Ravana faints | Yuddha-Kanda-Sarga-068 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் கும்பகர்ணனைக் கொன்றானென்பதைக் கேட்டு மயங்கி விழுந்த ராவணன்; நனவு மீண்டதும், விபீஷணனின் ஆலோசனைகளைக் கேட்காததற்காக வருந்தியது...
கும்பகர்ணன், மஹாத்மாவான ராகவனால் கொல்லப்பட்டதைக் கண்ட ராக்ஷசர்கள், ராக்ஷசேந்திரனான ராவணனிடம் {பின்வருமாறு} அறிவித்தனர்:(1) “இராஜரே, காலனுக்கு ஒப்பாக வானர சேனையை விரட்டி, வானரர்களை பக்ஷித்தவர் {கும்பகர்ணர்}, காலனின் கர்மத்தை எதிர்கொண்டார் {யமனின் செயல்பாட்டால் உண்டாகும் மரணத்தை அடைந்தார்}.(2) ஒரு முஹூர்த்தத்திற்கு தன் பிரபாவத்தைக் காட்டிவிட்டு, ராமனின் தேஜஸ்ஸில் அவர் சாந்தமடைந்தார். அவரது காயம் {உடல்} சமுத்திரத்திற்குள் பாதி பிரவேசித்த நிலையில் பயங்கரமாகத் தெரிந்தது.{3} நாசியும், காதுகளும் துண்டிக்கப்பட்டு, உதிரம் சொட்டச் சொட்ட பர்வதத்திற்கு ஒப்பான சரீரத்துடன் லங்கையின் துவாரத்தை {வாயிலை} அடைத்துக் கொண்டார்.{4} உமது பிராதாவான {உம்முடன் பிறந்தவரான} கும்பகர்ணர், காகுத்ஸ்தனின் சரத்தால் பீடிக்கப்பட்டுக் காட்டுத் தீயால் எரிக்கப்படும் மரத்தைப் போலச் சிதைந்து விகாரமான லகண்டபூதமானார் {கழுத்தும், தாடையும் அடங்கிய சதைக் குவியலானார்” என்றனர்}.(3-5)