Thursday 30 June 2022

இலக்ஷ்மணனின் கவலை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 051 (27)

Lakshmana's concern | Ayodhya-Kanda-Sarga-051 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலக்ஷ்மணனை ஓய்வெடுக்கச் சொன்ன குஹன்; ராஜபிதா மற்றும் ராஜமாதாக்களின் துயரையும், ராமன் நாடுகடத்தப்பட்ட பிறகு அயோத்தியில் உண்டாகக்கூடிய நிகழ்வுகளையும் குஹனிடம் சொன்ன லக்ஷ்மணன்...

Sita and Rama Sleeping Guha and Lakshmana Conversing

{இராமனும், சீதையும் தரையில் கிடப்பதைக் கண்டு} வேதனையில் துன்புற்ற குஹன், ஜாக்கிரதையாக இருந்தவனும், வஞ்சகமற்றவனும், ராகவனுமான {ரகு குலத்தவனுமான} லக்ஷ்மணனிடம் {இந்த} வாக்கியத்தைச் சொன்னான்:(1) "ஐயா, இஃது உனக்காக அமைக்கப்பட்ட சுகமான படுக்கையாகும். இராஜபுத்திரா, இதில் நீ சுகமாக ஓய்வெடுப்பாயாக.(2) இந்த சர்வஜனங்களும் {மக்கள் அனைவரும்} சிரமங்களுக்குப் பழக்கப்பட்டவர்கள். நீயோ சுகத்திற்கே பழக்கப்பட்டவன். {இந்த} இரவில் காகுத்ஸ்தனை {ராமனைப்} பாதுகாப்பதில் நாங்கள் ஜாக்கிரதையாக இருப்போம் {விழிப்புடனிருப்போம்}.(3) எனக்கு இராமனைவிடப் பிரியமானவன் இப்புவியில் வேறெவனும் இல்லை. நான் உன்னிடம் இந்த சத்தியத்தையே சொல்கிறேன். அந்த சத்தியத்தின் மீது ஆணையாகவும் சொல்கிறேன்.(4) இவ்வுலகில் {இம்மையில்} பெரும்புகழை ஈட்டவும், தர்மத்தை ஈட்டவும், ஏராளமான செல்வத்தை ஈட்டவும் இவன் {ராமனின்} அருள் மட்டுமே போதுமென நான் நம்புகிறேன்.(5) அத்தகையவனான நான், என் ஞாதிகளுடன் {உறவினர்களுடன்} கூடியவனாக, என் பிரியத்திற்குரிய சகாவும் {அன்புக்குரிய நண்பனும்}, சீதை சகிதனாக சயனித்துக் கொண்டிருப்பவனுமான ராமனைக் கையில் தனுவுடன் {வில்லுடன்} எப்போதும் ரக்ஷிப்பேன் {பாதுகாப்பேன்}.(6) நான் சதா அலைந்து திரியும் இந்த வனத்தில் எனக்குத் தெரியாதது ஏதும் இல்லை. பெரும் சதுரங்க பலத்தையும் {யானைகள், தேர்கள், குதிரைகள், காலாட்படை உள்ளிட்ட நால்வகைப் படைகளையும்} எங்களால் எதிர்கொள்ள முடியும்" {என்றான் குஹன்}.(7)

அப்போது லக்ஷ்மணன் அவனிடம், "பாபமற்றவனே, தர்மத்தையே பின்பற்றுபவனான உன்னால் பாதுகாக்கப்படுவதில் நாங்கள் எவரும் இங்கே {இவ்விடத்தில்} பீதியடையவில்லை.(8) தாசரதர் {ராமர்}, சீதை சகிதராக பூமியில் சயனித்திருக்கையில் {வெறுந்தரையில் கிடக்கையில்} எனக்கு நித்திரை எவ்வாறு சாத்தியமாகும்? {எனக்கு} ஜீவிதத்தால்தான் சுகமென்ன ஏற்படும்? (9) சர்வ தேவாசுரர்களாலும் யுத்தத்தில் எவரை வீழ்த்தமுடியாதோ அவர் சீதை சகிதராக புல்லில் சுகமாக உறங்குவதைப் பார்.(10) மந்திர தபஸ்ஸாலும், பல்வேறு பரிசிரமங்களாலும் {முயற்சிகளாலும்} தசரதருக்கு ஒப்பான லக்ஷணங்களுடன் {அந்த தசரதரால்} பெறப்பட்ட ஏக இஷ்ட புத்திரரான இவர் {தசரதரின் விருப்பத்திற்குரிய ஒரே மகனான ராமர்} நாடுகடந்திருக்கையில் அந்த ராஜா {தசரதர்} நீண்ட காலம் வாழமாட்டார்; நிச்சயம் மேதினியும் சீக்கிரமாகவே விதவையாவாள்.(11,12) உயர் தொனியில் கூக்குரலிட்டு சிரமப்பட்டே {களைப்படைந்தே} ஸ்திரீகள் நிசப்தமாவார்கள் {பெண்கள் அமைதியடைவார்கள்}. அதனால் ராஜநிவேசனத்தில் {அரண்மனையில், கோஷமில்லாத} ஆழ்ந்த அமைதியே நிலவுமென நான் நினைக்கிறேன்.(13) 

கௌசல்யையும், ராஜாவும் {தசரதரும்}, என் ஜனனீயுமென {என்னைப் பெற்றவளான சுமித்திரையுமென} அவர்கள் அனைவரும் இவ்விரவில் ஜீவித்திருப்பார்களென நான் நம்பவில்லை.(14) சத்ருக்னனைப் பார்ப்பதற்காக {ஒருவேளை} என் மாதா {சுமித்திரை} ஜீவித்திருக்கலாம், வீரரைப் பெற்றவளான கௌசல்யை மாண்டிருந்தால் அது துக்கமே.(15) அர்ப்பணிப்புள்ள ஜனங்களால் நிறைந்ததும், சுகமானதும், உலகத்திற்கு இனிமையை அளிப்பதுமான இந்தப் புரீ {நகரம்} ராஜவியசனத்தால் {ராஜன் இறந்த கவலையால்} பீடிக்கப்பட்டு அழிவடையப் போகிறது.(16) மஹாத்மாவும், ஜியேஷ்டனுமான புத்திரனை {மூத்த மகனுமான ராமனைக்} காணாமல் மஹாத்மாவான ராஜாவின் சரீரத்தில் பிராணன் {உடலில் உயிர்} எவ்வாறு நிலைத்திருக்கும்?(17) நிருபதி {மனிதர்களின் தலைவரான தசரதர்} அழிந்ததும் கௌசல்யை அழிவாள், அதன் பின்னர் என் மாதாவும் அழிவடைவாள்.(18) கடந்தது கடந்தும் {நடந்தது முடிந்தும்}, ராஜ்ஜியத்தில் ராமனை நிறுவாமல், தன் மனோரதம் நிறைவேறாமலேயே என் பிதா அழியப் போகிறார்.(19) 

பூமிபதியான எங்கள் பிதா {தந்தை தசரதர்} இறக்கும்போது, சர்வ பிரேத காரியங்களையும் {ஈமச் சடங்குகள் அனைத்தையும்} அந்தந்த காலத்தில் சரியாகச் செய்பவர்களே சித்தார்த்தர்கள் {பரதனும், சத்ருக்னனுமே கொடுத்துவைத்தவர்கள்}.(20) சதுர ஸம்ஸ்தானங்களால் {நாற்சந்திகளால்} ரம்மியமாக விளங்குவதும், நன்கு பிரிக்கப்பட்ட மஹாபாதைகளை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதும், வளம்மிக்க செல்வந்தர்களாலும், முதன்மையான கணிகையராலும் அலங்கரிக்கப்பட்ட மாடமாளிகைகள் நிறைந்ததும்,{21} ரதங்களும், அஷ்வங்களும், கஜங்களும் {தேர்களும், குதிரைகளும், யானைகளும் நெருக்கமாக} அடர்ந்திருப்பதும், இசைக் கருவிகளின் முழக்கங்கள் எதிரொலிப்பதும், மங்கலங்கள் அனைத்திலும் நிறைவாக இருப்பதும், மகிழ்ச்சியான புஷ்டியான ஜன குலங்களை {மக்கள் கூட்டத்தைக்} கொண்டதும்,{22} உத்யானவனங்களாலும், தோட்டங்களாலும் சூழப்பட்டதும், சமூக உற்சவங்களால் {விழாக்களால்} பிரகாசிப்பதுமான என் பிதாவின் ராஜதானியில் {அயோத்தியில்} அவர்கள் {பரதனும், சத்ருக்னனும்} மகிழ்ச்சியாக உலவட்டும்.(21-23)

தசரதர் ஜீவித்திருப்பாரா? நல்விரதங்களைச் செய்பவரான அந்த மஹாத்மாவை {தசரதரை, நாங்கள்} வனவாசத்திலிருந்து திரும்பியதும் மீண்டும் காண்போமா?(24) வனவாசம் நிறைவடைந்ததும், சத்தியபிரதிஜ்ஞையில் உறுதியாக இருக்கும் இவருடன் {ராமருடன்} நலமாக அயோத்திக்குள் பிரவேசிப்போமா?" {என்றான் லக்ஷ்மணன்}.(25)

மஹாத்மாவான அந்த ராஜபுத்திரன் {இளவரசனான லக்ஷ்மணன்}, இவ்வாறு புலம்பித் தவித்து, துக்கத்தால் பீடிக்கப்பட்டு {காவல் காத்து} நின்றபோதே அந்த இரவும் கழிந்தது.(26) பிரஜைகளின் ஹிதத்தில் {குடிமக்களின் நன்மையில்} நாட்டமுடைய அந்த நரேந்திர புத்திரன் {மனிதர்களின் தலைவனான தசரதனின் மகன் லக்ஷ்மணன்}, பெரியோர் மீது கொண்ட பற்றால் இவ்வாறு சத்தியத்தைப் பேசிக் கொண்டிருந்தபோது, கவலையாலும், துன்பத்தாலும் பீடிக்கப்பட்ட குஹன், ஜ்வரத்தால் பீடிக்கப்பட்ட நாகத்தை {யானையைப்} போலக் கண்ணீர் விட்டழுதான்.(27)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 051ல் உள்ள சுலோகங்கள் : 27

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை