Thursday 21 September 2023

சமாதானமடைந்த லக்ஷ்மணன் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 36 (20)

Lakshmana pacified | Kishkindha-Kanda-Sarga-36 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தணிவடைந்த லக்ஷ்மணன்; இராமனின் வீரத்தைப் புகழ்ந்த சுக்ரீவன்; தன் கடுஞ்சொற்களுக்காக வருத்தம் தெரிவித்த லக்ஷ்மணன்...

Sugreeva and Lakshmana

இவ்வாறு தாரை பணிவுடன் தர்மத்திற்குப் பொருத்தமான வாக்கியங்களைச் சொன்னதும், மிருது ஸ்வபாவம் கொண்ட சௌமித்ரி {மெல்லியல்பினனான லக்ஷ்மணன்}, அந்தச் சொற்களை ஏற்றுக் கொண்டான்.(1) அந்த வாக்கியங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், ஹரிகணேஷ்வரன் {குரங்குக் கூட்டங்களின் தலைவனான சுக்ரீவன்}, லக்ஷ்மணனிடம் தான் கொண்டிருந்த மஹத்தான அச்சத்தை, நனைந்த வஸ்திரம் {ஈரத்துணியைப்} போல் களைந்தான்.(2) அப்போது, வானரேஷ்வரனான சுக்ரீவன், கண்டத்தில் {கழுத்தில்} அணிந்திருந்ததும், சித்திரமானதும் {அழகானதும்}, ஏராளமான குணங்களைக் கொண்டதுமான மஹத்தான மாலையை அறுத்து மதம் {மயக்கம்} தொலைந்தவனானான்.(3) 

சர்வ வானரர்களிலும் சத்தமனான {சிறந்தவனான} அந்த சுக்ரீவன், பீமபலங் {பயங்கர வலிமை} கொண்ட லக்ஷ்மணனை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக {பின்வரும்} பணிவான வாக்கியங்களைச் சொன்னான்:(4) "சௌமித்ரியே, தொலைந்து போன ஸ்ரீ {செல்வம்}, கீர்த்தி, சாஸ்வதமான கபிராஜ்ஜியம் {குரங்குகளின்ராஜ்ஜியம்} ஆகியனவற்றை ராமரின் அருளால் மீண்டும் நான் அடைந்தேன்.(5) நிருபாத்மஜரே {மன்னரின்மகனே}, தன் கர்மங்களால் புகழ்பெற்ற தேவரானவருக்கு {ராமருக்கு}, அவர் செய்தவகையில் சிறிதேனும் பிரதி {கைம்மாறு} செய்யும் சக்தன் எவன்?(6) தர்மாத்மாவான ராகவர், சகாயனாக மாத்திரமே என்னைக் கொண்டு, சொந்த தேஜஸ்ஸால் ராவணனை வதம் செய்து, சீதையை அடைவார்.(7) ஏழு பெரும் மரங்களையும், சைலத்தையும் {மலையையும்}, வசுதையையும் {பூமியையும்} ஏக பாணத்தால் {ஒரே அம்பால்} பிளந்தவர் எவரோ, அவருக்கு சகாயம் செய்யக்கூடியவன் எவன்?(8) இலக்ஷ்மணரே, தனுசில் {வில்லில்} நாணேற்றும் சப்தத்தால் சைலங்களும் {மலைகளும்}, பூமியும் எவரால் நடுக்கமடையுமோ, அவருக்கு உண்மையில் சகாயம் செய்யக்கூடியவன் எவன்?(9) நரரிஷபரே {மனிதர்களில் சிறந்தவரே}, முன்னிருப்பவர்களையும் சேர்த்து வைரியான {பகைவனான} ராவணனை அழிக்கப்போகும் நரேந்திரரை {மனிதர்களின் தலைவரான ராமரை} நான் பின்தொடர்ந்து செல்லப் போகிறேன்.(10) விசுவாசத்தாலோ, நட்பாலோ கிஞ்சித்தும் அத்துமீறியிருந்தால், பணியாளனான என்னை பொறுத்துக் கொள்ள வேண்டும். அபராதம் {தவறு} செய்யாதவன் எவனுமில்லை" {என்றான் சுக்ரீவன்}.(11)

மஹாத்மாவான அந்த சுக்ரீவன் இவ்வாறு சொன்னதும், பிரீதியடைந்த {மகிழ்ச்சியடைந்த} லக்ஷ்மணன், பிரேமத்துடன் {அன்புடன்} இதைச் சொன்னான்:(12) "வானரேஷ்வரா, சுக்ரீவா, என்னுடன் பிறந்தவர் நாதனுடையவர் {என் தமையர் ராமர் அநாதையல்ல}; விசேஷமாக பணிவுள்ளவனான உன்னை அடைந்தவர், உண்மையில் எல்லாவகையிலும் நாதனுள்ளவராகிறார் {எவ்வகையிலேனும் அநாதையல்ல}.(13) சுக்ரீவா, இவ்வகையில் உன்னைத் தூய்மையுள்ளவனாக்கும் பிரபாவத்தை {ஆற்றலைக்} கொண்டவனான நீ, கபிராஜ்ஜியத்தின் {குரங்குராஜ்ஜியத்தின்} ஒப்பற்ற செல்வத்தை அனுபவிக்கத் தகுந்தவனே.(14) சுக்ரீவா, உன்னை சகாயனாகக் கொண்டவரும், பிரதாபவானுமான ராமர், சத்ருக்களை ரணத்தில் {போரில்} சீக்கிரமே வதம் செய்யப் போகிறார். இதில் சந்தேகமில்லை.(15) சுக்ரீவா, தர்மஜ்ஞனும், கிருதஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும், நன்றியை அறிந்தவனும்}, போர்க்களங்களில் புறமுதுகிடாதவனுமாக இருக்கிறாய். நீ சொன்னவை சரியானவையாகவும், பொருத்தமானவையாகவும் இருக்கின்றன.(16) வானரசத்தமா {வானரர்களில் சிறந்தவனே}, என் அண்ணனையும், உன்னையும் தவிர, தோஷஜ்ஞனாக {குற்றத்தை அறிந்து கொண்டவனாகத்} தகுந்த வகையில் பேசும் சாமர்த்தியமுள்ளவன் எவன்?(17) ஹரிபுங்கவா {குரங்குகளில் சிறந்தவனே}, தைவதங்களால் நீண்ட காலத்திற்குப் பிறகு தத்தம் செய்யப்பட்ட சஹாயனான நீ, விக்ரமத்தாலும், பலத்தாலும் ராமருக்கு இணையானவனாகத் திகழ்கிறாய்.(18) வீரா, எவ்வாறிருப்பினும் நீ என்னுடன் இங்கிருந்து சீக்கிரமே புறப்படுவாயாக. பாரியை {மனைவி} அபகரிக்கப்பட்ட துக்கத்தில் இருக்கும் வயஸ்யரை {உன் நண்பர் ராமரைத்} தேற்றுவாயாக.(19) சகாவே {தோழா}, சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் ராமர் சொன்னதைக் கேட்டு, நான் உன்னிடம் சொன்ன கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்வாயாக" {என்றான் லக்ஷ்மணன்}.(20)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 36ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை