Wednesday 16 November 2022

திருமகள் விடுதூது | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 099 (42)

Emissary of the goddess of wealth | Ayodhya-Kanda-Sarga-099 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அருகில் சீதையுடன் ஆசிரமத்தில் அமர்ந்திருக்கும் ராமனைக் கண்ட பரதனின் புலம்பல்; இராமனின் பாதங்களில் வீழ்ந்தது; தழுவிக் கொண்ட ராமன்...

Bharata and Shatrugna fell at the feet of Rama

அப்போது பரதன், சேனையை முகாமிடச் செய்துவிட்டு, சத்ருக்னனிடம் {ராமனின் வசிப்பிடத்தைச்} சுட்டிக்காட்டிக் கொண்டு, தன்னுடன் பிறந்தானை {ராமனைக்} காண உற்சாகத்துடன் சென்றான்.(1) குருவத்சலனான {பெரியோரிடம் பற்று கொண்டவனான} அவன், வசிஷ்ட ரிஷியிடம், "என் மாதாக்களை சீக்கிரம் அழைத்து வாருங்கள்" என்று சொல்லிவிட்டு, துரிதமாக முன்னே சென்றான்.(2) பரதனைப் போலவே ராம தரிசனத்தில் ஆவல் கொண்ட சுமந்திரனும், சிறிது தூரத்தில் சத்ருக்னனைப் பின்தொடர்ந்து சென்றான்.(3) 

இவ்வாறு ஸ்ரீமானான அந்த பரதன் சென்று கொண்டிருந்தபோது, தன்னுடன் பிறந்தவனின் பர்ணக்குடிலையும் {ஓலைக் குடிசையையும்}, தாபசாலையில் {தபசிகள் வசிக்கும் இடத்தில்} அமைந்திருக்கும் மற்றொரு {சிறிய} குடிலையும் கண்டான்.(4) பிறகு பரதன், அந்த சாலையின் முன்புறத்தில் வெட்டப்பட்டுக் கிடக்கும் விறகுகளையும், சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புஷ்பங்களையும் கண்டான்.(5) ராமலக்ஷ்மணர்களால் விருக்ஷங்களில்  கட்டப்பட்ட குசப் புற்கள் மற்றும் மரவுரிகளின் தடயங்கள் சிலவற்றை அங்கேயும் இங்கேயுமென ஆசிரமத்திற்குச் செல்லும் வழியில் அவன் கண்டான்.(6) குளிர் காயுங் காரணத்திற்காக ஆயத்தமாக வைக்கப்பட்ட மான்கள், எருமைகளுடைய உலர்ந்த வரட்டிகளின் பெருங்குவியல்களையும் அவன் கண்டான்.(7)

ஒளிவீசுபவனும், மஹாபாஹுவுமான பரதன் அவ்வாறு சென்று கொண்டிருந்த போது, சத்ருக்னனிடமும், தன்னைச் சுற்றிலும் இருந்த அமாத்தியர்களிடமும் மகிழ்ச்சியுடன் {பின்வருமாறு} சொன்னான்:(8) "பரத்வாஜர் சொன்ன இடத்தை அடைந்துவிட்டோமென நினைக்கிறேன். மந்தாகினி நதி தூரத்தில் இல்லை {அருகிலேயே இருக்கிறது} என்றும் நான் நினைக்கிறேன்.(9) மரவுரிகள் மேலிருந்து கட்டப்பட்டிருக்கின்றன. அகாலத்தில் {வழியைக் கண்டுபிடித்துச்} செல்ல விரும்பி லக்ஷ்மணனால் அடையாளங் குறிக்கப்பட்ட பாதையாக இது இருக்கலாம்.(10) நீண்ட தந்தங்களைக் கொண்டவையும், வேகமானவையுமான குஞ்சரங்கள் அன்யோன்யம் {யானைகள், ஒன்றோடொன்று கொண்ட பகையால்} மூர்க்கமாக பிளிறுக் கொள்ளும் இடமாக இந்த சைல ஓரம் {மலையோரம்} திகழ்கிறது.(11) வனத்தில் தாபஸ்விகள் {காலையிலும், மாலையிலும் என ஹோமஞ் செய்வதற்காக} எப்போதும் வைத்துக் கொள்ள விரும்பும் அக்னியில் இருந்து இந்த சங்குல தூமம் {அடர்ந்த புகை} எழுகிறது.(12) புருஷவியாகரரும் {மனிதர்களில் புலியும்}, குருசத்கார காரணரும் {பெரியோரை மதிப்பவரும்}, மஹரிஷியைப் போன்றவரும், ஆரியருமான ராகவரை {ராமரை} மகிழ்ச்சியுடன் இங்கே காணப் போகிறேன்" {என்றான் பரதன்}.(13)

பிறகு அந்த ராகவன் {பரதன்}, ஒரு முஹூர்த்த காலம் சித்திரகூடத்தில் சென்று, மந்தாகினியை அடைந்து, அந்த ஜனங்களிடம் {மந்திரிகள் உள்ளிட்ட பிறரிடம்} இதைச் சொன்னான்:(14) "புருஷவியாகரரான அந்த ஜனேந்திரர் {மனிதர்களில் புலியும், ஜனங்களின் தலைவருமான ராமர்}, ஜனங்களற்ற இடத்தை அடைந்து, வெறுந்தரையில் {இடது காலை வலது முட்டியில் வைத்து} வீராசனத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறார்.  என் பிறவிக்கும், ஜீவிதத்திற்கும் {வாழ்வுக்கும்} ஐயோ.(15) பெருங்காந்தியைக் கொண்டவரும், லோகநாதருமான ராகவர் {ராமர்}, என்னால் இந்த விசனத்தை அடைந்து, இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு வனத்தில் வசிக்கிறார்.(16) இவ்வாறு உலகத்தால் பழிக்கப்படும் நான், இன்று ராமர், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரின் பாதங்களில் விழுந்து அருள் வேண்டப் போகிறேன்" {என்றான் பரதன்}.(17)

அந்த தசரதாத்மஜன் {பரதன்} இவ்வாறு புலம்பிக் கொண்டிருந்தபோதே, புண்ணியம் நிறைந்ததும், மனோஹரமானதும், மஹத்தானதுமான பர்ண சாலையை {ஓலைக் குடிலைக்} கண்டான்.{18} ஆச்சா, பனை, அஷ்வ மரங்களின் மிருதுவான இலைகள் பலவற்றால் கூரைவேயப்பட்டதும், விசாலமான வேதியைப் போன்ற பீடத்தில் குசப்புற்கள் {தருப்பங்கள்} பரப்பப்பட்டதும்,{19} பெருஞ்சக்தியுடன் சத்ருக்களுக்குப் பாதகமேற்படுத்தும் பார சாதனைகளுக்கான சக்ரனின் {இந்திரனுடைய} ஆயுதத்தைப் போல் பிரகாசிக்கும் பொற்பூச்சு கொண்ட விற்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{20}  அர்க்கனின் {சூரியனின்} கதிர்களைப் போலவும், போகவதியில் ஒளிரும் வதனங்களுடன் கூடிய சர்ப்பங்களைப் போலவும் கோரமாகப் பிரகாசிக்கக்கூடிய சரங்கள் நிறைந்த அம்பறாத்தூணிகளுடன் கூடியதும்,{21} தங்க உறைகளில் இருக்கும் இரு வாள்களால் அலங்கரிக்கப்பட்டதும், தங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரு கேடயங்களால் விளங்குவதும்,{22} பொன்னாலான விரலுறைகள் தொங்குவதுமான சுவருடன் கூடிய அது {பர்ணசாலை}, மான்கள் அணுகாத சிங்கத்தின் குகையைப் போல பகைக்கூட்டத்தினர் அணுக முடியாததாக இருந்தது.(18-23) 

அந்த ராமநிவேசனத்தின் {ராமனுடைய வசிப்பிடத்தின்} வடகிழக்கு மூலையில் விசாலமானதும், எரிந்த பாவகனுடன் {அக்னியுடன்} கூடியதும், புண்ணியமானதுமான வேதியை {வேள்விப் பீடத்தை} பரதன் கண்டான்.(24) சுற்றிலும் ஒரு முஹூர்த்த காலம் பார்த்துக் கொண்டிருந்த பரதன், குடிலில் ஜடாமண்டலதாரியாக அமர்ந்திருக்கும் தன் குருவான {அண்ணனான} ராமனைக் கண்டான்.(25) மான்தோல் உடுத்தியவனும், மரவுரி தரித்தவனும், பாவகனுக்கு {அக்னிக்கு} ஒப்பானவனும், சிங்கம் போன்ற பிடரியைக் கொண்டவனும், மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்டவனும்}, தாமரைக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், தர்ம வழி நடப்பவனும், சாகரம் வரையுள்ள பிருத்வியின் தலைவனுமான அந்த ராமன், தன் அருகில் சீதையுடனும், லக்ஷ்மணனுடனும், அழிவில்லா பிரம்மனைப் போல தர்ப்பை பரப்பப்பட்ட தரையில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(26-28) 

ஸ்ரீமானும், தர்மாத்மாவும், கைகேயிசுதனுமான பரதன், அவனை {ராமனைக்} கண்டதும், துக்கத்திலும், சோகத்திலும் மூழ்கியவனாக அவனை நோக்கி ஓடிச் சென்றான்.(29) அவன் {இவ்வாறு தன் அண்ணனைக்} கண்டு, தைரியத்தால் துக்கத்தை அடக்க இயலாதவனாக, கண்ணீரால் தழுதழுத்த குரலில் கதறியபடியே இந்தச் சொற்களைச் சொன்னான்:(30) "சபையில் அமைச்சர்கள் குழுவால் வழிபடத்தகுந்த என் அண்ணன், வனத்தில் மிருகங்களால் வணங்கப்படுகிறார்.(31) பூர்வத்தில், தமக்கு உசிதமான பல்லாயிரம் வஸ்திரங்களை பயன்படுத்திய இந்த மஹாத்மா, {இப்போது வானப்ரஸ்த} தர்மத்தைப் பின்பற்றி மிருகத் தோல்களை உடுத்திக் கொண்டிருக்கிறார்.(32) விதவிதமான வண்ணங்களில் பலவகை மலர்களைச் சூடியிருந்த இந்த ராகவர் {ராமர்}, எவ்வாறு இந்த ஜடாபாரத்தைத் தாங்குகிறார்?(33) விதிமுறைப்படி யாகங்கள் செய்து தர்மத்தை ஈட்டியவர், இப்போது சரீரத் துன்பத்தால் உண்டாகும் {வானப்ரஸ்த} தர்மத்தைத் தேடுகிறார்.(34) எவருடைய அங்கங்கள் வெண்சந்தனத்தால் சேவிக்கப்பட்டனவோ அந்த ஆரியரின் அங்கங்கள் இப்போது புழுதியால் சேவிக்கப்படுகின்றன.(35) சுகத்தையே அனுபவித்து வந்த ராமர் என்னால் இந்த துக்கத்தை அடைந்தார். உலகத்தால் பழிக்கப்படும் கொடூரனான என் ஜீவிதத்திற்கு ஐயோ {என்னைப் போன்ற கொடூரன் ஏன் வாழ வேண்டும்?}" {என்றான் பரதன்}.(36)

முகத்தாமரை வியர்த்த பரதன், இவ்வாறு தீனமாக அழுது புலம்பி, ராமனின் பாதங்களைத் தீண்டாமல் கதறியபடியே கீழே விழுந்தான்[1].(37) மஹா பலசாலியும், ராஜபுத்திரனுமான பரதன், துக்கத்தில் மூழ்கியவனாக, "ஆரியரே" என்று ஒரேமுறை அலறி, சிறிது நேரத்தில் பேசமுடியாத தீன நிலையை அடைந்தான்.(38) சிறப்புமிக்கவனான ராமனைக் கண்டதும், "ஆரியரே" என்று மட்டும் உச்சக் குரலில் அலறியவனின் கண்டம் {தொண்டை} கண்ணீரால் தடைபட்டதால் அதற்குமேல் அவனால் பேச இயலவில்லை.(39) சத்ருக்னனும் அழுது கொண்டே ராமனின் சரணங்களில் விழுந்தான். அவர்கள் இருவரையும் வாரி அணைத்துக் கொண்ட ராமனாலும் தன் கண்ணீரை அடக்கிக் கொள்ள முடியவில்லை.(40)

[1] கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனள் நலத்தின் நீங்கினாள்
வேதனைத் திருமகள் மெலிகின்றாள் விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான்

- கம்பராமாயணம் 2426ம் பாடல்

பொருள்: குற்றமில்லாத நல்ல தவத்தைச் செய்து, தன் மனக்கருத்தை அறிந்த தன் நாதனைப் பிரிந்து, நன்மைகள் ஏதுமின்றி வேதனையில் மெலிந்த திருமகளே {ராஜ்ஜியலக்ஷ்மியே} அனுப்பிய தூதனைப் போல பரதனும் தொழுது தோன்றினான்.

அப்போது அம்பரத்தில் சுக்கிரனும், பிருஹஸ்பதியும், திவாகரனையும், நிசாகரனையும்  நோக்குவது போல் {வானத்தில் வெள்ளியும், வியாழனும், ஞாயிறையும், திங்களையும் பார்ப்பது போல்} அரண்யத்தில் சுமந்திரனும், குஹனும், அந்த ராஜசுதர்களை {ராமனையும், லக்ஷ்மணனையும்} கண்டனர்.(41) வனத்தில் வசிப்பவர்கள் {முனிவர்கள்} அனைவரும், வாரணக்கூட்டங்களின் {யானைக் கூட்டங்களின்} தலைவர்களுக்கு ஒப்பான அந்தப் பார்த்திபர்களின் சந்திப்பை அந்த மஹத்தான அரண்யத்தில் கண்டு, தங்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து, கண்ணீர் சிந்தினர்.(42)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 099ல் உள்ள சுலோகங்கள்: 42

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை