Wednesday 13 September 2023

தாரையின் சமாதானம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 33 (66)

Reconciliation of Tara | Kishkindha-Kanda-Sarga-33 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் அரண்மனைக்குள் நுழைந்த லக்ஷ்மணன்; இலக்ஷ்மணனைத் தணிவடையச் செய்யுமாறு தாரையிடம் வேண்டிய சுக்ரீவன்...

Fury of Lakshmana

அப்போது, உள்ளே அழைக்கப்பட்டவனும், பரவீரர்களை {பகைவீரர்களை} அழிப்பவனுமான லக்ஷ்மணன், ராமசாசனத்தின் {ராமனுடைய ஆணையின்} பேரில் கிஷ்கிந்தையின் ரம்மியமான குகைக்குள் பிரவேசித்தான்.(1) அங்கே துவாரத்தில் {வாயிலில்} நிற்கும் மஹாகாயர்களும் {பேருடல் படைத்தவர்களும்}, மஹாபலவான்களுமான ஹரயர்கள் {குரங்குகள்} அனைவரும், லக்ஷ்மணனைக் கண்டதும் கூப்பிய கைகளுடன் பின்வாங்கி நின்றனர்.(2) ஹரயர்கள் {அந்தக் குரங்குகள்}, பெருமூச்சுவிட்டுக் கொண்டு கோபத்துடன் இருக்கும் அந்த தசரதாத்மஜனை {தசரதனின் மகனான லக்ஷ்மணனைக்} கண்டு, அச்சமடைந்து அவனைச் சூழாதிருந்தனர் {அவனை அணுகாமலும், தடுக்காமலும் இருந்தனர்}.(3)

ஸ்ரீமானானவன் {லக்ஷ்மணன்}, ரத்தினமயமானதும், திவ்யமானதுமான புஷ்பித்த கானகங்களுடன் கூடியதும், ரத்தினங்களால் மறைக்கப்பட்டதும், ரம்மியமானதும், மஹத்தானதுமான அந்தக் குகையானது,(4) மாளிகைகள், அரண்மனைகள் ஆகியவற்றால் நிறைந்ததாகவும், நானாவித ரத்தினங்களால் விளங்குவதாகவும், விருப்பத்திற்குரிய அனைத்துப் பழங்களையும் தரவல்லவையும், புஷ்பித்திருப்பவையுமான விருக்ஷங்களுடனும் சோபித்துக் கொண்டிருப்பதாகவும் கண்டான்.(5) தேவ, கந்தர்வர்களின் புத்திரர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும்}, திவ்ய மாலைகளையும், ஆடைகளையும் அணிந்தவர்களும், பிரிய தரிசனந்தருபவர்களுமான வானரர்களுடன் அது {அந்தக் குகை} சோபித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(6) சந்தனம், அகில், பத்மங்களின் {தாமரைகளின்} இனிய மணத்தாலும், மைரேயங்கள் {பூவில் இருந்து எடுக்கப்படும் மது வகைகள்}, {பழங்களில் இருந்து எடுக்கப்படும்} மதுவகைகளின் கந்தங்களாலும் பெரிதும் களித்திருக்கும் மஹாபாதைகளையும்,(7) பூமியில் ஓரடுக்காக இல்லாமல் {பல அடுக்குகளில்}, விந்தியம், மேரு கிரிகளுக்கு ஒப்பாக இருக்கும் அரண்மனைகளையும், தெளிவான கிரி நதிகளையும் {மலையருவிகளையும்} ராகவன்  {லக்ஷ்மணன்} அங்கே கண்டான்.(8) அங்கதனின் ரம்மியமான கிருஹத்தையும், மைந்தன், துவிவிதன், கவயன், கவாக்ஷன், கஜன், சரபன்,{9} வித்யுன்மாலி, சம்பாதி, சூர்யாக்ஷன், ஹனூமன், வீரபாகு, சுபாகு, மஹாத்மாவான நளன் ஆகியோருடையவையும்,{10} அதே போல, குமுதன், ஸுஷேணன், தாரன், ஜாம்பவான், ததிவக்த்ரன், நீலன், சுபாடலன், சுநேத்ரன்{11} உள்ளிட்ட கபி முக்கியர்களான மஹாத்மாக்களுக்குரியவையும் {மஹாத்மாக்களான அந்த முக்கிய குரங்குகளுக்குரியவையும்}, ராஜமார்க்கத்தில் இருப்பவையும், மஹாசாரம் நிறைந்தவையுமான முக்கிய கிருஹங்களையும் லக்ஷ்மணன் கண்டான்.(9-12) வெண்மேகங்களைப் போல் பிரகாசிப்பவையும், மாலைகளுடன் நறுமணங்கமழ்பவையும், தன தானியங்கள் நிறைந்தவையுமான அவை {அந்த மாளிகைகள்} ஸ்திரீரத்தினங்களைப் போல விளங்கிக் கொண்டிருந்தன.(13)

வெண்மையான சைலங்களால் {மலைகளால்} சூழப்பட்டதும், அடைதற்கரியதுமான மஹேந்திரனின் சதனத்திற்கு {மாளிகைக்கு} ஒப்பாக ரம்மியமாகத் திகழ்ந்த வானரேந்திரனின் {சுக்ரீவனின்} கிருஹமானது,{14} கைலாச சிகரத்திற்கு ஒப்பான வெண்மையான அரண்மனைகளெனும் சிகரங்களைக் கொண்டும், விரும்பிய பழங்கள் அனைத்தையும் தரவல்லவையும், புஷ்பித்தவையுமான மரங்களால் சோபித்துக் கொண்டும்,{15} மஹேந்திரனால் தத்தம் செய்யப்பட்டவையும் {இந்திரனால் கொடுக்கப்பட்டவையும்}, செழிப்பானவையும், நீல மேகங்களுக்கு ஒப்பானவையும், திவ்யமான புஷ்பங்களையும், பழங்களையும் தரவல்லவையும், குளிர்ந்த சாயைகளைக் கொண்டவையும் {நிழலுள்ளவையும்}, மனத்தைக் கொள்ளை கொள்பவையுமான விருக்ஷங்களுடனும் {மரங்களுடனும்},{16} அழகு வாய்ந்த சஸ்திரங்களை {ஆயுதங்களைக்} கையிலேந்திய ஹரிக்களால் {குரங்குகளால்} காவல் காக்கப்பட்ட துவாரத்துடனும் {வாயிலுடனும்}, திவ்ய மாலைகள் புனையப் பெற்றும், பிரகாசமான புடம்போட்ட காஞ்சன {தங்கத்} தோரணங்களுடனும் இருந்தது.{17} {இத்தகைய} இரம்மியமான சுக்ரீவனின் கிருஹத்திற்குள், மஹாபலவானான சௌமித்ரி {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன்}, பெரும் மேகத்திரளில் பாஸ்கரனை {நுழையும் சூரியனைப்} போலத் தடையின்றி பிரவேசித்தான்.(14-18)

அந்த தர்மாத்மா {லக்ஷ்மணன்}, யானங்களும் {சிவிகைகளும்}, ஆசனங்களும் நிறைந்த ஏழு கட்டுகளைக் கடந்து சென்று, பெரும் பாதுகாவலுடன் கூடிய, மஹத்தான அந்தப்புரத்தைக் கண்டான்.{19} ஹைமராஜத பர்யங்கங்களும் {பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட காதற்படுக்கைகளும்}, பெரும் விலைமதிப்புமிக்க விரிப்புகளும், சிறந்த ஆசனங்கள் ஏராளமானவையும் ஆங்காங்கே நிறைந்திருந்தன.(19,20) அவன் பிரவேசித்தவுடனேயே, தந்திவாத்தியங்களும், கீதமும் கலந்த, சமமான தாள, பத, அக்ஷரங்களுடன் {தாளம், சொல், எழுத்து ஆகியவற்றுடன்} தொடர்ந்து வரும் மதுரமான சுவனம் {இன்னொலி} காதுகளை எட்டியது.(21) அந்த மஹாபலவான் {லக்ஷ்மணன்}, பல்வேறு தன்மைகளைக் கொண்டவர்களும், ரூபத்தாலும், யௌவனத்தாலும் {இளமையாலும்} கர்வம் கொண்டவர்களுமான ஏராளமான ஸ்திரீகளை அந்த சுக்ரீவ பவனத்தில் கண்டான்.(22) அங்கே, தகுந்த குலத்தில் பிறந்து, மலர்களாலான மாலைகளைச் சூடிக்கொண்டு, சிறந்த மாலைகளை எடுத்துக் கொண்டு, உத்தம ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களைக் கண்டு,{23} சுக்ரீவனை அனுசரிப்பவர்களில் {சுக்ரீவனுக்குத் தொண்டாற்றுபவர்களில்} திருப்தியடையாதவரோ, களைப்படைந்தவரோ, மதிப்புமிக்க உடுப்புகளை உடுத்தாதவரோ எவரும் இல்லை என்பதையும் கவனித்தான் லக்ஷ்மணன்[1].(23,24) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதன் பின்னர் 25 முதல் 62ம் சுலோகம் வரையுள்ள செய்தி ராமாயணத்தின் செம்பதிப்பில் இல்லை" என்றிருக்கிறது.

அதன்பிறகு, ஸ்ரீமானான அந்த சௌமித்ரி {சுமித்திரையின் மகன் லக்ஷ்மணன்}, நூபுரங்களின் கூஜிதத்தையும் {சிலம்புகளின் சிணுங்கொலிகளையும்}, அதேபோல ஒட்டியாணங்களின் ஒலியையும் கேட்டு லஜ்ஜை {நாணம்} அடைந்தான்.(25) ஆபரண சுவனத்தைக் கேட்ட வீரன் {லக்ஷ்மணன்}, கோப வேகத்தால் பெரிதும் தூண்டப்பட்டவனாக, சப்தத்தால் திசைகளை நிறைத்த நாணொலியை எழுப்பினான்.(26) இராம சோகத்தால் பீடிக்கப்பட்டவனும், மஹாபாஹுவுமான லக்ஷ்மணன், நடக்கும் காரியங்களில் அருவருப்படைந்து ஏகாந்த நிலையில் {தனியாக} நின்றான்[2].(27) 

[2] ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குல் ஆம் தடந்தேர் சுற்ற
வேற் கண்வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்தபோது
பேர்க்க அருஞ் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்
பார்க்கவும் அஞ்சினான் அப்பனையினும் பெரிய தோளன்.

- கம்பராமாயணம் 4315ம் பாடல், கிட்கிந்தைப் படலம்

பொருள்: ஆரவாரம் செய்யும் சிலம்புகள் பேரிகைகளாக முழங்க அல்குலெனும் பெரிய தேர் சுற்ற, கண்கள் வேல் படையாகவும், கொடிய புருவங்கள் போர் செய்யும் விற்படையாகவும் மகளிர் வளைந்தபோது, பனையைவிட உயர்ந்த தோள்களைக் கொண்டவன் {லக்ஷ்மணன்}, யாராலும் மாற்றமுடியாத சீற்றம் தணிய, முகத்தை ஒருபுறமாகத் திருப்பிக் கொண்டு ஒதுங்கி நின்றதோடல்லாமல் {அந்தப் பெண்களைப்} பார்க்கவும் அஞ்சினான்.

