Friday 3 February 2023

இராக்ஷசன் கரன் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 116 (26)

Khara, the demon | Ayodhya-Kanda-Sarga-116 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சித்திரகூடத்தில் வசிக்கும் துறவிகளின் அச்சம்; ராவணனின் தம்பி கரனிடம் கொண்ட அச்சம்; ராட்சசர்களின் அட்டூழியங்கள்; ராமனிடம் விடைபெற்றுச் சென்ற துறவிகள்...

Rama and sages in Chitrakuta

பரதன் {அயோத்திக்குத்} திரும்பிச் சென்றதும், தபோவனத்தில் இருந்த ராமன், தபஸ்விகளிடம் கவலையையும், கலக்கத்தையும் கண்டான்.(1) முன்பு சித்திரகூடத்தின் தாபஸாசிரமங்களில் {தபம் மேற்கொள்ளும் தங்கள் ஆசிரமங்களில்} தன்னை அண்டி நிறைவுடன் இருந்த அவர்கள், இப்போது கவலையுடன் இருப்பதை ராமன் உணர்ந்தான்.(2) அவர்கள் சந்தேக நயனங்களினால் {கண்களினால்} ராமனைக் கண்டும், புருவங்களை நெறித்தும், அன்யோன்யம் {ஒருவருக்கொருவர்} கதைகளை அமைத்து ரகசியமாகவும், மெதுவாகவும் கிசுகிசுத்தனர்[1].(3)

[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "ஸ்ரீராமரை நினைத்து கவலை கொண்டவர்களாய் கண்களாலும், புருவங்களாலும், ஒருவருக்கொருவர் ரகஸியமாய் பேசுகின்றவர்களாய் மெதுவாக சமாசாரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவர்கள் சங்கைப்பட்டுக் கண்களாலும், புருவநெறிப்புகளாலும் ராமனை நிர்த்தேசித்து ஒருவர்க்கொருவர் மெதுவாகக் காசகொசவென்று சொல்லி ராமனைக் குறித்து ரஹஸ்யமாக என்னென்னவோ கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அவர்களும் பெருமாளை யுற்றுப் பார்த்துப் பார்த்து ஒருவர்க் கொருவர் ஏகாந்தமாக வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தமையின், பெருமாள் மிகவும் ஐயமுற்று" என்றிருக்கிறது.

அவர்களின் கவலையை உணர்ந்த ராமனுக்குத் தன்னைக் குறித்த சந்தேகம் எழுந்ததும், கைகளைக் கூப்பிக் கொண்டு, குலபதியான ரிஷியிடம் இதைக் கூறினான்:(4) "பகவானே, என் பூர்வ நடத்தையில் எந்த மாற்றமும் நேரவில்லை என நம்புகிறேன். எதைக் கண்டு தபஸ்விகள் கலக்கமடைந்திருக்கின்றனர்?(5) என் தம்பி லக்ஷ்மணன், அலட்சியத்தால் தகாததேதும் செய்யவில்லை என்றும், ரிஷிகளும் அவ்வாறேதும் காணவில்லை என்றும் நம்புகிறேன்.(6) எனக்குத் தொண்டாற்றுவதிலேயே முனைப்பாக இருப்பவளும், உங்களுக்குத் தொண்டாற்றுபவளுமான சீதை, பெண்களுக்குத் தகாத முறையில் நடந்து கொள்ளவில்லை என நம்புகிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(7)

அப்போது, மூப்பிலும், தபத்திலும் முதியவரான அந்த ரிஷி {குலபதி}, நடுக்கத்தில் இருப்பவரைப் போல, பூத தயாபரனான {அனைத்து உயிரினிங்களிடமும் கருணை கொண்டவனான} ராமனிடம் {பின்வருவனவற்றைப்} பேசினார்:(8) "தாதா {ஐயா}, தபஸ்விகள் சலனமடைவதற்கு {நடுங்குவதற்கு}, அதிலும் விசேஷமாக நல்லியல்பையே தன்னியல்பாய்க் கொண்டவளும், நற்காரியங்களையே செய்பவளுமான வைதேஹியிடம் {அச்சமடைய}  என்ன இருக்கிறது?(9) உன் நிமித்தம் ராக்ஷசர்களால் அச்சம் ஏற்படும் என்ற கலக்கத்துடனே இவர்கள் பரஸ்பரம் கதைகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.(10) தாதா, இங்கே ராவணனின் தம்பியும், கரன் என்ற நாமத்தைக் கொண்டவனுமான ராக்ஷசன், ஜனஸ்தானத்தில்[2] வசிக்கும் தபஸ்விகள் அனைவரையும் நிர்மூலமாக்குகிறான் {கொல்கிறான் / விரட்டுகிறான்}.{11} திமிர்ப்பிடித்தவனும், போரில் வல்லவனும், கொடூரனும், புருஷாதகனும் {மனிதர்களை உண்பவனும்}, கர்வங்கொண்டவனும், பாபியுமான அவன் உன்னையும் பொறுத்துக் கொள்ள மாட்டான்.(11,12) 

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜனஸ்தானம் என்பது தண்டகாரண்யப் பகுதியின் மற்றொரு பெயராகும். சில வேளைகளில் தண்டகாரண்யத்தின் தலைநகர் என்றும் ஜனஸ்தானம் குறிப்பிடப்படுகிறது" என்றிருக்கிறது. ஆரண்ய காண்டம் 2ம் சர்க்கத்தில் 1ம் அடிக்குறிப்பில், தண்டகவனம், ஜனஸ்தானம் குறித்த தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், தண்டகாரண்யத்தில் இருந்து தெற்கு நோக்கி தப்பிச் சென்ற மக்கள் வசித்த இடம் ஜனஸ்தானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தாதா, இந்த ஆசிரமத்தில் நீ வசிக்கத் தொடங்கியதில் இருந்தே ராக்ஷசர்கள் தபஸ்விகளைப் பீடித்து வருகின்றனர்.(13) இயற்கைக்கு மாறான நடத்தையுடன் கூடிய அவர்கள், தீங்கு விளைவிக்கும் கோரமான, விரும்பத்தகாத வடிவங்களில் தோன்றி அச்சுறுத்துகிறார்கள்.(14) அந்த அநாரியர்கள், தபஸ்விகளின் முன் நின்று, தூய்மையற்றவற்றையும், மங்கலமற்றவற்றையும் அவர்களின் மீது வீசியும், சிலரைத் துன்புறுத்தியும் {விரட்டியும்} வருகின்றனர்.(15) அற்ப புத்தியைக் கொண்ட அவர்கள், அந்தந்த ஆசிரமஸ்தானங்களில் புலப்படாதவாறு மறைந்திருந்து, அங்கேயே தபஸ்விகளை துன்புறுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.(16) {வேள்வியில்} ஆகுதிகள் இடும்போது, {வேள்விக்} கரண்டிகளைத் தூக்கிவீசி, {வேள்வி} அக்னியில் நீரைத் தெளித்து, {வேள்விக்} கலசங்களை நொறுக்குகின்றனர்.(17) இப்போது ரிஷிகள், அந்த துராத்மாக்களால் பீடிக்கப்பட்ட ஆசிரமங்களைக் கைவிடத் தீர்மானித்து, வேறு தேசம் {வேறு இடம்} செல்வதற்கு என்னை வற்புறுத்துகிறார்கள்.(18) 

இராமா, அந்த துஷ்டர்கள், தபஸ்விகளுக்கு எதிரான சரீர ஹிம்சையை உண்மையில் செய்து காட்டுவார்கள். எனவே, இந்த ஆசிரமத்தை நாங்கள் கைவிடுகிறோம்.(19) ஏராளமான கிழங்குகளையும், பழங்களையும் கொண்ட ஒரு சித்திர வனம் அருகில் இருக்கிறது. முன்பு நாங்கள் அங்கே வசித்திருந்த ஆசிரமத்திற்கே நானும், என் கூட்டத்தாரும் மீண்டும் செல்லப் போகிறோம்.(20) தாதா {ஐயா}, உன்னிடமும் கரன் தகாதவகையிலேயே நடந்து கொள்வான். உன் புத்திக்கு ஏற்புடையதாக இருந்தால், இங்கிருந்து எங்களுடன் வருவாயாக.(21) இராகவா, சதா சமர்த்தனாகவும், நித்தியம் விழிப்புள்ளவனாகவும் இருந்தாலும் சந்தேகமே. மனைவியுடன் வாழும் உனக்கு இங்கே வசிப்பது துக்கத்தையே தரும்" {என்றார் அந்தக் குலபதி}.(22)

இராஜபுத்திரனான ராமனால், இவ்வாறான ஆவலுடன் {கவலையுடன்} பேசும் அந்த தபஸ்வியை, வாக்கியங்களில் அமைந்த மறுமொழியால் தடுக்க இயலவில்லை.(23) அந்தக் குலபதி, ராகவனை வாழ்த்தி, சமாதானங்கூறி, தன் குலத்தினருடன் சேர்ந்து ஆசிரமத்தைக் கைவிட்டு, விடைபெற்றுக் கொண்டார்.(24) அந்த இடத்திலிருந்து விடைபெற்றுச் செல்லும் ரிஷிகணங்களைச் சிறிது தூரம் பின்தொடர்ந்து சென்ற ராமன், குலபதியான அந்த ரிஷியை வணங்கி, அவர்களின் ஆலோசனையை ஏற்று, நிறைவுடன் இருந்த அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, புண்ணிய வசிப்பிடமான தன் நிலையத்தை அடைந்தான்.(25) பிரபுவான அந்த ராகவன், ரிஷிகளால் கைவிடப்பட்ட அந்த ஆசிரமத்தைவிட்டு ஒரு க்ஷணமும் அகலாமல் இருந்தான். மரபுகளைப் பின்பற்றும் திடகுணம் படைத்த தபஸ்விகள் {சிலர்} ராமனைப் பின்பற்றினர்.(26) 

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 116ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை