Monday 6 February 2023

திவ்ய வரங்கள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 118 (54)

Divine boons | Ayodhya-Kanda-Sarga-118 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அனசூயையிடம் தன் திருமணம் குறித்த செய்தியைச் சொன்ன சீதை; தெய்வீகப் பரிசுப் பொருள்களை சீதைக்குக் கொடுத்த அனசூயை...

Sita and Anasuya

அனஸூயை இவ்வாறு சொன்னதும், அனஸூயையான அந்த வைதேஹி {பொறாமையற்றவளான அந்த சீதை}, அந்தச் சொற்களுக்கான முழு மதிப்புடன் மெதுவாகப் {பின்வருமாறு} பேசத் தொடங்கினாள்:(1) "ஆரியையான நீர் என்னிடம் இவ்வாறு பேசியதில் ஆச்சரியமில்லை. நாரியைகளுக்கு பதி {பெண்களுக்குக் கணவன்} குருவாவது எப்படி என்பதை நான் அறிவேன்.(2) ஆர்யே {உன்னதமானவரே}, என்னுடைய பர்த்தாவான இவர், ஒருவேளை நல்லொழுக்கமற்றவராக இருந்தாலும் அத்வைதம் {எந்த வேறுபாடுமின்றி} நான் இவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.(3) சிறந்த குணங்கள் நிறைந்தவரும், கருணையுடையவரும், ஜிதேந்திரியரும் {புலன்களை வென்றவரும்}, மாறாத அன்புடையவரும், தர்மாத்மாவும், மாதாவையும், பிதாவையும் போல பிரியத்திற்குரியவராகவும் இருப்பவரைக் குறித்து என்ன சொல்வது?(4) 

மஹாபலசாலியான ராமர், கௌசல்யையிடம் நடந்து கொள்வதைப் போலவே ராஜமகளிர் அனைவரிடமும் நடந்து கொள்கிறார்.(5) நிருபவத்சலரும் {ராஜா தசரதரிடம் அன்புள்ளவரும்}, தர்மவித்துமான {தர்மத்தை அறிந்தவருமான} இந்த வீரர், ஒருமுறையாவது தசரதரால் பார்க்கப்பட்ட ஸ்திரீகளிடமும், மானத்தைவிட்டு {கர்வத்தைவிட்டு} மாதாவிடம் {நடந்து கொள்வதைப்} போலவே நடந்து கொள்கிறார்.(6) பயம் நிறைந்த, ஜனங்களற்ற வனத்திற்கு {நாங்கள்} புறப்பட்டபோது, என் மாமியார் என்னிடம் சொன்ன மகத்தானவற்றை என் ஹிருதயத்தில் வைத்திருக்கிறேன்.(7) முன்பு திருமண காலத்தில், அக்னியின் முன்னிலையில் என்னைப் பெற்றவள் எனக்குக் கற்பித்த சொற்களையும் {இதயத்தில்} வைத்திருக்கிறேன்.(8) 

தர்மசாரிணியே, உமது வாக்கியங்களால் அவை அனைத்தும் புத்துயிர் பெற்றன. பதிக்குத் தொண்டாற்றுவதைவிட நாரியைகளுக்கு {பெண்களுக்கு} வேறு எந்த தர்மமும் விதிக்கப்படவில்லை.(9) பதிக்குத் தொண்டாற்றியமைக்காக ஸ்வர்க்கத்தில் ஸாவித்ரி பெரிதும் மதிக்கப்படுகிறாள். நீரும் பதிக்குத் தொண்டாற்றும் அத்தகைய ஒழுக்கத்தையே பின்பற்றி ஸ்வர்க்கத்தை அடைவீர்.(10) சர்வநாரீகளிலும் {பெண்கள் அனைவரிலும்} சிறந்தவளான இந்த ரோஹிணி தேவி, வானில் ஒரு முஹூர்த்தமேனும் சந்திரனில்லாதவளாகக் காணப்படமாட்டாள்.(11) பர்த்தாவிடம் திடவிரதம் கொண்ட இத்தகைய சிறந்த ஸ்தீரிகள், தாங்கள் செய்யும் புண்ணிய கர்மங்களால் தேவலோகத்தில் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்" {என்றாள் சீதை}.(12)

சீதை சொன்ன சொற்களைக் கேட்டு பெரும் மகிழ்ச்சியடைந்த அனஸூயை, அப்போது மைதிலியின் சிரஸை முகர்ந்து, பெரும் மகிழ்ச்சியுடன் {பின்வருமாறு} பேசினாள்:(13) "சீதே, கபடமற்ற புன்னகையை உடையவளே, பல்வேறு நியமங்களுடன் கூடிய என் மஹத்தான தபத்தால் இங்கே {இம்மையில்} ஈட்டப்பட்ட பலத்தைக் கொண்டு உன்னை மகிழ்விப்பேன்.(14) மைதிலி, பொருத்தமானவையும், மனோகரமானவையுமான உன் சொற்களில் நான் நிறைவடைந்தேன். உசிதமானதைச் சொல், அதை நான் உனக்குச் செய்வேன்" {என்றாள் அனசூயை}.(15)

அவள் சொன்ன சொற்களைக் கேட்ட சீதை, வியப்படைந்தவளாக மந்தப் புன்னகையுடன் அந்த தபோபலம் கொண்டவளிடம், "{உமதருளால் அனைத்தும்} நிறைவேறியது" என்றாள்.(16) 

அவள் {சீதை} இவ்வாறு சொன்னதும், அந்த தர்மஜ்ஞை {தர்மத்தை அறிந்தவளான அனஸூயை}, பெரிதும் மகிழ்ச்சியடைந்து, "ஐயோ சீதே, உனக்குப் பலனைத் தரும் பெரும் மகிழ்ச்சியை நான் உண்டாக்குவேன்.(17) வைதேஹி {விதேஹ இளவரசி}, திவ்ய வரங்களான மாலைகளும், வஸ்திரங்களும், ஆபரணங்களும், அங்கராகங்களும் {மேனிக்கு நறுமணமளிக்கும் பொருள்களும்} இதோ இருக்கின்றன.{18} சீதே, உன் அங்கங்களின் சோபைக்காக {ஒளிக்காக} நான் இவற்றை தத்தம் செய்கிறேன். உனக்கு எப்போதும் தகுந்தவையும், ஒருபோதும் மங்காதவையுமான இவை உனக்குப் பொருத்தமானவையாகத் திகழும்.(18,19) ஜனகனின் மகளே, திவ்யமான இந்தப் பொருள்களால் அலங்கரிக்கப்பட்ட உனதங்கங்கள், அழிவில்லா விஷ்ணுவுக்கு ஸ்ரீயைப் போல உன் பர்த்தாவுக்கும் அழகூட்டும்" {என்றாள் அனசூயை}.(20)

மைதிலி, ஒப்பற்ற பிரீதிதானமான {ஈடில்லா அன்பால் கொடை அளிக்கப்பட்ட} அந்த வஸ்திரங்களையும், அங்கராகங்களையும், பூஷணங்களையும் {ஆடைகள், வாசனைப் பொருள்கள், ஆபரணங்களையும்}, மலர்மாலைகளையும் ஏற்றுக் கொண்டாள்.(21) புகழ்மிக்கவளான சீதை, அந்த பிரீதிதானத்தை அங்கீகரித்து, கூப்பிய கைகளுடன் அந்த தபோதனையின் {தபஸ்வியான அனசூயையின்} அருகில் அமர்ந்தாள்.(22) 

திட விரதையான அனஸூயை, இவ்வாறு தன்னருகே அமர்ந்திருந்த சீதையிடம், பிரிய கதைகளை, சிலவற்றைக் கேட்பதற்கான {பின்வரும்} சொற்களைச் சொல்லத் தொடங்கினாள்:(23) "சீதே, புகழ்மிக்கவனான ராகவன் {ராமன்}, ஸ்வயம்வரத்தின் மூலம் உன்னை அடைந்தான் என்ற கதை என் செவிகளை எட்டியது.(24) மைதிலி, அதை விஸ்தாரமாகக் கேட்க விரும்புகிறேன். எனவே, நீ அனுபவித்த வகையில் முழுவதையும் சொல்வதே உனக்குத் தகும்" {என்று கேட்டு முடித்தாள்}.(25)

இவ்வாறு கேட்கப்பட்ட சீதை, "கேட்பீராக" என்று சொல்லி, அந்த தர்மசாரிணியிடம் {அனசூயையிடம், பின்வருமாறு} அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினாள்:(26) "தர்மவித்தும், க்ஷத்ரதர்மத்தில் அர்ப்பணிப்புமிக்கவரும், வீரரும், ஜனகர் என்ற பெயரைக் கொண்டவருமான மிதிலாதிபதி, மேதினியை நியாயமாக ஆண்டு வந்தார்.(27) அவர் {ஜனகர்}, கையில் கலப்பையுடன் க்ஷேத்ர மண்டலத்தை {வேள்விக்கான வட்ட வடிவிலான நிலத்தை} உழுதபோது, அந்த நிருபதியின் மகளாக ஜகத்தைப் பிளந்து கொண்டு நான் எழுந்தேன் என்று சொல்லப்படுகிறது.(28) நரபதியும், {யாக மந்திரங்களைச் சொல்லி} கைநிறைந்த விதைகளைத் தூவும் ஆவலில் இருந்தவருமான அந்த ஜனகர், {அவற்றைத் தூவும் முன்} மேனியில் புழுதி படிந்தவளாக {பூமியில் கிடக்கும்} என்னைக் கண்டு வியப்படைந்தார்.(29) 

குழந்தையற்றவரான அவர், சினேகத்தால் என்னைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, "இவள் என் தனயை {மகள்}" என்று சொல்லி சினேகத்தைப் பொழிந்தார்.(30) {அப்போது வானத்தில் இருந்து}, "நரபதியே, அவ்வாறே ஆகட்டும், ஒப்பற்றவளான இந்த அமானுஷீ {தெய்வப்பிறவி}, தர்மப்படி உன் தனயையே {மகளே} ஆவாள்" என்ற அந்தரிக்ஷ வாக்கு  {ஆகாயமொழி} எழுந்ததாகச் சொல்லப்படுகிறது.(31) அதன்பிறகு, தர்மாத்மாவும், நராதிபரும், மிதிலாதிபருமான என் பிதா, என்னை அடைந்ததில் பெருஞ்செழிப்பை அடைந்தவரைப் போல மகிழ்ச்சியடைந்தார்.(32) புண்ணிய கர்மங்களைச் செய்பவரான அவர், தனக்கு விருப்பமுள்ள மூத்த தேவியிடம் என்னை தத்தம் செய்தார். அவளும், என்னை மாதாவின் அன்புடன் சீராட்டி வளர்த்தாள்.(33)

நான், பதி சம்யோகத்திற்குத் தகுந்த வயதடைந்ததைக் கண்ட என் பிதா, இழப்பால் தீனமான தனமற்றவரை {துயருற்ற வறியவரைப்} போலச் சிந்தனையில் ஆழ்ந்தார் {கவலை அடைந்தார்}.(34) கன்னிகையின் தந்தை பூமியில் சக்ரனாகவே {இந்திரனாகவே} இருப்பினும், உலகத்தில் இணையான, அல்லது தாழ்ந்த ஜனங்களால் அவமதிக்கப்படுவான்.(35) தனக்கும் அந்த அவமதிப்பு தூரத்தில் இல்லை என்பதைக் கண்ட அந்தப் பார்த்திபர் {ஜனகர்}, சிந்தனைக் கடலில் மூழ்கி, தெப்பமில்லாதவனைப் போல அதன் எல்லையை எட்டாமல் இருந்தார்.(36) யோனியில் பிறக்காதவளாக என்னை அறிந்த அந்த மஹாபாலர் {ஜனகர்}, பெருஞ் சிந்தனைக்குப் பிறகும் எனக்குத் தகுந்த பொருத்தமான பதியைக் காண இயலாதவராக இருந்தார்.(37) அந்த மதிமிக்கவர், தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, "என் தனயைக்கு ஸ்வயம்வரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற புத்தி எழுந்தது.(38)

ஒருகாலத்தில், மஹாயஜ்ஞத்தில், மஹாத்மாவான வருணன் பிரீதியுடன் ஒரு சிறந்த தனுவையும் {வில்லையும்}, வற்றாதவையான தூணிகள் இரண்டையும் அவருக்கு[1] தத்தம் செய்தான்.(39) அது {அந்த வில்} தன் பெரும் பாரத்தால் முயற்சியுள்ள மனுஷர்களாலும் அசைக்க முடியாததாக இருந்ததால், நராதிபர்கள் {மன்னர்கள்} தங்கள் ஸ்வப்னத்திலும் அதை வளைக்கும் சக்தியற்றவர்களாக இருந்தனர்.(40) சத்தியவாதியான என் பிதா, முதலில் பார்த்திபர்களை அழைத்து, அவர்களின் கூட்டத்தில் அந்த தனுவை உயர்த்துமாறு {இவ்வாறு} அறிவித்தார்:(41) "எந்த நரன் இந்த தனுவை எடுத்து, நாண் பூட்டுகிறானோ அவனுக்கே என் மகள் பாரியையாவாள். இதில் சந்தேகம் வேண்டாம்" {என்று அறிவித்தார்}.(42)

[1] பாலகாண்டம் 66ம் சர்க்கத்தில் இந்த சிவதனுசை சிவன் தேவர்களிடம் கொடுத்ததாகவும், தேவர்கள் நிமி வம்சத்து தேவராதனிடம் {ஜனகனின் மூதாதையிடம்} கொடுத்ததாகவும் ஜனகன் சொல்லும் குறிப்பிருக்கிறது.

அதை உயர்த்தும் சக்தி இல்லாத நிருபர்கள், எடையால் கிரிக்கு ஒப்பான அந்தச் சிறந்த வில்லைக் கண்டு, வணக்கம் செலுத்திவிட்டுத் திரும்பிச் சென்றனர்.(43) நீண்ட காலத்திற்குப் பிறகு, ராகவரும், பேரொளிமிக்கவரும், சத்திய பராக்கிரமருமான இந்த ராமர், லக்ஷ்மணன் சகிராகவும், விசுவாமித்ரர் சகிதராகவும் யஜ்ஞத்தைக் காண வந்தார்.(44,45அ) தர்மாத்மாவான விசுவாமித்ரர், என் பிதாவால் பூஜிக்கப்பட்டதும், உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் குறித்து என் பிதாவிடம் {பின்வருமாறு} சொன்னார்:(45ஆ,46அ) "தசரதனின் மகன்களான இவர்கள் இருவரும், தனுவைக் காண விரும்புகின்றனர். இராஜபுத்திரன் ராமனிடம் அந்த தைவிக தனுவைக் காண்பிப்பாயாக" {என்றார்}.(46ஆ,47அ)

Sita retells the story of her marriage to Anasuya

அந்த விப்ரர் {விசுவாமித்ரர்} இவ்வாறு சொன்னதும், அந்த தனு அங்கே கொண்டு வரப்பட்டது. மஹாபலவானும், வீரியவானுமான இவர் அதை வளைத்த உடனே நாணும் பூட்டி நிமிஷமாத்திரத்தில் அதை இழுத்து முழுமையாக வளைத்தார்.(47ஆ,48) இவர் தனுவை முழுமையாக வளைத்த வேகத்தில், அது நடுவில் முறிந்து இரண்டானது. அதன் பயங்கர சப்தம், இடி இறங்குவதைப் போலக் கேட்டது.(49) சத்தியவாதியான என் பிதா, அங்கேயே அப்போதே, ஜலபாஜனத்தை {நீர் நிறைந்த குடுவையை} அளித்து, என்னை ராமருக்கு தத்தம் செய்ய நிச்சயித்தார்.(50) அப்போது ராகவர் {ராமர்}, தன் பிதாவும், பிரபுவுமான அயோத்தியாதிபதியின் சம்மதத்தை அறியாததால், அவ்வாறு கொடுக்கப்படும் என்னை ஏற்கவில்லை[2].(51) 

[2] பாலகாண்டம் 67ம் சர்க்கத்தில் தனுர்பங்க நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. இராமன் வில்லை முறித்தபின், ஜனகனாகவே தசரதனை அழைக்க அயோத்திக்கு ஆள் அனுப்புவதாகவே அங்கே இருக்கிறது. ராமன் சீதையை ஏற்கவில்லை என்ற குறிப்பு அங்கே இல்லை. சீதையின் வழியாகவே இது வெளிப்பட வேண்டும் என்ற கதையமைப்பு உத்தியும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பிறகு, என் பிதா, முதியவரும், என் மாமனாருமான தசரத நிருபரை அழைத்து, ஆத்மவிதி அறிந்த ராமருக்கு என்னை தத்தம் செய்தார்.(52) மேலும் என் பிதா {ஜனகர்}, சாத்வியும் {புண்ணியவதியும்}, பிரியதர்சினியுமான {அழகிய தோற்றம் கொண்டவளுமான} என் தங்கை ஊர்மிளையை, லக்ஷ்மணருக்குப் பாரியையாக தானே {முன்வந்து} தத்தம் செய்தார்.(53) இவ்வாறே, அந்த ஸ்வயம்வரத்தில் நான் ராமருக்கு தத்தம் செய்யப்பட்டேன். {அதுமுதல்} வீரியவான்களில் சிறந்தவரான என் பதியிடம் தர்மத்திற்கு இணக்கமாக இன்புற்றிருக்கிறேன்" {என்றாள் சீதை}.(54) 

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 118ல் உள்ள சுலோகங்கள்: 54

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை