Saturday 4 November 2023

பிராயோபவேசம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 53 (27)

Fast unto death | Kishkindha-Kanda-Sarga-53 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: காலம் கடந்ததற்காக வருந்தியும், தண்டனைக்கு அஞ்சியும் சாகும்வரை உண்ணாநோன்பை முன்மொழிந்த அங்கதன்; சீதையில்லாமல் திரும்புவதைவிட இறப்பதே தகுந்ததென முடிவு செய்த வானரர்கள்...

Tara Hanuman Angada
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படங்களின் தொகுப்பு

பிறகு அவர்கள், கோரமானதும், மறுகரை தெரியாத வருணாலயமும், கர்ஜிப்பதும், கோரமான அலைகளுடன் கலங்கிக் கொண்டிருப்பதுமான சாகரத்தைக் கண்டனர்.(1) அவர்கள் மயனின் மாயையால் ஏற்பட்ட கிரிதுர்கத்தில் தேடியபோதே, ராஜா {சுக்ரீவன்} எதை சமயம் என்று {கெடு} வைத்தானோ அந்த மாசமும் கடந்துவிட்டது.(2) அப்போது அந்த மஹாத்மாக்கள், நன்கு புஷ்பித்த மரங்களுடன் கூடிய விந்திய கிரியின் அடியில்[1] அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினர்.(3) பிறகு, புஷ்பங்களின் அதிபாரத்துடன் கூடிய உச்சிகளைக் கொண்டவையும், நூற்றுக்கணக்கான லதைகளால் {கொடிகளால்} சூழப்பட்டவையுமான வசந்த கால மரங்களைக் கண்டு பயத்தையும், சந்தேகத்தையும் அடைந்தனர்.(4) அவர்கள் வசந்தம் வந்ததென பரஸ்பரம் அறிந்து கொண்டு, சந்தேகத்தையும் {செய்தியையும் / ஆணையையும்}, காலத்தின் அர்த்தத்தையும் இழந்தவர்களாக தரணீதலத்தில் விழுந்தனர்[2].(5)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “”ஹிமவத் விந்த்⁴ய ஷை²லாப்⁴யாம் ப்ராயோ வ்யாப்தா வஸுந்த⁴ரா” - பே⁴ஷஜ கல்பம். அதாவது, விந்திய மலைத்தொடர் இமயத்திலிருந்து தென்கடல் வரை பரந்தது” என்றிருக்கிறது. பேஷஜ கல்பம் என்பது, பரத்வாஜ சம்ஹிதையில் ஆயுர்வேதம் குறித்து வரும் ஒரு சிறு பகுதியாகும். மேற்கண்ட சுலோகத்தின் பொருள், “பூமியானது கிட்டத்தட்ட ஹிமயம் மற்றும் விந்திய மலைகளால் மறைக்கப்பட்டிருக்கிறது” என்பதாகும். இதுபோன்ற சுலோகங்களைக் கொண்டுதான் ஆய்வாளர்கள் ராமாயண கால லங்கை, இன்றைய ஸ்ரீலங்கா அல்ல என்று வாதிடுகின்றனர். விந்திய மலைத்தொடர் என்பது, மேற்கே குஜராத்தில் இருந்து கிழக்கே சத்தீஷ்கர் வரையிலும், வடக்கே உத்திரபிரதேசம் முதல் தெற்கே மத்தியபிரதேசம் வரையிலும் இருக்கிறது; கிஷ்கிந்தை, அதாவது ஹம்பி இன்றைய கர்னாடகத்தில் உள்ளது. வானரர்கள் புகுந்த ரிக்ஷபிலம் கொல்லி மலையில் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுவதை முந்தைய சர்க்கத்தின் 5ம் அடிக்குறிப்பில் கண்டோம். இங்கே முதல் சுலோகத்திலேயே வானரர்கள் கடலைக் கண்டனர் என்று இருக்கிறது. இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “மா முதலிய மரங்கள், பிப்ரவரி - ஏப்ரலில் வரும் பின்பனிக் காலத்தில் மலர்ந்து, ஏப்ரல் - ஜூனில் வரும் வசந்த காலத்தில் விளையும். மலர்கள் மலர்வதைக் கண்ட அவர்கள், வசந்தகாலம் வந்ததெனக் கவலையடைந்தனர். சுக்ரீவன், சரத் கால முடிவில், அதாவது அக்டோபர் - டிசம்பர் காலத்தில் மார்கசிர {மார்கழி} மாதத்தில் படைகளை அழைத்து, கிட்டத்தட்ட புஷ்ய {தை} மாதத்தை, அதாவது ஜனவரி - பிப்ரவரி மாதத்தை காலக்கெடுவாக வைக்கிறான். அவர்கள் தெற்கே உள்ள இடங்களில் தேடிக்கொண்டிருந்தபோதே புஷ்ய {தை} மாதம் கடந்துவிட்டது, அடுத்தது மாக {மாசி} மாதம், கிட்டத்தட்ட மார்ச் மாதத்தில் அவர்கள் பிலத்தில் இருந்தனர். எனவே இது கிட்டத்தட்ட பால்குன {பங்குனி} மாதமாகவே இருக்க வேண்டும். அதிகமாக இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதால் அவர்கள் சுக்ரீவனுக்கு அஞ்சுகிறார்கள்” என்றிருக்கிறது.

பிறகு, சிம்ஹ ரிஷப ஸ்கந்தனும் {சிங்கம் போன்றோ, காளையைப் போன்றோ கழுத்துப் பகுதியைக் கொண்டவனும்}, வலிமைமிக்க நீண்ட கைகளைக் கொண்டவனும், யௌவராஜனும் {இளவரசனும்}, மஹாபிராஜ்ஞனும் {பேரறிஞனும்}, கபியுமான {குரங்குமான} அந்த அங்கதன், அந்தக் கபிக்களில் விருத்தர்களிடமும் {முதிய குரங்குகளிடமும்}, வேறு வன ஓகஸர்களிடமும் {வனத்தில் திரியும் குரங்குகளிடமும்}, மதுரமான வார்த்தைகளில் பேசி, மதித்து {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(6,7) “ஹரயர்களே {குரங்குகளே}, நாம் அனைவரும், கபி ராஜாவின் சாசனத்தின்படி புறப்பட்டு வந்தோம். பில ஸ்தானத்திலேயே மாசம் பூர்ணமானதை ஏன் புத்தியில் கொள்ளாதிருக்கிறீர்கள்?(8) ஆஷ்வயுஜ {ஐப்பசி} மாசத்தில் காலக்கணக்கீட்டை ஏற்பாடு செய்து கொண்டே நாம் அனுப்பப்பட்டோம். அதுவும் {அந்தக் காலமும்} கடந்துவிட்டது. எனவே, அடுத்து செய்ய வேண்டிய காரியமென்ன?(9) நம்பிக்கைக்குரியவர்களும், நீதிமார்க்க விசாரதர்களுமான {நீதி வழியில் நிபுணர்களுமான} நீங்கள், தலைவரின் {சுக்ரீவரின்} நலனை விரும்புகிறவர்களாகவும், சர்வ கர்மங்களிலும் {செயல்கள் அனைத்திலும்} ஈடுபடுத்தப்படுபவர்களாகவும் இருக்கிறீர்கள்.(10) 

Hanuman sees Angadha addressing the vanaras

கர்மங்களில் ஒப்பற்றவர்களும், பௌருஷத்திற்காக {ஆண்மைக்காக} திக்குகள் அனைத்திலும் புகழ்பெற்றவர்களுமான நீங்கள், இளஞ்சிவப்புக் கண்களைக் கொண்டவரால் {சுக்ரீவரால்} தூண்டப்பட்டு, என்னை முன்னிட்டுக் கொண்டு புறப்பட்டு வந்தீர்கள்.(11) இப்போதுவரை காரியம் நிறைவேறாததற்காக நாம் {சுக்ரீவரின் கைகளில்} சாகவே வேண்டும். இதில் சந்தேகம் இல்லை. ஹரிராஜர் {குரங்குகளின் மன்னரான சுக்ரீவர்} சொன்னதைச் செய்யாமல் எப்படி சுகமாக இருக்க முடியும்?(12) சுக்ரீவர் நிர்ணயித்த அந்தக் காலம் கடந்துவிட்டதால் வன ஓகஸர்கள் அனைவரும், சுயமாக பிராயோபவேசம் செய்வதே {சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதே} தகுந்தது.(13) சுக்ரீவர் இயல்பிலேயே கூர்மையானவர் {கடுமையானவர்}; {இப்போது} ஸ்வாமி {தலைவன்} பாவத்தில் நிலைபெற்றிருப்பவர்; திரும்பிச் செல்பவர்கள் அபராதம் செய்தவர்களென நம்மில் எவரையும் பொறுத்துக்கொள்ளமாட்டார்.(14) சீதையைக் குறித்து அறியாத அளவில் பாபத்தையே {நம்மைக் கொல்லவே} செய்வார். எனவே, புத்திரர்களையும், தாரங்களையும், தனங்களையும், கிருஹங்களையும் கைவிட்டு, இங்கேயே, இப்போதே பிராயோபவேசத்தில் புகுவதே ஏற்றது.(15,16அ) இராஜா, இங்கிருந்து திரும்பிச் செல்லும் நம் அனைவரையும் நிச்சயம் ஹிம்சிப்பார்; ஒப்பற்ற ரூபங்களில் வதம் செய்வார். நாம் இங்கேயே மரணிப்பதே சிறந்தது.(16ஆ,17அ)

நான் சுக்ரீவரால் யௌவராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கப்படவில்லை. கஷ்டமின்றி கர்மங்களைச் செய்பவரான நரேந்திரர் ராமரே எனக்கு அபிஷேகம் செய்து வைத்தார்.(17ஆ,18அ) பூர்வ வைரத்தால் கட்டப்பட்டிருக்கும் அந்த ராஜா {சுக்ரீவர்}, மீறலைக் கண்டதும், நிச்சயம் செய்து கொண்டு எனக்குக் கூர்மையான {கடுமையான} தண்டனையைக் கொடுக்கவே விரும்புவார்.(18ஆ,19அ) ஜீவித அந்தரத்தில் என் விசனத்தைப் பார்க்கப் போகும் நண்பர்களால் ஆகப்போவது என்ன? இங்கேயே புண்ணிய சாகரத்தின் கரையில் பிராயத்தில் {சாகும் வரை உண்ணாவிரதத்தில்} அமரப் போகிறேன்” {என்றான் அங்கதன்}[3].(19ஆ,இ)

[3] இங்கேயும் கடற்கரையில் அமரப்போகிறேன் என்கிறான் அங்கதன். இது தற்போது இந்தியப்பெருங்கடல் என்றழைக்கப்படும் தென்கடலா? அல்லது விந்தியத்தின் அருகில் உள்ள மேற்குக் கடலா? அதவாது அரபிக்கடலா? இந்த சந்தேகத்தில்தான் ஆய்வாளர்கள் ராமாயாண கால லங்கை இன்றைய ஸ்ரீலங்கா அல்ல என்று வாதிடுகின்றனர்.

யுவராஜனான குமாரனால் {அங்கதனால்} சொல்லப்பட்ட அனைத்தையும் கேட்ட அந்த சர்வ வானர சிரேஷ்டர்களும் {குரங்குகளில் சிறந்தவர்கள் அனைவரும்} கருணையை வரவழைக்கும் வகையில் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னார்கள்:(20) “சுக்ரீவன் இயல்பிலேயே கடுமையானவன். இராகவரும் பிரியையிடம் {சீதையிடம்} அன்பு கொண்டவராக இருப்பதால், வைதேஹியைக் காணாமல், அந்தக் காலமும் கடந்து, காரியம் நிறைவேற்றாமல் செல்பவர்களைக் கண்டால், ராகவருக்கு {ராமருக்குப்} பிரியத்தைச் செய்வதாகக் கண்டு {நம்மைக்} கொல்லவே விரும்புவான் என்பதில் சந்தேகமில்லை.(21,22) அபராதம் செய்தவர்கள் ஸ்வாமியின் {தலைவனின்} அருகில் செல்வது பொறுத்துக் கொள்ளத்தக்கதல்ல. நாம் சுக்ரீவனால் ஒன்றாக அனுப்பப்பட்டவர்களில் பிரதானபூதர்களாவோம் {முதன்மையானவர்கள் ஆவோம்}.(23) சீதையைத் தேடி, செய்திகளை அறிந்து கொண்டு அந்த வீரனிடம் நாம் செல்வோம். அல்லது இங்கேயே யமக்ஷயத்தை {மரணம் எனும் யமனின் ஆட்சிப்பகுதியை} நாம் அடைவோம்” {என்றனர்}.(24)

தாரன், பயத்தால் பீடிக்கபட்ட பிலவங்கமர்களின் {தாவிச் செல்லும் குரங்குகளின்} வார்த்தைகளைக் கேட்டு இதைச் சொன்னான், “மனத் தளர்ச்சி போதும். நீங்கள் விரும்பினால் நாம் அனைவரும் பிலத்திற்குள் பிரவேசித்து வாழ்வோம்.(25) {மயனின்} மாயையால் உண்டாக்கப்பட்டதும், விருக்ஷங்களும், நீரும், உண்ணத்தக்கவையும், பருகத்தக்கவையும் நிறைந்ததுமான இஃது {இந்த பிலம்} அடைவதற்கரியதாகும். இங்கே நமக்குப் புரந்தரனாலும் {இந்திரனாலும்} பயம் உண்டாகாது எனும்போது, ராகவராலும் {ராமராலும்} ஏற்படாது; வானரராஜாவாலும் {சுக்ரீவனாலும்} ஏற்படாது” {என்றான் தாரன்}.(26) அங்கதனின் சொற்களைக் கேட்டு, அதில் நம்பிக்கை கொண்ட சர்வ ஹரயர்களும் {குரங்குகள் அனைவரும்}, "எந்த விதத்தில் கொல்லப்படாமல் இருப்போமோ அந்த விதத்தில் இப்போதே உடனடியாக செயல்படுவீராக” என்றனர்.(27)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 53ல் உள்ள சுலோகங்கள்: 27

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை