Thursday, 29 July 2021

அயோத்தியில் ரிஷ்யசிருங்கர் | பால காண்டம் சர்க்கம் - 11 (31)

Rishyasringa's arrival at Ayodhya | Bala-Kanda-Sarga-11 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தசரதனை அறிவுறுத்திய சுமந்திரன்; ரிஷியசிருங்கரையும், அவரது மனைவியையும் அயோத்திக்கு அழைத்து வந்த தசரதன்...


Rishyashringa travels to Ayodhya

{சுமந்திரன் தொடர்ந்தான்}, "இராஜேந்திரரே, தேவர்களில் சிறந்தவரான அவர் {சனத்குமாரர்}, எவ்வாறு கதையைச் சொன்னாரோ அவ்வாறே நான் மீண்டும் சொல்லப் போகும் ஹிதமான சொற்களைக் கேட்பீராக.(1) {சனத்குமாரர் தொடர்ந்தார்}, "தர்மவானும், ஸ்ரீமானும், சத்தியத்தில் நிலைநிற்பவனுமான ஒருவன் தசரதன் என்ற பெயரில் இக்ஷ்வாகு குலத்தில் பிறப்பான்.(2) அந்த ராஜன் {தசரதன்}, அங்கராஜனுடன் நட்பு கொள்வான். அவனுக்கு[1] சாந்தை என்ற பெயரில் மஹாபாக்யவதியான ஒரு கன்னிகை இருப்பாள்.(3) அங்கராஜனின் புத்திரன் ரோமபாதன் என்ற பெயரில் அறியப்படுவான். பெரும்புகழ் படைத்த தசரத ராஜன் அவனை {ரோமபாதனை} அணுகி,(4) "தர்மாத்மாவே {ரோமபாதா}, நான் பிள்ளையற்றவனாக இருக்கிறேன். சாந்தையின் பர்த்தா {கணவர் ரிஷ்யசிருங்கர்} உன் ஆணையின் பேரில் என் குல சந்ததிக்காகச் செய்யப்படும் வேள்விக்குத் தலைமை தாங்கட்டும்" என்று கேட்பான்.(5) ஆத்மவானான ரோமபாதன், அந்த ராஜாவின் {தசரதனின்} வாக்கியத்தைக் கேட்டு, மனத்தில் சிந்தித்து, புத்திரவந்தத்திற்காக[2] சாந்தையின் பர்த்தாவைக் கொடுப்பான்.(6) அந்த ராஜன் {தசரதன்}, அந்த விப்ரரை {ரிஷ்யசிருங்கரை} அழைத்துச் சென்று, பிணி விலகியவனாக அந்தராத்மாவில் மகிழ்ச்சியடைந்து அந்த யஜ்ஞத்தைச் செய்வான்.(7)

[1] இங்கே குறிப்பிடப்படுவது தசரதனா, அங்கராஜனா என்பதில் மொழிபெயர்ப்புப் பதிப்புகளுக்கிடையில் பெருங்குழப்பம் இருக்கிறது. இதற்கு அடுத்த ஸ்லோகத்தில் அங்கராஜனின் புத்திரன் ரோமபாதன் என்றிருக்கிறது. எனவே, இங்கே அங்கராஜனின் மகள் சாந்தை என்று கொண்டால், அவள் ரோமபாதனுக்குத் தமக்கை ஆவாள். ஆனால், இதே சர்க்கத்தின் 19ம் ஸ்லோகத்தில் தசரதன் ரோமபாதனிடம் பேசும்போது உன் மகள் சாந்தை என்று சொல்கிறான். அவ்வாறெனில் சாந்தை ரோமபாதனின் மகளாவாள்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், ப்ரதா³ஸ்யதே புத்ரவந்தம் என்பது, "ஏற்கனவே மகனைக் கொண்டிருந்த ரிஷ்யசிருங்கர்" என்று சில மொழிபெயர்ப்புகளில் காணப்படுகிறது. மற்ற மொழிபெயர்ப்புகளிலோ, "புத்ரகாமேஷ்டி சடங்கின் மூலம் சந்ததியை அளிக்கும் முனிவர்" என்று காணப்படுகிறது. மஹாபாரதத்தில் விபாண்டர் ரிஷ்யசிருங்கரிடம் ஒரு மகனைப் பெறும் வரை அங்க நாட்டில் இருந்து விட்டுத் திரும்பி வந்துவிடு என்பார். இதைக் கொண்டு ரிஷ்யசிருங்கருக்கு ஒரு மகன் இருந்தான் என்று சிலர் சொல்கிறார்கள்" என்றிருக்கிறது. மஹாபாரதம் வனபர்வம் பகுதி 113ல் விபாண்டகர் ரிஷ்யசிருங்கரிடம் சொன்ன செய்தி இருக்கிறது.

வேள்வி செய்யும் விருப்பம் கொண்டவனும், தர்மம் அறிந்தவனும், நரேஷ்வரனுமான {மக்களின் தலைவனுமான} தசரத ராஜன், யஜ்ஞார்த்தத்திற்காகவும் {வேள்வியைச் செய்வதற்காகவும், அதன் மூலம் அமையும்} பிரசவார்த்தத்திற்காகவும் {சந்ததியைப் பெறுவதற்காகவும்}, ஸ்வர்க்கார்த்தத்திற்காகவும் {வீடு பேற்றுக்காகவும்} அந்தத் துவிஜ சிரேஷ்டரான {இருபிறப்பாளர்களில் சிறந்தவரான} ரிஷ்யசிருங்கரிடம் கைகளைக் கூப்பி வேண்டுவான். அந்த விஷாம்பதி {பூமியின் திக்குகள் அனைத்திற்கும் பேரரசனான தசரதன்}, அந்தத் துவிஜமுக்கியரின் {ரிஷ்யசிருங்கரின்} மூலம் தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வான்.(8,9) அவனுக்கு வீரம் நிறைந்த நான்கு புத்திரர்கள் பிறந்து வம்சத்தின் மதிப்பை உயர்த்தி உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் புகழுடன் இருப்பார்கள்" {என்றார் சனத்குமாரர்}.(10) தேவர்களில் மேலானவரும், பகவானும், பிரபுவுமான அந்தச் சனத்குமாரர் பூர்வத்தில், தேவ யுகத்தில் {கிருத யுகத்தில்} இவற்றை உரைத்தார்.(11) எனவே, புருஷர்களில் புலியே, மஹாராஜா {தசரதரே}, தனிப்பட்ட முறையில் பரிவாரத்துடன் நீரே சென்று, வாகனத்தில் அவரை {ரிஷ்யசிருங்கரை} இங்கே அழைத்து வந்து துதிப்பீராக" {என்றான் சுமந்திரன்}.(12)

சுமந்திரனின் சொற்களைக் கேட்ட தசரதன் மகிழ்ச்சியடைந்தான். அந்தச் சூதனின் மொழியை வசிஷ்டரையும் கேட்கச் செய்து, அவரது அனுமதியையும் பெற்றான். பிறகு அவன் சாந்தபுரத்தை {அந்தப்புரத்தைச்} சேர்ந்தவர்களுடனும், அமாத்யர்களுடனும் {அமைச்சர்களுடன்} சேர்ந்து, அந்தத் துவிஜர் இருந்த இடத்திற்குப் பிரயாணம் செய்தான்.(13,14அ) மெல்ல மெல்ல வனங்களையும், ஆறுகளையும் கடந்து சென்று, அந்த முனிபுங்கவர் இருக்கும் தேசத்திற்குள் நுழைந்தான்.(14ஆ,15அ) அந்தத் துவிஜ சிரேஷ்டர் {ரிஷ்யசிருங்கர்}, ரோமபாதனின் அருகில் வேள்வி நெருப்பைப் போல ஒளிர்வதைக் கண்டான்.(15ஆ,16அ)

அப்போது அந்த ராஜா {ரோமபாதன்}, அந்தராத்மாவில் பெரும் மகிழ்ச்சியடைந்து, முறைப்படியும், நட்பின் அடிப்படையிலும் அந்த ராஜனை {தசரதனை} விசேஷமாகப் பூஜித்தான்.(16ஆ,17அ) ரோமபாதன், தங்கள் நட்பையும், உறவையும் ஞானமிக்க ரிஷிபுத்திரரிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} சொன்னான். அப்போது அவரும் அவனுக்கு {தசரதனுக்குப்} பிரதிபூஜை செய்தார்.(17ஆ,18அ) நரரிஷபனான {மனிதர்களில் காளையான} அந்த ராஜன் {தசரதன்}, இவ்வாறு வரவேற்கப்பட்டு, ஏழு, எட்டு நாட்கள் கழிந்த பிறகு அந்த ராஜனிடம் {ரோமபாதனிடம்}, இவ்வாறு {பின்வருமாறு} பேசினான்,(18ஆ,19அ) "விஷாம்பதியே {விஷயங்களின் தலைவனான ரோமபாதா}, உன் மகள் சாந்தை தன் பர்த்தாவுடன் என் நகரத்திற்கு {அயோத்திக்கு} வர வேண்டும். ஒரு மகத்தான காரியத்தைச் செய்ய உத்தேசித்திருக்கிறேன்" {என்றான் தசரதன்}.(19ஆ,20அ) "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்ன அந்த ராஜன் {ரோமபாதன்}, நுண்ணறிவுமிக்க அந்த விப்ரரும் {ரிஷ்யசிருங்கரும்} ஏற்றுக் கொண்ட பிறகு அவரிடம், "நீர் உமது பார்யையுடன் {மனைவியுடன்} செல்வீராக" என்று சொன்னான்.(20ஆ,21அ) அப்போது அந்த ரிஷிபுத்திரர், "அவ்வாறே ஆகட்டும்" என்று அவனிடம் மறுமொழி கூறினார். அவர் அவனால் அனுமதிக்கப்பட்டுத் தன் பார்யையுடன் புறப்பட்டுச் சென்றார்.(21ஆ,22அ)

