Monday 20 March 2023

தூஷண வதம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 26 (38)

Dushana killed | Aranya-Kanda-Sarga-26 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுடன் உண்டான கடும்போரில் தூஷணனும், அவனது படைத்தலைவர்களும் கொல்லப்பட்டது; அழிவை அடைந்த ராக்ஷசப் படை...

Rama fights with Khara and Dushana

மஹாபாஹுவான {பெருங்கைகளைக் கொண்ட} தூஷணன், தன் சைனியம் கொல்லப்படுவதைக் கண்டு, பீமவேகம் {பயங்கர வேகம்} கொண்டவர்களும், நிசாசரர்களும் {இரவுலாவிகளும்}, சமரில் பின்வாங்காதவர்களுமான ஐயாயிரம் ராக்ஷசர்களை ஏவினான்.(1,2அ) அவர்கள், சூலங்கள், பட்டிசங்கள், கட்கங்கள் ஆகியவற்றையும், சிலாவர்ஷத்தையும் {பாறை மழையையும்}, மரங்கள் மற்றும் சரவர்ஷத்தையும் {மர, சரமாரியையும்} இடையறாமல் பொழிந்து அவனை {ராமனை} முழுமையாக மறைத்தனர்.(2ஆ,3அ) 

தர்மாத்மாவான ராகவன், பிராணனைப் பறிக்க வல்லவையும், மஹத்தானவையுமான அந்த மரமாரியையும், சிலாமாரியையும் நெருப்பு போன்ற சாயகங்களால் {மரத்தாலான மழையையும், பாறைகளாலான மழையையும் கூர்மையான அம்புகளால்} எதிர்கொண்டான்.(3ஆ,4அ) இராமன், மழையில் கண்களை மூடிக் கொள்ளும் ரிஷபத்தை {காளையைப்} போல {பொறுமையாக தாக்குதல்களைப் பொறுத்துக் கொண்டு} அந்த ராக்ஷசர்கள் அனைவரின் வதத்திற்காக பரம குரோதமடைந்தான்.(4ஆ,5அ) தேஜஸ்ஸில் எரிவதைப் போன்ற குரோதத்துடன் நீடித்தவன் {ராமன்}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தூஷணன் மீதும், அவனது சைனியத்தின் மீதும் சரங்களை ஏவினான்.(5ஆ,6அ)

சேனாதிபதியும், சத்ருதூஷணனுமான {பகைவரை நிந்திப்பவனுமான} அந்த தூஷணன், குரோதத்துடன் இடிக்கு ஒப்பான சரங்களால் அப்போது அந்த ராகவனைத் தாக்கினான்.(6ஆ,7அ) சமரில் வீரனான ராமன், ஒரு க்ஷுரேணத்தால் {அம்பால்} அவனது மஹத்தான தனுவையும், நான்கால் {நான்கு அம்புகளால்} நான்கு அசுவங்களையும் {குதிரைகளையும்} குரோதத்துடன் வெட்டி வீழ்த்தினான்.(7ஆ,8அ) கூரிய சரங்களால் அந்த அசுவங்களைக் கொன்றபிறகு, அர்த்தசந்திர பாணத்தால் சாரதியின் சிரத்தை வாங்கி, மூன்றால் அந்த ராக்ஷசனின் {தூஷணனின்} மார்பையும் தாக்கினான்.(8ஆ,9அ) 

தனு முறிந்து, ரதம் ஒழிந்து, அசுவம் கொல்லப்பட்டு, சாரதியும் கொல்லப்பட்டவன் {தூஷணன்}, கிரி சிருங்கத்திற்கு {மலைச்சிகரத்திற்கு} நிகரானதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தவல்லதும், காஞ்சனப் பட்டைகளால் {பொன்கட்டுகளால்} கட்டப்பட்டதும், தேவ சைனியத்தையே தாக்கவல்லதும், கூரான இரும்பு ஆணிகளால் மறைக்கப்பட்டதும், பகைவரின் கொழுப்பில் தோய்ந்ததும், வஜ்ரத்தையும், இடியையும் நிகர்த்த ஸ்பரிசங் கொண்டதும், அந்நியர்களின் கோபுரங்களைப் பிளக்கவல்லதுமான பரிகம் ஒன்றை எடுத்தான்.(9ஆ-11) குரூர கர்மம் செய்பவனும் {கொடுஞ்செயல் புரிபவனும்}, நிசாசரனுமான {இரவுலாவியுமான} அந்த தூஷணன், போரில் மஹா உரகத்திற்கு {பாம்புக்கு} ஒப்பான அந்த பரிகத்தை எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி விரைந்து சென்றான்.(12)

அந்த ராகவன், தன்னை நோக்கிவந்து கொண்டிருந்தவனும், தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான அந்த தூஷணனின் கைகளை இரண்டு சரங்களால் வெட்டினான்.(13) போர்முனையில் கைகள் வெட்டப்பட்ட அவனது பேருடலில் இருந்து, சக்ரத்வஜம் போல {இந்திரனின் கொடியைப் போல} அந்தப் பரிகம் நழுவி முன்னே விழுந்தது.(14) கைகள் வெட்டப்பட்ட தூஷணன், தந்தங்கள் முறிக்கப்பட்ட செருக்கு நிறைந்த மஹாகஜத்தைப் போலப் புவியில் விழுந்தான்.(15) போரில் வீழ்த்தப்பட்டு பூமியில் விழுந்த தூஷணனைக் கண்ட சர்வ பூதங்களும் {அனைத்து உயிரினங்களும்}, "சாது, சாது இதி {நல்லது, இது நல்லது}" என்று சொல்லி அந்தக் காகுத்ஸ்தனை {ராமனைப்} பூஜித்தன[1].(16)

[1] தேவர்கள் அர்த்து எழ முனிவர்கள் திசைதொறும் சிலம்பும்
ஓவு இல் வாழ்த்து ஒலி கார்க்கடல் முழக்கு என ஓங்க
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று
ஏவினான் அவன் எயிறுடை நெடுந்தலை இழந்தான்.

- கம்பராமாயணம் 3035ம் பாடல், கரன் வதைப் படலம்

பொருள்: தேவர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ய, திசையெங்கும் முனிவர்கள் ஆரவாரம் செய்ய, ஒழிவில்லாத வாழ்த்துகளின் ஒலி கரிய கடலின் முழக்கம் போல் ஓங்க, "நீ வல்லமையுள்ளவனென்றால் இதைத் தடுத்து உன்னைக் காத்துக் கொள்" என்று சொல்லி, கணை ஒன்றை ஏவினான் {இராமன்}. அவன் {தூஷணன்}, கோர தந்தங்களைக் கொண்ட தன் பெரிய தலையை இழந்தான்.

இதற்கிடையில், குரோதம் நிறைந்தவர்களும், சேனைத் தலைவர்களுமான மஹாகபாலன், ஸ்தூலாக்ஷன், மஹாபலனான பிரமாதி ஆகிய மூவரும், மிருத்யு பாசத்தால் {யமனின் சுருக்குக்கயிற்றால்} கட்டப்பட்டவர்களாக ஒன்றாகச் சேர்ந்து ராமனை நோக்கி விரைந்தனர்.(17,18அ) மஹாகபாலன் நீளமான சூலத்தை உயர்த்திக் கொண்டும், ராக்ஷசன் ஸ்தூலாக்ஷன் பட்டிசத்தை {பட்டாக்கத்தியை} எடுத்துக் கொண்டும், பிரமாதி பரசுடனும் {கோடரியுடனும்} விரைந்தனர்.(18ஆ,19அ) எதிர்த்து வரும் அவர்கள் தன்னை நெருங்கி விட்டதைக் கண்ட ராமன், அகாலத்தில் வந்த அதிதிகளை {விருந்தினர்களைப்} போல அவர்களை கூர்த்தீட்டப்பட்ட முனைகளுடன் கூடிய சாயகங்களால் {பாணங்களால்} வரவேற்றான்.(19ஆ,20அ) 

அந்த ரகுநந்தனன் {ராமன்}, மஹாகபாலனின் சிரத்தை {தலையை} வெட்டித் தள்ளிவிட்டு, இன்னும் கணக்கற்ற சரங்களால் பிரமாதியை நிர்மூலமாக்கினான்.{20ஆ,21அ} ஸ்தூலாக்ஷனின் தடித்த கண்களைக் கூரிய சாயகங்களால் {அம்புகளால்} நிரப்பினான். க்ஷணப் பொழுதில் கொல்லப்பட்ட அவன் {ஸ்தூலாக்ஷன்} கிளைகளுடன் கூடிய பெரும் மரம் ஒன்றைப் போல பூமியில் விழுந்தான்.{21ஆ,22அ} சினங்கொண்டவனான அவன் {ராமன்}, தூஷணனைப் பின்தொடர்ந்து வந்த ஐயாயிரம் பேரையும், ஐயாயிரம் சரங்களால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(20ஆ-23அ) 

தூஷணனும், அவனைப் பின்தொடர்ந்தவர்களும் கொல்லப்பட்டதைக் கேட்டுக் குரோதமடைந்த கரன், மஹாபலவான்களான தன் சேனை அதிகாரிகளிடம் {பின்வருமாறு} ஆணையிட்டான்:(23ஆ,24அ) "இந்த தூஷணன், தன்னைப் பின்தொடர்ந்து சென்றவர்களுடன் சேர்ந்து போரில் கொல்லப்பட்டான். சர்வ ராக்ஷசர்களும் மஹத்தான சேனையுடன் சென்று யுத்தத்தில் நானாவித வடிவமைப்புகளுடன் கூடிய சஸ்திரங்களை {ஆயுதங்களைக்} கொண்டு தீய மானுஷனாம் ராமனைக் கொல்வீராக" {என்றான் கரன்}.(24ஆ,25)

இவ்வாறு சொன்ன கரன், குரோதத்துடன் ராமனை நோக்கி விரைந்து சென்றான். சியேனகாமி, பிருதுக்ரீவன், யஜ்ஞசத்ரு, விஹங்கமன்,{26} துர்ஜயன், கரவீராக்ஷன், பருஷன், காலகார்முகன், ஹேமமாலி {மேகமாலி}, மஹாமாலி, ஸர்பாஸ்யன், ருதிராசனன்{27} என்ற மஹாவீரர்களான பன்னிரெண்டு படை அதிகாரிகள்[2] அந்த சைனியத்துடன் சேர்ந்து உத்தம சரங்களை ஏவியபடியே ராமனை நோக்கி விரைந்து சென்றனர்.(26-28) அப்போது அந்த தேஜஸ்வி {ராமன்}, எஞ்சியிருக்கும் அந்த சைனியத்தை, பாவகனை {அக்னியைப்} போன்றவையும், ஹேம வஜ்ரங்களால் {தங்கம், வைரங்களால்} அலங்கரிக்கப்பட்டவையுமான சாயகங்களால் {கணைகளால்} வதைத்தான்.(29) ருக்ம புங்கத்துடன் கூடியவையும் {தங்கத்தாலான கட்டுகளைக் கொண்டவையும்}, புகையுடன் கூடிய அக்னியைப் போல ஒளிர்பவையுமான அந்தக் கூரியவை {பாணங்கள்}, பெரும் மரங்களை {வீழ்த்தும்} வஜ்ரத்தைப் போல அந்த ராக்ஷசர்களை வீழ்த்தின.(30)

[2] இந்த ராக்ஷசர்களின் பெயர்களும், இந்த சர்க்கத்தின் 17 முதல் 20ம் சுலோகம் வரை சொல்லப்பட்ட மூவரின் பெயர்களும் ஏற்கனவே ஆரண்ய காண்டம் 23ம் சர்க்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

போர்முனையில் ராமன், நூறு ராக்ஷசர்களை நூறு கர்ணிகளாலும் {கணைகளாலும்}, ஆயிரம்பேரை ஆயிரத்தாலும் {பாணங்களாலும்} தாக்கினான்.(31) அவற்றால் {அந்தக் கர்ணிகளால்}, கவசங்களும், ஆபரணங்களும் உடைந்து, சரங்களும், விற்களும் சின்னாபின்னமாகி, ரத்தத்தால் பூசப்பட்டவர்களாக அந்த நிசாசரர்கள் {இரவுலாவிகள்} தரணியில் விழுந்தனர்.(32) கேசம் தளர்ந்து {தலைமயிர் அவிழ்ந்து}, ரத்தம் பெருக சமரில் விழுந்து கிடந்த அவர்களால் வசுதை {பூமி} முற்றும் குசப் புற்கள் பரவிய விஸ்தீரணமான மஹாவேதியை {பெரும் யாகசாலையைப்} போலிருந்தது.(33) கொல்லப்பட்ட ராக்ஷசர்களுடன் கூடிய அந்த வனம், மாமிசமும், ரத்தமும் கலந்த சேற்றுடன், க்ஷணப்பொழுதில் நரகத்திற்கு ஒப்பாக மஹா கோரமானது.(34) 

பீமகர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்பவர்களான அந்த ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும், மானுஷனும், பதாதியுமான {காலாட்படை வீரனுமான} ராமன் ஒருவனாலேயே கொல்லப்பட்டனர்.(35) அந்த சைனியம் மொத்தத்திலும் மஹாரதனான கரனைத் தவிர, ராக்ஷசன் திரிசிரஸும், {மற்றபடி} ரிபுசூதனனான {பகைவரைக் கொல்பவனான} ராமனும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.(36) மஹாவீர்யவான்களும், கோரமானவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான ராக்ஷசர்கள் அனைவரும் அந்த லக்ஷ்மணாக்ரஜனால் ரணமூர்த்தத்தில் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமனால் போர்முனையில்} இவ்வாறே கொல்லப்பட்டனர்.(37) அப்போது கரன், அந்தப் பெரும்போரில் பலவனான ராமனால் அந்த பயங்கரப் படை அழிக்கப்பட்டதைக் கண்டு, அசனியை {இடியை / வஜ்ரத்தை} உயர்த்திய இந்திரனைப் போல அங்கிருந்த மஹத்தான ரதத்தில் ஏறிக் கொண்டு ராமனை நோக்கி விரைந்து சென்றான்.(38)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 26ல் உள்ள சுலோகங்கள்: 38

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை