Wednesday 23 August 2023

சரத் ருது | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 30 (85)

Autumn | Kishkindha-Kanda-Sarga-30 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கூதிர் காலத்தால் தீவிரமடைந்த ராமனின் வேதனை; சரத்காலத்தின் அழகு...

Autumn season

ககனத்தில் கணங்கள் {வானம் மேகங்கள்} இல்லாத வேளையில், சுக்ரீவன் குகைக்குள் பிரவேசித்ததும், மழைக்கால ராத்திரிகளை காம சோகத்தால் பீடிக்கப்பட்டவனாகத் திடமாகக் கழித்த ராமன்,{1} களங்கமற்ற சந்திர மண்டலத்துடன் ககனம் {வானம்} வெண்மையாக இருப்பதைக் கண்டும், ஜ்யோதியால் பூசப்பட்ட {வெளிச்சமான} சரத்கால[1] ராத்திரிகளைக் கண்டும்,{2} காமவிருத்தமடைந்த சுக்ரீவனையும், ஜானகியை இழந்துவிட்ட தன்னையும், கடந்து விட்ட அதீத காலத்தையும் கண்டும் பரமஆதுரத்தில் {பெருந்துன்பத்தில்} மூர்ச்சையடைந்தான்.(1-3) மதிமானும், நிருபனுமான {மன்னனுமான} அந்த ராகவன், ஒரு முஹூர்த்தத்தில் நனவு மீண்டு, மனத்தில் வைதேஹியை இருத்திக் கொண்டு சிந்திக்கத் தொடங்கினான்.(4) 

[1] சரத்காலம் என்பது ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கொண்ட பருவகாலமாகும். தமிழில் இதற்குக் கூதிர்காலம் என்று பெயர்.

ஹேம தாதுக்களால் அலங்கரிக்கப்பட்ட பர்வதத்தின் உச்சியில் அமர்ந்திருந்தவன் {ராமன்}, சரத்கால ககனத்தை {வானத்தைக்} கண்டு மனத்தில் தன் பிரியையுடன் திரிந்தான்.(5) மின்னல்களுடன் கூடிய மேகங்கள் மறைந்ததையும், சாரஸங்களின் ஆரவாரப் பேரொலிகளையும், விமலமான வானத்தையும் கண்டு, பெரும் துன்பம் நிறைந்த {பின்வரும்} சொற்களில் புலம்பத் தொடங்கினான்:(6) "சாரஸங்களின் ஆரவார நாதங்கொண்டவளான எந்தச் சிறுமி, ஆசிரமத்தில் என்னுடன் சாரஸங்களின் ஆரவார ஒலிகளைக் கேட்டு மகிழ்ச்சியடைவாளோ, அவள் {சீதை} இப்போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பாள்?(7) புஷ்பித்த காஞ்சனங்களை {தங்கத்தைப்} போன்ற நிர்மலமான ஆசனங்களை {களங்கமற்ற வேங்கை மர மலர்களைக்} கண்டு, என்னைத் தேடியும் காணாதவளான அந்தச் சிறுமி {சீதை} எப்படி மகிழ்ச்சியாக இருப்பாள்?(8) அங்கங்கள் அனைத்திலும் அழகு பொருந்தியவளும், இனிய குரல் படைத்தவளும், பூர்வத்தில் இனிய ஹம்சங்களின் சுவரத்தில் {என்னை} எழுப்புகிறவளுமான என்னவள் இப்போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பாள்?(9) பௌண்டரீக விசாலாக்ஷீயானவள் {வெண்தாமரையைப் போன்ற அகன்ற கண்களைக் கொண்ட சீதை} சகசாரிகளான {ஒன்றாகத் திரியும்} சக்கரவாகங்களின் ஸ்வனத்தைக் கேட்டு எப்படி {உயிருடன்} இருப்பாள்?(10) சரஸ்கள் {குளங்கள்}, சரிதங்கள் {ஆறுகள்}, வாபிகள் {படிக்கிணறுகள்}, கானகங்கள், வனங்கள் ஆகியவற்றில் திரிந்து வரும் இந்த வேளையில் மான்போன்ற கண்களைக் கொண்டவள் {சீதை} இல்லாமல் என்னால் சுகத்தைக் காண இயலவில்லை.(11) சரத்காலத்தின் {கூதிர்காலத்தின்} குணங்களுடனே இடைவிடாமல் இருப்பவனான காமன் {மன்மதன்}, சௌகுமாரியத்தாலும் {மென்மையாலும்}, என் பிரிவாலும் அந்த பாமினியை நெடுந்தூரம் சென்று பீடிப்பானே" {என்றான் ராமன்}.(12)

நரசிரேஷ்டனான நிருபாத்மஜன், திரிதச ஈசுவரனிடம் {மனிதர்களில் சிறந்தவனான தசரத மன்னனின் மகன் ராமன், சொர்க்கத்தின் தலைவனான இந்திரனிடம்} இருந்து {மழை}நீரைப் பெறுவதற்காக {அழும்} சாரங்கப் பறவையைப் போல இப்படியே அழுது புலம்பிக் கொண்டிருந்தான்.(13) அப்போது பழங்களைத் தேடி ரம்மியமான கிரியின் தாழ்வரைகளில் திரிந்துவிட்டுத் திரும்பிவந்த லக்ஷ்மீவானான லக்ஷ்மணன் தன் ஆக்ரஜனை {அண்ணன் ராமனைக்} கண்டான்.(14) மனஸ்வியான {நல்ல மனம் கொண்டவனான} அந்த சௌமித்ரி {சுமித்ரையின் மகன் லக்ஷ்மணன்}, ஜனங்களில்லாத இடத்தில் ஏகனாக {தனியாக} தாங்க முடியாத சோகத்துடன், சுயநினைவின்றி இருப்பவனை கவனித்து, உடன்பிறந்தானின் {அண்ணன் ராமனின்} சோகத்தால் அதிகம் துன்புற்று, துரிதமாக ராமனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(15) "ஆரியரே, காமத்தின் வசமடைவதால் என்ன பிரயோஜனம்? உமது பௌருஷ்யம் {ஆண்மை} ஒழிவதால் ஆவதென்ன? சோகத்துடன் இந்த சமாதியை {நிம்மதியை} விலக்குவதாலும், யோகத்தை {நினைவைத்} தலைகீழாக்குவதாலும் இப்போது ஆவதென்ன?(16) தாதா {ஐயா}, அதீனசத்வரே {சோர்வில்லா ஆற்றல் கொண்டவரே}, காரியத்தில் விடாமுயற்சியுடனும், சிதறாத மனவுறுதியுடனும், சமாதி யோகத்தைப் பின்பற்றியும், காலத்திற்கும், சஹாயர்களின் {உதவி செய்யும் அன்பர்களின்} சாமர்த்தியத்திற்கும் ஹேதுவாகவும், உமது காரியத்திற்கு ஹேதுவாகவும் செயல்படுவீராக.(17) மானவவம்சநாதரே {மனிதகுலத் தலைவரே}, உம்மை நாதராகக் கொண்ட ஜானகியை, வேறு எவராலும் அடையமுடியாது. வீரரே, பெரும் மதிப்புக்குத் தகுந்தவரே, ஜ்வலிக்கும் அக்னியின் நாக்கை {தீப்பிழம்பை} நெருங்கிய எவனும் தகிக்கப்படாமல் இருக்கமாட்டான்" {என்றான் லக்ஷ்மணன்}.(18)

இலக்ஷணம் கொண்டவையும், மறுக்கப்படமுடியாதவையும், ஸ்வபாவத்தில் {இயல்பில்} இருந்து வெளிப்பட்டவையும், ஹிதமானவையும், பத்தியமானவையும் {கட்டுப்பாடுகளுடன் கூடியவையும்}, நயமிக்கவையும், நட்புடன் கூடியவையும், தர்மத்திற்கும், அர்த்தத்திற்கும் {அறம், பொருளுக்கு} இணக்கமானவையுமான சொற்களைக் கேட்டு ராமன் லக்ஷ்மணனிடம் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(19) "குமாரா, காரியமே கவனிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. காரியங்களில் விசேஷமும் பின்பற்றப்பட வேண்டும். அடைதற்கரிய கடுங்காரியத்தை மேற்கொள்ளும்போது அதன் பலனைக் குறித்து சிந்திக்கக்கூடாது" {என்றான் ராமன்}.(20)

பிறகு, பத்ம இதழ் போன்ற கண்களைக் கொண்ட மைதிலியைக் குறித்துச் சிந்தத்த ராமன், மிக உலர்ந்த முகத்துடன் லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(21) "சஹஸ்ராக்ஷன் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன்}, நீரால் வசுந்தரையை குளிரச் செய்து, பயிர்களை வளரச் செய்து, தன் தொழிலைச் செய்து முடித்திருக்கிறான்.(22) நிருபாத்மஜா {ராஜகுமாரா}, தீர்க்க கம்பீர கோஷத்துடன் மலைகளின் மரங்களுக்கு மேலே செல்லும் மேகங்கள் நீரைப் பொழிந்து இளைப்பாறுகின்றன.(23) நீலோத்பல {கருநெய்தல்} இதழ்களைப் போல கறுத்திருக்கும் மேகங்கள், தசதிசைகளையும் {பத்து திக்குகளையும்} கறுக்கச் செய்து, மதமொழிந்த மாதங்கங்களை {யானைகளைப்} போல வேகம் சாந்தமடைந்து கிடக்கின்றன.(24) சௌம்யா {மென்மையானவனே}, ஜலத்தை கர்பத்தில் கொண்டு மஹாவேகத்துடன் வந்தவற்றில் {வந்த மேகங்களில்} இருந்து கீழ்நோக்கிச் சென்று, மலைமல்லி, மருது ஆகியவற்றின் கந்தத்துடன் வீசிய மழைக்காற்றுகள் ஓய்ந்திருக்கின்றன.(25)

அனகா {பாவமற்றவனே}, லக்ஷ்மணா, மேகங்கள், வாரணங்கள் {யானைகள்}, மயூரங்கள் {மயில்கள்}, பிரஸ்ரவணங்கள் {மலையருவிகள்} ஆகியவற்றின் நாதம் ஒரேகாலத்தில் சாந்தமடைந்துவிட்டன.(26) மஹாமேகங்களால் நன்கு பொழியப்பட்டவையும், நிர்மலமானவையும் {களங்கமற்றவையும்}, அழகிய தாழ்வரைகளுடன் கூடியவையுமான கிரிகள் {மலைகள்}, சந்திரக் கதிர்களால் பூசப்பட்டவை போல விளங்குகின்றன.(27) சரத்காலமானது, ஏழிலைப் பாலையின் சாகைகளிலும் {கிளைகளிலும்}, தாரைகள் {நக்ஷத்திரங்கள்}, அர்க்கன் {சூரியன்}, நிசாகரன் {இரவை உண்டாக்கும் சந்திரன்} ஆகியவற்றின் பிரபையிலும் {ஒளியிலும்}, உத்தம வாரணங்களின் லீலைகளிலும் {சிறந்த யானைகளின் விளையாட்டுகளிலும்} இப்போது ஸ்ரீயை {செழிப்பைத்} தோற்றுவிக்கின்றது.(28) இப்போது அனேகமானவற்றால் நாடப்படுபவளும், அழகிய பிரகாசத்துடன் கூடியவளும், சரத்கால குணத்தில் இருந்து வெளிப்பட்டவளுமான லக்ஷ்மியானவள் {செழிப்பானவள்}, சூரியனின் கைகளால் தீண்டப்பட்டு முதலில் மலரும் தாமரைத் தடாகங்களைப் போல அதிகமாக பிரகாசிக்கிறாள்.(29) சத்பாத {வண்டுக்} கூட்டங்களின் கீதத்தை அனுசரித்துச் செல்லும் பவனன் {காற்றானவன்}, ஏழிலைப் பாலை மலர்களின் கந்தத்தைச் சுமந்து சென்று, மத்ததுவீபங்களின் {மதங்கொண்ட யானைகளின்} மதத்தை நீக்காமல் அதிகரிக்கச் செய்கிறான்.(30) 

ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்}, நெருங்கி வருபவையும், அழகிய விசாலமான சிறகுகளைக் கொண்டவையும், பத்ம மகரந்தங்கள் {தாமரை மலர் தாதுக்கள்} நிறைந்த சரஸ்களில் பிரியங்கொண்டவையும், மஹாநதிகளின் மணற்திட்டுகளுக்குத் திரும்பி வந்து சேர்ந்தவையுமான சக்கரவாகங்களுடன் கிரீடிக்கின்றன {விளையாடுகின்றன}.(31) மதத்தால் செருக்குற்ற வாரணங்களிடமும் {யானைகளிடமும்}, கொழுத்திருக்கும் பசுமந்தைகளிடமும், தெளிந்த நீரையுடைய மலையருவிகளிடமும் பலவாறாகத் தன்னைப் பிரித்துக் கொண்டு லக்ஷ்மி {செழிப்பானவள்} பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள்.(32) வனங்களில் மயூரங்கள் {மயில்கள்}, மேகங்கள் இல்லாத நபத்தை {வானத்தைப்} பார்த்து, தோகைகளை ஆபரணங்களாக விரிக்காமல், பிரியமானவர்களிடம் {பேடுகளிடம்} விருப்பமில்லாமல், அழகு குன்றி, உற்சாகம் குறைந்து கவலை கொண்டிருக்கின்றன.(33) மனத்தைக் கவரும் கந்தத்தையும் {மணத்தையும்}, புஷ்பங்களின் அதிபாரத்ததால் நுனிகள் வளைந்த சாகைகளையும் {கிளைகளையும்}, சுவர்ணத்தின் மஞ்சள் நிறத்தையும் கொண்டவையும், நயனங்களுக்கு {கண்களுக்கு} இனிமையைத் தருபவையும், அற்பமல்லாதவையுமான {ஏராளமானவையுமான} பிரியகைகளால் {வேங்கை மரங்களால்} வனாந்தரங்கள் பிரகாசிப்பதைப் போலத் தெரிகின்றன.(34) பிரியத்திற்குரியவையுடன் {பெண் யானைகளுடன்} இருப்பவையும், நளினிகளில் பிரியங்கொண்டவையும் {தாமரை ஓடைகளில் விருப்பமுள்ளவையும்}, மலர்களால் {மலர்களின் மணத்தால்} உற்சாகம் அடைபவையும், பெரும் மதத்தால் செருக்குற்றவையுமான உத்தம கஜங்களின் நடை {சிறந்த யானைகளின் செய்கைகள்} இப்போது கொடியவையாக இருக்கின்றன.(35)

தெளிவான நபம் {மேகங்களில்லாத வானம்}, தீட்டப்பெற்ற சஸ்திரத்தின் {ஆயுதத்தின்} ஒளியுடன் இருக்கிறது. நதிகளில் ஜலங்கள் மெலிந்த பிரவாகத்துடன் இருக்கின்றன. பவனன் {காற்றானவன்}, செந்தாமரையின் குளிர்ச்சியுடன் வீசுகிறான். திசைகள் அனைத்தும் இருள் நீங்கி பிரகாசிக்கின்றன.(36) சூரியனின் வெப்பத் தாக்கத்தால் சேறு உலர்ந்த பூமியானது, நீண்ட காலத்திற்குப் பிறகு கட்டிக்கட்டியான தூளிகளுடன் காட்சியளிக்கிறது. அன்யோன்யம் வைரம் கொண்ட நராதிபர்களுக்கு {ஒருவரோடு ஒருவர் பகையும், பொறாமையும் கொண்ட மன்னர்களுக்கு} போருக்கேற்ற காலமாக இருக்கிறது.(37) சரத்கால குணங்களால் ரூப அழகு அதிகரித்தவையும், மகிழ்ச்சியுடன் கூடியவையும், உடலில் புழுதி படிந்தவையும், மதப் பெருக்குடனும், கோக்களின் {பசுக்களின்} மத்தியில் இருப்பவையுமான விருஷங்கள் {காளைகள்}, போரில் ஆவலுடன் எக்காளமிட்டுக் கொண்டிருக்கின்றன.(38) மன்மதனின் தீவிரத் தாக்குதலுக்கு உட்பட்டவையும், நற்குலத்தில் பிறந்தவையும், மந்த கதியில் செல்பவையுமான கரேணுக்கள் {பெண் யானைகள்}, வனங்களில் மதத்துடன் திரியும் தலைவனை {கணவனை / ஆண் யானையைச்} சூழ்ந்தபடியே பின்தொடர்ந்து செல்கின்றன.(39) மயூரங்கள் {மயில்கள்}, தங்களுக்கு ஆபரணங்களாகத் திகழும் மிகச் சிறந்த தோகைகளை கவனத்தில் கொள்ளாமல், நதிகளின் தீரங்களை அடைந்தும், சாரசப் பறவைகளின் கூட்டங்களால் மிரட்டப்பட்டதைப் போல மனச்சோர்வுடன் திரும்பிச் செல்கின்றன.(40)

மதங்கொண்ட கஜேந்திரங்கள் {யானைகள்} பேரொலியுடன் பிளிறியபடியும் காரண்டவங்களையும் {நீர்க்காக்கைகளையும்}, சக்ரவாகங்களையும் அஞ்சுறுத்தியபடியும், அம்புஜங்களால் {தண்ணீரில் பிறந்த தாமரைகளால்} அலங்கரிக்கப்பட்ட சரஸ்களின் {தடாகங்களின்} ஜலத்தைக் கலக்கிப் பருகுகின்றன.(41) சேறு நீங்கியவையும், மணல் குன்றுகளையும், தெளிந்த நீரையும், பசுமந்தைகளையும் கொண்டவையும், சாரசங்களின் எதிரொலியால் நிறைந்தவையுமான நதிகளில் ஹம்சங்கள் மகிழ்ச்சியுடன் மூழ்குகின்றன.(42) இப்போது, நதிகள், மேகங்கள், பிரஸ்ரவணங்களின் உதகம் {மலையருவிகளின் நீர்}, புயல்காற்று, மயில்கள், உற்சாகம் குன்றிய பிலவங்கமங்கள் {தாவிச் செல்பவையான தவளைகள்} ஆகியவற்றின் ஒலிகள் நன்றாக ஓய்ந்துவிட்டன.(43) மேகங்கள் வெளிப்படும்போது, உடல் மெலிந்தவையும், அனேக வர்ணங்களில் ஆனவையும், பசி மேலிட்டவையும், கோரவிஷங்கொண்டவையும், வெகுகாலம் மறைந்து கிடந்தவையுமான சர்ப்பங்கள் {பாம்புகள்} பிலங்களில் {புற்றுகளில்} இருந்து வெளியே வந்து திரிகின்றன.(44) ஒளிரும் சந்திரக் கதிர்களின் தீண்டலால் மகிழ்ச்சியடைந்தவையும், நிர்மலமானவையுமான தாரகைகள் {நக்ஷத்திரங்கள்}, அஹோ, சந்திப்பொழுதின் ராகவதீயை {காதலுடன் கூடிய பெண்ணைப்} போலத் தானே அம்பரத்தில் {வானத்தில்} வெளிப்படுகின்றன.(45)

உதிக்கும் சசாங்கனின் {சந்திரனின்} சௌம்யமான {மென்மையான} முகத்துடனும், தாராகணங்கள் {நட்சத்திரக்கூட்டங்கள்} அழகிய நேத்திரங்களுடனும், ஜோதியெனும் {வெளிச்சமெனும்} திரையால் நன்றாகப் போர்த்தப்பட்ட ராத்திரியானவள், வெண்மையான துணியால் முழுமையாக போர்த்தப்பட்ட அங்கங்களுடன் கூடிய நாரீயை {பெண்ணைப்} போலப் பிரகாசிக்கிறாள்.(46) பக்குவமான {முற்றிய} செந்நெற்கதிர்களை பக்ஷித்து {உண்டு}, மகிழ்ச்சியடையும் அழகிய சாரசங்களின் {சாரசப்பறவைகளின்} வரிசையானது, வேகத்துடன் சீக்கிரமாகச் சென்று, வாதத்தினால் {காற்றினால்} கலைக்கப்படும் தொடுக்கப்பட்ட மாலையைப் போல நபத்தில் {வானத்தில்} செல்கிறது.(47) உறங்கும் ஹம்சம் {அன்னப்பறவை} ஒன்றுடன் கூடியதும், குமுதங்களால் {வெண்தாமரைகளால்} நிறையப்பெற்றதுமான மஹாஹிரதத்தின் {பெரும் மடுவின்} நீரானது, நிசியில் {இரவில்}, மேகங்கள் இல்லாததும் தாரா கணங்களால் நிறைந்ததும், பூர்ணச் சந்திரனுடன் கூடியதுமான அந்தரிக்ஷத்தை {வானத்தைப்} போலத் தெரிகிறது.(48) கலைந்து செல்லும் ஹம்சங்களையே மேகலைகளாக அணிந்தவையும், மலர்ந்த பத்மங்களையும் {தாமரைகளையும்}, உத்பலங்களையும் {நெய்தல்களையும்} மாலைகளாகக் கொண்டவையுமான உத்தமவாபிகள் {நல்ல படிக் கிணறுகள்}, இப்போது நன்றாக அலங்கரிக்கப்பட்ட வராங்கனையை {அழகிய பெண்ணைப்} போல அதிகப் பிரகாசத்துடன் தெரிகிறது.(49) வேணு சுவரமானது {புல்லாங்குழலின் இசையானது}, தூரியத் தொனியுடன் கலந்து, அனிலனால் {காற்றால்} தூண்டப்பட்டு, விருத்தியடைந்து, நன்கு பரவும் சப்தமாகி, விடியும் காலத்தில் கோக்களும் {பசுக்களும்}, விருஷங்களும் {காளைகளும்} குகைகளில் அன்யோன்யம் {ஒன்றோடொன்று} ஊடுபரவியிருக்கையில் உண்டாவதைப் போலிருக்கிறது.(50)

மலர்களையே புன்னகையாகக் கொண்ட நதிக்கரைகள், மிருதுவான மாருதத்தால் {இளங்காற்றினால்} அசைக்கப்பட்டு, நன்கு வெளுத்து, சுத்தமான வெண்பட்டாடைகளைப் போன்ற புதிய நாணல்களால் அழகுவாய்ந்து விளங்குகின்றன.(51) வனங்களில் மதுபானத்தால் {தேன்குடித்து} மெய்மறந்து, களிப்படைந்து, மதத்துடன் தன்னிச்சையாகத் திரியும் சத்சரணங்கள் {ஆறு கால் வண்டுகள்}, பத்மாஸனங்களின் மஞ்சள் மகரந்தங்களில் {ஆசனமான தாமரைகளின் மகரந்தங்களில்} பிரியைகளுடன் {பெண் வண்டுகளுடன்} சேர்ந்து பவனனை {காற்றைப்} பின்தொடர்ந்து செல்கின்றன.(52) மலர்ந்த மலரும், கிரௌஞ்சங்களின் ஒலியும், தெளிந்த நீரும், பக்குவமான {முற்றி விளைந்த} நெற்பயிரும், மிருதுவான வாயுவும் {காற்றும்}, விமலமான {களங்கமற்ற} சந்திரனும் மழை ஓயும் காலத்தையே குறிப்பிடுகின்றன.(53) இப்போது மீன்களெனும் மேகலைகளை அணிந்த நதிவதுக்கள் {நதிகளெனும் பெண்கள்}, விடியற்காலையில் காதலனுடன் காதலில் ஈடுபடுகையில் சோம்பலுடன் நடக்கும் காமினிகளைப் போல மந்தகதியில் நடக்கின்றன {பாய்கின்றன}.(54) சக்கிரவாகங்களுடன் கூடியவையும், பாசி படர்ந்திருப்பவையும், வெண்பட்டைப் போலிருப்பவையுமான நாணல்களால் சூழப்பட்ட நதிமுகங்கள், பத்திர ரேகையுடன் {இலைகளிலுள்ள வரிகளைப் போல} கோரோசனை பூசப்பட்ட {செந்தூரம் / மருதாணி பூசப்பட்ட} வதுக்களின்முகங்களை {பெண்களின் முகங்களைப்} போலிருக்கின்றன.(55)

மலர்ந்த பாணம் {குறிஞ்சி}, அசனம் {வேங்கை} ஆகியவற்றால் அழகுற்று விளங்குபவையும், மகிழ்ச்சியுடன் கூடிய சத்பாதங்களின் {ஆறுகால் வண்டுகளின்} ரீங்காரங்களைக் கொண்டவையுமான வனங்களில் இப்போது கையில் பிடித்த வில்லை உயர்த்தி கொடிய தண்டம் {தண்டனை} விதிக்கும் காமன் {மன்மதன்} வலுவுடன் திரிகிறான்.(56) மேகங்கள், நல்ல மழையால் உலகத்தை மகிழ்ச்சியடையச் செய்து, நதிகளையும், தடாகங்களையும் {நீரால்} நிரப்பி, வசுதையில் அறுவடைக்கு ஏற்பாடு செய்து, நபத்தை {வானத்தைக்} கைவிட்டு மறைந்துவிட்டன.(57) நவசங்கமத்தில் {புதிதாகக் கூடுகையில் வெளிப்படும்} கூச்சமுள்ள யோசிதைகளின் {இளம்பெண்களின்} இடைகளைப் போல சரத்கால நதிகள் மெதுமெதுவாகத் தங்கள் மணற்கரைகளை வெளிப்படுத்துகின்றன.(58) சௌம்யா {மென்மையானவனே}, தெளிந்த நீரைக் கொண்டவையும், குரரங்களால் நாதிக்கப்பெற்றவையும் {அன்றில்களால் ஒலிக்கப்பெற்றவையும்}, சக்கிரவாக கணங்களால் {கூட்டங்களால்} நிறையப் பெற்றவையுமாக நீர்நிலைகள் விளங்குகின்றன.(59) நிருபாத்மஜா, சௌம்யா, அன்யோன்யம் வைரத்தால் {பகையால்} கட்டப்பட்டவர்களும், வெற்றியை விரும்புகிறவர்களுமான பார்த்திபர்களின் உத்யோகத்திற்கான சமயம் {மன்னர்களின் தொழிலான போரைச் செய்வதற்கு உரிய காலம்} இதோ வாய்த்திருக்கிறது.(60)

நிருபாத்மஜா, இது பார்த்திபர்களின் பிரதம யாத்திரைக்கான சமயமாகும். சுக்ரீவனையோ, அந்தவித உத்யோகத்தையோ {போர்முயற்சியையோ} என்னால் பார்க்க முடியவில்லை.(61) கிரியின் அடிவாரங்களில் அசனம் {வேங்கை}, சப்தபர்ணம் {ஏழிலைப்பாலை}, கோவிதாரம் {கருங்காலி}, பந்துஜீவம் {உச்சித்திலகம்}, சியாமம் {ஞாழல்} ஆகிய மரங்கள் நன்கு புஷ்பித்தவையாகக் காணப்படுகின்றன.(62) இலக்ஷ்மணா, நதிகளின் மணற்குன்றுகளில் ஹம்ஸம், ஸாரஸம், சக்கிரவாகம், குரரம்  {அன்றில்} ஆகியன எங்கும் நிறைந்திருப்பதைப் பார்.(63) சீதையைப் பார்க்காமல் சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் எனக்கு வார்ஷிகமான சத்வார மாஸங்களும் {மழைக்காலமான நான்கு மாதங்களும்} நூறுவருஷங்களைப் போலக் கடந்தன[2].(64) உத்யானவனத்தில் சக்கிரவாகப் பறவையைப் போல {சேவலைப் பின்தொடர்ந்து வரும் சக்கிரவாகப் பேட்டைப் போல} அந்த அங்கனை {அழகிய பெண்}, பர்த்தாவான என்னை விஷமவனமான தண்டகாரண்யத்தில் பின்தொடர்ந்து வந்தாள்.(65)

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சுக்ரீவனின் பட்டாபிஷேகத்தில் இருந்து நான்கு மாத காலம் கடந்துவிட்டதால் இது கார்த்திகை மாத முடிவாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.

இலக்ஷ்மணா, பிரியை {காதலியான சீதை} இல்லாமல் துக்கத்தில் அவதிப்படுபவனும், ராஜ்ஜியம் அபகரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டவனுமான எனக்கு ராஜா சுக்ரீவன் கிருபை செய்யவில்லை.(66) "இவன் அநாதை {நாதனற்றவன்}; ராஜ்ஜியம் அபகரிக்கப்பட்டவன்; ராவணனால் தாக்கப்பட்டவன்; தீனன்; தூர கிருஹத்தில் இருந்து வந்தவன்; காமி {காமத்தால் பீடிக்கப்பட்டவன்}; என்னைச் சரணமடைந்தவன்",(67) என்றும், சௌம்யா, பரந்தபா, இது போன்ற காரணங்களாலும் துராத்மாவான வானரராஜா சுக்ரீவனால் நான் அலட்சியம் செய்யப்படுகிறேன்.(68) துர்மதியாளனான அவன் {சுக்ரீவன்}, வேண்டியதை அடைந்துவிட்டு, சீதையைத் தேடும் மார்க்கத்தில் காலத்தையும் தீர்மானித்து, ஏற்ற சமயத்தையும் உறுதி செய்துவிட்டு அதை உணராமல் இருக்கிறான்.(69) 

நீயே கிஷ்கிந்தையில் பிரவேசித்து, வானரபுங்கவனும், மூர்க்கனும், அற்ப சுகத்தில் மூழ்கிக் கிடப்பவனுமான சுக்ரீவனிடம் {பின்வரும்} என் சொற்களைச் சொல்வாயாக:(70) "எவன் பூர்வத்தில் உபகாரம் செய்தவர்களும், கைம்மாறு வேண்டுகிறவர்களுமான உரியவர்களுக்கு ஏற்றதை வாக்களித்துவிட்டு அதைச் செய்யாமல் இருக்கிறானோ, அவனே உலகில் புருஷாதமனாவான் {மானிடப் பதராவான்}.(71) எவன், வாக்களிக்கப்பட்டது சுபமாக இருந்தாலும், பாபமாகவே இருந்தாலும் சத்தியத்திற்கு இணக்கமாக முழுமையாக அதைச் செய்து முடிப்பானோ, அந்த வீரனே புருஷோத்தமனாவான்[3].(72) எவர்கள் வேண்டியதை அடைந்தும், செய்ய வேண்டியதைச் செய்வதில் மித்ரர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கிறார்களோ, அவர்கள் மரித்துப் போனாலும் ஊனுண்ணிகளும் அவர்களை உண்ணாது.(73) காஞ்சனத்தாலான {பொன்னாலான} பின்புறத்தைக் கொண்டதும், போரில் என்னால் முழுமையாக வளைக்கப்படுவதுமான வில்லின் மின்னற்கணங்களுக்கு ஒப்பான ரூபத்தை நிச்சயம் நீ காண விரும்புகிறாய் போலும்.(74) போரில் குரோதத்துடன் கூடியவனான எனக்குரியதும், வஜ்ரத்தின் கோஷத்திற்கு நிகரானதும், கோரமானதுமான நாணொலியின் கோஷத்தை மீண்டும் நன்றாகக் கேட்க விரும்புகிறாய் போலும்" {என்று சுக்ரீவனிடம் சொல்வாயாக}.(75)

[3] எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 

- திருக்குறள் / அறத்துப்பால் / இல்லறவியல் / செய்ந்நன்றி அறிதல் / 110

பொருள்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை. - மு. வரதராசன்

நிருபாத்மஜா {ராஜகுமாரா}, வீரா, அவன் என் பராக்கிரமத்தையும், உன்னை சகாயனாகக் கொண்டிருப்பதையும் அறிந்தும் கவலையின்றி காமத்தில் மூழ்கிக் கிடக்கிறான்.(76) பகை நகரங்களை வெல்பவனே, எந்த அர்த்தத்திற்காக {எதன்காரணமாக} இஃது ஆரம்பிக்கப்பட்டதோ {வாலி வதம் செய்யப்பட்டதோ} அந்த சமயத்தை காரியம் கைக்கூடப்பெற்ற பிலவகேஷ்வரன் {குரங்குகளின் மன்னன் சுக்ரீவன்} மறந்துவிட்டான்.(77) மழைக்காலம் கழிந்த அடுத்த காலத்தைப் பிரதிஜ்ஞை செய்துவிட்டு, புரண்டு கொண்டிருக்கும் ஹரீஷ்வரன் {குரங்குமன்னன்}, நான்கு மாதங்களும் கழிந்துவிட்டத்தை நினையாதிருக்கிறான்.(78) அமைச்சர்களுடன் கூடிய சுக்ரீவன் கிரீடையிலும் {விளையாட்டிலும்}, குடியிலும் மூழ்கி காலத்தைக் கடத்துகிறான். சோகத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் நமக்கு உரிய காரியத்தைச் செய்யாதிருக்கிறான்.(79) மஹாபலவானே, வீரா, நீ போய்வா. உன் மூலம் சுக்ரீவன் என் கோபத்தின் ஸ்வரூபத்தை அறியட்டும். அவனிடம் {பின்வரும்} சொற்களையும் நீ சொல்வாயாக"{என்று லக்ஷ்மணனிடம் சொல்லிவிட்டு},(80)

{சுக்ரீவனிடம் தான் சொன்னதாகச் சொல்லும்படி, பின்வருமாறு}, "சுக்ரீவா, வாக்கில் உறுதியாக நிற்பாயாக. வாலி கொல்லப்பட்டு எந்த கதியை அடைந்தானோ, அந்த வழி இன்னும் அடைக்கப்பட்டுவிடவில்லை. வாலியின் வழியில் பின்தொடர்ந்து செல்லாதே.(81) போரில் என் சரத்தால் வாலி மட்டுமே கொல்லப்பட்டான். சத்தியத்தை மீறும் உன்னையோ பந்துக்களுடன் {சுற்றத்தாருடன்} சேர்த்துக் கொல்லப் போகிறேன்" {என்றும் சுக்ரீவனிடம் சொல்வாயாக, என்று சொல்லிவிட்டு},(82) 

{மீண்டும் லக்ஷ்மணனிடம்}, "எனவே, புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, நர சிரேஷ்டா {மனதர்களில் சிறந்தவனே}, காரியம் இப்படி இருக்கையில், ஏதேது ஹிதமோ அதனதனை அவ்வாறே சொல்லித் துரிதப்படுத்துவாயாக. காலம் ஏற்கனவே வீணாகிவிட்டது" {என்று லக்ஷ்மணனிடம் சொல்லிவிட்டு},(83) {மீண்டும் சுக்ரீவனிடம்}, "வானரசிரேஷ்டா, சாசுவதமான தர்மத்தை உணர்ந்து, எனக்கு வாக்களிக்கப்பட்டதை சத்தியமாக்கினால், இப்போது என் சரங்களால் கொல்லப்பட்டு, பிரேதகதியடைந்து, யமனின் வீட்டில் உள்ள வாலியை நீ பார்க்காமல் இருக்கலாம்" {என்று சுக்ரீவனிடம் நான் சொன்னதாகச் சொல்வாயாக" என லக்ஷ்மணனிடம் சொன்னான் ராமன்}.(84) 

மானவவம்சத்தை வளர்ச்சி அடையச் செய்பவனும், உக்கிர தேஜஸ் கொண்டவனுமான அவன் {லக்ஷ்மணன்}, தீவிர கோபத்தை அடைந்து, உள்ளம் உருகி புலம்பிக் கொண்டிருக்கும் பூர்வஜனை {அண்ணனைக்} கண்டு, ஹரீஷ்வரனை {குரங்குகள் மன்னனான சுக்ரீவனை} நோக்கித் தீவிர மதியைச் செலுத்தினான்.(85)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 30ல் உள்ள சுலோகங்கள்: 85

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை