Tuesday 6 February 2024

ஆனந்தக் கண்ணீர் | சுந்தர காண்டம் சர்க்கம் - 17 (32)

Tears of Joy | Sundara-Kanda-Sarga-17 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையைச் சூழ்ந்திருக்கும் ராக்ஷசிகளைக் கண்ட ஹனுமான்; சீதையைக் கண்ட ஆனந்தத்தில் கண்ணீர் வடித்தது...

Hanuman in tears of joy, after seeing Seetha in Ashoka garden

குமுதமலர்க்கூட்டங்களின் ஒளிக்கு நிகரான நிர்மலமான உதயத்துடன் கூடிய சந்திரன், அப்போது, நீல நீரை அடையும் ஹம்ஸத்தை {அன்னப்பறவையைப்} போல, நிர்மலமான நபத்தை {தெளிந்த வானத்தை} அடைந்தான்.(1) நிர்மலமான பிரபையுடன் கூடிய அந்தச் சந்திரன், தன் பிரபையால் உதவி புரிவதைப் போல, குளிர்ந்த கதிர்களுடன் பவனாத்மஜனுக்கு {வாயு மைந்தன் ஹனுமானுக்குத்} தொண்டாற்றினான்.(2) அப்போது அவன் {ஹனுமான்}, பூர்ணச் சந்திரனின் முகமுடைய சீதையை, பாரத்தால் நீரில் மூழ்கும் நாவத்தை {ஓடத்தைப்} போல, சோகபாரத்தால் வீழ்ந்திருப்பவளாகக் கண்டான்.(3)

வைதேஹியைக் காண விரும்பிய மாருதாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, கோர தரிசனந்தரும் ராக்ஷசிகள் {சீதையின்} அருகில் இருப்பதைக் கண்டான்.{4} ஒற்றைக் கண்ணுள்ளவள், ஒற்றைக் காதுள்ளவள், அதே போல காதுகளால் {மேனி} மறைக்கப்பெற்றவள், சங்கு போன்ற காதுள்ளவள், தலைவழியே சுவாசிக்கும் நாசியுள்ளவள்,{5} நீண்ட, மெலிந்த கழுத்துள்ளவள், குச்சிகளைப் போன்ற கேசமுள்ளவள், அதேபோல கேசமில்லாதவள், கம்பளம்போல் கேசம் தரித்தவள்,{6} நீண்ட காதுகளும், தொங்கிவிழும் நெற்றியுமுள்ளவள், தொங்கும் முலைகளும், வயிறுமுள்ளவள், தொங்கும் உதடுகளுள்ளவள், கன்னத்தில் உதடுகளுள்ளவள், தொங்கும் முகமுள்ளவள், தொங்கும் முழங்கால்களுள்ளவள்,{7} உயரக்குறையுடன் பருத்தவள், உயரமானவள், குப்ஜை {கூனுள்ளவள்}, விகடை {குறுகிய அங்கங்கள் கொண்டவள்}, வாமனை {குள்ளமானவள்}, அதேபோல, உயர்ந்த பற்களுடையவள், கோணல் வாயுடையவள் {முகமுடையவள்}, பிங்காக்ஷி {பச்சை / மஞ்சள் நிறக் கண்களையுடையவள்}, விக்ருதானனை {விகார முகம் கொண்டவள்} ஆகியோர் {சீதையின் அருகில்} இருந்தனர்.(4-8)

விக்ருதைகள் {விகாரமானவர்கள்}, பிங்களைகள் {அடர் மஞ்சள் / பச்சை நிறம் கொண்டவர்கள்}, குரோதனைகள் {கோபம் கொண்டவர்கள்}, கலஹப்ரியைகள் {சச்சரவுகளை விரும்புகிறவர்கள்}, இரும்பாலான சூலம் {ஈட்டி}, கூடம் {சம்மட்டி}, முத்கரதாரிணிகள் {கலப்பைகளைத் தரித்தவர்கள்},{9} வராக, மிருக, சார்தூல, மஹிஷ, ஆஜ, ஷிவ முகீகள் {பன்றி, மான், புலி, எருமை, ஆடு, குள்ளநரி ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள்}, கஜம் {யானை}, ஒட்டகம், ஹய பாதீகள் {குதிரை ஆகியவற்றின் கால்களைக் கொண்டவர்கள்}, உடலுக்குள் புதைந்த சிரசுள்ளவர்கள் {தலையுள்ளவர்கள்},{10} ஒற்றைக் கைக் கால்களைக் கொண்டவர்கள், கரகர்ணிகள் {கழுதைக் காதுடையவர்கள்}, அஷ்வகர்ணிகள் {குதிரைக் காதுடையவர்கள்}, கோகர்ணிகள் {பசுவின் காதுகளைக் கொண்டவர்கள்}, ஹஸ்திகர்ணிகள் {யானையின் காதுகளைக் கொண்டவர்கள்}, மேலும் சில ஹரிகர்ணிகள் {குரங்குக் காதுள்ளவர்கள்},{11} நாசியில்லாதவர்கள் {மூக்கில்லாதவர்கள்}, பெரும் நாசி படைத்தவர்கள், குறுக்காக நாசி அமைந்தவர்கள், சிதைந்த நாசியுள்ளவர்கள், கஜங்களைப் போன்ற {துதிக்கையுடன் கூடிய} நாசியுள்ளவர்கள், நெற்றியில் நாசி அமைந்தவர்கள்,{12} ஹஸ்திபாதைகள் {யானையைப் போன்ற காலுள்ளவர்கள்}, மஹாபாதைகள் {பெருங்கால்களைக் கொண்டவர்கள்}, கோபாதைகள் {பசுக்களைப் போன்ற கால்களைக் கொண்டவர்கள்}, பாதசூளிகைகள் {கால்களில் மயிருள்ளவர்கள்}, பெரும் தலைகளையும், கழுத்துகளையும் கொண்டவர்கள், பெரும் முலைக்காம்புகளையும், பெரும் வயிறுகளையும் கொண்டவர்கள்,{13} பெரும் வாய்களையும், விழிகளையும் கொண்டவர்கள், நீண்ட நாவுகளையும், நகங்களையும் கொண்டவர்கள், அதேபோல, ஆஜமுகீகள் {ஆட்டு முகம் கொண்டவர்கள்}, ஹஸ்திமுகீகள் {யானை முகம் கொண்டவர்கள்}, கோமுகீகள் {பசுவின் முகம் கொண்டவர்கள்}, ஸூகரீமுகீகள் {பெண் பன்றி முகம் கொண்டவர்கள்},{14} ஹயம் {குதிரை}, ஒட்டகம், கரவக்தரைகள் {கழுதை ஆகியவற்றின் வாய் படைத்தவர்கள்}, கோர தரிசனம் தரும் ராக்ஷசிகள், சூலங்கள், முத்கரங்கள் {இரும்புத்தடி} ஆகியவற்றைக் கையில் ஏந்தியவர்கள், குரோதனைகள் {கோபமுடையவர்கள்}, கலஹப்ரியைகள் {சச்சரவுகளில் விருப்பமுள்ளவர்கள்},{15} கோரைப் பற்களை உடையவர்கள், புகை போன்ற கேசமுடையவர்கள், சிதைந்த முகமுடையவர்கள், சதா பிபந்தி {ஒரு வகை மது} பானம் பருகுபவர்கள், சதா மாமிச, ஸுரா பிரியைகள் {எப்போதும் இறைச்சியையும், மதுவையும் விரும்பி உண்டு பருகுபவர்கள்},{16} மாமிசத்தாலும், சோணிதத்தாலும் {ரத்தத்தாலும்} பூசப்பட்ட அங்கங்களைக் கொண்டவர்கள், மாமிச சோணித போஜனைகள் {மாமிசத்தையும், சோணிதத்தையும் {ரத்தத்தையும்} உணவாகக் கொண்டவர்கள்}, தங்கள் தோற்றத்தாலேயே ரோமஹர்ஷணத்தை {மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்தக் கூடியவர்கள் ஆகியோரை அந்தக் கபிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்தவனான ஹனுமான்} கண்டான்.{17} அவர்கள் ஸ்கந்தவந்தத்துடன் கூடிய ஒரு வனபதியை {பெரும் தண்டுடன் கூடிய ஒரு பெரும் மரத்தைச்} சூழ்ந்து அமர்ந்திருந்தனர்.(9-18அ)

அதனடியில் {அந்த மரத்தினடியில்} இருந்தவளும், நிந்திக்கத்தகாதவளும், ராஜபுத்திரியும், ஜனகாத்மஜையுமான அந்த தேவியை {சீதையை இலக்காகக் கொண்டு}, லக்ஷ்மீவானான ஹனுமான் கவனித்தான்.(18ஆ,19அ) பிரபையற்றவளும், சோகசந்தாபத்துடனும், புழுதிநிறைந்த தலைமுடியுடனும் கூடியவளும், {சொர்க்கத்திலிருந்து} பூமியில் வீழ்ந்த தாரையை {நட்சத்திரத்தைப்} போலப் புண்ணியம் தீர்ந்தவளும்,(19ஆ,20அ) நடத்தையின் புகழால் வளம்பெற்றவளும், பர்த்தாவை {கணவனைப்} பிரிந்ததால் வளங்குன்றியவளும், உத்தம பூஷணங்களற்றவளும் {நல்லாபரணங்களற்றவளும்}, பர்த்தாவின் வாத்சல்யத்தையே பூஷணமாக {கணவனின் அன்பையே ஆபரணமாகக்} கொண்டவளும்,(20ஆ,21அ) யூதமில்லா {மந்தையுடன் இல்லாத} நிலையில் சிம்ஹத்தால் கைப்பற்றப்பட்ட கஜவதுவை {பெண் யானையைப்} போல, பந்துக்களற்றவளாகச் செய்யப்பட்டு, ராக்ஷசாதிபனால் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனால்} கைப்பற்றப்பட்டவளும்,(21ஆ,22அ) மழைக்கால முடிவில், மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனைப் போன்றவளும், தொடர்பில்லாததால், ரூபம் இழந்து, மீட்டப்படாமல் இருக்கும் வல்லகீயை {வீணையைப்} போன்றவளும்,(22ஆ,23அ) தன் பர்த்தாவுக்கு {கணவனுக்குத்} தகுந்தவளுமான சீதை, சோக சாகரத்தில் மூழ்கியவளாக, அசோக வனிகையின் மத்தியில் ராக்ஷசிகளின் வசத்தில் இருந்தாள்.(23ஆ,24அ) கிரஹங்களுடன் கூடிய ரோஹிணியைப் போல, அவர்களால் {ராக்ஷசிகளால்} சூழப்பட்ட அந்த தேவி {சீதை}, குசுமங்களற்ற லதையை {மலர்களற்றக் கொடியைப்} போன்றிருப்பதை ஹனுமான் கண்டான்.(24ஆ,25அ) புழுதி படிந்த அங்கங்களுடன் கூடியவளும், {இயற்கையாக அமைந்த} தன் மேனியழகினால் அலங்கரிக்கப்பட்டவளுமானவள், சேற்றில் மலர்ந்த தாமரையைப் போல ஒளிர்ந்தும், ஒளிர்ந்தாளில்லை.(25ஆ,26அ) கபியான ஹனுமான், கரிய கண்களைக் கொண்டவளும், புழுதி படிந்த வஸ்திரத்தால் போர்த்தப்பட்டவளும், மான்விழியாளும், தீனவதனையும் {இரங்கத்தக்க முகத்தைக் கொண்டவளும்}, பர்த்தாவின் தேஜஸ்ஸால் தீனமடையாதவளும் {கணவனின் வலிமையை நினைத்து மனந்தளராதவளும்}, தன் சீலத்தால் {ஒழுக்கத்தால்} தன்னை ரக்ஷித்துக் கொள்பவளுமான அந்த சீதா தேவியைக் கண்டான்.(26ஆ-28அ) 

மான்விழியாளும், பெண் மான்போல் அச்சப் பார்வை பார்ப்பவளுமான சீதையை ஹனுமான் கண்டான்.{28ஆ,இ} துக்கத்தில் உதித்த அலைகளைப் போலவும், சோகத்தின் குவியலைப் போலவும், தன் பெருமூச்சுகளால் இளந்தளிர்கள் துளிர்க்கும் விருக்ஷங்களை எரித்துவிடுபவளைப் போலவும்,(28ஆ,29) ஆபரணமில்லாமலேயே சோபிப்பவளும் {ஒளிர்பவளும்}, நன்கு வகுக்கப்பட்ட அங்கங்களைக் கொண்டளும், {பூமியைப் போன்ற} பொறுமையுள்ளவளுமான அந்த மைதிலியைக் கண்டதும், மாருதி {வாயுமைந்தனான ஹனுமான்}, அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.(30) மதிமயக்கும் கண்களைக் கொண்டவளை {சீதையை} அங்கே கண்ட ஹனுமான், ஆனந்தக் கண்ணீர் வடித்து, ராகவனை நமஸ்கரித்தான்.(31) வீரியவானான ஹனுமான், சீதா தரிசனத்தால் பெரும் மகிழ்ச்சியடைந்து, ராமனையும், லக்ஷ்மணனையும் நமஸ்கரித்தபடியே, {இலைகளால்} தன்னை மறைத்துக் கொண்டான்.(32) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 17ல் உள்ள சுலோகங்கள்: 32


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை