Narantaka killed | Yuddha-Kanda-Sarga-069 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனின் மகன்களான திரிசிரன், தேவாந்தகன், நராந்தகன், அதிகாயன் செய்த போர். பாதுகாக்க அனுப்பப்பட்ட மஹோதரனும், மஹாபார்ஷ்வனும்; நராந்தகனைக் கொன்ற அங்கதன்...
இவ்வாறு சோகத்தில் மூழ்கிப் புலம்பும் துராத்மாவான ராவணனின் வாக்கியங்களைக் கேட்ட திரிசிரன் {திரிசிரஸ்[1], பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "மஹாவீரியரான எங்கள் மத்தியம தாதா {நடுத்தந்தை / சிறிய தந்தையான கும்பகர்ணர்} இவ்வாறே கொல்லப்பட்டார். ஆனால், ராஜரே, சத்புருஷர்கள் {நன்மக்கள்}, உம்மைப் போல் புலம்புவதில்லை.(2) பிரபோ, நீர் திரிபுவனங்களையும் வெல்லத்தகுந்தவர். அத்தகைய நீர் பிராகிருதர்களை {சாதாரணர்களைப்} போல ஏன் புலம்புகிறீர்?(3) பிரம்மாவால் தத்தம் செய்யப்பட்ட சக்தி {வேலாயுதம்} உம்மிடம் இருக்கிறது. கவசமும், சாயகமும் {கணையும்}, தனுவும் {வில்லும்}, மேகத்திற்கு சமமான ஸ்வனத்தை எழுப்பக்கூடியதும், ஆயிரம் கழுதைகள் பூட்டப்பட்டதுமான ரதமும் இருக்கின்றன.(4) ஒருகாலத்தில் சஸ்திரங்களேதுமில்லாமலேயே தேவதானவர்களை நீர் அழித்திருக்கிறீர். அத்தகைய நீர், சர்வாயுத சம்பன்னராக, ராமனைக் அடக்கத்தகுந்தவராகவே இருக்கிறீர்.(5) மஹாராஜாவே, விருப்பம்போல் இருப்பீராக. நான் புறப்படுகிறேன். பன்னகங்களை {பாம்புகளை அழிக்கும்} கருடன் போல, ரணத்தில் உமது சத்ருக்களைக் களையப் போகிறேன்.(6) தேவராஜனால் சம்பரனும், விஷ்ணுவால் நரகனும்[2] எப்படியோ, அப்படியே இன்று யுத்தத்தில் ராமன் என்னால் தாக்கப்பட்டு வீழ்வான்" {என்றான் திரிசிரன்}.(7)