Wednesday 16 August 2023

ஹனுமானின் மதுரமொழி | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 29 (33)

Sweet words of Hanuman | Kishkindha-Kanda-Sarga-29 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனுக்கு விழிப்புணர்வு உண்டாக்கிய ஹனுமான்; சீதையைத் தேடும் பணியைத் தொடங்குமாறு அறிவுறுத்தியது...

Sugreeva and Hanuman

மின்னல்களும், மேகங்களும் மறைந்து, விமலமாக {களங்கமில்லாமல் தெளிவாக} இருக்கும் வானத்தையும், ஆரவார ஒலி நிறைந்த சாரஸங்களையும், ரம்மியமாகத் தெரியும் ஜ்யோதியையும் {வெளிச்சத்தையும்} கண்டும், {ஹனுமான் கண்டான்}.{1} 

ஏராளமான செல்வத்துடன் கூடிய சுக்ரீவனானவன், தர்மத்தையும், அர்த்தத்தையும் சேர்ப்பதில் மந்தமானவனாகவும், அஸதர்களின் {தீயவர்களின்} மார்க்கத்தில் அதிகம் திளைப்பவனாகவும், ஏகாந்தத்தில் மனம் சென்றவனாகவும்,{2} காரியங்களில் இருந்து விலகியவனாகவும், சதா பிரமதைகளுடன் {பெண்களுடன்} இன்புற்றிருப்பவனாகவும், சர்வ மனோரதங்களும் நிறைவேறிய சித்தார்த்தனாகவும் {காரியம் நிறைவேறியவனாகவும்},{3} அன்புள்ள பத்தினியையும் {ருமையையும்}, பெரிதும்விரும்பிய தாரையையும் அடையப்பெற்றவனாகவும், ராத்திரியும், பகலும் சிற்றின்பத்தில் திளைப்பவனாகவும், ஜுவரம் நீங்கிய கிருதார்த்தனாகவும் {தொல்லைகள் நீங்கி நற்பேற்றை அனுபவிப்பவனாகவும்},{4} கந்தர்வ, அப்சரஸ் கணங்களுடன் கிரீடிக்கும் {விளையாடும்} தேவேசனை {இந்திரனைப்} போல மந்திரிகளிடம் காரியங்களை ஒப்படைத்தவனாகவும், மந்திரிகளைக் கண்ணெடுத்தும் பாராதவனாகவும்,{5} ராஜ்ஜியத்திற்கு ஏற்படும் இடையூறுகளில் சந்தேகம் கொள்ளாதவனாகவும், காமவிருத்தம் அடைந்தவனைப் போல நிலையாகத் தொடர்பவனாகவும் {இருப்பதைக்} கண்டும், {ஹனுமான் கண்டான்}.{6அ} 

அர்த்தத்தில் நிச்சயம் கொண்டவனும் {காரியத்தில் உறுதியுள்ளவனும்}, அர்த்தங்களின் தத்துவத்தையும், கால, தர்ம விசேஷங்களையும் அறிந்தவனும்,{6ஆ} அருளைப்பெறும் ஹிதமான வகையில், மதுரமான {இனிமையான}, ஹேதுவான {பொருத்தமான}, மனோரமை {மனத்திற்கு விருப்பமான} வாக்கியங்களைச் சொல்பவனும், வாக்கியவித்தும் {வாக்கியங்களை அமைப்பதில் வித்தகனும்}, வாக்கியங்களின் தத்துவங்களை அறிந்தவனும், ஹரீசனும் {குரங்குகளின் தலைவனும்}, மாருதாத்மஜனும் {வாயு மைந்தனும்},{7} நடைமுறைக்கேற்றவற்றையும், பத்தியமானவற்றையும் {நன்மை பயக்கும் கட்டுப்பாடுகளையும்} ஹிதமாகவும், சாம, தர்ம, அர்த்த, நீதிகளின் படி, அன்புடனும், பிரீதியுடனும் சொல்பவனும், விசுவாசத்தில் நிச்சயம் கொண்டவனுமான{8} ஹனுமான், ஹரீஷ்வரனின் {சுக்ரீவனின்} அருகில் சென்று {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(1-9அ) 

"இராஜ்ஜியமும், புகழும் அடையப்பட்டன, குலத்தின் செழிப்பும் இவ்வாறு அபிவிருத்தியடைந்திருக்கிறது. மித்ரர்களின் {நண்பர்களின்} நம்பிக்கையை ஈட்டுவதே எஞ்சியிருக்கிறது. அதைச் செய்வதே உமக்குத் தகும்.(9ஆ,10அ) எவன் காலஞானத்துடன் சதா மித்திரர்களிடம் {நண்பர்களிடம் எப்போதும்} நன்றாக நடந்து கொள்கிறானோ, அவனது ராஜ்ஜியமும், கீர்த்தியும், பிரதாபமும் பெருகும்.(10ஆ,11அ) பூமிபா {நிலத்தை ஆள்பவரே}, எவனுடைய கருவூலம், படை, மித்திரர்கள் {நண்பர்கள்}, ஆத்மா {சுயம் / இறையாண்மை} ஆகிய இவை அனைத்தும் சமமாக {முக்கியத்துவத்துடன்} இருக்கின்றனவோ, அவன் மஹத்தான ராஜ்ஜியத்தை அனுபவிப்பான்.(11ஆ,இ) எனவே, விருத்தசம்பன்னரான {நல்ல நடத்தை கொண்டவரான} நீர், ஆபத்தில்லாத {அர்ப்பணிப்பின்} பாதையில் திடமுடன் சரியாக நடந்து கொண்டு, மித்ரர்களின் நிமித்தம் முறையாகச் செயல்படுவதே தகும்.(12) எவன் சர்வகர்மங்களையும் கைவிட்டு, விரைவாகவும், காரியத்தில் உற்சாகத்துடன் மித்திரர்களுக்காக செயல்படுவானோ, அவன் அனர்த்தத்தால் {தீங்குகளால்} தாக்கப்படமாட்டான்.(13) எவன் காலந்தவறி மித்ர காரியங்களைச் செய்வானோ, அவன் மஹத்தான செயல்களைச் செய்தாலும், மித்திரனுக்கான அர்த்தத்தை {காரியத்தைச்} செய்தவனாக மாட்டான்.(14) எனவே, அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, இந்த மித்திர காரியத்திற்கான நமது காலம் கடக்கிறது. வைதேஹியை {சீதையைத்} தேட வேண்டும். இராகவருக்காக {ராமருக்காக} இதைச் செய்ய வேண்டும்.(15) 

இராஜரே, பிராஜ்ஞரும் {அனைத்தையும் அறிந்தவரும்}, காலவித்துமான {காலஞானம் கொண்டவருமான} அவர் {ராமர்}, அவசரத்தில் இருந்தாலும், உமக்கு வசப்பட்டு பின்தொடர்வதால், அதீத காலமாவதை உம்மிடம் சொல்லாதிருக்கிறார்.(16) இராகவர், செழிப்பான உமது குலத்திற்கு ஹேதுவானவராக, உமக்கு தீர்கபந்துவாக {நீண்டகாலக் கூட்டாளியாகக்} கூடியவராக, அளவில்லா பிரபாவம் கொண்டவராக, குணங்களில் ஒப்பற்றவராக இருக்கிறார்.(17) ஹரீஷ்வரரே {குரங்குகளின் தலைவரே}, பூர்வத்தில் அவர் உமது காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார். நீரும் அவருடையதை {அவரது காரியத்தை} செய்வதற்காக ஹரிசிரேஷ்டர்களுக்கு {குரங்குகளில் சிறந்தவர்களுக்கு} ஆணையிடுவதே நிச்சயம் தகும்.(18) தூண்டப்படும் முன்பு காலம் கடந்ததாகக் கொள்ள முடியாது; தூண்டப்பட்டால் காரியம் கால வரையறையைக் கடந்ததாகவே ஆகும்.(19) ஹரீஷ்வரரே, காரியத்தைச் செய்யாதவனுக்கும் செய்பவரான நீர், வதத்திலும், ராஜ்ஜியத்திலும் உமக்காகச் செயல்பட்டவருக்கு பதிலுதவி செய்ய வேண்டும் என்பதை மீண்டும் சொல்லவும் வேண்டுமா?(20) வானரரிக்ஷ கணேஷ்வரரே {வானர, கரடிக் கூட்டங்களின் தலைவரே}, சக்திமானும், விக்ராந்தருமான நீர், தாசரதியின் {தசரதரின் மகனான ராமரின்} பிரீதியைச் செய்வதற்கு ஆணையிடுவதில் ஏன் தாமதிக்கிறீர்?(21) 

தாசரதி, தமது சரங்களால் ஸுராஸுர, மஹா உரகர்களையும் வசத்தில் வைத்துக் கொள்ள விரும்புவதற்கான சக்தி படைத்தவரே. உமது பிரதிஜ்ஞைக்காகவே {உறுதிமொழிக்காகவே} அவர் காத்திருக்கிறார்.(22) பிராண தியாகத்தில் தயக்கமில்லாமல் அவர் மஹத்தான பிரிய காரியத்தைச் செய்திருக்கிறார். அவரது வைதேஹியை, பிருத்வியிலென்றாலும், அம்பரத்தில் {வானத்தில்} என்றாலும் தேடவேண்டும்.(23) தேவர்களால் அவருக்கு பயத்தை உண்டாக்க முடியாது. கந்தர்வர்களாலும் முடியாது; அசுரர்களாலும் முடியாது; மருதகணங்களாலும் முடியாது; யக்ஷர்களாலும் முடியாது எனும்போது ராக்ஷசர்களால் எப்படி முடியும்?(24) எனவே, பிங்கேஷரே {குரங்குகளின் தலைவரே}, எவ்வகை சக்தி யுக்தமானதோ {பொருத்தமானதோ}, அதைக் கொண்டு முன்பே பிரியத்தை {நீர் விரும்பியதைச்} செய்த ராமருக்கு, எல்லாவகையிலும் பிரியத்தைச் செய்வதே உமக்குத் தகும்.(25) கபீஷ்வரரே {குரங்குகளின் தலைவரே}, உமது ஆணையின்படி செல்லும் {வானரர்களான} எங்கள் எவருக்கும், பாதாளத்திலும், பூமியிலும், நீரிலும், மேலுள்ள ஆகாயத்திலும் இடையூறுண்டாகாது.(26) எனவே, அனகரே {தகுதிவாய்ந்தவரே}, எவர், எங்கே, எதைச் செய்ய வேண்டும் என்று ஆணையிடுவீராக. வெல்லப்பட முடியாத ஹரயர்கள் {குரங்குகள்} கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர்" {என்றான் ஹனுமான்}.(27)

அவன் {ஹனுமான்}, உரிய காலத்தில் நன்றாக நிரூபிதம் செய்யும் வகையில் சொன்னவற்றைக் கேட்டவனும், சத்வசம்பன்னனுமான {நல்லறிவுடன் கூடியவனுமான} சுக்ரீவன், உத்தம மதியை அடைந்தான்.(28) அதிமதிமானான அவன் {சுக்ரீவன்}, சர்வ திக்குகளிலும் உள்ள சர்வ சைனியங்களையும் திரட்டுவதற்காக, நித்திய காரியங்களில் ஈடுபடுபவனான நீலனிடம் {பின்வருமாறு} ஆணையிட்டான்:(29) "என் மொத்த சேனையும், எங்குமிருக்கும் யூதபாலர்களும் {சேனைத்தலைவர்களும்} எப்படி தாமதமில்லாமல் சேனையை முன்னிட்டுக் கொண்டு வருவார்களோ அதைச் செய்வாயாக.(30) சேனையின் பரியந்தபாலர்களும் {படையைச் சேர்ந்த எல்லைக் காவலர்களும்},  பிலவகர்களில் {தாவிச் செல்லும் குரங்குகளில்} சீக்கிரமாகச் செல்லும் தைரியசாலிகளும் என் சாசனத்தின்படி {ஆணையின்படி} துரிதமாகவும், சீக்கிரமாகவும் அணிதிரளட்டும். பிறகு சைனியத்தை {திரட்ட வேண்டிய காரியங்களுக்கு} நீயே ஸ்வயமாக பார்த்துக் கொள்வாயாக.(31) எந்த வானரன், திரிபஞ்ச {பதினைந்து} ராத்திரிகளுக்குப் பிறகு இங்கே வருவானோ, அவனுக்கு பிராணாந்திகமே தண்டமாகும் {கொல்லப்படுவதே அவனுக்கான தண்டனையாகும்}. விசாரணைக்கான காரியம் வேறேதும் இல்லை.(32) நீ அங்கதனுடன் சேர்ந்து, என் ஆணையை அதிகாரமாகக் கொண்டு, முதிய ஹரிக்களை {குரங்குகளை} அணுகுவாயாக" {என்றான் சுக்ரீவன்}. வீரியவானான ஹரிபுங்கவேஷ்வரன் {சிறந்த குரங்குகளின் மன்னன் சுக்ரீவன்}, இந்த ஏற்பாட்டைச் செய்துவிட்டு வேஷ்மத்திற்குள் {அரண்மனைக்குள்} பிரவேசித்தான்.(33)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 29ல் உள்ள சுலோகங்கள்: 33

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை