Tuesday 21 March 2023

திரிசிர வதம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 27 (20)

Trishira killed | Aranya-Kanda-Sarga-27 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: திரிசிரனுடன் போரிட்ட ராமன்; திரிசிரனின் மரணம்...

Rama slays the demon Trishiras

திரிசிரஸ் என்ற பெயரைக் கொண்டவனும், வாஹினிபதியுமான {படைத்தலைவனுமான} ராக்ஷசன், இராமனை நோக்கிச் செல்லும் கரனுக்குக் குறுக்கில் வந்து இதைச் சொன்னான்:(1) "விக்ராந்தரே {வெற்றியாளரே}, சாஹஸத்தைவிட்டு {இந்தத் துணிச்சலை விட்டு} விலகுவீராக. இப்பணியில் என்னை ஈடுபடுத்துவீராக. மஹாபாஹுவான ராமன் போரில் வீழ்வதைப் பார்ப்பீராக.(2) நான் உமக்கு சத்தியப்ரதிஜ்ஞை செய்கிறேன். சர்வ ராக்ஷசர்களின் நிமித்தம் {அல்லது ராக்ஷசர்கள் அனைவராலும்} வதம் செய்யப்படத் தகுந்தவனான ராமனை வதம் செய்யும் விருப்பத்துடன் ஆயுதத்தைத் தீண்டுகிறேன்.(3) இரண உற்சாகத்தில் {போரிடும் ஆவலில்} இருந்து விலகுவீராக. போரில் நான் அவனுக்கு மிருத்யு ஆவதையோ, சமரில் அவன் எனக்கு அவ்வாறு ஆவதையோ ஒரு முஹூர்த்த காலம் {ஒரு கணம்} சாட்சியாக {நடுவராகக்}  காண்பீராக.(4) இராமன் கொல்லப்பட்டால் பெரும்மகிழ்ச்சியுடன் ஜனஸ்தானத்திற்குத் திரும்புவீராக. ஒருவேளை நான் கொல்லப்பட்டால், ராமனுடன் போரிட நீர் முயல்வீராக" என்றான் {திரிசிரன்}.(5)

மிருத்யு லோபத்தால் {மரணத்தை அடையும் ஆவலுடன் கூடிய} அந்த திரிசிரஸ், கரனை சமாதானம் செய்துவிட்டு, "யுத்தமிடச் செல்" என்று இவ்வாறு அனுமதியைப் பெற்றுக் கொண்டு ராகவனை எதிர்த்துச் சென்றான்.(6) ஆடம்பர ரதத்தில் குதிரைகளைப் பூட்டிக் கொண்ட திரிசிரஸ், திரிசிருங்க பர்வதம் போல {மூன்று சிகரங்களைக் கொண்ட மலையைப் போல} போரில் ராமனிடம் விரைந்து சென்றான்.(7) மஹாமேகத்தைப் போன்றவனான அவன், சரத்தாரைகளின் கூட்டத்தை {திரளான அம்புகளின் ஓடையை} ஏவி, ஜலத்தில் நனைந்து ஈரமான துந்துபியைப் போன்ற ஒலியை எழுப்பினான் {முழக்கமிட்டான்}.(8) 

இராக்ஷசன் திரிசிரஸ் வருவதைக் கண்ட ராகவன், கூரிய சாயகங்களை {அம்புகளை} ஏவி தனுசால் அவனை வரவேற்றான்.(9) அதிபலவான்களான ராமனுக்கும், திரிசிரஸுக்கும் இடையில் மூண்ட அந்த யுத்தம், சிங்கத்திற்கும், யானைக்கும் இடையில் நடப்பதைப் போன்று ஆரவாரமிக்கதாக இருந்தது.(10) பின்னர், திரிசிரஸ், மூன்று பாணங்களை ஏவி நெற்றியில் தாக்கியபோது, பொறுத்துக் கொள்ள முடியாமல் சினங்கொண்ட ராமன் உக்கிரமாக இதைச் சொன்னான்:(11) "அஹோ விக்ரம சூரா, புஷ்பங்களைப் போன்ற சரங்களால் நெற்றியில் நான் தாக்கப்பட்டேன். ராக்ஷச பலம் இதுதானா?(12) என் வில்லின் நாண்கயிற்றில் இருந்து பாயும் சரங்களை இனி நீ ஏற்றுக் கொள்வாயாக" என்று சொன்னான்.

பிறகு அவன் {ராமன்}, அளவு கடந்த குரோதத்துடன், விஷங்கொண்ட பாம்புகளுக்கு ஒப்பான பதினான்கு சரங்களால் திரிசிரஸின் மார்பைத் தாக்கினான்.(13,14அ) அந்த தேஜஸ்வி {வலிமைமிக்கவனான ராமன்}, கொக்கி போன்று வளைந்த முனைகளுடன் கூடியதும், நேராகச் செல்லக்கூடியதுமான நான்கு சரங்களால், வேகமாகச் செல்லக்கூடிய அவனது {திரிசிரனின்} நான்கு குதிரைகளை வீழ்த்தினான்.(14ஆ,15அ) பிறகு எட்டு சாயகங்களால் ரதத்தின் இருக்கையில் {தேர்த்தட்டில்} இருந்து சூதனை வீழ்த்திய ராமன், ஒரு பாணத்தால் அவனது {திரிசிரனின்} உயர்ந்த துவஜத்தை வெட்டித் தள்ளினான்[1].(15ஆ,16அ)

[1] தேர் அழிந்து அவ்வழி திரிசிரா எனும்
பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன்
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழிக்
கார் இழிந்தாலென கணை வழங்கினான்.

- கம்பராமாயணம் 3005ம் பாடல், கரன் வதைப்படலம்

பொருள்: அங்கே தன் தேர் அழிந்து திரிசிரஸ் என்ற தன் பெயர் அழிந்ததெனினும் வீரம் நீங்காமல், ஆகாயத்திலிருந்து மேகங்கள் பொழிவதைப் போல, நீளம் குறைந்த அம்புகளை வெளியிடும் வில்லிலிருந்து  கணை மழையைப் பொழிந்தான்.

நொறுங்கிய ரதத்தில் இருந்து அந்த நிசாசரன் {இரவுலாவியான திரிசிரஸ்} எழுந்தபோது, பாணங்களைச் செலுத்தி ஹிருதயத்தைப் பிளந்து அவனை அசைவற்றவனாக்கினான்.(16ஆ,17அ) மதிப்பிட முடியாத ஆத்மாவைக் கொண்டவனும், எரிச்சலடைந்தவனுமான அவன் {ராமன்}, வேகமாகச் செல்லக்கூடிய கூரிய சாயகங்கள் மூன்றினால் அந்த ராக்ஷசனின் மூன்று சிரங்களையும் {தலைகளையும்} வீழ்த்தினான்.(17ஆ,18அ) இராமபாணத்தால் பீடிக்கப்பட்ட அந்த நிசாசரன் {திரிசிரஸ்}, புகையும், ரத்தமும் கக்கியபடியே ஏற்கனவே விழுந்த சிரங்களுடன் சேர்ந்து விழுந்தான்[2].(18ஆ,19அ)

[2] கம்பராமாயணத்தில் முதலில் இந்த திரிசிரஸே  வீழ்கிறான். பிறகுதான் தூஷணன் வீழ்வதாக வருகிறது.

அப்போது கரனிடம் தஞ்சமடைந்து கொல்லப்பட்டவர்களைத் தவிர எஞ்சிய ராக்ஷசர்கள், வியாகரத்திற்கு அஞ்சும் மிருகங்களை {புலிக்குப் பயந்தோடும் மான்களைப்} போல நிற்காமல் ஓடினர்.(19ஆ,20அ) இவ்வாறு ஓடுபவர்களைக் கண்டு கோபமடைந்த கரன், துரிதமாக அவர்களைத் திருப்பி அழைத்துக் கொண்டு, சந்திரனை நோக்கிச் செல்லும் ராஹுவைப் போல ராமனை எதிர்த்துச் சென்றான்.(20ஆ,இ)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 27ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை