்திர நிவேசனத்தை அவன் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின் வசிப்பிடத்தைக் கும்பகர்ணன்} கண்டான்.(3) மேகத்திரளுக்குள் சூரியனைப் போல ரக்ஷோதிபதியின் நிவேசனத்திற்குள் பிரவேசித்தவன், ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்வயம்பூவை சக்ரன் போல {பிரம்மனைக் கண்ட இந்திரனைப் போல} ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தன் ஆக்ரஜனை {அண்ணன் ராவணனை} தூரத்தில் இருந்தே கண்டான்.(4)





