The fall of Lakshmana | Yuddha-Kanda-Sarga-100 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கூரிய வேல் ஆயுதத்தால் லக்ஷ்மணனைத் தாக்கிய ராவணன்; ராமனும், ராவணனும் போரைத் தொடர்ந்தது; ராவணன் பயந்தோடியது...
இராக்ஷசாதிபனான ராவணன், அந்த அஸ்திரம் முறியடிக்கப்பட்டதால் குரோதமடைந்து, குரோதத்தை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து ஒரு அஸ்திரத்தை எடுத்தான்.(1) பேரொளியுடன் கூடிய ராவணன், ரௌத்திரமானதும், பயங்கரமானதும், மயனால் வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த மற்றொரு அஸ்திரத்தை ராகவன் மீது ஏவத் தொடங்கினான்.(2) பிறகு, கார்முகத்திலிருந்து {வில்லிலிருந்து} ஒளிமயமானவையும், வஜ்ரத்திற்கு நிகரானவையுமான சூலங்களும், கதைகளும், முசலங்களும் எங்கும் வெளிப்பட்டன.(3) விதவிதமான கூரிய முத்கரங்களும், கூடபாசங்களும், ஒளிரும் அசனிகளும் {இடிகளும்} யுகக்ஷயத்தில் வாதத்தைப் போல வெளிப்பட்டன {யுக முடிவில் தோன்றும் வாயுவைப் போல அந்த வில்லில் இருந்து வெளிப்பட்டன}.(4) பேரொளி கொண்டவனும், மிகச் சிறந்த உத்தம அஸ்திரங்களை அறிந்தவனுமான ஸ்ரீமான் ராகவன், கந்தர்வர்களின் பரமாஸ்திரத்தைக் கொண்டு அந்த அஸ்திரத்தை வீழ்த்தினான்.(5)