அந்த வீரியவான்கள் இருவரும் {ரோமபாதனும், தசரதனும்} அன்யோன்ய அஞ்சலி செய்தும், ஸ்னேகத்தால் மார்புறத் தழுவிக் கொண்டும் மகிழ்ச்சியடைந்தனர்.(22ஆ,23அ) ரகுநந்தனனான {ரகுவின் வழித்தோன்றலான} தசரதன் அந்த நல்லிதயம் கொண்டவனிடம் {ரோமபாதனிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்ற போது, சீக்கிரமாகச் செல்பவர்களை {தூதர்களை} நகரவாசிகளிடம் {அயோத்திபுரிவாசிகளிடம்} அனுப்பி,(23ஆ,24அ) "நகரம் முழுவதும் சீக்கிரமாக நல்லலங்காரத்துடன் {நறுமண} தூபமிட்டு, {சாலைகள்} தூய்மைப்படுத்தப்பட்டு, நீர் தெளிக்கப்பட்டு, பதாகைகளால் அலங்கரிக்கப்படட்டும்" {என்று அறிவிக்கச் செய்தான்}.(24ஆ,25அ) ராஜனின் வரவைக் கேட்ட குடிமக்கள் மகிழ்ச்சியடைந்து, அந்த ராஜனால் ஆணையிடப்பட்ட பணிகளைச் செய்தனர்.(25ஆ,26அ)

அப்போது, ராஜா {தசரதன்} அந்தத் துவிஜரிஷபரை {இருபிறப்பாளர்களில் காளையான ரிஷ்யசிருங்கரைத்} தனக்கு முன்னிட்டுக் கொண்டு, சங்கு, துந்துபிகளின் ஒலிகளை எதிரொலித்ததும், நன்கு அலங்கரிக்கப்பட்டதுமான அந்த நகரத்திற்குள் {அயோத்திக்குள்} விரைவாகப் பிரவேசித்தான்.(26ஆ,27அ) நகரவாசிகள் அனைவரும் ஆயிரம் கண்களைக் கொண்ட சூரேந்திரனால் {இந்திரனால்} அழைத்து வரப்படும் காசியபரின் மகனை {வாமனனைப்} போல நன்கு கௌரவிக்கப்பட்டு நரேந்திரனுடன் {தசரதனுடன்} பிரவேசிக்கும் அந்தத் துவிஜரை {ரிஷ்யசிருங்கரைக்} கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(27ஆ,28) அவர் அந்தப்புரத்திற்குள் பிரவேசித்ததும், சாஸ்திரங்கள்படி பூஜித்த அவன் {தசரதன்}, அவரை அழைத்து வந்த உடனேயே தன் விருப்பம் நிறைவேறியதாக நம்பினான்.(29) அந்தப்புரத்து ஸ்திரீகள் அனைவரும், இவ்வாறு பர்த்தாவுடன் வரும் விசாலாக்ஷியான {நீள் விழியாளான} சாந்தையைக் கண்ட பிரீதியால் {பாசத்தால்} ஆனந்தம் அடைந்தனர்.(30) அவள் {சாந்தை} அவர்களாலும், தசரதனாலும் விசேஷமாகப் பூஜிக்கப்பட்டுச் சிறிது காலம் அங்கே அந்த ரித்விஜருடன் {ரிஷ்யசிருங்கருடன்} சுகமாக வசித்திருந்தாள்.(31)
 

பாலகாண்டம் சர்க்கம் –11ல் உள்ள சுலோகங்கள்: 31

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்