Thursday 7 October 2021

விஷ்வாமித்ரர் | பால காண்டம் சர்க்கம் - 51 (28)

Vishvamitra | Bala-Kanda-Sarga-51 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தமது அன்னையான அஹல்யை குறித்து விசாரித்த சதானந்தர்; விஷ்வாமித்ரரின் முற்கதையை உரைத்தது...

Vishvamitra and his army

மதிமிக்கவரான விஷ்வாமித்ரரின் வசனத்தைக் கேட்டவரும், மஹாதேஜஸ்வியும், மஹாதபஸ்வியும், கௌதமரின் ஜேஷ்ட சுதனும் {மூத்த மகனும்}, தவத்தால் பிரகாசமான ஒளி பொருந்தியவருமான சதாநந்தர், ராமனைக் கண்ட உடனேயே மயிர்க்கூச்சத்துடன் கூடிய பெரும் வியப்பை அடைந்தார்.(1,2)

பிறகு அந்த சதானந்தர், தலைக்குனிந்து பணிவுடன் சுகமாக அமர்ந்திருந்த அந்த நிருபாத்மஜர்களை {ராஜபுத்திரர்களைக்} கண்ணாறக் கண்டு, முனிசிரேஷ்டரான விஷ்வாமித்ரரிடம் சொன்னார்:(3) "முனிசார்தூலரே {முனிவர்களில் புலியே}, இந்த ராஜபுத்திரர்கள், தீர்க்க தவம் செய்தவளும், பெரும் நற்பேறு பெற்றவளுமான என் மாதாவை {அகலிகையை} உம்மால் தரிசித்தனர்.(4) மஹாதேஜஸ்வியும், பெரும் நற்பேறு பெற்றவளுமான என் மாதா, உடல் கொண்ட எவராலும் பூஜிக்கத் தகுந்த ராமனை வனப்பொருள்களால் {மலர்களாலும், கனிகளாலும், கிழங்குகளாலும்} பூஜித்தாளா?(5) மஹாதேஜஸ்வியே, என் மாதாவுக்கு தெய்வ செயலால் நேர்ந்த புராதனத்தை {பழங்கதையை} நீர் நடந்தபடியே ராமனுக்குச் சொன்னீரா?(6) கௌசிகரே, மங்கலமாக இருப்பீராக. முனிசிரேஷ்டரே, ராமனைக் கண்ட என் மாதா {அஹல்யை}, என் குருவுடன் {கௌதமருடன்} சேர்ந்து அதிதி பூஜை {விருந்தோம்பல்} செய்தாளா?(7) குசிகாத்மஜரே {குசிகரின் மகனான விஷ்வாமித்ரரே}, மஹாதேஜ்வியான என் குரு {என் தந்தை கௌதமர்}, அங்கே வந்து ராமனை பூஜித்தாரா? இந்த மஹாத்மாவால் பிரதிபூஜை செய்யப்பட்டாரா?(8) குசிகாத்மஜரே, அவர் அங்கே வந்து தீங்கு விளைவிக்காதபடி, பூஜிக்கத்தகுந்தவனான ராமனால் மனசாந்தியை அடைந்தாரா?" {என்று கேட்டார் சதானந்தர்}.(9)

மஹாமுனியும், வாக்கியங்களை அறிந்தவருமான விஷ்வாமித்ரர் சதானந்தரின் வசனத்தைக் கேட்டு, அந்த வாக்கியங்களின் பொருள் உணர்ந்து மறுமொழி சொன்னார்:(10) "முனிசிரேஷ்டா, எதுவும் செய்யப்படாமல் விடப்படவில்லை. செய்யப்படவேண்டியவை அனைத்தும் என்னால் செய்யப்பட்டன. ரேணுகையுடன் பார்க்கவரை {ஜமதக்னியைப்} போல[1] அந்தப் பத்தினியும், முனியும் {அகலிகையும் கௌதமரும்} ஒன்று சேர்ந்தனர்" என்றார் {விசுவாமித்ரர்}.(11)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முந்தைய யுகத்தில் க்ஷத்திரிய மன்னர்களின் தவறுகளைக் கண்டிக்கும் பிராமணராக விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான பரசுராமரின் அன்னையாவாள் இந்த ரேணுகை. பிருகுவின் வழித்தோன்றலும், ரேணுகையின் கணவருமான ஜமதக்னி முனிவர் பார்க்கவர் என்றும் அழைக்கப்பட்டார். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஜமதக்னி தமது மகனான பரசுராமரிடம் அவரது தாயான ரேணுகையின் தலையைக் கொய்யச் சொல்கிறார். பரசுராமரும் தமது தந்தையின் ஆணையைத் தயக்கமில்லாமல் நிறைவேற்றினார். ஒப்பற்ற ஆயுதமான கோடரியுடன் கூடிய பரசுராமர் இவ்வாறே பார்க்கவ ராமர் என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பரசுராமர், இராமாயணத்தில் சீதா திருமணத்திற்குப் பிறகு ராமனை எதிர்த்து வருவார்" என்றிருக்கிறது.

மதிமிக்கவரான விஷ்வாமித்ரரின் வசனத்தைக் கேட்ட மஹாதேஜஸ்வியான சதானந்தர், ராமனிடம் இதைச் சொன்னார்:(12) "நரசிரேஷ்டா, ராகவா, அபராஜிதரான {வெல்லப்பட முடியாதவரான} விஷ்வாமித்ர மஹரிஷியை முன்னிட்டு வந்த உன் வரவு நல்வரவாகட்டும்[2].(13) மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் செய்த செயல்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை. இவர் தமது தவத்தின் மூலம் பிரம்மரிஷியானார். எல்லையற்ற ஒளி பொருந்திய இவரது பரமகதியை நீ அறிவாய் {நீ அறிய வேண்டும்}[3].(14) இராமா, புவியில் உன்னைவிடத் தன்யதரன் வேறு எவனும் இல்லை. உயர்ந்த தவம் பயின்ற குசிக புத்திரரே {விஷ்வாமித்ரரே} உன்னைப் பாதுகாப்பவராக இருக்கிறார்.(15) மஹாத்மாவான இந்தக் கௌசிகரின் பலமென்ன என்பதைக் கேட்பாயாக. அதனை நான் உனக்கு உரைக்கிறேன். நான் சொல்லும்போதே என்னிடம் கேட்பாயாக.(16)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சதானந்த முனிவரின் இந்த வாக்கியம் பாலகாண்டம் 19ம் சர்க்கம் 14ம் சுலோகத்தில் தரசரதன் சபையில் விசுவாமித்ரர் சொன்ன "மஹாத்மாவும், சத்தியபராக்கிரமனுமான ராமனை முற்றாக நான் அறிவேன்" என்ற வாக்கியத்தை நமக்கு நினைவுப்படுத்தும். அகலிகை, கௌதமர் ஆகியோரின் மகனானதால் சதானந்தரும் அங்கே விசுவாமித்ரர் சொன்னதைப் போலவே ராமனை அறிந்திருக்கிறார். அத்தகைய முனிவர் ஒருவர் ராமனை வழிநடத்துகிறார் எனும்போது அவரைக் குறித்த பின்னணியை ராமன் அறிந்திருக்க வேண்டும். இதனால் அடுத்தடுத்து வரப்போகும் சில சர்க்கங்களில் {15 சர்க்கங்களில்} சதானந்தர் சொல்வதாக விசுவாமித்ரரின் கதை இடம்பெறப்போகிறது" என்றிருக்கிறது.

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த உரையை "ஏற்கனவே நீ அறிவாய்" என்று பொருள் கொண்டால், சதானந்தர் மேற்கொண்டு சொல்வதற்கு எதுவும் இல்லை. எனவே, "நீ அறிய வேண்டியது இன்னும் இருக்கிறது" என்று பொருள் கொள்வதே இங்குச் சிறப்பு. இவர் பரமஹிதசந்தாயகர், அஃதாவது அண்ட அமைதிக்கான நன்மையைச் செய்பவராக இருப்பதால் "விஷ்வம்" - அண்டம், "மித்ரன்" - நண்பன் என்ற பொருளில் அண்டத்தின் நண்பன் என்பதைக் குறிப்பதற்காக விஷ்வாமித்ரர் என்ற பெயரைப் பெற்றார்" என்றிருக்கிறது.

இந்தத் தர்மாத்மா, தர்மத்தை அறிந்தவராக இருந்து, {ஆட்சித்திறத்தில்} வித்தைகளைப் பயின்று பிரஜைகளின் நலத்தைக் காக்கும் அரிந்தம {பகைவரைத் தண்டிக்கும்} ராஜாவாக நீண்ட காலம் இருந்தார்.(17) பிரஜாபதியின் மகனும், குசன் என்ற பெயரைக் கொண்டவருமான ஒருவர் {ஒரு காலத்தில்} மஹீபதியாக {பூமியின் தலைவராக} இருந்தார். பலவானும், நல்ல தார்மிகருமான குசநாபர், இந்தக் குசரின் புத்திரனாவார்.(18) காதி என்று கேள்விப்படும் ஒருவர் குசநாபரின் மகனாவார். மஹாதேஜஸ்வியும், மஹாமுனியுமான இந்த விஷ்வாமித்ரர் அந்தக் காதியின் புத்திரனாவார்.(19) {பின்னொரு காலத்தில்} மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் மேதினியை பரிபாலித்து {பூமியை ஆண்டு} வந்தார். ராஜாவாகப் பல்லாயிரம் வருடங்கள் ராஜ்யத்தை ஆண்டுவந்தார்.(20)

இந்த மஹாதேஜஸ்வி ஒரு காலத்தில் ஓர் அக்ஷௌஹிணி சூழ படைகளைத் திரட்டிக் கொண்டு மேதினியை வலம் வந்தார்[4].(21) நகரங்கள், ராஷ்டிரங்கள், ஆறுகள், கிரிகள், ஆசிரமங்கள் என அடுத்தடுத்து திரிந்த அந்த ராஜா ஓரிடத்தில்{22} வசிஷ்டரின் ஆசிரமபதத்தைக் கண்டார். அங்கே பலவித புஷ்பங்கள், கொடிகள், மரங்கள், பலவித மிருக கணங்கள் நிறைந்தன. சித்தர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்படுவதும்,{23} தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் ஆகியோரால் ஒளிபெறுவதும், மான்கள் நிறைந்ததும், பறவைக்கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{24} பிரம்ம ரிஷி கணங்கள் நிறைந்ததும், தேவரிஷி கணங்களால் துதிக்கப்படுவதும், எப்போதும் தவப்பயிற்சிகள் நடைபெறுவதுமான இடமாக அஃது இருந்தது, அக்னிக்கு ஒப்பான மஹாத்மாக்களும்,{25} பிரம்மனுக்கு ஒப்பான மஹாத்மாக்களும், நீரைப்பருகி வாழ்பவர்களும், காற்றை உண்டு வாழ்பவர்களும், சருகுகளை உண்டு வாழ்பவர்களும்,{26} கனி கிழங்குகளை உண்டு வாழ்பவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், பாவங்களை வென்றவர்களும், புலன்களை வென்றவர்களும், ரிஷிகளும், வாலகில்யர்களும், ஜபங்கள், ஹோமங்கள் செய்பவர்களும்,{27} வைகானஸர்களும் அவ்விடத்தில் நிறைந்திருந்தனர்.(28அ) இவ்வாறே வெற்றியாளர்களில் சிறந்தவரும், மஹாபலம்வாய்ந்தவருமான விஷ்வாமித்ரர், பிரம்ம லோகத்திற்கு ஒப்பான வசிஷ்டரின் ஆசிரமபதத்தை அங்கே கண்டார்" {என்றார் சதானந்தர்}.(28ஆ,இ)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அக்ஷௌஹினி என்றழைக்கப்படும் ஒரு படைப்பிரிவானது, 21,870 தேர்களும், அதே எண்ணிக்கையிலான யானைகளும், 65,610 குதிரைகளும், 1,09,350 காலாட்களும் கொண்டதாகும்" என்றிருக்கிறது.


பாலகாண்டம் சர்க்கம் – 51ல் உள்ள சுலோகங்கள் : 28

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை