Tuesday, 7 February 2023

தண்டகாரண்யப் புறப்பாடு | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 119 (22)

Set out for Dandaka forest | Ayodhya-Kanda-Sarga-119 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அத்ரியிடமும், அனசூயையிடமும் விடைபெற்றுச் சென்று தண்டகவனத்திற்குள் நுழைந்த ராமனும், சீதையும், லக்ஷ்மணனும்...

Rama Sita and Lakshmana goes into Dandaka forest

தர்மஜ்ஞையான {தர்மத்தை அறிந்தவளான} அனஸூயை, அந்த மஹத்தான கதையைக் கேட்டு, மைதிலியின் உச்சி முகர்ந்து, தன் கைகளில் அவளை வாரியணைத்துக் கொண்டு,(1) "அக்ஷரங்களும், பதங்களும் {எழுத்துகளும், சொற்களும்} தெளிவாக, வியப்பை ஏற்படுத்தும் வகையில் மதுரமாக மொழிந்தாய். ஸ்வயம்வரம் எவ்வாறு நடந்தது என்பதை உள்ளபடியே முழுமையாகக் நான் கேட்டேன். மதுரபாஷினியே {இனிமையாக மொழிபவளே}, உன் கதையை நான் பெரிதும் ரசித்தேன்.(2,3அ) 

ஸ்ரீமான் ரவி {சூரியன்}, மங்கல இரவை நெருங்கி அஸ்தகதி அடைகிறான். பகலில் ஆஹாரத்திற்காகப் பரந்து, விரிந்து பறந்து சென்று, சந்தியா காலத்தில் நித்திரைக்காக  உறைவிடம் நாடும் பறவைகளின் துவனி இதோ கேட்கிறது.(3ஆ,4) இதோ முனிவர்களும், அபிஷேகத்தால் நனைந்து {நீராடி}, ஈர மரவுரிகளுடன் கையில் கலசமேந்தியபடியே ஒன்றுகூடி வருகிறார்கள்.(5) விதிப்பூர்வமாக ரிஷிகள் மூட்டும் அக்னிஹோத்திரத்தில் இருந்து, புறாவின் கழுத்தைப் போன்ற நிறத்தில் எழும் தூமம், பவனனால் {புகையானது காற்றால்} கலைவது அதோ தெரிகிறது.(6) 


Sita and Anasuya
அற்ப இலைகளைக் கொண்ட தாவரங்களும் சுற்றிலும் அடர்த்தியாகத் தெரிகின்றன. இந்திரியங்களை ஈர்க்கும் திசைகள் இவ்விடத்தில் பிரகாசிக்கவில்லை.(7) இரவுலாவும் விலங்குகள் எங்கும் திரிந்து கொண்டிருக்கின்றன. தபோவனத்தின் மான்கள் வேதியை {வேள்விப்பீடத்தைச்} சுற்றிலும் உறங்குகின்றன.(8) சீதே, நக்ஷத்திரங்களால் நன்கலங்கரிக்கப்பட்ட நிசியும் {இரவும்} தொடங்கிவிட்டது. ஜோதியால் சூழப்பட்ட சந்திரனும் அம்பரத்தில் {வானத்தில்} எழுவது தெரிகிறது.(9) உன் மதுரமான கதையில் நான் மகிழ்ந்தேன். இனி இராமனை அனுசரித்திருக்க உனக்கு விடை கொடுக்கிறேன், செல்வாயாக.(10) மைதிலி, குழந்தாய், என் கண்களுக்கு முன்னால் அலங்கரித்துக் கொண்டு, திவ்யாலங்கார சோபிதையாக {நான் கொடுத்த தெய்வீக ஆபரணங்களைப் பூண்டு பிரகாசிப்பவளாக} எனக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவாயாக" {என்றாள் அனசூயை}.(11)

ஸுரர்களின் மகளுக்கு ஒப்பானவளான அந்த சீதை, அவ்வாறே தன்னை அலங்கரித்துக் கொண்டு, {அனசூயையைத்} தலைவணங்கி, ராமனை நோக்கிச் சென்றாள்.(12) வாதிப்பவர்களில் சிறந்தவனான ராகவன், அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட சீதையைக் கண்டு, அந்த தபஸ்வினியின் பிரீதிதானத்தால் {அன்புப் பரிசால்} பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(13) மைதிலியான சீதை, அப்போது அந்த தபஸ்வினி பிரியதானமாகக் கொடுத்த வஸ்திரங்கள், ஆபரணங்கள், மாலைகள் ஆகிய அனைத்தையும் குறித்து ராமனிடம் சொன்னாள்.(14) மானுஷர்கள் {மானிடர்கள்} மத்தியில் மிக அரிதான நன்மதிப்பு, மைதிலிக்குக் கிட்டியதைக் கண்டு மஹாரதர்களான ராமலக்ஷ்மணர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(15) சசிக்கு ஒப்பான வதனம் {சந்திரனுக்கு நிகரான முகம்} கொண்டவனான அந்த ரகுனந்தனன், சித்தர்களாலும், தபஸ்விகளாலும் அர்ச்சிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்து, அந்தப் புண்ணிய இரவை அங்கேயே கழித்தான்.(16)

அந்த ராத்திரி கடந்ததும், அந்த நரவியாகரர்கள் {மனிதர்களில் புலிகளான ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் தங்கள் {காலைச்} சடங்குகளை முடித்துக் கொண்டு, அக்னிஹோமம் செய்யும் வனகோசரர்களிடம் {வனத்தில் வசிக்கும் தபசிகளிடம்} விடைபெற்றுக் கொண்டனர்.(17) வனசரர்களும் {வனத்தில் திரிபவர்களும்}, தர்ம வழியில் நடப்பவர்களுமான அந்த தபஸ்விகள், அந்த வனத்தில் ராக்ஷசர்கள் சஞ்சாரம் நிறைந்த பகுதி குறித்து அவ்விருவரிடமும் {பின்வருமாறு} சொன்னார்கள்:(18) இராகவா, இந்த மஹாரண்யத்தில் {பெருங்காட்டில்} நானாவித ரூபங்களில் புருஷாதக {மனிதர்களை உண்பவர்களான} ராக்ஷசர்களும், உதிரம் பருகும் கொடூர விலங்குகளும் இருக்கின்றன.(19) இராகவா, இந்த மஹாரண்யத்தில் தூய்மையற்றோ, விழிப்பில்லாமலோ இருக்கும் தர்மசாரியான தபஸ்வியை விழுங்கிவிடுவார்கள். அவர்களை விரட்டுவாயாக.(20) இராகவா, இது வனத்தில் பழங்களைக் கொணர்ந்து வரும் மஹரிஷிகளின் பாதையாகும். அடைவதற்கரிதான இந்த வனத்தில் இந்தப் பாதையின் வழியே செல்வாயாக" {என்றனர்}.(21)

தபஸ்விகளான அந்த துவிஜர்கள், தங்கள் கைகளைக் கூப்பி வணங்கி, அவனது பயணத்திற்கான ஆசியுடன் இவ்வாறு சொன்ன பிறகு, பரந்தபனான அந்த ராகவன் {ராமன்}, தன் பாரியையோடும், லக்ஷ்மணனோடும் சேர்ந்து மேகமண்டலத்திற்குள் சூரியனைப் போல அந்த வனத்திற்குள் பிரவேசித்தான்[1].(22) 

[1] அன்னமா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும்
பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன்
துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும்

- கம்பராமாயணம் 2520ம் பாடல் (விராதன் வதைப்படலம்)

பொருள்: அந்த மாமுனிவருடன் அன்று அந்த உறைவிடத்தில் தங்கி, அம்முனிவரின் அரிய சிறப்புகளுடைய மனைவியான கற்பின் அனசூயையின் கட்டளையால் அணிகலன்களும், உடுத்தும் உடைகளும், சந்தனமும் இவையனைத்தும் சுமந்த சனகன் மகளான சீதையுடன் அவ்விடம் விட்டுச் சென்று உயர் தண்டக வனம் புகுந்தான் ராமன்.

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 119ல் உள்ள சுலோகங்கள்: 22

*******அயோத்தியா காண்டம் முற்றும் *******

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் துந்துபி தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்