அப்போது, பிலவகாதிபனான {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனான} அந்த சுக்ரீவன், அந்த வில்லின் நாணொலியால் {லக்ஷ்மணனின்} வரவை அறிந்து, அச்சமடைந்து, தன் சிறந்த ஆசனத்தில் இருந்து துடித்தெழுந்தான்.(28) "பூர்வத்தில் அங்கதன் என்னிடம் தெரிவித்தபடியே பிராத்ருவத்ஸலரான சௌமித்ரி {உடன்பிறந்தானிடம் பாசம் கொண்டவரும், சுமித்திரையின் மகனுமான லக்ஷ்மணர்} இங்கே வந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது" {என்று சொல்லிக் கொண்டான்}.(29) அங்கதன் சொன்னபடியே அந்த வானரன் {சுக்ரீவன்} நாணொலியால் எழுந்தான். இலக்ஷ்மணன் வந்துவிட்டதை உணர்ந்தவனது முகம் வாட்டமடைந்தது.(30)

அப்போது அச்சமடைந்தவனும், மனம் குழம்பியவனும், ஹரிசிரேஷ்டனுமான {குரங்குகளில் சிறந்தவனுமான} சுக்ரீவன், பிரிய தரிசனந்தரும் தாரையிடம், கலக்கமில்லாமல் ஹிதமாக {பின்வருமாறு} பேசினான்:(31) "ஸுப்ரு {அழகிய புருவங்களைக் கொண்டவளே}, இயல்பில் மிருதுவான மனங்கொண்ட இந்த ராகவானுஜர் {ராமரின் தம்பி}, எதனால் கோபத்திலிருப்பவரைப் போல ஆகிவிட்டார்? உண்மையில் அதற்கான காரணமென்ன?(32) அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, குமாரரின் கோபத்திற்கான ஸ்தானமென {அடிப்படையென} எதைப் பார்க்கிறாய்? நரபுங்கவர் {மனிதர்களிற் சிறந்தவரான லக்ஷ்மணர்} காரணமில்லாமல் கோபமடையமாட்டார்.(33) நாம் இவருக்குக் கிஞ்சித்தும் பிரியமற்றதை {விருப்பமில்லாத ஏதேனுமொன்றையாவது} செய்திருக்கிறோமென நீ கருதினால், அதை உடனே புத்தியால் தீர்மானித்துக் கொண்டு, சீக்கிரமே {நான்} அறியச்செய்வாயாக.(34) அல்லது, பாமினி {அழகிய பெண்ணே}, அவரை ஸ்வயமாக {நீயே நேரடியாகச்} சென்று காண்பதே உனக்குத் தகும். தணிவடையச் செய்வதற்குப் பொருத்தமான சொற்களைப் பேசி, அருள்புரியச் செய்வதே உனக்குத் தகும்.(35) உயர்வான அந்த சுத்தாத்மா {லக்ஷ்மணர்}, உன்னை தரிசித்தால் கோபமடையமாட்டார். மஹாத்மாக்கள் ஒருபோதும் ஸ்திரீகளிடம் பயங்கரமாக நடந்து கொள்ளமாட்டார்கள்.(36) {சொற்களால்} தணிவடையச் செய்ய நெருங்கும் உன்னால், அவரது இந்திரியங்களும், மனமும் அமைதியடைந்த பிறகே, அரிந்தமரான கமலபத்ராக்ஷரை {பகைவரைக் கொல்பவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவருமான லக்ஷ்மணரை} நான் காண்பேன்" {என்றான் சுக்ரீவன்}.(37)

மதத்தில் மூழ்கும் {குடிமயக்கத்தில் செருகும்} கண்களுடனும், ஒலிக்கும் ஒட்டியாணங்களுடனும், நழுவிய ஹேமசூத்திரத்துடனும் {பொன் அரைஞாணுடனும்} கூடியவளும், லக்ஷணங்கொண்டவளும், குனிந்து வணங்கும் உடலுடன் கூடியவளுமான அந்தத் தாரை, தள்ளாடி நடந்தபடியே லக்ஷ்மணனின் சந்நிதானத்தை அடைந்தாள்.(38) மஹாத்மாவான அந்த மனுஜேந்திர புத்திரன் {லக்ஷ்மணன்}, ஹரிஈசபத்தினியானவளை {குரங்கு மன்னனின் மனைவியான தாரையைக்} கண்டு, உதாசீனத்துடனும் {விருப்புவெறுப்பற்ற அலட்சிய நிலையிலும்}, ஸ்திரீயின் அருகாமையில் இருந்ததால், கோபம் ஒழித்து, முகம் கவிழ்த்தும் {தலை குனிந்தும்} நின்றான்.(39) 

பானயோகத்தாலும் {குடியின் விளைவாலும்}, நரேந்திரபுத்திரனின் அருள்நிறைந்த திருஷ்டியாலும் {பார்வையாலும்}, லஜ்ஜையைத் துறந்த அந்தத் தாரை, மஹா அர்த்தம் பொதிந்ததும், பரிசாந்தரூபமுடையதும் {முழுமையாகத் தணிவடையச் செய்யவல்லதுமான பின்வரும்} வாக்கியத்தை நட்புடனும், துணிவுடனும் சொன்னாள்:(40) "மனுஜேந்திர புத்திரரே, கோபத்தின் மூலம் {வேர்} யாது? உமது வாக்கின் ஆணையைப் பின்பற்றாதவர் யாவர்? உலர்ந்த விருக்ஷங்களுடன் கூடிய வனத்தைப் பற்றியிருக்கும் தவாக்னியை {காட்டுத்தீயை} எவர் தயக்கமின்றி நெருங்குவார்?" {என்று கேட்டாள்}.(41)

அந்த லக்ஷ்மணன், தணிப்பதையே முதலாகக் கொண்டதும், மீண்டும் நட்பைக் காட்டும் அர்த்தம் பொதிந்ததுமான அவளது சொற்களைக் கேட்டு சந்தேகத்திற்கிடமில்லாத {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(42) "பர்த்தாவின் ஹிதத்திற்குத் துணை நிற்பவளே, உன் பர்த்தாவானவன் {உன் கணவன் சுக்ரீவன்} காமவிருத்தமடைந்து, தர்மார்த்தங்களை முற்றிலும் மறந்திருக்கிறான். அவனை ஏன் நீ உள்ளபடியே அறியாதிருக்கிறாய்?(43) தாரே {தாரையே},  அமைச்சர்களுடன் கூடியவன், ராஜ்ஜிய அர்த்தத்தையோ, சோகத்தில் மூழ்கியிருக்கும் எங்களையோ சிந்திக்காமல் காமத்தில்[3] மட்டுமே அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.(44) அந்தப் பிலவகேஷ்வரன் {சுக்ரீவன்}, சதுர்மாசங்களைப் பிரமாணமாகக் கொண்டும், கட்டுக்கடங்காத மதத்தில் {குடிமயக்கத்தில்} திளைத்து காலங்கடந்துவிட்டதை உணராமல் இருக்கிறான்.(45) தர்மார்த்தங்களை {அறம், பொருளை} அடையும் நோக்கில் இவ்வாறான பானம் {குடி} மெச்சத்தக்கதல்ல. பானத்தால் தர்மார்த்தகாமங்கள் {அறம், பொருள், இன்பம் ஆகியன} அழிவடையும்.(46) செயலுக்கான பிரதி {கைம்மாறு} செய்யாதவனுக்கு, அதனாலேயே தர்மத்திற்குப் பேரழிவு உண்டாகும். குணவானான மித்திரனின் நாசத்தால் பொருளுக்கும் பேரழிவு உண்டாகும்.(47) சத்தியத்தையும், தர்மத்தையும் பின்பற்றும் மித்திரனே {நண்பனே}, அர்த்தத்தின் நோக்கிலான குணங்களில் சிறந்தவனாவான். இவ்விரண்டையும் {அர்த்தத்தையும், குணத்தையும்} கைவிட்டவன் தர்மத்திலும் நிலை கொள்ளமாட்டான்.(48) காரியங்களின் தத்துவங்களை அறிந்தவளே, தற்போதைய காரியம் இவ்வாறிருக்கையில் இதற்கு மேல் எங்கள் காரியாகாரியங்களை {நாங்கள் செய்ய வேண்டிய காரியங்களை} நீயே சொல்வாயாக" {என்றான் லக்ஷ்மணன்}.(49) 

[3] இங்கே ஒரு சில பதிப்புகளில் "காமம்" என்றும், வேறு பதிப்புகளில் "பானம்" என்றும் இருக்கிறது. பானம் என்பதை எடுத்துக் கொண்டால் "குடியில் மட்டுமே அர்ப்பணிப்புடன் இருக்கிறான்" என்ற பொருள் வரும்.

அந்தத் தாரை, தர்மார்த்தத்திற்கும் {அறம், பொருளுக்கும்}, சமாதானத்திற்கும் பொருத்தமானவையும், மதுர ஸ்வபாவம் கொண்டவையுமான அவனது {லக்ஷ்மணனின்} வாக்கியங்களைக் கேட்டு, அர்த்தம் தொலைந்த மனுஜேந்திரனின் {ராமனின்} காரியத்தில் விசுவாசம் {நம்பிக்கை} உண்டாகும்படி அவனிடம் {லக்ஷ்மணனிடம்} மீண்டும் {பின்வருமாறு} சொன்னாள்:(50) "க்ஷிதிபாலபுத்திரரே {புவியாண்டவரின் மகனே}, இது கோபமடைவதற்கான காலமல்ல. சொந்த ஜனங்களிடம் கோபம் அடைவது தகாது. வீரரே, உங்கள் அர்த்தத்தை {காரியம் நிறைவேறுவதை} விரும்பும் அந்த ஜனங்களின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்வதே உமக்குத் தகும்.(51) குமாரரே, குணத்தில் மேன்மையானவரால் எவ்வாறு மேன்மையற்றவரிடம் கோபமடைய முடியும்? நன்னடைக்கும், தபசுக்கும் மூலமாகத் திகழும் உம் விதமானவர் எவர்தான் கோபவசமடைவார்?(52) ஹரிவீரபந்துவின் {குரங்குத் தலைவர் சுக்ரீவரின் நண்பரான ராமரின்} கோபத்தை அறிவேன். காரியத்திற்கான காலம் தாமதமாவதையும் அறிவேன். உங்களால் எங்களுக்கு எது செய்யப்பட்டதோ அந்தக் காரியத்தையும், இப்போது ஆக வேண்டிய காரியத்தையும் அறிவேன்.(53) நரசிரேஷ்டரே, சரீரத்தில் பிறக்கும் பலத்தை {காமத்தின் வலுவை} எப்படி சகித்துக் கொள்ள முடியாது என்பதையும் அறிவேன். எந்த ஜனங்கள் {பெண்கள்} சுக்ரீவருடன் இடையறாமல் இப்போது காமத்தில் கட்டுண்டிருக்கின்றனர் என்பதையும் அறிவேன்.(54) நீர் எப்படி கோபவசமடைந்தீரோ, அப்படி உமது புத்தி காம தந்திரங்களில் நிலைக்கவில்லை. காமத்தில் திளைத்திருக்கும் மனுஷ்யன், தேசம், காலம், அர்த்தம், தர்மம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளமாட்டான்.(55) பரவீரஹந்தரே {பகை வீரர்களை அழிப்பவரே}, காமவிருத்தமடைந்தவரும், என் அருகில் காமவெறியால் லஜ்ஜை இழந்தவரும் {வெட்கத்தைத் துறந்தவரும்}, உம்முடன் பிறந்தவரைப் போன்றவருமான வானர வம்ச நாதரை பொறுத்துக் கொள்வீராக {சுக்ரீவரை மன்னிப்பீராக}.(56) தபங்களிலும், தர்மங்களிலும் திளைத்திருக்கும் மஹரிஷிகளே கூட, காமத்தைக் கோரி, மோகத்தில் கட்டுண்டு {மயங்கிக்} கிடக்கும் நிலையில், இயல்பிலேயே சபலங்கொண்ட கபியான {குரங்கான} இந்த ராஜா {சுக்ரீவர்}, எவ்வாறு சுகத்தில் மூழ்காதிருப்பார்?" {என்றாள் தாரை}.(57)

மதமயக்கம் கொண்ட கண்களுடன் கூடிய அந்த வானரீ {தாரை}, கணிப்புக்கு அப்பாற்பட்ட லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, வேதனையுடனும், பர்த்தாவின் ஹிதம் கருதியும் மஹா அர்த்தம் பொதிந்த சொற்களை மீண்டும் இந்த வாக்கியங்களில் சொன்னாள்:(58) "நரோத்தமரே, சுக்ரீவர் காமத்தில் மூழ்கியிருந்தாலும், உமது அர்த்தத்திற்கான பிரதி சாதனை உத்யோகத்தை {நீங்கள் செய்த காரியத்திற்குக் கைம்மாறு செய்வதற்கான முயற்சிகளை} முன்பே ஆணையிட்டிருக்கிறார்.(59) மஹாவீரர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும்}, பல்வேறு மலைகளில் வசிப்பவர்களும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், கோடிக்கணக்கிலுமான ஹரயர்கள் {குரங்குகள்} வந்துவிட்டனர்.(60) மஹாபாஹுவே, {உள்ளே} வருவீராக. உமது சாரித்ரத்தை ரக்ஷித்துக் கொண்டீர் {உள்ளே வராமல் உமது மரபைக் காத்துக் கொண்டீர்}. நல்லோர் மித்ரபாவத்துடன் {நண்பர்களின்} தாரங்களைப் பார்ப்பதால் நடைநயமற்றுப் போகாது" {என்றாள் தாரை}.(61) அரிந்தமனான அந்த மஹாபாஹு {பகைவரைக் கொல்பவனும், பெருந்தோள்களைக் கொண்டவனுமான லக்ஷ்மணன்} தாரையால் வரவேற்கப்பட்டும், {காரியத்தின்} அவசரத்தால் தூண்டப்பட்டும் உள்ளே {மாளிகைக்குள்} பிரவேசித்தான்.(62) 

அப்போது சுக்ரீவன், பெரும் மதிப்புமிக்க ஆஸ்தரணங்களுடன் {விரிப்புகளுடன் / மெத்தைகளுடன்} கூடிய காஞ்சனப் பரம ஆசனத்தில் {உயர்ந்த பொன்னாசனத்தில்} ஆதித்யனுக்கு ஒப்பான ஒளியுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.{63} திவ்ய ஆபரணங்கள் பூண்ட சித்திர அங்கங்களுடனும், திவ்யரூபத்துடனும் கூடியவனும், புகழ்பெற்றவனும், திவ்ய மாலைகளையும், அம்பரங்களையும் {ஆடைகளையும்} தரித்தவனும், மஹேந்திரனைப் போன்றவனுமான அந்த வெல்லப்பட முடியாதவன் {சுக்ரீவன்},{64} திவ்ய ஆபரணங்களும், மாலைகளும் சூடிய பிரமதைகளால் {பெண்களால்} சூழப்பட்டிருந்ததால், பெருங்கோபத்தில் கண்கள் சிவந்து அந்தகனுக்கு ஒப்பானவனானான் {லக்ஷ்மணன்}.(63-65) ருமையை இறுகத் தழுவியபடியே சிறந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தவனும், சிறந்த ஹேம வர்ணனும் {உயர்ந்த பொன்வண்ணம் கொண்டவனும்}, விசால நேத்திரனுமான அந்த வீரன் {அகன்ற விழிகளும் கொண்டவனான சுக்ரீவன்}, அதீனசத்வனும் {சலியாத தின்மைபெற்றவனும்}, விசாலநேத்திரனுமான சௌமித்ரியைக் கண்டான்.(66)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 33ல் உள்ள சுலோகங்கள்: 66

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை